Tuesday, December 15, 2009

முகவரி மாறும் முகங்கள்

சமீபத்தில் பதிவர் வெங்கிராஜாவின் பதிவான முகங்கள் படிக்க முடிந்தது. சென்னையின் இரவு நேர காட்சிகளை அழகான புகைப் படங்களுடன் பதிவு செய்திருந்தார். புகைப்படங்களில் வயதான முதியவர்கள், தாடி வைத்தவர்கள், காய் விற்கும் அம்மா, பூக்கட்டும் மூதாட்டி, காவித்துண்டை கழுத்தில் சுற்றிய ஒரு அய்யப்ப பக்தரோ அல்லது முருக பக்தரோ தெரியவில்லை, வெற்றுடம்புடன் குனிந்து நிற்கும் ஒரு வாலிபனும் முதியவரும் என காமிரா கவிதை பாடியிருக்கிறது. ஒரு விஷயம் மாத்திரம் புரியவில்லை, சென்னை என்றில்லை இந்தியாவின் எந்த நகரத்தையும் அதன் பரிமாணங்களை வெளிக்கொணர காமிரா பிடிப்பவர்களின் கண்களுக்கெல்லாம், வளர்ந்து நிற்கும் கட்டிடங்களோ, வழுக்கிச் செல்லும் சாலைகளோ, சாலைகளின் நடுவில் சுற்றிச் சுழலும் பாலங்களோ, மல்லிகைப் பூச்சூடி கொடியிடை கொண்ட எங்கள் மண்ணின் குமரிகளோ, மடிக்கணியை எதோ ஒரு விளையாட்டுப் பொருள் போல கழுத்தில் தொங்கவிட்டு அலுவலகம் விரைந்து வித்தை காட்டும் அறிவு ஜீவி இளைஞர்களோ, பரந்து விரிந்து நிற்கும் கடற்கரைகளோ (ஏ யப்பா மூச்சு முட்டுதய்யா) கண்ணிலேயே படுவதில்லை.

காமிராவில் தெரிவதெல்லாம் பிச்சைக்காரர்கள், வறுமையில் வாடுபவர்கள், முகத்தில் ஈ மொய்க்க அழுக்கு கரங்களில் ஒரு சோற்றுப் பருக்கையை வாய்க்குள் திணித்து, ஒழுகும் சளி மூக்குடன் உள்ள குழந்தைகள், திறந்து கிடக்கும் சாக்கடைகள், போஸ்டர் ஒட்டிய வெளிச்சுவர்கள், உடைந்த பின்னும் ஓடிக் கொண்டிருக்கும் அபாயநிலை வாகனங்கள், பெருநகரங்களில் உடல் விற்க காத்திருக்கும் விபச்சாரிகள், வயிறு பெருத்த காவல் துறையினர், மஞ்சள் கோட்டை தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் என எதிர்மறைக் காட்சிகளாகவே ஏன் தெரிகிறதென்று தெரியவில்லை.

வெங்கி ராஜா என்ன நினைத்து இந்தப் படங்களை பிடித்தார் என தெரியவில்லை. ஆனால் இரவில் சென்னையில் படம் பிடிக்க எத்தனையோ சிறப்பான விஷயங்கள் இருக்கும்பொழுது வெறும் வயது முதிர்ந்த தாடிக்காரர்களும், தள்ளாத வயதிலும் பூக்கட்டும் பூக்காரம்மாவும் தானா கண்ணில் பட்டார்கள். அவர் சுற்றிய வழியான ராமாவரம் பாலத்திலிருந்து தோமையர் மலை போகும் வழியில் எதிர்படும் கத்திப் பாராவின் பாலம் இரவில் ஒரு தனி அழகுதான். ராடிசன் ஹோட்டல் வரை செல்லும் ஜி.எஸ்.டி சாலை இரவில் வண்ணமயமான விளக்குகளால் ஒளியூட்டப் பட்டு துடைத்து விட்டாற்போல் பளிச்சென்றிருக்கும். மனிதர்களைத்தான் படம் பிடிக்க வேண்டும் என நினைத்தால், எத்தனையோ மனிதர்கள் இந்த நாட்டின் செழிப்பை வெளிப்படுத்த கடிகார முட்களின் ஒவ்வொரு நகர்விற்கும் எங்கள் சாலைகளின் எல்லா மூலைகளிலும் தென்படுவார்கள். அவர்களை எல்லாம் விடுத்து ஏழ்மையை மாத்திரம் படம் பிடித்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என தெரியவில்லை.

எனது பல ஆண்டுகால வெளிநாட்டு வாசத்தில், அங்கு அமர்ந்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காணும் பொழுதெல்லாம், இந்தியாவைப் பற்றிய ஏதாவது ஒரு நிகழ்ச்சியென்றால், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிந்ததெல்லாம் விநாயகர் சிலைகளும், குப்பை நிறைந்த குறுக்குச் சந்துகளும், மும்பை, டெல்லி மற்றும் கல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதியின் மித மிஞ்சிய உதட்டுச் சாய மங்கைகளும், திறந்த சாக்கடைகளும், நாய்களுடன் கூட்டுச் சேர்ந்து எச்சிலையில் சாப்பிடும் பிச்சைக் காரர்களும், வாகன நெரிசலில் ஒலிப்பான் பிளிர சிக்கித் தவிக்கும் மாநகர சாலைகளும் என அலங்கோலங்கள் மாத்திரமே காண்பிக்கப் படும். இது இந்தியாவின் வளர்ச்சியைப் கண்டு வயிறெரியும் மேற்கத்திய மக்களின் வக்கிரப் பிரச்சாரம் என்றே நான் சொல்லுவேன்.

ஆனால் நாம், நம்மைப் பற்றி கூறும் பொழுது ஏன் இப்படி வறுமையையும், அவலங்களையும் மாத்திரம் கூற வேண்டும்? யதார்த்தத்தை காண்பிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஏன் நாம் நம்மை தாழ்த்திக் கொள்கிறோமோ தெரியவில்லை. நான் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில் அங்கிருக்கும் இந்தியர்களால் தயாரிக்கப் பட்ட Broken Promises என்ற ஒரு இந்திய திரைப் படத்தை காண முடிந்தது. குமாரன் நாயுடு என்ற இந்தியரால் இயக்கப் பட்டு முற்றிலும் இந்திய நடிகர்களே நடித்த படம். அதிலும் கூட தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் பழக்க வழக்கங்களை எள்ளி நகையாடியிருப்பார் இந்த நாயுடு. இந்தியப் பெண்கள் ரோட்டின் நடுவில் நின்று பூரிக் கட்டையை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதில் வரும் கதாநாயகர்களான இந்திய இளைஞர்கள் வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்றுபவர்களாகவும், சரக்கடிக்க மற்றவர்களை ஏமாற்றி காசு பார்ப்பவர்களாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் தென் ஆப்பிரிக்கா வாழ் மக்களிலேயே மூன்று வேளை சாப்பாடு சாப்பிட்டு, குடும்ப அமைப்பு சிதையாமல் வாழும் இனம் இந்திய இனம் தான். ஆனால், அவர்களை ஒரு இந்தியன் இப்படி இழிவாக சித்தரிப்பதையும், அதைப் பார்த்து இந்தியர்களே எள்ளி நகையாடுவதும் வேதனையாக உள்ளது. வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இந்த பழக்கத்தை அதிகமாக நான் கண்டிருக்கிறேன். சக இந்தியனின் இந்திய பழக்க வழக்கங்களுக்காக வெள்ளையர்களுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்யும் இந்தியர்களை வெகுவாக கண்டிருக்கிறேன்.


இந்தியாவின் யதார்த்தங்கள் இன்னும் ஏழ்மைக் கோலத்தில் தானா இருக்கிறது? கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய நிதியமைச்சரிலிருந்து மற்ற அமைச்சர்கள் வரை, பாராளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரின் ஆரம்பத்திலேயே சொன்னார்களே, இந்தியா 7.2 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறதென்று, இந்த நல்ல செய்திகள் நம்மவர்களின் மனங்களிலும் சரி, ஊடகங்களின் பார்வையிலும் சரி ஏன் ஒரு உப்புப் பெறாத விஷயமாகவே போய் விடுகிறதோ தெரியவில்லை. நண்பர்களே, நம்புங்கள். நாம் வளர்கிறோம். சிகரங்களை தொடுகிறோம். சராசரி இந்தியனின் வருமானம் உயர்ந்து கொண்டிருக்கிறது. உலகத் தரம் என்பது இந்தியாவிலும் பல துறைகளில் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. வெளி நாட்டவர்கள் இந்தியாவை நோக்கி சம்பளத்துக்காக வர ஆரம்பித்து விட்டார்கள். இந்தியர்களின் ஆளுமை உலகின் பல துறைகளிலும் கோலோச்சுகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சுருக்கம் விழுந்த முகங்களையும், கடுக்கன் தொங்கும் காதுகளையும், கோவணமணிந்த உடல்களையும் எதார்த்தம் என்ற பெயரில் காண்பித்துக் கொண்டிருப்பீர்கள்?

Tuesday, December 8, 2009

எங்க அய்யாமாருக பெருமைப் பட்டாக!!!!!

நிலாவுல நீர் இருக்குதாம். இந்தியந்தான் கண்டு பிடிச்சானாம்

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக

அய்யா, ராசா, எங்கூருக்கு

எப்பய்யா தண்ணி கண்டு பிடிப்பீக.?



பங்குச்சந்தைல பதினேழாயிரம் புள்ளியாம்,

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக.

அய்யா, ராசா, பருப்பு தின்னு பல மாசம்

ஆச்சய்யா, பங்குச் சந்தைல பருப்பு விப்பீகளா?



எல்லாரும் எல்லாம் படிக்க சமச்சீர் கல்வி வருதாம்

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக,

அய்யா ராசா, சமச்சீரோ, சமையாத சீரோ

படிக்க மொதல்ல பள்ளிக் கூடம் குடுங்கைய்யா?



கிரிக்கெட் போட்டியில மொத இடமாம்

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக

அய்யா ராசா, விளையாட்டெல்லாம் சரிதான்யா

எங்க வாழ்கைக்கு ஒரு வழி சொல்லுங்கைய்யா

Friday, December 4, 2009

என்னத்தைச் சொல்ல.......



பெங்களூருவிலிருக்கும் நாராயணா ஹ்ருதயாலயாவின் சிறப்பு மருத்துவரான தேவி ஷெட்டி, விப்ரோ தொழிலாளர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் ஒரு கலந்துரையாடலுக்கு சென்றிருந்தார். நவீன உலகின் இளைஞர், இளைஞிகளுக்கு வரும் இருதய நோய்களைப் பற்றிய கலந்துரையாடலில், மாரடைப்பை தடுப்பது எப்படி என்பது பற்றிய கேள்விகளுக்கு பெரும்பாலான பதில்களில், உடற்பயிற்சி செய்யுங்கள், சிரித்துக் கொண்டிருங்கள், பழ வகைகளை அதிகம் உண்ணுங்கள், ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் குறைந்த அளவில் எதையாவது சாப்பிடுங்கள், எண்ணையை தவிர்த்து விடுங்கள் என பதிலளித்துக் கொண்டே வந்தவரிடம் திடீரென கேட்கப் பட்ட ஒரு கேள்வி:

கேள்வி : பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் மாரடைப்பு வருகிறதே ஏன்?

பதில் : 45 வயது வரை பெண்களை இயற்கையே பாதுகாக்கிறது.

அய்யா, டாக்டரய்யா இந்த 45 வயசுக்குள்ள இவுங்க படுத்தற படுத்துல தான் ஆம்பளைங்களுக்கு எல்லாம் மாரடைப்பு வருதுன்னு சொல்லாம சொல்றீங்களா? இல்ல, 45 வயசு வரைக்கும் பெண்களுக்கெல்லாம் பில்டிங் ஸ்ட்ராங்கு, மொட்டைமாடிதான் எப்பவுமே காலின்னு சொல்ல வர்றீங்களா? தெளிவா சொல்லாம இப்படி குழப்பறீங்களே….. என்னத்தச் சொல்ல…..

****************************************************************************
அகில இந்திய வானொலியின் பண்பலை சேவையில் தமிழ் பண்பலை வரிசையில் நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டிருந்தேன். வழக்கமாக காட்டுக் கத்து கத்திக் கொண்டு, உங்கள் மனதுக்கு பிடித்த பாடலின் பிடித்த வரியில் வரும் பிடித்த வார்த்தையின் பிடித்த எழுத்தை எங்களுக்கு போன் பண்ணி சொல்லுங்க, நாங்க அந்த எழுத்தில் ஆரம்பிக்கற வேற ஒரு பாட்டை உங்களுக்காக் ஒலி பரப்புகிறோம் என்ற அருவருப்பான பண்பலை வானொலி நிகழ்ச்சிகளை விட, அனைத்திந்திய வானொலி நிலையத்தார் நிகழ்ச்சிகளை கதம்பமாக கோர்த்திருந்த விதம் சிறப்பாக இருக்கிறது.

ஆனால் இடையில் இப்படி ஒரு விளம்பரம்:

அண்ணே, ஒரு சந்தோஷமான விஷயம். நான் அம்மாவாகப் போறேன். தினமும் கோயிலுக்குப் போயி சுக பிரசவம் வேணும்னு ஒண்ணே கால் ரூபாய் காணிக்கை போட்டுட்டு வர்றேன்.

அப்படியா தங்கச்சி, சுக பிரசவம் வேணும்னா, அயோடின் உப்பு சேர்த்துக்க, அதுதான் உடம்புக்கு நல்லது.. கோவில்ல போடுற ஒண்ணேகால் ரூவாயை அயோடின் உப்பு வாங்கறதுக்கு செலவு பண்ணேன்னா, உனக்கு மட்டுமல்ல, உன் வயத்துல இருக்கற குழந்தைக்கும் நல்லது

அய்யா, வானொலி நிலையத்தாரே, நீங்க என்ன சொல்றீங்கன்னு தெரிஞ்சுதான் சொல்றீங்களா, இதை எங்கயாவது இந்த கோக்கு மாக்கா பக்தி பரவசத்திலாழ்ந்திருக்கும் பக்த கோடிகள் கேட்டுட்டாங்கன்னா, அப்புறம் நாலு பஸ் எரியும், ஆட்டோ ஓடாது, கடை கண்ணிக பத்தி எரியும், ரெண்டு மூணு வழிபாட்டுத்தலங்கள் தரை மட்டமாகும், பள்ளிக்கூடம் லீவு, ஆபீசு லீவு, ஒவ்வொரு தெரு முனையிலும் கூட்டம், சட்டசபையில வெளிநடப்பு செய்யறவங்கெல்லாம், திடீர்னு உள்நடப்பு செஞ்சு கேள்வி கேட்க ஆரம்பிச்சுருவாங்க, கடல் தண்ணி இருந்தாதான் உப்பு விளையுது, உப்பு விளைஞ்சாத்தான அயோடின் சேர்ப்பீங்க, அதனால கடலையே அழித்து விட அணி திரண்டு வாரீர்னு டிஜிட்டல் பேனர் கட்டுவாங்க, இது நாட்டை சீர்குலைக்க வந்த வெளிநாட்டு சதின்னு உளவுத்துறை ரிப்போட்டு வரும், ஏய்ய்ய்யப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா, ஆளை விடுங்க சாமி, ஒரு உப்புப் பெறாத உப்பு மேட்டர்ல எவ்வளவு வில்லங்கம் இருக்கு பாருங்க,,,,,, என்னத்தச் சொல்ல.

********************************************************************************

அது என்னன்னே தெரியலீங்க, நம்மளுக்குத்தான் இந்த மாதிரி நடக்குதா, இல்ல எல்லாருக்குமே நடக்குதான்னு தெரியல. டோல் கேட்ல நம்ம கார் எந்த வரிசையில நிக்குதோ, அந்த வரிசையில மாத்திரம், முன்னால இருக்கற கார்காரர், காசு வாங்கறவன் கிட்ட சண்டை போடுவார், இல்லைன்னா 500 ரூபாய் நோட்டை தேடி எடுத்துக் குடுத்து, சில்லறை வாங்கி சரி பார்த்து நிதானமா பர்ஸுல வெச்சுட்டு, அப்புறமா கிளம்புவாரு, இல்லைண்ணா நமக்கு முன்னால ரெண்டு கார் இருக்கும்போது அங்க மெஷின் கெட்டுப் போயிரும், இப்பிடி எதாவது ஒண்ணு நடந்து, நம்ம பொறுமையின் அளவை சோதிச்சுட்டே இருக்கும்.


பெட்ரோல் நிரப்ப போனா, நமக்கு முன்னால இருக்கற கார்காரர், சாவகாசமா கிரெடிட் கார்டை எடுத்துக் குடுத்து, அது வேலை செய்யாமப் போய், அப்புறம் இன்னொரு கார்டை எடுத்து குடுத்து, நிதானமா ரசீதுல கையெழுத்துப் போட்டு, ஏன், இல்ல, ஏன் இப்படி எனக்கு மாத்திரம் நடக்குது. என்னத்த சொல்ல…….
***********************************************************************************
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில், தினமும் மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போகும் பொழுது, நிறைய மாடுகள் ரோட்டில் படுத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறேன். அவைகளை ஒதுங்கச்சொல்லி ஹாரன் அடித்து விட்டு ஓரிருமுறை சென்றிருக்கிறேன். ஒருமுறை ஒரு இளம் கன்னுக்குட்டி நடு சாலையில் நின்று கொண்டிருக்க, நான் ஹாரன் அடிக்க, அந்த கன்றுக்குட்டி மிரண்டு ஓடாமல் சாவகாசமாக திரும்பி என்னை நெடு நேரம் பார்த்தது. அதன் பார்வையில் அது என்னிடம் ஆயிரம் வார்த்தைகள் பேசியது போல் தோன்றியது. வீட்டுக்கு போகும் வரை அது பேசியிருந்தால் என்ன பேசியிருக்கும் என யோசித்துக் கொண்டே போனேன். அது பேசியிருந்தால்……..

“டேய், வெண்ணை, பெருசா காருக்குள்ள உக்காந்துட்டு என்னைப் பார்த்து ஒதுங்கிப் போகச்சொல்லி ஹாரன் அடிக்கறயே, நீயும் உன் காரும் எங்க நிக்கறீங்க தெரியுமாடா, மவனே, இந்த இடம் நாங்க ஓடி விளையாட, நின்னு மூத்திரம் பேய, குனிஞ்சு புல்லு திங்கன்னு எங்களுக்காகவே உதிச்ச இடம்டா, அதுல ஒரு கான்கிரீட் சதுரத்தை வெச்சுட்டு ஆபீஸூங்கறீங்க, ஒரு வண்டி தாரைக்கொட்டி ரோடுங்கறீங்க, அதுக்கும் மேல என்னைப் பார்த்தே தள்ளி நில்லுன்னு ஹாரன் அடிக்கறயா, கசுமாலம், உன் இடத்துல நான் நிக்கலடா, என் இடத்துல தாண்டா நீ நிக்கற, சீ, தூரமாப் போடா”

இதை நினைத்த போது அந்த கன்னுக் குட்டியிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். இப்பொழுதெல்லாம் இந்த சாலையில் நான் மாடுகளைப் பார்த்து ஹாரன் அடிப்பதில்லை. என்னத்தைச் சொல்ல……


Tuesday, November 17, 2009

தங்கமணிக்கு பத்து விதிகள்

ஆதி மாத்திரம் தான் தங்கமணி ரங்கமணி பதிவு போடுவாரா என்ன, இதா நாங்களும் போடறம்ல,

பரிசல் மாத்திரம் தான் பத்து பத்தா எழுதுவாரா என்ன, நாங்களும் எழுதறம்ல.

தங்கமணிக்கு பத்து விதிகள் :

உனக்கு என்ன வேணுமோ அதை நேரடியா கேளு, இந்த குறிப்பாலுணர்த்துதல், பார்வையிலயே பேசறது, அடைமொழியில பேசறது, சங்கேத வார்த்தைகள், சமையல்ல மறதிகள்ங்கற விளையாட்டே வேணாம். எதுன்னாலும் நேரா சொல்லித் தொலை.

கடந்த 17 மாசமா உனக்கு அடிக்கடி தலைவலின்னு சொல்லிகிட்டிருக்கியே, அதுக்கு ஒரே மருந்து உடனே போய் டாக்டர பார்க்கறதுதான். அதுக்காக பரிதாபப் படுவது கூட மருந்துதான் அப்டீன்னு நெனச்சியானா, அந்த மருந்து உன் ஃபிரண்ட்ஸ் கிட்டதான் கிடைக்கும்.


வீட்ல என்ன வேலை செய்யணும்னு மாத்திரம் சொல்லு, அதை எப்படி செய்யணும்னு உனக்குத் தெரியும்னா, அதை நீயே செஞ்சிடேன். அல்லது நான் செய்யும்போது அமைதியாவாவது இரேன். ஏன்னா, நாங்கெல்லாம் கொலம்பஸ் பரம்பரை, எங்க போகணும்கறதை மாத்திரம் சொல்லுங்க, எப்படி போகணும்கறதை நாங்க பாத்துக்குவோம்.


எல்லா ஆம்பளைக்கும் கண்ணு வந்து Windows default setting மாதிரித்தான். 16 கலரைத்தான் புரிஞ்சுக்கும். மயில் கழுத்து நீலம்னா அதுல ரெண்டு மேட்டர் இருக்கு, ஒண்ணு ஒரு பறவையோட கழுத்து, இன்னொண்ணு கலர், இதுல உனக்கு புடவை எந்த மாதிரி வேணும்??? காஃபி ப்ரௌன்னுன்னா ஆமா, காஃபி எப்பவுமே ப்ரௌன்தான். வெங்காயத் தோல் கலர்னா, நீ எந்த வெங்காயத்தை சொல்ற, சாம்பார் வெங்காயமா, பெரிய வெங்காயமா?????


6 மாசத்துக்கு முன்னால எதாவது சொல்லீருந்தா, அதையெல்லாம் இன்னைக்கு உதாரணமா சொல்லக் கூடாது. உண்மையிலயே, நாங்க சொல்ற கருத்துகள் எல்லாம் 7 நாளைக்குத்தான். அதுக்கப்புறம் சிந்தனைச் சிற்பிகளாகிய எங்களுக்குள்ளதான் புதுக் கருத்து வந்துரும்ல.


நான் சொல்ற ஒவ்வொரு கருத்துக்கும் ரெண்டு அர்த்தமிருக்கும். இதுல ஒரு அர்த்தம் உனக்கு புடிக்கலைன்னா, நான் எப்பவுமே அந்த அடுத்த அர்த்தத்தைதான் சொன்னேன்னு அர்த்தம்...


நீ குண்டா இருக்கியோன்னு உனக்கு தோணிச்சுன்னா, ஆமா, நீ குண்டா தான் இருக்கே. அத என் வாயால சொல்ல வெச்சு ஒரு புது பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட வேண்டாம்.


நான் என்னைக்குமே ஒரு நல்ல ஷேப்புலதான் இருக்கேன். ரவுண்டா இருக்கறது கூட ஒரு ஷேப் தான. அதையெல்லாம் அடிக்கடி சொல்லிக் காமிக்க கூடாது.


நீ விளம்பர இடைவேளைகளில் பேசற ஒவ்வொரு மேட்டரும் எவ்வளவு சூப்பரா இருக்குது தெரியுமா…. மத்த நேரங்கள்ல நீ எதையாவது சொல்லீட்டு, அடுத்த சண்டைல அத ஆதாரமா காமிக்க கூடாது.


என்னம்மா பிரச்சனைன்னு நான் கேட்டா, நீ ஒண்ணும் இல்லன்னு சும்மா சொல்லீட்டேன்னா, நாங்க அத ஒண்ணும் இல்லன்னுதான் எடுத்துக்குவோம். எங்களுக்குத் தெரியும் நீ பொய் சொல்றேண்ணு, ஆனா இந்த ஒண்ணும் இல்லைங்கற பதில் எவ்வளவு தெளிவா இருக்கு தெரியுமா……

Monday, November 16, 2009

கேபிள் சங்கரின் தந்தையும் நண்பனும்

கேபிள் அண்ணன் இழந்தது தன் தகப்பனை மாத்திரமல்ல, ஒரு நல்ல நண்பனையும்தான் என்று அறியும் பொழுது மனது நெகிழ்கிறது. ஜாக்கி சேகர் தன் பதிவில் இதை சொல்லியிருந்தார்.

இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றானாலும், தந்தையின் இழப்பு என்பது விட்டுச் செல்லும் வெற்றிடம் நிரப்ப முடியாததாகி விடுகிறது. உலகின் எந்த ஒரு மன்னனாகட்டும், மாமேதையாகட்டும், அவரின் தந்தையின் இழப்பு என்பது துக்கம் தருவது தான். இதே கட்டத்தை அடியேனும் கடந்து வந்திருக்கிறேன்.

இன்றும் என் அப்பா உபயோகித்த கைத்தடி, அவரின் கண்ணாடி, அவர் வாசித்த பைபிள், அவர் படுத்திருந்த படுக்கை, அவரது ஷேவிங் செட், அவரது வேஷ்டிகள் என இவற்றில் ஒன்றைக் கண்டாலும் தந்தையின் இழப்பு கண்ணை நிறைக்கும்.

கேபிள் அண்ணன் ஆறுதல் அடைய கொஞ்ச நாட்கள் பிடிக்கும். அவரது தேவையின் சமயத்தில் உண்மையாலுமே தோள் கொடுக்க பதிவுலகம் திரண்டு வந்திருக்கிறது என்பதை கேட்கும் பொழுது, பதிவுலகம் மூலம் உருவாகியிருக்கும் நட்பு வளையம் எவ்வளவு உறுதியும் நேயமும் மிக்கது என்பது தெரிகிறது. நர்சிம் தல, உங்கள் செயல்களால் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகிறீர்கள். வணங்குகிறேன்.

இதே ஒற்றுமை, இதே நட்பு, ஆக்க பூர்வமான செயல்களில் வரிந்து கட்டிக் கொண்டு முதலில் களம் இறங்கும் குணம் ஆகியவை பதிவர்களுக்குள் என்றும் நிலைத்திருக்க வேண்டுகிறேன்.

கேபிள் அண்ணே, தொலை தூரத்திலிருப்பதால் எழுத்தால் மட்டுமே, உங்கள் துக்கத்தில் பங்கெடுக்கவும், உங்களுக்கு ஆறுதல் சொல்லவும் முடியும். சென்னை வந்ததும் கண்டிப்பாக சந்திக்கிறேன்.

Wednesday, November 11, 2009

ஜுகல்பந்தி – 11 – 11 – 2009 – அமெரிக்க பொங்கல்.

அமெரிக்காவில் பொங்கல் விழா

17 ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் கிளம்பிய பகுத்தறிவு வாதிகள், மத குருமார்களை கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். பாரம்பரியங்கள், சடங்குகள், மூட நம்பிக்கைகள் என சர்ச்சின் குருக்களால் போதிக்கப்பட்ட எல்லாமுமே கேள்விக்குள்ளாக்கப் பட்டன. இப்படியே கருத்து வேருபாடுகள் தொடர்ந்து, நீயா, நானா வரை வந்த இந்த பகுத்தறிவு வாதம், சர்ச்களில் பிரிவினைக்கு வித்திட்டது. அதே சமயத்தில் அமெரிக்க கண்டத்தையும் சில முதலாளிகள் புரட்டிப் பார்க்க ஆரம்பித்த காரணத்தால் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் பெருகிக் கொண்டிருந்தது. இங்கிலாந்தில் சர்ச் எழுதும் கவிதைக்கு எதிர்கவிதை எழுதி யாரும் உயிரோடு இருக்க முடியாது என்ற காரணத்தினாலும், அமெரிக்காவின் நிலத்திலிருக்கும் சிறப்புகளைப் பற்றி அவ்வப்பொழுது அங்கு சென்று வரும் கப்பல்கள் கதை கதையாய் சொல்வதாலும், இங்கிலாந்தின் ஒரு கூட்டம், அலை கடலென ஆர்த்தெழுந்து அமெரிக்கா கிளம்பியது. இங்கிலாந்திலிருந்து கிளம்பியதின் உண்மை நோக்கமென்னவோ சர்ச் உடனான பிணக்கு தான் காரணமென்றாலும், அமெரிக்க கனவும் (ஹூக்கும், அப்பயுமா) சம அளவில் வசீகரித்ததென்னவோ உண்மைதான்.

1620 ஆம் ஆண்டு, செப்டெம்பர் 6 ம் தேதியோ அல்லது 16 ம் தேதியோ,(சரியான தேதியைக் குறித்த குழப்பங்கள் வரலாற்றுப் பக்கங்களில் இன்னும் இருக்கிறது) இங்கிலாந்திலிருந்து கிளம்பிய “மே ஃபிளவர்” என்ற கப்பலில் ஏறிய 102 பயணிகள் தங்கள் பயணத்தை துவக்கினர். கடும் பனிப் பொழிவு, கப்பலை புரட்டிப் போட துடிக்கும் கடல் காற்று என எல்லா சிரமங்களுக்கு மத்தியிலும் 66 நாட்கள் பயணித்து, அமெரிக்காவின் கிழக்கு பகுதியிலிருக்கும் பிளை மவுத் என்ற ஊருக்கு இவர்கள் வந்து சேர்ந்தனர். இந்த 66 நாட்களில் கப்பலிலேயே இருந்த ஒரு நிறைமாத கர்ப்பிணி ஒரு குழந்தையையும் பெற்றிருந்தாள்.

தரை இறங்கியதும், அங்கு உறைந்து கிடந்த பனியும், வெற்றிடமும் மட்டுமே அவர்களை வ்ரவேற்றது. உண்ண உணவு இல்லை, குவியலாக வைக்கப் பட்டிருந்த மணற்குன்றுகளின் மீது படிந்திருந்த பனிக்கட்டிகளை எப்படியோ உடைத்தெடுத்து, மண்ணைக் கிளறி பார்த்தால், அதனுள் மக்காச்சோள கதிர்கள் புதைத்து வைக்கப் பட்டிருந்தன. அடித்ததடா லாட்டரி என குதூகலித்தவர்களுக்கு ஒரு சில குன்றுகளிலிருந்து எலும்புக் கூடுகளும் கிடைத்தன. எப்படியோ, உண்ணக் கிடைத்ததை எண்ணி சந்தோஷப் பட்டு உண்டு களித்து, பசியின் தாக்கம் போன பின் தான் அந்த பயங்கரம் அவர்களுக்கு உறைத்தது. மண்ணுக்குள் புதைக்க வேண்டுமென்றால், அதை புதைத்தவர்கள் இங்குதான் இருக்க வேண்டும். ஆஹா, பசி மயக்கத்தில் அடுத்தவன் சோத்தை ஆட்டையப் போட்டுட்டமா, இனி என்னவெல்லம் நடக்கப் போகுதோ என பயந்திருந்தவர்கள் மீது, அந்த மண்ணின் மைந்தர்களான வெள்ளந்தி மனிதர்கள் அன்பையே பொழிந்தனர். ஒரு வழியாக அவர்களின் தயவில் உயிர் பிழைத்த ஆங்கிலேயர்கள், அந்த பயணத்தின் வெற்றிக்காகவும், உள்ளூர் ஆசாமிகளின் கண்களில் கிடைத்த தயவிற்காகவும், இறைவனுக்கு நன்றி சொல்லி ஆரம்பித்ததுதான் ‘நன்றி சொல்லும் பண்டிகை”. பின்னாளில் இவர்களுக்கு சோறு போட்டு கட்டி அணைத்த அந்த வெள்ளை மனசுக் காரர்களை, குத்தி வகுந்தெடுத்து விட்டு, ஆங்கிலேயர்களுக்கே உரிய அந்த குரூர புத்தியுடன் எல்லாவற்றையும் கபளீகரம் செய்தது வேறு கதை.

இப்படியாய் ஆரம்பித்த “Thanks Giving Day” கொண்டாட்டங்கள் பின்னாளில் ஒரு அறுவடைப் பண்டிகையாக மாறிப் போனது. விளை நிலத்தின் பலன்களை கடவுளுக்கு படைப்பது என்பது ஒரு சம்பிரதாயமாகிவிட்டது. மே ஃபிளவர் கப்பல் வந்து இங்கு கரை சேர்ந்தது ஒரு நவம்பர் மாதத்து வியாழக் கிழமையாயிருந்ததோ என்னவோ, ஒவ்வொரு நவம்பர் மாதத்தின் கடைசி வியாழக் கிழமைகளிலும் இந்தப் பண்டிகை கொண்டாடப் படுகிறது.

முழு வான்கோழியை அப்படியே தீயில் வாட்டி எடுத்து, வீட்டில் உள்ள அனைவரும் குடும்பமாக குளிருக்கு இதமாயிருக்க இரவில் தீமூட்டி ஒரு வட்டத்தில் அமர்ந்து, பழங்கள், காய்கறிகள், மதுவகைகள் என எல்லாவற்றையும் புசிப்பதும் குடிப்பதும் மட்டுமே இன்று நிலைத்திருக்கிறது.

புசிப்பதற்கும், குடிப்பதற்கும் இது ஒரு காரணமும் தருணமுமாயிருப்பதினால், நம்மூர் பொங்கலைப் போலவே நிலத்தில் அறுவடை செய்தவனும் சரி, செய்யாதவனும் சரி எல்லாரும் கொண்டாடுகிறார்கள்.

பாகிஸ்தானா- பட்டாசுக்கடையா

எதோ தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கறமாதிரி, குண்டு வெடிச்சுகிட்டிருக்காங்க. பெஷாவர் நகரில் நகர மேயரே சிவலோக பிராப்தி அடைந்திருக்கிறார். இங்குதான் என்பது இல்லை, இதில்தான் என்பது இல்லை. காரில், பஸ்ஸில், சைக்கிளில், ராணுவ முகாமுக்கு அருகில், இன்னும் மக்கள் கூடும் இடங்கள் எல்லாவற்றிலும் குண்டுகள் வெடிக்கின்றன. மரணமும், ஓலங்களும், அறிக்கைகளும் த்தூ…..,

அங்குள்ள அரசியல் வியாதிகள் மக்கள் கவனத்தை திசை திருப்ப, இந்தியா தீவிரவாதிகளுக்கு துணை நின்று பாகிஸ்தானில் குண்டு வைக்கிறார்கள் என்று கத்திப் பார்த்தார்கள். ஆனால் எதுவும் எடுபடவில்லை. குண்டுகள் வெடிக்கத்தான் செய்கிறது, காமன் மேன் கதறத்தான் செய்கிறான்.

இதைத்தான் அய்யன் வள்ளுவன் சொன்னானோ::

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் – தமக்கின்னா
பிற்பகல் தாமே விளையும்.
சாப்பாடு

கேபிள் அண்ணன் மாத்திரம் கொத்துப் புரோட்டாவுல எப்பப் பார்த்தாலும் சாப்பாடு சாப்பாடுன்னு ஒரு ஐட்டம் போட்டற்ராரு, இதா நாங்களும் எழுதுவம்ல….,

இங்க வட நாட்ல நொந்துகிட்டிருக்கறததான் எழுத முடியும். கடவுள் மாத்திரம் உருளைக்கிழங்கை படைக்காம இருந்திருந்தார்னா, வட இந்தியாவுல முக்காவாசிப்பேர் பசியிலயே செத்துப் போயிருப்பான். அய்யய்யோ, எதுக்கெடுத்தாலும் ஆலு, ஆலு, ஆலு, ச்சே, ரம்மி ஆட்டத்துல ஜோக்கர் சொருகுறமாதிரி, எதுல வேண்ணாலும் உருளைகிழங்கை சொருகி விட்டற்ராய்ங்க. எத்தனை நாளைக்குத்தான் மனுஷன் இந்த ஒரே ஐட்டத்த சாப்பிட முடியும். ம்ஹூம், கார்க்கிய மாதிரி கூடிய சீக்கிரம் எஸ்கேப்பாகலாம்னு பார்க்கிறேன்.

ங்கொய்யால பக்கங்கள்

நாலுகாசு கையில இருந்தா பணக்காரங்கறான்,
நாலு வார்த்தை பேசிப்புட்டா மேதாவிங்கறான்,
நாலு எழுத்து சேர்த்து எழுதுனா எழுத்தாளர்ங்கறான்,
நாலு பேரு கூட நடந்தா தலைவருங்கறான்,
ங்கொய்யால
மொபைலு எத்தனை பெருசா இருந்தாலும்
சிம்கார்டு ஒரே சைசுதாண்டா.

Monday, November 9, 2009

வந்தே மாதரம் – வருதய்யா ஆத்திரம்.

1835 ம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் மிட்நாப்பூர் நகரில், ஆங்கிலேய அரசில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு இந்திய அதிகாரியின் வீட்டில் பிறந்தவர் பங்கிம் சந்தர சட்டர்ஜி. 1891 – ஆம் ஆண்டு வரை, நீதிபதியாக ஆங்கிலேய அரசாங்க உத்தியோகம் பார்த்து விட்டு, தினமும் சாரட் வண்டியில் வீட்டுக்கு போய் சகதர்மிணி செய்து வைக்கும் மீன்குழம்பை ஒரு பிடி பிடித்து விட்டு, ஒழுங்காக தூங்கப் போன இந்த மனிதருக்குள்ளும், ஆங்கிலேய எதிர்ப்பு என்பது மனதுக்குள் கனன்று கொண்டிருந்தது. கவிதைகள் எழுதுவதிலும், புனைவுகள் எழுதுவதிலும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த இந்த மனிதர், 1882 ஆம் ஆண்டு “அனந்தாமத்” என்ற ஒரு புத்தகம் எழுதினார். ஆங்கிலேயர்களின் வரி வசூலிக்கும் கொள்கைக்கு எதிராக இந்து மற்றும் இஸ்லாமிய துறவிகளால் நடத்தப் பட்ட “துறவிகளின் போரையும்”, அந்நாட்களில் (1770 களில்) வங்காள பகுதியில் தலைவிரித்தாடிய பஞ்சத்தின் கோர விளைவுகளையும் மையப் படுத்தி எழுதிய ஒரு புனைவு இது.

பஞ்சத்தின் பிடியிலிருந்த வங்கத்தில் மனிதர்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு, கடைசியில் மனிதர்களையும் விற்கத் தொடங்கினார்கள். ஆனால் வாங்குவோர் தான் யாரும் இல்லை. கல்யாணி என்ற வங்கப் பெண் தன் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு ஆள் பிடித்து விற்பவர்களின் கண்களில் தப்பித்து ஓடுகிறாள். ஆனால் வாணலிக்குத் தப்பி நெருப்பில் விழுந்த கதையாய், அவள் ஆங்கிலேய சிப்பாய்களின் காமக் கண்களில் பட்டு விடுகிறாள். உதவி உதவி என்று கதறி அந்த பெண், ஒரு ஆற்றங்கரையில் மூர்ச்சையானதும், அவளை காப்பாற்றும் ஒரு இந்துத் துறவி அவளை பாதுகாப்பு கருதி துறவிகள் கூட்டமாய் குழுமியிருக்கும் இடத்தில் மறைத்து வைக்கிறார். ஏற்கெனவே ஆங்கிலேயர்களின் அடாவடி வரி வசூலிப்பினால் தங்களது புண்ணிய தலங்களுக்கு சுதந்திரமாக சென்று வர முடியாமல் வெறுப்படைந்திருந்த துறவிகள், கல்யாணிக்கு ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட அவமானத்தின் கதையை கேட்டதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெகுண்டு எழுகிறார்கள் . இதன் விளைவாக நடந்தது தான் துறவிகளின் போர். இதில் நிராயுத பாணிகளாய் வெறும் கோபத்தையும் ஒற்றுமையையும் மாத்திரமே ஆயுதங்களாக கொண்டு போரிட்ட துறவிகளால், ஆங்கிலேய ராணுவம் மற்றும் ஆயுத பலத்துக்கு முன்பாக சில மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. கலகத்தை அடக்கி விட்டோம் என சில ஆங்கில அதிகாரிகள் இங்கிலாந்து அரசியின் கையால், தங்கள் சட்டைகளில் மெடல் குத்திக் கொண்டார்கள். இப்படியாக போகும் அந்தப் புனைவில் இந்திய நாட்டை ஒரு அன்னையாக உருவகப் படுத்தி அந்த அன்னையின் சிறப்புகளை தனக்கே உரிய சமஸ்கிருத மற்றும் வங்க மொழி புலமையின் சிறப்பில் எழுதிய வரிகள் தான் “வந்தே மாதரம்”.

1890களின் பின்பகுதியில், ஆங்கிலேயர்களின் அட்டகாசம் அதிகமாகி, இங்கிலாந்து ராணிக்கு தங்களது விசுவாசத்தைக் காட்ட “ O God, Save the Queen” என்ற பாட்டை இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாடவேண்டும் என கட்டாயப் படுத்தினார்கள். எங்கேயோ இருந்து வந்து நம்மீது ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்துக் காரனின் ராணி நன்றாயிருக்க வேண்டுமென நான் ஏன் வேண்ட வேண்டும் என ஒவ்வொரு இந்தியனும் வெகுண்டு கொண்டு இருந்த நேரத்தில், 1896 ஆம் ஆண்டு கல்கத்தாவில் அப்போதைய தலைவர் ரஹிமத்துல்லா சயானி என்பவரின் தலைமையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், ராணியின் பாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம் பாரத தாயைப் பற்றிப் பாட வேண்டும் என தீர்மானித்து முதன்முதலாக வந்தே மாதரம் பாடப் பட்டது. பிறகு இந்தப் பாட்டின் முழு அர்த்தமும், அந்த வர்ணனை வரிகளில் வெளிப்படும் இந்திய மண்ணோடுள்ள உளம் சார்ந்த உணர்வுகளும், ஒவ்வொரு இந்தியனையும் ஈர்க்க, மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் வந்தே மாதரம் ஒலித்தது. குறிப்பாக நாம் அறிய வேண்டியது, அப்பொழுது சுதந்திரப் போராட்டத்தில் வெகுவாக ஈடுபட்டிருந்த இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே எந்த வித கருத்து பேதங்களுமின்றி இந்தப் பாடல் பாடப் பட்டு வந்தது.

இதற்கிடையே இஸ்லாமிய அறிவாளர்களால் ஜமாய்த் உலேமா – ஏ – ஹிந்த் (இந்திய அறிவாளிகள் குழுமம்) என்ற ஒரு அமைப்பு, 1919 – ம் ஆண்டு தோறுவிக்கப்பட்டது. இவர்கள் தங்கள் பங்குக்கு ஆங்கிலேய எதிர்ப்பை வெளிப்படுத்த “கிலாஃபத் இயக்கம்” என்ற ஒன்றை நடத்த இந்த இயக்கமும் இஸ்லாமிய மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. பிற்காலத்தில் இவர்கள், கொள்கை ரீதியில் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர். இவர்களில் பலர் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்த வேளையில், இவர்களுக்குள்ளேயே ஒரு தனி பிரிவினர் பிரிவினைக்கு ஆதரவாகவும் கிளர்ந்தனர். இந்த பிரிவினை ஆதரவாளர்கள் எல்லாம் சேர்ந்து பின்னாளில் ஜமாய்த் உலேமா – ஏ – இஸ்லாம் (இஸ்லாமிய அறிவாளிகள் குழுமம்) என்ற தனிக் குழுவாய் பிரிந்து போய் விட்டனர்.

இந்திய அறிவாளிகள் குழுமம் அன்றிலிருந்து இன்றுவரை, தங்களை இந்திய இறையாண்மையை முழுதும் மதிப்பவர்களாகவும், மதச் சார்பின்மைக்கு முழுதும் ஆதரவு தருபவர்களாகவும் தான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் அவர்களும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். மற்றும் பிராந்திய ரீதியில் அங்கங்கே இருக்கும் மாநில கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல்களில் பங்கேற்று, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து அரசியல் செய்து என இந்திய அரசியலின் ஒரு அங்கமாகவே திகழ்கிறார்கள்.

இப்படி சாதுவாக குல்லாய் அணிந்து கொண்டும், தாடியை நீவிக் கொண்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டும், ஐந்து முறை தொழுது கொண்டும் இருந்த இந்த அறிவாளிகள், சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் த்யோபந்த் என்ற இடத்தில் நடந்த அறிவாளிகள் மாநாட்டில் நிறைவேற்றிய ஒரு தீர்மானம் தான் இந்திய அரசியலில் ஒரு புதிய சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கிறது. தியோபந்தில நடந்த மாநாட்டில் நமது நாட்டுக்கோட்டை வீட்டுக்காரரான மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்கள் அறிவாளிகளின் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொள்ள, அந்த நேரம் பார்த்து அறிவாளிகளின் அறிவு கோக்கு மாக்காக வேலை செய்து, இஸ்லாமியர்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என ஃபத்வா வெளியிட்டு விட்டார்கள். இதென்னடா வம்பு, எக்குத் தப்பாக வந்து மட்டிக் கொண்டோமோ என நினைத்து, சிதம்பரமும் மாநாட்டில் பேசும் பொழுது, மிகுந்த எச்சரிக்கையுடன், இந்த ஃபத்வா மேட்டரை தொடாமலே பேசி விட்டு ஆளை விடுங்கடா சாமி என ஓடி வந்து விட்டார். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

இப்பொழுது இருக்கிற அரசியல் நிலைமையில், இறங்கு முகத்தில் இருக்கும் பாஜக திரும்பிய பக்கமெல்லாம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தனிக் கொடி பிடிக்க தயாராகி வருகிறார். அத்வானியின் தலைமை என்பது கட்சிக்கு எதிர்பார்த்த கவர்ச்சியை மக்களிடம் தர முடியவில்லை. ஜஸ்வந்து சிங் தனியாக ஜின்னா புராணம் பாடி விட்டு பிரிந்து விட்டார். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் வேளையில், நடந்து முடிந்த மாநிலத்தேர்தல்கள் அனைத்திலும் மண்ணைக் கவ்வ வேண்டியதாகி விட்டது. தென்னாட்டில் கால் ஊன்றக் கிடைத்த ஒரே ஒரு இடமான கர்நாடகத்தில், ரெட்டி சகோதரர்கள் தரும் குடைச்சல் வேறு திருகு வலியாய் மாறிக் கொண்டிருக்கிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என திரிந்தவர்களுக்கு, இந்த விஷயம் அகப் படவே வானுக்கும் மண்ணுக்கும் எகிறத் தொடங்கி விட்டார்கள்.

உடனே சிதம்பரம் பதவி விலக வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர், பிரவீண்பாய் தொகாடியா அறிக்கை விடுகிறார். சிதம்பரம் மௌனமாய் இருந்தது ஏன் என கேள்விகள், உருவ பொம்மை எரிப்புகள் என அரசியல் மேடை களை கட்டியுள்ளது. ஆனால் ஃபத்வா கொடுத்த அறிவாளிகள் சங்கம் என்ன காரணத்தால் இந்த தடையை விதித்தார்கள் என்றால், இதில் ஒரு பெண் தெய்வத்திற்கான துதிப்பாடல் வரிகள் வருகின்றன, அந்த வரிகளை உச்சரிக்கும் எந்த ஒரு இஸ்லாமியனும் அல்லாவை தூஷிக்கிறான் என திருவாய் மலர்ந்தருளி விட்டார்கள். இதற்கு இந்த அறிவாளிகள் கூட்டத்திலேயே ஒரு சிறு எதிர்ப்பு கிளம்பினாலும், அது திருவிழாக் கூட்டத்தில் ஒலித்த ஒரு குருட்டுப் பாடகனின் குரலாய் அமுங்கிப் போனது.

இந்த அறிவாளிகளுக்கு சில கேள்விகள்:

1919 ம் ஆண்டிலிருந்து நீங்களும் நெஞ்சை நிமிர்த்தி இந்தப் பாடலை பாடினீர்களே, அப்பொழுதெல்லாம் ஒளிந்து கொண்டிருந்த பெண்தெய்வம், திடீரென வெளிவந்தது ஏன்?

இறையாண்மைக்கும் ஆன்மீகத்துக்குமுள்ள வித்தியாசம் அறிவாளிகளான உங்களுக்கு கடுகளவாவது புரியாமல் போனது ஏன்?

ஃபத்வா கொடுப்பது என்பது ஆன்மீக காரணங்களுக்காக மாத்திரம் தானா அல்லது அரசியல் காரணங்களுக்காகவும் கூடவா?

வகுப்புவாத அரசியலின் அருவருப்பான விளைவுகளை சற்றே மறந்து முன்னேற்றம் என்ற பாதையில் எப்படி அடியெடுத்து வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் சாமான்ய இந்தியனை இத்தைகைய ஃபத்வாக்கள் எப்படி பாதிக்கும் என அணுவளவாவது யோசித்தீர்களா?

ஆடுகள் முட்டி சண்டை போட்டவுடன், எந்த ஆடு முதலில் மயங்கி விழும் அதில் எத்தனை கறி தேரும் என நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் வெட்கங்கெட்ட இந்திய ஊடக நரிகள், வழக்கம் போல சிண்டு முடியும் வேலையை துவங்கி விட்டன. இது எங்கு போய் முடியுமோ அந்த பாரத மாதாவுக்கே வெளிச்சம்.

வந்தே மாதரம் – வருதய்யா ஆத்திரம்.

Wednesday, November 4, 2009

ஜுகல்பந்தி – 4 – 11 – 2009 - தெய்வத்தின் வாசல்



நகரம் - ஹரித்துவார் - தெய்வத்தின் வாசல்.

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்து வழித்தெடுத்த அமுதத்தின் ஒரு குடம் (கும்பம்) இங்கு வைக்கப்பட்டிருந்ததாகவும், அதிலிருந்து சில துளிகள் தரையில் சிந்தியதாகவும் சொல்லப்படும் ஒரு இடம் இது. அமுதத்தை வழித்தெடுத்த பின் வழக்கம் போல தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கை கொடுக்காமல் அழுகுணி ஆட்டம் ஆட, அசுரர்கள் அதைப் பறிக்க முயல, அமுதத்தை நான்கு குடங்களில் ஊற்றி, அந்த வழியே வந்த கருட பகவானிடத்தில் கொடுத்து அனுப்புகிறார்கள். கருட பகவான் நான்கு குடங்களையும் நான்கு இடங்களில் மறைத்து வைக்கிறார். உஜ்ஜைன், நாசிக், அலகாபாத் மற்றும் ஹரித்துவார். இந்த நான்கு இடங்களிலும் கும்பங்களில் வைக்கப்பட்டிருந்த அமுதம் சில துளிகள் சிந்தி விட்டதால் தான் இங்கு “கும்பமேளா” க்கள் கொண்டாடப் படுகின்றன. மேலும் இந்த பாற்கடலை கடைந்து, அதற்கப்புறம் நடந்த களேபரங்களில் தெரிந்தோ, தெரியாமலோ பார்வதியுடன் ரொமான்ஸில் இருந்த சிவனும் பங்கெடுத்துக் கொண்டதாலும், அதே சமயத்தில் பாற்கடலை கடைய எடுத்து வந்த மந்தராச்சல மலை கடலில் மூழ்கும் பொழுது, அதை தாங்கிப் பிடிப்பதற்காக ஆமையாய் அவதாரமெடுத்து விஷ்ணுவும் ஆட்டத்தில் உள்ளதாலும், ஹரித்துவார் என்னும் இந்நகரம் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பெருமை சேர்க்கிறது.

நிதர்சனத்தில், எக்கச்சக்க பெயர்தெரியா மூலிகைகளுக்குள் புகுந்து, நறுமணமெடுத்து, அநேக வியாதிகளுக்கு ஒரே மருந்தாயிருந்து, பொங்கிப் பிரவாகமெடுக்கும் கங்கை நதி மலைகளிலிருந்தெல்லாம் கீழிறங்கி சமவெளியில் சாதுவாக நடைபயில ஆரம்பிப்பது இந்தப் புள்ளியில் தான். அதனால் இங்கு கங்கையில் குளிப்பவர்களுக்கு உடல் சுகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்ற ஒரே ஒரு காரணம் தான் இந்த இடம் செழித்து வளர்ந்து ஒரு புண்ணிய தலமானதற்கு மூல காரணமாயிருக்க வேண்டும். ஆனால் இதற்கு அடுத்த நகரங்களில் தெரியாமல் கூட கங்கையில் குளித்து விடாதீர்கள். உங்களுக்கு எதாவது வியாதிகள் தொற்றிக் கொண்டால் கம்பெனி பொறுப்பாகாது. இந்த ஒரே காரணத்துக்காக சிறப்புப் பெற ஆரம்பித்த இந்த கங்கையின் சமவெளிப் பகுதியில், மனிதன் காலடி எடுத்து வைத்து பல காலம் வரை சிவனும் விஷ்ணுவும் நுழையாமல் தான் இருந்திருக்கிறார்கள். இவர்கள் நுழைந்தவுடன் தான் மோட்சமும், புனித குளியலும், ஆலகால விஷமும், பாற்கடலும், வாசுகி என்னும் பாம்பு கடலைக் கடைய கயிறானதும், விஷ்ணு ஆமையானதும், அமுதமும், பிறகு கும்பமும், அதுவும், இதுவும் பின்ன அது இது, அப்புறம் இது அதுவென எல்லா கதைகளும் ஆரம்பித்தது.

இன்னொரு விஷயம். இந்தியாவிலுள்ள இந்துக் குடும்பங்களின் வம்சாவளி விவரங்கள் இங்குள்ள பிராமிண பண்டிட்களிடம் கிடைக்கிறது. பண்டைய காலங்களில் முன்னோர்களின் சாம்பலை கரைக்க எல்லா இந்துக்களும் ஹரித்துவார்க்குத்தான் வந்தார்களாம். வருபவர்களின் ஊர், விலாசம், வம்சம், இன்னும் என்னென்ன விவரங்களையெல்லாம் பதிவு செய்ய முடியுமோ அதையெல்லாம் அவர்கள் பதிவு செய்து விட்டு போய் விட்டார்கள். இன்று அதில் அநேகர் முகமதுகளாகவும், ராபர்ட்டாகவும், பீட்டராகவும் மாறிப் போயிருக்கலாம். இன்று இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரால் உடனடி சுகமளிக்கிற அற்புத ஊழியர்களும், பகுத்தறிவு பகலவன்களும் தங்கள் ஏழு தலைமுறைக்கு முந்தைய பெயர்களை தேடவேண்டுமானால் இங்கு இன்றும் தேடலாம். ஆனால் எப்படி நாடி ஜோசியம் ஒரு பணம் கொழிக்கும் வியாபாரமாகிப் போனதோ அப்படியே இந்த வம்சாவளி விவரங்களை வைத்து வியாபாரம் பண்ண ஒரு கும்பல் கிளம்பியிருப்பதுதான் வேதனை.

எங்கு நோக்கினும் பூஜைகளும், மந்திரங்களும், மணியோசைகளும், ருத்திராட்ச மாலைகளும், சாம்பிராணி புகையும், கஞ்சா சாமியார்களும் கூடவே சாமியாரிணிகளும், கும்ப மேளாக்களுமென இந்நகரம் இன்னும் புராதன வழக்கங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நவீனத்தின் தாக்கமும் இல்லாமலில்லை. இன்டர்நெட் பார்லர்களும், மூலிகை மசாஜ்களும், ருத்திராட்சக் கொட்டைகளின் பல்வேறு வடிவங்களும் (பஞ்சமுகி ருத்திராட்சமென ஒரு ஐட்டத்தை காட்டி ஏமாற்றிய ஒரு சாதுவிடமிருந்து தப்பித்து வருவதற்குள் டரியலாகி விட்டோம்) என வேகமாக நவீன மடைந்து வருகிறது.

நாட்டு நடப்புகள் :

ஆயிரம் கருத்து கணிப்புகள், ஒரு புறம் தாலிபான்களின் அச்சுறுத்தல், பழங்குடியினரின் மிருகத்தனமான தனி அரசாங்கம், தீவிரவாதத்தின் கோர விளையாட்டில் தினமும் துண்டாடப்படும் இறையாண்மை, எப்பொழுதும் வேறு நாடுகளிடம் கையேந்தி நிற்க வேண்டிய ஏழ்மைத்தனம், உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆயிரம் தடைகள், ஒருபுறம் மத வாதிகளின் ஏச்சு என எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் சிரித்த முகத்தை தாடிக்குள் புதைத்தபடி வலம் வரும் குல்லாக்கார ஹமீத் கர்ஸாய், மறுபடியும் ஒருமுறை தேர்தலில் வென்று ஆப்கானிஸ்தான அதிபராயிருக்கிறார். தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் வரை எத்தனையோ முட்டுக்கட்டைகளை கொடுத்த வடக்கு ஆப்கானிஸ்தானத்தின் முடிசூடா இளவரசரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான அப்துல்லா அப்துல்லா திடீரென தான் ஆட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விட, கர்ஸாய் மறுபடியும் அரியணை ஏறப் போகிறார்.

இங்கும் நம்மூர் காத்து அடிச்சிருக்குதுங்கோவ். ஒரு ஓட்டுக்கு இத்தனை ரூபாய் என்று இந்த தேர்தலிலும் பணம் விளையாடி இருக்கிறது. பாஹ்க்லான், ஹெல்மாந்த் போன்ற மாநிலங்களில் பணமூட்டைகளை வீடு வீட்டுக்கு கர்ஸாயின் ஆட்கள் விநியோகித்ததாய் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாக்காளர் அட்டைகள் காபூல் நகரத்தில் வெளிப்படையாய் விற்கப் பட்டதை BBC காரர்களே பார்த்துள்ளனர். கலவரத்தால் மூடப்பட்ட பெருவாரியான வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவு முறைப்படி நடத்தப் பட்டதாகப் பதிவு செய்யப்பட்டு, அதில் எல்லா இடங்களிலும் கர்ஸாயே வெற்றி பெற்றிருக்கிறார். ஆக மொத்தம் தேர்தலில் வெற்றியடையும் நுணுக்கம் எவ்வளவு சீக்கிரமா நம்மூரிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கே போயிருக்குது பாருங்க.

ங்கொய்யால பக்கங்கள்.

கோபம் வந்தா திட்டி எழுதலாம்,
காதல் வந்தா கவுஜ எழுதலாம்,

சோகம் வந்தா அழுது எழுதலாம்,

சரக்கடிச்சா உளறி எழுதலாம்,

குஜாலா இருந்தா குஷியா எழுதலாம்,

ங்கொய்யால,

ஒண்ணுமே தோண மாட்டேங்குதே

என்னத்த எழுத?????

Monday, November 2, 2009

நான் நிறுத்தீட்டேன், நீங்க........

தினமும் காலையில கணினிக்கு உயிரூட்டி, வந்திருக்கிற மின் அஞ்சல்களுக்கெல்லாம் பதில் சொல்லீட்டு, ஆணி புடுங்க ஆரம்பிச்சு, ஒரு 10 மணி வாக்குல, பதிவுலகத்துல பூந்து, நமக்கு புடிச்ச கடைகளுக்கெல்லாம் போய் புதுசா எதாவது வந்திருக்கான்னு ஒரு தரம் பார்த்துட்டு, அப்படியே பின்னூட்டமும் போட்டுட்டு வந்துருவேன். ஆனா ஒரு சிலர் அப்பத்தான் கடையில புது சரக்கு இறக்கியிருப்பாங்க, பின்னூட்ட பொட்டியில இன்னும் கணக்கே ஆரம்பிச்சிருக்காது. அங்க போயி பதிவ கிண்டல் ப்ண்ணியோ, பாராட்டியோ, அல்லது மேற்கோள் காட்டி கருத்து சொல்லியோ பின்னூட்டம் போட்டுட்டிருந்தேன். அப்படி பின்னூட்டம் போடறதுல ஒரு சிக்கல் இருக்குது. முதல் பின்னூட்டம் டெம்பிளேட் பின்னூட்டமா, “கலக்கல்”, “அசத்திட்டீங்க,” “ரசித்தேன்”, அப்படீன்னு எழுதுனாலோ, அல்லது கிண்டல் பண்ணி எழுதுனாலோ நிறைய விபரீதம் இருக்குது. அதாவது முதல் பின்னூட்டம் எந்த தோரணையில இருக்குதோ அதே மாதிரித்தான் அனைத்து பதிவர்களின் பார்வையும் இருக்கும்னு ஒரு சில பதிவர்கள் நினைக்கறாங்க. ஒரு பதிவு போடறதுக்கு அவனவன் எவ்வளவு கஷ்டப்பட்டு, நொந்து நூலாகி மேட்டர் தேத்தி பதிவு போடறாங்க, அதப் போயி முதல் முதலா கருத்து சொல்றேன்னு சொல்லி எதுக்கு பொழிக்கணும்னு தான் நான் முதல் பின்னூட்டம் போடறத நிறுத்தீட்டேன்.

***************************************************************************
1995ம் வருஷம், ராஜஸ்தானின் பில்வாடா பகுதியில் இருக்கும் சிரோஹி மாவட்டத்தில் வேலை செஞ்சுகிட்டிருந்தேன். எங்க ஆபீஸுக்கு கூட்டி பெருக்கவும், தேநீர் கொடுக்கவும் ஒரு பொண்ணு வேலைக்கு வருவா, ராஜஸ்தானி பழங்குடியினருக்கே உள்ள அந்த சிவப்பு நிறமும், மூக்கும் முழியுமா உள்ள ஒரு பதினஞ்சு வயசு வாலிப பொண்ணு. பக்கத்து கிராமத்துல இருந்து தினமும் வந்த அந்த பொண்ணோட அண்ணன் எங்களுக்கு டிரைவரா இருந்தான். ஒரு நாள் நான் தங்கியிருநத வீட்டுல இருந்து காலையில வேலைக்கு போறதுக்கு சைக்கிள எடுத்துட்டு கிளம்பி கொஞ்சம் தூரம் போனா, வேலைக்கு போக வேண்டிய எல்லாரும் கம்பெனில உள்ள காலனியில ஒரு நாலு ரோடு சந்திக்கற இடத்துல கும்பலா நிக்கறாங்க. என்னனு பார்த்தா, எங்க ஆபீஸ்ல வேலை செய்யற பொண்ணு இடுப்புக்கு மேல ஒரு பொட்டு துணியில்லாம கையை ரெண்டையும் நெஞ்சுக்கு குறுக்க கட்டிகிட்டு, குத்த வெச்சு உக்கார்ந்து, பாவாடையால நெஞ்ச மூட முயற்ச்சி பண்ணிகிட்டிருக்கா, கன்னத்துலயும், முழங்கையிலயும் சிராய்ப்புக் காயம் பட்டு ரத்தம் கசியுது, உதட்டுக்குப் பக்கத்துல ஒரு சின்ன வெட்டுக்காயம். காலையில வேலைக்கு போற அத்தன பேரும் சைக்கிள நிறுத்திகிட்டு அவ வெற்றுடம்பை வேடிக்கை பாக்கறாங்க. ஒருத்தரும் அவளுக்கு உதவ முன்வரல. நான் போய் என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு, பக்கத்து வீட்டு பையனோட சைக்கிள்ல பின்னால உக்காந்துட்டு வேலைக்கு வந்ததாகவும், அவன் சைக்கிள்ல துப்பட்டா மாட்டி, துப்பட்டாவோட சேர்ந்து சோளியும் சக்கரத்துல சுத்தி கிட்டதாகவும், தான் கீழ விழுந்து எல்லாம் காயமாகிவிட்டதாகவும் சொன்னா. (ராஜஸ்தான்ல பில்வாடா பகுதி ஆதி வாசி பெண்கள் இடுப்புக்கு மேல உள்ளாடை எதுவும் அணிய மாட்டார்கள், சோளி அதுவும் உடலின் முன்னே மார்புகளை மாத்திரம் தான் மறைக்குமே தவிர, முதுகு பக்கத்தில் வெறும் இரண்டு கயிறுகளைக் கொண்டு முடிச்சுகள் மாத்திரம் தான் இருக்கும். துப்பட்டா சரிந்து விடாமலிருக்க அதன் ஒரு நுனியை சோளியுடன் சேர்த்து, பின்னூசியால் குத்தியோ அல்லது முடிந்தோ வைத்திருப்பார்கள். சைக்கிள் சக்கரத்தில் சுற்றிய வேகத்தில் துப்பட்டா சோளியையும் கிழித்துக் கொண்டு போய் விட்டது). அத்தனை ஆண்கள் மத்தியில் வெற்றுடம்புடன் நிற்கிறோமே என்ற அவமானம் ஒருபுறம், கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயங்களின் வலி ஒருபுறமுமாக அந்தப் பெண் கூனிக் குறுகிக் கொண்டிருந்தாள். கண்ணுல பொல பொலன்னு கண்ணீரு வழியுது. சுற்றியிருப்பவர்களைப் பார்த்து எனக்கு கோபமே வந்தது, வெற்றுடம்புடன் உக்கார்ந்திருந்த அவளிடம் சென்று, பரபரவென என் சட்டையை கழற்றி அவளுக்கு கொடுத்து விட்டு, அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த அவளின் அண்ணனிடம், ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போ என சொல்லிவிட்டு, பனியனுடன், மறுபடியும் வீட்டுக்கு வந்து வேறு சட்டை அணிந்து வேலைக்கு போனேன். என்னை பனியனில் பார்த்த அனைவரும் என்ன செய்தி என கேட்டனர், விஷயத்தை சொன்னவுடன், கதை வேறு விதமாக திரிக்கப்பட்டு எனக்கும் அவளுக்கும் ஒரு இது என நான் வேலை செய்த இடத்தில் பேசப் பட்டது. அதனால இப்படி அதிரடியா களத்துல இறங்குறத அன்னைல இருந்து நிறுத்தீட்டேன்……..

**************************************************************************
ஒரு நாள் கிழக்கு கடற்கரை சாலையில மனைவி, மகளுடன் கார்ல போகும் போது, அப்பத்தான் தென் ஆப்பிரிக்க வாசம் முடிந்து வந்ததால, அங்க கார் ஓட்டுன பழக்க தோசத்துல, ரோடு நல்லாருக்குதேன்னு நினைச்சுகிட்டே, ஒரு அழுத்து அழுத்த, அந்த தக்ஷின் சித்ராவுக்கு பக்கத்துலன்னு நினைக்குறேன். ஒரு காவல நண்பர், குழாய் மாதிரி என்னத்தையோ ஒண்ணை கையில புடிச்சுகிட்டு என்னையே உத்துப் பாக்கறது தெரிஞ்சுது. அவுருக்கு பக்கத்துல ஒரு அதிகாரி பைக்குல உக்கார்ந்துகிட்டு பேப்பர் படிச்சுகிட்டிருக்காரு, ஒரு ஜீப்பு வேற நிக்குது. ஆஹா, மாட்டிகிட்டமடான்னு வேகத்தை குறைக்கறதுக்குள்ள அவுரு கையைக் காட்ட, வண்டிய சரியா அவுரு கிட்டவே நிறுத்தினேன். கைய காமிச்சவரு சுத்தி வர்றதுக்கும், நான் கண்ணாடிய இறக்கறதுக்கும் சரியா இருந்துச்சு, என்னப் பார்த்தவரு, என்ன ஏதுன்னு கூட கேக்காம, ஒரு வினாடி என்னை ஏற இறஞ்க பார்த்துட்டு, “என்ன சார், டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களே இப்படி பண்ணா எப்படி சார், கொஞ்சம் மெதுவா போங்க சார்” னு சொல்லீட்டு, பதிலுக்கு கூட காத்திராமல் அடுத்த வண்டிய பார்க்க கிளம்பீட்டார். என்ன நடந்ததுன்னே தெரியல, நானும் வண்டிய எடுத்துட்டு கிளம்பிட்டேன். அப்புறமா தான் தெரிஞ்சுது, அன்னைக்கு காலைல தான் தலை முடி வெட்டுனப்ப நல்லா குறைச்சு வெட்டுப்பான்னு சொல்லி நறுக்குன்னு வெட்டியிருந்தேன். நம்ம சிகைஅலங்காரத்தப் பார்த்துதான் அவரு டிப்பார்ட்மெண்ட் ஆளுன்னு நெனச்சுட்டாருங்கறது புரிஞ்சதுக்கப்புறம், டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களாட்டம் முடி வெட்டிக்கறத நிறுத்தீட்டேன்……..

Monday, October 26, 2009

நமக்கெதுக்குங்க இந்த வம்பு??????

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று நடுவர்கள், ஒரு தொகுப்பாளினி என்ஆட்டம் நன்றாகத்தான் களை கட்டுகிறது. ஆனால், நிகழ்ச்சியில் பேசப் படும் மொழியை கேட்டால் அருவருப்பாக இருக்கிறது. தமிழ் பாடல்கள் பாடப் படுகின்றன. சித்ரா என்னும் நடுவர், முடிந்தவரை தமிழில் பேசுகிறார். அவர் வேறு மொழிக்காரர் என்பதால் அதை பொறுத்துக் கொள்ளலாம். மனோ என்பவர் தமிழில் பேசுகிறார், ஆனால் கொஞ்சமாவது ஆங்கில கலப்படம் இல்லாமல் பேச திணறுகிறார். மூன்றாவதாக ஒரு நடுவர், அவர் பேசுவது என்ன மொழியென்றெ தெரியவில்லை, ஒரு பாடல் என்றால் அதில் சரணம், அனுபல்லவி, பல்லவி என்பவை இருக்கும். ஆனால் இவர் ச்ச்சரணம் என்று கஷ்டப்பட்டு உச்சரிக்கிறார். அதிகமாக புரியாத ஒரு மொழியில் பேசுகிறார். “ நீங்க நன்னா பாடினேள், அந்த top ல போறச்சே, உங்க voice வந்து flatter ஆகாம, steady ஆ இருக்கறது, அந்த ச்ச்ச்சரணத்தோட third word ஐ pronounce பண்ணும் போது ஒரு குட்டி jerk வர்றது. You will have to take note of these குட்டி குட்டி things.” என்று ஒரு புரியாத மொழியில் பேசுகிறார். சீய் தூ என்று துப்ப வேண்டும் போல் உள்ளது.

ஒரு பெண்குழந்தை போட்டியில் தோற்று விட்டதாக நடுவர்கள் தீர்ப்பு சொன்னதும், குழந்தைக்கே உரிய ஏமாற்றங்களுடன் அந்தக் குழந்தை கண்ணீர் வடிக்க, தொகுப்பாளினி அந்தக் குழந்தைக்கு ஆறுதல் சொல்கிறாராம். “அய்யய்யோ இதுக்கெல்லாமா அழுவாங்க, பாருங்க உங்க beautiful cheeks ல tears எல்லாம் roll ஆகி உங்க make up எல்லாம் வந்து spoil ஆகுது பாருங்க” மறுபடியும் காறி தூ தூ தூ

எது எப்படியோ தொலைக்காட்சி காரங்களுக்கு பணம் வந்தா சரிதானே, நமக்கெதுக்குங்க வம்பு?????

***********************************************************************************
இன்று மறுபடியும் இந்திய ஊடகத்தின் மற்றொரு அதிகப் பிரசங்கித்தனமான லொள்ளு:

அமெரிக்க ராணுவத்துடன் ஒரு கூட்டுப் பயிற்சியில் இந்திய ராணுவத்தினர் ஈடு பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள ஜான்சி நகரின் வெளிப்புறங்களில் ஒரு காடும் மலையும் சார்ந்த பகுதியை தேடிப் பிடித்து பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சியை நேரடியாக தொலைக் காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு இந்திய தலைவரையோ, அல்லது விருந்தினராக வந்துள்ள வெளிநாட்டு அரசாங்க முக்கிய மனிதரையோ, சீருந்தில் போகும் பொழுது, திடீரென தீவிர வாதிகள் தாக்கி விட்டால் அவர்களை எப்படி முறியடிப்பது என்பது இன்றைய நாளின் பயிற்சி. தொலைக்காட்சியின் நேர்முக வர்ணனை, இதோ முக்கிய விருந்தினர் வந்து கொண்டிருக்கிறார். அவரது சீருந்தை நோக்கி தீவிரவாதிகள் போகிறார்கள், தாக்குகிறார்கள், திடீரென ஒரு ஹெலிகாப்டர் வருகிறது, அதிலிருந்து அதிரடிப் படையினர் குதிக்கிறார்கள், அவர்கள் தீவிர வாதிகளை பதிலுக்கு தாக்க எப்படி வியூகம் அமைக்கிறார்கள் என நீங்கள் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதோ துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம், தீவிர வாதிகளை நோக்கி அலை அலையாக அதிரடிப் படையினர் முன்னேறுகின்றனர். கடைசியில் விருந்தினர் மீட்கப் பட்டார்.

அடேய் வெண்ணைகளா, மும்பை உல்லாச ஹோட்டலில் நீங்கள் நடத்திய அருவருப்பான நாடகத்தினால் எத்தனை வீரர்களை நாம் இழந்தோம் தெரியுமா, அதைப் பற்றிய குற்ற உணர்ச்சி ஒரு அணுவளவாவது இருக்கிறதா உங்களுக்கு? இப்பொழுது மறுபடியும் ஒரு ராணுவ நடவடிக்கையை படம் பிடித்து உங்கள் கஜானாவை நிரப்ப கிளம்பியிருக்கிறீர்களே, இந்தக் காட்சியை அந்த தீவிர வாதிகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லையா உங்களுக்கு??? ச்சீய், தூ தூ, தூ, எப்படா திருந்துவீங்க நீங்கெல்லாம். ??????

அதிகமா பேசுனா ஆட்டோ வந்துருமோ, நமக்கெதுக்குங்க இந்த வம்பு????

***********************************************************************************
சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று மாநில சட்ட சபை தேர்தல்களிலும் வித்தியாசமான செய்தியை மக்கள் அரசியல்வியாதிகளுக்கு சொல்லியிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று மதர்ப்பில் திரிகிறார்ப் போல் தெரிகிறது. ராகுல் காந்தியின் இளமைக் கவர்ச்சி கொஞ்சம் கை கொடுக்கிறதோ, அல்லது உண்மையாலுமே மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்ப ஆரம்பித்து விட்டார்களோ தெரியவில்லை. ஆமாம், காங்கிரஸ் ஜெயித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் சந்தடி சாக்கில், மகாராஷ்டிர மக்கள் ராஜ் தாக்கரே என்ற ஒரு பாம்புக்கும் பால் வார்த்திருக்கிறார்கள். எப்படி திராவிடம் பேசியே தங்கள் குடும்பத்தை வளர்க்க தென்னாட்டில் ஒரு கும்பல் உண்டோ, அப்படியே மண்ணின் மைந்தர்கள் என்ற ஒரு பிரிவினை வாதம் பேசி அரசியல் செய்ய ஒரு நச்சுப் பாம்பு கிளம்பியிருக்கிறது. இன உணர்வுகளை தூண்டி விட்டு தீப்பொறி பறக்க பேசி 15 இடங்களில் இந்தப் பாம்பு படமெடுத்திருக்கிறது. என்ன ஆகப் போகுதோ???????

அரசியல்னா அப்பிடி இப்படி இருக்கத்தானுங்க செய்யும். பாத்துட்டு ஒரு ரெண்டு நிமிஷம் புலம்பிட்டு போக வேண்டியது தான். நமக்கெதுக்குங்க இந்த வம்பு??????

************************************************************************************

Wednesday, October 21, 2009

ஜுகல்பந்தி – 21 – 10 – 2009 - விகாரங்களின் திருவிழா

நகரம் – புஷ்கர் – பிரம்மனின் நகரம்.

ராஜஸ்தானிய பாலைவன நகரங்களில் ஒன்று. ஜெய்ப்பூரிலிருந்து அஜ்மீர் சென்று அங்கிருந்து இன்னும் 11 கிலோமீட்டரில் இந்த மணல் பரப்பில் கால் பதித்து விடலாம். ஏரிகள், ஆலயங்கள், கடைகள், கலைகளின் வெவ்வேறு வடிவங்கள், இழுத்து சுருட்டப் பட்ட மீசை, ஒரு புடவையை விட நீளமான துணியில் தலைப் பாகை, அத்தனை வண்ணங்களையும் கலந்து ஒரே துணியில் தைத்து, மார்பை மட்டும் மறைத்து விட்டு முதுகு திறந்து நடமாடும் பெண்கள், மணல், மணல். மற்றும் மணல் என ஒரு குதூகலக் கலவை தான் இந்த நகரம்.

வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே களைகட்டும் விலங்குச் சந்தையில் ஒட்டகங்கள் முக்கிய பங்கு வகிக்கும். ஆயிரக் கணக்கான ஒட்டகங்கள், கழுதைகள், ஆடு மாடுகள், பறவைகள் என எல்லாம் விற்பனைக்கே. இவை அனைத்தும் சேர்ந்து ஒரு சேர கத்துவதில் ஒரு ஜுகல் பந்தி உருவாகும் பாருங்கள், ஆஹா, கேட்க காது கோடி வேண்டும்.

பிரம்மனுக்கு என ஒரு கோவில் உண்டென்றால் அது இங்குதான். பிரம்மனுக்கு மற்றும் சில கோவில்கள் இந்தோனேசியாவின் பாலித்தீவிலும், இன்னும் உத்தரப் பிரதேசத்திலும் உண்டென்றாலும், புஷ்கரில் எழுந்தருளியிருக்கும் பிரம்மன் விஷேசமானவனே. பிரம்மன் ராதாகிருஷ்ணனின் தரிசனம் வேண்டி அறுபது ஆயிரம் வருடங்கள் இங்கு காத்திருந்ததாக கதை சொல்லப்படுகிறது.

விசுவாமித்திரர் தவமிருந்த இடமென்றும், தேவலோக அப்சராவான மேனகை குளித்த ஏரியென்றும், மகாபாரத அவதார புருஷனான தரும ராஜா, இந்த ஊர் வழியாகத்தான் சிந்து நதியின் சமவெளி பிரதேசத்துக்கு கடந்து போனாரென்றும், வாமன புராணத்து கதைகளின் படி, பிரகலாதன் இங்கு வாழ்ந்தானென்றும் இன்னும் எத்தனையோ கதைகள் உள்ளன.

இத்தனை புராதனங்கள் நாடி நரம்புகளிலெல்லாம் ஓடி ஊடுருவினாலும், இன்று இந்த நகரமும் நவீன மயமாக்கலின் தாக்கத்திலிருந்து விடுபடவில்லை. ஒருபுறம் வெள்ளி ஜரிகைகளாலும், வண்ண போர்வைகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்களின் பவனி, திருவிழா நாட்களில் வெப்பக் காற்று பலூனில் ஆகாயத்தில் மனிதர்கள், நீண்ட மீசையை சுருட்டி முகமெங்கும் படரவிட்டு முண்டாசுகளுடன் பெருசுகள், நீண்ட மீசை யாருக்கு என போட்டிகள், ஒட்டகங்களின் ஓட்டப் பந்தயங்கள் என ஊரே ஒரு பதினைந்து நாட்களுக்கு திமிலோகப் பட்டுக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் இந்த ஊரையும் விட்டு வைக்கவில்லை, பிராந்திய புஷ்கர் கிரிக்கெட் அணிக்கும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வெள்ளைத்தோல் அணிக்கும் இடையே இந்த மணற்பரப்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரபலம். (வா, ராசா, லலித் மோடி, எங்கப்பா போயிட்ட நீ, கிரிக்கெட்டை வைத்து பணம் பண்ண இதோ இன்னொரு ஐடியா தயார். அடுத்து பாலைவன கிரிக்கெட்னு ஒண்ணு ஆரம்பிச்சு, சந்தோஷமா வாழ்க்கை நடத்தற அரேபிய நாடுகளையும் வளைச்சுப் போட்டு, அவங்க நிம்மதியையும் கெடுத்துரு ராசா, இது இன்னும் உங்கண்ணுக்கு ஏன்தான் தெரியலயோ)

இந்த களேபரங்களுக்கு மத்தியில் வெளிநாட்டவரை கவர்வதற்கெனவே, இந்த மணற்பரப்பில், ஆடல் பாடல், கேளிக்கைகள், விபச்சாரம், போதை வஸ்து என எல்லா கண்றாவிகளும் இருள் கவிந்ததும் நடக்கும்.

கார்த்திகை மாதத்து பௌர்ணமிக்கு முன்னாலும் பின்னாலுமென ஒரு 15 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவை, ஒரு முறையேனும் பார்த்து விட்டு, பிரம்மனின் அருள் பெற்று, பௌர்ணமியன்று பிரம்மனின் கரம் பட்ட ஏரிகளில் குளித்து, உங்களுக்கு எந்த விளைவு ஏற்பட்டாலும் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

ஹாலோவீன் – விகாரங்களின் திருவிழா.

ஐரோப்பிய தேசங்களில் கோடைகாலம் முடிந்து குளிர்கால தொடக்கத்திற்கு அறிகுறியாக, தங்கள் விளைநிலங்களின் பலன்களை முன்னோர்களுக்கு அர்ப்பணித்து மகிழ்ந்த விவசாயிகளுக்கு அசுத்த ஆவிகளின் பரிச்சயம் எங்கு ஏற்பட்டதோ தெரியவில்லை. கெட்ட ஆவிகளை விரட்டியடிக்க விகாரமான முக மூடிகளை அணிந்து கொண்டு விழாவெடுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் மதவாதிகள் உள்ளே புகுந்து முன்னோர்களின் ஆவிகளுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற ஒரு சடங்கை புகுத்தி, அதை இயேசு கிறிஸ்துவின் திருப் பெயரால் கட்டாயப் படுத்தி “All Saints Day” என்ற ஒரு தத்துவத்தை மக்களின் மீது திணித்து விட்டார்கள். இந்த புனிதர்களின் திருநாள் தான் பெயர் மருவி, நோக்கம் மருவி, குணம் மருவி, இன்னும் என்னென்னமெல்லாமோ மருவி விகாரங்களின் நாளாகி விட்டது.

1840களில், முற்றிலும் விவசாய தேசங்களான, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளில் ஏற்பட்ட பஞ்சத்தில் அடிபட்ட விவசாயிகள், தங்கள் பரம்பரை பழக்கங்களோடு அமெரிக்க மண்ணில் பஞ்சம் பிழைக்க தஞ்சம் புக, இந்த ஆவிகளோடு பேசும், பழகும் பழக்கம் ஒரு புது பரிமாணம் எடுத்தது. சூனியக் காரர்கள், கண்கட்டு வித்தை செய்பவர்கள், மந்திரவாதிகள், எலுமிச்சைப் பழத்தில் ஊசி குத்தி ரத்தம் வரவழைக்கும் மோடி மஸ்தான்கள், ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் என்னும் அறிவு ஜீவிகள் என எல்லோருக்கும் இந்த நாள் ஒரு விழா நாளாக மாறிவிட்டது. உடம்பில் விகார உருவங்களை பச்சை குத்திக் கொண்டு, எலும்பில்லாத இடங்களிலெல்லாம் துளையிட்டு வளையங்களை மாட்டிக் கொண்டு, ஆணும் பெண்ணும் மறைக்க வேண்டிய உடல் உறுப்புகளை திறந்து காட்டி, அசுத்த ஆவிகளை பயமுறுத்துகிறோம் என்ற போர்வையில் அருவருப்பான் முக மூடிகளுடன் ஊர்வலம் போகிறார்கள்.

அக்டோபர் மாதத்தின் கடைசி நாளில் நியூயார்க நகர வீதிகளில் இந்த விகார முகமூடி ஊர்வலங்கள் நாள் முழுவதும் நடக்கும்.

பதிவர் வட்ட தீபாவளி

எல்லாரும் எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்லி, நான் டவுசர் போட்டிருந்த பொழுது, நாங்கள் பாவாடை சட்டையில் உலாத்திய பொழுது தீபாவளி எப்படி நல்லா இருந்துச்சு தெரியுமா என காலச் சக்கரத்தை பின்னோக்கி இழுத்து, பதிவுலக வன்முறைகளுக்கு கண்டனம் சொல்லி, காயப் பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி, காயப் படுத்தியவர்களுக்கு கொம்பு சீவி விட்டு, சினிமாக்களை பிரித்து மேய்ந்து, காமன் மேனை கவிழ்த்துப் போட்டு என பதிவுலகில் இந்த தீபாவளியிலும் பட்டாசு நன்றாகத்தான் வெடித்தது. என்ன ஒரே ஒரு குறை, வேட்டைக்காரன் வந்திருந்தான்னா, அவன வெச்சு கொஞ்சம் மத்தாப்பு கொளுத்தி இருப்போம், ஆனா அவுரு என்னமோ இப்பத்தான் அம்பு செதுக்காறாரு போல இருக்குது, ஏன்னா வில்லு தான் வெளங்காம போயிடுச்சே, இனி வேட்டைக்காரன் எதுல அம்பு விடுவாரோ தெரியல.

ங்கொய்யால பக்கங்கள்


அப்பாவுக்கு புதுக் கண்ணாடி,

அம்மாவுக்கு புது புடவை,

ஆத்துக்காரிக்கு புதுப் பட்டு,

தங்கச்சிக்கு தங்கச் செயினு,

தம்பிக்கு டிஜிட்டல் கேமரா,

வாரிசுகளுக்கு புதுத்துணி, பட்டாசு,

வந்தவங்களுக்கு வழிச்செலவு,

பக்கத்து வீட்டுக்கு ஒரு தட்டு பலகாரம்,

ஒரு வழியா தீவாளி முடிஞ்சுது,

ங்கொய்யால,

இப்போதைக்கு இதெ வெச்சு ஓட்டு,

அடுத்த தீவாளிக்கு புதுச்செருப்பு வாங்கலாம்.

Tuesday, October 20, 2009

மூச்சு முட்ட முப்பது நாட்கள்

பன்னாட்டு நிறுவனமாம்,
பல மொழிகள் பேசுவார்களாம்,
பளபளக்கும் மேசைகளும்,
உடல் சிறுத்த கணிணிகளும்,
கண்ணாடி அறைகளுக்குள்
கைதிகளாய் மனிதர்களும்.

வாடகைக்கு உடல்கள் இங்கு
வரிசையாய் நிற்பதுண்டு.
மூளையை முடக்கி வைத்த
முண்டங்கள் முக்கியங்கள்.
சொல்வதை செய்து விடு
சொல்ல நினைத்ததை மறந்து விடு.

சுயம்புகள் தூரப் போங்கள்,
சிந்திப்பவர் ஒழுக்கம் கெட்டவர்,
ஆமாம் சாமி தாரக மந்திரம்,
சாப்பிட மட்டும் வாயைத்திற,
குலுக்க மட்டுமே கையை உயர்த்து,
அவசியப்பட்டால் அசைந்து கொள்.

கைநாட்டு போட வேண்டாம்,
கழுத்திலொரு பட்டை தருவோம்.
புவியின் சுழற்சி முப்பது முடிந்தபின்
முடிந்து தருவோம் முடிப்பு ஒன்று,
மூச்சு விடாமல் வாங்கிக் கொள்.

Thursday, October 15, 2009

அதாவது என்ன சொல்ல வ்ர்றேண்ணா.....

அதாவது என்ன சொல்ல வ்ர்றேண்ணா, ஒரு கோடு, அது நேரா இருக்குதாண்ணு சொல்றதுக்கு ஒரு கோணயான கோடு பக்கத்துல இருக்கணுமில்லையா, அதாவது கோணையான கோட்டைப் போல இல்லாததுனால இது நேரான கோடா தெரியுது. ஆனா உண்மையா அது நேரா இருக்குதா இல்லயாண்ணு எதை வெச்சு சொல்றது. எனக்கு நேரா தெரியறது உங்களுக்கு கோணலா தெரியுது.

இப்படித்தாங்க இருளும் வெளிச்சமும்னு ஒருத்தர் பேசுனாரு, அய்யா வெளிச்சம் எவ்வளவு இருக்குதுன்னு சொல்லீரலாம், ஆனா இருள் எவ்வளவு இருக்குதுன்னு சொல்ல முடியுமா, ஏன்னா இருள் என்னைக்குமே இருக்கறது, வெளிச்சம்தான் கொஞ்சங் கொஞ்சமா உருவாகி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு போகுது, ஆக, வெளிச்சம்னு ஒண்ணை சொல்லணும்னா, இருளின் இல்லாமைதான் வெளிச்சம்னு சொல்லலாமா???

அப்புறம் நல்லவன் கெட்டவன்னு சொல்றாங்க, எவன் நல்லவனோ அவன் முழுசா நல்லவனான்னு எப்படி சொல்றது, அதாவது ஒரு கெட்டவனப் போல இல்லாததுனால அவன் நல்லவனா தெரியறான், ஆனா நல்லவன்னா இன்னான்னா, யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க, ஆனா, இதுலயும் பாருங்க, ஒரு கெட்டவனப் போல அவன் இல்லாததால அவன் நல்லவனா, இல்ல நிஜமாவே நல்லவனா இருக்குறதுனால அவன் நல்லவனா?????

இதெல்லாம் எதுக்கு சொல்ல வர்றேண்ணா, அதாவது உலகத்துல, அதாங்க நாம வாழற பிரபஞ்சத்துல, தினமும் பாருங்க, அதுக்காக எங்கன்னு திரும்பி பாக்காதீங்க, நேராவே பாருங்க, ஆங், என்ன சொன்னேன், இதை எதுக்கு சொல்றேண்ணா, அதாவது…………………………………….

அட விடுங்க சாமி, போய் புள்ள குட்டிகளோட தீபாவளி கொண்டாடறதப் பாருங்க, நாந்தான் எதோ எழுதிகிட்டே போறேன்னா, நீங்களும் சும்மா வெட்டியா உக்காந்து இதையெல்லாம் படிச்சுகிட்டு……………..

தீபாவளி வாழ்த்துக்கள்.

Wednesday, October 7, 2009

அப்பாவும், ஈ மெயிலும்

இந்தாப்பா, உனக்கு புதுசா நோட்டுப்புத்தகம் வாங்கி வந்திருக்கேன். பத்திரமா கிழியாம வெச்சுக்கணும்.

அப்பா உங்களுக்குன்னு ஒரு ஈ மெயில் ஐடி ஓப்பன் பண்ணீட்டம்பா, பாஸ்வேர்ட கரெக்டா மறக்காம ஞாபகம் வெச்சுக்கோங்க.

நோட்டுப் புத்தகத்துல முதல் பக்கத்துல உன் பேரையும், வகுப்பையும் எழுதுடா.

முதல்ல ஜி மெயில் டாட் காம்னு டைப் பண்ணி என்டர்னு ஒரு பட்டன் இருக்குமே அத தட்டுங்கப்பா.

வலது கையில பேனாவை பிடிச்சு, நிப்பை அழுத்தாம மெல்லமா தேய்ச்ச மாதிரி எழுதுடா.

அப்பா, வலது கையில மௌஸ பிடிச்சுகிட்டு, ஆள்காட்டி விரல் இடது பட்டன்லயும், நடு விரல வலது பட்டன் மேலயும் வெச்சுக்கங்கப்பா

நோட்ட நேரா திருப்பி உங்கைக்கு வாகா வசதியா வெச்சுகிட்டு எழுதுப்பா, நோட்டு மேல படுத்த மாதிரி உக்காரத.

அப்பா, மானிட்டர்ல இருக்கற ஒவ்வொரு பட்டனயும் நல்லா பாருங்கப்பா, உங்களுக்கு கிட்டப் பார்வை இருக்கறதுன்னால சரியா தெரியலண்ணா கொஞ்சம் பின்னால தள்ளி உக்கார்ந்து பாருங்க.

முதல்ல நீ என்ன எழுதப் போறீங்கறதுக்கான தலைப்பை முதல் பக்கத்துல நடுவுல எழுது.

அப்பா, இப்ப மௌஸ தள்ளினீங்கண்ணா மானிட்டர்ல ஒரு அம்புக்குறி தெரியுமே, அத கம்போஸ் மெயில்னு ஒரு பட்டன் இருக்கும் பாருங்க, அது மேல வெச்சு, மௌஸோட இடது பட்டனை ஒரு தரம் அமுத்துங்கப்பா.

அனுப்புனர்னு முதல் வரில எழுதீட்டு, இரண்டாவது வரியிலிருந்து உன்னோட முகவரிய எழுதுப்பா.

இப்ப உங்க முன்னால ஒரு மெயில் ஓப்பன் ஆயிருக்கும் பாருங்கப்பா.

அனுப்புனர் முகவரிய எழுதி முடிச்சதுக்கப்புறம் கீழ ஒரு வரிய விட்டுட்டு பெறுநர்னு எழுதி, நீ யாருக்கு இந்தக் கடிதத்தை எழுதறயோ அவுங்க முகவரிய எழுது. எழுத்துப் பிழை இல்லாம சரியா எழுது. முகவரியோட ஒவ்வொரு வரிக்கும் கடைசியில கமா போட்டுட்டு, கடைசி வரியில முற்றுப் புள்ளி வை.

இப்ப To ஒரு வரி இருக்குமே அதுல நான் உங்களுக்கு நோட்டு புத்தகத்துல அக்காவோட மெயில் ஐடிய எழுதிக்குடுத்துருக்கன்ல, அத அப்படியே அடிங்கப்பா. கீ போர்டுல இருக்கற ஒவ்வொரு பட்டனா பாத்து தப்பில்லாம அடிங்க. அந்த @ எழுத்த அடிக்கறதுக்கு Shift னு ஒரு பட்டன் இருக்கும் பாருங்க அதை அழுத்திகிட்டு 2 ம் நம்பர் பட்டனை அழுத்துங்க.

இப்ப ஒரு வரி விட்டுட்டு, இடது பக்கமிருந்து ஒரு வார்த்தையளவு இடைவெளி விட்டுட்டு பொருள் அப்படீன்னு எழுதி, ஒரு விகிதப் புள்ளி வெச்சுட்டு எங்கள் ஊர் திரு விழான்னு எழுதிட்டு பொருள்ல ஆரம்பிச்சு எல்லாத்துக்கும் சேர்த்து அடியில் ஒரு கோடு போடு.

இப்ப அந்த To ங்கற லைனுக்கு கீழ CC ன்னு ஒரு லைன் இருக்கும், அத விட்டுடுங்க, அதுக்கும் கீழ Sub னு எழுதி ஒரு காலியிடம் இருக்கும் பாருங்க, அந்த இடத்துக்கு மௌஸ மூவ் பண்ணி அம்புக் குறிய கொண்டு வாங்கப்பா, இப்ப மௌஸுல இருக்கற இடது பக்க பட்டன தட்டுனீங்கன்னா ஒரு கோடு வந்து வந்து போகும், அங்க அப்பாவின் கடிதம்னு டைப் அடிங்க.

நல்லா பிழை இல்லாம பொறுத்து நிதானமா எழுதுப்பா, ஒவ்வொரு எழுத்தா எழுது, அந்த சுழி, கூட்டெழுத்தெல்லாம் தெளிவா இருக்கணும்.

நீங்க எப்படி தமிழ்ல எழுதுவீங்களோ அப்படியே டைப் அடிங்கப்பா, கஷ்டமா இருந்துதுன்னா, நான் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் சரியான ஆங்கில எழுத்தை எழுதி வெச்சிருக்கன்ல, அந்த நோட்டை பக்கத்துல வெச்சு பாத்து டைப் அடிங்க.

இப்ப அந்த பொருள்ங்கற வரிக்கு கீழ ஒரு வரி விட்டுட்டு, இப்ப உங்க ஆசிரியருக்கு நீ எழுதறீன்னா மதிப்பிற்குரிய வகுப்பாசிரியர் அவர்களுக்கு அப்படீன்னு எழுது. பேனாவை கொஞ்சம் சாச்சுப் பிடி, அதை ஏன் அப்பிடி நெட்டுக் குத்தலா ஆணி புடிச்ச மாதிரி புடிச்சிருக்க.

இப்ப அந்த வரிக்கும் கீழ ஒரு காலியிடம் கட்டம் போட்டு இருக்குமல்லப்பா, அங்க அம்புக்குறிய கொண்டு வந்து மறுபடியும் மௌஸோட இடது பக்க பட்டனை தட்டுங்க, இப்ப அந்த இடத்துலயும் ஒரு கோடு வந்து வந்து போகுதா, அங்க அன்புள்ள மகளுக்குன்னு டைப் அடிங்க, கீ போர்டுல இருக்கற பட்டனையெல்லாம் மெதுவா அழுத்துங்க, ஏன் இப்படி டக்கு டக்குனு டைப் ரைட்டராட்டம் அடிக்கறீங்க.

இப்ப உங்க வாத்தியாருக்கு நம்ம ஊர்ல நடந்த திரு விழாவுல நீ என்னெல்லாம் பார்த்தியோ, அத அப்படியே நிதானமா யோசிச்சு ஒரு கடிதம் மாதிரி எழுது. அவசரப் படாம நிதானமா எழுது.

இப்ப அக்காவுக்கு நம்ம ஊர் திரு விழாவுல நடந்த ஒவ்வொண்ணையும் ஒரு விஷயம் விடாமா, நிதானமா யோசிச்சு எழுதுங்க.

எழுதீட்டயா, எல்லாத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தரமா படிச்சு பாத்துக்க, எதும் தப்பு இருந்தா திருத்திக்க, கடைசில இப்படிக்கு தங்கள் கீழ்ப்படிதலுள்ள அப்படீன்னு எழுதீட்டு, அதுக்கு கீழ உன் பேர எழுது.

கடைசியில அன்புள்ள அப்பான்னு எழுதி முடிச்சிருப்பீங்களே, எதுக்கும் ஒரு தரம் நீங்க எழுதுனத படிச்சு பாத்துக்குங்க. இப்ப மறுபடியும் மௌஸ நகர்த்தி அம்புக்குறிய அந்த இடது மூலைல Send அப்படீன்னு ஒரு பட்டன் இருக்கும் பாருங்க, அதுக்கு நேரா வெச்சு, ஒரு தரம் இடது பட்டனை அமுக்குங்க

அவ்வளவுதாண்டா, சபாஷ், உங்க வாத்தியாருக்கு நீ ஒரு கடிதம் எழுதீட்ட பாத்தயா

அவ்வளவு தான்ப்பா, நீங்களும் அக்காவுக்கு ஈ மெயில் அனுப்பீட்டீங்க பாத்தீங்களா.


பின் குறிப்பு : இந்த பதிவுக்கான முன்னோடி நம்ம கார்ப்பரேட் கம்பர் எழுதுன இந்த பதிவு.

Wednesday, September 23, 2009

ஜுகல்பந்தி - 23 – 09 – 2009 , காமன் மேன்

நகரம் – அமிர்தசரஸ் - தங்க நகரம்

சீக்கியர்களின் புனித பூமி, பொற்கோவில், பாகிஸ்தானுக்கு அருகில் இருக்கும் நகரம், கால்ஸா பிரிவினரின் வீர விளையாட்டுகளுக்கு பெயர் போன பூமி, மண்ணிலும் நீரிலும் மாத்திரமல்லா; காற்றிலும் வீரம் உலவும் பூமி, பிரிவினையின் போது பிரிய மனமில்லாது பிரிந்தவர்களின் துயர வடுக்கள் துடைக்கப் படாமல் இன்னும் புண்களாய் உள்ளது என சிறப்பும், சிறுமையும் ஒருங்கே உள்ள முரண்பாடுகளின் மொத்த உருவமே அம்ரிஸ்டர் எனப்படும் அமிர்த சரஸ் நகரம்.

துங் என்ற பழங்குடியினர் வசித்து வந்த இந்த பூமியை குரு ராம்தாஸ் ஜி என்பவர் கி.பி.1574 ல் 700 ரூபாய்க்கு வாங்கினார். பிறகு இங்கு இருந்த வளங்களைப் பார்த்து குளங்கள் வெட்டவும் மரங்கள் நட்டவும் என திருப் பணிகள் தொடங்கி, வளம் கொழிக்கும் பூமியானவுடன் அதற்கே உரிய சண்டைகளும் சச்சரவுகளும், உரிமைப் பிரச்சனைகளும், உழைக்கும் வர்க்கத்தின் இருப்பியல் நிர்பந்தங்களும் என அரசியல் ஆரம்பித்தவுடன் இங்கிருக்கும் உழைக்கும் வர்க்கம் தனக்கென ஒரு அடையாளம் தேடிக் கொண்டதுதான் சீக்கிய மார்க்கம். அதன் இன்னொரு பரிமாணமே கால்ஸா பிரிவு என்ற வீரர்கள் படை. இந்திய திருநாட்டுக்குள் யார் நுழைந்தாலும் அவர்கள் இந்த நகரைக் கடந்துதான் வர வேண்டுமென்பதாலும், நுழைந்தவுடன் கண்ணில் காணும் வளங்கள் அவர்களது நாவில் நீர் ஊற வைப்பதாலும், எப்பொழுதும் ஒரு எல்லை பாதுகாப்பு படையை போலவே இந்த மண்ணின் மைந்தர்கள் வாழ வேண்டிய நிர்பந்தத்துக்குள்ளானார்கள். ராஜஸ்தானிய ராஜ புத்திரர்களை புரட்டியெடுத்த ஆப்கானிய போர் வீரன் அப்தாலி, தன் கண்களை இந்த மண்மீதும் பதிக்க தவறவில்லை. வளங்கள் ஒரு புறம் இருந்தாலும், கண்ணைப் பறித்தது இங்குள்ள மங்கையர்களும் கூடத்தான். கோதுமை நிறத்தில் கூரிய நாசியும், நெடிதுயர்ந்த வனப்பும், அகன்ற தோள்களும், இடுப்பு வரை கூந்தலுமென இருக்கும அழகுப் பதுமைகளை கண்டு மனதை பறி கொடுத்த வந்தேறிகள் அநேகர். இவர்களிடமிருந்து தங்களை பாதுகாக்கத்தானோ என்னவோ ஒவ்வொரு சீக்கிய பெண்ணும் கூட எப்பொழுதும் கத்தியும் கையுமாகவே இருந்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 13, 1939, எல்லோருக்கும் போலவே இந்நகரத்து வாசிகளுக்கும் ஒரு இனிய காலையாகத்தான் விடிந்தது. ஆனால் அன்று நிகழப் போகிற விபரீதம் தெரியாமலே, “வாஹே குரு”, என்ற கோஷங்களுடன் அமர்ந்திருந்த 1500 சொச்சம் பேரை தயவு தாட்சண்யமின்றி கொன்று குவிக்கும்படியாக தனது துப்பாகிகளை திருப்பிய ஜெனரல் டயர் இங்குதான் தனது திருவிளையாடலை நடத்தினார். துப்பாக்கிகள் ஓய்ந்த பின் எண்ணிப்பார்த்தால் 329 பேர் கடைசி முறையாக “வாஹே குரு” என அழைத்திருந்தார்கள்.

அடுத்ததாக சுதந்திரமடைந்தோம் என்ற சந்தோஷ கீதம் காதில் படுவதற்கு முன்னே, வந்த இந்திய பாகிஸ்தான் பிரிவினை தனது கோரக்கரங்களால் இன்னொரு முறை இந்நகர வீதிகளில் ரத்த ஆறை ஓடச்செய்து விட்டுப் போனது. டோம்னிக் லேப்பயர் மற்றும் லேரி காலின்ஸ் என்ற இருவர் எழுதிய Freedom at Midnight என்ற புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். பிரிவினையின் போது இந்நகரமும் லாஹூரும் சந்தித்த அனைத்து வேதனைகளையும் வார்த்தைகளில் அழுது கொண்டே சொல்லியிருப்பார்கள்.

இன்று இந்த நகரம் புதுப் பொலிவுடன், பொற்கோவில் மற்றும் ஏனைய புராதனச் சின்னங்களின் சிறப்புகளுடன், மனித நேயமிக்க சீக்கிய மக்களுடன், கால்ஸா பிரிவினரின் வீர விளையாட்டுகளுடன் என இன்னும் எத்தனையோ சிறப்புடன் தனது பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

பதிவுலகம் – காமன் மேன்

உன்னைப் போல் ஒருவன் என கமலஹாசன் ஒரு படம் எடுத்து விட்டார். அப்பப்பா, பதிவுலகம் எனும் ரத்தபூமியிலும் விமர்சனங்களால் பதிவர்கள் விளாசித்தள்ளுவதை பார்த்தால் மூச்சு முட்டுகிறது. இந்துதுவா, காமன் மேன், பிராமண அகங்காரம், கட்டுடைத்தல், பின் நவீனத்துவம், இஸ்லாமிய தீவிரவாதம், குஜராத் மோடி, வாஜ்பாய், நஸ்ருத்தீன் ஷா, மோகன்லால், உயர்சாதி திமிர், காவி நிற வாடை, சிறுபான்மையினரின் இழிவு, கோவை குண்டு வெடிப்பு, ஆனா பாருங்க நிஜ காமன் மேன் யாருன்னு இன்னும் தெரியலீங்க.

ஸ்ஸ்ஸோ, ஆள விடுங்கடா சாமி, இப்ப இருக்கற நிலைமையில பதிவுலகத்துல இந்த படத்தைப் பத்தி ஒரு பதிவாவது போடலைன்னா, நீயெல்லாம் என்னத்த எழுதி, என்னத்த கிழிச்சேன்னு கேட்டுருவாங்க போலிருக்குது. ஆனா பாருங்க நிஜ காமன் மேன் யாருன்னு இன்னும் தெரியலீங்க.

அய்யா சாமிகளா, சிங்கைப்பதிவர் செந்தில்நாதனுக்கு ஒரு தேவைன்ன உடனே முகம் பார்த்தறியாத அந்த நண்பருக்கு வரிஞ்சு கட்டிட்டு முன்னால வந்து உதவி பண்ணுனீங்களே, பதிவுலகம்னா என்னான்னு பாருங்கடா, நட்புன்னா அதுக்காக மலைகளெல்லாம் எங்களுக்கு ஒரு தூசுடான்னு செஞ்சு காமிச்சீங்களே, அப்படியே இருங்கைய்யா, அதுதான்யா நல்லாருக்கு.

ங்கொய்யால பக்கங்கள் :


தீப்புடிச்சா ஓடி அணைக்கறவன் ஃபயர் மேன்,

லெட்டர் போட்டா தேடி குடுக்கறவன் போஸ்ட் மேன்,

ராவும் பகலுமா காவல் இருக்கறவன் வாட்ச் மேன்,

ங்கொய்யால,

கலவர பூமில கம்னு இருக்கறவன்தாண்டா காமன் மேன்.

Wednesday, September 16, 2009

ஜுகல்பந்தி – 16 – 09 – 2009 - நீளும் கம்யூனிச கரங்கள்

நகரம்

குவாலியர் – கோட்டைகளின் நகரம்

புழுதி பறக்க விரையும் குதிரைகளின் குழம்பொலி, உருவிய வாள், முறுக்கிய மீசை, நிமிர்ந்து நிற்கும் கோட்டைகள், வாரிசு சண்டைகள், உருண்டு ஓடிய தலைகளிலிருந்து பிரிந்து சிதறிய மகுடங்கள், பொன்னாசை பிடித்த ஆப்கானியர்களின் ஊடுருவல்கள் என எப்பொழுதும் ஒரு அரசியல் சூறாவளிகளுக்கு நடுவிலேயே வாழ்ந்த ஒரு நகரம். இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும், முகலாயச் சக்கரவர்த்தியின் அவையை அலங்கரித்த நவரத்தினங்களில் ஒருவரான தான்சேன் இங்கு வந்தும் போவதுமாக இருந்ததால், இசையும், நாட்டியமும் இன்ன பிற கலைகளும் கூட அதன் போக்கில் தன் பல பரிமாணங்களை இந்த நகரத்தில் விட்டுச் சென்றிருக்கிறது.

முதன்முதலில் இந்த மலை நகரத்தை கண்ணெடுத்து பார்த்து அதை ஆக்ரமித்து தனதாக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள், சூரியவம்சத்தை சேர்ந்த பத்குஜ்ஜர் ராஜபுத்திர வம்சத்தின் குல விளக்குகள் தான். எந்தப் போரிலும் முன்னணியில் நின்று நெஞ்சை நிமிர்த்தி போரிடும் வீரமும், துணிவும், பெருமையும் கொண்ட குஜ்ஜர் எனப்படும் இந்த ராஜபுத்திர வம்சம், அரசியல் சூழ்நிலையில் அடிபட்டு இன்று தங்களது இருப்பியல் வசதிகளுக்காக அரசியல்வாதிகளிடம் கையேந்தி நிற்பது வேதனைதான். இந்த வம்சத்து மக்கள் இங்கு கோட்டை கட்டப் போய், அதன் பிறகு வந்தவர்கள், இங்கு பல கோட்டைகளைக் கட்டி இந்த நகரத்துக்கு கோட்டைகளின் நகரம் என பெயர் கொடுக்கும் அளவிற்கு பெருமை சேர்த்து விட்டார்கள்.

தோமர் வம்சத்து மன்னர்கள் ஆண்ட காலத்தில் ராஜா மான்சிங் தோமர் என்பவரால் கட்டப்பட்ட குவாலியர் கோட்டையானது இன்றளவும் பிரசித்தமானது. இதை சுற்றிப் பார்ப்பதற்கே பல நாட்களாகும். இதற்குப் பின் இந்த நகரம், கச்வாஹா ராஜ புத்திரர்கள், அடிமை வம்சத்து அரசனான குத்புதின் ஐபெக், அதற்குப்பின் மராட்டிய வீரரான மாதவ்ராவ்ஜி ஷிண்டே என பலரது கைக்கு மாறி, சிப்பாக் கலகத்தில் பெரும்பங்கெடுத்து, பின் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆட்சி புரிந்த சிந்தியா மகாராஜாக்களின் கைகளில் இந்தியா சுதந்திரம் பெறும் வரை இருந்திருக்கிறது.

குவாலியர் கோட்டையின் அழகையும் பெருமையையும் கண்ட முகலாய மன்னர் பாபர், இதில் லயித்துப் போய் இந்தியர்களால் கட்டப்பட்ட மாளிகைச் சரங்களில் இது ஒரு விலைமதிக்க முடியாத முத்து என்றாராம்.

இன்னும் இந்நகரம் அமைந்திருக்கும் பிராந்தியமான புந்தேல்கண்ட் பகுதியில் பிரசித்தி பெற்ற நடனங்களான ஆஹிரி, பரேதி, சஹரியா, லூர், லாங்கி, துல் துல் கோரி போன்ற நடனங்களின் எச்சத்தையும் மிச்சத்தையும், திருமணங்களிலும் விழாக்களிலும் காணலாம்.

இசை மேதை தான்சேனுக்கு வருடத்திற்கொருமுறை தான்சேன் இசைவிழா நடத்தி பெருமை சேர்க்கிறார்கள்.

ஒரு முறையாவது இந்தக் கோட்டைகளை போய் பார்த்து விட்டு பெரு மூச்சு விட்டு விட்டு வாருங்கள்.

நாட்டு நடப்புகள் : நீளும் கம்யூனிச கரங்கள்

சீனா, அருணாசல பிரதேசத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறது, ராணுவ நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது, எப்பொழுதும் சீண்டிப் பார்க்கிறது, திபெத்தில் அழிச்சாட்டியம் பண்ணுகிறது என்றெல்லாம் பொழுது போகாத நேரத்தில், ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல்களும், பியூட்டி பார்லரில் போய் முகம் முழுவதும் கண்ட கண்ராவிகளையெல்லாம் பூசிக்கொண்டு வந்து, தனது வயதை மறைக்க பிரம்மப் பிரயத்தனப் படும் ஊடக அம்மணிகளுமாக கத்தித் தொலைத்துக் கொண்டிருந்தார்கள், இருக்கிறார்கள். அதற்கெல்லாம் மேலாக நேற்று ஒரு புதிய விஷயம் கிடைத்திருக்கிறது, நேபாளத்தில் உள்ள இமயமலை அடிவாரங்களில் சீனா மூன்று குகைகளில் தனது ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறதாம். மாவோ ஆட்சி நேபாளத்தில் அமைந்த நாளிலிருந்தே அங்கு சீனத்தின் சினேகப் பார்வை விழுந்து, அது காதலாகி கனிந்துருகி, இப்பொழுது இந்தியாவில் உளவு வேலை பார்க்க நிர்பந்திக்கும் அளவுக்கு நேபாளத்தில் சீனா காலூன்றியிருக்கிறது. நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் உள்ள நல்லுறவினால், எல்லையில் யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் வந்து போகலாம் என்ற மாமன், மச்சான் உறவு முறை இருக்கிற நேரத்தில், சப்பை மூக்கும், மஞ்சள் நிறமும், இடுங்கிய கண்களுமாக இருக்கும் நேப்பாளிகளோடு உருவத்தில் ஒத்துப் போகும் சீனர்கள், இந்த மாமன் மச்சான் வழியில் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசம் பண்ணாமலிருந்தால் சரி.

பதிவர் வட்டம் :

சிறுகதை பட்டறை நல்ல முறையில் நடந்து முடிந்திருக்கிறது. அண்ணன் சிவராமனுக்கும், குருஜிக்கும் நன்றிகள். பதிவர்கள் உற்சாகத்துடன் அதை வர்ணித்ததே அதற்கு சாட்சி. பதிவுலகம் போலித் தொந்தரவுகளிலிருந்து என்றுதான் மீண்டு வருமோ தெரியவில்லை. யாரோ ஒருவர் இந்த தேன்கூட்டில் கை வைக்கப் போய், இப்பொழுது நிறைய தேனீக்கள், வாளெடுத்துக்கொண்டு களம் புகுந்துள்ளன. தேனெடுக்கும் தேனீக்கள் வாளெடுக்கலாமா?????

ஆண்டாள் பாசுரங்களைப் பற்றி ஒரு எழுத்தர் பேசப் போக, கலாச்சாரக் காவலர்கள் அவரைப் பிடித்து பிழிந்து, கசக்கி, காயப் போட்டு விட்டார்கள். என்னமோ போங்க சாண்டில்யன் கூடத்தான் தான் எழுதிய ஜலதீபத்தில் ஆண்டாளைப் பற்றி எழுதினார். அப்பொழுதெல்லாம் ஏன்தான் இந்த பிரளயம் கிளம்ப வில்லையோ தெரியவில்லை.

எப்படி கேள்விகள் பத்து, பிடித்தது பத்து, படித்தது பத்து, உன்னைப் பற்றி 32, A to Z, ஆறு தன் வரலாறு கூறுதல், விருது கொடுத்தல் போன்ற தொடர்பதிவுகள் எப்பொழுதும் வலையுலகை ஆக்கிரமித்து நிற்கிறதோ, அப்படியே வகை வகையான போட்டிகளும், (புகைப் படப் போட்டி, கவிதைப் போட்டி, மொக்கைப் போட்டி, இன்னும் பல) பதிவுலகை ஆக்கிரமித்து இருக்க வேண்டும் என இந்த ஏழை அடியேன் விரும்புகிறேன்.

ங்கொய்யால பக்கங்கள்

சீறத் தெரியலைன்னா அது சிங்கமில்ல,

பாயத் தெரியலைன்னா அது புலியுமில்ல,

பாடத் தெரியலைன்னா அது குயிலுமில்ல,

ஆடத் தெரியலைன்னா அது மயிலுமில்ல,

நீந்தத் தெரியலைன்ன அது மீனுமில்ல,

ங்கொய்யால,

நல்ல நண்பன் இல்லைன்னா நீ மனுசனேயில்ல.

Monday, September 14, 2009

இது இன்னாண்ணா, A லிருந்து Z வரைக்கும்னு.....,

இப்பிடித்தான் சும்மா போலி விவகாரம், ஆண்டாள் என்ன பாடுனார்? ஈரத்துல தண்ணி எவ்வளவு ? பட்டறைல ஈ யாரு? இன்னைக்கு யாரு யார கும்முறாங்கன்னு படிச்சுகிட்டு நல்ல புள்ளையாட்டம் இருந்த என்னை, இந்த வம்புல நையாண்டி நைனா அண்ணன் மாட்டி விட்டுட்டாரு, ஆனா அதுக்குண்ணு நாங்க சும்மா விடுவமா, நாங்களும் நாலு பேர கோத்து விட்டிருக்கம்ல.....,

வாங்க வந்து படிச்சு தொலையுங்க.


சில விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்..



இனி மேட்டருக்கு வருவோம்.


1. A – Avatar (Blogger) Name / Original Name : தராசு/ அட, பேருல என்னங்க ஒரிஜினலு அப்புறம் டூப்ளிகெட்டுன்னுட்டு,

2. B – Best friend? : நண்பர்கள் எல்லாருமே சிறந்தவர்கள் தான். அதுல பெஸ்ட் பிரண்டுன்னு ஒரு தனி அவார்டெல்லாம் எனக்கு புடிக்காது.

3. C – Cake or Pie? : இது அமெரிக்கா காரனுக்கான கேள்விங்கறது என்னோட ஐப்பிராயம், “பை” ன்னா அது இன்னா, நம்மூரு சமோசா மாதிரியானா ஐட்டமா?????, அப்ப நாங்க சமோசாகாரங்க தான்.

4. D – Drink of choice? : தண்ணி, ஹலோ குடிக்கற தண்ணீங்க, நீங்க பாட்டுக்கு கோக்கு மாக்கா எதையும் யோசிக்க கூடாது.

5. E – Essential item you use every day? : தேவையில்லாதத எதுக்காக பயன்படுத்தணும், அப்டீன்னா தேவையிருக்கும்போது தேவையில்லாத பயன் படுத்தறதும், தேவையில்லாத போது தேவையுள்ளத பயன் படுத்தறதும் முட்டாள் தனம் தான, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா, இப்பவே கண்ண கட்டுதே……

6. F – Favorite color? வெள்ளை கலரு சிங்குச்சா, ஏன்னெல்லாம் கேக்கப் படாது, இருந்தாலும் சொல்லீற்றேன், ஏன்னா எனக்கு மனசுக்கு புடிச்ச கலர் வெள்ளை, ஏன்னா நம்ம மனசே வெள்ளை.

7. G – Gummy Bears Or Worm? : வேணாம் எனக்கு கோபம் வராது, இதெல்லாம் அசலூர்காரன கேக்க வேண்டிய கேள்வி. எங்கூர்ல கிடைக்கறத கேளுங்கப்பா.

8. H – Hometown? கொஞ்சும் தமிழ் பேசும் கொங்குநாடு.

9. I – Indulgence? படிக்கறது, எதுன்னாலும் படிக்கறது.

10. J – January or February? பிப்ரவரிதான், நாலு வருசத்துக்கு ஒரு தரம் சரியா மாறிகினே இருக்கற இந்த மாசம் எனக்கு புடிக்கும். ஏன்னாக்கா காதலுக்கு சிறப்பே இந்த மாசத்தில தான….

11. K – Kids & their names? இங்கு ஒருமைதான், பன்மை கிடையாது, பேருன்னு எடுத்துகிட்டா பிரியம்னு வெச்சுக்கோங்களேன்.

12. L – Life is incomplete without? கண்ணா நீ என்னதான் பெரிய ஆளாயிருந்தாலும், நீ ஒரு பாதிதான், மறுபாதியில்லனா நீ வெறும் பாதிதான்.

13. M – Marriage date? வாழ்க்கையில ஒரு மனுஷன் சந்தோஷமா இருந்த கடைசி நாளை தெரிஞ்சுக்கறதுல எவ்வளவு ஆசை பாரு.

14. N – Number of siblings? கண்ணே கண்ணு.

15. O – Oranges or Apples? ஒரு நாளைக்கு ஒண்ணை தின்னா டாக்டரே வேண்டாமாமே, அதான், அதான், அதேதான்.

16. P – Phobias/Fears? முதுகுல நச்சுனு ஒரு குத்துவாங்களே, அந்த ஆளுங்கள பாத்துத்தான் பயம்.

17. Q – Quote for today? உன்னை நீ நம்பு, உலகமே உன்னை நம்பும்.

18. R – Reason to smile? இதுக்கெல்லமா காரணம் சொல்லுவாங்க, புன்னகை என்னும் நகை எனக்கு எப்பொழுதுமே அழகு சேர்ப்பதால்.

19. S – Season? வசந்த காலம்.

20. T – Tag 4 People?-
அன்புத்தம்பி டக்ளஸூ என்கிற ராஜூ என்கிற ராமராஜூ,
சும்மா சும்மா ஒளிஞ்சு வெளையாடிகிட்டிருக்கற அன்பு அண்ணன் அப்துல்லா.
இது வரைக்கும் அதிகம் எழுதாமல் , அதிகம் வாசிக்கும் அண்ணன் நாஞ்சில் நாதம்,
நடந்தே சலிக்கற பாதசாரி என்கிற வெங்கிராஜா


21. U – Unknown fact about me?: நான் ஒரு டெரராக்கும்.

22. V – Vegetable you don't like? ஏட்டுச் சுரைக்காய்.

23. W – Worst habit? அப்பிடி எதுவும் இருக்கற மாதிரி தெரியலயே.

24. X – X-rays you've had? அதுக்கெல்லாம் அவசியம் இது வரைக்கும் வரல.

25. Y – Your favorite food? அசைவம்.

26. Z – Zodiac sign? புற்று நோய்.

Wednesday, September 9, 2009

ஜுகல்பந்தி - 09 - 09 - 09 - நாட்டு நடப்புகள்

 

ஜுகல் பந்தியில் எதாவது ஒரு நகரத்தை பற்றி எழுதி வந்ததால், ஒரு சிலர் எதுக்கு இப்ப வரலாற்று பாடம் எடுக்கறீங்கன்னு கேட்டதால், நகரங்களைப் பற்றிய குறிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படுகிறது.

அதனால இந்த வாரம் நாட்டு நடப்புகள்:

கழுதையும் அஜிர்பைஜானும்

பதிவர்கள் பிரச்சனைல மாட்டிக்கறது நம்ம நாட்ல மட்டும் இல்ல. உலகத்தின் பல பாகத்துலயும் பதிவர்கள் எதையாவது பண்ணப் போக அங்கங்க மாட்டிக்கறாங்க. அஜீர்பைஜான் அப்டீன்னு ஒரு நாடு, அதிகமாக துருக்கிய இஸ்லாமியர்களான சியா பிரிவினர் வாழும் நாடு. ஐந்து முறை தொழுகையும், ரமலான் நோன்புகளும், கொஞ்சம் ஐரோப்பியத்தனங்களும், வயிற்றைக் குலுக்கி அரைகுறை ஆடையில் வெள்ளைத் தோல் அம்மணிகள் ஆடும் Belly Dance என்ற நடனம் நிறைந்த மது சாலைகளும் என ஒரு கலவையான தேசம். இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்திருந்தாலும் இது ஒரு மத சார்பற்ற நாடாகத்தான் இன்று வரை இருக்கிறது. ஏன், அதிகம் இஸ்லாமியர்கள் நிறைந்திருந்த போதிலும் கூட, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து ஒழுங்கு மரியாதையாக தேர்தல்கள் நடத்தி, ஆளுங்கட்சி, எதிர்கட்சி, மற்றும் 132 வது வட்டத்தின் இணை துணை பொது செயலாளருக்கெல்லாம் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அஜீர்பெய்ஜானின் விடிவு காலமே, சரித்திரத்தின் சங்க நாதமே, தேசீயத்தின் அடையாளமே என ஃபிளெக்ஸ் பேனர் வைக்கும் ஒரு நாடாகத்தான் இருக்கிறது.

  அங்கு இருக்கும் அரசாங்கத்தை விமர்சித்து இரண்டு பதிவர்கள் ஒரு வீடியோ உருவக்கினார்கள். அதாவது அரசாங்கம் கழுதைகளுக்கு கொடுக்கும் மதிப்பை விட படித்த இளைஞர்களுக்கு கொடுக்கும் வேலை வாய்ப்பும் மரியாதையும் குறைவாய் இருக்கிறது என்பதை கிண்டலாக ஒரு வீடியோ எடுத்தார்கள். அதை You Tube ல போட்டுவிட்டு, ஹாய்யாக அமர்ந்து ஒரு அஜீர்பெய்ஜானின் டாஸ்மாக்கில் பீர் குடித்துக் கொண்டிருக்கும்பொழுது , திடீரென்று அரசாங்க அதிகாரிகளும் போலீஸாரும் வந்தார்கள், அவர்களை கைது செய்து 5 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். இப்பொழுது இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை என அநேக அமைப்புகள் கொடி பிடித்து வீதியில் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கின்றன. ஆக பதிவர்களே, ஆட்டோ வீட்டுக்கு வருவது சென்னையில் மட்டுமல்ல, உலகமெங்கிலும் இப்படித்தான் போலுள்ளது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவர் வட்டம்

பதிவர்கள் விமர்சனம் எழுதுவதால் சினிமாக்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப் படுகிறது என்ற ஒரு கருத்து பல இடங்களிலும் உலா வருவதாக செய்திகள் வருகின்றன. பதிவுலகிலும் இது பற்றிய விவாதம் சூடு பிடித்துள்ளது. படம் நல்லா இருந்தா எல்லாரும் நல்லாருக்குன்னு தான் சொல்லுவாங்க. அதாங்காட்டியும் நீ எப்படி சொல்லப் போச்சுன்னு கையை மடிச்சு விட்டா, எப்படிங்க??

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இப்படியும் மனிதர்கள்

பொய் வழக்குப் போடும் மனைவிகள்னு ஒரு தளம், அதுல இந்த போலி வரதட்சணை வழக்கு விவகாரங்களை ஒரு அன்பர் எழுதி வருகிறார். அவ்வப்பொழுது அதை வாசித்ததுண்டு. அப்பவெல்லாம் கொஞ்சம் மிகைப் படுத்தி எழுதறாரோன்னு தோணும். ஆனா, சமீபத்துல என்னுடைய ஒரு நண்பரும் இதற்கு பலியாகி போகவே, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். நண்பருக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளர் வேலை. அரவிந்த சாமி மாதிரி ஒரு பர்சனாலிட்டி. கல்யாணம் ஆகி தாம்பத்யம் நல்லாத்தான் போயிட்டிருந்துச்சு. ஒரு ஐந்து மாதம் கழித்து ஆசை மனைவி, முகம் சிவக்க அந்த நல்ல விஷயத்தை சொல்ல, தலைவர் சந்தோஷத்தில் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தார். ஆனா, கொஞ்ச நாள்லயே நொந்து நூலாகிப் போனார். ஏன்னா, மனைவிகிட்டேருந்து எந்நேரமும் புகார்தான், நான் வயத்துல புள்ளயோட இருக்கேன்ற கவலை உனக்கு கொஞ்சமாச்சும் இருக்கான்னு ஒரே டார்ச்சர். ஒரு நாள் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன், நம்மாளு ஒரு சீரியஸான மீட்டிங்ல இருக்கற நேரம், வீட்டிலிருந்து போன்.

இப்ப உடனே கிளம்பி வா,

இல்லம்மா, நான் மீட்டிங்ல இருக்கேன். ரொம்ப முக்கியமான மீட்டிங்.

அப்ப வயித்துல புள்ளயோட இருக்கற நான் முக்கியமில்லையா, உனக்கு மீட்டிங் தான் முக்கியமா?? இப்ப நீ வரலைன்னா, நான் மாடியில இருந்து குதிச்சுருவேன்.

விரக்தியின் எல்லையில் இருந்த நண்பர் " சரி அதை செய் முதல்ல" ன்னுட்டு லைனை கட் பண்ணிவிட்டு, மீட்டிங்கில் சொதப்பியதற்காக மேலிடத்திலும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

மாலையில் மனதை சாந்தப் படுத்திக் கொண்டு வீட்டிற்கு போனால், வீட்டில் யாருமில்லை. மனைவியின் வீட்டிற்கு போனைப் போட்டால், மாமியார் மாத்திரம் போனை எடுத்து, அவ உங்க கூட பேச விரும்பலன்னு சொல்லீட்டாங்க.

இரண்டு மாதம் கழித்து இப்பொழுது எதிர் தரப்பு குழந்தை பிறந்ததும் இவர் மீது வரதட்சிணை வழக்கு பதிவதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கியிருப்பதாக கேள்விப்பட்டு, இதற்கு முன் ஜாமீனாக எதாவது செய்ய முடியுமா என பல பணம் புடுங்கும் வக்கீல்களுக்கு சம்பளத்தை அழுது கொண்டிருக்கிறார்.

என்ன சட்டமோ, என்ன மக்களோ போங்க.

இந்த வாரம் ங்கொய்யால எழுதற மூடே இல்ல.

Tuesday, September 8, 2009

பூஜைக்கேத்த பூ இது!!!!!!!!!!



ஊன்று கோலுடன் நடக்கும் பத்து வயது கலைச் செல்வி, அவள் நடக்கும் பொழுது சூம்பிப் போன வலது கால் காற்றில் ஆடியது. இரண்டு கண் இமையும் ஒரு பள்ளத்தை மூடியிருக்க, கைகளை விரித்தபடி மெதுவாக அடியெடுத்து வைக்கும் தென்னரசு, இரண்டு கையுமில்லாததால் சட்டையில் தைக்கப்பட்ட கைகள் காற்றில் ஆடியபடி இன்னொரு பையன், சாடையில் பேசும் மகேஸ்வரி, துருத்திய பற்களின் நடுவே நீண்டிருந்த நாக்கை சுழற்றி வழியும் எச்சையை உள்ளுக்கிளுக்கும் முஸ்தஃபா, இப்படி திரும்பிய பக்கமெல்லாம் ஊனம், இயற்கை இவர்கள் வாழ்வில் எழுதிய சோக வரலாற்றின் கோர தாண்டவம்.

இவர்களிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்ற குழப்பத்தில் மூவரும் அமர்ந்திருக்க சுரேஷ் தான் அமைதியை கலைத்தான். “பாப்பா, இங்க வா, உன் பேரென்ன?” என்று கேட்டதும் அங்கிருந்த பதினைந்து குழந்தைகளும் அவர்களின் தயக்கத்தை உதறிவிட்டு, ஒரு வேகத்துடன் வந்து இவர்களிடம் ஒட்டிக் கொண்டனர். “அண்ணா, உங்க பேரென்ன?” “இடு எண்ன, உங்க கலுதில டொங்கறது?” என அதிசயத்துடன் ஒரு குழந்தை அடையாள அட்டையை இழுக்க, “அண்ணா, நீங்க பெரிய ஆபீஸரா?” என கலைச் செல்வி கேட்டாள். குழந்தைகள் சகஜமாக பேச ஆரம்பித்ததும் அவர்களின் குறைகள் மறைய ஆரம்பித்து அவர்களுடன் விளையாட ஆரம்பித்தார்கள். எங்கும் சிரிப்பு, மனது நிறைய சந்தோஷம், அவர்களுக்கென வாங்கி வந்த சாக்லெட்டெல்லாம் கொடுத்து, மதியம் வரை அவர்கள் தோளில் ஏறியதையும் தொடையில் அமர்ந்ததையும் முழுதுமாக அனுபவித்து விட்டு, கேட்டரிங் சர்வீஸில் சொல்லியிருந்த சாப்பாடு வந்ததும் அவர்களுக்கு ஊட்டி விட்டார்கள். கொஞ்சம் சாப்பிட்டார்கள். அவர்களிடம் இருந்து விடைபெற்று வரும் பொழுது கையில் கொடுத்த செக்கை வாங்கிக் கொண்ட அந்த காப்பக கண்காளிப்பாளர் நிர்மலா ஒரு நன்றியுடைய புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார்.

கடற்கரையில் அமர்ந்திருக்கும் பொழுது மனது மிகவும் லேசானதைப் போல் உணர்ந்தார்கள். எதையோ சாதித்ததைப் போன்ற பெருமிதம் மனதில் நிறைந்திருந்தது.

“மாப்ள, இனிமே ஒவ்வொரு சண்டேயும் அங்க போரம்டா” என பீட்டர் கூற “ஆமாண்டா” என்றான் கதிர்.

அப்புறம் வாரா வாரம் அங்கு போக ஆரம்பித்ததும், கல்யாணம் செய்தால் ஒரு ஊனமுள்ள பெண்ணைத்தான் கல்யாணம் செய்வது என்று முடிவெடுத்ததும், அப்படியே மூன்று வருடங்களுக்கு முன் கண்ணில்லாத வளர்மதியை சுரேஷ் கல்யாணம் செய்ததுயும், வாய் பேச முடியாத மீனாவை கதிர் கல்யாணம் செய்ததும் இதோ இப்போது நடந்தது போல் இருக்கிறது. இன்று பீட்டருக்கு கல்யாணம்,

சுரேஷ்.வளர்மதியை கையைப் பிடித்து அழைத்து வந்து சர்ச்சின் முதல் வரிசையில் அமர வைத்து விட்டு, குழந்தையை அவள் கையில் கொடுத்து விட்டு கதிருக்காக காத்திருந்தான். சிலுவையில் தொங்கிய இயேசு கிறிஸ்துவின் சிலைக்கு கீழே கம்பங்களைப் போல் எழுந்திருந்த மெழுகு வர்த்திகளை வெள்ளை உடையணிந்த பாதிரி ஒருவர் வந்து கொளுத்தி வைத்து விட்டு, வந்திருக்கும் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு மறைந்து போனார்.

பீட்டர் நீல கலர் கோட் அணிந்து மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்தான். பாடகர் குழுவினர் வந்து இசைக் கருவிகளை தட்டி சரி பார்க்க, இனி திருமணம் ஆரம்பிக்கிறது என்பது தெரிந்தும், கதிர் வராததால் சுரேஷ் பொறுமையிழந்து வாசலை பார்த்த படியே இருந்தான்.

“பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே உங்களுக்கு சந்தோஷமும் சமாதானமும் உண்டாவதாக. ஆமென்” என்ற குரலை கேட்டு முன்புறம் திரும்பினான். திருமணம் ஆரம்பித்திருந்தது, இன்னமும் இந்த கதிரையும் காணவில்லை, கல்யாண பெண்ணையும் காணவில்லை. கல்யாண பெண் எப்படி இருக்காங்கடா என்று போனில் கேட்டதுக்கு, “நீங்களே வந்து பார்த்துக்குங்க, அது வரைக்கும் சஸ்பென்ஸ்” என்று பீட்டர் போனில் சொல்லியிருந்தான்.

“நாமெல்லாரும் எழுந்திருந்து நமது கையிலிருக்கும் பாட்டுத்தாளில் உள்ள முதல் பாடலான ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே எனற பாடலை பாடுவோம், அது சமயம் மண மகள் நம்மத்தியிலே வருவார்” என பாதிரி சொல்ல, மொத்த கூட்டமும் எழுந்து நிற்க இசைக்குழுவினர் பாட ஆரம்பித்தனர். மணப்பெண் வரும் பரபரப்பு வாசலில் தெரிந்தது. சுரேஷ் முழுவதும் திரும்பி மணப்பெண்ணை கண்கொட்டாமல் பார்த்தான். நல்ல சிவப்பாயில்லவிட்டாலும் எடுப்பான நிறம், இடது கையில் மணப்பெண்ணுக்குரிய மலர்கொத்தை பிடித்திருந்தாள். வலக்கையில் சுற்றி மடக்கிய கைக்குட்டை, பியூட்டி பார்லரில் அலங்கரிக்கப்பட்ட முகம், வசீகரிக்கும் கண்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் பழுதில்லாத கண்கள், இரண்டு கால்களும் சரியாக இருக்க நெற்றியில் இருந்து வழிந்தோடிய மெல்லிய வெள்ளை வலைத்துணி பின்னால் புரள, ரோஸ்கலர் பட்டுப் புடவையில் கம்பீரமாக வந்து கொண்டிருந்தாள் மணப்பெண். சுரேஷுக்குள் ஒரு சின்ன ஏமாற்றமும் குழப்பமும் வந்து வந்து போனது. பீட்டர் மாறி விட்டனோ, அல்லது கதிரைப்போல் வாய் பேசாத…..

“ஜெமிமா ராணியாகிய நீ, உன் அருகிலிருக்கும் சார்லஸ் பீட்டரை உன் வாழ்கைத் துணையாக ஏற்றுக் கொண்டு, இன்பத்திலும், துன்பத்திலும், வாழ்விலும், தாழ்விலும், மரணம் உங்களை பிரிக்கும் வரைக்கும் இவருக்கு மனைவியாயிருக்க, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும், இங்கு கூடியிருக்கும் அனைவரின் முன்னிலையிலும் வாக்கு கொடுக்கிறாயா?” என்று பாதிரியார் கேட்டதற்கு “வாக்குக் கொடுக்கிறேன்” என்று கணீரென பதில் சொன்ன ஜெமிமாவின் குரலை கேட்டதும் சே இப்படி மாறிப் போயிட்டானே, பேசாம எழுந்து போய்விடலாமா என சுரேஷ் கொதித்துக் கொண்டிருந்தான்.

தோளில் யாரோ தட்டவே, திரும்பினால் கதிர். “சாரிடா, டிராஃபிக்ல மாட்டிட்டோம்” என்று முன்னால் நடக்கும் திருமணத்தை பார்த்துக் கொண்டே சிரித்தான். அவங்க எங்கடா என கிசுகிசுப்பாய் கேட்க, அதோ என கண்ணாலேயே காண்பித்தான். சிநேகமாய் மீனா கைகளை குவித்து வாய் நிறைய புன்னகையுடன் வணக்கம் சொன்னாள். பதிலுக்கு வணக்கம் சொல்லும்போதுதான் கவனித்தான், என்னதான் பட்டு புடவையின் முந்தானையை இழுத்து தோள் வழியே போர்த்த முயற்சித்தாலும், மேடிட்டிருந்த வயிறு விஷேசம் என்று சொன்னது. அவன் பார்வை போன இடத்தை பார்த்த கதிர் சிரிக்க, விஷேசமா என புருவத்தை குவித்து கண்களாலேயே கேட்க, வெட்கத்துடன் கதிர் ஆமாம் என தலையசைத்தான். அவனை தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டு முன்னால் பார்க்க, மணமக்கள் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார்கள். மீனா வந்து, சுரேஷின் தோளை தட்டி, குழந்தை எங்கே என சைகையில் கேட்க, வளர்மதி அமர்ந்திருந்த இடத்தை கையால் காட்டினான். மீனா எழுந்து போய் அவள் அருகில் அமர்ந்து குழந்தையை தூக்க முயல, கைகளை தட்டி விட்டு குழந்தையை இறுக பற்றினாள் வளர்மதி. சுரேஷ் ஓடிவந்து மீனா என காதில் சொல்லவும், சிரித்துக் கொண்டே குழந்தையை நீட்டினாள். அவங்க விஷேசமா இருக்காங்க என்று காதில் சொன்னதும் முகம் முழுவதும் சந்தோஷத்துடன் மீனாவின் பக்கம் திரும்பி தடவி தடவி கரங்களை தேடி பற்றினாள்.

“தேவன் இணைத்த இவர்களை எந்த மனிதனும் பிரிக்காதிருப்பானாக, ஆமென்” என கடைசியாக பாதிரியார் ஆசீர்வதித்ததும், மணமக்கள் வெளியே வந்ததும், புல்வெளியில் இட்டிருந்த மேடையில் வரவேற்பு வைபவம் ஆரம்பமானது. எல்லோரும் சிரித்துக் கொண்டே வீடியோவுக்கு போஸ் கொடுத்து விட்டு போய் மிச்சம் ஒரு சிலரே இருந்த நேரத்தில், கடைசியாக பீட்டர் ஜெமிமாவை அழைத்துக் கொண்டு இவர்கள் இருவரிடமும் வந்தான். நண்பர்கள் இருவருக்கும் புது மனைவியை அறிமுகப் படுத்திவிட்டு அவர்களின் மனைவிகளையும் அறிமுகப் படுத்தினான். இருவர் முகத்திலும் இருந்த வெறுப்பை கண்டு கொள்ளாதவனாக, மீனாவிடத்தில் போய் அவளது வயிறை காட்டி, சிரித்துக் கொண்டே கை குலுக்கினான். வெட்கத்துடன் மீனாவும் கைகுலுக்க, பையனா, பொண்ணா என சைகையில் கேட்டு கலாய்த்தான்.

பிறகு நண்பர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்து கொஞ்சம் தள்ளி அழைத்து வந்து, “தெரியும் நீங்க ரெண்டு பேரும் என்ன நினைக்கறீங்கன்னு தெரியும், ஒரு குறையும் இல்லாத ஒரு பொண்ணா ஜெமிமா இருக்காளேன்னு பாக்கறீங்களா, நான் நம்ம மூணு பேரும் எடுத்துகிட்ட உறுதி மொழிய மீறிட்டேன்னு நினைக்கறீங்களா”, ஒரு புன்னகை முகத்தில் தவழ சொன்னான் “வளர்மதினால பார்க்க முடியாது, மீனானால பேசவோ கேட்கவோ முடியாது, ஜெமிமானால எல்லாம் முடியும், ஆனா ...................”
பீட்டர் சொல்லச் சொல்ல நண்பர்கள் இருவரும் அவனை கட்டி அணைப்பதைப் பார்த்து ஜெமிமா தலைகுனிய, மீனா புரியாமல் பார்த்தாள். வளர்மதி கையிலிருந்த குழந்தை சிரித்தது.

Monday, September 7, 2009

புண்ணாக்கு, வெளக்கெண்ணை, பருப்பு, வெங்காயம்

போடா புண்ணாக்கு, டேய் வெளக்கெண்ணை, இன்னா, நீ பெரிய பருப்பா, போடா வெண்ணை, டேய் வெங்காயம், ஆமா இவுரு பெரிய பன்னு, சுத்த பழம் மாதிரி இருக்காண்டா, அவன் ஒரு தயிர் வடைடா,

இப்படி எல்லாம் ஒவ்வொருத்தருக்கும் ஒரு பெயர் வெச்சு கூப்பிடறதை கேட்டிருப்பீங்க, அதுக்கு உண்மையிலயே இன்னா மீனிங்னு மல்லாக்க படுத்து யோசிச்சப்ப……….,,,,,,,

புண்ணாக்கு : எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசறவன், ஆனா உண்மையில ஒரு சரக்கும் இருக்காது. சந்திராயன் எரிபொருள் என்னாங்கறதுல இருந்து சந்திரமுகி படத்தின் கேமரா ஏங்கிள் வரை எல்லாத்தையும் மணிக்கணக்கா பேசுவான்.

வெளக்கெண்ணை : எதப் பத்தி பேசறமோ அதத் தவிர மத்ததெல்லாம் பேசறவன். கண்ணுல தூசி விழுந்துடுச்சுடான்னா கால் வலிக்கு மருந்து சொல்றவன்.

பருப்பு : எதுக்கெடுத்தாலும் ஓவரா சீன் காட்டறவன். எங்கிட்ட மட்டும் அவன் இந்த வார்த்தையை சொல்லீருந்தா, நடக்கறதே வேறன்னு டயலாக் உடறவன். ஆனா உண்மையிலயே இவருக்கு பேஸ்மெண்ட் வீக்.

வெண்ணை : எப்ப பார்த்தாலும் பெரிய நடுநிலைவாதி மாதிரி, நீதி, நேர்மை நியாயம்னு பேசறவன். என்ன இருந்தாலும் ஒசாமா பின் லேடனும் ஒரு மனிதன் தானே, அவரை எப்படி ஒரு ஓநாய் போலவெல்லாம் கார்ட்டூன் போடலாம்னு பேசுவான்.

பன்னு : ரொம்ப மென்மையானவனாகவும், இளகிய மனசுள்ளவனாகவும் காமிச்சுக்கறவன். ஏண்டா, ஒரு பொண்ண இப்பிடி எல்லாமா கலாய்ப்பாங்க, பாவண்டா, அது அழுதுறுமோன்னு பயந்துட்டேன்னு சொல்வான், ஆனா மனசுல மட்டும் என்னடா இதோட நிறுத்திட்டீங்களேன்னு சலிச்சுக்குவான்.

பழம் : வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருப்பது போல் காமிச்சுக்கறவன். டேய், அங்க பாரேன், காத்து அடிக்கும்போது அந்த குல்மோஹர் பூவெல்லாம் என்ன அருமையா தலை ஆட்டுதுன்னு பாரேன்னு சொல்லுவான், ஆனா, உண்மையில அந்த குல்மோஹர் பூவுக்கு பின்னால இருக்கற பால்கனியில துணி காயப் போடற ஆண்ட்டிய லுக் உட்டுட்டிருப்பான்.

தயிர்வடை : எப்பவுமே எதாவது ஒரு பிரச்சனையில இருப்பதாகவே கற்பனை பண்ணிக்கறவன். ரயில் டிரைவர் தூங்காம வண்டி ஓட்டி அவரு கண்ணு ஒரு மாதிரி இருக்கறத பார்த்துட்டு, டேய் எனக்கு இஞ்சினுக்கு அடுத்த கோச்சுடா, அந்தாளு கண்ணப் பாரேன், ஒரு ஃபுல் அடிச்ச மாதிரி இருக்காண்டா, ஒழுக்கமா ரயில ஓட்டுவானான்னு கவலைப் படுவான்.

ஆனா பாருங்க, இந்த எல்லா பட்டப் பெயர்களுமே ஒரு சாப்பிடற பொருளை மையமா வெச்சுத்தான் உருவாக்கியிருக்காய்ங்க, அது ஏன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க.

Friday, September 4, 2009

நவீன குருகுலங்கள்


என் மறுபாதி, சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பணி புரிகிறார் என்பதினால், என் வாரிசையும் அதே பள்ளியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்காளானேன். கடந்த சில நாட்களாக ஆணி புடுங்குவதிலிருந்து விடுப்பு என்பதால், இவர்கள் இருவரையும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், திரும்ப அழைத்து வருவதும் அடியேன் தலையில் விதிக்கப்பட்டது என்பதை விட திணிக்கப்பட்டது என்று சொல்லலாம். பள்ளி முடிவதற்கு சிறிது நேரம் முன்னாலேயே சென்று பள்ளியின் முன் காத்திருந்து நம்மவர்களை அழைத்து வரலாம் என ஒரு கால் மணி நேரம் முன்னாலேயே சென்றிருந்தேன். மிகவும் மேல்தட்டு ரக மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாதலால், பள்ளிக்கு அருகில் செல்லவே நமக்கு கூசுகிறது. எனது துணைவி அங்கு பணி புரிகிறாரே என்ற ஒரே காரணத்துக்காக என் குழந்தையையும் அங்கு சேர்க்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதால், இந்த கூச்சத்தையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. சென்னை நகரத்தை விட்டு சற்றே ஒதுக்குப் புறத்தில் பள்ளி வளாகம், கட்டிடப் பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அவசர கதியில் கட்டிய, இன்னும் ஒரு பள்ளிக்கான எந்த லட்சணங்களையும் கொண்டிராத நான்கு சுவர்களுக்குள் பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்துகிறார்கள். மாதத்திற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கிறார்கள். பள்ளி அமைந்திருப்பது ஒரு கிராமத்தில் என்பதால் போக வர சாலை வசதிகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் எப்படியும் ஏற்படுத்தப் படும் என நம்புவோம்.

இந்தியாவின் அனைத்து விலையுயர்ந்த கார்களையும் அதன் பணக்காரத்தன முகங்களையும் பார்க்க முடிந்தது. சிறிய கார்களில் வந்திருக்கும் அப்பாக்கள், குழந்தைகளை அழைத்துப் போக வந்திருக்கும் அம்மாக்களை சைட் அடித்தபடியே ஒதுங்கி நின்று மொபைல் போனில் பேசுகிறார்கள். பணக்கார படகு கார்களை ஓட்டி வந்திருக்கும் டிரைவர்கள், இன்னும் பத்து நிமிஷம் இருக்கல்ல, ஒரு தம் போட்டு விட்டு வருவோம் என பள்ளிக்கு முன்னே இருக்கும் செடி கொடிகளின் பக்கத்தில் ஒதுங்குகிறார்கள். ஒரு படகு காரில் இருந்து இறங்கிய பெண்மணி, காவலாளியிடம் “ எத்தின் மன்க்கி ஸ்கூல் ஃபினிஷ் ஆகும்” என சுத்தத் தமிழில் கேட்டுக் கொண்டிருந்தார்.

பள்ளிக்கு உள்ளே சென்றேன். தோளில் தொங்கிய லேப்டாப்பை இறுகப் பிடித்த படியே பிரின்ஸிபால் போல் தோன்றிய ஒரு பெண்மணி அவசர கதியில் ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார். குழந்தைகளின் வகுப்பு ஆசிரியரைக் காண வந்திருந்த பெற்றோர்களிடம் இருந்த பணக்காரத்தனம் எனக்கு ஒரு ஒவ்வாமையாய் தோன்றியது.

இன்று வாத்தியாரிடம் சென்று வாதிடும் பெற்றோர்கள் அதிகமாகி விட்டனர். என் மனைவியின் வகுப்பில் பெற்றோர் தினத்தன்று கேட்கப்படும் சில கேள்விகள் :

என் பையனுக்கு உங்க ஸ்கூல் சிலபஸ்ல ஒரு இன்ட்ரஸ்டே இல்ல, நீங்க இத மாத்தறதுக்கு முயற்சி எடுங்களேன்.

அவனை தமிழ் படிக்க சொல்லி அதிகம் கட்டாயப் படுத்தறீங்களாமே, அவன் தமிழ் படிச்சு என்ன பண்ணப் போறான்?

இந்த பெற்றோர்களை நினைத்தால் சிரிப்பும் வேதனையுமே வருகிறது.

முதலாவது எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே செலவு செய்தாலும் தன் மகனின் பேச்சைக் கேட்க எத்தனை பேருக்கு பொறுமை இருக்கிறது?

எல்லா பெற்றோருக்கும் தன் மகன் முதல் ரேங்க் வாங்க வேண்டும், அடுத்த சச்சின் டெண்டுல்கராய் திகழ வேண்டும், பெற்றோருக்கு பெருமை சேர்க்கிறவனாய் இருக்க வேண்டும் என விரும்பத் தோன்றுகிறதே தவிர, இப்படியெல்லாம் ஆவதற்கு பெற்றோராகிய நமது பங்களிப்பு அதிகம் தேவை என்ற அடிப்படை உண்மையை சௌகரியமாக மறந்து விட்டு, பணத்தை விசிறியடித்தவுடன் என் மகன் ஒரு சிறந்தவனாக மாற வேண்டும் என ஆசைப் படுகிறார்கள். அப்படி நடக்காத பட்சத்தில், கூசாமல் பள்ளிகளை குறை கூறவும் இவர்கள் தயங்குவதில்லை. வேணும்னா இன்னும் ஒரு தௌஸண்ட் ருப்பீஸ் ஃபீஸ் வாங்கிக்குங்க, ஆனா என் பையன் தான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கணும் என்ற ஒரு அவுட் சோர்சிங் மனப் பான்மை பெற்றோர்களிடத்தில் அதிகம் வளர்ந்திருக்கிறது. குழந்தை வளர்ப்பிலும், படிப்பிலும் பெற்றோராகிய தங்களுக்கும் சம பங்கு உண்டு என்பது தெரிந்தாலும், அதை வேலைப்பளு என்ற பாசாங்குத்தனமான காரணம் சொல்லி தட்டிக் கழிக்கிறார்கள். ஆனால் தனது தோழியிடம் மணிக் கணக்கில் மொபைலில் பேச நேரம் இருக்கிறது.

பள்ளி விட்டு குழந்தைகள் வெளியே வருகிறார்கள். ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் அந்த பணக்கார திமிரை பார்க்க முடிகிறது. பெருவாரியானவர்கள் கையில் எதாவது ஒரு சிப்ஸ் பாக்கெட் இருக்கிறது. பள்ளிக்கு உள்ளேயே ஒரு கேண்டீன் வைத்திருக்கிறார்களாம். பிஸ்ஸாவிலிருந்து அனைத்து குளிரூட்டப் பட்ட பானங்கள் வரை விற்கிறார்கள். எல்லா வகையான ஜங்க் ஃபுட் எனப்படும் துரித வகை பண்டங்கள் கிடைக்கிறது. வெளியே வரும் குழந்தைகளை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். நிறைய குழந்தைகள் அளவுக்கு மீறிய உடல் எடை கொண்டுள்ளனர். ஊளைச்சதை உடம்பு எங்கும் பிதுங்கித் தொங்குகிறது. தன் பையை வாங்கும் கார் டிரைவரை ஒரு பத்து வயது பையனும் ஒரு முதலாளித்துவ திமிரிலேயே பார்க்கிறான். அங்க வெயிட் பண்ணு, நான் வரேன் என ஏதோ ஒரு பிஸியான முதலாளி ஆணையிடுவதுபோல் ஆணையிடுகிறான்.

எத்தனை ஆயிரம் செலவானாலும் சரி, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் என் குழந்தைகள் படிக்கப் போக வேண்டும் என பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் பண முடிப்புகளுக்கென கவர்ச்சிகரமான பாடத்திட்டங்களை காண்பித்தே பள்ளிகள் பணம் பண்ணுகின்றன. ஏழு வயது பெண்ணுக்கும் கூட பள்ளியில் பரத நாட்டியம் கற்றுத்தரப்பட்டு, அதற்கென தனி பணம் வசூலிக்கப் படுகிறது. தனி மனித ஒழுக்கம், பெரியவர்களிடத்தில் மரியாதை போன்றவை கிலோ என்ன விலை என இந்த மேல்தட்டு குழந்தைகள் கேட்கிறார்கள். ஏனெனில் இவை இந்த பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்தில் கிடையாது. பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தியெடுக்கும் மனித இயந்திரங்கள்தான் இங்கு உருவாக்கப் படுகிறார்களே தவிர, நல்ல அறிவுச் செல்வங்களை இந்த நவீன குருகுலங்கள் உருவாக்குவதில்லை.

Thursday, September 3, 2009

மனதைத் திற, மகிழ்ச்சி வரட்டும் - 3

எங்க மேனேஜர் எம்மேல காண்டா இருக்கான்பா. என்ன செஞ்சாலும் ஒரு குத்தம் கண்டு பிடிக்கறான்.

நான் என்னதான் சரியா செஞ்சாலும் இன்னும் உங்கிட்ட இருந்து ரொம்ப எதிர்பார்க்கிறேன்னு முதலாளி சொல்றாருப்பா.

அந்த பொம்பள எனக்கு மேலதிகாரியா வந்தப்பவே நெனச்சேன். புருஷன விட்டுட்டு தனியா இருக்கறவளாச்சா, முழு ஆண் வர்க்கத்து மேலயும் காண்டு அவுளுக்கு, அதான் எந்நேரமும் ஆம்பளங்கள கண்டா எரிஞ்சு விழறா!!!!!! அவ புருஷன் மேல இருக்கற கோபத்தையெல்லாம் நம்ம கிட்ட பழி தீத்துக்கறா, எல்லா நம்ம நேரண்டா!!!!!!!

அந்த பெருசு சரியான ஜொள்ளு பார்ட்டிப்பா, எப்ப போனாலும் முந்தானைக்கு உள்ள பாக்கறதும், பல்ல இளிக்கறதும், கைய தொட்டு பேசறதும், டபுள் மீனிங்ல பேசறதும் தாங்க முடியல.

இப்ப வந்திருக்கானே அவன் ………………… ஜாதிக்காரன்யா, அதான் மத்தவனையெல்லாம் ஒழிக்கணும்னு இருக்கான். எல்லா நம்ம நேரம்…….. தணிஞ்சு தான் போக வேண்டியிருக்கு.

அதென்னமோடா, வட நாட்டுக்காரன்னா நம்மாளு தூக்கி தூக்கி குடுக்கறார்ரா, ஆனா அதே சமயத்துல நம்மாளுங்க வயத்துல ஏன் அடிக்கறார்ன்னு தெரியல.

வர்றவன் எல்லாம் பதவி உயர்வு வாங்கறான், கம்ப்யூட்டர்ல நாலு கலர்ல படம் போட்டுட்டா அவன் பெரிய ஆளா?? நேத்து பொறந்த பசங்க எல்லாம் நமக்கு மேனேஜர் ஆகறாங்கப்பா!!!!

இது போன்ற புலம்பல்களை எல்லா வகையான அலுவலகங்களிலும் கேட்க முடியும். இப்படி புலம்பும் நம் எல்லாருக்குள்ளும் ஒரே ஒரு கேள்வி , நான் என்ன தப்பு பண்ணுகிறேன், ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகிறது. கொஞ்சம் இப்படி வாங்க, இந்த புண்ணிய வானை பாருங்க


ராபெர்ட்டோ கொயிசூட்டா


க்யூபா தேசத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. சுருட்டு குடிச்சுகிட்டே போட்டோவுக்கெல்லாம் போஸ் குடுப்பாரே, அவரேதான் ஃபிடல் காஸ்ட்ரோ என்ற போராளி, வெறும் தீவாய் இருந்த ஒரு பிரதேசத்தை வளம் கொழிக்கும் நாடாக இவர் மாற்றிய வித்தை எல்லோருக்கும் தெரியும். (தெரியலேண்ணா அதப் பத்தி படிச்சு தெரிஞ்சுக்கோங்க). அந்த தீவில் உள்ள ஹவானா என்ற இடத்தில் பிறந்தவர் தான், மேலே கொட்டை எழுத்தில் எழுதப் பட்டிருக்கும் ராபர்ட்டோ கொயிசா, இல்ல கொயாசீ, அடச்சீ விடுங்கப்பா, வெறும் ராபர்ட்டோனே வெச்சுக்கலாம். இவரின் தாத்தாவுக்கு ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. முதலாளி வர்க்கத்தில் பிறந்ததால், செல்வச் செழிப்புடனேயே வளர்ந்த ராபர்ட்டோ அண்ணாச்சி, கியூபாவில் படித்தார், பிறகு அமெரிக்காவில் படித்தார், அங்கு படித்தார் , இங்கு படித்தார், என்னென்னவெல்லமோ படித்தார். இறுதியில் கொக்க கோலா கம்பெனியில் ஒரு பானம் நிரப்பும் பிரிவில் பணிக்கு சேர்ந்தார். எப்பவுமே துறு துறுன்னு இருக்கும் இவர், குறுகிய காலத்தில் ஐந்து ஆலைகளுக்கு மேலாளராக பதவி உயர்வு செய்யப் பட்டார். சீக்கிரத்திலேயே கொக்க கோலாவின் தலைமையகமான அமெரிக்காவிலுள்ள ஜியார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டாவுக்கு மாற்றப் பட்டார். அங்கிருந்து பிடித்த ஏறுமுகம் இந்த மனிதரை நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மிகக் குறுகிய காலத்தில் இட்டுச் சென்றது.

இவர் தலைமைப் பொறுப்பை ஏற்ற நேரம் குளிர் பானக் கம்பெனிகளில் பெப்ஸி இவர்களுக்கு பெரிய தலைவலியாயிருந்தது. பெப்ஸி ஆறு பாட்டில் விற்றால் கோலா ஒரு பாட்டில் விற்பதற்குள் நாக்குத் தள்ளியது. மக்களும் பெப்ஸியை விரும்பி குடித்தனர். கோலாவின் விற்பனை பிரிவிலுள்ள மேலாளர்கள் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள். என்னென்னவோ கருத்துக் கணிப்புகள், விதவிதமான விளம்பரங்கள், ஒன்று வாங்கினால் மூன்று இலவசம் போன்ற கவர்ச்சித் திட்டங்கள் என எதுவும் வேலைக்காக வில்லை. மக்கள் பெப்ஸியை குடித்துக் கொண்டிருந்தார்கள். எதைத் தின்னால் பித்தம் தெளியும் என கோலாக்காரர்கள் காத்திருந்த வேளையில் தான் நமது நாயகன் ராபர்ட்டோ தலைமைப் பொறுப்பேற்றார். அனைத்து விற்பனை பிரிவு ஆட்களையும் உங்களிடமுள்ள சந்தையை பற்றிய கருத்து கணிப்புகள், நமது விற்பனை உத்திகளைப் பற்றிய விவரங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு நாளை வாருங்கள் சந்திப்போம் எனக் கூறினார்.

அந்த நாளையும் வந்தது. எப்பொழுதும் சிகரெட் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்த ராபர்ட்டோவும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு புகையை ஊதியவாறே அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அந்த அறையின் மௌனத்தை கலைத்தது அவரது காலணி அரவம் மட்டுமே. அமர்ந்திருந்த விற்பனைப் பிரிவு குப்புசாமிகளுக்கு என்ன நடக்கப் போகிறதோவென்ற பயத்தில் பில்டிங் ஸ்ட்ராங்காயும், பேஸ்மெண்டில் ஆட்டத்துடனும் இருந்தனர். இரண்டு மூன்று சிகரெட்டுகளுக்குப் பிறகு தொண்டையை செருமிக்கொண்டு கேட்டார்,

“சரி இப்ப என்ன பிரச்சனைன்னு எல்லாரும் நொந்து போயிருக்கீங்க?”

“சார், நம்ம ஐட்டத்தை விக்கறதுக்காக வானத்தை வளைத்தோம், பூமியை புரட்டினோம், காற்றை கட்டினோம், மலையை பெயர்த்தோம், கடலை கவிழ்த்தோம், ஒண்ணும் நடக்கல”

“சரி, பிரச்சனை எங்கன்னு பார்த்தீங்களா?”

“ஆமாம் சார், பிரச்சனையே இந்த பெப்ஸிக்காரந்தான் சார், அவனுது ஆறு வித்தா, நம்ம ஐட்டம் ஒண்ணுதான் சார் விக்குது”

“அதுதான் பிரச்சனையா?”

“ஆமா சார்”

“இல்லை அதுவல்ல பிரச்சனை” அனைத்து புருவங்களும் ஆச்சரியத்தில் விரிந்தன.

“சரி இந்தப் பிரச்சனையை வேறொரு கோணத்தில் அணுகுவோம், ஒரு சராசரி அமெரிக்கன் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் திரவம் குடிக்கிறான்?”

பட்டென பதில் வந்தது “ 14 அவுன்ஸ் சார்”

“அதில் எவ்வளவு கொக்க கோலா குடிக்கிறான்?”

“2 அவுன்ஸ் சார்”

“இப்ப புரிஞ்சுதா, பிரச்சனை எங்க இருக்குன்னு, மீதி 12 அவுன்ஸ் அவுனுக்கு வேற ஐட்டம் கிடைக்குது, அதனால அவன் மத்ததெல்லாம் குடிக்கிறான். அப்ப நம்ம போட்டி பெப்ஸியோட அல்ல, இந்த 12 அவுன்ஸோடதான். இந்த 12 அவுன்ஸும் கொக்க கோலாவா இருக்க நாம என்ன செய்யணும்னு யோசிங்க, ஒவ்வொரு அமெரிக்கனும் எப்பவெல்லாம் எதாவது குடிக்கணும்னு யோசிக்கறானோ, அப்ப அவன் கொக்க கோலாவைத்தான் குடிக்கணும். ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் கைக்கு எட்டற தூரத்துல கோலாவை கொண்டு போய் வைங்க”

எல்லார் மூளையிலும் பல்பு எரிந்தது, அமெரிக்காவின் மூலை முடுக்குகளிலெல்லாம் தானியங்கி பானம் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப் பட்டன, ஒரே வருடத்தில் கோலாவின் விற்பனை அசுர வளர்ச்சி கண்டது. அன்றிலிருந்து இன்று வரை அதன் வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாய் உள்ளது. இங்கு ராபர்ட்டோவின் அணுகு முறையை கவனியுங்கள்.

எதிரி என்பது மனிதர்களோ நிறுவனமோ அல்ல, நமது எண்ணங்களும், நம்மை சுற்றி நாமே எழுப்பியிருக்கும் மாய பிம்பங்களும் தான்.

பெப்ஸிதான் முழு எதிரி அல்ல எதிரிகளுள் அவர்கள் ஒருவர் மாத்திரமே.

நமது திறமை என்னவோ அதை மூலதனமாகக் கொண்டு போராடுவோம். பெப்ஸி கடையில் விற்கிறான், நாம் மனிதன் நடக்கும் இடத்திலெல்லாம் விற்போம்.

அப்படியே நம்மோடு அல்லது நமக்கு மேலாளராக வேலை செய்யும் எந்த சுப்பு சாமியும் நமக்கு எதிரிகளல்ல.

நமது அடுத்த வீட்டில் வாழும் பங்கஜா மாமி நமக்கு எதிரி அல்ல.

நமது முதல் எதிரி, நம்மிடம் உள்ள குறைகள் தான். அந்த குறைகளை கண்டுபிடி. தினமும் அந்த குறைகளை நிவர்த்தி செய்வது நமது இலக்காயிருக்கட்டும். 12 அவுன்ஸ் திரவம் என்னவென்று கண்டு பிடிக்காததுதான் நமது குறை. அந்த 12 அவுன்ஸ் தெரிந்த பின் அதை எப்படி ஆட்கொள்வது என முயற்சிப்போம்.

குறை கண்டுபிடிக்கும் மேலாளர் ஒரு குறையாகவே தெரிய மாட்டார், அதிகம் எதிர்பார்க்கும் முதலாளி ஒரு பொருட்டாகவே தெரிய மாட்டார். ஜொள்ளுவிடும் பெருசு கால் தூசாய் மாறிப் போகும். ஆம்பிளையை வெறுக்கும் பெண் அதிகாரி நண்பியாகி விடுவார். ஜாதி வெறி பிடித்த அதிகாரி சக தோழனாகி விடுவார்.

எதிரியோடு போராடுவதை விட, எதிரியாய் தோன்றி புலம்ப வைக்கும் சூழ்நிலையோடு போராடு, வெற்றி நிச்சயம்.

மனதைத் திற, மகிழ்ச்சி வரட்டும்.