Tuesday, August 9, 2011

நிறவெறி - நிதர்சனம்


இங்கிலாந்து தேசத்தின் லண்டன் நகரம். ஒரு காலத்தில் மனித வர்க்கத்தின் சொர்க்க புரி, ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், துடைத்து விடப்பட்ட சாலைகள், பூக்களைச் சொறியும் நந்தவனங்கள், பூமியிலிருந்து திடீரெனக் கிளம்பி வானத்தை நோக்கி பீறிட்டுக் கிளம்பும் செயற்கை நீரூற்றுகள், கம்பீரம் நிறைந்த இங்கிலாந்து அரச குடும்பத்து அரண்மனை, உலகின் மூலை முடுக்கெல்லாம் கோலோச்சிய இங்கிலாந்தின் ராஜ குடும்பத்தினரின் தனிப்பட்ட உல்லாச மாளிகைகள், நவீனத்தின் உச்சமாக எங்கு நோக்கினும் மினுக்கும் ஆடம்பரம், சுரங்கத்தில் ஓடும் ரயில் வண்டிகள் என ஒரு உல்லாசபுரியின் அனைத்து முகவரிகளையும் இந்த நகரத்தில் காணலாம்.

ஆனால் இதற்கெல்லாம் திருஷ்டிப் பொட்டு வைத்த விதமாக, இங்கிலாந்து பாதம்பதித்து, காலால் மிதித்து அரசாண்ட நாடுகளின் ஒருசில வெள்ளையரல்லாத வர்க்கத்தினருக்கான குடியிருப்புகளை லண்டன் நகரத்தின் வெளிப்புறப் பகுதிகளில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இந்த வெள்ளையரல்லாத மக்கள், தங்கள்சொந்த நாட்டிலிருந்து (இங்கிலாந்தின் தொழில் துறௌ முன்னேற்றத்துக்கென வியர்வை சிந்துவதற்காகவே) அழைத்து வரப்பட்டு, இங்கிலாந்தின் கௌரவ குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டு, இங்கிலாந்தில் குடியுரிமை வழங்கப்பட்டாலும், எந்த ஒரு வெள்ளையனும் வேறு நிறத்தவனை அவனது அண்டை வீட்டுக்காரனாக இன்றுவரை அங்கீகரிக்கவில்லை. மிகக் கவனமாக அவனுக்கு ஒரு நவீன அடிமையின் முகவரி கொடுத்து நகரத்தின் ஒதுக்குப் புறத்தில் வைத்திருக்கிறார்கள். (இந்தியர்களும் இதற்கு விதி விலக்கல்ல)

வெள்ளையர்களின் தெருவுகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் மேன்மை தங்கிய அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட இந்த அடிமைகளின் பிராந்தியங்களுக்கென செயல்படுத்தப் படுவதில்லை. எப்பொழுதும் ஒரு மூன்றாந்தர தெரு நாய்களைப் போலத்தான் இவர்கள் நடத்தப் படுகிறார்கள். ஆனால் இவர்களின் உடல் உழைப்பை உறிஞ்சுவதில் வெள்ளைத் தோல்களுக்கு என்றுமே சிறிதும் தயக்கம் இருந்ததில்லை. அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவது போல் நடித்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளாகத்தான் கட்சி வேறுபாடின்றி ஒவ்வொரு அரசாங்கமும் இருந்திருக்கின்றது.

லண்டன் நகர வாசியான ரிச்சர்ட் ரோஸ் இப்படியாக எழுதுகிறார் “ நான் முப்பது வருடத்திற்கு முன், லண்டன் நகரின் டாட்டன்ஹாம் பகுதிக்கு குடி வந்தேன். (டாட்டன் ஹாம் என்பது வடக்கு லண்டனில் உள்ள கருப்பர்கள் மட்டுமே வாழும் பகுதி). அப்பொழுதெல்லாம் இது ஒரு உழைக்கும் வர்க்கத்தின் சொர்க்க புரியாகத் திகழ்ந்தது. எங்கு நோக்கினும் திறமை மிகுந்த வாலிபர்கள் தங்களின் உழைப்பினால் பொருளீட்டினார்கள். மாலை நேரங்கள் விளையாட்டிலும் ஆடல் பாடலிலும் கழியும். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலய ஆராதனைகளில் இன வேறுபாடின்றி கூட்டம் நிரம்பி வழியும். எல்லாம் கிரமமாயும் ஒழுங்காகவும்தான் போய்க் கொண்டிருந்தது” என்கிறார்.

உழைக்கும் மக்கள் நிறைந்த பகுதியாதலால், பணப் புழக்கம் அதிகமிருந்தது. இந்த பணப் பெருக்கத்தைக் கண்டு அரசாங்கம் பயந்ததோ என்னவோ, தெரியவில்லை, 80 களில் பதவியேற்ற பிரதமரான மார்கரெட் தாட்சரின் ஆட்சியிலிருந்து ஆரம்பித்து, ஜான் மேஜர், டோனி பிளேர் மற்றும் இப்போதைய காட்டன் பிரௌன் வரையிலான எல்லா ஆட்சியாளர்களுமே இந்த வாலிபர்களின் திறமை மிகு எழுச்சியை, அவர்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தின் சக்தியை, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு எழுச்சியாகவே உணர்ந்தனர். தங்களது சொந்த மண்ணில் வேறொரு இனம் செழிப்பதா என நினைத்தார்களோ என்னவோ, 80 களின் ஆரம்பத்தில் இருந்தே கருப்பர்களை புறக்கணிப்பது மறைமுகமாக அரங்கேற ஆரம்பித்தது. (இந்த மார்கரெட் தாட்சர், இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஐரோப்பிய நாடுகளில் யூதர்களுக்கெதிராக நடந்த வன்முறையில் தப்பிப் பிழைத்து இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த ஒரு யூத குடும்பத்துப் பெண்மணி, யூதர்களுக்குள் உறைந்து கிடக்கும் நிற வெறியைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன???? தனது பிரதமர் பதவியை பயன்படுத்தி கருப்பர்களின் புறக்கணிப்பு என்பதை ஒரு அரசியல் நிலைப்பாடாக உருவாக்கிய புண்ணியம் இந்த புரட்சிப் பெண்மணியையே சாரும்)

இந்த அதிகார பூர்வ புறக்கணிப்பினால் கருப்பு இன மக்கள் வெகுண்டு எழுந்ததின் விளைவாக, இளம் வாலிபர்கள் அரசுக்கு எதிராக குழுக்களாக திரண்டனர். ஒரு தகுதியும் இல்லாத வெள்ளை வாலிபர்கள் வெறும் வெள்ளை நிறத்தவர்கள் என்ற ஒரே தகுதிக்காக அரசாங்கத்தால் உயர்த்திப் பிடிக்கப்படுவதும், அனைத்து தகுதிகளும் தன்னிடம் இருந்தும், இங்கிலாந்தின் இறையாண்மையை முழுவதும் மதிக்கும் ஒரு குடிமகனாக தான் வாழ முற்பட்டாலும், கருப்பு நிறத்தவன் என்ற ஒரே காரணத்துக்காக தான் புறக்கணிக்கப்படுவதும் ஒவ்வொரு கருப்பு இன வாலிபனின் நெஞ்சிலும் வஞ்சத்தை விதைத்தது. இதை எதிர்பார்த்தது போலவே அரசாங்கமும் இவர்களை சர்வ சௌகர்யத்துடன் சமூக விரோத கும்பல் என்று முத்திரை குத்தி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவ்வப்பொழுது வேட்டையாடி வந்திருக்கிறது.

இந்த வேட்டையாடலின் ஒரு பகுதியாகத்தான் கடந்த வார இறுதியில் போலீஸாரால் திட்டமிட்டு நடத்தப் பட்ட ஒரு படுகொலை. மார்க் துக்கன் என்ற 29 வயது வாலிபனை தெரு நாயை சுடுவது போல சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். அதற்கு கண்டனம் தெரிவித்து, கருப்பர்களால் நடத்தப்பட்ட ஒரு அமைதி ஊர்வலத்தில் வெள்ளை போலீஸ் காவலர்களால் திட்டமிட்டு வன்முறை அரங்கேற்றப் பட்டு, வெள்ளை முகமூடி அணிந்த ஊடகங்களின் காமிராக்களில் கறுப்பர்களின் வெறியாட்டம் மட்டுமே படம்பிடிக்கப்பட்டு, கறுப்பர்களின் ஈனத்தனத்தைப் பாரீர் என உலக அரங்கில் வெட்கமில்லாமல் ஒளிபரப்பும் அளவுக்கு நிற வெறியானது வெள்ளையர்களையும், அவர்களது ஊடகங்களையும் ஆட்கொண்டுள்ளது. மார்க் துக்கன் ஒரு தீவிரவாதியாகவும், போதைப் பொருள் விற்பவனாகவும் வெள்ளைய ஊடகங்களால் அடையாளம் காட்டப் படுகிறார்.

உண்மையில், பொருளாதார ரீதியாக மிகவும் கேவலமான நிலைமைக்கு சீரழிந்து ஆட்டம் காணும் இங்கிலாந்து, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கருப்பர்களை அணுஅணுவாக சித்திரவதை செய்து வருகிறது. இந்த சிக்கன நடவடிக்கைகளால் அரசின் உதவித்திட்டங்கள் மற்றும் அரசின் இயல்பான மக்கள் நலப் பணிகள் கூட சிக்கனம் என்ற பெயரில் கருப்பர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த சிக்கன நடவடிக்கைகளால் எந்த ஒரு வெள்ளையனும் பாதிக்கப்படவில்லை என்பது வேலை இல்லாத் திண்டாட்டத்தின் விகிதங்களைக் காணும் பொழுது தெளிவாகிறது. (முழுத்திறமையும் தகுதியும் உள்ள கருப்பர்களில் 30 சதவீதம் பேருக்கு வேலை இல்லை எனும் பொழுது, ஒரு தகுதியும் இல்லாத வெள்ளைய இளைஞர்களில் வெறும் 4 சதவீதமே வேலையற்றிருக்கிறார்கள்)
மார்க் துக்கனின் மரணம் ஒரு பிரளயத்தையே கிளப்பி, அதற்கு அடுத்தாற்போல் கருப்பர்களின் மீது ஏவி விடப்பட்ட வன்முறையால் லண்டன் நகரின் சில பாகங்கள் உண்மையிலேயே பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. சரி, அது அவர்கள் நாட்டு பிரச்சனை என முகத்தைத் திருப்பிக் கொண்டு இந்தியா இருக்கவேண்டுமா???

•காமன்வெல்த் போட்டிகளுக்கான ஆயத்த கட்டுமான நடவடிக்கைகளின் போது, இன்னும் இந்தியா இந்தப் போட்டிகளுக்காக தயாராகவில்லை, இதுக்குத்தான் இந்தியா மாதிரி பன்னாடை பரதேசி நாடுகளிலெல்லாம் இந்த விளையாட்டை நடத்தாதீர்கள் என்று எத்தனை தரம் சொன்னோம் என வெள்ளைய ஊடகங்கள் முழங்கியது (ஆனால், அவர்கள் படம் பிடித்துக் காட்டியதெல்லாம், டெல்லி நகரத்தின் இயல்பான கட்டுமான பணிகளைத்தான், காமன்வெல்த் கிராமத்தின் பணிகளை அல்ல)

•அதே போல இந்தியாவும் இப்பொழுது 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தனது வீளையாட்டு வீரர்களை அனுப்புவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். நிறவெறி வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் லண்டன் நகரம் இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பானதா என ஒரு உயர் மட்டக் குழுவை அனுப்பி ஆய்வு செய்து வர வேண்டும்.

•தற்சமயம் இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியினரை, வன்முறையிலும் வறுமையிலும் சிக்கித்தவிக்கும் இங்கிலாந்தின் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் விளையாட அனுமதிக்காமல் உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும்.

•இங்கிலாந்தில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளை வன்முறை முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பும்வரை இந்தியா திரும்ப அழத்துக் கொள்ள வேண்டும்.

•வன்முறை ஒழிந்து, இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை, இந்திய விமானங்களும், கப்பல்களும் இங்கிலாந்திற்கு செல்வதை தடை செய்ய வேண்டும்.

•இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து குடிமகன்கள் எல்லோரும், கடினமான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட்டு, தங்களது பின்னணி வரலாறின் குற்றமற்ற தன்மை நீரூபிக்கபட்ட பின்னரே, இந்திய மண்ணில் காலடி வைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

வெள்ளையனின் காலணியைக் கூட (அது வெள்ளையனுடையது என்ற ஒரே காரணத்துக்காக) பூஜித்துப் போற்றும் இந்தியா இதை செய்யுமா???

Monday, August 1, 2011

படைப்பவனை பார்த்தோம்





புஷ்கர் என்றொரு நகரம், முறுக்கிய மீசைகளும், உருட்டிச் சுற்றிய தலைப்பாகைகளும், உறையில் உறங்கும் வாளும், நிமிர்த்திய நெஞ்சில் உறையும் வீரமும், உலர்ந்து கிடக்கும் மஞ்சள் நிற மண்ணின் ஒவ்வொரு துகளிலும் ஒவ்வொரு கதை புதைந்து கிடக்கிறது.

எந்த லக்கினத்தில், எந்த நட்சத்திரத்தில், எந்த சுபயோக சுப தினத்தில் என்று தெரியவில்லை, படைப்பின் தெய்வமான பிரம்மனுக்கு திடீரென ஒரு விபரீத ஆசை வந்ததாம். பூமியில் ஒரு யாகம் செய்ய வேண்டுமென தீராத ஒரு தாகம் ஏற்பட, எங்கு வைக்கலாம் யாகத்தை என ஒரு சர்வே நடத்திக் கொண்டிருந்தாராம். அப்பொழுதுதான் பூமியின் ஒரு மூலையில் இருந்து கடும் அபயக் கூக்குரல் எழ, என்ன விஷயமென அறிந்து வாருங்கள், என தன் துர, ரத, கஜ பதாதிகளை பணித்து விட்டார். அவர்களும் வந்து தீர விசாரித்து பார்த்ததில், இந்த மலைகளும் வனமும் சூழ்ந்த அழகிய இடத்தில் வஜ்ரநாசன் என்ற ஒரு அசுரன் மக்களை கொன்று குவித்து, அவர்களின் வளங்களையெல்லாம் சூறையாடிக் கொண்டிருக்கிறான் என்ற துக்க செய்தி கிடைத்தது. நான் படைத்த மனுக்குலத்திற்கொரு துன்பம் வர, நான் அமைதி காப்பதா என்ற ஒரு ஆதங்கம் அடக்க முடியாமல் எழ, பிரம்மன் போருக்கு கிளம்பினான். வஜ்ர நாசன் சுவடு தெரியாத படி வதம் செய்யப்பட்டான். இந்த யுத்தத்தில் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று செய்குவோம் என்ற கொள்கை அடிப்படையில் மிக சுலபமாய் அசுரன் நசுக்கப்பட்டான்.
ஒரு தாமரை மலரில் வதம் செய்யும் மந்திரம் அடைக்கப்பட்டு, பூவுக்குள் இருக்கும் பூகம்பம் என்னவென தெரியாமலே அசுரனின் கரங்களில் மலரைக் கொடுத்துவிட, அவனும் தன் அசுரத்தனத்தில் பூவை பிரித்துப் பார்க்க, உள்ளே ஒளிந்திருந்த மந்திரம் வேலை செய்தது. அசுரன் அழிந்தான். (நம்புங்கள், இதுதான் தல புராணம், ஹலோ நான் சொல்றது அஜீத் புராணம் அல்ல, அந்த தலத்தின் புராணம்). எல்லாம் முடிந்து, பிரம்மன் யாகம் தொடங்கப் போகும் போது ஒரு சக்களத்தி சண்டை வேறு. (அதான கேட்டேன், ஒரு விஷயம் ஒழுக்கமா போயிகிட்டிருந்தா நடுவுல ஹீரோயின் புகுந்து அதைக் கெடுக்கலைன்னா கதை களை கட்டாதே).
பிரம்மனின் சகதர்மிணியான சரஸ்வதி, அன்றைய தினத்தில் அவசர வேலையாய் கலைச்சேவை செய்ய வெளிநாடு சென்றுவிட்ட காரணத்தால், யாகம் ஆரம்பிக்க வேண்டிய சுப தருணம் கைநழுவிப் போகிறதே என பிரம்மன் கவலை கொண்டான். எல்லாவற்றிற்கும் ஒரு பரிகாரம் உண்டல்லவா, அவள் இல்லையானால் என்ன இவளை வைத்து யாகம் நடத்து என ஒரு குர்ஜர் இனப் பெண்ணை பிரம்மன் முன் நிறுத்த, தனது படைப்பை கண்டு தானே வியந்து போய், பிரம்மனும் அந்த அழகிய அஸ்திரத்தால் விழுந்து போனான். அந்த அம்புதான் காயத்திரி. அவளை மணந்து, யாகம் முடித்து, நிம்மதிப் பெருமூச்சு விட்ட பிரம்மனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. வெளிநாட்டில் கலைச்சேவை முடிந்து தன் நாதனைத் தேடி வந்த சரஸ்வதி, பிரம்மன் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவதைக் கண்டு, நெற்றிக்கண் திறந்தாள். ஒரு ரௌத்ர தாண்டவம் ஆடி விட்டு, பிரம்மனுக்கு ஒரு சாபமும் கொடுத்தாள். (பிரம்மனுக்கேவா….ஹூம், இந்த பொம்பளைங்க ஒரு ஆள விட்டு வைச்சாங்களா, என்னமோ போங்க). பிரம்மனைப் பார்த்து கடும் கோபத்தில் சொன்னாள் “ஏ பிரம்மா, நீ எனக்கு சக்களத்தி கொண்டு வந்த காரணத்தால், உனக்கு இந்த புஷ்கர் நகரைத்தவிர உலகில் எங்குமே கோவில்கள் இருக்காது, யாரும் உன்னை பூஜிக்க மாட்டார்கள்” என சபித்து விட்டாளாம். அதனால் தான் இந்தியாவில் புஷ்கரில் மாத்திரமே பிரம்மனுக்கு ஆலயம் உள்ளது.
ஆனால், இந்தோனேஷியாவின் பாலி தீவிலும், ஒரு பிரம்மன் கோவிலை கண்டிருக்கிறேன். அப்படியானால் பாலியில் இருக்கும் பிரம்மன் யார் என கேட்காதீர்கள். அவரது கதை இன்னும் கொஞ்சம் நீளமானது.
ராஜஸ்தானின் அஜ்மீர் நகரின் எல்லைக் கோடாய் விரிந்து நிமிர்ந்து நிற்கும் ஆரவல்லி மலைகளின் மீதேறி இறங்கினால், முதலில் நம்மை வரவேற்கிறது மானசரோவர் ஏரி. இந்த ஏரியில் உள்ள படித்துறைகளை மொத்தம் 52 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு சாதியினரும் தனது முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக கைங்கர்யம் செய்து கொள்ள வசதி செய்து பணம் பண்ணுகிறார்கள். குறைந்த பட்சம் 50 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கூட இங்கு ஆத்ம சாந்தி கிடைக்கிறது.


(ஆரவல்லி மலைத் தொடர்கள்)

மலைகளில் வளைந்து நெளிந்து செல்லும் பாதையெங்கும் புஷ்கர் நகரத்தின் ஹோட்டல் பெயர்கள் நம்மை வரவேற்கின்றன. மலைகளின் உச்சியில் ஒரு இடத்தில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உங்களை மக்காச்சோளம் சாப்பிட வைத்தே அனுப்புகிறார்கள். நீங்கள் செல்லும் காரை ஓட்டும் டிரைவருக்கு ஓசியில் மக்காச்சோளம் சாப்பிட வேண்டுமென்றால், நீங்கள் கண்டிப்பாக சாப்பிட்டாக வேண்டும்.




(மக்காச் சோளம், ரொம்ப முக்கியம்)


புஷ்கரின் உள்ளே நுழைந்தவுடன் நம்மை வலுக்கட்டாயமாக வரவேற்க சாலையில் திரியும் மாடுகள் காத்திருக்கின்றன. அவைகளுக்கு எல்லா வசதியும் செய்து கொடுக்கும் நகர நிர்வாகம், ஒரு இலவச கழிப்பிட வசதியும் செய்து கொடுத்தால் நலமாயிருக்கும். பல இடங்களில் ஹை ஜம்ப், லாங் ஜம்ப் – எல்லாம் செய்துதான் பிரம்மனை தரிசிக்க செல்ல வேண்டியுள்ளது. சற்றேரக் குறைய ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு ராஜஸ்தானிய கைவினைப் பொருள்களின் கடைகளின் அணிவகுப்பை பார்வையிட்டபடி (மிக கவனமாய் எந்த பொருள்களையும் வாங்காதபடி) சென்றால், பரந்து விரிந்த மானசரோவர் ஏரி நம்மை வரவேற்கிறது.



(மானசரோவர் ஏரியும், பசுத்துறையும்)

நீங்கள் எந்த சாதி என எந்த மொழியில் வேண்டுமானாலும் சொல்லுங்கள், உங்கள் சாதிக்கென ஒரு பிராமணர் உங்கள் முன் உடனே தரிசனம் தருவார். உங்களை ஏரியின் பல துறைகளுக்கு அழைத்துச் செல்வார். இங்குதான் உங்கள் முன்னோர்களுக்கென நீங்கள் வேண்டுதல் செய்ய வேண்டும் என கண்டிப்பாய் கட்டளை இடுவதுடன், நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மக்கிப் போன மாவில் செய்த துர்நாற்றமடிக்கும் குருணை போன்ற வெள்ளை வஸ்துவை பிரசாதம் என்ற பெயரில் ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் நிரப்பி, கூடவே ஒரு தேங்காய், கொஞ்சம் மஞ்சள், குங்குமம் என ஆத்ம சாந்திக்கான அனைத்து பொருள்களையும் குறைந்த விலையில் சிறந்த முறையில் உங்கள் கைகளில் திணித்திருப்பார். ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கும் பேரம், உங்கள் திறமையை பொறுத்து ஏதாவது ஒரு ரூபாயில் வந்து நிற்கும். ஆனால், ஐம்பது ரூபாய்க்கு கீழே இங்கு ஆத்ம சாந்தி கிடைப்பதில்லை.

அதற்குப் பின் உங்களை அழைத்துச் செல்லும் பிராமணர், நீங்கள் எவ்வளவு ரூபாய் கொடுத்தீர்களோ அதற்கு தகுந்தாற்போல் சுலோகங்கள் சொல்லுகிறார். ஐம்பது ரூபாய்க்கு ஓரிரு நிமிடங்களில் முடிந்து விடும் சடங்கு, ஆயிரம் ரூபாய்க்கு அரை மணி நேரம் வரை கூட நீளுகிறது. நீங்கள் எந்த சாதி என உங்களுக்கே தெரியவில்லையென்றால், இருக்கவே இருக்கிறது பசுத்துறை. இதன் படிக்கட்டுகளில் அமர்ந்து அல்லது, உங்களுக்கு தைரியமிருந்தால், இந்த நீரில் முழுகி உங்கள் பாவங்களை போக்கிக் கொள்ளலாம். இந்த சடங்குக்கு இங்கிலாந்தின் ராணியும் விதிவிலக்கல்ல


இதற்குப்பின், பிரம்மனை தரிசிக்க நீங்கள் இன்னமும் விரும்பினால், அங்கு வேண்டுதல்கள் ஏறெடுத்து காவடி தூக்கி வரும் பக்த கோடிகளிடம் இருந்து தப்பித்து, எப்படியாவது கோவில் முகப்பிற்கு சென்று விடுங்கள்.




கோவில் முகப்பிலேயே நம்மை முகம் சுழிக்க வைக்க, அத்தனை வியாபாரிகளும் கடும் தவமிருக்கிறார்கள். கோவிலுக்குள் செருப்பு அணிந்து செல்லக் கூடாது. ஆமாம், நல்ல விஷயம்தான். ஆனால், கோவில் பிரகாரம் நாம் கால் வைக்குமளவு சுத்தமாயிருக்கிறதாவென்றால், அருவருப்புதான் மிஞ்சுகிறது. அத்தனை அசுத்தங்களுக்கு நடுவில்தான் பிரம்மனே வீற்றிருக்கிறார். அப்ப இந்த செருப்பை என்ன பண்ணலாம் என நீங்கள் யோசிக்கும்போதே, எங்க கடையில் விட்டுட்டுப் போங்க சார் என அன்பொழுக ஒரு சேர அழைக்கிறார்கள் பூஜை பொருள் வியாபாரிகள். அங்கு செருப்பை விட்டுவிட்டு நகர்ந்து போனால், நம்மை கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறார்கள். பூஜை பொருள்களை வாங்காமல் எதுக்குடா இங்க செருப்பை விட்ட, பன்னாடை, பரதேசி என இன்னும் அசிங்கமான வார்த்தை பிரயோகங்கள். ஒருவேளை எனக்கு ஹிந்தி தெரியாது என நினைத்தார்களோ தெரியவில்லை. ஒருவழியாய் அவர்களை சமாளித்து, பல படிகளை கடந்து மேலே ஏறிச் சென்றால், ஒரு சிறிய கர்ப்ப கிருகம். அதற்குள் காட்சி தருகிறார் இந்த படைப்பின் பிதா. அவரை காண்பதற்குள் பூசாரிகள் பிடித்து, நம்மை ஒரு தள்ளு தள்ள, அந்த படிக்கட்டுகளில் உருண்டு விழுந்து விடாமல், பத்திரமாக மீண்டும் இறங்கி விடுவது என்பது ஒரு இமாலய சாதனைதான். ஆனால், எல்லாருக்கும் முன்னால் வந்து நின்று கொண்டு ஒரு ஆயிரம் ரூபாய் தாளை மடித்து பூசாரி கையில் வைத்தால், பிரம்மனின் திவ்ய தரிசனம் நிச்சயமாகிறது.

ஆலயத்திற்குள் புகைப்படம் எடுக்கக் கூடாதாம், அதனால் ஏரிக்கரையில் பசுமாட்டின் துணையுடன் சும்மா அமர்ந்திருக்கும் இந்த பிரம்மனை கண்குளிர தரிசித்தோம்.






இது போக புஷ்கர் நகரத்தில் ஒட்டகசந்தை மிக பிரசித்தமாம். நாங்கள் சென்ற பொழுது ஒரு சில ஒட்டகங்களே அசை போட்டவண்ணம் படுத்திருந்தன.





(ஒட்டகங்களின் அருகில் நம் அமெரிக்க நண்பர்)

உணவு உண்ண ஒரு நல்ல ஹோட்டலாவது இருக்காதா என தேடி களைத்து விட்டு மறுபடியும் அஜ்மீர் வந்தே சாப்பிட்டோம்.

முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலோ அல்லது, நீங்கள் எப்பொழுதாவது வாழ்க்கையில் பாவம் செய்து விட்டோமோவென ஒரு சந்தேகம் வந்தாலோ, இந்த மானசரோவர் ஏரிக்கு வந்து ஒரு முறை பூஜை செய்து விட்டு வாருங்கள். உங்களுக்கு அருகிலேயே உங்களுடன் வாழ்ந்து வரும் பல வித உயிர்களின் படைப்பை பற்றிய சந்தேகங்கள் வரும் பொழுதெல்லாம், இங்கு வந்து இந்த பிரம்மனிடம் “ஏண்டாப்பா, நான் என்ன பாவம் பண்ணினேன், என்னை மாத்திரம் இந்த ஜென்மங்களுக்கு நடுவுல படைச்சுட்டயே” என முறையிட்டுச் செல்லுங்கள்.