Wednesday, February 24, 2010

திரௌபதி சேலைய யார் இஸ்தா உனக்கு இன்னா??

நம்ம தம்ஸ் அப் தங்கம் ஒரு மீட்டிங் போட்டுனுக்கறாரு, இந்த தம்ஸ் அப் தங்கம் யாருன்னு கேக்கறியா, அப்டி கேளு, இன்னாத்துக்கு சொல்றேண்ணா, ஒரு தலீவரு அப்டீன்னு ஃபார்ம் ஆயிட்டாக்கா, நாளைக்கு வரலாறு எழுத சொல்ல மேட்டரே இல்லண்ணா எப்டி, அதான், கரீக்டா நோட் பண்ணிக்க,

நம்ம தங்கம் அண்ணன் பேரு தங்க ராசு, அண்ணன் ஒரு போர்ல வார் பண்ண சொல்ல, இடது கை பெரு விரலை ஒரு கபோதி கட் பண்ணி வுட்டுட்டான், ஆனா அண்ணன் அவன் தலை முடி முழுசையும் வாயாலயே கடிச்சு துப்பிட்டாருங்கறது தனி கதை. என்னிக்கு அண்ணனுக்கு பெருவிரல் போயிருச்சோ, அன்னீலெருந்து அண்ணன் பேரு தம்ஸ் அப் தங்கம். இப்ப வரலாறு புரிஞ்சுடுச்சா, கம்னு சைலண்டா மீட்டிங்க்கு வா.

தலீவரு மீட்டிங்ல ஒரு சோபாவுல இருக்க சொல்ல, லெப்டுல நம்ம பக்கெட் பாரதி, பலூன் பரமசிவம், கண்மை கரீம், பந்தல் பாபு, ஸ்டெம்ப் சிந்தாமணி, ஸ்பேனர் மகேஷ் அல்லாரும் குந்தினுக்கறாங்க, ரைட் சைட்ல நம்ம ஆத்துக்கடை அலமேலு, மல்லீப்பூ மரகதம், வண்டிக்கார சின்னான், கர்சீப் கதிர்வேலு, பைப் சேகர், பினாயில் பீட்டரு, சைலண்ட் சங்கரு, அண்டர்கட் ஆறுமுகம்னு அல்லாரும் குந்தினு இருக்க சொல்ல அவசரமா ஓடி வந்து மூச்சு வாங்க நின்னான் நம்ம காத்தாடி கந்தன். “இன்னா தல, அவசரமா மீட்டிங்னு சொன்னியே, எதுனா மேட்டர் பிகுருசலா ஆயிடுச்சா தல? யாருன்னு மாத்திரம் சொல்லு, முடிச்சுட்டு வந்து அப்புறம் பேசறேன்” னு வீரவுரை நிகழ்த்த, அவனை தன் கையசைவிலேயே அமரச் சொன்னார் தம்ஸ் அப். அவனும் ஜோதியில் ஐக்கியமாகிவிட, நீண்ட யோசனையில் இருக்கும் தம்ஸ் அப்பை பார்த்து எல்லோரும் பிரச்சனை ஒரு பெரிய லெவல்ல இருக்கும் போலன்னு ரோசனையில இருக்க, தம்ஸ் அப்பின் தொண்டை செருமல் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது.

“நான் இன்னாத்துக்கு அல்லாரையும் வர சொன்னேன்னா, இப்பல்லாம் நம்ப தொழில்ல ஒரு மஜாவே இல்லாம போயினுக்குது, வாரத்துக்கு ஒரு தபா எதாவது கேசு, கீசுன்னு போட்டு போலீஸ் உள்ள தள்றானுவ, அவனுங்க போதைக்கு நம்பள ஊறுகாய் ஆக்கறானுவ, இத்து ஒரு சைடுலன்னா, இந்த பப்ளிக் பண்ற அட்டூழியம் தாங்க முடியாம போயின்னுக்குது, A T M னு ஒரு மிசின் வெச்சுகினு, எத்தினி துட்டு வோணுமோ அத்தினி மாத்திரம் எட்த்துகுனு போய்னுக்கறாங்கோ, வூட்ல பணமே வைக்கலைன்னா நம்மாளுங்கெல்லாம் வேற இன்னா தொழில் செய்யறது, எத்தினி நாளைக்குத்தான் பார்க்கிங்ல இருந்து பைக் கண்ணாடி, ஸ்கூட்டர் கண்ணாடின்னு உஷார் பண்ணி சோறு துன்றது, அதனால நான் ஒரு முடிவு பண்ணீட்டேன்”.

இந்த முடிவைக் குறித்த ஆவல் தன் சகாக்களிடம் அதிகம் உருவாக வேண்டும் என்ற உள்நோக்கமோ என்னவோ, தம்ஸ் அப் பலூன் பரமசிவத்தை ஒரு பார்வை பார்க்க, அவனும் தயாராயிருந்த சோடாவை திறந்து கொடுக்கிறான், சோடாவை ஒரு மிடறு குடித்த தம்ஸ் அப், மறுபடியும் ஒரு முறை தொண்டையை கனைத்தார். கூட்டத்திலிருந்த சலசலப்பு அடங்கவும் எல்லோரையும் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் முடிவை திட்ட வட்டமாக சொன்னார்.

“நாம அல்லாரும் சாமியார் ஆயிர்லாம்னு முடிவு பண்ணீட்டேன்”

இன்னாது என கோரஸாக எல்லோரிடமிருந்தும் ஒரு ஆச்சரியக் குரல் வர, அதை வெகுவாக எதிர்பார்த்திருந்த ஸ்வாமி தம்ஸ் அப் தங்கமானந்தா ஒரு புன்னைகையுடன் அதற்கு பதிலளித்தார்.

“இன்னான்னு கேக்கறவன் பாலு குடிக்கற கொயந்த, எப்டீன்னு கேக்கறவந்தான் வளரத்துடிக்கும் சீடன்” என்று தன் முதல் தத்துவத்தை உதிர்த்தார்.

எல்லோரும் ஆச்சரியமும் குழப்பமுமாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருந்த வேளையில் தன் முகத்தில் ஒரு தெய்வீக தேஜஸை வரவழைத்துக் கொண்ட சுவாமி தம்ஸ் அப் தங்கமானந்தா எல்லோரையும் பார்த்து வலது கையை உயர்த்தி அமைதி என்பது போல சைகை செய்தார். சலசலப்பு அடங்கியவுடன் ஒரு புன்னைகையையும் நெற்றிச் சுருக்கங்களையும் வலிய வரவழைத்துக் கொண்ட சுவாமி, “நான் இன்னாத்துக்கு நம்ப லைனை மாத்திக்கலாம்னு சொல்றேண்ணா, நம்ப தொழில்லயும் சரி, சாமியார் தொழில்லயும் சரி, கடைசீல லாபம் இன்னாவோ ஒண்ணுதான். ஆனா இதுல இன்னான்னா ஒரு பாலீஸா துட்டு பார்க்க முடியும், போலீஸ் பேஜாரு இல்ல, இன்கம்டேக்ஸ் ரிஸ்க் எதுமே கடியாது. பப்ளிக் அவுனுங்களா வந்து துட்டு குடுத்துட்டு கும்புட்டுட்டு போவானுங்க, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆயிகினே போனா, சீக்கிரமா பாலிடிக்ஸ்ல என்டிரி குடுக்கலாம். ஆனா, நாம இப்ப இருக்கறாப்ல இப்படியே இதே தொழில்ல இருந்தாக்கா, போலீஸ்கிட்ட பேர் வாங்கி, அப்பாலிக்கா கட்சியில பேர் வாங்கி எம். எல். ஏ ஆகாங்காட்டியும் வயசு முடிஞ்சு போகும். இந்த லைன்ல அந்த பேஜார் அல்லாம் கடியாது, துட்டுக்கு துட்டும் ஆச்சு, மரியாதைக்கு மரியாதையும் ஆச்சு, இன்னா நான் சொல்றது? என்று கேட்கவும் கூட்டத்திலிருந்தவர்கள் ஏதோ புரிந்தது போலவும், ஆனால் முழுமையாய் புரியாததை வெளிக் காட்டிக் கொள்ள விரும்பாமல் ஒரு குன்சாக தலையை ஆட்டி வைத்தனர்.

அடுத்ததாக சுவாமிகளின் கட்டளை மின்னல் வேகத்தில் பறந்தது, பந்தல் பாபு பந்தல் போட்டான். சைலண்ட் சங்கர் மைக்செட் கட்ட, அண்டர்கட் ஆறுமுகமும், பக்கெட் பாரதியும் போஸ்டர் அடித்து ஒட்டி மாநகரத்தையே களேபரப் படுத்தி விட்டார்கள். ஆத்துக்கடை அலமேலு, மல்லீப்பூ மரகதம் இருவரும் பான் பராக் போடுவதை ஒரு வாரமாக நிறுத்தி விட்டு, பியூட்டி பார்லர் போய் ஒரு எக்ஸ்ட்ரா மேக்கப்புடன் வந்து பந்தலில் தங்களது சக பரிவாரங்களுடன் வளைய வந்தார்கள். ஒரு வார விளம்பரத்துக்குப் பின் அந்த ஆன்மீக சொற்பொழிவு நாளும் வந்தது. வரிசையாக பிளாஸ்டிக் சேர்கள் இடப்பட்டு, சிஷ்ய கேடிகளான அனைவரும் திரு நீறும் சந்தனமும் பூசி, பக்த கோடிகளாக நிற்க, சொற்பொழிவின் ஒத்திகை நடந்தது.

"டாய், மைக் கரீக்டா இக்குதா, யார்ராது மைக்காரன், இட்னு வாங்கடா அவன, இதா பாருப்பா, நான் வாழ்க்கையில மொத வாட்டி மைக்ல பேசப் போறேன், அதும் ஆன்மீகம் பேசப் போறேன், இடையில எங்கனா உன் மைக்கு கீ, கூன்னுச்சு, அப்புறம் மவனே உம் மூஞ்சி லவுட் ஸ்பீக்கர் ஆயிரும் பாத்துக்க,


அப்புறம், டேய் பைப் சேகர், அந்த ஸ்கிரீன் கரீக்டா தொறந்து மூடுதா, நான் ஷ்டார்ட் பண்ணும்போது கரீக்டா தொறக்கணும், தெர்தா, இன்னா தெர்தா. ம்…….அப்புறம்"

"டேய் கரீம், மொத தபா பேசப் போறேன் நான், எதுனா பிரச்சனை ஆச்சுன்னா அதுக்கு இன்னா பண்ணப் போற?"



"அண்ணே, நீ பேஜார் ஆவாதண்ணே, நீ பாட்டுக்கு பேசிண்ணே இருண்ணே, நம்ம பசங்களை அல்லா எடத்துலயும் நிறுத்தீருக்கேன் அவுங்க பாத்துப்பாங்கண்ணே."

"டேய் பீட்டரு, சின்னான், நீங்க ரெண்டு பேரும் கையில ஒரு டார்ச் லைட் வெச்சுக்கோங்க, கூட்டத்துல இருந்து யாராவது கேள்வி கேட்டா அவுங்க முகத்துல டார்ச் அடிக்கணும் தெர்தா,"

"டேய் சிந்தாமணி, உண்டியல் எத்தினி வெச்சிருக்க, மவனே உண்டியல்ல எவனா துட்டு போடாம போனா, அவன் செவுளு பிகுலு ஊதணும் தெர்தா"

"ரைட் ஆளுங்க எல்லாம் வர்ற டைம் ஆயிருச்சு, எல்லாம் கரீக்டா அவுங்க அவுங்க எடத்துல நில்லுங்க, ஏ மரகதம், அலமேலு, லேடீஸ் சைடுல அல்லாம் கரீக்டா இக்குதா, ஒரு பிரச்சனையும் வரக் கூடாது இன்னா….. "

மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்து, சேர்கள் எல்லாம் நிரம்பி விட்டது. உடனே பந்தல் பாபு ஓடி வந்து "அண்ணே அல்லாம் கரீக்டா போயினிக்குதண்ணே, இப்ப ஷ்டார்ட் பண்ணுங்கண்ணே" என்றதும் நம் தம்ஸ் அப் சுவாமிகள் வந்து மேடையில் விரிக்கப் பட்டிருந்த மெத்தையில் அமர்ந்து விட்டு மைக்கை மூன்று தரம் தட்டி சரி பார்த்துக் கொண்டார்.

இடது பக்கத்தில் திரைக்கு பின்புறம் நின்ற பைப் சேகரைப் பார்த்து சுவாமிகள் கண் சாடை காட்ட, பைப் சேகரும் திரை கட்டியிருந்த கயிற்றைப் பிடித்து இழுக்க திரை மெதுவே விலகி சுவாமிகளின் மீது ஒரு ஒளி வட்டம் வரும்படி லைட் ஃபோகஸ் செய்யப் பட்டது. அதே சமயத்தில் பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்த விளக்குகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அணைக்கப் பட்டன.

சுவாமி தனது பக்திப் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

“எல்லாருக்கும் வணக்கம், நதியெல்லாம் ஓடி கடல்ல கலக்கறது கணக்கா, பூவெல்லாம் பூத்து ஒரு தோட்டத்துல மணக்கறது கணக்கா நீங்க எல்லாரும் இப்ப எங்கெங்கெயோ இருந்து வந்து இந்த ஒரு பந்தல்ல குந்தினுக்கறீங்கோ, மனுஷன் பாக்கற பார்வைல தான் வித்தியாசம் இக்குது, அது இன்னான்னா, இப்படித்தான் சீதா காட்டுக்குள்ளாற குட்சைல குந்தினுக்கறப்போ, ஒரு ஆட்டுக்குட்டி அப்டிக்கா வந்துக்குது, அத்த பாத்த சீதாம்மா, அத்து என்க்கு வேணுன்னு சொல்ல, ராம்ர் தம்பி லட்சுமணரு அத புட்சுணு வர போகங்காட்டியும், சைக்கிள் கேப்புல அங்க வந்த நராகாசுரன் இன்னா பண்ணான்னா, சீதாம்மாவை லவுட்டிகினு போயே போய்ட்டான்.”

இப்பொழுது பார்வையாளர் பகுதியிலிருந்து ஒருவர் எழுந்து,

“சாமி, நீங்க சொல்றது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு, அது ஆட்டுக்குட்டியல்ல மான்குட்டி, அப்புறம் சீதாவை அபகரிச்சது நரகாசுரன் அல்ல, இலங்கையின் மன்னன் ராவணன்……”

“யார்ராது, டேய் பீட்டரு, லைட் அடி,” என்றதும் பீட்டர் அவர் முகத்தில் லைட் அடிக்க, சுவாமிகள் அவரைப் பார்த்து, “நீயாப்பா அத்து, இன்னா வோணும் உன்க்கு, டேய், அவுர சைட்ல இட்னு போயி இன்னா வேணுன்னு கேட்டு குடுங்கடா,” மனதுக்குள் “(ங்கொய்யால நம்ம லைன மாத்திகினு வேற பிசினஸ் பண்லாம்னா வுடமாட்டானுங்க போலக்குதே)”

இப்பொழுது சுவாமிகள் மறுபடியும் கூட்டத்தைப் பார்த்து புன்னகை வழியும் முகத்துடன், “தடங்கலுக்கு வருந்துகிறோம், அத்து இன்னாண்ணா, மனுஷ வாழ்க்கைங்கறதே நிறைய வேஷம் நிறைஞ்சதா இக்குது. மனுஷன் திடீர் திடீர்னு வேஷம் கட்டறான், வேஷம் மாத்தறான், இப்ப நம்ம திரௌபதி அம்மாவ பார்த்தாக்கா, அவுங்க வாழ்க்கைல எத்தினி கஷ்டம், எத்தினி துன்பம், ஆனா அல்லாத்துக்கும் அவுங்க கிட்ட ஒரே பதில்தான் இருந்துச்சு, பொறுமை, இந்த பொறுமையாலதான் எல்லாத்தையும் சாதிச்சாங்க, ஒரு காட்டுப்பய வந்து அவுங்க சீலைய அவுத்து அவமானப் படுத்தறேன்னு வந்தான். அவன் பேரு சங்கமித்திரன், அவன் சேலைய உருவுரான் உருவுரான் அத்து மைல்கணக்கா வந்துகுனே இக்குது, திரௌபதி அம்மா சிரிச்சுகுனே இக்குறாங்க, அவுனும் உருவி உருவி பேஜாரகிப் போய் இது இன்னாடா மேட்டர்னு திரும்பி ஒரு லுக் வுட்டப்போ, அங்க கையில சுதர்ஸன சக்கரத்தை வெச்சுகுனு விநாயகர் சிரிச்சுகினே நின்னாரு, இன்னா கணபதி நீதானா அத்துன்னு அவன் கேக்க சொல்லோ ............”

இதற்குள் கூட்டத்திலிருந்து இன்னொருவர் எழுந்து, “சுவாமி, எங்கியோ தப்பு நடக்குது, திரௌபதியோட சேலையை அவுத்தது சங்கமித்திரன் இல்ல, அது துச்சாதனன், அப்புறம் அவுங்கள காப்பாத்தனது விநாயகர் இல்ல, கிருஷ்ண பரமாத்மா”

“இத்து யார்றா, புச்சாக்குது, டேய் பீட்டர் லைட் அடிடா”

லைட் கொஞ்சம் விலகி அடிக்க, சுவாமிகள் ஒருவரை பார்த்து "யாருப்பா அது, சந்தேகம் கேட்டது, நீயா ?" என ஒருவரை கேட்க, அவர் கோணலான வாயுடன், “நான் இல்ல ஷாமி, இந்தா இவுருதான் ஷாமி, நான் மொதல்லயே டவுட் கேட்டு எல்லாம் கிளியர் ஆயிருச்சு ஷாமி, இப்ப இவருக்கு பதில் சொல்லுங்க”

"டேய், பீட்டரு, அந்தாள மேடைக்கு இட்டுணு வா,"
என்றார் சுவாமிகள். அவரை மேடைக்கு தள்ளிக் கொண்டு வந்ததும், திரையை மூடச்சொல்லி மைக்கையும் ஆஃப் பண்ணிய சுவாமிஜியையும் அவரது சீடர்களையும் பார்த்து அவருக்கு ஏதோ ஒன்று புரிய, அவர் கையெடுத்து கும்பிட்டு, “சாமி, தெரியாம கேட்டுட்டேன் சாமி, என்னை விட்டுடுங்கோ” என அழுக, சுவாமிஜி அவரைப் பார்த்து,

“ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லு நான் உன்னை விட்டுடறேன்”,

“சுவாமி, கேளுங்கோ, நான் பதில் சொல்லிடறேன், ஆனா என்ன ஒண்ணும் பண்ணாதீங்கோ,”

“சரி இப்ப இதுக்கு பதில் சொல், சங்கமித்தரனோ இல்ல துச்சாதனனோ, திரௌபதி சேலைய யார் இஸ்த்தா உனக்கு இன்னா பிரச்சனை, இதுக்கு மாத்திரம் பதில் சொல்,”

இப்படி அரை மணி நேரமாக அந்த மனிதர் சிஷ்ய கோடிகளால் கவனிக்கப்பட, வெறுத்துப் போன பக்தர்கள் கூட்டம் திரையை திறந்து வந்து பார்த்தால் மேடையில் ஒருவரும் இல்லை. அப்பொழுது தான் ஒரு கேஸ் புக் பண்ண அந்த பக்கமாக வந்த போலீஸ் காரர்கள், தம்ஸ் அப் மற்றும் அவர் சகாக்கள் அனைவரையும் அள்ளி ஜீப்பில் போட்டுக்கொண்டு போனதும், தம்ஸ் அப் தங்கத்தின் சாமியார் கனவு அத்தோடு சமாதியானதும் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?



பின் குறிப்பு : தம்ஸ் அப் தங்கம் அடுத்த வாரமும் வேறொரு அவதாரத்தில் தொடருவார்.

Friday, February 19, 2010

வாங்க பாஸ், எதாவது செய்யலாம்

தமிழ்

இது மனிதனின் குரல்வளையிலிருந்து புறப்பட்டு, நாவால் நயப்பட்டு, உதடு கிழித்து வெளிக்கிளம்பும் ஓசையின் மறு உருவம் மட்டும் தானா,

ஒலிகளின் ஏற்றத்தாழ்வுகளால் உருவெடுத்து, ஒருவரிலிருந்து பலருக்குள் ஊடுருவும் காற்றின் மறு வடிவமா,

ஓசையெனும் உருவிலிருந்து எழுத்து என்னும் வடிவத்திற்கு வளர்ச்சியடைந்த பரிமாண விந்தையா,

எழுத்தெனும் மலர்கள் ஒரு சேரக் கட்டப்பட்டு வார்த்தைக் கதம்பமாகி வண்ணக் காட்சி தரும் வித்தக சரமா,

ஏ யப்பா, எப்புடியெல்லாம் பில்டப் குடுக்க வேண்டியிருக்கு, நான் சொல்ல வந்தது இதுதான். போன வருஷம் செப்டெம்பர் மாதம் நம்ம இணைய தளபதி (நல்லா பார்த்துக்குங்க, இ ணை ய தளபதின்னு சரியா எழுதியிருக்கேன்) கார்க்கி உலகத்தமிழ் மாநாட்டில் பதிவர்களாகிய நாம் என்ன செய்யலாம்னு ஒரு பதிவு போட்டாரு, (http://www.karkibava.com/2009/09/blog-post_28.html). இதற்கு நாமெல்லாருமே ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தோம்.

இப்பொழுது மாநாடு மே மாதம் நடக்க விருக்கும் நிலையில், திட்டங்கள் இப்பொழுதிருந்தே தீட்டுவது நலமாயிருக்கும் என நினைக்கிறேன்.

வாங்க பாஸ், எதாவது செய்யலாம்.

Tuesday, February 16, 2010

எங்க அப்பா ஒரு காமெடி பீஸூ

காதலர் தினத்தன்று, மாலைப் பொழுதின் மயக்கத்திலே வண்டியை உருட்டிக் கொண்டு கே.கே. நகரின் அந்த சரித்திர பிரசித்தி பெற்ற அரங்கத்துக்கு சரியான நேரத்துக்கு சென்றேன். வண்டியிலிருந்து இறங்கும் பொழுதே எதிரே தரிசனம் தந்தார் நம் கார்க்கி. பச்சை தேநீர் சட்டை அணிந்து காதலர் தின நினைவுகளோடு தனக்குத்தானே பேசிக் கொண்டு நடந்து கொண்டிருந்தவருக்கு நிர்மலா பெரியசாமியைப் போல் ஒரு வணக்கம் சொன்னேன். திடுக்கிட்டு சுதாரித்தவர், புன்முறுவலோடு வணக்கம் சொன்னார். பரஸ்பர விசாரிப்புகளுடன் விழா அரங்கை அடைந்தோம். அரங்கத்தில் நாங்கள் தான் இரண்டாவதாக வந்தோமோ என நினைத்தால் அட ஆமாம். முதலில் வந்தது கேபிள் மற்றும் பரிசல் மற்றும் உறவும், சுற்றமும், நட்பும்.

நேரம் ஆக ஆக பதிவர்கள் ஒருவர்பின் ஒருவராக வர அரங்கம் நிறைந்ததோடல்லாமல், பதிவர்களின் அன்பினால் ஒவ்வொருவர் மனமும் நிறைந்தது. முக்கிய விருந்தினர்கள் வர தாமதமானதை மிக சாமார்த்தியமாக சமாளிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேகா (கலக்கல் பார்ட்டிப்பா இவுரு) ஒவ்வொருவரின் அறிமுகப் படலத்தை ஆரம்பித்து வைத்தார்.

முதலில் பிரமிட் நடராஜன் வர, பின்னாலேயே மற்ற எல்லா நாட்டாமைகளும் வந்து விட, தொகுப்பாளர் நிகழ்ச்சியின் ஆரம்பத்திற்கு அடையாளமாக தமிழ்தாய் வாழ்த்து பாடவைத்தார். ஏன் எல்லோரும் இப்படி மெதுவாக உதட்டுக்கு நடுவில் பாடுகிறார்களே என்று பார்த்தால், பாதிப் பேர் முதல் சில வரிகளுக்கு மேல் வெறும் உதட்டை மாத்திரம் அசைத்தனர். வாழ்த்துதுமே, வாழ்த்துதுமேவுக்கு பிறகு நிகழ்ச்சி ஆரம்பமானது. முதலில் வரவேற்புரை, பொன்னாடை போர்த்துதல், புத்தக வெளியீடு, நாட்டாமைகளின் வாழ்த்துரைகள், எழுத்தாளர்களின் ஏற்புரைகள், பதிவர்கள் வாழ்த்துரைகள் என நிகழ்ச்சியில் சுவராஸ்யத்திற்கு பஞ்சமில்லாதிருந்தாலும் ஒரு சில விஷயங்கள் மனதை நெருடவே செய்தன.

ஒரு நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக நீங்கள் அழைக்கப் பட்டால், அங்கு ஏதோ அழைத்தார்கள் போனோம் என கடமைக்காக செல்வதை விட்டுவிட்டு, எதற்காக அழைத்தார்களோ அதற்கு முற்றிலும் ஆயத்தமாக செல்வதே, அந்த அழைப்புக்கு நீங்கள் செய்யும் மரியாதையாகும். புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப் பட்டிருக்கிறீர்கள், உங்கள் பொற்கரங்களால் ஒரு படைப்பாளியின் படைப்பு முதல் முதலாக இந்த உலகை காணப் போகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டியது அந்த முக்கிய மனிதரின் தலையாய கடமை. அதை விட்டுவிட்டு எனக்கு நேரமில்லை, அதனால் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று படிக்க முடியவில்லை என சப்பை கட்டு கட்டுவது எந்த நாகரீகத்தில் சேர்த்தி என தெரியவில்லை. ஒருவேளை இவர்கள் கைகளால் வெளியிடும் புத்தகத்தில் இவர்களுக்கு சற்றும் உடன்பாடில்லாத கருத்துக்கள் இருக்குமானால், அதற்கு இவர்கள் பொறுப்பேற்பார்களா??

பிரமிட் நடராஜன் தன் பங்குக்கு கேபிளின் கதைகளை சிலாகித்து பேசிவிட்டார். “கேபிள் சங்கரின் கதைகளை படித்தால், ஒரு 55 வயது மனிதரின் முதிர்ச்சி தெரிகிறது” என்று சொல்லி, அவரை நிரந்தர யூத் ஆக்கி விட்டார். அவர் ஒன்றோ அல்லது இரண்டு கதைகளையாவது படித்திருப்பார் போல் தோன்றுகிறது. ஆனால் அஜயன் பாலா, ம்ஹூம் ……. சாரி பாஸ். நீங்கள் அரங்கத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் அமர்ந்திருந்தீர்கள். இந்த சமயத்திலாவது நீங்கள் வெளியிட்ட பரிசலின் புத்தகத்தை சில பக்கங்கள் புரட்டி படித்திருக்கலாம்.

இங்கு பிழை எங்கு நடந்தது என தெரியவில்லை. பதிப்பகத்தார்தான் புத்தகத்தை விருந்தினரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா, அல்லது படைப்பாளியா என தெரியவில்லை.

கார்க்கியின் வாழ்த்துரை பதிவர்களுக்கு ஒரு உற்சாக டானிக். எப்பொழுது வேண்டுமானாலும் எழுதுங்கள், எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள், ஆனால் எழுதுங்கள் என்றார்.

அனைவரும் கேபிளிடமும், பரிசலிடமும் கையழுத்து பெறுவதில் மிக ஆர்வம் காட்டினோம். கூட்டம் முடிந்து வழக்கம் போல பதிவர்கள் குழுக்குழுவாக கே.கே நகர் முனுசாமி சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அண்ணன் அப்துல்லா, நர்சிம், சுந்தர்ஜி, பைத்தியக்காரன், ஆதி, அடியேன் எல்லோரும் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென ஒரு மாநகர காவல் கார் ஒன்று வந்தது. சில விநாடிகள் அங்கு கும்பலாய் நின்றிருக்கும் அனைவரையும் பார்த்தார் அந்த கடமை தவறா காவலர். பதிவர்கள் பலர் கையில் சிகரெட் வேறு புகைந்து கொண்டிருக்கிறது. சரி, பொது இடத்தில் சிகரெட்டா என தீட்டப் போகிறார் என நினைத்தேன். ஆனால் அந்த கடமை வீரரை யாருமே ஒரு பொருட்டாகவே எண்ணாமல் அவரவர் அரட்டையில் மூழ்கியிருக்க, காவலர் பொறுமை இழந்து விட்டார். “சார், யார் நீங்க, இப்படி கும்பலா எதுக்கு நிக்கறீங்க” என கேட்டவுடன், அப்துல்லா அண்ணன் “அய்யா, நாங்கெல்லாம் இலக்கியவியாதீங்க, இலக்கிய கூட்டம் முடிஞ்சுட்டு நிக்கறோம்” என்று சொன்னவுடன், காவலருக்கு முகம் சுருங்கிப் போய் விட்டது. இங்க எதாவது துட்டு தேத்தலாம்னு பார்த்தா, முதல்லயே இவனுங்க பெரிய வியாதிங்கறானுங்களே, போலாம் ரைட் என சென்று விட்டார்.

விழாவின் ஹைலைட் கேபிள் அண்ணனை அவரது மகன் அறிமுகம் செய்து வைத்ததுதான்.

“எங்கப்பா ஒரு காமெடி பீஸூ”

Monday, February 8, 2010

பெண்ணியம் பேசுவோம் வாருங்கள்

முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்த எதிர்ப்புக் குரல்கள், இன்று நாடெங்கும் ஒலிக்கும் அபய குரல்களாக மாறி விட்டிருக்கிறது. குடும்பம் என்ற கட்டுக் கோப்பான அமைப்பை சிதைத்து, வெறியாட்டம் ஆட ஒரு வலிமையான ஆயுதமாக பெண்ணுரிமைச் சட்டங்கள் மாறி வருகின்றன. இந்த சட்டத்தை எவ்வளவுக்கெவ்வளவு ஈனத்தனமாக பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு தூரத்தையும் இந்த பெண்ணிய வாதிகள் கடந்து விட்டார்களோ என வருந்த வேண்டியிருக்கிறது. இதுவரை இந்த வரதட்சிணை சட்ட கொடுமைகளையும் அதன் தவறான பயன்பாட்டையும் பதிவுகளில் படித்து, இந்த சட்டத்துக் கெதிராக எழும் இத்தைகைய குரல்கள், பிரச்சனையை கொஞ்சம் மிகைப் படுத்தித்தான் பிரதிபலிக்கிறதோ என எண்ணியதுண்டு. ஆனால், இது எல்லாவற்றையும் மீறி நாக்பூரிலே இந்த சட்டத்தின் தவறான பயன்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு மாரத்தான் ஓட்டமே நடத்த வேண்டிய அவலத்துக்கு இந்த பிரச்சனை வீரியம் கொண்டு எழுந்திருக்கிறதென்றால், நெருப்பு நம்மை தீண்டும் தூரத்தில் தான் உள்ளது என தெரிகிறது.

இந்த கேவலத்துக்கு துணை போக வழக்கறிஞர்களும், காவல் துறையும் கைகட்டி நிற்பது இன்னும் வேதனையளிக்கிறது. பிரசாந்த் – கிரகலட்சுமி பிரச்சனையில் வெளியான தீர்ப்பிலிருந்தும், இந்த சட்டத்தை எப்படியெல்லாம் வளைக்க முடியும் என பார்க்க முடிகிறது. எல்லாவற்றையும் விட ஒருபடி மேலே போய் பிறந்து சில மாதங்களே ஆன கைக்குழந்தைகள் மீது கூட இந்த வரதட்சணை சட்டத்தை பாய்ச்ச எப்படித்தான் கல்நெஞ்சக்காரர்களுக்கு மனது வருகிறதோ தெரியவில்லை. குழந்தைகள், வாழக்கையில் ஒரு முறை மட்டுமே சந்தித்த கணவனின் நண்பனின் தாயார் இப்படி சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் இதில் இழுத்து விட முடியுமென்றால், இது ஒரு மனநிலை பிறழ்ந்த ஒரு சாரரின் பழிவாங்கும் வக்கிர வெறிக்கு அடிகோலும் சட்டமில்லாமல் வேறென்ன?

இன்றுசுந்தர்ஜியின் "எனது நேர்காணல்" பேட்டியை வாசித்துக் கொண்டிருந்தேன். பேட்டியிலுள்ள ஒரு கேள்வியும் அதற்கான அவரது பதிலும் இதை மெய்பிப்பது போல்தான் உள்ளது. அதிகாரம் கையில் கிடைத்தால் இந்தப் பெண்கள் அதை ஆக்கபூர்வமாக பயன்படுத்தியிருக்கிறார்களா என்றால், ஒற்றை இலக்க சதவீதத்திலேயே அதை கணிக்க முடியும். ஒருமுறை விஜய் டிவியில் கூட நீயா, நானாவில், வரதட்சணை கொடுமையால் பாதிக்கப் பட்டவர்களையும், இந்த கொடிய சட்டத்தால் பாதிக்கப் பட்டவர்களையும் பேச வைத்து இந்த சட்டத்தின் அவசியத்தையும், அதே சமயத்தில் இந்த சட்டத்தின் தவறான பயன்பாட்டையும் வெளிக்கொணர கோபிநாத் முயற்சித்தார்.

எது எப்படியோ, வரதட்சிணை என்பது ஒரு சமூக அவலம், ஆனால் அதை தடுக்க வந்த சட்டத்தை வைத்து கைக்குழந்தை முதற்கொண்டு அப்பாவிகள் பழிவாங்கப் படுவது என்பது ஒரு சமூக கேவலம்.

ஆவதும் பெண்ணாலே, மனிதன் அழிவதும் பெண்ணாலே என்பது இதுதானோ??