Thursday, December 23, 2010

நிறங்கள் - ஏன் இப்படி????


நாம் பேசும் பொழுது எதாவது ஒரு விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வர்ணிப்பதற்கு பதிலாக, ஒரே வார்த்தையில் அதை புரிய வைக்க ஒரு நிறத்தை குறிப்பிடுகிறோம். இப்படி நிறங்களின் குறியீடு ஏன் வந்தது???

1. ஒரு குழுவாய் செயல்படும் மனிதர்கள் மத்தியில் நல்லவன் போல் நடித்து, ஆனால், குழுவுக்கு எதிராய் செயல்படுபவனை ”கறுப்பு ஆடு” என்கிறோமே, இதில் ஏன் கறுப்பு நிறம் சொல்லப் படுகிறது????

2. ஆபாசமாக எழுதி, வக்கிரங்களினால் வாசகர்களை கவர்ந்து தன் விற்பனையை பெருக்கிக் கொள்ளும் பத்திரிகைக்கு ”மஞ்சள் பத்திரிக்கை” என்ற பெயர் எப்படி வந்தது??? இந்த மஞ்சளுக்கும் ஆபாசத்துக்கும் என்ன சம்பந்தம்???

3. ஆண் பெண் உடல் உறவுக் காட்சிகளை படமெடுத்து, அவற்றை காட்சிப் பொருளாக்கி விற்பனை செய்யும் படங்களை “நீலப் படம்” என்கிறோமே, நீலமும் காமமும் எப்படி இணைந்தன???

4. ஒருவரை திட்டும் பொழுது அதீத கோபத்தால் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அந்தரங்க அல்லது ரகசிய விஷயங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதற்காக அப்புறம் நான் உன்னைப் பத்தின மேட்டரெல்லாம் “பச்சை பச்சையா” சொல்லீருவேன் என மிரட்டுகிறோமே, பச்சைக்கும் ரகசியத்துக்கும் என்ன சம்பந்தம்???

5. ஒருவர் கையும் களவுமாக பிடிக்கப் பட்டார் என சொல்வதற்கு ஆங்கிலத்தில் “Caught by RED HAND” என்று சொல்கிறோமே, இந்த சிவப்பு நிறமும், களவும் எந்த கோணத்தில் இணைகிறது???

6. அவுருக்கென்னப்பா ”வெள்ளைக் காலர் வேலை” என அலுவலகங்களில் வேலை செய்யும் ஆபீசர்களைக் கூறுகிறோமே, வெள்ளை நிறமென்ன அவ்வளவு உசத்தியா???

7. ஒருவரை ஒரு நிறுவனம் பணியிலிருந்து நீக்கி, பணி நீக்க உத்தரவை வழங்குகிறதென்றால், ஏன் அதை “Pink Slip” என சொல்லுகிறோம். பின்க் நிறத்திற்கும் பணி நீக்கத்திற்கும் இன்னா கனிக்‌ஷன்???

தெரிந்தவர்கள் நிற வாரியாக பதில் சொல்லுங்கள்.

Wednesday, December 22, 2010

காக்கிச் சட்டையில் கண்ணியம்


சென்ற ஞாயிற்றுக் கிழமை, காலை அவசர அவசரமாக சர்ச்சுக்கு கிளம்பும் நேரம், வாசலில் இருக்கும் கிரில் கேட்டில் ஒரு காக்கிச் சட்டை, “ சார், கதவைத் திறங்க” என்ற கம்பீரக் குரலில் ஒரு அதட்டல் வேறு. அய்யய்யோ, இந்த ஏழை அடியேன் என்ன பாவம் செய்தேன், சத்தியமாக ஒசாமா பின் லேடனுக்கும் எனக்கும் எந்த சங்காத்தமும் கிடையாது. நான் என்றுமே வருமான வரி ஏய்ப்பு செய்ததில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பினாமி பெயரிலென்ன, சொந்த பெயரிலேயே சொத்து வாங்கும் யோக்கிதையும் கிடையாது, மீறிப் போனால் நேற்று கத்திப்பாரா ஜங்ஷனில் கையை காண்பித்த போலீஸ்காரரை, சரியாகப் பார்க்காமல், கடைசி நிமிட்த்தில் சடன் பிரேக் அடித்ததற்கெல்லாம் வீடு புகுந்து கைது செய்வார்களா என குழம்பியபடியே சென்று கதவைத் திறந்தேன்.

ஒல்லியும் அல்ல, குண்டும் அல்ல அப்படி ஒரு தேகம், ஏறக் குறைய ஆறடி உயரம், கருப்பும் சிவப்பும் கலந்து செய்த கலவையாக ஒரு நிறம், கச்சிதமாய் கத்தரிக்கப்பட்டு டை அடிக்கப்பட்ட ஒரு மீசையுடன் காக்கிச் சட்டையில் விரைப்பாக நின்ற அவரைப் பார்த்து என்ன வேணும்னு கேக்கறதா, இல்லை உள்ள வாங்கன்னு சொல்றதான்னு திரு திருன்னு முழித்துக் கொண்டிருக்கும் போதே அவர் ஆரம்பித்தார் “ இந்த போட்டோவுல இருக்கறவர் இந்த வீட்ல தான் இருக்காரா?” , அப்பிடி அந்த போட்டோவுல எந்த பிரகஸ்பதி இருக்கறான்னு பார்த்தா சாட்சாத் அது ஞானேதான். என் போட்டோ எப்பிடி இவர் கிட்ட வந்துதுன்னு ஆச்சரியத்துல இருக்கும் பொழுது, ”பாஸ்போர்ட் வேணும்னு அப்ளை பண்ணிங்களா?” ன்னு கேட்டு எனது எல்லா வியப்புகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்தார்.

கொஞ்சம் அசடு வழிந்தபடியே (நம்புங்க, கொஞ்சமாகத்தான்) ஹி, ஹி, ஆ...ஆ...ஆஆமாம்... சார், உள்ளே வாங்க என அழைத்து அவரை அமர வைத்ததும், சைகையிலேயே சகதர்மிணி தேவையை புரிந்து கொண்டு அவருக்கென தேநீர் தயாரிப்பில் இறங்கி விட்டார். மிகவும் பொறுமையுடன் ஒரு விண்ணப்ப படிவத்தை கொடுத்து கையோடு கொண்டு வந்திருந்த கருப்பு மை பேனாவும் கொடுத்து, “இதுல கேட்டிருக்கற எல்லா விவரத்தையும் நிரப்புங்க” என்றார். நடப்பது எல்லாம் உண்மைதானா என்ற குழப்பத்திலேயே எல்லாவற்றையும் நிரப்பி அவரிடம் நீட்டினேன். அவரிடம் இருந்த படிவங்களில் இருந்த என்னைப்பற்றிய அனைத்து விவரங்களையும் ஒரு முறை சரி பார்த்தபின், என் கையிலிருந்த பேனாவை வாங்கி அதில் ஏதோ எழுதியவர், “இரண்டு பேரோட ரெபரன்ஸ் குடுத்திருக்கீங்களே, அவுங்க ரெண்டு பேரும் யார்?” என கேட்டார். என் நலம் விரும்பிகள்தான் சார் என சொல்லியவுடன் என் பதிலுக்கு சற்றே புன்முறுவலித்து விட்டு, “அவுங்க இப்ப வீட்ல இருப்பாங்களான்னு கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியுமா?” என கேட்டார். சார் அவுங்க இப்ப சர்ச்சுக்கு போயிருப்பாங்களேன்னு சொன்னவுடன், “அப்ப எனக்கு ஒரு உதவி பண்ணுவீங்களா, இவுங்க ரெண்டு பேர் கிட்டயும் உங்களைப் பத்தி விசாரிக்க வேண்டியது என் கடமை. ஆனா, எனக்கு கொஞ்சம் உடம்புக்கு சரியில்லை, உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்ன இவுங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் சொல்ற மாதிரி ஒரு லெட்டர் எழுதி கையெழுத்து போட்டு வாங்கிட்டு வந்திருவீங்களா?” என்றார். சரி சொல்லுங்க என்றபடி அவர் சொன்ன விவரத்தை ஒரு பேப்பரில் எழுதிக் கொண்டேன்.

இதற்குள் தேநீர் வந்தவுடன் அதை நாசூக்காக மறுத்தவர் “ சரி சார், ரொம்ப தேங்க்ஸ்” என்று சொல்லி கை குலுக்கினார். எனக்கு பூமி கீழே வழுக்கி செல்வது போல் இருந்தது. பாஸ்போர்ட் விசாரணைக்கு வரும் காக்கிசட்டைகள் எல்லாம் பணம் பிடுங்குவதிலேயே குறியாக இருப்பார்கள் என்றுதான் நான் கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் இவர் இப்படி ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி போல நடந்து கொண்டதின் தாக்கம் ஒரு புறம் மனதுக்கு சந்தோஷமளித்தாலும், அன்று முழுவதும் சர்ச்சில் ஒரு பிரமை பிடித்தவனைப் போலத்தான் இருந்தேன்.

இன்று காலை அவர் சொன்ன அனைத்து படிவங்களையும் நிரப்பி எடுத்துக் கொண்டு அவரிடம் தருவதற்கு காவல் நிலையம் சென்றேன். அங்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. தயவு செய்து இதை நம்புங்கள், இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருக்கிறேன். காலையில் அலுவலகம் செல்லும் வழியில் ஏழு மணிக்கெல்லாம் அடியேன் காவல் நிலையத்தில் ஆஜரானானேன். காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, உள்ளே சென்றால், கமகமவென ஊது பத்தி வாசனை. தலைமை எழுத்தர் என்ற அறிவிப்பு பலகையின் கீழே, காவலருக்கே உரிய காதோர நரையுடன் ஒருவர் அமர்ந்திருந்தார். என்னைக் கண்டதும் “வாங்க சார், என்ன வேணும்?”. நான் வந்த விஷயத்தை சொல்ல, “ சரி, உக்காருங்க” என்று தன் முன்னிருந்த நாற்காலியை காண்பித்தார். தனக்கு முன்னிருந்த தொலை பேசியில் அவர் எண்களை அழுத்தியதும், சரி யாருடனோ பேசுகிறார் என நினைத்த எனக்கு அடுத்த அதிர்ச்சி, என்னைப் பற்றித்தான் அவர் வேறு யாருடனோ பேசினார். பேசி முடித்து விட்டு, “ சார், அவர் பத்து நிமிஷத்துல வந்துருவாராம், உங்களை வெயிட் பண்ண சொன்னாரு” என்று சொல்லியவுடன் தலை சுற்ற ஆரம்பித்தது எனக்கு.

அந்த பத்து நிமிட்த்தில் காவல் நிலையத்தை ஒரு சுற்று சுற்றிப் பார்த்தேன் (கண்களால்தான்). சுத்தமாக துடைத்து பளபளக்கும் அலமாரிகள், எல்லாவற்றிலும் நேர்த்தியாக அடுக்கப்பட்ட கோப்புகள், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம் என்ற இரு பிரிவினர்களுக்கான இரண்டு ஆய்வாளர்களின் தனியறைகள், அதிலும் நேர்த்தியாய் நெகிழிப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேஜைகள், உன்னால் முடியும் தம்பி போன்ற தன்னம்பிக்கையூட்டும் வாசகங்கள், முற்றிலும் நவீன கணினிகள் என ஒரு பன்னாட்டு வங்கிக்குள் இருப்பது போன்ற ஒரு தோற்றம். இதற்குள் தொலை பேசி அழைக்கவே, அதற்கு செவி மடுத்த தலைமை எழுத்தர், கண்களாலேயே என்னை அழைத்தார். நான் இங்கிருப்பது யாருக்குத் தெரியும் என்ற கேள்வியுடன் தொலை பேசியில் காதைக் கொடுத்தவுடன் “ சார், வணக்கம், ரொம்ப நேரமா காத்திட்டிருக்கறீங்களா, சாரி சார். சார் உங்க கிட ஒரு சின்ன ரெக்வெஸ்ட், நான் மாலை போட்டிருக்கேன், என் நண்பர்களா சேர்ந்து இன்னைக்கு காலைல கோவில்ல ஒரு விஷேஷ பூஜை பண்றோம். உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணுவீங்களா, பூஜையை முடிச்சுட்டு நேரா ஸ்டேஷனுக்கு வந்துடறேன்” என சொல்லவும், உலகம் தலை கீழாக சுற்றுவது போலிருந்தது.

அடுத்த அரைமணி நேரம் காத்திருந்தேன். பல காவலர்கள் அன்றைய நாளின் வேலையை ஆரம்பிக்க வந்தவர்கள், மிகவும் தோழமையான பார்வையுடன் என்னை நோக்கி ஒரு புன்னகை புரிந்தபடி “ சார், என்ன வேணும், யாருக்காக வெயிட் பண்றீங்க, அவர் கிட்ட பேசீட்டீங்களா, வர்றேன்னு சொன்னாரா” என அக்கறையாக விசாரிக்கவே, இயேசுவே இதெல்லாம் உண்மைதானான்னு கேட்டுட்டு அமர்ந்திருந்தேன். அங்கு ஒரு ஐந்து காவலர்கள் அமர்ந்திருந்த போதிலும், சினிமாவில் சித்தரிக்கப்படுவது போல யாரும் யாரிடமும் தேவையற்ற அரட்டை அடிக்கவோ, சிகரெட் குடிக்கவோ, அல்லது அசிங்கமான வார்த்தைகள் பேசவோ செய்யவில்லை. அவரவர் வேலைகளில் மூழ்கியிருந்தார்கள். இடையில் வெள்ளை கோட் அணிந்து கொண்டு வந்த ஒரு மருத்துவ மாணவர், தனது பைக் காணாமல் போய்விட்டது என பதட்டத்துடன் சொல்லியதும், பொறுமையாக அவரது பதட்டம் தெளிவிக்கப் பட்டு, அவரிடமிருந்து புகார் பெறப் பட்டது.

அரை மணி நேரம் கழித்து வந்த மாலை போட்ட காவலர், முதலில் தாமதமாக வந்த்தற்கு மன்னிப்பு கேட்டார். பின் என் காகிதங்களை வாங்கி பார்த்து விட்டு, “சரி சார், அனுப்பி விடுகிறேன்” என சொல்லி கையை குலுக்கவும், என்னை யாராவது கைத்தாங்கலாய் அழைத்து செல்ல மாட்டார்களா என்ற நிலைக்கு தள்ளப் பட்டேன்.

இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவதுபோல், வரும் வழியில் கத்திப் பாராவில் பாலத்துக்கு மேலே, கீழே, வலது, இடது, முன்னால் பின்னால் என எங்கு பாத்தாலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றிருந்தது. என் காரருகே வந்த ஒரு வெள்ளை சட்டை காவலர் “ சார், எங்க போறீங்க? “ என்றார். பழைய மகாபலிபுரம் சாலை என்றவுடன், “நந்தனம் காலேஜ் ஸ்ட்ரைக் சார், மவுண்ட் ரோட் ஜாம் அயிருச்சு, சிட்டிக்கு உள்ள போக முடியாது, இன்னும் ரெண்டு நிமிஷத்துல சிட்டிக்கு வெளிய போற வழி கிளியர் ஆயிரும். நீங்க பாலத்து மேல ஏறி தாம்பரம் போய் போங்க, இது எப்ப கிளியர் ஆகும்னு சொல்ல முடியாது” என்றவுடன், காருக்குள்ளேயே எனக்கு ஒரு ஹை வோல்டேஜ் ஷாக் அடித்தது.

எதோ ஒரு சில கருப்பு ஆடுகள் செய்யும் அராஜகத்தினால், ஒட்டு மொத்த காவல் துறையையும் நாம் எவ்வளவு கேவலமாக நினைத்து, அவர்களைப் பற்றிய ஒரு அருவருப்பான பிம்பத்தையே மனதில் வைத்திருக்கிறோமே என்ற வெட்கமும் என்னை பிடுங்கித் தின்றது. நம்புங்கள் நண்பர்களே, காக்கிச் சட்டைக்குள் இன்னமும் கண்ணியம் வாழ்கிறது.

Thursday, December 2, 2010

பாஸ்போர்ட், பல்செட், பாவம் ரமணன்

சமீபத்துல கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு போயிருந்தேன். அப்பப்பா, எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை விதமான பிரச்சனைகள். கடவுச்சீட்டு கிடைக்குமா, இன்னைக்கும் திருப்பி அனுப்பீருவாங்களா? தத்கால் முறைல வாங்கணும்னா எங்க நிக்கணும்? இந்த வரிசை எதுக்கு நிக்குது? நீங்களும் அமெரிக்கா போறதுக்குத்தான் பாஸ்போர்ட் வாங்கறீங்களா? இந்த ஃபார்முல எங்க கையெழுத்து போடணும்? இன்னைக்கு ஃபார்ம் வாங்கீட்டாங்கன்னா பாஸ்போர்ட் வர்றதுக்கு எவ்வளவு நாளாகும்? என்பது போன்ற எத்தனையோ கேள்விகளுடன் எத்தனையோ முகங்கள், ஜீன்ஸும், டி சர்ட்டும் அணிந்து ஒரு விதமான பார்வையுடன் “ அடச்சே, இந்த அறிவில்லாத கும்பலோடவெல்லாம் ஒரே வரிசைல நானும் நிக்க வேண்டியிருக்குதே” என்ற வெறுப்புடன் நிற்கும் அறிவு ஜீவி வேற்றுலக வாசிகள், ”நான் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன், பிரசவத்தை நம்ம ஊர்ல பார்த்துக்கலாம்னு, ஆனா மாப்பிள்ளை ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லீட்டாராம், நமக்கு குழந்தை பிறந்தா அது அமெரிக்காவுல தான், அதனால உனக்கு ஊர்ல இருந்து யாரை கூப்புடணும்னு தோணுதோ, அவங்களை என்ன செலவானாலும் இங்க வரச் சொல்லுங்கறாராம், நமக்கு கடல் கடந்து போறதுல விருப்பமில்லைன்னாலும், புள்ளைக்கு இந்த சமயத்துல நாமதான கூட இருக்கணும்” போன்ற சந்தோஷ புலம்பல்களுடன் புதிதாய் பல்செட் கட்டிய மாமிகள், ”இந்த ஃபோட்டோ மேல கையெழுத்துப் போட்டா அது வழவழன்னு இருக்கறதால சரியா விழவே மாட்டேங்குது, அதனால ஒண்ணும் பிரச்சனை வராதில்லை” போன்ற பயம் நிறைந்த கேள்விக்கு, வரிசையில் நின்ற ஒருவர் வயிற்றைக் கலக்கும் பதிலளித்தார். “போட்டோ மேல கையெழுத்து போடறதுக்குன்னு தனியா ஒரு பேனா வருதேம்மா, நீங்க அந்த பேனால போடணும், பால் பாயிண்ட் பேனாவுல அது சரியா வராது” ன்னு சொன்னவுடனே அந்த அம்மா முகம் பேயறைந்தது போல் மாறியது. ”அந்த பேனா எங்க கிடைக்கும்”, ”வெளில கடைல கேளுங்க கிடைக்கும்” என்று சொல்லி அந்த அம்மாவை கலங்கடித்துக் கொண்டிருந்தார். எனக்கு முன்னால் நின்றிருந்த ஒரு இளவயதுப் பையன் தினமலர் படித்துக் கொண்டிருந்தான், திடீரென என்னிடம் திரும்பி, ”சார், நம்ம 47வது ஆளா நிக்கறோம், தத்கால்ல எத்தனை டோக்கன் குடுப்பாங்கன்னு தெரியாது, என் ஃபிரண்ட்ஸ் மூணு பேரு 4 வது, 5 வது இடத்துல எல்லாம் நிக்கறாங்க, உங்களுக்கு வேணும்னா ஒரு 100 ரூபா குடுங்க, அந்த இடத்துல நின்னுக்கோங்க, காலைல ஏழரை மணிக்கு வாட்ச்மேன் வர்றதுக்குள்ள இடம் மாறிக்கோங்க, இல்லைன்னா முடியாது” என்றான், நான் வேண்டாம்பா என்று சொல்லி முடிப்பதுக்குள் ஒருவர் அவசரமாக வந்து அவனுக்கு சிக்னல் கொடுக்கவே, விநாடிகளில் பணம் கைமாறி, அவர் எனக்கு முன்னால் வந்து விட்டார். இன்னும் சிறிது நேரத்தில் அவனின் மற்ற மூன்று நண்பர்களுக்கும் ஆட்கள் கிடைத்து விடவே விநாடிகளில் ஐநூறு ரூபாய் சம்பாதித்த சந்தோஷத்துடன் அந்த இளைஞர் கும்பல் பறந்தது.

அந்த வாலிபன் சொன்னது போலவே ஏழரை மணிக்கு ஒரு வாட்ச்மேன் வந்தார், கையில் விண்ணப்பம் இல்லாதவர்கள் எல்லாம் போய்விடுங்கள் என்றார், ஒரு பெரிய வாக்குவாதங்கள், கசமுசா சத்தங்களுக்கு பின் குறைந்தது பத்து பேராவது வரிசையிலிருந்து காணாமல் போனார்கள்.

தத்கால் கவுன்டர் திறந்ததும், ஒரு தடித்த கண்கண்ணாடி அணிந்தவர் வந்து அமர்ந்தார். மனிதர்களை கண்டால் நான் சிரிக்கவே மாட்டேன் என கற்பூரம் அணைத்து சத்தியம் பண்ணிக் கொண்டு வந்தாரோ என்னவோ, ஒரு கடுகடுத்த முகத்துடனேயே பேசினார். எனக்கு என் பாஸ்போர்ட்டில் உள்ள பக்கங்கள் தீர்ந்து போனதால் இன்னும் பக்கங்கள் வேண்டும் என விண்ணப்பித்தேன், எல்லா படிவங்களையும் அந்த தடித்த கண்கண்ணாடி வழியே பார்த்தவர், விண்ணப்பத்தில் இருக்கும் போட்டோவில் உள்ளவன்தான் எதிரே இருக்கிறானா என பார்ப்பது போல் பார்த்தார். ஆனால், அவர் என்ன பார்த்தார் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குறைந்தது ஒரு மூன்று முத்திரைகளை குத்தி விட்டு, எல்லா படிவங்களையும் என்னிடமே திருப்பி கொடுத்தார். இனி என்ன செய்ய வேண்டும் என நான் கேட்டதற்கு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் பக்கத்திலிருந்த ஒரு அறையை கை காட்டினார். (பேசுவதற்கு கூட காசு கேப்பாங்களோ!!!!). அந்த அறைக்குள் நுழைந்து மேலும் முத்திரைகள் குத்தப் பட்டு, மறுபடியும் இந்த கவுண்டர், அந்த கவுண்டர் என பல என்கவுண்டர்களுக்குப் பிறகு ஒரு வழியாக என் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

வெளியே வந்ததும் அப்பாடா என்றிருந்தது. இன்னும் பலர் பல வரிசைகளை தேடி கையில் கற்றை கற்றையான காகிதங்களுடன் அலைந்து கொண்டிருந்தார்கள்.

இந்த ஆபீசில் இடப்பற்றாக்குறை பல வருடங்களாக இருக்கிறது. எந்த வகையான வேலைக்கு எந்த வரிசையில் நிற்க வேண்டும், எந்த கவுண்டரில் என்ன செய்கிறார்கள், இந்த விதமான சந்தேகத்தை யாரிடம் விசாரிக்க வேண்டும் என எதுவும் தெளிவாக இல்லை. எங்கு திரும்பினாலும் வரிசைகள்தான். இதிலும் வெளியூர்காரர்களாயிருந்தால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான். வண்டி நிறுத்த போதிய இடமில்லை. மனிக்கணக்கில் ஒவ்வொரு வரிசையிலும் நிற்க வேண்டியுள்ளது, ஆத்திர அவசரத்துக்கு ஒரு கழிப்பறை இல்லை. இதிலும் கைக் குழந்தையுடன் வரும் தாய்மார்களின் பாடு பெரும்பாடாயிருக்கிறது.

நான் காலையில் ஆறரை மணிக்கெல்லாம் போய்விட்டதால், கார் நிறுத்துமிடத்தில் சொற்ப கார்களே இருந்தன. திரும்பி வரும்பொழுது எல்லாம் நிறைந்து போய்விட்டது. பார்க்கிங்கில் இருப்பவர் 15 ரூபாய்க்கு ரசீது கொடுத்து விட்டு “சார், காலைல இருந்து வண்டி இங்கதான் இருக்குது, எதோ கொஞ்சம் பாத்து போட்டு குடுங்க சார்” என்றார். இது எந்த கொள்கை அடிப்படையில் என தெரியவில்லை, எரிச்சலுடன் அவரிடம் சத்தம் போட்டு விட்டு வந்தேன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
போன சனிக்கிழமை அரசாங்க பல் மருத்துவ மனைக்கு போயிருந்தோம். அரசாங்க மருத்துவமனைகள் என்றாலே இளக்காரமாக பார்த்து முகம் சுளிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். எல்லா மருத்துவ மனைகளும் அப்படியல்ல. அருமையான வரவேற்பு, கனிவான உபசரிப்பு. ”சீட்டு குடுக்கறவர் இப்ப வந்திருவார் சார், அந்த சேர்ல உக்காருங்க சார்” போன்ற அன்பான பேச்சு. சீட்டு குடுக்கறவர் வந்ததும், உடனடியாக சீட்டு கொடுக்கப்பட்டது. அந்த சேரில் அமரச் சொன்னவரேதான், மறுபடியும் டாக்டரிடம் கையைக் காட்டினார். டாக்டரும் கனிவுடன் அமரச் சொன்னார். பொறுமையாக எல்லா விவரமும் கேட்டு விட்டு புரியா மொழியில் அந்த சீட்டில் என்ன என்னவோ எழுதினார். ரூம் நம்பர் 14க்கு போங்க சார் என்றார். இரண்டு மாடி ஏறித்தான் 14 க்கு போக வேண்டி இருந்தது. 14 லிலும் அதே வரவேற்பு, அதே உபசரிப்பு, அதே அதே எல்லாம் அதே.

உபகரணங்கள் எல்லாம் சர்வ சுத்தம், ஒவ்வொரு அறையிலும் பளிச்சிடும் சுகாதாரம், வாய் கொப்பளிக்க கூட நவீன நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தால் சுத்திகரிக்கப்பட்ட நீர் என எல்லாம் அருமையாக இருந்தது.

ஆனால், 14ம் அறைக்கு போவதற்கு இரண்டு மாடி ஏறச் சொன்னதால் நானும் மகளும் சர்வ சாதாரணமாக படிகளில் ஏறி விட்டோம். பாவம் வயதான ஒரு அம்மா, நடப்பதற்கே சிரமப் படும் அவர்களால், நான்கு படி கூட ஏற முடியவில்லை. இங்கு வயதானவர்களுக்காக ஒரு மின்தூக்கி வைத்தால் அதிகம் உபயோகமாயிருக்கும். அந்த அம்மாவின் கஷ்டத்தைக் கண்டு, அங்கு பணியில் இருந்த ஒருவரிடம் ஒரு பிளாஸ்டிக் சேர் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அதில் அவர்களை அமர வைத்து, இரண்டு மாடி தூக்கிக் கொண்டு போய் விட்டோம். அதுக்கு அந்த அம்மா மன நெகிழ்ச்சியுடன் சொன்ன வார்த்தைகள் தான் என்னை துக்கி வாரிப் போட்டது. “நீ ராசாவாட்டம் இருக்கணும்ப்பா” என்றார்கள். ஏம்மா, இந்த பெயராலதான் நாடாளுமன்றமே 15 நாளா அமளிதுமளியாயிட்டு இருக்கு, உங்களுக்கு சொல்றதுக்கு வேற பெயரே கிடைக்கலையா!!!!!!!

இவ்வளவு அருமையாக இருக்கும் ஒரு மருத்துவமனையில் நம்ம திருவாளர் பொதுஜனம் செய்வதுதான் முகத்தை சுளிக்க வைக்கிறது. கேண்டீனிலிருந்து தின்பண்டம் வாங்கி வந்து சாப்பிட்டு விட்டு காகிதங்களை எல்லா இடங்களிலும் போட்டு வைப்பது, வண்டிகளை நிறுத்த அருமையான கூரை வேயப் பட்ட நிறுத்துமிடம் இருந்த போதிலும், வழியை மறைத்து, எல்லா இடங்களிலும் தாறுமாறாக நிறுத்துகிறார்கள்.

அரசாங்கத்தை மட்டும் குறை சொன்னால் போதாது பொது ஜனமே, ஒழுக்கம் என்பது நம்முள்ளேயும் இருக்க வேண்டும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நேற்று இரவு முழுக்க பொழிந்த வானம், இன்று காலையிலும் தன் மிச்சத்தை பொழிந்து கொண்டிருந்தது. காலையில் எழுந்ததிலிருந்தே என் மறுபாதியும், மகளும் ஒரு எதிர்பார்ப்புடனேயே சுழன்று கொண்டிருந்தனர். மகள் அம்மாவிடம் “அந்த ரமணன் மாத்திரம் இன்னைக்கு பூரா மழை பெய்யும், பள்ளிக்கு லீவு விடுங்கன்னு சொல்லாம இருக்கட்டும், அப்புறம் இருக்குது அவுருக்கு” என சூளுரைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, கைபேசியில் குறுஞ்செய்தி “ ஹே, ஹே இன்னைக்கு லீவு” என அம்மாவும் மகளும் குதியாட்டம் போட்டனர். என் விதியை நொந்துகொண்டே அவர்களுக்கு லீவு கிடைத்த வயிற்றெரிச்சலில் ஆபீஸுக்கு கிளம்பிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு கிண்டலுடன் “ஆமா, உங்க ஆபீஸ்ல எதோ பெரிய பஸ்ஸெல்லாம் விடறாங்க, மழை பெஞ்சா லீவு விடமாட்டாங்களா?” என்ற சொல்லம்புகள் என் மீது வீசப் பட்டன. அப்பவே சொன்னேன், ”இருங்கடி ரமணன் சொன்னது என்னைக்கு பலிச்சிருக்கு, உங்களுக்கு லீவு விட்டதும் வெயில் கொளுத்தப் போகுது பார்”னு சொல்லிட்டு ஆபீஸுக்கு வந்தேன். காலையிலிருந்து நல்ல வெயில். பாவம் ரமணன்.