Wednesday, April 13, 2011

தேர்தல் ஆணையத்தின் தகிடுதத்தம்


இன்று வாக்களிக்க சென்றிருந்தேன். வாக்குச் சாவடிக்கு செல்வதற்கே பல தடைகளை தாண்டி செல்ல வேண்டியிருந்தது. வழியிலேயே தடுத்த கட்சிக்காரர்கள் மாம்பழத்தை கையில் வைத்திருந்தனர். சார், மாம்பழத்துக்கு ஓட்டுப் போட்டுட்டு வந்து மாம்பழம் வாங்கிக்கோங்க என்றனர். அதற்கு சற்றுப் பக்கத்தில், சுத்தியல் அரிவாள் சின்னத்தினர், நல்ல வேளை இவர்கள் அரிவாள் எதுவும் காண்பிக்கவில்லை, அல்லது ஓட்டுப் போட்டுவிட்டு வந்து அரிவாள் வாங்கிக் கொள் என சொல்லவில்லை.


ஓட்டுச்சாவடியில் நுழைய முடியவில்லை. எங்கு பார்த்தாலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி மக்கள் செய்த அட்டூழியம் தாங்க முடியவில்லை. பணியிலிருந்த போலீஸாரின் நிலை பரிதாபமாயிருந்தது. கொளுத்தும் வெய்யிலில் அவர்கள் ஒரு வாய் தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருந்தார்கள்.


வாக்குச்சாவடி விவரங்கள், மற்றும் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் ஆகியவை மிக மிக தெளிவாக மக்கள் பார்வையில் படும்படி வைக்கப் பட்டிருந்தன. மின்னணு வாக்கு இயந்திரத்தை எப்படி உபயோகிப்பது என்பதையும் தெளிவாகவே எழுதி அங்கங்கே ஒட்டி இருந்தனர். மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.




பணியிலிருந்த தேர்தல் பணியாளர்கள் அனைவரும் மிகவும் கனிவாக பேசினார்கள். பாவம் முந்தைய நாள் இரவே அவர்களை அந்த பள்ளியில் தங்கச் சொல்லி விட்டார்களோ என்னவோ, இரவில் அவர்கள் பட்ட அவஸ்தைகளான கொசுக்கடியும், குளிக்க/குடிக்க தண்ணீர் இல்லாமை போன்ற குறைகளை ஒரு மேற்பார்வை அதிகாரியிடம் ஆவேசத்தோடு உரத்த குரலில் ஒருவர் கொட்டிக் கொண்டிருந்தார். ஆனால் வாக்களிக்க வந்த மக்களிடம் மிகவும் கனிவோடு நடந்து கொண்டனர்.


வாக்குச் சாவடியில் நுழைந்ததும் நம் அடையாள அட்டையை ஒருவர் சரி பார்க்கிறார். பின் அந்த அடையாள அட்டையுடன் தொடர்புடைய எதோ ஒரு கூறிப்பிட்ட எண்ணை உரத்துச் சொல்கிறார். இவர் இப்படி சொன்னவுடன் இந்த அலுவலர்களுக்கு பின்னே அமர்ந்திருக்கும் கட்சிப் பிரதிநிதிகள் அந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்கின்றனர், இன்னொரு அலுவலர் ஒரு குறியீட்டு எண்ணுடன் நமது பெயரை எழுதிக் கொண்டு, நம்மிடம் கையெழுத்து வாங்குகின்றனர். பிறகு கை விரலில் மை வைக்கின்றனர். மை வைத்து விட்டு அதே மை வைக்கும் நபர் ஒரு துண்டு சீட்டை நம் கையில் கொடுக்கிறார். அதில் என்ன எழுதி இருக்கிறது என பார்க்கும் முன்பே அதை நம் கையில் இருந்து ஒருவர் பிடுங்கிக் கொண்டு தன் முன்னே வைக்கப் பட்டிருக்கும் ஒரு இயந்திரத்தில் ஒரு பொத்தானை அழுத்துகிறார். அழுத்தி விட்டு அந்த மறைவிடத்தில் இருக்கும் இயந்திரத்தில் உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள் என சொல்கிறார். இங்கு தான் வில்லங்கம் ஆரம்பமாகியது.


நான் எனக்கு 49 O வில் எனது வாக்கை பதிவு செய்ய வேண்டுமென்றும், இங்கு காண்பிக்கப்பட்டிருக்கும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றும் சொன்னேன். அங்கு அமர்ந்திருந்த அத்தனை பேருடைய முகமும் “பொன்னியின் செல்வனி”ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ”இடும்பன் காரி” யின் முகத்தைப் போல ஒரு விகார முகமாயிற்று. “டேய், வந்தமா, கையில மை வெச்சமா, எதாவது ஒரு பொத்தனை அழுத்தனமா, ஓட்டுப் போட்டமான்னு, போயிட்டே இருக்காம, அது என்னடா புதுசா 49 O, அது இதுன்னு எத்தனை பேர்டா இப்பிடி கிளம்பி இருக்கீங்க” என்பது போல் அந்த அலுவலர்கள் அனைவரும் பார்த்தனர். அதற்கும் மேலாக அந்த கட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் தங்களிடம் இருந்த பேப்பரில் என் புகைப்படம் முகவரி ஆகியவற்றை தனியாக வட்டமிட்டு வைத்துக் கொண்டனர். ”ஆஹா, 49 O வா, வாடா மகனே வா, நாளைக்கு ஜெயிக்கப் போறது எங்க அண்ணந்தான், அப்பறம் வருவயில்ல, சார் அது வேணும், சார் இது வேணும்னு வருவயில்ல, அப்ப வெச்சுக்கறம்டா, இப்ப 49 O போட்டுட்டு போ” என ஒரு ஏளனத்துடன் பார்த்தனர்.


அப்புறம் அந்த தேர்தல் அதிகாரி என் பெயரும் அதற்கு நேராக எழுதி இருந்த எதோ ஒரு குறியீட்டு எண்ணுக்கு பக்கத்திலேயே “ Refused to Vote” என ஆங்கிலத்தில் எழுதி இதில் கையெழுத்திடுங்கள் என்றார். ஆனால், நான் விதிகளின் படி நீங்கள் எனக்கு படிவம் 17 A தர வேண்டுமே, அதை தாருங்கள் என கேட்டாலும், “சார் இதுல கையெழுத்து போடறதுன்னா போடுங்க, இல்லைன்னா இப்பிடியே போயிட்டிருங்க” என்பது போல் பேசினர். வேறு வழியில்லாமல், அவர்களுடன் மேலும் வாதம் செய்ய விரும்பாமல் அதில் கையெழுத்திட்டு விட்டு வந்தேன்.


தேர்தல் ஆணையத்திற்கு என் கேள்விகள்:


1. வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்கு எப்படி பதிவு செய்வது என்பதை சுவரொட்டியின் மூலமாக விளக்கும் நீங்கள், ஒருவேளை வாக்குப் பதிவு செய்ய விரும்பாத பட்சத்தில் ஒரு குடிமகன் என்ன செய்ய வேண்டும் என சொல்லாதது ஏன்?


2. இப்படி நீங்கள் சொல்லாமலிருப்பது மக்களுக்கு இந்த 49 O விதி பற்றிய விழிப்புணர்வு சிறிதும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தானே? அப்படி இல்லாவிடில் தைரியமாக 49 O வைப் பற்றியும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாதது ஏன்?



3. தேர்தல் அலுவலர்கள் 49 O விற்கென விண்ணப்பிக்கும் ஒரு நபரிடம் அதற்கான படிவங்களை தர மறுப்பதுடன், அத்தகைய நபர்களை உடனே வாக்குச் சாவடியிலிருந்து வெளியேற்றுவதில் ஏன் அவசரம் காட்டுகிறார்கள்? அத்தோடு மட்டுமல்லாது எந்த விதத்திலும் ஆவணப்படுத்த முடியாத காகிதங்களில் ஏமாற்றி ஏன் கையெழுத்து வாங்குகிறார்கள்?


4. இப்படி செய்வதினால், எனது கூற்றுப்படி கொஞ்சமும் தகுதியில்லாத கறைபடிந்த வேட்பாளர்களுக்கு துணை போவதுடன், இந்திய இறையாண்மைக்கு எதிராக தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றம் செய்கிறீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? அதாவது ஒரு குடிமகனுக்கு வாக்களிக்க விருப்பமின்மை என்னும் உரிமையை பல அர்த்தமற்ற காகிதங்களில் கையெழுத்து வாங்கி விட்டு பொய் சொல்வதன் மூலம் உங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு சராசரி குடிமகனது உரிமையை நிராகரிக்கிறீர்கள் என ஒத்துக் கொள்கிறீர்களா?


5. வாக்குச்சாவடியில் உங்களது நாற்காலிகளுக்குப் பின்னே கட்சிப் பிரதிநிதிகள் என்ற பெயரில் அமர வைக்கப் பட்டிருக்கும் நபர்களை அனுமதிப்பதும், யார் யார் வாக்களிக்கிறார்கள், அவர்கள் எந்த விதமான வாக்களிக்கிறார்கள் என அவர்களுக்கு தெரிய வைப்பதும், ஒரு தனி மனித உரிமைக்கு விரோதமான செயல் என்பதை தெரிந்தே தான் செய்கிறீர்களா?


இத்தனை கேள்விகளோடு நானும் வாக்குச்சாவடியிலிருந்து வெளியேறினேன்.


கடைசியில் கையில் கறை பட்டதுதான் மிச்சம். விளம்பரங்களில் வரும் கறை நல்லதோ கெட்டதோ, இந்த கறை ஏன் என் விரலில் பட்டதோ என இன்னும் நொந்து கொண்டிருக்கிறேன்.

Tuesday, April 12, 2011

ஜுகல் பந்தி 12–4-2011 - குண்டுக்கு தெரியுமோ குருதியின் நிறம்??

குண்டுக்கு தெரியுமோ குருதியின் நிறம்??

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரம், வசதி வாய்ந்தவர்கள் சொற்பமாயும், நடுத்தர வர்க்கத்தின் சொர்க்கமாகவும், தென் அமெரிக்க நாடுகளுக்கென ஒரு தனி முகவரி தாங்கிய கேளிக்கை நகரம். முற்றும் திறந்த குலுங்கும் மார்புகளும், இடுப்புக்கு கீழே ஒரு சாண் துணியும் அணிந்து, இந்நகரத்து வீதிகளில் நடக்கும் கார்னிவல் எனும் விழா ஊர்வலங்களில் குதித்துக் கும்மாளமிடும் தென் அமெரிக்க கோதுமை நிற அழகிகளை பல படங்களில் பார்த்திருப்பீர்கள். கால்பந்தாட்ட ரசிகர்களல்ல, வெறியர்கள் நிறைந்த நகரம்.

கடந்த 7ம் தேதி இந்நகரத்தில் சூரியன் சோம்பல் முறித்து கிரணம் பாய்ச்ச தலை நீட்டிய பொழுது, இந்நகரத்தின் உயர்ந்த மலையின் மீது தன் இரு கரங்களையும் விரித்து கால்கடுக்க நின்றபடியே உள்ள இயேசுகிறிஸ்துவை சூழ்ந்திருந்த பனிப்படலம் பின்னங்கால் பிடறியில் பட விலகி ஓடியது. சரியாய் காலை 8 மணிக்கு இந்நகரத்தின் மத்திய தர மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்த ஒரு பள்ளிக்கு அதன் முன்னாள் மாணவனான வெலிங்டன் மெனோசிஸ் வந்தான். பள்ளியின் 40 வது ஆண்டு விழாவை ஒட்டி முன்னாள் மாணவனான தான் அங்கு மாணவர்களுக்கென சிறப்புரையாற்றப் போவதாக பொய் சொல்லி விட்டு வாயில் காப்போனை கடந்து உள்ளே சென்றான்.

சென்றவன் உள்ளே நுழைந்து பாடம் கேட்பதில் ஆர்வமாயிருந்த மாணவர்களிடம், “கைகளை தூக்கி நில்லுங்கள்” என கத்தவும் மிரண்ட அந்த பச்சிளம் பாலகர்கள் நடப்பது என்ன என உணரும் முன்பே கண்மூடித்தனமாக சுட்டு விட்டான். நான் சுடப்பட்டேன் என உணரும் முன்பே அந்த மொட்டுகள் சுருண்டு விழுந்து கருகி விட்டன. ஒரு வகுப்பில் தன் கோரத்தனத்தை காட்டிய இவன், இன்னொரு வகுப்பிற்கும் சென்று இப்படி செய்திருக்கிறான். பக்கத்து வகுப்புகளில் கேட்ட துப்பாக்கி சத்தமும், குழந்தைகளின் மரண ஓலமும் அடுத்திருந்த வகுப்புகளின் ஆசிரியைகளுக்கு ஏதோ விபரீதம் நடப்பதை உணர்த்தவே அவர்கள் தங்கள் வகுப்புகளின் கதவுகளை பூட்டி விட்டனர். இப்பொழுது எங்கு நுழைவது என கொலைகாரன் குழம்பி நின்றிருந்த வேளையில் சடுதியில் அங்கு நுழைந்த போலீஸ் அதிகாரி மார்க்கோஸ் இந்த மனித மிருகத்தின் காலில் சுட்டு அவனை கீழே விழத் தள்ளியிருக்கிறார். தன்னால் இனி நகர முடியாது என்பதை உணர்ந்தவுடனே தன் கையிலிருந்த துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டு அந்தக் குரூர ஆத்மா அடங்கியிருக்கிறது.

இறந்த 12 குழந்தைகளில் 10 பேர் மாணவிகள். இன்னும் இந்த அதிர்ச்சியிலிருந்து மொத்த பிரேசில் நாடே வெளிவரவில்லை. அதற்குள் நெதர் லாண்டிலும் இப்படிப்பட்ட ஒரு சம்பவம், அதே போல் துப்பாக்கி ஏந்திய இன்னொரு மனித மிருகம், ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைந்து 6 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்று விட்டு தன்னையும் சுட்டுக் கொண்டது. இந்த சம்பவங்கள் சொல்வது என்ன?
1. ஆயுதம் கிடைப்பது எளிதாகி விட்டதா???

2. மனித மனதில் வக்கிரங்கள் நிறைந்து விட்டதா???

3. சினிமாவில் நாயகன் ஒரே கைத்துப்பாக்கியை கொண்டு பல பேரை சுட்டு வீழ்த்துகிறானே, இத்தகைய சாகசங்களை இளைய தலைமுறை விரும்ப ஆரம்பித்து விட்டதா????

எதுவாயிருந்தாலும், தொலைக்காட்சியும் சினிமாவும் இந்தளவுக்கு மனித மனத்தில் தன் இனத்தையே வேரறுக்கும் விஷ விதைகளை தூவுகிறதோ என பயப்பட வேண்டியுள்ளது.

வருது வருது, அட விலகு விலகு

அட அவுங்களை விட இவுங்க பரவால்லப்பா, ஆமா இவிங்க மாத்திரம் என்ன கிழிச்சாங்க, அப்ப, அங்க குடும்பம் சொத்து சேர்த்தலைங்கறயா, சரி இங்க மட்டும் என்ன வாழுது, இங்கயும் ஒரு குடும்பம்தான் ஆட்டிப் படைக்குது, சரி அங்க கூட்டணி பலமா இருக்குன்றீங்க, அப்ப இங்க மட்டும் என்ன சொத்தையா போயிடுச்சா, போன தரம் அவிங்க ஜெயிச்சா, இந்த தரம் இவிங்க ஜெயிக்கணும்னு ரூல்ஸ் இருக்கா என்ன, ஆனா என்ன இருந்தாலும் இந்தப்பக்கம்தான் இள ரத்தமா இருக்குப்பா, ஆனா அங்கயும் நாங்க இளசுகளை இறக்கியிருக்கம்ல, நீங்க இலவசமா எதைக் குடுத்தாலும் நாங்களும் அதுக்கு டபுளா குடுக்கறம்ல, ஏ யப்பா டேய் நிறுத்துங்கடா, கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சுடா, நீங்கெல்லாம் எப்படா சாவீங்க, நாங்க கொஞ்சம் நிம்மதியா வாழணும்டா, தேர்தல் வருதாம், நாசமாப் போக.

ங்கொய்யால பக்கங்கள்.

வீதி முழுக்க விளம்பர தோரணம்,

காது கிழிய கொள்கை பாட்டு,

செவுத்துல எல்லாம் சிரிக்கற போஸ்டரு,

மேடைல ஏறி கெட்ட வார்த்தை

ராத்திரி முழுக்க தலைவர் கூட்டம்

வீட்டுக்கு வீடு இலவச லஞ்சம்,

எதுவுமேயில்ல, ஆனாலும் தேர்தலாம்

ங்கொய்யால,

இதுக்கு பேர்தான் எலெக்ஷன் கமிஷனா??