Friday, October 28, 2011

எப்படி கொல்வது ?????

உங்கள் நாட்டில் எண்ணெய் இருக்கிறதா???? நீ என் நண்பன். உனக்கு புது தொழில் நுட்பம் கற்றுத் தருகிறேன். உன் குடிமக்களுக்கு உல்லாச புரிகள் கட்டித் தருகிறேன். உன் குழந்தைகளுக்கு உலகின் முதல் தர கல்வி கற்றுத் தருகிறேன். உன் பாரம்பரியமெல்லாம் உதவாக்கரை சமாச்சாரங்கள், அவைகளையெல்லாம் உதறிவிட்டு வெளியே வா, தினமும் மதுவைக் குடி, கண்ணில் கண்ட பெண்ணின் இடுப்பிலெல்லாம் கைகளால் விளையாடி இன்பத்தில் திளைத்திரு, ஒரு புதிய உலகம் காண்பிக்கிறேன் வா….

பதிலுக்கு என் நாட்டு எண்ணெய் கம்பெனிகள் உன் நாட்டில் கொடி நாட்டட்டும், தினமும் என் நாட்டு எண்ணெய் கப்பல்கள் உன் துறைமுகத்தில் வலம் வரும். மறுபேச்சு பேசாமல் அவைகளின் அனைத்து இடுக்குகளையும் உன் எண்ணை வளத்தால் நிறைத்து அனுப்பு…… என்னது பணமா, ம், அதுவும் வேண்டுமா உனக்கு,,, சரி சரி,,, உலகச் சந்தையில் நான் வைத்திருக்கும் விலையை விட ஒரு ரூபாய் அதிகம் தருகிறேன். வாங்கிக் கொண்டு வாயை மூடிக் கொண்டிரு. எல்லா நாட்டுத் தலைவர்கள் நடுவிலும் உனக்கும் ஒரு நாற்காலி போட்டு, உலகில் இருக்கும் உதவாக்கரை விருதுகள் அத்தனையும் தருகிறேன். பல்லை இளித்து விட்டு பரிசு வாங்கிக் கொண்டு போ. என்னது…. காது கேக்கலை கொஞ்சம் சத்தமா சொல்லு, என்னது, உன் நாட்டு மக்களா, அவுங்கள விடுய்யா, அவுங்களா உனக்கு சோறு போடறாய்ங்க, உன் நாட்டு எண்ணெய் தான சோறு போடுது… அதை எப்பிடி வியாபாரம் பண்றதுன்னு பாரு. உனக்கும் உன் குழந்தைகளுக்கும் உலகின் சிறந்த நகரங்களில், கேளிக்கை விடுதிகள் கட்டித் தருகிறோம்…. அழகா உக்கார்ந்து சீமைச் சரக்கை உறிஞ்சுகிட்டே, முன்னால இடுப்பை வளைச்சு ஆடுற அழகுப் பெண்ணை அனுபவிச்சுகிட்டு சுகமா இருங்கப்பா, நாட்டு மக்கள் இருந்தாங்க, இருக்கறாங்க, இன்னமும் இருப்பாங்க, அவுங்களைப் பத்தியெல்லாம் கவலைப் படாத கண்ணு. அவுங்க மேட்டரை நான் கவுனுச்சுக்கறேன்.

என்னது, இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டியா, அப்ப எண்ணெய் தர மாட்டியா…. இப்ப பாருடா, என் சுய ரூபத்தை…… ங்கொய்யால… உன் நாட்டில் மனித உரிமை மீறப்படுகிறது. நீ மனித இனத்துக்கு எதிரான நியூக்ளியர் குண்டுகள் தயாரிக்கிறாய். ஐ.நா அமைப்பு உன்னை சோதிக்க வேண்டும், எப்ப பார்த்தாலும் குண்டு தயாரிப்பதிலேயே நீ உன் பணத்தை செலவிடுகிறாய், உன் நாட்டு மக்கள் ஒரு துண்டு ரொட்டிக்கும், ஒரு வேளை சோத்துக்கும் வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது நீ மட்டும் மாட மாளிகைகளில் வாழ்கிறாய், எங்கள் நாட்டு ஊடகங்கள் இனி உன் மீது படையெடுக்கும், அழுக்கு நிறைந்த வீதிகளும், விபச்சாரம் செய்யும் பெண்களும், சோத்துக்கில்லாத குழந்தைகளும் படம் பிடிக்கப்பட்டு, உனது நாடு என்றாலே இப்படி சிங்கியடிக்கும் கூட்டம் தான் என பிரச்சாரம் செய்வோம், நேட்டோ படைகள், ஐ.நாவின் கூட்டு படைகள், இன்னும் எங்கள் நாட்டு சொந்தப் படைகளெல்லாம் உன் நாட்டில் முகாமிட்டாலொழிய உன் நாடு உருப்படாமல் போகும், உலகத்தையே ரட்சிக்க அவதாரமெடுத்திருக்கும் நான், ஐ.நா என்ற பெயரில், நேட்டோ என்ற பெயரில் இன்னும் என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள், அந்த எல்லா பெயரிலும் உன்னை கண்காணிப்பது அவசியம். பாவம், உன் நாட்டு மக்கள், உன்னைப் போன்ற அரக்கனின் கையில் சிக்கி, தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாரங்கே…. ஐ.நா. சபையின் செயலரா, தலைவரா, தலையாரியா, பூசாரியா…., என்ன எழவோ, கூப்பிடுயா அந்த ஆளை, யோவ், உடனே அறிக்கை ஒண்ணு ரெடி பண்ணு, நான் சொல்றத அப்பிடியே எழுது. நான் சொன்ன பேச்சுக்கு அடங்காமல் அழிச்சாட்டியம் பண்ணும் அவன் நாட்டில் வறுமை, மனித உரிமை மீறல், தினம் தினம் பட்டினிச் சாவு, உலகத்தையே அச்சுறுத்தும் அணுகுண்டுகள் தயாரிப்பு, ஆட்சியாளர்களின் சுக போக வாழ்வால் மக்கள் நலப் பணிகள் பாதிப்பு என்று ஒரு அறிக்கை தயார் செய்து உடனே வாசித்து விடு. அந்த நாட்டின் வளங்கள் பாதுகாக்கப் பட வேண்டியது அவசியம் என மறக்காமல் பல முறை சொல்லு…..
அப்புறம், யாருப்பா அது, நம்ம கைத்தடிகளெல்லாம் எங்கடா ஒழிஞ்சீங்க, சீக்கிரம் வாங்கடா, இங்க பாரு, இவன் நமக்கு எண்ணெய் குடுக்க மாட்டிங்கறான், நம்ம சொன்ன பேச்சை கேக்க மாட்டிங்கறான், ஒண்ணு பண்ணுங்க, அவன் ஊர்ல இருக்கற தெருப் பொறிக்கிகளை எல்லாம் ஒண்ணு சேருங்க ”புரட்சிகர மனித நேய புனித இதிகாச தேசிய விடுதலை இளைஞர் முன்னணி” இந்த வார்த்தைகளையெல்லாம் முன்னால பின்னால எப்பிடி வேண்ணாலும் மாத்தி மாத்தி போட்டு ஒப்புக்கு ஒரு பெயர் வைத்து ஒரு கட்சியை தயார் பண்ணுங்க, கொடுங்கோல் ஆட்சிக்கெதிராக ஒரு வீரிய புரட்சின்னு ஃபிளக்ஸ் பேனர் கட்டுங்க, அவுங்களுக்கு துப்பாக்கி, பீரங்கி, வெடி குண்டு இன்னும் என்ன குண்டெல்லம் வேணுமோ எல்லாத்தையும் குடுங்க, மத ரீதியான உணர்வை தூண்டி விடுங்க, தினமும் எங்கயாவது ஒரு இடத்துல குண்டு வைக்க சொல்லிக் குடுங்க. தினமும் எத்தனை பொண்ணுங்களை கற்பழிக்க முடியுமோ அத்தனையும் செய்யச் சொல்லுங்க, புரட்சின்னு வந்துட்டா, இதெல்லாம் சகஜம் தானே, அப்புறம் கண்ணுல பட்டவனையெல்லாம் குருவி சுடற மாதிரி சுடச் சொல்லுங்க. என்னது பணம் வேணுமா, நம்ம மரப் பீரோவுல அடுக்கி வெச்சிருக்குது பாருப்பா, ஒரு பத்து இருபது கட்டுகளை எடுத்து விசுறுங்க, எல்ல பேட்டை ரவுடியும் நம்ம கிட்ட வாலாட்டுவான், அப்புறம் பார்க்கலாம் அவங்க நாட்டாமை எங்க போறான்னு, ங்கொய்யால …. தனி ஆவர்த்தனமா பண்ற,, இப்ப வெக்கறண்டா ஆப்பு உனக்கு…… எப்பூடி….

எங்கு பார்த்தாலும் மணல் குவிந்த பாலைவனம், ஒப்புக்கு ஒரு சில இடங்களில் மாத்திரம் அரிதாக காணப் படும் நீரூற்றுகள், மிகக் குறைந்த அளவில் விவசாயம் என பாலைவன நாடுகளுக்கே உரிய எல்லா அழகுடனும் அவஸ்தைகளுடனும்தான் லிபியாவின் மக்களும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வெய்யில் காலத்தில் 57 டிகிரி வெய்யிலோடு இலவச இணைப்பாக மணற்புயலும் அடிக்கும். குளிர் காலத்திலோ எலும்புக்குள் ஊசியேற்றி குசலம் விசாரிக்கும் பயங்கரக் குளிர், தண்ணீர் என்பதே ஒரு அதிசய காட்சிப் பொருள்தான். இப்படி வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு தென் லிபியாவில் கிடைத்த அற்புத சுரங்கம்தான் அவர்களது வாழ்வாதாரத்தையே மாற்றிப் போட்டது. ஆம், 1953 ம் ஆண்டின் ஒரு சுபயோக சுப தினத்தில், எல்லா ராசிகளும் ஒன்று கூடி ஒரே கோணத்தில் பார்க்க, சுக்கிரன் திசை மட்டும் உக்கிரமாய் இருக்க, எண்ணய் கிடைக்குமா என பூமியை தோண்டப் போக அங்கு ஒரு அதிசய சுரங்கமே கிடைத்தது. பாலைவனத்தில் தெளிந்த தண்ணீர் ஊற்றைவிட பெரிய அதிசய சுரங்கம் வேறென்ன இருக்க முடியும். ஆமாம், தோண்டத் தோண்ட நிறைய இடங்களில் தண்ணீர் கிடைத்தது. போதாதா, மக்கள் குதூகலித்தார்கள். உலகத்தின் எட்டாவது அதிசயமாக ஒரு செயற்கை நதியையே உருவாக்கினார்கள். தெற்கில் இருந்த தண்ணீரை வடக்கு, கிழக்கு மேற்கு இன்னும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் தங்கு தடையின்றி எடுத்துப் போனார்கள். நாட்டில் எல்லோரும் தலைமுழுகி ஆனந்தமாக குளிக்க ஆரம்பித்ததே இந்த தண்ணீர் வந்த பின்தான் போலுள்ளது. உலகின் ஒரே ஒரு செயற்கை நதி என பெயரிட்டார்கள்.

சரி, தாகத்துக்கு தண்ணீர் வந்தாயிற்று, அடுத்தது என்ன என யோசித்தார், அப்போதைய ஆட்சியாளர் கடாபி. அடுத்தது இருக்கிற எண்ணை வளத்தை வைத்து தன்னிறைவடைவோம் என ஒரு உயரிய நோக்குடன் தனது எண்ணை வியாபாரத்தை பல மடங்கு பெருக்கினார். யார் வேண்டுமானாலும் வாருங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளுங்கள், ஆனால் விலை நான் சொல்வதுதான். ஒழுக்கமாக கையில காசு, வாயில தோசைங்கற கொள்கையில் வியாபாரம் பண்ணுங்கள் என கறாராக சொல்லி விட்டார். வேறு வழியில்லை, ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். காடாபியிடம் இருப்பது உயர்தர சரக்கு, அந்த மனிதனை பகைத்துக் கொண்டால், சரக்கு கிடைக்காமல் போனாலும் போய்விடும். ஆக, கடாபிக்கு வணக்கம் சொல்லுங்கள், எண்ணெயை அள்ளுங்கள் என பல்லைக் கடித்துக் கொண்டு உலக நாட்டாமைகள் எண்ணெய் அள்ளின.

சிறுகச் சிறுக கடாபியின் கஜானா நிரம்பலாயிற்று. முதலில் என் மக்களுக்கு படிப்பறிவு வேண்டும் என பள்ளிகளை திறந்தார். தொடர்ச்சியாக, கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என வளர்ந்து கொண்டே போய், கல்வி கட்டாயமாக்கப் பட்டு, இப்போதைய கணக்குப் படி லிபியாவில் 82 சதவீதம் பேர் கல்வியறிவுள்ளவர்களாய் உள்ளனர்.
எல்லோருக்கும் வீடு என்ற தனது கனவை நனவாக்கினார் கடாபி. லிபியாவின் குடிமக்களுக்கு அரசாங்கமே வீடு கட்டிக் கொடுத்தது. எந்த நாட்டிடமும், அல்லது உலக வங்கி, அல்லது எந்த நிதி நிறுவனத்திடமும் தனது நாட்டின் வளர்ச்சிக்காக கடாபி கையேந்த வில்லை. முற்றிலும் சுய உழைப்பு, சுய சம்பாத்தியம் அதன் மூலம் தன்னிறைவு என்பது கடாபின் கொள்கையாயிருந்தது. அதன் மூலம் வெற்றியும் கண்டார். ஆனால் எண்ணெய் விவகாரத்தில் மாத்திரம் மூக்கை நுழைக்க முயன்ற உலக நாட்டாமைகளை அப்படியே விரட்டி அடித்தார். ஆப்பிரிக்கா மீது தீராத காதல் கொண்டிருந்த இந்த தொப்பிக்கார முரட்டு மனிதர் ஒருங்கிணைந்த ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்காவின் வளங்களெல்லாம் ஆப்பிரிக்க மண்ணின் மைந்தர்கள் அனுபவிக்கவே இறைவன் படைத்தான், இதை வெளிநாட்டு சக்திகள் கொள்ளை கொண்டு போக வேண்டாம் என ஒரு பரந்த கனவை கொள்கையாக வைத்து அதற்கென அயராது பாடு பட்டார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஒருங்கிணைந்த ஆப்பிரிக்கா என உரத்த சத்தமிட்டார். “ஆப்பிரிக்கர்களே ஒன்று கூடுங்கள், நமது வளங்களை நாம் பங்கிடுவோம், நாம் உழைப்போம், தன்னிறைவடைவோம்” என அறைகூவல் விடுத்தார். ஏகாதிபத்தியத்தின் மரு உருவமான மேற்கு நாடுகளின் அனைத்து கொள்கைகளையும் தன் கால் தூசுக்கும் கூட மதிக்காமல் எதிர்குரல் கொடுத்தார்.
இது போதுமே, உலக நாட்டாமை என தன்னை சுய பிரகடனப் படுத்திக் கொண்டு முக மூடி அணிந்த ஓநாயான அமெரிக்காவுக்கு மூக்கு மட்டுமல்ல, உடலின் எல்லா பாகங்களிலும் வேர்த்தது. கடாபியை கண்காணியுங்கள். எந்த ஒரு நாடும் எங்களிடம் கையேந்திக் கொண்டு, ஆமாம் சாமி போட்டு தலையாட்டிக் கொண்டிருக்கிற வரை நாமும் நல்லுறவு என்ற போர்வையில் அவர்களுடன் கைகுலுக்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம். ஆனால் இவன், ஆப்பிரிக்க ஒருங்கிணைப்பு என்கிறான், ஆப்பிரிக்க வளங்களை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டான். இவனை வளர விட்டால் ஆப்பிரிக்கா என்ற அட்சய பாத்திரத்தில் நாம் அள்ள முடியாது. இவனை தனிமைப் படுத்துங்கள் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பொருளாதார தடைகள், அவ்வப்பொழுது லிபியாவிலிருக்கும் பொறுக்கிகளுக்கு கொம்பு சீவி விடுதல் என தன் தகிடு தத்தங்களை முடிந்த வரை ஆடிப் பார்த்தார்கள். ஆனால் கடாபி அசரவில்லை. அவர்கள் ஒரு அடி பாய்வதற்குள், இவர் நான்கு அடி பாய்ந்தார். பொறுத்து பொறுத்து பார்த்தார்கள். கடாபி இனி எண்ணெய் வர்த்தகம் டாலர் , யூரோ போன்ற மதிப்பிழந்த பணங்களில் இல்லை, நான் சொல்லும் பணத்தில் தான் பேரம் நடக்க வேண்டுமென்றார். ஆஹா, இனியும் விட்டால் இவன் எங்க போய் நிப்பானோ தெரியாதுடா என்றார்கள். ரைட்டு ஆரம்பிச்சுரு, அடிங்கடா அவனை, மனித உரிமை மீறல்கள், ரசாயன ஆயுதங்கள் இன்னும் என்ன வேணுமானாலும் சொல்லு. ஆனால் அவனை ஒழிச்சுக் கட்டு, அதோட விடாதே அங்க நமக்கு ஆமாம் சாமி போடற ஒருத்தனை ஆட்சியில வை…… அடித்தார்கள்.

ஒரு பைசா கடன் வாங்காத அந்த கடாபியை அடித்தார்கள், தன்னிறைவு என்றால் அது கடின உழைப்பினால் மாத்திரமே சாத்தியம் என்ற கடாபியை அடித்தார்கள், ஒரு சில நீரூற்றுகளை ஒட்டு மொத்த தேசத்துக்கும் வழங்கி, பாலைவனத்தில் சோலைகளை ஏற்படுத்திய கடாபியை, ஒன்று பட்ட ஆப்பிரிக்கா என்ற உயர்ந்த கனவை வாயிலாவது உச்சரித்த கடாபியை, எழுத்தறிவில்லா தேசத்தின் குடிமக்களுக்கு, பட்டப்படிப்பையும் இலவசமாக வழங்கிய கடாபியை, ஆப்பிரிக்க வளங்களெல்லாம் மண்ணின் மைந்தர்களுக்கே என முழங்கிய கடாபியை, என் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சொந்த வீட்டில்தான் வாழ வேண்டும் என எல்லாருக்கும் வீடு கட்டிக் கொடுத்த கடாபியை, பெண்கள் முன்னேற வேண்டும் என பாடுபட்ட கடாபியை, உலக நாட்டாமைகளின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய கடாபியை, எங்கெல்லாம் நட்பின் பெயரில் சுரண்டல்கள் நடந்ததோ, அதற்கு எதிராக குரல் கொடுத்த கடாபியை, பிச்சைக் காரர்களே இல்லாத ஒரு தேசத்தை உருவாக்கிய கடாபியை ஒரு சில தெருப் பொறுக்கிகள் சேர்ந்து நாயை அடிப்பது போல் அடித்து அவரது ரத்தம் வழியும் உடலை தெருவில் இழுத்துக் கொண்டு போய் அவமானப் படுத்தினார்கள்.

ஆமாம், கடாபி கொஞ்சம் கோக்கு மாக்கான ஆசாமிதான், பகட்டு உடைகள் அணிவது பிடிக்கும், பள பள நகைகள் அணிவது பிடிக்கும், எப்போதும் அழகிய பெண்கள் சூழ நடப்பது பிடிக்கும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வித விதமான உடைகள் அணிவது பிடிக்கும், ஆன்மீகம் பேச பிடிக்கும், எந்த எதிர் விளைவுகளையும் யோசிக்காமல் மனதில் பட்டதை அப்படியே பேசப் பிடிக்கும், தனது அரசியல் விரோதிகளுக்கு மேலோக பதவி அளித்து கௌரவிப்பது பிடிக்கும், முக்கியமாக தன்னிறைவு, அகண்ட சாம்ராஜ்யம் போன்ற கனவுகள் காண்பது பிடிக்கும். ஆனால், அவர் அழித்தொழிக்கப் பட வேண்டிய ஆபத்தான மனிதன் அல்ல, அவ்வப்பொழுது பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்தான், ஆனால் அதுவும் இஸ்ரேலியர்களின் அத்து மீறல்களுக்கெதிரான எதிர்ப்புக் குரலாகவே இருந்தது. தீவிரவாதத்தை அவர் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. மாறாக தன் மக்கள், தன் நாடு, தன் வளங்கள் என்று சதா சிந்தித்துக் கொண்டிருந்தவர். அரசியல் சதுரங்கத்தில் அவரும் பல காய்களை வெட்டியவர்தான் இல்லை என சொல்லவில்லை, ஆனால், அவைகளுக்கென பிரத்யேக காரணங்கள் இருந்ததோ என்னவோ, யாருக்குத் தெரியும். பொதுவில் அவரை ஒரு சர்வாதிகாரியாக, மத வெறியனாக, ஸ்த்ரீ லோலனாக இன்னும் எப்படியெல்லாம் திரித்துக் கூற முடியுமோ அப்படியெல்லாம் மேற்கத்திய ஊடகங்கள் திரித்துக் கூறினாலும், தனது நாட்டு மக்களின் மேம்பாட்டிற்கென உடல் பொருள் ஆவியை கொடுத்து உழைத்தவர் என்பதில் சந்தேகமில்லை.

இப்படி இருந்த ஒரு மனிதனை ஒரு தெரு நாயைப் போல சுட்டு, ரத்தம் தோய்ந்த ஆடையில்லா உடல் தெருக்களில் இழுத்துச் செல்லப் பட்டு சித்திரவதை செய்து கொல்வது தான் நீதி என்றால், இப்பொழுது ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், ஒரு காலத்தில் வியட்நாமிலும் இன்னும் உலகின் பல நாடுகளிலும் தினமும் பெண்களை கற்பழித்துக் கொண்டும், எண்ணெய் வளங்களை சுரண்டிக் கொண்டுமிருக்கிற உலக நாட்டாமைக் காரர்களை எப்படிக் கொல்வது??????