2. நான் பெற்ற திறமைகள் என்னோடு அழிந்து விடாதபடி, அதனால் மற்றவர்களும் பயன் பெறும் வண்ணம் அதை எனக்குப் பின் வரும் சந்ததிகளுக்கும் கற்றுத்தர ஆவலாய் உள்ளேன்.
ஆனால், நான் மதிக்கும் இந்த நாடு என்னையும் மதிக்கும் என நம்புகிறேன். என் நாடு என்னை மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதற்கு எனக்கு சகலவிதமான உரிமையும் உள்ளது.
நான் இந்த நாட்டிடமிருந்து எதிர்பார்ப்பது.
2. எனக்குத் தாகமெடுத்த போது பருகவும், நான் குளிக்கவும் எனக்கு அமுதினும் இனிய பாலும் தேனும் ஓடும் நதிகள் வேண்டாம். ஆனால் சுத்தமான நீரை தங்கு தடையில்லாமல் தாருங்கள். (ஐக்கிய முன்னணி அரசு பதவி ஏற்றவுடன், முதல் பட்ஜெட்டில் ப. சிதம்பரம், மிகவும் பெருமையுடன் அறிவித்தார்: சென்னையில் கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் என்றார். இன்னும் எந்தக் கடல் நீரை குடிநீராக்குவது என்று கடலைத் தேடி அலைகிறார்கள் போலும். சௌதி அரேபியாவில் அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்துக்கென கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அமல் படுத்தப்பட்டு செயலிலும் உள்ளது. ஆனால் என் தாய்த்திரு நாட்டில் வெறும் ஒரு நகரத்தின் குடிநீர்த் தேவையை பூர்த்தியாக்க ஆயிரம் கோடி ரூபாயை கையில் வைத்துக் கொண்டு எங்கள் மாண்பு மிகுக்கள், ஐந்தாண்டுகளாக கடலைத்தேடி அலைகிறார்கள்). ஐயா, நான் கேட்பது என் வீட்டு நீச்சல் குளத்தில் நானும் என் குடும்பத்தினரும் நீந்தி மகிழ அனுதினமும் சுத்தமான தண்ணீர் தாருங்கள் என்றல்ல, நானும் என் சந்ததியும் தொண்டை நனைக்க தினமும் சிறிது தண்ணீர் தாருங்கள் என்றுதான். நான் என் நாட்டில் படித்துவிட்டு வெளி நாட்டில் சென்று வேலை செய்வதால் என்னைத் தூற்றுகிற என் அன்பர்களே, எனக்கு சிறிதே சுத்தமான தண்ணீர் தாருங்கள்.
கடந்த மழையில் மழைத்தண்ணீர் வெளியேற கால்வாய்கள் எதுவும் இங்கு இல்லையாதலால், வீடுகளுக்குள் தண்ணீர் சென்று குளமானது வேறு விஷயம். அதற்கு ஒரு கால்வாய் வெட்டி, தண்ணீர் வெளியேற வழி செய்யுங்கள் என்று மக்கள் அனைவரும் சாலைமறியலில் ஈடுபட, ( அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு அல்ல, பேசுவதற்கு கூட என் தாய் திரு நாட்டில் சாலைமறியல் அவசியம், வாழ்க ஜனநாயகம்) அதிகாரிகள் வந்து பேசி, சாலைமறியலை கைவிட வைத்தார்கள். அதன் பிறகு எந்த அதிகாரிக்கு ஞானோதயம் வந்ததோ தெரியவில்லை, கட்டிடத்தின் இடிக்கப்பட்ட கழிவுகளை பாதையில் கொட்டி, பள்ளங்களை சமன் செய்கிறார்களாம். இப்படி கற்களை கொட்டி வைத்து அந்தப்பகுதியில் எந்த வாகனப் போக்குவரத்தும் இல்லாமல் ஒரு வாரத்தை கழித்தோம். ஒரு வாரத்துக்குப்பின் இரண்டு ஆட்கள் வந்து ஒரு அரை மணி நேரம் சம்மட்டியால் அடித்து ஒரு கல்லை இரண்டு பெருங்கற்களாக்கி விட்டு போய் விட்டனர். இந்த கற்குவியலின் மீதுதான் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறோம். வண்டி எதுவும் உள்ளே வர முடியாதாகையால், ஒரு பிரசவ வலி கண்ட நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை மற்றவர் குறைந்தது அரை கிலோமீட்டர் தூரம் தூக்கிச்சென்றுதான் பிறகு வண்டியில் அமர்த்தி மருத்துவ மனையில் சேர்த்தார்கள். இதுவரை இந்த கற்குவியலில் விளையாடும் பொழுது தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் கை உடைந்து மாவுக்கட்டுடன் இருக்கிறார்கள்.
இந்த கற்குவியல் கிரீன்வேஸ் சாலையிலோ அல்லது கோபாலபுரம் சாலைகளிலோ அல்லது போயஸ் தோட்ட சாலைகளிலோ சாலையை செப்பனிடுவதற்கென குவிக்கப்படுமா??
தினமும் இந்த அவல நிலையைக்குறித்து அரசு அதிகாரிகளிடம் முறையிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம், ஆனால் எதோ பிச்சைக்காரர்களிடம் நடந்து கொள்வதைப் போல்தான் எங்களிடம் நடந்து கொள்கிறார்கள். ஆனால் எங்கள் வார்டு கவுன்சிலர் மாத்திரம் வந்து வெள்ள நிவாரண நிதியை வாங்கிச் செல்லுங்கள் என மறக்காமல் அறிவித்துச் செல்கிறார். அவரிடம், ஐயா எங்களுக்கு நிவாரண நிதி வேண்டாம், அந்தப்பணத்தை வைத்து ஒரு நல்ல சாலை அமைத்துக் கொடுங்களேன் என்று சொன்னோம், எங்களை பார்த்து பிழைக்கத் தெரியாதவர்களாய் இருக்கிறீர்களே என்பது போல் பார்த்துவிட்டு சென்று விட்டார். தினமும் வேலைக்கு செல்வதற்காய் அரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று விட்டு அங்கிருந்து ஆட்டோவில் செல்கிறேன். ஏனெனில் எனது காரை எடுக்க முடியாது. எடுத்தால் இந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி அது வெறும் துண்டுகளாகத்தான் கிடைக்கும். குறைந்த பட்சம் கார் சக்கரத்தை விட சிறிய கற்கள் இருந்தால் கூட அதன் மேல் காரை ஒரு தரமாவது ஓட்டி வெளியே கொண்டு வந்து விடலாம் தான், ஆனால் அந்த நாள் எப்பொழுது வாய்க்குமோ தெரியவில்லை.
இனியும் சொல்லுங்கள், நான் என் தாய் திரு நாட்டிற்காக என்ன செய்ய வேண்டும்??
5. எனக்கு ஒரு சுத்தமான வசிப்பிடம் தர முடியுமா உங்களால்? என் நகரத்தின் ஒரு பிரதானமானதும், அதிக மக்கள் போக்குவரத்து நிறைந்ததுமான ஓர் சாலையைப் பாருங்கள்,
இந்த சாலையின் ஒரு பக்கம் முழுவதும் இப்படித்தான் குப்பை கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. உடனே நீங்கள் கேட்கலாம் "உன்னை யார் ரோட்டில் குப்பை கொட்டச் சொன்னது, நீங்களே இப்படி பண்ணிட்டு, நிர்வாகத்து மேல குற்றம் சொல்லலாமா?" அட அட நில்லுங்க சார், இது நாங்க கொட்டுனது இல்ல சார், எங்க தெருவிலிருந்து வாரி எடுத்துட்டுப் போய் நிர்வாகத்தினர் தான் இப்படி கொட்டி வைத்துள்ளார்கள். இது எதுக்குனு எங்களை கேட்காதீங்க, இதிலிருந்து வரும் புழுக்களும் பூச்சிகளும் தினமும் எங்கள் வீட்டு விருந்தாளிகள்தான். இந்த துர்நாற்றம் எங்களுக்கு பழகிப் போய் விட்டதால், எங்கள் பகுதியில் மல்லிகைப் பூ வாசமெல்லாம் எங்களுக்கு மறந்து போய் விட்டது.
நான் கேட்பதெல்லாம் எனக்கு ஒரு உல்லாச புரி வேண்டும் என்று அல்ல, ஒரு மனித உயிருக்கு தேவையான அடிப்படை வசதிகளை மட்டுமே கேட்கிறேன். இந்த அடிப்படை வசதிகளை தருவதற்கான குறைந்த பட்ச உத்திரவாதத்தை யாரால் தர முடியுமோ, அவர் மாத்திரம் என் மீது கல்லெறியட்டும்.