Thursday, April 15, 2010

கஜுராஹோ - சிற்பங்களின் நகரம் - பயணக் குறிப்பு





பாகம் 1 – கந்தர்வ நாடகம்.

கஜுராஹோ என்றவுடன் எல்லாருக்கும் அந்த அதீத உடலுறவுச் சிற்பங்களே ஞாபகத்துக்கு வரும். ஆனால் இங்கு வந்து பார்ப்பவர்களுக்குத்தான் இந்த சிற்பங்கள் பேசும் வார்த்தைகள் புரியும். போருக்குச் செல்லும் வீரர்கள் கூட்டம், யானைப் படையின் அணிவரிசை, உள்ளங்கையில் தன் முகம் பார்த்து அலங்காரம் செய்யும் இந்திர லோகத்து சுந்தரிகள், விஷ்ணுவின் வெவ்வேறு அவதாரங்கள், சிவனின் தாண்டவ நர்த்தனங்கள், திமிறும் காளைகளை அடக்கியாளும் வீரர்கள், குளித்து முடித்து கூந்தலுலர்த்தும் அழகிகள், தனது நிர்வாணத்தை தானே ரசிக்கும் அதீத சுந்தரிகள், மனித உடலின் ஒவ்வொரு அணுவிலும் எதிர்பாலின தீண்டலால் கிளம்பும் காம இன்பத்தை மோகித்து அனுபவிக்கும் ஆணும் பெண்ணும் என உலகில் பிறந்த மாந்தர்கள் கண்ணில் படும் அனைத்து காட்சிகளையும் இந்த மணற்கற்களில் சிற்பங்களாக வடித்து விட்டான் ஒரு பெயர் தெரியா சிற்பி.













முதலில் இந்த சிற்பக் கோவில்களின் நகரம் உருவான கதை.

கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், லாங் லாங் எகோ, (டேய், போதுண்டா, ஓவரா பில்டப் குடுக்காத) ஒருநாள், ஹேமவதி என்ற பிராமண சுந்தரி, இன்றைய புனித நகரமான வாரணாசியில் வசித்திருந்தாள். நிலாக்காயும் ஒரு இரவில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாளாம். சொக்க வைக்கும் அவள் மேனியழகில் கலங்கிப் போனது குளத்தின் தண்ணீர் மாத்திரமல்ல. அங்கு மௌன சாட்சியாய் நின்றிருந்த அனனத்து ஜீவ ராசிகளும்தான். தன் மேனியழகின் மீதிருந்த கர்வத்தாலோ, அல்லது தன் அழகை கண்டு தானே வியந்திருந்தததலோ என்னவோ, ஹேமவதிக்கு நிர்வாணம் என்பது ஒரு இன்பம் தரும் யோகநிலையாயிருந்தது. குளத்தின் நீளமும் அகலமும் அவளது பிறந்த மேனிக் கோலத்தில் திளைத்து பேச்சு மூச்சு அற்றுப் போயிருக்க, ஹேமவதியும் ஒரு மோன நிலையிலேயே தண்ணீரை அணிந்திருந்தாள். ஆனால் தன்னை வேறு இரு கண்களும் கண்டு ரசிப்பதையோ, அந்த கண்களுக்குரியவர் தன் மீது மையல் கொள்வதையோ அறியாத பேதையாய், குளத்தில் பூத்த மலர்களை மங்கை, குறும்புப் பார்வையால் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தாள்.





வானத்தில் வலம் வந்த நிலவரசன் கண்களில் காண்பது நிஜம்தானா அல்லது தேவ லோகத்து கன்னிகைகள் இங்கு பூமியில் நீராட வந்தனரோ என குழம்பிப் போய், சிறிது நேரம் தன் பயணத்தை நிறுத்தி நின்ற இடத்திலிருந்தே பாவையின் அழகை பருகிக் கொண்டிருந்தான். பருகப் பருக, ரசனை காதலாகி, காதல் கலவியில் முடிந்தது. அன்று மாத்திரம் வான ஆராய்ச்சியாளர்கள் சரியாய் குறிப்பெடுத்திருந்தால், ஒரு நாள் இரவில் பௌர்ணமி தினத்தன்று ஒளிவீச வேண்டிய வட்ட நிலவு, வானத்தின் வீதிகளில் இல்லாமல் காணாமல் போயிற்று என எழுதி வைத்திருப்பார்கள். ஆம், அன்று இரவு முழுவதும் தன் பணியினை மறந்து, தன் மேன்மையை துறந்து, நிலவு, பூமியில் வாழும் ஒரு பெண்ணோடு மோகித்திருந்தது.

நிலவினைக் கண்டதும் பாவையும் மயங்க, அந்தக் குளம் இவர்கள் இருவரின் காமத்தைத் தீர்க்க தண்ணீராலே படுக்கை கட்டியது. குளத்தில் பூத்த மலர்களெல்லாம் சுகந்தம் வீச, சுற்றி நின்ற மரங்களெல்லாம் திரைகளாக, இருபது விரல்கள் தாளமிட, இரண்டே இரண்டு பேர் இணைந்து நடிக்க, அந்த கந்தர்வ நாடகம் களிப்புடன் அரங்கேறியது.

பிறகென்ன, நாடகம் முடிந்ததும், வான வீதியில் என்னைத் தேடுவார்களே, சாரதியில்லாமல் ரதம் தடுமாறும் எனச் சொல்லி நிலவரசன் சடுதியில் மறைந்தான். நிலவு பறந்து விட, பாவைக்கு பசலை நோய் கண்டது. நாட்கள் கடந்தது, பழுத்த பலாப்பழமும், இனித்த காமப் பொழுதும் எப்பொழுதும் ரகசியம் காத்ததில்லை. ஆம், ஹேமவதியின் கருவறைக்குள் புதிதாய் ஒருவன் புகுந்து கொண்டான். புதிய வரவு பூரிப்பை தந்தாலும், இந்த வரவுக்கு முகவரி தரும்படி நிலவினை வேண்டினாள் ஹேமவதி.

நிலவிடமிருந்து கட்டளை வந்தது, என் உயிரின் உயிரே, உலகம் தெரிய உன்னைக் கைபிடிக்கவில்லை நான், நமக்கு நாமே மாலை சூடினோம், நட்சத்திரங்களை சாட்சிக்கழைத்தோம், மரங்கள் கூடி அட்சதை தூவ, பட்சிகள் அனைத்தும் மந்திரம் ஓத, கண்களினாலே சம்மதம் சொல்லி கலந்திருந்தோம், நாம் இணைந்திருந்தோம், ஒருவருக்கொருவர் இனித்திருந்தோம். இனி நான் சொல்வதைக் கேள். உன்னிலிருப்பவன் வாளால் உலகை ஆள உதித்தவனல்ல. அவன் கலையால் ஆளப் போகிறவன். அவன் ரத்தம் சிந்தி வெற்றி காண மாட்டான். ஆனால், மொட்டைக் கற்களுக்கு உளியால் உயிர் கொடுத்து பிறர் மனம் வெல்வான். ஆகவே இந்த வாரணாசி என்னும் தேவர்களின் நகரத்தில் அவன் பிறக்க வேண்டாம். அவனை சோலைவனங்களில் பிறக்க வை. மலையும், மரங்களும் அவனுக்கு வீடாகட்டும். இப்பொழுதே கிளம்பி, சூரியன் உதிக்கும் திசைக்கு எதிரே செல். பேரீச்சம் பழ மரங்கள் நிறைந்த சோலையை காண்பாய். அங்கே என் மகன் பிறக்கட்டும். (பேரீச்சம் பழம் = கஜூர் (ஹிந்தியில்), கஜுராஹோவின் பெயர் காரணம்).

தலைவனின் பேச்சுக்கு மறு பேச்சேது. ஹேமவதி புறப்பட்டாள். வயிற்றில் புரண்ட நிலவின் வித்து, தரையை கண்டதும் சந்திர வர்மன் எனப் பெயர் கொண்டான். இன்றைய புந்தேல்கண்ட் பிரதேசத்தில் வலிமை கொண்ட ஆண்மகனாய் உருவெடுத்தான். தன் 16 வது வயதிலேயே, சிங்கத்தையும் புலியையும் வெறும் கரங்களால் கிழித்துப் போடும் கட்டிளம் காளையாய் வடிவெடுத்தான். அவனது கடின உழைப்பில் உருவானதுதான் புந்தேல்கண்ட் ராஜ்ஜியத்தின் கோட்டையான “கலிஞ்சர்” கோட்டை. நிலவுதேவனின் கட்டளைப் படி அவன் 85 கோவில்களையும் கட்டினான்.

அவன் கட்டிய கோவிலுக்குள் அடுத்த வாரம் செல்வோம்.

Tuesday, April 13, 2010

என்னை எல்லாரும் திட்டறாங்க.......



வீட்ல மனுஷன் நிம்மதியா உக்காந்து பேப்பர் படிச்சுட்டிருந்தா, அது அதிகார வர்க்கத்துக்கு பொறுக்காது. அப்பத்தான் கொஞ்சம் கொத்தமல்லி வாங்கிட்டு வா, கோழித்தலை வாங்கிட்டு வான்னு ஒரு 15 கிலோ மீட்டர் தள்ளி இருக்கற கடைல கிடைக்கற பொருளா சொல்லுவாங்க அல்லது இன்னும் நாலு வருஷம் கழிச்சு தேவைப்படும் பொருளை இப்பவே வாங்கிட்டு வரச் சொல்லுவாங்க. ஆனா, அன்னைக்கு இப்படி எதுவுமே ஆணைகள் வரவில்லையே, ஒருவேளை நாம இருக்கறதே மறந்துருச்சோ, எப்படியும் நம்ம இருப்பை காமிச்சுக்கணுமில்லன்னுட்டு அவுங்க பக்கம் திரும்பி, சூடா ஒரு லெமன் டீ குடுன்னு சொன்னேன். (நெசமாவே இப்படித்தான் சொன்னேன், நம்புங்க எசமான், நம்புங்க). கொஞ்ச நேரத்துல லெமன் டீ எந்த ஆரவாரங்களுமில்லாமல், அடக்க ஒடுக்கமாய், அமைதியாய் வந்து டீபாய் மீது அமர்ந்தது.(ஏ யப்பா, டீ, டீபாய் மீது அமர்ந்தது….. என்னா எதுகை மோனைடா சாமி) இது சரியில்லையே, இவ்வளவு அமைதி டேஞ்சராச்சே, சரி அங்கிருந்து ஏவுகணைகள் வந்தா சமாளிச்சுக்கலாம் என நினைத்தவாறே பேப்பரில் மூழ்கியிருப்பதாய் பாவ்லா செய்து கொண்டு, எந்த நேரமும் நிகழப் போகும் அந்த விபத்திற்காய் அமைதி காத்தேன்.

“கொஞ்சம் தள்ளி உக்காருங்க” (அதான கேட்டேன், நாங்க சோபாவுல உக்கார்ந்திருந்தா நீங்க எப்ப சேர்ல உக்கார்ந்திருக்கீங்க)……

கொஞ்சமாக தள்ளி உட்கார்ந்தேன். “இத்தனூண்டு இடத்துல எப்படி உக்கார்றது” என்ற சற்றே உயர்ந்த குரல் கேள்விக்கு, அமைதியாக பதிலளித்தேன்.

“அரசாங்கமே, மகளிருக்கு 33 சதவீதம்தான் இடம் குடுக்குது, ஆனா நான் 50 சதவீதம் குடுத்துருக்கறேன், இதுக்கு மேலயும் வேணும்னு அராஜகம் பண்ணுனா எப்படி” ன்னு ஒரு அறிவு பூர்வமான பதில் கொடுத்தேன். அப்புறம் என்ன ஸ்டார்ட் மீஜிக் தான். ஆனா லெமன் டீ சூப்பர்.

உண்மையை சொன்னா திட்டறாங்க.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என் நண்பன் ஒருவன் அழிந்து கொண்டிருக்கும் புலிகளைப் பற்றி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். 1411 தான் இருக்காம், அதைப் பாதுகாக்க நாம் என்னென்னவெல்லாம் செய்யணும்னு சொல்லீட்டு, இந்த மின்னஞ்சலை மத்தவங்களுக்கும் அனுப்புன்னு சொல்லீருந்தான்.

நான் அவனுக்கு பதில் அனுப்பினேன், 1410 டைகரைப் பத்தி கவலைப் படுங்கடா, மீதி ஒண்ணைப் பத்தி கவலைப்படாதன்னு சொன்னேன்.

அது என்ன அந்த ஒண்ணுன்னு கேட்டான்.

அந்த ஒரு டைகர்தாண்டா உனக்கு பதில் அனுப்பீட்டிருக்குன்னு சொன்னேன்.

அவனும் திட்டறான்.

Monday, April 12, 2010

ஒண்ணாம் நம்பர் பிளாட்பாரம்



தலையை சுற்றுவது போல இருந்தது தமிழரசிக்கு, ரெண்டு நாளா என்ன தின்னாலும் ஒரே வாந்தியா வருது. மருந்துக்கடை தாமு அண்ணங்கிட்ட மாத்திரை வாங்கி சாபிட்டாலும் வாந்தி நிக்க மாட்டேங்குது. சோர்ந்து போயி அவளோட இடத்துல வந்து உக்கார்ந்துட்டா, அவ இடம்னா அது அவளுக்கே சொந்தமான ஒரு குட்டி ராஜ்ஜியம். ஒண்ணா நம்பர் பிளாட்பாரத்துல இருக்கற ஓவர் பிரிட்ஜ் படிக்கட்டுக்கு கீழ ஒரு துணி மூட்டை, கீழ படுக்கறதுக்குன்னு விரிச்ச அட்டைப்பெட்டிகள், இதுதான் அவளோட ராஜ்ஜியம். 12 வயசுல பாட்டி கையை பிடிச்சுகிட்டே இந்த பிளாட்பாரத்துக்கு வந்தது. இதா, பாட்டியும் போயி சேர்ந்துட்டா, கண்ணு ரெண்டும் தெரியலைன்னாலும் தமிழரசி வாயத்தொறந்து பாடுனா, அப்படியே கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கும், ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்னு அவ பாடுனா, கையில பொல பொலன்னு காசு வந்து விழும். இதா அவுளும் வந்து 10 வருஷமாச்சு, இந்த பிளாட்பாரத்தை விட்டு எங்கயுமே போனதில்ல. தண்ணி பைப்புல தண்ணி புடிக்கவும், கக்கூஸுக்கு போகவும் அவ நடந்து போறதப் பாத்தா, அவளுக்கு கண் இல்லன்னு யாரும் சொல்ல மாட்டங்க. அவ வந்த புதுசுல ஒரு நாளைக்கு ஏழு ரயிலுத்தான் இங்க நிக்கும், இப்ப தினமும் இருவது ரயிலு நிக்குது, இவ பாட்டைக்கேட்டு காசும் நல்லா கிடைக்குது.

“என்ன தமிளு, உடம்ம்புக்கு சரியில்லையா” டீ விக்கற ரமேஷ் அண்ணன் கேட்டாரு,

“ஆமாண்ணா, ஒரே மயக்கமா வருது”.


“டீ குடிக்கறயா”


“வேண்டாண்ணா, எதை குடிச்சாலும் வாந்தியா வருது”


“சரி, சரி எதாவது மாத்திரை வாங்கிட்டு வரட்டா”


“இல்லண்ணா, தாமு அண்ணன் குடுத்தாரு, சாப்புடறேன்”

மாத்திரையை எடுத்து வாயில் போட்டு ஒரு வாய் தண்ணீர் குடித்தாள். இந்த ராமதாசு எப்ப வருவான், மூணு நாளாச்சு ஆளவே காணோம் என யோசித்தவளாக வலது கையை மடித்து தலைக்கு வைத்து படுத்துக் கொண்டாள்.

ராமதாசு – ஜங்ஷனில் போர்ட்டர். பேருக்குத்தான் போர்ட்டர். ஆனா அவன் தொழிலே பொட்டலம் விக்கறதுதான். ஜங்ஷன்ல பொட்டலம் கிடைக்கும்னு நிறைய பேருக்குத் தெரியும். அவுங்க வந்தா ராமதாசை தேடி, சரியா சிக்னல் குடுத்தாங்கன்னா, இவன் ரேட் பேசி, பொட்டலத்தை கை மாத்தறது மின்னல் வேகத்துல முடிஞ்சு போயிரும். அவன் சிவப்புச்சட்டையும், டவுசர் தெரிய மடிச்சுக் கட்டிய லுங்கியும், தலையில கட்டியிருக்கற துண்டும் பார்த்தா, இவனெல்லாம் ஒரு சின்னப் பையை கூட தூக்குவானாங்கறதே சந்தேகமாயிருக்கும். அவ்வளவு ஒடிசலான தேகம், பீடியும் கஞ்சாவும் இளுத்து உள்ள ஒடுங்குன கன்னம், ஈர்க்குச்சி மாதிரி கையும் காலும், பாதி நரைச்ச தலைமுடி, ஆணிக்காலை விந்தி விந்தி நடப்பான். அவன் எப்பவாச்சும் தான் பெட்டி தூக்குவான், மத்த நேரத்துல எல்லாம் பொட்டல வியாபாரம்தான். இந்த உடம்புக்குள்ள பொட்டலத்தை எங்க மறைச்சு வெச்சிருப்பான்னு தெரியாது, ஆனா கரக்டா கை மாத்துவான். பிளாட்பாரத்துல வண்டியில்லாம காலியா இருக்கற நேரத்துல நீங்க என்ன கோடி ரூவா குடுத்தாலும் அவங்கிட்ட இருந்து ஒண்ணும் பேராது. வண்டி வந்து நின்னு ஆளுங்க போகவும் வரவும் கூட்டமா இருந்தா நிமிஷத்துல வியாபாரத்த முடிச்சுட்டு, வேற வேலைக்கு போயிருவான். அவுனுக்கும் இந்த பிளாட்பாரத்தை விட்டா நாதியில்லை. அந்த காக்கிசட்டைக் காரரு கொண்டுவந்து குடுக்கற சரக்கை வித்துக் குடுக்கறதுல எதோ கொஞ்சம் துட்டு தேறுது. வெளியைல போயி அப்பப்ப சிக்கனு வருவல் புரோட்டான்னு சாப்டுட்டு வந்து பிளாட்பாரத்துலயே படுத்துக்குவான். போலீஸ்காரங்க எப்பவாச்சும் கேஸ் கிடைக்கலன்னா, வந்து இவனை இளுத்துட்டு போய் ஒரு மூணு நாள் உள்ள வெச்சு, அவுங்களே ஜாமீன்லயும் விட்டுருவாங்க. அவுங்க சொல்றபடி கேக்கணும் அவ்வளவுதான்.


மறுபடியும் வயித்தப் பொரட்டிகிட்டு வாந்தி வர்ற மாதிரி இருக்க தமிளு எந்திரிச்சி ஒக்கார்ந்து வாயை குவிக்க, வாந்தி வர்ற மாதிரி இருக்கு, ஆனா வர மாட்டேங்குது. ராமதாசு இருந்தாலாவது எதாவது பேசீட்டிருக்கலாம். எங்க போனானோ என நினச்சுகிட்டே மறுபடியும் படுத்துகிட்டா. ராமதாசு – நீ எங்க இருக்க………

பாட்டி செத்ததுக்கப்புறம், இவுளுக்குன்னு யாருமில்ல, குருட்டு பொண்ணா இருந்தாலும் லட்சணமாயிருப்பா, சிவப்புமில்லாம கருப்புமில்லாம ஒரு நிறம், காலைல மெட்ராஸ் போற வண்டி வந்ததும் 5 மணிக்கெல்லாம் எந்திரிச்சு, கக்கூசுக்குள்ள இருக்கற அந்த ரூம்ல போயி, குளிச்சுட்டு, கட்டியிருக்கற சீலை, ஜாக்கெட், பாவாடை எல்லாத்தையும் தொவச்சு எடுத்துட்டு வந்து காயப் போட்டுட்டு, தலை சீவி பொட்டு வெச்சுக்குவா. தினமும் குளிக்கறது பழகிப் போச்சு. குண்டா இல்லைன்னாலும் பூசுனாப்புல இருந்த உடம்பு அங்க இருந்த பலர் கண்ணுலயும் படத்தான் செய்தது. தனக்கு கண் இல்லைன்னாலும் தன்னைப் பாக்கறவங்க எப்படி பாக்கறாங்கங்கறது அவுளுக்கு எப்படித்தான் தெரியுமோ, கைத்தடியை எடுத்து ஒரு ஆட்டு ஆட்டுனான்னா, அவள பாக்கறவன் அவ்வளவுதான்.

ஒருநா, நல்ல மழை, பிளாட்பாரத்துல தண்ணியா கொட்டறப்போ, தமிழு படிக்கட்டுக்கு கீழ செவுத்துல சாஞ்சு உக்கார்ந்துட்டு இருந்தா, பக்கத்துல லொக்கு லொக்குனு இருமற சத்தம் கேட்டுது.

“என்ன தாசு, இப்படி இருமுற” ன்னு இவ கேக்க,


“என்னன்னு தெரியல தமிளு, ரெண்டு நாளாவே இருமலு குடலைப் பொரட்டுது” ன்னு சொல்லீட்டு பீடியை கடைசி இழுப்பு இழுத்துட்டு சுண்டி விட்டான்.


“அதான், இருமுறயில்ல, அப்புறம் எதுக்கு அந்த கிரகம் பீடிய குடிக்கற, அதத்தான் விட்டுத் தொலையேன்”


அவளை ஒரு தரம் திரும்பிப் பார்த்து விட்டு தலையை குனிந்து கொண்டான்.


“இந்தா, சூடா டீ இருக்குது குடிக்கறயா” என கேட்க, அந்த மழைக்கு டீயின் சூடும் சுவையும் அவனுக்கு இதமாயிருந்தது. இதற்கு முன் பலமுறை அவளை பார்த்தும், பேசியும் இருக்கிறானென்றாலும், இந்த உபசரிப்பு அவனை என்னவோ செய்தது.

“யேய், தமிளு, உன்னை இன்ஸ்பெக்டர் கூட்டியாரச் சொன்னாரு” ன்னு, கான்ஸ்டபிள் வந்து சொல்லவும், ராமதாசுக்கு புரிந்தது. இன்ஸ்பெக்டரு ஒரு வாரமா தமிழ் இருக்கற பக்கம் அடிக்கடி வந்து நிக்கறதும், அவளயே பாக்கறதுமா இருந்தப்பவே இவனுக்கு சந்தேகம் தட்டியது. ராமதாசு கேட்டான்.

“எதுக்கு?”

“டேய், நீ என்ன அவுளுக்கு வக்காலத்தா, வாயை மூடுறா”

“அவ வரமாட்டான்னு போய் சொல்லு போ”

“டேய், நீ என்னடா பெரிய பருப்பாட்டம் குறுக்க பேசுற, எத்துனன்னா மவனே ஒரேயடியா போயிருவ, எச்சக்கல நாயி” என அவனை கை வைக்க போனதும்,


“ஏய், செவப்பு சட்டை மேலயே கை வைக்கறயா” என இவன் சத்தம் போடவும், அங்கு நாலைந்து சிவப்பு சட்டைகள் வந்து “என்ன, என்ன பிரச்சனை, யோவ் அவன் சட்டைய விடுயா” என சொல்ல, நிலைமையை புரிந்து கொண்ட கான்ஸ்டபிள் பின் வாங்கினான். தமிழுக்கு எல்லாம் புரிந்தது, இன்ஸ்பெக்டர் எதுக்கு கூப்புடறான்னு புரிஞ்சது. நெஞ்சு திக்கு திக்குன்னு அடிச்சுகிச்சு.

ராமதாசு விரு விரு ன்னு ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட போனான். ஒரு அரை மணி நேரத்துல திரும்பி வந்தான். “ஏய், தமிளு, ஒண்ணும் பயப்படாத, சொல்ல வேண்டிய இடத்துல சொல்லீட்டுத்தான் வந்திருக்கேன். யாருக்கும் பயப்படாத”ன்னு சொல்லவும், தமிழுக்கு அழுகை அழுகையா வந்தது. இதுவரை உணராத நேசம், தனக்குன்னு பரிஞ்சுகிட்டு வர ஒரு உயிர் உலகத்துல இருக்குன்னு நினைச்சப்ப வர்ற சந்தோஷம், இந்நேரம் இவன் மாத்திரம் இங்க இல்லன்னா என்ன நடந்திருக்கும்னு நெனச்சா பயம் எல்லாமா சேர்ந்து மனசை என்னவோ செய்ய, அத்தனை உணர்ச்சிகளையும் ஒரே மழைநேரத்தில் அழுது தீர்த்தாள். அவ அழுவறதைப் பார்த்து, ராமதாசு இன்னும் பக்கத்துல வந்து, “த்தே, எதுக்கு சும்மா அழுகற, அதான் நான் எல்லாம் சொல்லீட்டு வந்துட்டேங்கறன்ல”

“இல்ல, இப்ப நீ இருந்ததுனால தப்பிச்சேன், இல்லைன்னா ….”

“ஒண்ணும் ஆகாது, சும்மா பொலம்பாத”

“தாசு, நீ எங்கயும் போவாத” என அவன் குரல் வந்த திசையை நோக்கி அவன் கைகளை பிடிக்க காற்றில் தேடினாள். கையை பிடித்ததும் இருவருக்கும் அது முதல் ஸ்பரிசம். ஒரு ஆணின் கையை பிடித்திருக்கிறோம் என அவள் உணர்ந்ததும், ஒரு பெண் தன் கையை பிடித்திருக்கிறாள் என இவன் உணர்ந்ததும் இருவருக்குள்ளுமிருந்து ஒரு பெருமூச்சு ஒரே சமயத்தில் வெளிப்பட்டது. தமிழுக்கு அந்த ஸ்பரிசம் கொஞ்சம் வெட்கத்தையும் தந்தது. ராமதாசின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்ததும், வெட்கத்தில் தலை தானாக குனிந்தது. முதலில் சுதாரித்த ராமதாசு, “சரி, சரி, மழை ஜாஸ்தியா இருக்குது பேசாம படுத்துக்க, இதா நான் இந்த பெஞ்சுலதான் தூங்கறேன்”னு சொல்லிவிட்டு கைகளை விடுவித்தான்.

தமிழின் மனதுக்குள் மத்தாப்பு. இது சரியா, இதுதான் சரியா, அவசியமா, வேலியில்லாமல் பூச்செடி வளரவே முடியாதா, முள்ளாயிருந்தாலும் அந்த முள்தானே பாதுகாப்பு….. என்னென்னவோ நினைத்தாள், நினைத்தான். நினைத்தார்கள். இரண்டே நாளில் தமிழரசி கழுத்தில் மஞ்சள் கயிறுடன் தமிழரசி தாஸ் ஆகிவிட்டாள். ரயில்வே பிரிட்ஜின் படிக்கட்டிற்கு கீழே இப்பொழுதெல்லாம் இரவில் ஒரு கோணிப்பை தடுப்பு திரைச்சீலைபோல் தொங்குகிறது. தடுப்புக்கு உள்ளே, மல்லிகைப் பூ மணக்கிறது.

ஒரு பத்து நாள் போயிருக்கும், நடுநிசி. இன்ஸ்பெக்டர் வந்தார். கோணித் தடுப்பை விலக்கிப் பார்த்தார், பிளாட்பார லைட் வெளிச்சத்தில் அந்தக் காட்சியை கண்டு, கொஞ்சம் கிளு கிளு அதிர்ச்சி. பின்னி பிணைந்திருந்த இரு உடல்கள், அவசரமாக பிரிந்தன. அவசர கதியில் கோணித் தடுப்பையே சுருட்டி தமிழ் மறைத்துக் கொண்டாள்.

“எந்தர்றா, ………. மவனே, இது வேற கேக்குதா உனக்கு”

“ஏய், இந்தாரு, குருட்டு முண்டை உன்னை அப்புறம் வந்து கவனிக்கறேன், முதல்ல இவனை இழுத்துட்டு போங்கடா, பொட்டலம் விக்கறியா, பொட்டலம். மவனே பொலி போட்டுருவேன்”

“சார், ஒரு காலத்துல வித்துட்டிருந்தேன் சார், இப்ப அதெல்லாம் விட்டுட்டேன் சார்”

“அதாண்டா, கேக்குறேன், ஏன் நிறுத்துன, ஏண்டா உன்னை மாதிரி பொறுக்கி பரதேசிங்கெல்லாம் மகாத்மாவாயிட்டீங்கன்னா, நாங்க ஒவ்வொருதரமும் புது ஆள் தேடணுமா, ஒழுக்கமா நாளையிலிருந்து சரக்கு எடுத்துட்டு போயி வித்துட்டு வந்துரு, இல்ல மவனே உயிரோட இருக்க மாட்ட நீ”

"சார், முடியாது சார், இனிமே இதெல்லாம் நிறுத்திர்றதுன்னு முடிவு பண்ணீட்டேன் சார்”

நாற்காலியிலிருந்து எழுந்து வந்து தனது பூட்ஸ் காலால் எத்தி ஒரு உதை விட்டார், ஜெயில் அறையின் கம்பிகளில் தலை பாடரென மோத சுருண்டு கீழே விழுந்தான். மூக்கிலிருந்து லேசாக ரத்தம் வர ஆரம்பித்தது.

“யோவ், என்னாச்சுன்னு பாருங்கைய்யா”

“சார், முடிஞ்சது சார்”

“சரி, சரி, ஆம்புலன்ஸ்ல போட்டு ஆஸ்பத்திரிக்கி எடுத்துட்டு போங்க, நான் டாக்டர் கிட்ட பேசிக்கறேன்.”

ராமதாசு ஆம்புலன்ஸில் போனான்.

மாதம் நான்காகி விட்டது, இப்பொழுதும் அந்த ஒண்ணாம் நம்பர் பிளாட்பாரத்தில் மேடிட்ட வயிறுடன் கணீரென்ற குரல்

“என் தலைவன் அவனே அவனே என்று பாடும் ஒலி கேட்டேன்”

Wednesday, April 7, 2010

ஜுகல்பந்தி – 7 -4 – 2010 - அமெரிக்கா காட்டிய பெப்பே


நகரம் – அஹமதாபாத்.

பெர்ஸிய பிராந்தியத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த முஜாஃபரி சமஸ்தானத்தின் வாரிசுகளில் ஒருவரான அகமது ஷா தான் இந்த நகரத்தை நிர்மாணிக்க அஸ்திவாரமிட்டவர். இவர் இந்த நகரத்தை கட்டுவதற்கு ஏவுதலாக ஒரு கதை இன்றளவும் நாட்டுப் புறங்களில் பேசப்படுகிறது. எங்கு கூடாரம் போடலாம் என யோசித்தவாறே அலைந்த அகமது ஷா, கர்ணாவதி நதியின் கரையில் ஒரு முயல், நாயை துரத்தியதை கண்டாராம். கண்டதும் இந்த மண்ணின் வீரத்தில் மனதைப் பறி கொடுத்த மன்னர், இங்கு யாம் நகரம் கட்டுவோம் என சொல்ல, அவரது நினைவாகவே இது இன்றுவரை அஹமதாபாத் என அழைக்கப்படுகிறது. இதற்கு முன் இந்த பிராந்தியம் ராஜபுத்திரர்களின் வசம் இருந்த பொழுதும் இருந்த ராஜபுத்திரர்களான வகேலா பரம்பரையும், சோலங்கி பரம்பரையும், “ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம், சுகம், சுகம்” என சுகித்து விட்டு போய் விட்டார்களே ஒழிய மக்கள் நலன் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்குத்தான் அவர்களின் ஆட்சியின் லட்சணம் இருந்தது.


அகமது ஷாவின் பேரனான மஹமூத் பேகாடா, 1487 ஆம் ஆண்டு இந்நகரைச்சுற்றி 10 கி.மீ சுற்றளவில் பெரிய கோட்டை மதில் கட்டி அதில், பீரங்கி தாக்குதலுக்கென 189 பீரங்கித் தளங்கள், கோட்டை முற்றுகையிடப்பட்டால், மதில் மேலிருந்து எதிர் தாக்குதல் நடத்த 6000 பதுங்குமிடங்கள் என ஒரு வலிமையான அரணை இந்த நகரைச் சுற்றி எழுப்பியுள்ளார். அதில் இவர் கட்டிய அலங்கார வளைவுகளுடன் கூடிய 12 வாயில்கள் (பாரா தர்வாஜா) மிகவும் பிரசித்தி பெற்றவை.
முக்கிய வியாபார கேந்திரமாக இந்தியாவின் மேற்குக் கோடியில் உருவெடுத்த இந்த நகரம், இன்றுவரை வியாபாரத்தில் செழித்து, கொழித்து, குளித்து வருகிறது. கொஞ்சநாள் முகலாயர்களிடம், பின் மராட்டிய பேஷ்வாக்களின் மேற்பார்வையில், அதற்குப் பின் பரோடா சமஸ்தானத்து கெய்க்வாட் பரம்பரையின் கீழ், இறுதியாக ஆங்கிலேயர்களிடம் என பல முறை இந்ந்கரம் கைமாறியிருக்கிறது.

இந்திய தேசப்பிதாவின் பாதங்கள் பட்ட இந்த நகரம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பல நிகழ்வுகளுக்கு சாட்சியம் அளிக்கிறது. 1919 – ல் ரௌலத் சட்டத்திற்கான எதிர்ப்பு போராட்டங்களின் துவக்கப் புள்ளி இந்த நகரம் தான். 1930 – ல் நடந்த உப்பு சத்தியாகிரகத்தின் முக்கிய நிகழ்வான தண்டி யாத்திரை இங்கிருந்துதான் தொடங்கியது. 1942 ல் நடந்த வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தின் குரல் முதல் முதலாக ஒலிக்கத் தொடங்கியது இந்நகரத்து வீதிகளில் தான்.

2001 – ல் நடந்த பூகம்பத்தால் பெரும் அழிவு, அதைத் தொடர்ந்து வந்த கோத்ரா கலவரத்தல் ஓடிய ரத்த ஆறு என வரிசையாக அழிவுகள் வந்தாலும், தனக்கே உரிய தொழிற்சாலைகள், துணி உற்பத்தி ஆலைகள், பால்பண்ணைகள், தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் என முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடும் ஒரு நகரமிது. பட்டம் விடும் பண்டிகை, தாண்டியா நடனங்கள், விதவிதமான இனிப்புகள், தங்கநிற மங்கைகள் என கலாச்சாரத்தில் இனிக்கும் இன்னொரு இடமிது.

அமெரிக்காவின் பெப்பே

டேவிட் ஹெட்லி – அமெரிக்காவின் கைப்பாவை, உளவாளி, தீவிரவாதி, மும்மை குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டியவர், லஷ்கர் – ஏ – தொய்பா வுக்காக உளவு பார்த்தவர், இன்றைய மனம் திருந்திய மைந்தன் என பல வர்ணனைகள் கொடுக்கலாம் இவருக்கு. பாகிஸ்தானிய அப்பனுக்கும், அமெரிக்க அம்மாவுக்கும் பிறந்த இவருக்கு நேர்வழியில் யோசிப்பதென்றால் கொஞ்சம் அலர்ஜிதான். அப்பவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வர, அப்பா தன் அருமை புதல்வனை பாகிஸ்தானுக்கு அழைத்துப்போய் சீராட்டி பாராட்டி படிக்க வைத்திருக்கிறார். படித்ததின் விளைவு புனிதப் போரில் நாட்டம். புனிதப் போர் என்பதே மற்றவர்களை குறிப்பாக இந்தியர்களை கொல்வதுதானே, ஆகவே தனது வெள்ளைத்தோல் முகவரியை வைத்துக் கொண்டு, இந்தியாவில் சர்வ சுதந்திரமாக சுற்றித் திரிந்து உளவு பார்த்திருக்கிறான். நம்மவர்களும் வெள்ளைத் தோலை கண்டவுடன் வாய்விரிய, முகம்மலர, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்து, அவனை இந்தியாவின் எல்லா இடங்களிலும் உலவ விட்டிருக்கிறார்கள். ஆனால், இதில் மிகப் பெரும் கூத்து என்னவெனில், அமெரிக்க உளவு நிறுவனத்துக்கு வேலை பார்ப்பதாக கூறிக் கொண்டு, இவன் லஷ்கருக்கு கையாளாக வேலை பார்த்திருக்கிறான். அந்த மாபெரும் உளவு நிறுவனத்தின் மூக்குக்கு அடியிலேயே ஒரு கறுப்பு ஆடு உலவுகிறது என்பதை கடைசி வரை கண்டு பிடிக்க முடியாத தத்திகளாகத்தான் அமெரிக்க உளவுத்துறை இன்றும் இருக்கிறது.

எல்லாம் முடிந்து, வெடிக்க வேண்டியதெல்லாம் வெடித்து, இந்திய ஊடகங்களின் நாடகங்கள் முடிந்து, அவர்கள் இனி அடுத்த நாடக மேடைக்கு சென்றவுடன், இந்திய துப்பு துலக்கிகள் இவனை கையைக்காட்ட, அமெரிக்காவின் வயிற்றில் சேர்ந்தாற்போல் ஆயிரம் தீப்பந்தம் பற்றிக் கொண்டது. தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் ஒரே நாடு என மார்தட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலேயே, ஒருவன் தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறானென்றும், அவனை விசாரிக்க இந்தியா விரும்புகிறதென்றும் தெரிந்ததும், அமெரிக்காவின் இளிச்சவாய்த்தனத்தைப் பார்த்து மற்ற நாடுகள் தலையிலடித்துக் கொண்டன.

உடனே அவனை அவசர அவசரமாக விசாரணைக்குட்படுத்தி, அதில் தீர்ப்பும் வழங்கிவிட்டார்கள். அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற தீர்ப்புக்கு பிறகு அமெரிக்கா அள்ளித்தெளித்த அறிக்கைகள்தான் உலக மகா காமெடி – “எங்கூட்டுப் பையன் எதோ தப்பு பண்ணீட்டானாம், அதையெல்லாம் அவன் தப்புன்னு ஒத்துகிட்டான், நாங்களும் அவனை நிக்க வெச்சு கையை நீட்டச்சொல்லி, நல்லா காயவெச்ச புளியங்குச்சிய எடுத்து, பளார், பளார்னு அடிச்சுட்டோம். அப்படியே அவன் கையெல்லாம் கன்னிப்போச்சு, அவன் இனிமே இந்த மாதிரியெல்லலம் செய்ய மாட்டேன்னு சொல்லீட்டான். அதனால சும்மா அவன விசாரணை அது இதுன்னு தொந்தரவு பண்ணாதீங்க, நீங்க போயி உங்க பொழப்பை பாருங்க என்னா, உங்களுக்கு வேற எதாவது வேணும்னா எங்கிட்ட கேளுங்க, என்ன சரியா, போயிட்டு வாங்க, ஆனா அதுல பாருங்க இப்பவும் தீவிர வாதத்துக்கு எதிரா கோடி கோடியா செலவழிச்சு போராடற நாடுன்னு ஒன்னு இந்த பூமியில இருந்துச்சுன்னா, அது அமெரிக்க ஒண்ணுதான். இதை மட்டும் மனசுல வெச்சுக்கங்க ” என்று இந்திய அரசுக்கு பெப்பே காட்டி விட்டது.

நமது அரசாங்க மாண்புமிகுக்களும், சரி, சரி லூசுல விடுறா, மண்ணைத் தொடச்சுட்டு போயிட்டே இருப்போம்னு திரும்பி வந்து விட்டார்கள். அவர்கள் நாட்டில் இருக்கும் ஒரு தீவிர வாதி நமது மண்ணில் வந்து, ரத்தத்தில் கோலம் போட்டு விட்டு போகிறான், இரட்டை வேடமிடும் அவன் நாட்டுக்காரர்களே அவனை அடைகாக்கிறார்கள். அப்புறம் என்ன மண்ணாங்கட்டிக்கடா அவுனுகளோடு கூட்டு சேர்ந்துகிட்டு, நாங்களும் போராடறோம்னு எங்க வரிப்பணத்தையெல்லாம் வீணாக்கறீங்க…..

நா(வீ)ட்டு நடப்புகள் :

ஹோட்டல்ல போய் உக்கார்ந்து மெனு கார்டை எடுத்து பார்த்து விட்டு, தேனொழுகும் குரலில்….

என்ன சாப்டலாம் கண்மணி,

எதாவது நல்லதா பாத்து நீங்களே சொல்லுங்க…

புரோட்டா சொல்லட்டா…

அய்யோ, அதுவே வெந்தும் வேகாம இருக்கும், அதுக்கு இவங்க வெக்கற குருமா வேற என்னமோ நேத்தத்த பழைய குழம்பு மாதிரி இருக்கும், வேற எதாவது சொல்லுங்க…

சரி பூரி….

அய்யோ எண்ணைல முக்கி அப்படியே வழியும்…

அப்ப, வெஜிடபிள் புலாவ்….

சே, அவுனுங்க அந்த காய்கறியையெல்லாம் வெட்டி இருக்கறத பார்த்தாலே சாப்பிட பிடிக்காது.

அப்ப பட்டர் நான்…

அது ஜவ்வு மாதிரி இழுத்துகிட்டே இருக்கும்,

இங்க சிக்கன் பிரியாணி ரொம்ப நல்லா இருக்குமாம், அது சொல்லட்டா,

வேணாம், ரொம்ப ஹெவியா ஆயிரும். எனக்கு ஏற்கனவே வயிறு ஒரு மாதிரி இருக்கு….

அப்ப சும்மா ஆர்டினரி மீல்ஸ் சொல்லட்டா, சாம்பார், ரசம், கூட்டு பொரியலோட….

ஏந்தான் உங்களுக்கு புத்தி இப்படி போகுதோ, இதைத்தான தினமும் வீட்டுல சாப்பிடறீங்க, இங்க வந்தும் அதே தானா……

அடியேன் கொஞ்சம் கடுப்புடன், அப்ப என்ன தான் சாப்டலாங்கற,

என்னையவே கேட்டுட்டு இருந்தா எப்படி, வேற எதாவது சாப்டறமாதிரி நல்ல ஐட்டமா பார்த்து சொல்லுங்க,

அடியேன் (முகத்தை வேறு பக்கம் திருப்பி) இந்த தொல்லைக்குத்தான் நான் வீட்லயே ரசம் சாதம் சாப்டுட்டு தூங்கிறலாம்னு நெனச்சேன்.

ஹோட்டலுக்குன்னு கூட்டிட்டு வந்துட்டு ஒரு நல்ல ஐட்டம் பாத்து ஆர்டர் பண்ணத் தெரியல, அங்க என்ன முணு முணுப்பு வேண்டிக் கெடக்கு