Thursday, October 4, 2012

நெருப்பு இன்னும் அணையவில்லையோ ???

இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. (இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும். உனக்கு என்ன நினைவிருக்கிரதென்று யார் கேட்கப் போகிறார்கள்) 1988 – ம் வருடம், அப்பொழுது சண்டிகர் நகரிலிருந்து சிம்லா செல்லும் நெடுஞ்சாலையில் 28 வது கிலோமீட்டரில் சூரஜ்பூர் என்றொரு கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தை அடுத்து உள்ள ஒரு சிமென்ட் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். என் அண்ணா ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் இந்திய விமானப் படையில் பணி புரிந்து வந்தார். நவம்பர் மாத ஞாயிற்றுக் கிழமையொன்றில் என் அண்ணாவை அம்பாலாவுக்கு சென்று பார்த்து விட்டு, சண்டிகர் வந்து, அடுத்து சண்டிகரிலிருந்து பஸ் பிடித்து சூரஜ்பூர் போகவேண்டும்.

சண்டிகர் நகரின் பஸ்நிலையத்துக்கு எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் அமர்ந்து இரவு உணவு உண்டு கொண்டிருக்கிறேன். ஹோட்டலில் இன்னும் இரண்டு பேர் அமர்ந்து உண்டு கொண்டிருந்தார்கள். கல்லாவில் முதலாளி அமர்ந்திருக்கிறார். நல்ல குளிர். குளிருக்கு இதமாக சூடான ரொட்டியும் சிக்கன் குருமாவும் அருமையான சுவை. அப்பொழுதுதான் அவரை பார்த்தேன்.

ஆறரை அடி உயரம், பறந்து விரிந்த தோள்கள். நெஞ்சுக்கு கீழே வரை வளர்ந்து படர்ந்த தாடி, முறுக்கிய மீசை, நீலக்கலரில் ஒழுங்காக சுற்றிக் கட்டிய தலைப்பாகை, மெல்லிய துணியில் தைத்த ஒரு குர்த்தா, நெஞ்சுக்கு குறுக்கே தொங்கும் ஒரு தோல்பட்டை அதனுள் இடது புறமாக தொங்கும் கிர்ப்பான் (சீக்கியர்களுக்கே உரிய ஒரு குறுவாள்), வலது புறத்தில் ஒரு ரிவால்வர் துப்பாக்கி. ஆஜானுபாகான அந்த மனிதன் நடந்து வருவதைப் பார்த்தாலே கையும் காலும் உதறல் எடுத்தது. அவரைக் கண்டவுடனே மனதுக்குள் ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது. நவம்பர் மாத குளிருக்கு எல்லாரும் ஸ்வெட்டர், குல்லா என ஏதாவது ஒரு கம்பளி ஆடை அணிந்திருக்க இந்த மனிதன் மாத்திரம் எதற்கு இப்படி ஒரு மெல்லிய துணியுடன் சுற்றுகிறான். ம்ஹும், என்னவோ சரியில்லை என மனதுக்குள் மணியடித்தது. அதை நிரூபிப்பது போலவே அந்த சீக்கியர் தாறுமாறாக நடந்து வந்தார். ரிவால்வரையும் கத்தியையும் இரு பக்கமும் பார்த்தவுடன் ஆஹா, இந்த சிக்கன் முடிவதற்குள்ளாகவே நான் முடிந்து விடுவேனோ என ஒரு பயம் வந்து கையும் காலும் நடுங்க ஆரம்பித்தது. ரொட்டியை பிய்த்த கை அப்படியே அசைவற்றிருக்க இமைத்த கண்களை மூட மறந்து பீதியில் உறைந்து போயிருந்தேன். அதே அளவு பீதியில் கல்லாவில் இருந்தவரும் இருந்தாரோ என்னவோ அவரும் அசைவற்று என்னைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தார். வந்த மனிதர், எனக்கு முன்னால் இரண்டு மேஜைகள் தள்ளி அமர்ந்திருந்த இருவரையும் ஒரு நொடி நின்று பார்த்தார். அவர்களும் அதே பீதியில் இருந்தார்களோ என்னவோ, அவர்களை விட்டுவிட்டு என்னிடத்தில் வந்தார். ஒரு முறை என்னையும் பிறகு நான் சாப்பிடும் உணவையும் பார்த்தார். ஓரிரு நொடிகள் பார்த்தவுடன் என்னைப் பார்த்து ஹிந்தியில் “க்யூம், கைசா ஹை” என்றார். வார்த்தைகள் தொண்டையிலேயே மரித்து விட்டதால் ஈன ஸ்வரத்தில் “டீக் ஹை” என்றேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உடனே திரும்பி சென்று விட்டார்.

அதற்கு அடுத்து நடந்ததுதான் நம்ப முடியாதது. அந்த சீக்கியர் சென்றவுடன், முதலாளி கல்லாவிலிருந்து நடந்து வந்தார் என சொல்ல முடியாது, பறந்து வந்தார். உடனடியாக ஒரு சொம்பு தண்ணீரை தூக்கி வந்து உடனே கையை கழுவு இடத்தை காலி பண்ணு என்றார். இதற்குள் உண்டு கொண்டிருந்த மற்ற இருவரும் காணாமல் போயிருந்தனர். என்ன நடக்கிறது என தெரியாமலே ஒரு வித பீதியுடன் கையை கழுவி நிமிர்ந்து பார்த்தால் அடுத்த அதிர்ச்சி, கடையின் முன்கதவு அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. திரும்பிப்பார்த்த முதலாளி, என் கையைப் பிடித்து பின்பக்கமாய் சமையலறை வழியாக இழுத்துக் கொண்டு போய் என்னை வெளியே தள்ளிவிட்டு பின்பக்க கதவையும் சாத்தி விட்டார். கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல், அடிக்கும் குளிர் முகத்தில் உறைக்க, கடையை சுற்றி முன்பக்கம் வந்தேன். ஐந்து நிமிடத்திற்கு முன் இருந்த அத்தனை சத்தங்களும் அழிந்து போய், ஓரிரு மனிதர்கள் மட்டும் வேகமாய் நடந்து கொண்டிருந்தார்கள். ஜமீன்தார்கள் வேட்டைக்கு போனால் ஒரு திறந்த ஜீப்பில் போவார்களே அப்படி ஒரு ஜீப்பில் இரண்டோ மூன்றோ சீக்கியர்கள் அமர்ந்திருந்தார்கள். மூளைக்குள் எதுவோ ஆபத்து என்ற அபாய சங்கு ஒலிக்க பஸ்ஸ்டேண்டில் ஏதாவது பஸ் இருக்கிறதா என பார்த்தால் மூன்று பஸ்கள் இருந்தது. இப்பொழுது நான் இருக்கும் இருட்டான இடத்தில் இருந்து பஸ்ஸுக்கு செல்ல ரோட்டை கடக்க வேண்டும், ரோட்டை கடந்தால் அந்த ஜீப்பில் இருப்பவர்கள் கண்ணில் படுவேன், ஜீப்பில் இருப்பவர்களை பார்த்தால் நல்லவர்கள் போல் தெரியவில்லை, என்ன செய்யலாம். இங்கு இருட்டில் நிற்பதும் சரியானதாய் படவில்லை. ஒரு குருட்டு தைரியத்தில் ஒரே ஓட்டமாக ரோட்டை கடந்து பஸ்சுக்குள் தாவி ஏறி விட்டேன். ஓடும் பொழுது அந்த எழவு ரிவால்வர் வேறு ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது. அப்பாடா நிம்மதி, பஸ்சுக்குள் வந்தாகி விட்டது. அடுத்த சில நொடிகளில் பஸ்சும் கிளம்பி விட்டது. பின்பு சூரஜ்பூர் வந்து படுக்கையில் விழுந்ததும் இரவு முழுவதும், துப்பாக்கி, தாடி வைத்த சர்தார்கள், வேட்டைக்கு போகும் ஜீப் என எல்லாமுமாக ஒரு த்ரில் பட ரேஞ்சுக்கு கனவுகள் வந்தது.

காலையில் கொட்டை எழுத்தில் செய்தித்தாள்களில் “பஞ்சாப் மாநில போலீஸ் உயர் அதிகாரி நேற்று இரவு சண்டிகர் பஸ் நிலையம் முன்பு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்” என செய்தி வந்தது. என்னைப் பார்த்து நலம் விசாரித்த சர்தார்ஜிதான் ......... டேய் அவனா நீயி, யப்பா யார் செஞ்ச புண்ணியமோ தப்பித்தேன்.

இப்படி பஞ்சாப் மாநிலத்தை தீவிரவாதம் தன் கோரப்பிடிக்குள் வைத்திருந்த காலம் மிகவும் கொடுமையான காலமிது. எல்லா பஞ்சாபியர்களும் மறக்க நினைக்கும் காலமது. நல்ல விளைநிலங்கள், வற்றாத ஜீவ நதிகள், பாசத்தோடு பழகும் வெள்ளந்தி மனிதர்கள், சத்தான சாப்பாடு, மகிழ்ச்சி தரும் கலாச்சாரம் என ஒரு அமைதிப் பூங்காவாக விளங்கிய பஞ்சாபில் தான் தீவிரவாதமும் தன் கோர தாண்டவத்தை ஒரு முறை ஆடித்தீர்த்தது. மதவெறியும் இனவெறியும் மக்களை தன்வசம் ஈர்த்தது. சீக்கியர்கள் தங்களின் உயிரினும் மேலாய் மதிக்கும் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை புக வைத்து ஒவ்வொரு சீக்கியனின் நெஞ்சிலும் ஈட்டியை சொருகியது. இந்தியப் பிரதமர் ஒருவரின் உயிரை காவு வாங்கியது. இப்படி எல்லா கொடுமைகளையும் விளைவித்து தீர்த்த தீவிரவாதம் தானாகவே தணியவும் தொடங்கியது. மக்களும் மீண்டெழுந்து வந்தார்கள். இந்த தீவிரவாதம் நமது வாழ்கையை முடக்கும் ஒரு முடக்கு வாதம் என புரிந்து கொண்டார்களோ என்னவோ, வெகு சீக்கிரமாகவே அதன் சுவடுகள் அழிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி விட்டது என நிம்மதிப் பெருமூச்சு விட்டு இளைப்பாற ஆரம்பிக்க கூட இல்லை. இதோ மறுபடியும் அதன் வேர்களிலே நீரூற்றி தழைய விட முயற்சி செய்கிறார்கள்.

லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங் ப்ரார் – 1984 ம் வருடம் மே மாதம் முப்பத்தொன்றாம் தேதி, மீரட் நகரத்தில் இருக்கும் இந்திய படைப்பிரிவுக்கு தலைமை வகித்திருந்த குப்தீப் சிங்குக்கு தலைமையிடமிருந்து போன் வருகிறது. உடனடியாக கிளம்பி சண்டிகருக்கு அருகிலிருக்கும் சண்டி மந்திர் ராணுவ தளத்திற்கு வா.., அடுத்த நாள் மனைவியுடன் ஒரு மாத விடுப்பில் பிலிப்பைன்ஸ் நாட்டு மணிலாவுக்கு சென்று விடுமுறையை கழிப்பதற்காக துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவர், ஒரு மீட்டிங் இருக்குதும்மா போயிட்டு வந்திர்றேன், ராத்திரி பிளைட்டுக்கு தயாரா இரு என்று சொல்லி விட்டு சென்றார். சண்டி மந்திரில் லெப்டினென்ட் ஜெனரல் கிருஷ்ணசாமி சுந்தர்ஜியும், லெப்டினென்ட் ஜெனரல் ரஞ்சித் சிங் தாயாலும் வரவேற்றனர். இன்று இரவே நாம் அமிர்தசரஸ் போகிறோம். பொற்கோவிலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து கொண்டு தரிசிக்க வந்த பக்தர்களை மனித கேடயமாக பயன்படுத்துகிறார்கள். அவர்களை மீட்க வேண்டும். அதற்கு நீங்கள் தலைமை ஏற்கப் போகிறீர்கள் என்று மேலிட ஆணையை காண்பித்தார்கள். மனதில் ஒரு கணம் துணிகளை அடுக்கும் மனைவியிடம் என்ன மன்னிச்சுரும்மா என மானசீகமாக மன்னிப்பு கேட்டு விட்டு அமிர்தசரசுக்கு விமானமேறிவிட்டார். பிறகு அவர் செய்ததெல்லாம் “ஆப்பரேஷன் ப்ளு ஸ்டார்” என்று படித்திருப்பீர்கள். அதன் எதிரொலியாகத்தான் அதில் ஈடுப்பட்ட அத்தனை பேரையும் காலிஸ்தான் குழுவினர் வரிசையாக போட்டுத்தள்ளிக் கொண்டே இருந்தார்கள். இந்திரா காந்தி கொல்லப்பட்டதும் இதன் காரணமாகத்தான். ஆண்டுகள் முப்பது முடிந்து விட்ட பொழுதும் இன்னமும் அந்தக் கனல் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. இந்திய அரசாங்கமும் அந்த துரதிஷ்டவசமான ஆப்பரேஷனில் கலந்து கொண்ட அத்தனை பெருந்தலைகளையும் பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்தது. வருகிறது. இந்த குல்தீப் சிங் இப்பொழுது மும்பை நகரில் ஒரு உயரிய பாதுகாப்பு வளையத்துக்குள் வாழ்ந்து வருகிறார்.

கொஞ்சம் மாற்றத்திற்காக லண்டன் சென்ற அவர், அந்நகரில் தனது மனைவியுடன் ஒரு உணவு விடுதியில் உணவு அருந்தி விட்டு வெளியே வந்தவுடன், அதற்காகவே காத்திருந்தவர்கள் போல் நான்கு பேர் அவர் மீது பாய்ந்து அவரது குரல்வளையை அறுக்க முயற்சித்திருக்கிறார்கள். என்னதான் வயசானாலும் ராணுவ ரத்தமாயிற்றே, தன் மனைவியை ஓடி விடும்படி சொல்லி விட்டு தனியே அந்த நால்வரையும் சமாளித்திருக்கிறார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர் மனைவி பெருங்குரலெடுத்து ஓலமிட, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வருவதை கண்ட நால்வரும் உடனே இவரை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். ஆனால் அதற்குள் கணிசமான அளவு கத்திக் குத்துகள் உடலில் ஏற்பட்டு விட்டது. ரத்தம் வழிய வழிய அவரை அப்படியே தூக்கி ஒரு ஆம்புலன்சில் போட்டு மருத்துவ மனைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். மனிதன் உயிர் தப்பி விட்டார்.

காலிஸ்தான் தீவிரவாதம் முழுவதும் ஒழிக்கப்பட்டு விட்டது என நிம்மதியாக இருந்தோமே, அடேய், தாடிக்கார தம்பிகளா, இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா இந்த பொற்கோயில் வன்மத்தை மனசுல வெச்சுகிட்டு குரல்வளையை அறுத்துகிட்டு திரீவீங்க..., வேண்டாம்பா வினை விதைத்தவன் தினை அறுத்ததில்லை. இந்த தீவிரவாதத்திற்கு தீனி போட்ட யாருமே நிம்மதியா வாழ்ந்ததில்லையப்பா.... நெருப்பு அணைஞ்சுருசுன்னு நினைச்சமே, நீங்க இன்னமும் அணைக்கவே இல்லையோ......

Wednesday, October 3, 2012

நிறவெறியின் உச்சம் – மடோன்னா ஆடை அவிழ்ப்பு

மடோன்னா – இசை ரசிகர்களின் கனவுக் கன்னி, ஆடை அவிழ்த்து உடலைக்காட்டி ரசிகர்களை தன்வசப்படுத்துவதில் இணையில்லா ராணி. இந்த அம்மணியின் காட்டுக் கத்தலான பாடல்களுக்கு உலகின் பல மூலைகளில் தலையாட்டும் கூட்டம் உண்டு. வார்த்தைகள் புரிகிறதோ இல்லையோ, கவர்ச்சிக்கு மயங்கி, இந்த கட்டழகியின் காட்டுக் கத்தலை ரசிக்கிறோம் என்பதில் பெருமை கொள்பவர் கூட உண்டு.

ஒரு இத்தாலிய அமெரிக்க தகப்பனுக்கும், கனேடிய பிரெஞ்சு தாய்க்கும் பிறந்தவர். பிறப்பில் தான் எத்தனை தேசங்களின் சங்கமம் பாருங்கள். இளவயதிலேயே தாய் மார்பகப் புற்று நோயில் இறந்து விட, தகப்பனோ வீட்டு வேலைக்காரியுடன் கும்மாளம் அடிக்க, இளமையின் துவக்கத்தில் இருந்த மடோன்னாவுக்கு வாழ்க்கை ஒரு குழப்பான பாடமாகவே இருந்தது. சித்தியை கேவலப்படுத்தி பார்ப்பதில் ஒரு குரூர திருப்தி கிடைத்தது. தன் தகப்பன் இல்லாத சமயத்தில் தன் சிற்றன்னையை படு கேவலமாக விமர்சிப்பது ஒரு பொழுது போக்காகவே இருந்திருக்கிறது. வெறும் உடலை காட்டி அண்ட வந்த நீ என்ன ஆனாலும் எங்கள் வீட்டு வேலைக்காரிதானே, இப்படி யார் கூப்பிட்டாலும் முந்தானை விரிப்பாயா என படு கேவலமாக விமர்சித்துள்ளார். (இப்படி விமர்சித்தவர்தான் இன்று திறந்த மேடையில் ரசிகர்களுக்கு முன் ஆடை அவிழ்க்கிறார் என்பது ஒரு வினோத முரண்தான்)

அம்மாவை இழந்தது, அப்பாவின் காதல், பருவமடைந்த மகளுக்கு முன்பாகவே அப்பா வேறொரு பெண்ணுடன் கூடிக் குலாவுவது, அதே சமயத்தின் தன்னுடலில் ஏற்பட்ட வளர்ச்சி, அந்த கவர்ச்சியில் மயங்கி வயது வேறுபாடில்லாமல் தன் பின்னே ஜொள்ளு விடும் ஆண் கூட்டம் என ஒரு குழப்பமான மன நிலை பிறழ்ந்த ஒரு பெண்ணாகத்தான் பருவ வயதின் மாற்றங்களை இந்த அழகியும் கடந்து வந்திருக்கிறார். பள்ளிப் பருவத்திலேயே தன் வகுப்பறையில் தடாலடியாக பாவாடையை உயர்த்தி தன் உள்ளாடையை காண்பித்து மாணவர்களை அதிர்ச்சி கொள்ள வைத்து, அவர்களின் அதிர்ச்சியை கண்டு ரசிப்பதில் ஒரு குரூர திருப்தி கொள்வது இவரது வழக்கம். இத்தனை ஆண்களும் என் உடலழகை ரசிக்கிறார்கள் என்று தெரிந்த பின்புதான் இவருக்கு அந்த பயங்கர யோசனை மனதில் உதித்தது. இந்த சருமம், வெள்ளை நிறம், வளைவு நெளிவுகள், ஏற்ற இறக்கங்கள், தங்கக் கம்பிக் கூந்தல், அன்ன நடை, அங்க அசைவுகள் என அனைத்தும் இந்த ஆண்களால் ரசிக்கப்படுகிறது. குனிந்து நிமிர்ந்தால் ஒரு கூட்டமே குதூகலிக்கிறது. என் கடைக்கண் பார்வைக்கு கண்டங்களனைத்தும் அடிமையாக ஆயத்தம் எனும் போது இதையே ஏன் மூலதனமாக்கி உலகின் ஒவ்வொரு ஆணும் எனக்கு அடிமை என சொக்க வைக்கக்கூடாது. இருக்கும் குரலுக்கு இன்னும் மெருகேற்று, உடலை காட்டி உலகத்தை சொக்க வை என தனக்குத்தானே ஒரு புதிய சூத்திரம் வகுத்துக் கொண்டு, நியூயார்க் நகரத்திற்கு வந்து சேர்ந்தார் இந்த கட்டழகி.

எல்லா நகரத்தைப் போலவே நியூயார்க் நகரமும் இவரை உடனே ஏற்றுக் கொள்ளவில்லை. தன் முயற்சியில் சற்றும் தளாரத விக்கிரமாதித்தனை போல இவரும் எல்லா விதத்திலும் முட்டி மோதி பார்த்தார். பாடல் குழுக்களில் குரல் கொடுக்க போனார். நடன குழுக்களில் திறமை காட்டினார். எப்படியோ முட்டி மோதி வெளிச்சத்திற்கு வர வேண்டும் என அயராது பாடுபட்டவரை நியூயார்க் நகரத்திற்கே உரிய கோரப் பண்பு இவரையும் விட்டு வைக்கவில்லை. ஒரு நடன நிகழ்ச்சியில் ஆடி முடித்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தவரை சில காமுகன்கள் கொத்திக் கொண்டு போய் இரவு முழுவதும் ...... சரி வேண்டாம் விடுங்கள். அவையெல்லாம் நாகரிகத்தின் உச்ச பட்ச உயர்விலிருக்கும் நியூயார்க் நகரத்தில் கிடைக்கும் இலவச இணைப்புகள் தான். ஆனாலும் மடோன்னா அயரவில்லை. எனது மூலதனமே இந்த உடல் தானடா, இதை வைத்து என்ன செய்கிறேன் பார் என சூளுரைத்தவர் இன்னும் தீவிர கலைச்சேவையில் கவனம் செலுத்தினார். அந்த வாய்ப்பும் வந்தது. தனது சக கலைஞரை வளைத்துப் போட்டு ஒரு ஆல்பம் வெளியிட்டு, அது வரவேற்பை பெற அதற்கடுத்து நடந்ததெல்லாம் சகாப்தம் தான், எத்தனை சுற்றுப்பயணங்கள், எத்தனை இசை வெளியீடுகள், புத்தகங்கள், என ஒரே ஏறுமுகம்தான். அம்மணி எங்கு சென்றாலும் ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தார். அடுத்தவரை கவர என்ன வேண்டுமானாலும் செய். இந்த கவரும் தன்மை இருக்கும் வரைதான் உலகம் உன்பின்னே சுற்றும். என்ன வேண்டுமானாலும் செய், மக்களை கவர்ந்து கொண்டேயிரு என்பதில் மும்முரமாய் ஈடுபட்டு, ஆடை அவிழ்ப்பதிலாகட்டும், கவர்ச்சியாய் தோற்றமளிப்பதிலாகட்டும், வக்கிர வார்த்தைகள் நிறைந்த பாடல்களாலும், காமுக நடன அசைவுகளாலும் எப்பொழுதும் ஆடுத்தவர் கவனம் கவர்வதில் இந்த 54 வயதிலும் முன்னணியில் இருக்கிறார்.

இப்படி உடல் காட்டியே ஜெயித்து வந்த அம்மணிக்குள் எவ்வளவு நிறவெறியும் உறைந்து கிடக்கிறதென்று சமீபத்தில் தெரிய வந்த பொழுது எல்லோருக்கும் தூக்கி வாரிப் போட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், ஒபாமா மறுபடியும் களமிறங்கியிருக்கும் இந்த தருணத்தில் அம்மணி ஒரு மேடையில் திடீரென அதிர்ச்சி கொடுத்தார். “அமெரிக்கர்களே, (அவர் சொல்லாமல் சொன்னது என் இனிய வெள்ளையர்களே), வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு முஸ்லிம் வாழ்கிறான். அவன் இரண்டாம் முறையும் அதிபராகும் கனவு காண்கிறான். முதல் முறை அவனை தேர்ந்தெடுத்தீர்களே அதற்காக நான் இப்பொழுது ஆடை அவிழ்க்கிறேன்” என்று சொல்லி தனது மார்புகளை மறைத்திருந்த துணியை அவிழ்த்து தனது திறந்த முதுகை எல்லோருக்கும் காண்பித்திருக்கிறார். அது போதாதென்று தந்து அரைகுறை குட்டைப் பாவாடையையும் அவிழ்த்து தன் பின்பின்பக்கத்தை.......... வேண்டாம் விடுங்கள். அதை எழுத எனக்கே கூசுகிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. மறுபடியும் கூட்டத்தின் பக்கம் திரும்பி ஆடைகளை கையால் பிடித்தவாறே திருவாய் மலர்ந்தருளிய பொன்வாக்கு “மறுபடியும் இந்த கருப்பு முஸ்லிமை தேர்ந்தெடுங்கள், நான் முழுதும் அவிழ்த்து விட்டு நிர்வாண காட்சி தருகிறேன்” என சவால் விட்டு விட்டு சென்று விட்டார்.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் அந்த நொடியிலிருந்து கருப்பன் என்ற ஒரே காரணத்துக்காக அவமானப் படுத்தப்பட்டவர் தான் இந்த பரிதாப ஒபாமா. பதவிப் பிரமாண நிகழ்ச்சியில், எல்லா வெள்ளையர்களுக்கும் வழங்கப்படும் அதே மரியாதைகள் கௌரவங்கள் அனைத்தும் ஒரு கருப்பனுக்குமா, நிறுத்துங்கள் அதை என திட்டம் தீட்டி சில வார்த்தைகளை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு, எல்லாம் முடிந்து கை குலுக்கியபின், இது செல்லாது, நீ எல்லோர் முன்பும் பதவி ஏற்பதற்கு சற்றும் தகுதியற்றவன், கருப்பனான உனக்கு தனியறையில் தான் பதவிப்பிரமாணம் செய்விப்போம், பலர்காண மகுடம் சூடுவது வெள்ளையர்களுக்கு மட்டுமே எனக் கூறி அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று யாரும் காணாவண்ணம் பதவி ஏற்கச் செய்து தனது நிறவெறியை தீர்த்துக் கொண்டது இந்த வெள்ளைச் சமூகம். இப்பொழுது இன்னொரு வெள்ளை அம்மணி அந்தக் கருப்பன் அதிபரானால் நான் ஆடை அவிழ்பேன் எனக் கிளம்பியிருக்கிறாள்.

கேட்டால் கருத்துச் சுதந்திரம் எங்கள் நாட்டில் அளவுக்கு அதிகம் என அமெரிக்கா எத்தனைதான் மார்தட்டிக் கொண்டாலும், ஒரு பெண் ஒரு கருப்பினத்தவர் அதிபரானால் நான் மேடையில் ஆடை அவிழ்ப்பேன் என்பது நிறவெறியில்லாமல் வேறு என்ன மண்ணாங்கட்டி சுதந்திரமோ.... இதுக்கு வக்காலத்து வாங்க ஒரு ஊடக கூட்டம் வேறு. அட போங்கடா ..., காரித்துப்ப வேண்டும் போலுள்ளது.

Monday, October 1, 2012

குருவுக்கு தானம் – குர்காவ்ன் - பாகம் - 1


கடந்த சில மாதங்களாக ஹரியானா மாநிலத்தின் குர்காவ்னில் அடியேன் வசித்து வருகிறேன். சென்னையை துறந்து குர்காவ்னில் குடியேற்றம். ஓங்கி நிமிர்ந்த அடுக்கு மாடி குடியிருப்புகள், பளபளக்கும் கண்ணாடி சுவர் கொண்ட அலுவலக வளாகங்கள், பலமொழி பேசும் மக்கள், மொத்தத்தில் இது ஒரு கான்கிரீட் காடு. உலகின் அனைத்து காடுகளிலுமிருந்து வந்த மனித மிருகங்கள் இங்கு சர்வ சாதரணமாய் நுனி நாக்கு ஆங்கிலமும், அரை குறை ஆடையுடனும் மால்களில் சுற்றி பிட்சா தின்று கோக் குடித்தவாறே இல்லாததை தொலைத்து, கிடைக்காததை தேடி என வரையறை இல்லா வாழ்வு வாழும் ஒரு மணற்பரப்பு இது. என்னதான் மேற்குல போர்வை போர்த்தி பொய் அழகு காண்பித்தாலும் தல புராணம் என்ற ஒன்று இல்லாமலா போய்விடும். தோண்டத் தொடங்கினால்  மிகவும் சுவராஸ்யமான ஒரு வரலாறு இது. வாசியுங்கள்.

குருவுக்கு தானம் – குர்காவ்ன் - பாகம் - 1
************************************************************************************
அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். கூந்தல் விரித்த ஏந்திழை ஒருத்தி ஐவர் முகத்தையும் அடுத்தடுத்து நோக்க அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். அம்பறாத்தூணியில் அடுக்கிய அம்புகளும், முறுக்கி முடங்கிய வில்லின் நாணும், புஜபலம் திமிறிய தினவெடுத்த தோளுமாய், கதாயுதத்தை கைக்குள் அடக்கி, கண்கள் அனைத்தும் தரையை நோக்க .அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். சுழலும் பூமி சுற்றிவர, சூரியன் தனது பாதுகை மாற்ற, குழம்பிய மனதை ஒரு நிலைப்படுத்தும் பிரயத்தனங்களில் தொடர்ந்து தோற்றார்கள். அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
************************************************************************************
பசுமை நிறத்துக்கு இலக்கணம் கூற படைத்தவன் படைப்பில் அது ஒரு அற்புத பூமி. ஓங்கி உயர்ந்த சிகரங்கள், பூத்துக் குலுங்கும் சோலை வனங்கள், தாழ்ந்து மிளிரும் பள்ளத்தாக்குகள், நெளிந்து வளைந்து குலுங்கி சிரித்து விழுந்து எழுந்து பாய்ந்து ஓடும் ஆறுகள் என அது ஒரு சொர்க்க பூமி. பூமிப்பந்தின் மேற்பரப்பில் இன்றும் கண்ணைக் கவரும் டேராதூன் நகரம். கிறிஸ்துவுக்கு முன்னே 9,000 ஆண்டுகளாம். அப்படியென்றால் இன்றைய தேதிக்கு சற்றேறக் குறைய 11,000 ஆண்டுகள் எனக் கொள்ளுங்களேன். (ஏயப்பா, எத்தனை.....) அத்தனை ஆண்டுகளுக்கு முன் நாம் மேற்கூறிய சொர்க்க பூமியில் பரத்வாஜ முனிவர் என முற்றும் துறந்த முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். வாழ்ந்தவர் அப்படியே வாழ்ந்திருக்கலாம். திடீரென ஒரு நாள் கங்கைக் கரையில் அக்னிஹோத்திரம் செய்ய வேண்டும் என்ற கோக்கு மாக்கான ஆசை உதிக்க, மனுஷனுக்கு நிலை கொள்ளவில்லை. குடுமி வைத்து தாடி வளர்த்த அனைத்து ரிஷிகளும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என ஒரு அவசர ஈ மெயில் அனுப்பி விட்டு, அவர் பாட்டுக்கு நடக்க ஆரம்பித்தார். காடு கடந்து மலை வந்தது, மலையை தாண்டினால் ஆறு வந்தது. ஆற்றைத் தாண்டினால் அது வந்தது, அதை தாண்டினால் இது வந்தது,, இப்படி வந்தது அனைத்தையும் தாண்டி பரத்வாஜர் கங்கைக் கரைக்கு வந்து சேர்ந்தார். இவ்வளவு கஷ்டப்பட்டு ஹை ஜம்ப், லாங் ஜம்ப் என எல்லா ஜம்ப்பும் பண்ணி வந்த பரத்வாஜ பிராமிணனை கவிழ்ப்பதற்கென்றே கங்கைக் கரையில் அது காத்து நின்றது. அக்னிஹோத்திரம் செய்து தனது ஆசையை நிறைவேற்ற வந்த அந்த அந்தணப் பெருமானை அது புரட்டிப் போட்டது. இது என்ன இது புயல் கடலில் இருந்தல்லவா வரும், ஆனால் நதியிலிருந்தும் புயலா என குடுமி வைத்த கோமகன்கள் குழம்பி நிற்க அந்த புயல் நதியின் ஆழத்திலிருந்து வெளிப்பட்டது. பரத்வாஜர் பரமனை மறந்தார். சுவாசம் நின்றது. மானுடம் வென்றது.

**************************************************************************************
அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். கூந்தல் விரித்த ஏந்திழை ஒருத்தி ஐவர் முகத்தையும் அடுத்தடுத்து நோக்க அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். மூத்தவன் பேசட்டும் என இளையவன் இளைத்திருந்தான். புஜபலமும் கதாயுதமும் முன்மொழியட்டும், இளயவன் நான் வழிமொழிந்தால் போதாதா என கடையவன் கண் தாழ்ந்திருக்க அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். கூந்தல் விரித்த ஏந்திழை ஒருத்தி ஐவர் முகத்தையும் அடுத்தடுத்து நோக்க அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

************************************************************************************
பரத்வாஜர் பரமனை மறந்தார். நதியில் குளித்து தலை முடிந்த அந்த புயல், சுண்டக்காய்ச்சிய பாலின் மேலே ஒரு மென்மையான ஆவி எழுமே, அதே மென்மையில் ஒரு வெள்ளைத் துணியுடுத்தி, அங்கத்தின் மேடுகளும், கிறக்கம் தரும் லாவண்யங்களும், இறங்கி எழுந்த பள்ளங்களும் அப்பட்டமாகத் தெரிய அன்ன நடை நடந்தது. கமண்டலங்களும், நூற்றிஎட்டு ருத்திராட்ச கொட்டைகள் கோர்த்த ஜபமாலைகளும் தாங்கிய அந்த அந்தணனின் கரங்கள் வாழ்வில் முதல் முறையாக நடுக்கம் கண்டது. இமைகளை யாரோ இழுத்து வைத்து தைத்து விட்டது போல் நைனங்கள் இமைக்க மறந்து தொலைத்தான் பரத்வாஜன். தேவ லோகத்தில் இருந்து இறங்கி வந்து கங்கையில் நீராடிய கிரிதாட்ச்சி என்னும் அப்சரா அவன் முன்னே அன்ன நடை நடந்து தொலைக்க, வீசிய காற்று விஷமம் செய்து அப்சரசின் மேலிருந்த பாலாவி போன்ற மேலாடையையும் கவர்ந்து செல்ல பிறந்த மேனியாய் அப்சரா நின்றாள். பரத்வாஜன் துறவம் துறந்தான். அங்கத்தின் அனைத்து சுரப்பிகளும் சுரக்க, அணைத்து வைத்திருந்த ஆண்மை விழித்தெழ, அப்சரசின் ஒரே ஒரு கண்ணசைவில் பாவம் அந்த அந்தணனின் அனைத்து தவ வலிமையையும் தவிடு பொடியானது. அவனுக்குள் இருந்த ஆண் கிளர்த்தெழுந்தான். கணப்பொழுதில் காம தலைக்கேற அவனுக்குள் இருந்து அது வெளியேறியது. விபரீதம் புரிந்ததும் வெளியேறிய ஆணின் அடையாளத்தை அவன் ஒரு கலயத்தில் ஏந்தி நின்றான். (இந்த நிகழ்வு எனது ஆபாச கற்பனையல்ல. மகாபாரதத்தின் சம்பவ பர்வ பாகத்தில் முப்பத்தியொன்றாவது அத்தியாயத்தில் துரோணாச்சாரியரின் பிறப்பின் மர்மத்தை இப்படித்தான் விளக்குகிறார்கள்).

கர்ப்பத்தில் உறையாமல், நவமாசம் துயிலாமல், பெண்ணின் சினை சேராமல் கலயத்தில் உதித்தவன்தான் துரோணாச்சாரியன். பின்னாளில் குருஷேத்திர யுத்தத்தில் மிகப் பெரிய பங்காற்றிய துரோணன் இப்படி மனித கற்பனைக்கு சற்றும் எட்டாத விதத்தில் கலயத்தில் பிறந்தான்.
************************************************************************************
அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். கூந்தல் விரித்த ஏந்திழை ஒருத்தி ஐவர் முகத்தையும் அடுத்தடுத்து நோக்க அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். வலியோன் வாய் திறக்கட்டும் என இளையோன் எண்ணிக் கொள்ள, இளையோன் தான் சொல்லட்டுமே என வலியோன் வாளாவிருக்க, அமைதி அங்கு ஐந்து எரிமலைகள் அமைதிப் போர்வை போர்த்தியபடியே நாடகம் நடித்தன.

************************************************************************************

(தானம் பெற்ற ஊரைப் பற்றி இன்னும் வரும்)

Monday, February 27, 2012

அழித்து விடு அர்ஜுனா...

“”எதிரே நிற்பவர்கள் என் குடும்பத்தார், என் உறவினர்கள், நேற்று வரை ஒரே குடும்பத்தில் ஒரே உறைவிடத்தில் ஒன்றாய் வளர்ந்து, ஒன்றாய் உறங்கி, ஒன்றாய் உண்டு களித்தவர்கள் என்ற உறவின் உணர்வுகளை ஒட்டு மொத்தமாய் கொன்று விடு, அம்பராத்தூணியில் அயர்ந்துறங்கும் அம்பை எடு, வில்லில் பொருத்தி நிமிர்த்திப் பிடி, புருவத்துக்கு மத்தியில் புலன்களை அடக்கு, எதிரில் தெரிவது அதர்மம் எனும் எதிரி மட்டுமே, நாணை இழு, அம்பின் கூர்முனைக்கு அதர்மம் வாழும் இதயம் மட்டுமே இலக்காக்கட்டும். அர்ஜுனா, அழித்து விடு, விழுவது உறவானாலும், அழிவது அதர்மமாகட்டும்””

குருஷேத்திர என்கவுண்டர் நமக்கெல்லாம் ஒரு பால பாடம். எத்தனையோ யுகங்கள் கழிந்த பின்பும் இந்த என்கவுண்டர் நியதி இன்னும் நியாயப் படுத்தப்படுவது இந்திய மண்ணின் இயல்பாகிப் போனது.
குற்றங்கள் எவ்வகையாயினும், மனித சமூகத்தின் உச்ச பட்ச தண்டனைகளை விசாரணையில்லாமலே வாரி வழங்கிவிட, அதிகாரம் எனும் தர்மத்தின் செங்கோல், கேள்விகள் ஏதுமில்லாமல் அனுமதி அளிக்கிறது. பசு மேடையேறி மணியை அடித்தவுடன், விசாரணை ஏதுமில்லாமல் தன் மகனையும் பலி கொடுப்பவர்களின் செயல் இங்கு நீதியை நிலை நாட்ட செய்த தியாகமாகத்தான் சித்தரிக்கப்படுகிறதே ஒழிய, அது ஒரு விசாரணை இல்லா படுகொலை என்பதும் அரச அதிகாரத்தின் உச்ச பட்ச துஷ்பிரயோகம் என்பதும் சௌகரியமாக மறைக்கப்படுகிறது. ஒரு கல்லில் இரண்டு மாங்காயாக ஒரு தகப்பனின் தியாகம் எனவும், மன்னனின் நீதி வழுவாமை எனவும் புண்ணியச் செயல்களின் சாயம் பூசப் படுகிறது.

ஆமாய்யா, உன்னோட பணத்தை திருடிட்டு போயிருந்தா உனக்கு வலி தெரியும்...
உன்னோட வீட்டுக்கு பக்கத்துல ஒருத்தன் துப்பாக்கி எடுத்துட்டு சுட்டுகிட்டிருந்தா இந்த பாலபாடம், குருஷேத்திரம்கர புண்ணாக்கெல்லாம் பேசுவியா???
அவனை புடிக்கப் போன போலீஸ்ல உன்னோட அண்ணனோ தம்பியோ இருந்திருந்து அவனை வீட்டுக்குள்ள ஒழிஞ்சிருக்கறவன் துப்பாக்கியால சுட்டிருந்தா இப்பிடித்தான் கேள்வி கேப்பியா???
அது எப்பிடியா போலீஸ்காரன் மாத்திரம் கருணையின் மறு உருவமா இருக்கணும்னு சொல்லி சொம்பு தூக்கீட்டு கொஞ்சம் கூட கூசாம ஜால்ரா போடறீங்க???
ரோட்ல நீ வண்டி ஓட்டும் போது, உன்னை ஒருத்தன் முந்திகிட்டு போனாலே அவனை கெட்ட வார்த்தைல திட்டற நீ, உன்னை ஒருத்தன் அருவாளை எடுத்து வெட்ட வரும்போது, ஏ, கொஞ்சம் நில்லுப்பா, அதாவது அஹிம்சைங்கறது என்னான்னா........ அப்பிடின்னு நீதி போதனை பண்ணிகிட்டிருப்பயா????
வந்துட்டானுக சும்மா, மனித உரிமை, மண்ணாங்கட்டி பெருமைன்னு பேசிகிட்டு...போய்யா..., போய் பொழப்ப நடத்தற வழியைப் பாருய்யா....
எல்லாருடைய மனதிலும் மேற்கண்ட கேள்விகள் ஊற்றென பெருக்கெடுத்து வருவதும் இயல்புதான்.

இந்த அவசர யுகத்தில் உடனடி தீர்வுகளை நோக்கி மனித மனம் ஏங்கித் தவிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. பொறுமை என்பது காட்சிப் பொருளாய் மாறி விட்ட இந்த யுகத்தில் உடனடி தீர்வுகள் மட்டுமே மனம் விரும்பும் மந்திரமாயிருக்கிறது. புண்ணை அறுத்து சீழ் பிதுக்கி, தீயால் சுட்டால், புண்ணை உருவாக்கும் கிருமி அழிந்து போவதோடு, இன்னொரு முறை புண் வருவதற்கான சாத்தியமே இல்லாது போகும். இது நிரந்தர தீர்வு. ஆனால், புண்ணுக்கு மேலே களிம்பு பூசி, சருமத்தை மட்டும் சரி செய்து விட்டால், பார்ப்பதற்கென்னவோ சருமம் அழகாகலாம். ஆனால், புண்ணும் புரையும் குணப்படுவதில்லை.

இப்படித்தான் இன்று எல்லா சமூகப் பிரச்சனைக்கும் உடனடி தீர்வு விரும்பப் படுகிறது. கடிக்கும் கொசுவிலிருந்து நம்மை பாதுகாக்க, கவச வளையங்களின் பாதுகாப்பை நம்பும் நாம், கொசு உற்பத்தியை தடுக்க விழைகிறோமா என்றால் இல்லை. எட்டு மணி நேரத்திற்கு கொசுத்தொல்லையிலிருந்து விடுதலை என்ற விளம்பரத்தில் மயங்கிப் போகும் நாம், கொசுவிலிருந்து நிரந்தர விடுதலை எப்படி என யோசிக்க மறுக்கிறோம்.

கொள்ளைக்கு கொலைதான் மருந்தென்பது புரையோடிய புண்ணை மூடி மறைத்து களிம்பு புசி சருமத்தை அழகு செய்யும் அலங்கார வைத்தியமே தவிர, புண்ணை புடமிட்டு குணப்படுத்தும் சரியான வைத்தியமல்ல.
கொள்ளை ஒரு சமுதாய வியாதி என்றால், இந்த கொலை செய்யும் வியாதிக்கு எது மருந்து???

மின்வெட்டால் உற்பத்தித் துறை முழுவதும் முடங்கிக் கிடக்கிறது. மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருக்கும் பஞ்சாலைத் தொழிலாளர்கள் இப்பொழுதே நகைகளையும், வாகனத்தையும் அடமானம் வைத்து சோறு தின்ன வேண்டிய அவல நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள். மின் வெட்டால் பொதுத் தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் இருட்டில் படிக்க வேண்டிய கட்டாயம் வந்ததில், ஒரு சந்ததியின் எதிர்காலமே கேள்விக் குறியாகி நிற்கிறது. நெற்களஞ்சியமாம் தஞ்சையில் விவசாயிகள் ஈரத் துண்டுகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டுள்ளனர்.

மக்களின் கோபம் ஒட்டு மொத்தமாய் வெடித்துச் சிதறும் முன் எதையாவது செய்து மக்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டிய கட்டாயத்தில் ஆளும் வர்க்கம் உள்ளது. தொடர் கொள்ளைகளில் ஒரு துப்பும் கிடைக்காமல் திண்டாடிய காவல் துறையின் ஒட்டு மொத்த கோபத்தின் வெளிப்பாடாய் ஒரு கொலை நாடகம் அரங்கேறியுள்ளது.

மக்களும் இதை இரண்டு நாட்கள் விடிய விடிய, வாய் வலிக்க வலிக்க பேசுவார்கள். மனித உரிமை, மக்களின் பெருமை, மடிவது கொடுமை, மடிசார் அருமை, மறப்பது சிறுமை, முனியம்மா கண்மை என ஒரு சில அறிவு ஜீவிகள் டை கட்டிக்கொண்டு, தொலை காட்சியில் நுனி நாக்கு ஆங்கிலத்தில் மினரல் வாட்டர் குடித்துக் கொண்டு பேட்டி கொடுப்பார்கள். ஊடகங்களும் அடுத்த ஊழல் வெடிக்கும் வரை, அடுத்த நடிகை அம்மாவாகும் வரை, அடுத்த ஆசிரியர் கொல்லப்படும் வரை, ஐந்து மாநில தேர்தல் முடிவு வரை இதே மாவை அரைத்துக் கொண்டிருப்பார்கள்.

மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை முன்வைக்காமல், தற்காலிகமாக களிம்பு பூசி அழகு பார்க்கும் குறுகிய நெஞ்சுடையோர் கைகளில் அதிகாரம் இருக்கும் வரை, அர்ஜுனா நீ சூதாடினாலும் அதுவும் தர்மமே, உன் வீட்டு பெண்ணை பணயம் வைத்து, பெண்ணும் ஒரு போகப் பொருள்தான் என சொல்லாமல் சொன்னாயே அதுவும் தர்மமே, நட்ட நடு சபையில் உன் பெண்ணின் உடல் தெரிய அவள் உடைகள் உரியப் பட்ட பொழுதும் சூதாட்ட விதிகளுக்கு முற்றும் கட்டுப்பட்டு முழுதும் மௌனம் காத்தாயே அதுவும் தர்மமே, அதர்மம் எதுவென்று அதிகாரம் படைத்த நான் அரிச்சுவடி சொல்லுகிறேன். ஆர்த்தெழு அர்ஜுனா, அம்பை வில்லில் பொருத்து, புருவத்துக்கு மத்தியில் புலன்களை அடக்கு, நாணை இழுத்து நன்றாக குறி பார், வில்லில் வீரனான உன் முன் நிற்கும் எதுவும் அதர்மமே... வில் வித்தை எனும் அதிகாரம் உன் கையில் இருக்கும் வரை உன் முன் நிற்கும் எதுவும் அதர்மமே... அழித்து விடு அர்ஜுனா.... அழித்து விடு.....

Monday, January 2, 2012

பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே 2/01/2012

விடுமுறை முடிந்து விட்டது. மறுபடியும் ஆணி புடுங்க வந்து விட்டோம். யார் சொன்னது மாற்றம் மட்டுமே மாறாது என்று. இன்னும் இந்த நித்தம் சுழலும் புண்ணிய பூமியில் எத்தனையோ விஷயங்கள் மாறவே இல்லை பிதாவே. சலிக்கும் வரை ஆருடங்கள், சகிக்க முடியா சனிப் பெயர்ச்சி பலன்கள், உலக அழிவை பற்றிய தீர்க்க தரிசனங்கள், மாயன் காலண்டரின் மர்ம முடிச்சுகள், முல்லைப் பெரியாரின் அருவருப்பு அரசியல் நாடகங்கள், தானே புயலின் கோர தாண்டவங்கள், கூடங்குளத்தின் அணு உலை அரசியல்கள், சச்சின் டெண்டுல்கர் என்னும் இந்திய கடவுள் சாதனை படைக்க சிறப்பு வேண்டுதல்கள், உலக அழகி குழந்தை பெற்றுக் கொண்டதற்காய் இனிப்பு பரிமாறும் கவரப் பேட்டை கந்தசாமிகள், புதிய ஆண்டிலே இந்தியர்களை மட்டும் ஆசீர்வதிக்க வித விதமான போஸ்டர்களில் அவதரித்திருக்கும் இயேசு கிறிஸ்து, பெய்த ஓரிரு மழைக்கே சவக்குழி தோண்டும் எங்கள் ஊர் சாலைகள், புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி அரிவாள் தூக்கிய கதாநாயகன் போட்டோவில் அந்த கழிசடையின் காலடியில் தன் போட்டோவைப் போட்டு, இப்படிக்கு “கரடிப்பட்டி டெரர் பாய்ஸ்” என தனக்குத்தானே முடி சூட்டிக்கொண்டு வாழ்த்துச் சொல்லும் வருங்கால தூண்களின் பிளக்ஸ் பேனர்கள் என எதுவுமே மாறவில்லை பிதாவே. இவைகளெல்லாம் என்று அழிந்து ஒழியுமோ அன்றுதான் மாற்றம் மட்டுமே மாறாதது என்று சொல்ல முடியும் பிதாவே.


கிறிஸ்மஸுக்கு மாய்ந்து மாய்ந்து வாழ்த்து அனுப்பி, முருக்கு தின்று, கேக் வெட்டி என்று எல்லா ஜனநாயக கடமைகளையும் முடித்து விட்டு, அக்கடா என அயர்ந்து அமர்ந்தால், புது வருடம் வந்து விட்டதாம். புது வருட வாழ்த்துக்களையெல்லாம் வாங்கி, கொடுக்க வேண்டியவற்றை கொடுத்து கொஞ்சம் சலித்து உட்கார்ந்தால் உடனே இனிய பொங்கல் வாழ்த்துக்கள்னு மெயில் அனுப்பறாங்க பிதாவே…. நலம் விரும்பிகளின் அன்புத்தொல்லைக்கு ஒரு அளவே இல்லாம போயிருச்சு பிதாவே…..

புத்தாண்டின் புனித வாக்கு


நாங்கள் வாழும் பூமியின் மேற்பரப்பில் ஒரு திருச்சபையில் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களில் ஒரு வினோத வழக்கம் உள்ளதாம் பிதாவே. கைக்கு அடக்கமாக சாதாரண புத்தக அளவுகளில் இருக்கும் பைபிளை விட கொஞ்சம் பெரிய அளவில் ஒரு பைபிள் இருக்கிறது. புத்தாண்டு துவங்கும் இரவு நடக்கும் வழிபாடுகளின் இறுதியில் இந்த பைபிளிலிருந்து ஒரு வசனத்தை அங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் தெரிவு செய்வார்கள். அந்த வசனத்தில் இருக்கும் வாக்குறுதி தான் அவர்களின் பரமபிதா அவர்களுக்கு அந்த வருடம் பூராவும் தரும் வாக்குறுதியாக நம்புகிறார்கள்.


ஆனால், பரமபிதாவின் பரிசுத்த விசுவாசிகள் தனக்குப் பிடித்த வசனத்தை தெரிவு செய்ய முடியாது. அங்குதான் இருக்கிறது இந்த மொத்த நாடகத்தின் சுவராஸ்யமே. பைபிள் செங்குத்தாக வைக்கப்பட்டிருக்கும். வாக்குத்தத்தம் வேண்டிச்செல்லும் பக்த கோடிகளின் கையில் ஒரு பட்டு நூல் கொடுக்கப்படும். இவர்கள் கண்களை மூடிய வண்ணம் அந்த பட்டு நூலை பைபிளின் ஏதாவது ஒரு பக்கங்களுக்கு நடுவில் சொருக வேண்டும். உடனே பைபிள் திறக்கப்பட்டு அந்த பக்கங்கள் விரித்து வைக்கப்படும். இப்பொழுது இந்த வாக்குத்தத்தம் வேண்டி நிற்கும் பக்த கோடி கண்களை மூடிக் கொண்டு அந்த பக்கங்களில் தன் விரலால் ஒரு வசனத்தை சுட்டிக் காட்டுவார். உடனே அங்கு இருக்கும் ஒரு குழந்தை அந்த வசனத்தை வாசிக்கும். அந்த வசனம்தான் அவருக்கு புத்தாண்டின் புனித வாக்கு என அர்த்தம் கொள்ளப்படும்.


இப்படி நடந்த புனித வாக்கு படலத்தில் ஒருவர் ஒரு வசனத்தை மிகுந்த பய பக்தியுடன் தேர்வு செய்ய, அந்த வசனத்தின் விபரீதம் புரியாமல் அதை வாசித்த குழந்தையும் வாசித்து விட்டது. அந்த வசனம் “யூதாஸ் நாண்டு கொண்டு செத்தான்” என்ற புனித வாக்கு. பதறிப் போன பக்த கோடி, அய்யோவென அதிர்ந்து போய், மற்றுமொருமுறை பட்டு நூலை சொருகி, வசனத்தில் விரல் வைக்க, இப்பொழுது வந்த வசனம், ”நீயும் போய் அப்படியே செய்”. இப்படி புனித வாக்குகள் அருளும் பரம பிதாக்களிடமிருந்து எங்களை இந்த புதிய ஆண்டில் இரட்சித்துக் காத்தருளும் பிதாவே.