Monday, October 18, 2010

ஜுகல்பந்தி 19 - 10 - 2010 , நாட்டு/வீட்டு நடப்புகள்


நாட்டு நடப்புகள் :


வெற்றிகரமாக காமன்வெல்த் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கும்படியாக ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நூற்றியொரு பதக்கங்கள், 4 X 100 மீட்டர் தூர ஓட்டத்திலும் தட்டு எறிதலிலும் நம் இந்திய வீராங்கனைகள் நிகழ்த்திய சாதனைகள் எந்த இந்தியனது நெஞ்சையும் நிமிரச் செய்யும். குத்துச் சண்டையும், மல்யுத்தமும் இந்தியர்களுக்கெனவே எழுதப் பட்டதோ என்னவோ என நினைக்க வைக்கும் படியாய் பதக்கங்களை வாரிக் குவித்து விட்டனர். இந்தியாவின் தங்க பதக்கங்களில் கடைசி பதக்கத்தை போராடிப் பெற்ற சானியா நெய்ல்வாலின்ஒவ்வொரு அடியையும் ரசித்த ரசிகர்களின் கர கோஷத்தால் அரங்கமே அதிர்ந்தது. கடைசியில் இறுதி விழா நிகழ்ச்சிகளில் கண்ணைப் பறிக்கும் லேசர் விளக்குகளின் ஜாலம், இந்திய பாரம்பரிய வீர விளையாட்டுகளின் வீர சாகசங்கள், ராணுவ வீர்ர்களின் கட்டுக்கோப்பான இசை நிகழ்ச்சி என இறுதி விழா களைகட்டினாலும், குழப்பங்களின் நாயகனான சுரேஷ் கல்மாடி இறுதி உரையில் உளறித்தள்ளி ஒரு வழியாய் முடித்தார்.


ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகாரிகளின் திறமையின்மை, ஒப்பந்தக்காரர்களின் கையாலாகத்தனம், தெளிவான திட்டமிடாமை, கடைசி நிமிடம் வரை ஒருவரையொருவர் குற்றம் சொல்லி விரல் நீட்டி விளையாடியது, போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்புவரை அடாமல் பெய்த மழையால் விழைந்த இயற்கையின் சதி, பொறுப்பானவர்களின் சோம்பேறித்தனம், எங்கு குற்றம் கண்டு பிடிக்கலாம் என கண்ணில், மூக்கில், வாயில் இன்னும் எல்லா இடத்திலும் விளக்கெண்ணய் ஊற்றிக்கொண்டு ஆராய்ந்து, பேனை பெருமாளாக்கி, அதை உலகம் முழுவதும் தம்பட்டம் அடித்து, தனது நிறவெறிக்கு தீனி போட்டு தனக்குத்தானே திருப்தியாகிக் கொண்ட மேற்கத்திய நிறவெறி ஊடகங்களின் பொய் பிரச்சாரம், அதற்கு துதி பாடிய வெட்கங்கெட்ட, மான ரோஷமில்லாத, உப்புப் போட்டு சோறு திங்காத இந்திய ஊடகங்களின் உள்நாட்டு சதி என எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்தியா சாதித்துக் காட்டியிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமாய் இருந்த அந்த 21,000 தன்னார்வ சேவையாளர்களுக்கும், மற்றும் தனது கடைமையில் சற்றும் தளராது சர்வ தேச அரங்கில் இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்க வைத்த ஒவ்வொரு ஊழியனுக்கும் எங்களது நன்றிகலந்த வணக்கங்கள்.
ஆனால், அதே வேளையில் நாங்கள் இன்னும் பரிணாம வளர்ச்சியில் ஒரு படி பின் தங்கித்தான் இருக்கிறோம், நாங்கள் மனிதர்களாய் வளர்வதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகும் என நிரூபித்து விட்ட ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களின் அருவருப்பான நிறவெறியாட்டத்துக்காக அவர்களை செருப்பிலடித்து சிறையிலடைத்திருக்க வேண்டும். ஆனால் இந்திய போலீஸோ வழக்கம் போல வெள்ளைத்தோலின் முன் மண்டியிட்டிருக்கிறது. இதற்கு எங்கள் வன்மையான கண்டனங்கள்.


உலக நடப்பு :


சிலி நாட்டில் நடந்த சுரங்க விபத்தும், பின் சிறைப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களும், அவர்களை அதிசயமாய் மீட்ட கதையையும் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதில் நிறைய சுவராஸ்யமான சம்பவங்களும் நிகழ்ந்திருக்கிறது. எல்லாம் ”கில்மா” மேட்டர்தான்.
யோன்னி பாரியோஸ் என்ற இந்த சுரங்கத் தொழிலாளிக்கு 28 வருடங்களுக்கு முன் மார்த்தா சாலினாஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. சகதர்மிணியுடன் ஒழுக்கமாகத்தான் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். என்னவாயிற்றோ ஏதோ தெரியவில்லை, திடீரென ஒருநாள் இருவருக்கும் பிணக்கு ஏற்பட 2009 ம் ஆண்டில் மனைவிக்கு தெரிவிக்காமலே, அவரை விவாகரத்து செய்யாமலே படத்தில் அவர் அணைத்திருக்கும் பெண்ணுடன் (சூசன்னா) தனியே வசித்து வந்திருக்கிறார்.


இவர் சுரங்கத்தினடியில் மாட்டிக் கொண்டதும் சக நண்பர்களுக்கு ஒரு மருத்துவரைப் போல இருந்து உதவிகள் செய்தும், அவ்வப்பொழுது எல்லோரையும் சிரிக்க வைத்தும் மனோதிடம் கெடாமல் பார்த்துக் கொண்ட இந்த நல்ல மனிதருக்கு இப்படி ஒரு மறுபக்கம் இருக்கிறதென எல்லாரும் அறிந்து கொண்டது இந்த சுரங்க அடைப்பு விவகாரத்துக்கு அப்புறம்தான்.
இவர்கள் உள்ளே இருக்கும்போதே, நீங்கள் வெளியே வந்த்தும் யாரைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்க்கப்பட்ட கேள்விக்கு, நான் என் பெரிய வீட்டையும் சின்ன வீட்டையும் பார்க்க விரும்புகிறேன் என்று இவர் சொல்லிவிட, இரண்டு அம்மணிகளும் சுரங்கத்துக்கு வெளியே நேருக்கு நேர் சந்தித்ததில் குடுமி பிடி சண்டையாகிவிட, கஷ்டப்பட்டு விலக்கி வைத்திருக்கிறார்கள். இதை அறிந்து கொண்டதும் இவரது மனைவி இவர் வெளியே வருவதை நான் தொலைக்காட்சியில் கூட பார்க்க விரும்பவில்லை என வீம்பு பிடித்து கோபம் கொண்டு போய் விட்டார். ஆனால் இவரது இப்போதைய நாயகி மாத்திரம் கால்கடுக்க நின்று கண்ணீர் மல்க வரவேற்றிருக்கிறார்.


இப்படி உள்ளிருந்த இன்னும் நிறைய பேரின் ரகசிய சொந்தங்கள் சுரங்கத்துக்கு வெளியே அவர்கள் பெயர்கள் ஏந்திய பலகைகளுடன் குவிந்து விட, ஏகத்துக்கும் குடுமி பிடி சண்டைகள் நிகழும் அபாயம் இருப்பது கண்டு அரசாங்கம் இதை எப்படி சமாளிப்பது என திணறிப் போய் விட்டதாம்.


ங்கொய்யால பக்கம் : (கொஞ்சம் மீள்ஸ்)


அப்பா, அம்மாக்கு புது துணி


தங்கச்சிக்கு புது செல்போன்


தம்பிக்கு டிஜிட்டல் கேமரா


பொண்டாட்டிக்கு புது சங்கிலி


புள்ளைங்களுக்கு பட்டாசு


பக்கத்து வீட்டுக்கு பலகாரம்


ங்கொய்யால


விட்றா, விட்றா, அடுத்த தீவாளிக்கு


புதுச்செருப்பு வாங்கிக்கலாம்.

Monday, October 11, 2010

என்னத்தச் சொல்ல....

ஒரு உயிர் இனத்தை சினிமா என்ற ஒரு சமுதாய நோய் இந்த அளவுக்கா வசியப்படுத்தும்??? அப்பப்பா, எத்தனை விமர்சனம், எத்தனை அமர்க்களம். இந்திய நாட்டின் அனைத்து ஜீவராசிகளையும் தன் பக்கம் ஈர்க்கிற ஒரு சாராரின் வியாபார உத்திக்கு, ஒவ்வொரு இந்தியனும் தனது கணிசமான நேரத்தை எதாவது ஒரு வழியில் செலவிடுகிறான். சமீபத்தில் கொங்கு மண்டலம் வரை தரை வழியாக பயணம் செய்தேன். இதற்கு முன்பாக இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் ஊர் பெயர் தாங்கிய பலகை காணப் படுகிறதோ இல்லையோ, கொக்கோ கோலாவின் விளம்பர பெயர் தாங்கிய பலகைகள் கண்டிப்பாக காணப்படும். ஆனால், இப்பொழுது தங்கள் தங்கத் தலைவனின் புதுப்படம் வெற்றியடைய ஒவ்வொரு கிராமத்தானும் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பர பேனர் கட்டியிருக்கிறான்.

விளம்பர பேனர் கட்டுவதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. அதில் இவனது தங்கத்தலைவன் நின்று, நடந்து, படுத்துக் கொண்டிருக்கும் இடத்திலெல்லாம் அவன் காலடியில் கை கூப்பி சிரித்த வண்ணம் இவன் தன் படத்தை போட்டிருக்கிறான். அட முட்டாள் தமிழர்களா, நீங்கள் இவ்வளவு கொண்டாடும் தங்கத்தலைவன் ஒரு முறையாவது உங்கள் அன்புக்கு ஊசிமுனையளவாவது மதிப்பு கொடுத்திருக்கிறானா??? ஹிந்தி திரையுலகிலும் இந்தப் படம் வசூலை அள்ள வேண்டுமென்பதற்காக, மெனக்கெட்டு மும்பை சென்று, அங்கு பால் தாக்கரேயை சந்தித்து குலாவிக் கொண்டிருக்கும் அவனுக்கு நீங்கள் பாலாபிஷேகம் செய்கிறீர்களே, எப்படா இந்த துதி பாடற வியாதில இருந்து வெளிய வருவீங்க.....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காமன்வெல்த் போட்டிகளின் குளறுபடிகள் ஒருபுறமிருந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என் நிரூபிக்கும் வண்ணமாக ஒரு துவக்க விழா நடத்திக் காட்டி விட்டு, போட்டிகள் சுமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஒரு சில நிறவெறியர்களின் தாகுதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முன்பதாக முற்றிலும் நிறவெறி கொண்ட மேற்கத்திய ஊடகங்களான பி.பி.சி, மற்றும் இன்ன பிற ஊடகங்கள், எங்கோ மூலையில் தொங்கும் ஒரு மின்சார ஒயரையும், இன்னமும் கட்டி முடிக்கப்படாத பாதசரி நடை மேடைகளையும், தொடர்ந்து ஒளிபரப்பி இந்தியர்களின் மேலுள்ள நிறவெறியை அப்பட்டமாக பறை சாற்றின. அடுத்த்தாக குத்துச் சண்டை வீரர்களை போட்டிக்கு முன்பாக எடை பார்க்கப் போனால், அந்த எடை இயந்திரங்கள் தரம் தாழ்ந்தவை என ஒரு முறை கூவித் தீர்த்தார்கள். எந்த மின்னணு இயந்திரத்திலும் கோளாறுகள் நடப்பதி இயல்பு தானே ஒழிய, அது இந்தியாவில் நடந்தால் அதை மட்டுமே வைத்து கூவிக் கூவி ஒப்பாரி வைப்பதை நிறவெறி என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்.

தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள போனாராம், அவர் நீந்தப் போகும் பொழுது இந்திய ரசிகர்கள் கூச்சலிட்டதால் அவரால் சரியாக நீந்த முடியவில்லையாம். அதனால் இந்தியர்கள் குரங்கு போல் கூச்சலிடுகிறார்கள் என திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் கால்பந்தானாலும் சரி, கிரிக்கெட்டானாலும் சரி, அங்கு அவர்கள் ஊதும் ஒலிப்பான்களால் காது கிழியும். ஆனால் அவருக்கு இங்கு இந்தியனின் சத்தம் குரங்கு சத்தமாய் கேட்கிறதாம், அதை நமது ஊடகங்கள் தவறாமல் ஒளிபரப்புகிறது. டேய், போய் முதல்ல உங்க முதுகுல இருக்கற அழுக்கை கழுவுங்கடா, அப்புறமா அடுத்தவனை பார்ப்பீங்களாம்.
ஆனால், இதில் வேதனை என்னவென்றால், இவர்களோடு சேர்ந்து கொண்டு நமது இந்திய ஊடகங்களும் இப்படி ஒப்பாரி வைப்பதுதான் வேதனையின் உச்சகட்டம்.... ம்.. என்னத்தைச் சொல்ல......

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கொஞ்ச நாட்களாகவே எங்கள் வீட்டில் ஆவின் பால் அட்டை வாங்க வேண்டும் என்ற குரல் எல்லா மூலைகளிலிருந்தும் ஒலிக்க ஆரம்பிக்க, கடைசியாக சென்ற வாரத்தில் ஒருநாள், அந்த அலுவலகம் நோக்கி அடியெடுத்து வைத்தேன். வழக்கம் போல வெளிச்சம் இல்லா இருட்டறையில், கைவைத்து தேய்ந்து போன மர மேஜைகளின் பின்னால், கட்டுக்கட்டான காகித மலைகளுக்கு நடுவில் அமர்ந்திருந்த ஒரு புண்ணியவான் என்னை ஏறெடுத்துப் பார்த்து விட்டு நான் வணக்கம் சொன்னவுடன் என்னை ஒரு வேற்று கிரக வாசி போல நினைத்தாரோ என்னவோ, ஒரு கேவலமான பார்வை பார்த்து விட்டு மறுபடியும் அந்த காகிதக் குவியலில் முகம் புதைத்துக் கொண்டார்.
“சார்”
“என்ன???”
“புது பால் கார்டு வாங்க என்ன செய்யணும்”
“புது கார்டு இப்பல்லாம் குடுக்கறதில்லை, ஒரு 5 மாசம் கழிச்சு வாங்கோ”
“சார், இப்பத்தான் கால் செண்டர்ல பேசினேன், அவுங்க உங்க கிட்ட விண்ணப்பம் குடுக்க சொன்னாங்க”
”அப்ப கால் செண்டர்லயே போய் விண்ணப்பம் குடுத்துருங்க, யார் சொன்னாங்களோ, அவுங்க கிட்ட போய் விண்ணப்பிக்கறதுதான முறை?”
“இல்ல சார், அவுங்க உங்க கிட்ட விண்ணப்பம் குடுக்க சொன்னாங்க”
“இங்க விண்ணப்பம் வாங்கறதில்லை, ஒரு 5 மாசம் கழிச்சு வாங்க”
“அப்ப விண்ணப்பம் வாங்குவீங்களா???”
“என்ன நீங்க கேள்வி மேல கேள்வி கேக்கறீங்க, ஒரு தரம் சொன்னா அதுக்கு மேல பேசக் கூடாது”
எனக்கு ஒண்ணு மாத்திரம் புரியல, இவுனுங்களுக்கெல்லாம் அரசாங்க சம்பளம் எதுக்கு குடுக்கறாங்களோ, ஒரு வாடிக்கையாளரிடம் எப்படி பேசணும்னு கூட தெரியாதா....., ம்.. என்னத்தைச் சொல்ல....