Friday, May 27, 2011

புலிகளும் புள்ளிமான்களும்

எங்கிருந்து ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. நீண்ட நாட்களாக நான் தொடர்ந்து வரும் பல பதிவர்களின் பதிவுகளை படிக்க முடியவில்லை. (நம்புங்க, ஆணி அதிகம்). இன்று தான் நேரம் கிடைத்து படித்தேன். நான் எப்பொழுதும் தொடரும் ஒரு பதிவர், ஏப்ரல் மாதத்தில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். தான் ஒரு கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில், அங்கு தான் கண்ட ஆண் பெண் உறவுகளை விவரித்து, அந்த உறவுகளைக் குறித்த தனது விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார். புலிகள் என்றும் சைவமாவதில்லை என மிக எளிதாக ஒரு பாலரை நோக்கி விரல் நீட்டியிருப்பது அதிர்ச்சியளிப்பது மட்டுமல்லாமல் வேதனை தருவதாகவும் உள்ளது. To be Honest, அவர்களது பதிவுகளில் உள்ள முதிர்ச்சியையும், தெளிவையும் கண்டு எப்பொழுதும் மகிழ்ந்திருந்த நான் இத்தகைய ஒரு ஒருதலைப் பட்சமான குரூர குற்றச்சாட்டைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். ”ஆண்கள் விரிக்கும் வலையில்” என ஒற்றைவரியில், ஒரு சில வார்த்தைகளில் ஒட்டு மொத்த ஆண் வர்க்கமும் நயவஞ்சக நம்பிக்கை துரோகிகள், இரு வேடமிடும் வேஷதாரிகள் என ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருப்பது இம்மியளவும் பொறுத்துக் கொள்ள முடியாதது சகோதரி.

கூடவே இன்னொரு பெண்பதிவரின் பதிவையும் படித்தேன். தமிழ்கவிஞர் ஒருவர் சொன்ன வெகுளித்தனம் என்ற ஒரு வார்த்தைக்காக ஒட்டு மொத்த ஆண் சமூகத்தையும் சாட்டையால் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஏன்? ஏன்? இங்கு அந்த கவிஞர் என்ன சொன்னார்? அது எப்படி புரிந்து கொள்ளப் பட்டது என்பதை விவாதிக்க நான் விரும்பவில்லை. ஆனால், ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின் மீதும் ஏன் இப்படி அபாண்டப் பழி சுமத்தப் படுகிறது என தெரியவில்லை. சமீபத்தில் ரயிலில் பயணம் செய்தேன். அதில் ரயில் பெட்டியில் சில பாதுகாப்பு விதிகளை ரயில்வே நிர்வாகத்தார் எழுதி ஒட்டி வைத்துள்ளனர். புகை பிடிக்காதீர்கள், மது அருந்தாதீர்கள் என்ற விதிகளோடு கூட பெண்களை தொந்தரவு செய்யாதீர்கள் எனவும் எழுதி, அதில பெண்கள் மீதான தொந்தரவு என்னென்ன என தெளிவாக ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் விவரித்திருந்தார்கள். அதில் குற்றங்கள் என வகைப்படுத்தியிருந்தவற்றை வாசித்தால் வயிற்றைக் கலக்குகிறது. ”பெண்களை உற்றுப்பார்ப்பது (stareing), அவர்கள் அருகில் சத்தமாக பேசுவது, பாட்டுப் பாடுவது”….. இப்படியாக அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. எல்லா ஆண்களின் பார்வைகளுமே பெண்களை துகிலுரிந்து அம்மணம் ரசிக்கும் அருவருப்பு நிறைந்ததுதானா?? எப்பொழுதுமே ஒரு ஆண்பிறவி என்பது வக்கிரம் பிடித்த காமுகனாகத்தான் சித்தரிக்கப்படும் கேவலமான சமூகத்திலா வாழ்கிறோம்??? இந்த முரணான குற்றச்சாட்டுகளுக்கு பதிவுலகமும் விதிவிலக்கல்ல என பார்க்கும் பொழுது வேதனைதான் மிஞ்சுகிறது.

ஒருவேளை பதிவுலகமும், இணையமும் தரும் முகமறியா சுதந்திரம் தான் இந்த கொடூர குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளிக்கும் சௌகர்யத்தையும், உரிமையையும் தருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் :
நான் பணி செய்யும் இடத்தில் உள்ள ஒரு நண்பி, எனக்கு நன்கு பரிச்சயமானவர், அவ்வப்பொழுது பணி நிமித்தமான உரையாடல்கள், மரியாதை நிமித்தமான சம்பிரதாயமான நலம் விசாரிப்புகள் என எனது உரையாடல்கள் அவர்களுடன் நிகழும். சில சமயம் பணி சம்பந்தப்பட்ட விளக்கங்கள் கேட்பார், என்னால் முடிந்தவரை உதவி செய்வதுண்டு. அவரை வேறு துறைக்கு மாற்றியவுடன் எப்பொழுதாவது சந்திக்கும் பொழுது வெறும் நலம் விசாரிப்புகளோடும், பண்டிகை தின வாழ்த்துகள் என Skype chat – லும் பேசிக் கொள்வோம். அப்படியான உரையாடலின் ஒரு பகுதியின் தமிழாக்கம்.

வணக்கம் சார், எப்படி இருக்கீங்க???

நல்லாருக்கேன், நீங்க எப்பிடி இருக்கீங்க???

நலம். அப்புறம் என்ன சார் விசேஷம்???

ஒண்ணும் இல்லை. அப்பிடியே போயிட்டிருக்கு.

ஆமா, சார் உங்க டிபார்ட்மெண்ட்ல புதுசா யாரோ வந்திருக்காங்களாமே???

ஆமாம், நேத்துத்தான் வேலையில் சேர்ந்தாங்க.

ஆளு எப்பிடி சார்???

எப்பிடி இருந்தா என்னங்க, நம்ம கம்பெனில ஒருத்தர இண்டர்வியூ பண்ணி வேலைக்கு சேர்த்தாங்கன்னா, அவுங்க நல்லா வேலை செய்வாங்கன்னு தெரிஞ்சதுனால தான வேலைக்கு எடுக்கறாங்க, அப்புறம் எதுக்கு இந்த கேள்வி???

அய்யோ, அதையா கேட்டேன், ஆளு பாக்கறதுக்கு எப்பிடி சார், சூப்பர் ஃபிகரா???

ஹலோ, இந்த கேள்வி தேவையில்லாதது. என் பார்வையில உலகத்துல இருக்கற எல்லாருமே அழகானவங்கதான்.

அடாடடா, என்னா ஒரு தத்துவம், என்னா தத்துவம்.. உங்க கிட்ட படிச்சுக்க வேண்டியது நிறைய இருக்கு சார்..

சரி, அப்புறம் பேசுவோம், இப்ப கொஞ்சம் வேலை இருக்கு.

இந்த உரையாடல் முடிந்து சில நாட்கள் கழிந்தபின், நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். வேறு பெண்ணும் இன்னொரு ஆண் நண்பரிடம் ஒரு மூன்றாவது பெண்ணைப் பற்றி ஒரு கமெண்ட் அடிக்க, அதை ஆமோதிப்பது போல் இந்த ஆண் நண்பரும் எதையோ உளறி வைக்க, அது அந்த பெண்ணைப் பற்றி அவர் வலியப் போய் வக்கிரமாய் கமெண்ட் அடித்ததாய் திரிக்கப்பட்டு, கடைசியில் அவர் வேலையை விட்டு தூக்கி எறியப் பட்டார். இதைக் கேட்டவுடன் பகீரென்றது எனக்கு.

ஒன்று அல்லது இரண்டு பெண்கள் இப்படி வம்பு பேசுவதும், கதை திரிப்பதுமாக சுற்றித் திரிகிறார்கள் என்றால், உடனே எல்லா பெண்களையும் பார்த்து விரல் நீட்டுவது எவ்வளவு அபத்தமோ, அப்படியே எதோ ஓரிரு காமுகர்கள் உள்ளனர் என்பதற்காய், ஒட்டு மொத்த ஆண் உலகத்தையும் பார்த்து வெகு சுலபமாக ஓநாய் கூட்டம் எனச் சொல்லி கேவலப்படுத்துவதும் அபத்தம் தான்.

மனைவி சமைப்பதில் தலையிடுவது ஆணாதிக்கம், கணவன் ” இன்னைக்கு சப்பாத்தி சாப்பிட வேண்டும் போலுள்ளது, அந்த சுண்டக்கடலைல தேங்காய் போட்டு அம்சமா ஒரு குருமா வைப்பயே அதையும் செய்யும்மா” என்று மனைவியிடம் கேட்டால் கூட அது ஆணாதிக்கம்தான். என்ன சமைக்கணும்னு நீ எப்படி ஒருதலைப் பட்சமாக முடிவு செய்யலாம்?? இதெல்லாம் உன் ஆதிக்கத்திமிர் இல்லாம் வேறென்ன?? ” நீ அந்த மயில் கழுத்துக் கலர் புடவையில் ஜம்முனு இருக்க செல்லம்” என்று தன் மனைவியிடம் கணவன் சொன்னால், அது கூட அடக்கு முறைதான், ஏனெனில் ஒரு பெண்ணின் உடை அணியும் சுதந்திரத்தில் கூட ஆண் தனது கட்டுப்பாடுகளை விதிக்கிறான். இங்கு தனது ஆதிக்கத்தை வன்மையாக அல்ல, மிகவும் நாசூக்காக, நலம் விரும்பி போல் நடித்து தனது ஆளுமையை நிலை நாட்டுகிறான். யமுனா ராகவன் சொல்வது போல, ஆண் எப்பொழுதும் தன் மனைவியுடன் உறவு கொள்ளும் பொழுது கூட கேவலமாக அவளை கேலி செய்து கொண்டே புணர்கிறான், உடல் உறவு என்பது வெறும் ஆண்களின் உடல்பசி தீர்க்கும் ஒரு செயல் அவ்வளவே, அல்லது பெண்ணுக்கு உடல் பசி என்ற ஒரு உணர்வே கிடையாது. ஒவ்வொரு முறையும் தம்பதிகளுக்குள் உடல் உறவு நிகழ்வதும் கூட ஆணின் வேட்கை நிறைவு பெறவே அன்றி, பெண்ணுக்கு அதில் எள்ளளவும் வேட்கை என்ற பேச்சுக்கே இடமில்லை.

இதுதானா, பெண்ணுரிமைக்கான கூக்குரல், அல்லது இதுதான் நீங்கள் குறிப்பிடும் ஆணாதிக்கமா????

இரண்டே இரண்டு வினாக்கள்:

முளைத்திருக்கும் ஓரிரு விழலுக்காக ஒட்டு மொத்த வயலையும் தீக்கொளுத்துவதுதான் பெண்ணுரிமையா???

ஆணின் செய்கைகள் அனைத்துக்கும் ஆணாதிக்கம் என்ற ஒரே சாயம் பூசும் நீங்களே, உங்கள் பார்வையில் ஆணாதிக்க திமிரில்லாத ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என வரையறை வகுத்து கொடுங்களேன்.

அடியேனின் இந்தப் பதிவில் இன்றைய பெண்களைக் குறித்த எனது பார்வையையும் சற்று வாசித்துப் பார்த்து விட்டு, இனிமேலாவது கல்லெறிவதற்கு முன், கூட்டத்தில் எறியாமல், குறி வைத்து எறியுங்கள் நண்பிகளே.

Tuesday, May 24, 2011

பரமண்டலங்களிலிருக்கும் எங்கள் பிதாவே - 24 மே 2011

சமச்சீர் கல்வித்திட்டம் எதற்காக கொண்டு வரப் பட்டதோ தெரியவில்லை பிதாவே. மக்களின் ஆங்கில மோகத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஆங்கில வழியில் கல்வி கற்றுத் தருகிறோம் என கவர்ச்சி விளம்பரம் செய்து மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதோடு, எங்கேயோ குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து, நரைத்த தலையும் தடித்த கண்ணாடியும் அணிந்த அறிவு ஜீவிகள் என அறியப்பட்ட இரண்டு மூன்று பேர் தெரிவு செய்யும் பாடத்திட்டங்கள்தான் இந்தியாவின் தலை சிறந்த கல்விப் பாடம் என சொல்லி, விற்பனை செய்யும் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலிருந்து எங்கள் குழந்தைகளை காத்தருள்வீர் பிதாவே.
இதை ஒழித்து விட்டு பயனுள்ள பாடங்களை மக்கள் பயில வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித்திட்டத்திலும் தங்களின் சுய புராணங்களை புகுத்தி, எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்தையே கேலி செய்யும் அரசியல் வாதிகள் என்னும் கேவலமான அற்பப் பதர்களின் கொடிய பிடியிலிருந்து கல்வியை மீட்டுத் தாருங்கள் பிதாவே.
ஆனால், அதற்கும் ஒரு படி மேலே போய், பழைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக அந்த திட்டத்தில் ஆயிரம் நன்மைகள் இருந்தாலும் அதை அப்படியே அழித்தொழிப்போம், எங்களின் அழித்தொழிப்பு நடவடிக்கைகள் முடியும் வரை மாணவர்கள் காத்திருக்கவும் என ஆணையிட்டு, பல கோடி மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் அயோக்கிய அரசியல் வியாதிகளிடமிருந்தும் எங்களை காத்தருள்வீர் பிதாவே.

சென்னையின் சிறப்பு என்று சொல்வது போல் ஒரு அரிய பெரிய நூலகம் “அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்” என்ற பெயரில் போன ஆட்சியில் ஒரு அருமையான நூலகம் அமைத்தார்கள் பிதாவே. உலகில் காணப்படும் பல அரிய நூல்களை சேகரித்து, வாசக தளங்களை விரிவு படுத்தி, பட்டதாரி மாணவர்களுக்கென ஒரு பெரிய பொக்கிஷத்தை வைத்துப் போயிருக்கிறார்கள். குறிப்பாக மருத்துவம், மற்றும் பொறியியல் மாணவர்களின் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத பல சர்வதேச புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அங்கு வந்து போகும் ஒவ்வொரு மாணவனும், இந்த அரிய பெரிய இமாலய முயற்சிக்காகவும், அதை சாத்தியமாக்கி இளம் மாணவ சமுதாயத்தினரின் பயனுக்காக இலவசமாக அர்ப்பணித்ததையும் பாராட்டி பாராட்டி புகழாரம் சூட்டி விட்டு போகிறார்கள்.

ஆனால் வழக்கம் போல காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு புதிய அரசும் அதன் மக்கள் விரோத கொள்கைகளும், உழவர் சந்தைகளை மூடி, சட்டசபை கட்டிடத்தை வெறுத்து ஒதுக்கி என வெறுப்பை உமிழும் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்த அறிவுக்களஞ்சியமான நூலகத்தை அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள் பிதாவே.

இந்த நாசா விஞ்ஞானிகள் எனும் மனநிலை பிறழ்ந்த பைத்தியக்கார கும்பல்களின் பிதற்றல்களுக்கும் உளறல்களுக்கும் ஒரு முடிவு கட்டுங்கள் பிதாவே.
சில இந்திய புராணங்களிலும் இதிகாசங்களிலும் அவதார புருஷனாக சித்தரிக்கப்பட்டும், இந்தியாவில் அதிகமாகவும் இன்னும் உலகின் சில பாகங்களிலும் தெய்வமாக வணங்கப்பட்டும் வருகிற இராமன் கட்டிய பாலம் இதுதான் என திடீரென ஒரு புகைப்படத்தை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்கள் என மின்னஞ்சல்கள் பறந்து பரபரப்பை ஏற்படுத்தின. அதற்கு அடுத்ததாக, சொர்க்கம் என்றால் இதுதான் என்பதை கூட இந்த விஞ்ஞானிகள் செயற்கை கோள்களின் மூலமும் வான ஆராய்ச்சி மூலமும் கண்டு பிடித்து விட்டதாக கதை விட்டார்கள். நல்லவேளை அவர்கள் அப்படி கண்டு பிடித்த சொர்க்கத்துக்கு நேரடி விமான சேவையை துவக்கவில்லை. இப்பொழுது புதிதாக ஒரு சூரியப் புயல் உலகத்தை 2012 ல் தாக்கப் போவதாகவும், இதன் தாக்கம் 100 மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளை விட அதிகமாக இருக்குமாம். அதனால் 2012 ல் உலகத்தின் பெரும் பகுதியோ அல்லது உலகம் முழுவதுமோ அழிந்து விடும் என புதிதாக கதை கட்டுகிறார்கள்.

உலகத்தின் அழிவிலிருந்தல்ல, இந்த பைத்தியக் காரர்களின் உளறல்களிலிருந்து எங்களை பாதுகாத்தருளும் பிதாவே.

Thursday, May 12, 2011

வெள்ளிக்கிழமை – 13 ம் தேதி – மூட நம்பிக்கை.




பதிமூன்று என்ற எண் பலராலும் ஒரு துரதிஷ்டவசமான எண்ணாகவே எண்ணப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய கால மன்னராட்சிகளில், மேலை நாடுகளிலும் சரி, கீழை நாடுகளிலும் சரி, இந்த எண் முடிந்த வரை தவிர்க்கப் பட்டிருக்கிறது. தங்கும் விடுதிகளில் 13ம் எண் அறை இருக்காது. வீதிகளை அல்லது வீடுகளை வரிசைப் படுத்தும் பொழுது கூட 13ம் எண் வீதியோ, வீடோ இருந்ததில்லை. அதிலும் மாதத்தின் பதிமூன்றாம் நாள் வெள்ளிக் கிழமையாக இருந்து விட்டால், அது மிகவும் துரதிஷ்டம் கொண்ட நாளாக கருதப் படுகிறது. முற்போக்கு சிந்தனைகளில் நாங்கள் எல்லோரையும் முந்தியவர்கள் என மார்தட்டிக் கொள்ளும் மேலை நாடுகளில் கூட இந்த மூடப் பழக்கத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழே நடப்பது, வீட்டில் கண்ணாடி உடைவது போன்றவை இன்னும் ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வாகவே இங்கு கருதப் படுகிறது.

கணக்கியலின் படி பன்னிரண்டு என்பது ஒரு முழுமையான எண்ணாகவே இதுவரை கருதப் படுகிறது. உலக நாகரிகமே இங்கிருந்து தான் தோன்றியது என சொல்லப்படும் மெசபொடோமிய சமவெளிகளில் தோன்றிய கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்த நம்பிக்கை தொடர்கிறது. இஸ்ரவேலர்களின் அதாவது யூதர்களின் பன்னிரண்டு கோத்திரங்கள், இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்கள், ஒரு கடிகாரத்தில் பன்னிரண்டு மணிக்கான சுழற்சி முறைகள், கிரக்க கடவுளர் பன்னிரண்டு பேர் என பட்டியலிட ஏராளம் தகவல்கள் உள்ளன. பதிமூன்று என்பது பன்னிரண்டிலிருக்கும் சமவிகித வகுபடும் தன்மையை குலைக்கும் ஒரு எண் என்பதால் இயல்பாகவே இது கணக்கியலாளர்களால் வெறுக்கப்பட்டது.

இந்தியாவில் இந்த வெள்ளிக்கிழமை பதிமூன்றாம் தேதி ஒரு அபசகுனமாக கருதப் படுவதில்லை எனவே நான் நினைக்கிறேன். ஆனாலும் நாம் பெருவாரியாக பின்பற்றும் கிரிகோரியன் காலண்டரின் படி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆரம்பிக்கும் ஒவ்வொரு மாதத்திலும் 13ம் தேதி வெள்ளிக் கிழமைதான் வரும். ஒரு சில வருடங்களில் இப்படி இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட வருவதுண்டு. ஆனால், பெருவாரியாக வருடத்தில் ஒரு மாதம் கண்டிப்பாக வெள்ளிக் கிழமை பதிமூன்றாவது தேதியாக இருக்கும்.
இந்த மூட நம்பிக்கை எவ்வாறு வளர்ந்தது என்று ஆராய்ந்தால் பல சுவராஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.

முதல் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்துவின் கடைசி விருந்து இதற்கு ஒரு காரணமாக அமைந்தது என்கிறார்கள். இன்றும் இந்த கடைசி விருந்தின் படங்களில் பார்த்தீர்களென்றால், இயேகிறிஸ்துவோடு சேர்ந்து பன்னிரண்டு சீடர்களுமாக பதிமூன்று பேர் அமர்ந்திருப்பார்கள். அப்படி அமர்ந்து அவர்கள் சாப்பிட்டது ஒரு வியாழக்கிழமை இரவு. இப்படி பதிமூன்று பேர் ஒன்று கூடி சாப்பிட்டபின், அடுத்த நாளான வெள்ளிக்கிழமையன்று பதிமூன்றாவது நபரான இயேசு கிறிஸ்து சிலுவையிலறையப் பட்டார் என்பதினால் இதை துரதிஷ்டமாக கருதி வந்திருக்கிறார்கள்.

காலச் சக்கரத்தை கொஞ்சம் டாப் கியரில் போட்டு ஒரு பத்து நூற்றாண்டுகள் கடந்து வந்தோமெனில், பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மதம் எனும் ஆன்மீக தத்துவம் ஐரோப்பிய உலகத்தின் ஆன்மீக பசிக்கு சுவையான தீனியாகிப் போன பொழுது, புனிதர்களின் அணிவகுப்புகள் ஐரோப்பாவெங்கும் தொடங்கியது, இயேசு கிறிஸ்துவின் சீடர்களோ அல்லது கிறிஸ்தவ மதத்தின் பெயரால் சமுதாயத்தில் நற்பெயரெடுக்கும் எந்த மனிதனும் புனிதனாக கருதப்பட்டான். கிரேக்க கடவுளர்களின் பழைய புராணங்களையே கேட்டு காது புளித்துப் போன ஐரோப்பியர்களுக்கு, இந்த புது வரவு ஒரு கவர்ச்சியை கொடுத்தது. எப்பொழுதுமே புனிதர்கள் என்றால் அவர்களுக்கென ஒரு தல புராணம் இருக்க வேண்டுமல்லவா, அப்படி ரிஷி மூலம் பார்த்ததில், பெருவாரியான புனிதர்கள் பிறந்த எபிரேய பூமி, (இன்றைய எருசலேமும் அதை சுற்றியுள்ள பகுதிகளும்) ஒரு புனித தலம் எனும் அந்தஸ்த்தை பெற்றது.

அவ்வளவுதான், எம்பெருமானின் திருவருளால் புனித யாத்திரைகள் தொடங்கி விட்டன. முதலில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான இந்த யாத்திரைகள், பிற்பாடு ஒரு கௌரவ சின்னமாக பரிணாம வளர்ச்சி பெற்று விட்டது. இப்படி வந்த யாத்ரீகர்களிடத்தில் காணப்பட்ட பணமும் நகையும் கொள்ளைக்காரர்களின் கண்களில் பட, சுலப வேட்டையாக வழிப்பறியும், அதற்கான கொலை ஒரு இலவச இணைப்பாகவும், அதற்கடுத்த கற்பழிப்பு ஒரு கிளுகிளு அன்பளிப்பாகவும் மாறிப்போனது. இந்த தொந்தரவுகளினால் புனித தலங்களிலும் , யாத்ரீகர்களின் வழியெங்கும் தேங்காயும், சூடமும், திருநீறும் விற்ற புனித வியாபாரிகளின் வியாபாரம் படுத்து விடவே, அவர்கள் இதற்கென ஒரு பாதுகாப்பு படையை உருவாக்கினார்கள். இந்தப் படையிலிருந்த வீரப் பெருந்தகைகள் (Knights Templer என்பதற்கு கூகிளாண்டவர் இந்த தமிழ்ப் பெயரைத்தான் தருகிறார்) யாத்ரீகர்களுக்கு வழிப்பறியிலிருந்து பாதுகாப்பு கொடுப்பதில் பெருமளவு வெற்றி பெற்றார்கள்.

காலப் போக்கில் இந்த பெருந்தகைகள் ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் அலுவலகங்களை திறந்து, யாத்ரீகர்கள் அந்தந்த நாட்டில் தங்கள் சொத்துக்களை இவர்களிடம் ஒப்படைத்து விட்டு அதற்கான பிரமாண பத்திரங்களுடன் தங்கள் யாத்திரையை தொடங்கலாமென்றும், வழியில் செலவுக்கு வேண்டுமென்கிற இடத்தில் இந்த பத்திரங்களை காட்டி அதற்கென உள்ள அலுவலகங்களில் காட்டி பணம் பெற்றுக் கொள்ளலாமென்றும் ஒரு ப்ரீ பெய்டு சிஸ்டம் உருவாகினார்கள். மடியில் கனமில்லாமல் யாத்திரை செல்ல இது ஒரு சிறந்த வழியாயிருக்கவே, மக்களின் அமோக ஆதரவு இவர்களுக்கு கிடைத்தது. ஆனால் யாத்திரை போனவர்களில் பலர் திரும்பாமல் போனதினாலும், திரும்பி வந்த பலரின் சொத்துக்களுக்கு பராமரிப்பு செலவு என கணிசமான தொகை வசூலித்ததாலும், பெருந்தகைகள் பணத்தால் கொழுத்தார்கள். குளித்தார்கள்.

இந்த பெருந்தகைகளின் வீரமிகு செயல்களால் பல அரசர்களும் இவர்களை தங்களுக்கென உபயோகித்தது ஒரு கிளைக்கதை. பதினாலாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் பரம வைரியாய் இருந்து நாளொரு சண்டையும் பொழுதொரு பஞ்சாயத்துமாக அரசாண்ட பிரஞ்சு மன்னன் நான்காம் பிலிப்பு, இவர்களுக்கு ஏடாகூடமாக கடன் பாக்கி செலுத்த வேண்டியுருந்தது. ஒரு பக்கம் பெருந்தகைகள் பணத்துக்காக நெருக்கடி தர, மறுபக்கம் திறமையில்லாத ஆட்சியாலும் திட்டங்களில்லாத போர்களாலும் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்கு போய் விட, நான்காம் பிலிப்பு ஒரு வஞ்சக திட்டம் தீட்டினான். இந்த பெருந்தகைகளையெல்லாம் சுவடில்லாமல் துடைத்து விட்டால் தன் சுமை பெருமளவில் குறையும் என்பதற்காக, அப்போதைய போப் ஆண்டவர் ஐந்தாம் கிளமெண்டையும் சரிக்கட்டினான். பெருந்தகைகள் மதம் மற்றும் தேச துரோகிகள் என குற்றம் சாட்டி அனைவரையும் கழுவிலேற்றி, தீயிலிட்டு என பல வகைகளிலும் கொல்லும்படி போப்பின் முத்திரை பெற்ற கடிதங்களை வெளியிட்டான். பெருந்தகைகள் பணத்திமிரில் சிலுவையின் மேல் துப்பினார்கள், சிலுவையை மிதித்தார்கள், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதோடல்லாமல் இளைஞர்களை இந்த பழக்கத்திற்கு அடிமையாக்குகிறார்கள், கிறிஸ்துவை இகழ்கிறார்கள் என பல பொய்குற்றங்களையும் அதற்கான பொய் சாட்சிகளையும் மிக கவனமாக ஏற்படுத்தினான்.

குற்றம் (பொய்) சாட்சியோடு நிரூபிக்கப்படவே மக்களும் நடுநிலை வகித்து விட்டார்கள். பெருந்தகைகளுக்கு ஆதரவில்லாமல் போனதால், அவர்களை தீயிலிட்டுக் கொளுத்துவது எளிதாகப் போயிற்று. பின்னாளில் மன்னனின் வஞ்சக திட்டம் வெளிப்பட்டதென்பது வேறு கதை. இப்படி இந்த பெருந்தகைகளை அழிக்கும் ஆணை வெளியிடப்பட்டது 1307 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிமூன்றாம் தேதி, வெள்ளிக்கிழமை. பின்னாளில் பெருந்தகைகளின் தயாள குணமும், வீரமும், மன்னனின் வஞ்சகமும் மக்களுக்கு தெரிய வந்தபின் அவர்களது மரணத்தை தியாகமெனவும், அந்த அழித்தொழிப்பு நாளை துக்கமும் துயரமும், துரதிஷ்ட வசமான நாளாகவும் கருத ஆரம்பித்ததின் விளைவே இந்த வெள்ளிக்கிழமை பதிமூன்றாம் தேதி, அபசகுனமெனும் மூட நம்பிக்கை. இன்னும் இதற்கு பலம் சேர்க்கும் பல நம்பிக்கைக்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கால கட்டத்திலும் நிகழ்ந்தது, நிகழ்கிறது, நிகழப் போகிறது….

இதோ தமிழ்நாட்டிலும் நாளை ஒரு வெள்ளிக்கிழமை, பதிமூன்றாம் தேதி, மிகவும் துரதிஷ்டவசமான நாளாக இருக்கப் போகிறது, ஆமாம் நாளைக்குத்தான் தேர்தல் முடிவுகள் வரப் போகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்த கும்பல் நம்மை கொள்ளையடிக்கப் போகிறது, என்னென்ன இலவசங்களால் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்பட்டு, மறுபடியும் ஒரு முறை இலவசங்களுக்காக கையேந்தி பிச்சைக்காரர்களாகப் போகிறோமோ தெரியவில்லை,

ஐயா, பெருந்தகைகளே எங்கே போனீர்கள், விரைந்து வாருங்கள், அரக்கர்கள் அழிந்து விட்டால், அசோகவனத்தில் அனுமன் கூட அழகு பருக மட்டுமே வருவான். அழிய வேண்டியது அரக்கர்கள் தான், அசோக வனமல்ல.

Monday, May 9, 2011

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே.... 9/5/2011

மனித இனத்திற்கு விரோதியாக, மதத்தின் பெயரால் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதும் ஒரு தெய்வீக செயலே என நியாயங்கள் கற்பித்து, தான் பிறந்து வளர்ந்த மண்ணின் மேம்பாட்டுக்கென பாடுபட்டு வியர்வை சிந்த வேண்டிய இளசுகளின் மொத்த மன மற்றும் மனித வளத்தை தீவிர வாத நோக்கத்துக்காக திசை திருப்பி ரத்த ஆறு ஓட வைத்த மகானுபாவர்களின் மரணம் கூட மாபெரும் தியாகமாக திரிக்கப்படும் அவலத்திலிருந்து எங்களை காப்பாற்றுங்கள் பிதாவே. அப்படியானால் அவனை கொன்றவன் யோக்கியனா என்ற விவாதத்திற்கு சொம்பு தூக்கிக் கொண்டு வரும் புள்ளி விவர புலிகளிடமிருந்தும் எங்களை காப்பாற்றுங்கள் பிதாவே.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

டாஸ்மாக் என்னும் சுனையிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் நதிப் பிரவாகத்தில் குளித்து, திளைத்து நீந்திக் கரையேறி, இலவச தொலைக்காட்சி பார்த்து விட்டு, ஒரு ரூபாய் அரிசியில் பொங்கித்தின்று, பொங்கலுக்கும் தீபாவளிக்கும் இலவச சேலையும், வேட்டியும் வாங்கி உடுத்தி மகிழ்ந்து, மாதம் மும்மாரி வேண்டாம், பெய்கிற ஒரே மாரியில் வெள்ளக் காடுகளுக்குள் தீவு வாழ்க்கை வாழ்வதைக் கண்டு, மனம் இளகி ஆளும் ஆண்டவக் குடும்பம் தரும் வெள்ள நிவாரண நிதிகளுக்கென கையேந்தி நின்று என நாங்கள் வாழும் பிச்சைக்கார வாழ்க்கை போதும் பிதாவே. வரும் 13ம் தேதிக்கு மேல் புதிதாக வரும் ஆட்சியாளர்களாவது மேலும் இலவசங்கள் தந்து எங்களை மேலும் பிச்சைக்காரர்களாக்காமல் காத்தருளுங்கள் பிதாவே. வெள்ள நிவாரணம் தருவதை விட வெள்ளத்தை வடிந்தோடச் செய்ய ஒரு நிரந்தர வடிகாலாவது கட்டச்சொல்லுங்கள் பிதாவே.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


ஆமாம், ஒவ்வொரு வருடம் போலவே இந்த வருடமும் வெய்யில் கொடுமை உக்கிரமாக உள்ளது. ஆனால், ஒவ்வொரு கோடை காலத்திலும், ”கோடையில் குளுகுளுவென இருப்பது எப்படி??” என ஒவ்வொரு ஊடகத்திலும் தொடை தெரிய உடையணிந்து ” நான் வெள்ளரி பழத்தில் உள்ளாடை அணிவேன், தர்ப்பூசணியை தலையில் கவிழ்ப்பேன், பசலைக்கீரையை பால் போல் குடிப்பேன், பச்சை மிளகாயால் பல் விளக்குவேன் ” என அருவருக்கும் பேட்டி கொடுக்கும் நடிகைகளிடம் இருந்து எங்களை பாதுகாத்தருளும் பிதாவே.

இது போதாதென்று “ வெய்யிலின் கொடுமையிலிருந்து தப்பிப்பது எப்படி??” என கேள்வி மட்டும் கேட்பதோடு நிற்காமல் அதற்கு பதிலாக, ஒரு நாளைக்கு முப்பது லிட்டர் தண்ணீர் குடியுங்கள், நாற்பது முறை தலைக்கு குளியுங்கள், கண்ணை மூடிக்கொண்டு சாலையில் நடவுங்கள், காதின் வழியாக சுவாசம் செய்யுங்கள், வாழைநாரில் ஆடை அணியுங்கள், புளியம் பூவின் பொரியல் சாப்பிடுங்கள் என சகட்டு மேனிக்கு அறிவுரை சொல்லி ஈ மெயில் அனுப்பும் நாதாரி நண்பர்களிடமிருந்து எங்களை காத்தருள்வீர் பிதாவே …

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


ஒவ்வொரு வருடமும் தவறாது வருகைதரும் வைகாசித் திருவிழாப் போல, ஒவ்வொரு முறையும் பெருவாரி இந்தியனின் நேரத்தையும் பணத்தையும் கொள்ளையடித்து, எங்களையெல்லாம் கூத்தாடிகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு எங்களை ஆக்கிரமித்து நிற்கும் இந்த IPL என்னும் கொடிய நோயின் வீரியத்திலிருந்து எங்களை உடனடியாக காப்பாற்றுங்கள் பிதாவே…