Thursday, May 27, 2010

ஜுகல்பந்தி – 27 – 05 -2010. – இந்தியனுக்கு செருப்படி.



நகரம் – அலகாபாத். – தெய்வத்தின் நகரம்.

கங்கைக் கரைப் பட்டினங்களில் சிறப்பு வாய்ந்த ஒரு பட்டினம். தேவர்களின் நகரம், முக்கூடல் நகரம், பிரம்மனின் நகரம், பிரதம மந்திரிகளின் நகரம் என பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. கங்கை நதி என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்திருந்தால், பல புலவர்களுக்கும், புராண இதிகாச ஆசிரியர்களுக்கும் பைத்தியமே பிடித்திருக்கும் என நினைக்கிறேன். ஆரம்பம் எதுவென்பதில் சூட்சுமம் நிறைந்து, வளைந்து, நெளிந்து, சுழன்று, சுழித்து, ஏறி, இறங்கி, ஆர்ப்பரித்து, அடங்கி நடந்து, அழுக்கை கழுவி, அழுக்குப் பட்டு என பல வடிவங்களில் பாயும் இந்நதியின் ஈரம் பட்ட ஒவ்வொரு இடத்திலும் எதாவது ஒரு சிறப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

இதே நதியின் கரையில் தான் தன் அழகுக்கு சாட்சியாய், அக்பரால் கட்டப்பட்ட முகலாய வடிவ கோட்டைகள், பல்கலைக்கழகங்கள், வெள்ளையரால் முழுதும் வெள்ளைக்கறகளைக் கொண்டு கட்டப்பட்ட கோத்திக் வடிவ கதீட்ரல், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கட்டிட கலைகளின் சங்கமத்துக்கு சாட்சி கூறும் தலைமை நீதிமன்ற கட்டிடம், மேற்கத்திய கோத்திக் மற்றும் இந்திய கட்டிடக் கலைகளின் மொத்த கலவையும், 200 அடி கோபுரமும் கொண்ட முயுர் கல்லூரி கட்டிடம், முற்றிலும் இந்தியர்களாலேயே வடிவமைக்கப்பட்டு இந்தியாவிலேயே முதன் முறையாக இரும்புக் கயிறுகளால் இணைத்து இழுத்துக் கட்டப்பட்ட யமுனை நதி பாலம் என திரும்பிய பக்கமெல்லாம் அழகு காட்டும் அற்புத நகரமிது.

பிரம்மன் தன் படைப்புகள் எல்லாவற்றையும் படைத்து விட்டு, இந்நகரத்தில் தான் வந்து ஓய்வெடுத்து யாகம் நடத்தினானாம். அதனால் இது கடவுளின் நகரம். யமுனையும் கங்கையும் இணைவதைக் கண்டு சரஸ்வதி என்னும் இன்னொரு மங்கை பூமிக்கு உள்ளிருந்து கிளம்பி வந்து யார் கண்ணுக்கும் தெரியாமல் தானாகவே நதி வடிவத்தில் இங்கு கூடி விடுகிறாளாம். அதனால் இது முக்கூடல் நகரம். ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய கும்ப மேளா நடைபெறும் மூன்று நகரங்களுக்கு அடுத்தபடியாக, நான்காவதாக கும்பமேளா இங்கும் நடைபெறுவதால் இது புனித நகரம். இந்தியப் பிரதமர்களில் ஏழு பேர் இங்கிருந்து வந்தவர்களாதலால் இது பிரதமர்களின் நகரம். 1857 – ல் நடந்த சிப்பாய் கலகத்தை அடக்க மெட்ராஸ் ரெஜிமெண்டின் அப்போதைய அதிகாரிகளான கர்னல் நீல், கேப்டன் ஆஷ்லி, கேப்டன் எட்வர்ட் மக்கின்ஸி ஆகியோரது தலைமையில், கிழக்கிந்திய கம்பெனியின் தொள்ளாயிரம் சிப்பாய்களின் வெறியாட்டத்திற்கு ஆளானதால் இது கறைகளின் நகரமும் கூட.

கனடாவின் ரவுடித்தனம் - செருப்படி வாங்கும் இந்தியா

ஃபதே சிங், எல்லைப் பாதுகாப்பு படை வீரர், பஹியா – ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி, எஸ்.எஸ். சித்து – ஓய்வு பெற்ற இந்திய உளவுத்துறை அதிகாரி, இவர்கள் எல்லாருக்கும் மாத்திரமல்ல, இன்னும் பலருக்கு கனடா நாட்டு விசா மறுக்கப்பட்டிருக்கிறது. ஒருவரை தன் நாட்டிற்குள் அனுமதிப்பதோ அல்லது அனுமதி மறுப்பதோ அவரவர் விருப்பு வெறுப்பு சார்ந்த சமாசாரம். ஆனால் அதற்கு சொல்லப்படும் காரணங்கள்தான் இங்கு செருப்பிலடிப்பது போல் உள்ளது. ஃபதே சிங் – எல்லை பாதுகாப்பு படையில் காஷ்மீரில் பணி புரிந்தவர் என்பதனால் அவர் ஒரு கிரிமினல் குற்றவாளியாம், காஷ்மீரில் பலரை சித்திரவதை செய்து மனித உரிமை மீறல் புரிந்திருக்கிறாரம். பஹியா – உளவுத்துறையில் இருந்ததனால், அவரால் கனடா நாட்டு இறையாண்மைக்கே ஆபத்தாம். அவர் கனடாவுக்குள் நுழைந்தால், உளவு வேலைகளில் ஈடுபடுவாராம். சித்து – இரண்டு முறை கனடாவில் வாழும் தன் மகனை பார்க்க சென்று அங்கு தங்கியிருந்து விட்டு வந்திருக்கிறார். ஆனால் இம்முறை அவரையும் ஒரு கேவலமான உளவாளி என முத்திரை குத்தி விசா தர மறுத்திருக்கிறார்கள். இத்தனை பேரை அவமானப் படுத்த்டிய போதிலும் நம் இந்திய அரசாங்கம் பொறுமை காத்திருக்கிறது. ஒரு வார்த்தை எவரும் பேசவில்லை. ஆனால், வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் G20 மாநாட்டிற்காக பிரதமர் மன்மோகன் சிங்குடன் கனடா செல்ல இருந்த ஒரு அதிகாரிக்கு விசா வழங்க மறுத்து விட்டார்கள். காரணம் இந்திய உளவுத்துறை என்பது கனடாவின் புத்தகங்களில் ஒரு தீவிர வாத இயக்கமாகவும், அதன் அதிகாரிகள் எல்லாரும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தேடப்படும் குற்றவாளிகளும் என்ற காரணத்தை தைரியமாக எழுத்து மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனாலும், இந்திய அரசாங்கமோ அமைதியாக பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராணுவ அமைச்சராக இருந்த பொழுது, அவர் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றால், அவர் ஒரு ஜனநாயக நாட்டின் ராணுவ அமைச்சர் என்ற மரியாதை கொஞ்சமும் இல்லாமல், பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அவரது ஆடையை அவிழ்த்து அவமதிக்கலாம். ஜார்ஜ் புஷ் என்ற கோமாளி, உலகில் உணவுப் பஞ்சம் வருவதற்கு இந்தியர்கள் அதிகமாக சாப்பிடுவதே காரணம் என்று சொல்லி விட்டு சிரித்து விட்டு போகலாம். எங்கோ ஒரு நாட்டில் பன்றிக் காய்ச்சலோ, பிளேக் நோய்களோ வந்தால், இந்திய விமானங்களும், இந்திய கப்பல்களும் தங்கள் எல்லைக்குள் வராதவாறு வெள்ளைக்கார தேசங்கள் விரட்டியடிக்கலாம். தங்கள் உடல் பொருள் ஆவியை கொடுத்து பாதுகாப்பு பணிகளில் பாடுபடும் நம் இந்திய ராணுவ வீரர்களை ஒரு வெள்ளைக்காரன் சர்வ சாதாரணமாக தீவிரவாதி எனக் கூறி அவமானப்படுத்தலாம். நமது பாதுகாப்பு படைகளையே தீவிரவாத இயக்கங்கள் என எழுதிக் கொடுக்கலாம். நாங்கள் மறுபடியும் அவர்களுடன் சிரித்துக் கொண்டே பேசுவோம். அவர்கள் நாட்டு பிரஜைகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்போம். டேவிட் ஹெட்லி தீரவாதியாயிருந்தாலென்ன, வெள்ளைத் தோல்தானே, உள்ளே வாருங்கள் என கரம் கூப்பி வரவேற்போம்,

அழுக்குப் பிடித்த அரசியல் வாதிகளே, த்தூவென காறி உங்கள் மூஞ்சியில் துப்ப வேண்டும் போலுள்ளது.


ங்கொய்யால பக்கங்கள்

சார், பர்ஸனல் லோன் வேணுமா??

ஹலோ, நான் ரமேஷ் பேசறேன்!!!!!!!

அந்த ரிப்போர்ட் ரெடியாயிடுச்சா மேன்??

அப்பா, என்ன பண்ணீட்டு இருக்கீங்க???

டேய், மாப்ள, இன்னைக்கு சாய்ந்தரம் ஃபிரீயாடா?

இப்பத்தான் பார்த்தேன், பெருங்காய
டப்பா காலியாயிருக்கு,
வரும்போது வாங்கீட்டு வந்துருங்களேன்.

சார், உங்களுக்காகவே ஸ்பெஷலா ஒரு இன்ஷூரன்ஸ்
பேக்கேஜ் டிசைன் பண்ணீருக்கோம் சார்……

புத்தம் புது திரைப்பட பாடல்களை காலர் டோனா வைக்க…….

ங்கொய்யால,

உலகம் எவ்வளவு அமைதியா இருக்குது,

செல்போன் தொலைஞ்சு ரெண்டு நாளாச்சு.

Tuesday, May 25, 2010

வாந்தி வாந்தியா வருது.......

ஒரு எட்டோ அல்லது ஒன்பதோ வயதுப் பையன் ஒரு ஏழு வயதுப் பெண்ணின் தொடைகளுக்கு நடுவே கையைவிட்டு பிடித்து அலாக்காக தூக்குகிறான். தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்து விட்டு விட்டு அந்தப் பெண் குழந்தையை கீழே விடுகிறான். அவன் அணிந்திருக்கும் ஜீன்ஸ் பேண்ட் முழங்காலுக்கு கீழே கிழிந்திருக்கிறது. பட்டையான ஒரு பெல்ட் கட்டி, சட்டையின் மேல் பட்டன்களை திறந்து விட்டு சட்டையின் கீழ் முனைகளை முடிச்சு போட்டிருக்கிறான். தலையில் ஒரு கைக்குட்டையை பட்டையாக சுற்றிக் கட்டியிருக்கிறான். இடது முழங்காலுக்கு மேல் ஒரு கைக்குட்டையை சுருட்டிக் கட்டி, வலது மணிக்கட்டில் ஒரு கைக்குட்டையை கட்டி என ஒரு எட்டு வயது பையனில் ஒரு திரைப்பட நடிகனின் அத்தனை அலங்காரங்களையும் பார்க்க முடிகிறது.

அந்த ஏழு வயதுப் பெண்ணின் மார்பில் ஒரு துணி சுற்றியிருக்கிறது. தொப்புளை சுற்றிலும் ஜிகினா மாதிரி எதுவோ ஜொலிக்கிறது. ஒரு ஆறு அல்லது எட்டு அங்குலத்துணி இடுப்பில் சுற்றியிருக்க கறுப்பு நிறத்தில் ஒரு உள்ளாடை அணிந்து அம்மணம் மறைத்திருக்கிறாள். முகத்தில் மிதமிஞ்சிய பூச்சுகள், உதட்டுச்சாயம், காதில் புரியாத வடிவத்தில் தொங்கட்டான்கள்.

80 களில் வெளிவந்த ஒரு ஹிந்திப் பாடலுக்கு ஹெலன் என்னும் கவர்ச்சி நடிகை அரைகுறை ஆடையுடன் ஆடிய ஒரு நடனத்தை இந்த இருவரும் ஆடுகிறார்கள். அந்த நடனத்தை வடிவமைக்க இரு நடன கலைஞர்கள். அந்த நடனத்திற்கு மதிப்பெண் கொடுக்க ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரண்டு நடுவர்கள், ஒரு காலத்தில் ஹிந்தி திரைப்பட உலகின் சிறந்த நடன இயக்குனராக இருந்த ஒரு வயதான பெண்மணி சிறப்பு விருந்தினர், இத்துடன் இந்தக் குழந்தைகளின் பெற்றோர் என ஆட்டம் களை கட்டுகிறது. ஒரு பிரபல ஹிந்தித் தொலைக்காட்சியில் இந்த நடனப் போட்டி.

அந்த இரண்டு பிஞ்சுகளும் பின்னணியில் ஒலிக்கும் பாடலுக்கு ஏற்றபடி உடலை நெளிக்கவும், கால்களை தூக்கவும், ஒருவரையொருவர் கட்டித் தழுவவும் செய்கிறார்கள். நடுவர்களும் கூட்டமும் பார்த்து ஆர்ப்பரிக்கிறது. பெற்றோர்கள் சிறப்பு நடுவரின் பாராட்டைக்கேட்டு எதோ பிறவிப் பயனை அடைந்துவிட்டது போல் கைகளை தட்டி குதூகலமடைகிறார்கள். சிறப்பு நடுவர் இந்த நடனத்தை சால்சா வகை நடனம் என்கிறார். பெற்றோருக்கு பெருமிதம் தாங்கவில்லை.

அடுத்ததாக ஒரு ஜோடி, வேறு ஒரு பாடல், இப்பொழுது பையன் ஒரு எட்டு வயதுப் பெண்ணின் மார்பை ஏடாகூடமாக தடவி கழுத்தில் முத்த மிடுகிறான். திடீரென்று அவன் கால்களை விரித்து நிற்க இந்தப் பெண் அவன் கால்களுக்கு நடுவே வழுக்கிப் போகிறாள். மேடையின் முழு அளவிற்கும் ஓடித்திரியும் இந்த ஜோடி, திடீரென்று ஒருவர் இடுப்பை ஒருவர் அணைத்தபடி உடலுறவு கொள்வது போல் அசைகின்றனர். உடனே நடுவர் ஒருவர் எழுந்து நின்று கையைத் தட்டுகிறார். முடிவில் அந்த Pelvic thrust was a perfect movement என்று சொல்கிறார். இங்கும் பெண்ணுக்குஅதே அங்குல அளவு உடைகளும், பையனுக்கு கைக்குட்டை கட்டுகளும் தவறாது இடம் பெறுகிறது. பெற்றோர்கள் கையைத் தட்டி குதூகலிக்கின்றனர். முடிவில் சிறப்பு நடுவர் இதை Contemporary dance என்கிறார்.

இதற்கு அடுத்த ஜோடி, இரண்டு பொடியன்கள், ஒரு ஏழோ அல்லது எட்டு வயதுப் பெண், இரண்டு பையன்களும் பாடல் ஆரம்பித்தவுடன் வந்து இந்த பெண்ணை தங்களது இடுப்பால், அவளது இடுப்பில் இடிக்கிறார்கள். அந்தப் பெண் கெக்க பிக்கவென சிரித்து விட்டு ஹூம், Crazy Boys என நடையை கட்டுகிறாள். கூட்டம் கையைத்தட்டி ஆரவாரிக்கிறது.


இருங்கள், இதை எழுதும் பொழுதே எனக்கு வாந்தி வரும்போல் இருக்கிறது. கொஞ்சம் வாந்தி எடுத்துவிட்டு பின்பு வருகிறேன்.


எந்த தொலைக்காட்சியை எடுத்தாலும் நடனப் போட்டிகள் அல்லது பாட்டுப் போட்டிகள் தான். அதுவும் பிஞ்சு குழந்தைகளின் Pelvic Thrust. இந்த வக்கிரங்களை தங்கள் குழந்தைகள் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியுறும் பெற்றோர்கள், அதற்கென அவர்கள் செலவழிக்கும் பணம், நேரம். அதற்கு மதிப்பெண் கொடுக்கும் நடுவர்கள், அதை பாராட்டிப் பேசும் சிறப்பு விருந்தினர்கள், இதை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி,

யோவ், ங்கொய்யால, எங்கய்யா போயிட்டிருக்கறோம் நம்ம என ஓங்கி தொண்டை கிழிய கத்தவேண்டும் போலுள்ளது.

90 களில் ஒவ்வொரு இந்திய தொலைக் காட்சிகளிலும் மாணவர்களுக்கென வினாடி வினா போட்டிகள் நடத்தப் பட்டது, ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து பள்ளி வாரியாக அவர்களிடத்தில் பொது அறிவு, விஞ்ஞானம், மற்றும் விளையாட்டு போன்றவற்றில் கேள்விகள் கேட்கப் பட்டு, மதிப்பெண்கள் கொடுக்கப் பட்டன, வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் அளித்தார்கள். சித்தார்த்த பாஸு நடத்திய அல்ஃபா ப்ளஸ் என்ற நிகழ்ச்சி அநேக பெற்றோரால் அவர்கள் குழந்தைகளுடன் விரும்பி பார்க்கப் பட்டது. நவ்ரோத்தம் பூரி என்ற மனிதரை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. விளையாட்டில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்வையும் மனிதர் விரல் நுனியில் வைத்திருப்பார். அவரின் விளையாட்டு கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கு பெற அன்றைய மாணவ மணிகள் கனவு கண்டு தவமே இருந்தார்கள் எனலாம். ஏன் இப்பொழுது எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் அங்கு தவறாது ஆஜராகி வர்ணனையில் கலக்கும் ஹர்ஷா போக்ளே கூட ஒரு காலத்தில் ESPN தொலைக்காட்சியில் விளையாட்டு கேள்வி பதில் போட்டிகள் நடத்தியவர்தான்.

இதனால் குழந்தைகளின் அறிவு தாகம் பெருகியது. பெற்றோர்களும் குழந்தைகளும் சரிசமமாக இந்த போட்டிகளிலும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிகழ்ச்சிகளோ அல்லது இதன் முக்கியத்துவமோ எப்படி இவ்வளவு சீக்கிரம் ஒழிந்து போனது என தெரியவில்லை.

இன்று விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு பாட்டு போட்டிக்காக அந்த குழந்தைகள் எத்தனை வகுப்புகளை தியாகம் செய்தார்களோ தெரியவில்லை, இன்னும் அவர்களுக்கு எத்தனை விதமான உடைகள் அணிவித்து பாடவைப்பார்களோ ஈஸ்வரா…. நிகழ்ச்சியை எவ்வளவு நீட்டி முழக்கி நாட்களை கடத்துகிறார்களோ அவ்வளவும் தொலைக் காட்சிக்கு லாபம் தான். ஆனால், அந்த பிஞ்சுகள் இந்த வயதில் எதைக் கற்க வேண்டுமோ, எதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமோ அதை விட்டு விட்டு “ அந்த ரெண்டாவது லைன்ல வர்ற மூணாவது வார்த்தைல ஒரு குட்டி ஜெர்க் வர்றது, அதை கரெக்ட் பண்ணுங்க, அடுத்ததா ஆலாப்ல கொஞ்சம் சுதி பிசிறடிக்குது, அதை சரி பண்ணிக்கோங்க” போன்ற அறிவுரைகளில் சீரழிகிறார்கள். பெற்றோர்களே தங்களது பிஞ்சுக் குழந்தைகளின் Pelvic thrust ஐ பார்த்து ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்கிறார்கள்.

ஒரு வருங்கால சமுதாயத்தின் முழுகவனத்தையும் சினிமா என்ற சமூக அவலத்தின் பால் திசை திருப்பி, முற்றிலும் சீரழிக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இந்த சமூக வன்முறை கும்பலிடம் இல்லையா? பிஞ்சுகளின் மூளையை சினிமா ஆக்கிரமித்தால், வருங்கால சந்ததியில் மனித வளம் என்பது மருந்துக்கு கூட இருக்காது.