Wednesday, September 23, 2009

ஜுகல்பந்தி - 23 – 09 – 2009 , காமன் மேன்

நகரம் – அமிர்தசரஸ் - தங்க நகரம்

சீக்கியர்களின் புனித பூமி, பொற்கோவில், பாகிஸ்தானுக்கு அருகில் இருக்கும் நகரம், கால்ஸா பிரிவினரின் வீர விளையாட்டுகளுக்கு பெயர் போன பூமி, மண்ணிலும் நீரிலும் மாத்திரமல்லா; காற்றிலும் வீரம் உலவும் பூமி, பிரிவினையின் போது பிரிய மனமில்லாது பிரிந்தவர்களின் துயர வடுக்கள் துடைக்கப் படாமல் இன்னும் புண்களாய் உள்ளது என சிறப்பும், சிறுமையும் ஒருங்கே உள்ள முரண்பாடுகளின் மொத்த உருவமே அம்ரிஸ்டர் எனப்படும் அமிர்த சரஸ் நகரம்.

துங் என்ற பழங்குடியினர் வசித்து வந்த இந்த பூமியை குரு ராம்தாஸ் ஜி என்பவர் கி.பி.1574 ல் 700 ரூபாய்க்கு வாங்கினார். பிறகு இங்கு இருந்த வளங்களைப் பார்த்து குளங்கள் வெட்டவும் மரங்கள் நட்டவும் என திருப் பணிகள் தொடங்கி, வளம் கொழிக்கும் பூமியானவுடன் அதற்கே உரிய சண்டைகளும் சச்சரவுகளும், உரிமைப் பிரச்சனைகளும், உழைக்கும் வர்க்கத்தின் இருப்பியல் நிர்பந்தங்களும் என அரசியல் ஆரம்பித்தவுடன் இங்கிருக்கும் உழைக்கும் வர்க்கம் தனக்கென ஒரு அடையாளம் தேடிக் கொண்டதுதான் சீக்கிய மார்க்கம். அதன் இன்னொரு பரிமாணமே கால்ஸா பிரிவு என்ற வீரர்கள் படை. இந்திய திருநாட்டுக்குள் யார் நுழைந்தாலும் அவர்கள் இந்த நகரைக் கடந்துதான் வர வேண்டுமென்பதாலும், நுழைந்தவுடன் கண்ணில் காணும் வளங்கள் அவர்களது நாவில் நீர் ஊற வைப்பதாலும், எப்பொழுதும் ஒரு எல்லை பாதுகாப்பு படையை போலவே இந்த மண்ணின் மைந்தர்கள் வாழ வேண்டிய நிர்பந்தத்துக்குள்ளானார்கள். ராஜஸ்தானிய ராஜ புத்திரர்களை புரட்டியெடுத்த ஆப்கானிய போர் வீரன் அப்தாலி, தன் கண்களை இந்த மண்மீதும் பதிக்க தவறவில்லை. வளங்கள் ஒரு புறம் இருந்தாலும், கண்ணைப் பறித்தது இங்குள்ள மங்கையர்களும் கூடத்தான். கோதுமை நிறத்தில் கூரிய நாசியும், நெடிதுயர்ந்த வனப்பும், அகன்ற தோள்களும், இடுப்பு வரை கூந்தலுமென இருக்கும அழகுப் பதுமைகளை கண்டு மனதை பறி கொடுத்த வந்தேறிகள் அநேகர். இவர்களிடமிருந்து தங்களை பாதுகாக்கத்தானோ என்னவோ ஒவ்வொரு சீக்கிய பெண்ணும் கூட எப்பொழுதும் கத்தியும் கையுமாகவே இருந்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 13, 1939, எல்லோருக்கும் போலவே இந்நகரத்து வாசிகளுக்கும் ஒரு இனிய காலையாகத்தான் விடிந்தது. ஆனால் அன்று நிகழப் போகிற விபரீதம் தெரியாமலே, “வாஹே குரு”, என்ற கோஷங்களுடன் அமர்ந்திருந்த 1500 சொச்சம் பேரை தயவு தாட்சண்யமின்றி கொன்று குவிக்கும்படியாக தனது துப்பாகிகளை திருப்பிய ஜெனரல் டயர் இங்குதான் தனது திருவிளையாடலை நடத்தினார். துப்பாக்கிகள் ஓய்ந்த பின் எண்ணிப்பார்த்தால் 329 பேர் கடைசி முறையாக “வாஹே குரு” என அழைத்திருந்தார்கள்.

அடுத்ததாக சுதந்திரமடைந்தோம் என்ற சந்தோஷ கீதம் காதில் படுவதற்கு முன்னே, வந்த இந்திய பாகிஸ்தான் பிரிவினை தனது கோரக்கரங்களால் இன்னொரு முறை இந்நகர வீதிகளில் ரத்த ஆறை ஓடச்செய்து விட்டுப் போனது. டோம்னிக் லேப்பயர் மற்றும் லேரி காலின்ஸ் என்ற இருவர் எழுதிய Freedom at Midnight என்ற புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். பிரிவினையின் போது இந்நகரமும் லாஹூரும் சந்தித்த அனைத்து வேதனைகளையும் வார்த்தைகளில் அழுது கொண்டே சொல்லியிருப்பார்கள்.

இன்று இந்த நகரம் புதுப் பொலிவுடன், பொற்கோவில் மற்றும் ஏனைய புராதனச் சின்னங்களின் சிறப்புகளுடன், மனித நேயமிக்க சீக்கிய மக்களுடன், கால்ஸா பிரிவினரின் வீர விளையாட்டுகளுடன் என இன்னும் எத்தனையோ சிறப்புடன் தனது பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

பதிவுலகம் – காமன் மேன்

உன்னைப் போல் ஒருவன் என கமலஹாசன் ஒரு படம் எடுத்து விட்டார். அப்பப்பா, பதிவுலகம் எனும் ரத்தபூமியிலும் விமர்சனங்களால் பதிவர்கள் விளாசித்தள்ளுவதை பார்த்தால் மூச்சு முட்டுகிறது. இந்துதுவா, காமன் மேன், பிராமண அகங்காரம், கட்டுடைத்தல், பின் நவீனத்துவம், இஸ்லாமிய தீவிரவாதம், குஜராத் மோடி, வாஜ்பாய், நஸ்ருத்தீன் ஷா, மோகன்லால், உயர்சாதி திமிர், காவி நிற வாடை, சிறுபான்மையினரின் இழிவு, கோவை குண்டு வெடிப்பு, ஆனா பாருங்க நிஜ காமன் மேன் யாருன்னு இன்னும் தெரியலீங்க.

ஸ்ஸ்ஸோ, ஆள விடுங்கடா சாமி, இப்ப இருக்கற நிலைமையில பதிவுலகத்துல இந்த படத்தைப் பத்தி ஒரு பதிவாவது போடலைன்னா, நீயெல்லாம் என்னத்த எழுதி, என்னத்த கிழிச்சேன்னு கேட்டுருவாங்க போலிருக்குது. ஆனா பாருங்க நிஜ காமன் மேன் யாருன்னு இன்னும் தெரியலீங்க.

அய்யா சாமிகளா, சிங்கைப்பதிவர் செந்தில்நாதனுக்கு ஒரு தேவைன்ன உடனே முகம் பார்த்தறியாத அந்த நண்பருக்கு வரிஞ்சு கட்டிட்டு முன்னால வந்து உதவி பண்ணுனீங்களே, பதிவுலகம்னா என்னான்னு பாருங்கடா, நட்புன்னா அதுக்காக மலைகளெல்லாம் எங்களுக்கு ஒரு தூசுடான்னு செஞ்சு காமிச்சீங்களே, அப்படியே இருங்கைய்யா, அதுதான்யா நல்லாருக்கு.

ங்கொய்யால பக்கங்கள் :


தீப்புடிச்சா ஓடி அணைக்கறவன் ஃபயர் மேன்,

லெட்டர் போட்டா தேடி குடுக்கறவன் போஸ்ட் மேன்,

ராவும் பகலுமா காவல் இருக்கறவன் வாட்ச் மேன்,

ங்கொய்யால,

கலவர பூமில கம்னு இருக்கறவன்தாண்டா காமன் மேன்.

Wednesday, September 16, 2009

ஜுகல்பந்தி – 16 – 09 – 2009 - நீளும் கம்யூனிச கரங்கள்

நகரம்

குவாலியர் – கோட்டைகளின் நகரம்

புழுதி பறக்க விரையும் குதிரைகளின் குழம்பொலி, உருவிய வாள், முறுக்கிய மீசை, நிமிர்ந்து நிற்கும் கோட்டைகள், வாரிசு சண்டைகள், உருண்டு ஓடிய தலைகளிலிருந்து பிரிந்து சிதறிய மகுடங்கள், பொன்னாசை பிடித்த ஆப்கானியர்களின் ஊடுருவல்கள் என எப்பொழுதும் ஒரு அரசியல் சூறாவளிகளுக்கு நடுவிலேயே வாழ்ந்த ஒரு நகரம். இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும், முகலாயச் சக்கரவர்த்தியின் அவையை அலங்கரித்த நவரத்தினங்களில் ஒருவரான தான்சேன் இங்கு வந்தும் போவதுமாக இருந்ததால், இசையும், நாட்டியமும் இன்ன பிற கலைகளும் கூட அதன் போக்கில் தன் பல பரிமாணங்களை இந்த நகரத்தில் விட்டுச் சென்றிருக்கிறது.

முதன்முதலில் இந்த மலை நகரத்தை கண்ணெடுத்து பார்த்து அதை ஆக்ரமித்து தனதாக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள், சூரியவம்சத்தை சேர்ந்த பத்குஜ்ஜர் ராஜபுத்திர வம்சத்தின் குல விளக்குகள் தான். எந்தப் போரிலும் முன்னணியில் நின்று நெஞ்சை நிமிர்த்தி போரிடும் வீரமும், துணிவும், பெருமையும் கொண்ட குஜ்ஜர் எனப்படும் இந்த ராஜபுத்திர வம்சம், அரசியல் சூழ்நிலையில் அடிபட்டு இன்று தங்களது இருப்பியல் வசதிகளுக்காக அரசியல்வாதிகளிடம் கையேந்தி நிற்பது வேதனைதான். இந்த வம்சத்து மக்கள் இங்கு கோட்டை கட்டப் போய், அதன் பிறகு வந்தவர்கள், இங்கு பல கோட்டைகளைக் கட்டி இந்த நகரத்துக்கு கோட்டைகளின் நகரம் என பெயர் கொடுக்கும் அளவிற்கு பெருமை சேர்த்து விட்டார்கள்.

தோமர் வம்சத்து மன்னர்கள் ஆண்ட காலத்தில் ராஜா மான்சிங் தோமர் என்பவரால் கட்டப்பட்ட குவாலியர் கோட்டையானது இன்றளவும் பிரசித்தமானது. இதை சுற்றிப் பார்ப்பதற்கே பல நாட்களாகும். இதற்குப் பின் இந்த நகரம், கச்வாஹா ராஜ புத்திரர்கள், அடிமை வம்சத்து அரசனான குத்புதின் ஐபெக், அதற்குப்பின் மராட்டிய வீரரான மாதவ்ராவ்ஜி ஷிண்டே என பலரது கைக்கு மாறி, சிப்பாக் கலகத்தில் பெரும்பங்கெடுத்து, பின் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆட்சி புரிந்த சிந்தியா மகாராஜாக்களின் கைகளில் இந்தியா சுதந்திரம் பெறும் வரை இருந்திருக்கிறது.

குவாலியர் கோட்டையின் அழகையும் பெருமையையும் கண்ட முகலாய மன்னர் பாபர், இதில் லயித்துப் போய் இந்தியர்களால் கட்டப்பட்ட மாளிகைச் சரங்களில் இது ஒரு விலைமதிக்க முடியாத முத்து என்றாராம்.

இன்னும் இந்நகரம் அமைந்திருக்கும் பிராந்தியமான புந்தேல்கண்ட் பகுதியில் பிரசித்தி பெற்ற நடனங்களான ஆஹிரி, பரேதி, சஹரியா, லூர், லாங்கி, துல் துல் கோரி போன்ற நடனங்களின் எச்சத்தையும் மிச்சத்தையும், திருமணங்களிலும் விழாக்களிலும் காணலாம்.

இசை மேதை தான்சேனுக்கு வருடத்திற்கொருமுறை தான்சேன் இசைவிழா நடத்தி பெருமை சேர்க்கிறார்கள்.

ஒரு முறையாவது இந்தக் கோட்டைகளை போய் பார்த்து விட்டு பெரு மூச்சு விட்டு விட்டு வாருங்கள்.

நாட்டு நடப்புகள் : நீளும் கம்யூனிச கரங்கள்

சீனா, அருணாசல பிரதேசத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறது, ராணுவ நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது, எப்பொழுதும் சீண்டிப் பார்க்கிறது, திபெத்தில் அழிச்சாட்டியம் பண்ணுகிறது என்றெல்லாம் பொழுது போகாத நேரத்தில், ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல்களும், பியூட்டி பார்லரில் போய் முகம் முழுவதும் கண்ட கண்ராவிகளையெல்லாம் பூசிக்கொண்டு வந்து, தனது வயதை மறைக்க பிரம்மப் பிரயத்தனப் படும் ஊடக அம்மணிகளுமாக கத்தித் தொலைத்துக் கொண்டிருந்தார்கள், இருக்கிறார்கள். அதற்கெல்லாம் மேலாக நேற்று ஒரு புதிய விஷயம் கிடைத்திருக்கிறது, நேபாளத்தில் உள்ள இமயமலை அடிவாரங்களில் சீனா மூன்று குகைகளில் தனது ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறதாம். மாவோ ஆட்சி நேபாளத்தில் அமைந்த நாளிலிருந்தே அங்கு சீனத்தின் சினேகப் பார்வை விழுந்து, அது காதலாகி கனிந்துருகி, இப்பொழுது இந்தியாவில் உளவு வேலை பார்க்க நிர்பந்திக்கும் அளவுக்கு நேபாளத்தில் சீனா காலூன்றியிருக்கிறது. நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் உள்ள நல்லுறவினால், எல்லையில் யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் வந்து போகலாம் என்ற மாமன், மச்சான் உறவு முறை இருக்கிற நேரத்தில், சப்பை மூக்கும், மஞ்சள் நிறமும், இடுங்கிய கண்களுமாக இருக்கும் நேப்பாளிகளோடு உருவத்தில் ஒத்துப் போகும் சீனர்கள், இந்த மாமன் மச்சான் வழியில் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசம் பண்ணாமலிருந்தால் சரி.

பதிவர் வட்டம் :

சிறுகதை பட்டறை நல்ல முறையில் நடந்து முடிந்திருக்கிறது. அண்ணன் சிவராமனுக்கும், குருஜிக்கும் நன்றிகள். பதிவர்கள் உற்சாகத்துடன் அதை வர்ணித்ததே அதற்கு சாட்சி. பதிவுலகம் போலித் தொந்தரவுகளிலிருந்து என்றுதான் மீண்டு வருமோ தெரியவில்லை. யாரோ ஒருவர் இந்த தேன்கூட்டில் கை வைக்கப் போய், இப்பொழுது நிறைய தேனீக்கள், வாளெடுத்துக்கொண்டு களம் புகுந்துள்ளன. தேனெடுக்கும் தேனீக்கள் வாளெடுக்கலாமா?????

ஆண்டாள் பாசுரங்களைப் பற்றி ஒரு எழுத்தர் பேசப் போக, கலாச்சாரக் காவலர்கள் அவரைப் பிடித்து பிழிந்து, கசக்கி, காயப் போட்டு விட்டார்கள். என்னமோ போங்க சாண்டில்யன் கூடத்தான் தான் எழுதிய ஜலதீபத்தில் ஆண்டாளைப் பற்றி எழுதினார். அப்பொழுதெல்லாம் ஏன்தான் இந்த பிரளயம் கிளம்ப வில்லையோ தெரியவில்லை.

எப்படி கேள்விகள் பத்து, பிடித்தது பத்து, படித்தது பத்து, உன்னைப் பற்றி 32, A to Z, ஆறு தன் வரலாறு கூறுதல், விருது கொடுத்தல் போன்ற தொடர்பதிவுகள் எப்பொழுதும் வலையுலகை ஆக்கிரமித்து நிற்கிறதோ, அப்படியே வகை வகையான போட்டிகளும், (புகைப் படப் போட்டி, கவிதைப் போட்டி, மொக்கைப் போட்டி, இன்னும் பல) பதிவுலகை ஆக்கிரமித்து இருக்க வேண்டும் என இந்த ஏழை அடியேன் விரும்புகிறேன்.

ங்கொய்யால பக்கங்கள்

சீறத் தெரியலைன்னா அது சிங்கமில்ல,

பாயத் தெரியலைன்னா அது புலியுமில்ல,

பாடத் தெரியலைன்னா அது குயிலுமில்ல,

ஆடத் தெரியலைன்னா அது மயிலுமில்ல,

நீந்தத் தெரியலைன்ன அது மீனுமில்ல,

ங்கொய்யால,

நல்ல நண்பன் இல்லைன்னா நீ மனுசனேயில்ல.

Monday, September 14, 2009

இது இன்னாண்ணா, A லிருந்து Z வரைக்கும்னு.....,

இப்பிடித்தான் சும்மா போலி விவகாரம், ஆண்டாள் என்ன பாடுனார்? ஈரத்துல தண்ணி எவ்வளவு ? பட்டறைல ஈ யாரு? இன்னைக்கு யாரு யார கும்முறாங்கன்னு படிச்சுகிட்டு நல்ல புள்ளையாட்டம் இருந்த என்னை, இந்த வம்புல நையாண்டி நைனா அண்ணன் மாட்டி விட்டுட்டாரு, ஆனா அதுக்குண்ணு நாங்க சும்மா விடுவமா, நாங்களும் நாலு பேர கோத்து விட்டிருக்கம்ல.....,

வாங்க வந்து படிச்சு தொலையுங்க.


சில விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்..



இனி மேட்டருக்கு வருவோம்.


1. A – Avatar (Blogger) Name / Original Name : தராசு/ அட, பேருல என்னங்க ஒரிஜினலு அப்புறம் டூப்ளிகெட்டுன்னுட்டு,

2. B – Best friend? : நண்பர்கள் எல்லாருமே சிறந்தவர்கள் தான். அதுல பெஸ்ட் பிரண்டுன்னு ஒரு தனி அவார்டெல்லாம் எனக்கு புடிக்காது.

3. C – Cake or Pie? : இது அமெரிக்கா காரனுக்கான கேள்விங்கறது என்னோட ஐப்பிராயம், “பை” ன்னா அது இன்னா, நம்மூரு சமோசா மாதிரியானா ஐட்டமா?????, அப்ப நாங்க சமோசாகாரங்க தான்.

4. D – Drink of choice? : தண்ணி, ஹலோ குடிக்கற தண்ணீங்க, நீங்க பாட்டுக்கு கோக்கு மாக்கா எதையும் யோசிக்க கூடாது.

5. E – Essential item you use every day? : தேவையில்லாதத எதுக்காக பயன்படுத்தணும், அப்டீன்னா தேவையிருக்கும்போது தேவையில்லாத பயன் படுத்தறதும், தேவையில்லாத போது தேவையுள்ளத பயன் படுத்தறதும் முட்டாள் தனம் தான, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா, இப்பவே கண்ண கட்டுதே……

6. F – Favorite color? வெள்ளை கலரு சிங்குச்சா, ஏன்னெல்லாம் கேக்கப் படாது, இருந்தாலும் சொல்லீற்றேன், ஏன்னா எனக்கு மனசுக்கு புடிச்ச கலர் வெள்ளை, ஏன்னா நம்ம மனசே வெள்ளை.

7. G – Gummy Bears Or Worm? : வேணாம் எனக்கு கோபம் வராது, இதெல்லாம் அசலூர்காரன கேக்க வேண்டிய கேள்வி. எங்கூர்ல கிடைக்கறத கேளுங்கப்பா.

8. H – Hometown? கொஞ்சும் தமிழ் பேசும் கொங்குநாடு.

9. I – Indulgence? படிக்கறது, எதுன்னாலும் படிக்கறது.

10. J – January or February? பிப்ரவரிதான், நாலு வருசத்துக்கு ஒரு தரம் சரியா மாறிகினே இருக்கற இந்த மாசம் எனக்கு புடிக்கும். ஏன்னாக்கா காதலுக்கு சிறப்பே இந்த மாசத்தில தான….

11. K – Kids & their names? இங்கு ஒருமைதான், பன்மை கிடையாது, பேருன்னு எடுத்துகிட்டா பிரியம்னு வெச்சுக்கோங்களேன்.

12. L – Life is incomplete without? கண்ணா நீ என்னதான் பெரிய ஆளாயிருந்தாலும், நீ ஒரு பாதிதான், மறுபாதியில்லனா நீ வெறும் பாதிதான்.

13. M – Marriage date? வாழ்க்கையில ஒரு மனுஷன் சந்தோஷமா இருந்த கடைசி நாளை தெரிஞ்சுக்கறதுல எவ்வளவு ஆசை பாரு.

14. N – Number of siblings? கண்ணே கண்ணு.

15. O – Oranges or Apples? ஒரு நாளைக்கு ஒண்ணை தின்னா டாக்டரே வேண்டாமாமே, அதான், அதான், அதேதான்.

16. P – Phobias/Fears? முதுகுல நச்சுனு ஒரு குத்துவாங்களே, அந்த ஆளுங்கள பாத்துத்தான் பயம்.

17. Q – Quote for today? உன்னை நீ நம்பு, உலகமே உன்னை நம்பும்.

18. R – Reason to smile? இதுக்கெல்லமா காரணம் சொல்லுவாங்க, புன்னகை என்னும் நகை எனக்கு எப்பொழுதுமே அழகு சேர்ப்பதால்.

19. S – Season? வசந்த காலம்.

20. T – Tag 4 People?-
அன்புத்தம்பி டக்ளஸூ என்கிற ராஜூ என்கிற ராமராஜூ,
சும்மா சும்மா ஒளிஞ்சு வெளையாடிகிட்டிருக்கற அன்பு அண்ணன் அப்துல்லா.
இது வரைக்கும் அதிகம் எழுதாமல் , அதிகம் வாசிக்கும் அண்ணன் நாஞ்சில் நாதம்,
நடந்தே சலிக்கற பாதசாரி என்கிற வெங்கிராஜா


21. U – Unknown fact about me?: நான் ஒரு டெரராக்கும்.

22. V – Vegetable you don't like? ஏட்டுச் சுரைக்காய்.

23. W – Worst habit? அப்பிடி எதுவும் இருக்கற மாதிரி தெரியலயே.

24. X – X-rays you've had? அதுக்கெல்லாம் அவசியம் இது வரைக்கும் வரல.

25. Y – Your favorite food? அசைவம்.

26. Z – Zodiac sign? புற்று நோய்.

Wednesday, September 9, 2009

ஜுகல்பந்தி - 09 - 09 - 09 - நாட்டு நடப்புகள்

 

ஜுகல் பந்தியில் எதாவது ஒரு நகரத்தை பற்றி எழுதி வந்ததால், ஒரு சிலர் எதுக்கு இப்ப வரலாற்று பாடம் எடுக்கறீங்கன்னு கேட்டதால், நகரங்களைப் பற்றிய குறிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படுகிறது.

அதனால இந்த வாரம் நாட்டு நடப்புகள்:

கழுதையும் அஜிர்பைஜானும்

பதிவர்கள் பிரச்சனைல மாட்டிக்கறது நம்ம நாட்ல மட்டும் இல்ல. உலகத்தின் பல பாகத்துலயும் பதிவர்கள் எதையாவது பண்ணப் போக அங்கங்க மாட்டிக்கறாங்க. அஜீர்பைஜான் அப்டீன்னு ஒரு நாடு, அதிகமாக துருக்கிய இஸ்லாமியர்களான சியா பிரிவினர் வாழும் நாடு. ஐந்து முறை தொழுகையும், ரமலான் நோன்புகளும், கொஞ்சம் ஐரோப்பியத்தனங்களும், வயிற்றைக் குலுக்கி அரைகுறை ஆடையில் வெள்ளைத் தோல் அம்மணிகள் ஆடும் Belly Dance என்ற நடனம் நிறைந்த மது சாலைகளும் என ஒரு கலவையான தேசம். இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்திருந்தாலும் இது ஒரு மத சார்பற்ற நாடாகத்தான் இன்று வரை இருக்கிறது. ஏன், அதிகம் இஸ்லாமியர்கள் நிறைந்திருந்த போதிலும் கூட, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து ஒழுங்கு மரியாதையாக தேர்தல்கள் நடத்தி, ஆளுங்கட்சி, எதிர்கட்சி, மற்றும் 132 வது வட்டத்தின் இணை துணை பொது செயலாளருக்கெல்லாம் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அஜீர்பெய்ஜானின் விடிவு காலமே, சரித்திரத்தின் சங்க நாதமே, தேசீயத்தின் அடையாளமே என ஃபிளெக்ஸ் பேனர் வைக்கும் ஒரு நாடாகத்தான் இருக்கிறது.

  அங்கு இருக்கும் அரசாங்கத்தை விமர்சித்து இரண்டு பதிவர்கள் ஒரு வீடியோ உருவக்கினார்கள். அதாவது அரசாங்கம் கழுதைகளுக்கு கொடுக்கும் மதிப்பை விட படித்த இளைஞர்களுக்கு கொடுக்கும் வேலை வாய்ப்பும் மரியாதையும் குறைவாய் இருக்கிறது என்பதை கிண்டலாக ஒரு வீடியோ எடுத்தார்கள். அதை You Tube ல போட்டுவிட்டு, ஹாய்யாக அமர்ந்து ஒரு அஜீர்பெய்ஜானின் டாஸ்மாக்கில் பீர் குடித்துக் கொண்டிருக்கும்பொழுது , திடீரென்று அரசாங்க அதிகாரிகளும் போலீஸாரும் வந்தார்கள், அவர்களை கைது செய்து 5 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். இப்பொழுது இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை என அநேக அமைப்புகள் கொடி பிடித்து வீதியில் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கின்றன. ஆக பதிவர்களே, ஆட்டோ வீட்டுக்கு வருவது சென்னையில் மட்டுமல்ல, உலகமெங்கிலும் இப்படித்தான் போலுள்ளது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவர் வட்டம்

பதிவர்கள் விமர்சனம் எழுதுவதால் சினிமாக்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப் படுகிறது என்ற ஒரு கருத்து பல இடங்களிலும் உலா வருவதாக செய்திகள் வருகின்றன. பதிவுலகிலும் இது பற்றிய விவாதம் சூடு பிடித்துள்ளது. படம் நல்லா இருந்தா எல்லாரும் நல்லாருக்குன்னு தான் சொல்லுவாங்க. அதாங்காட்டியும் நீ எப்படி சொல்லப் போச்சுன்னு கையை மடிச்சு விட்டா, எப்படிங்க??

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இப்படியும் மனிதர்கள்

பொய் வழக்குப் போடும் மனைவிகள்னு ஒரு தளம், அதுல இந்த போலி வரதட்சணை வழக்கு விவகாரங்களை ஒரு அன்பர் எழுதி வருகிறார். அவ்வப்பொழுது அதை வாசித்ததுண்டு. அப்பவெல்லாம் கொஞ்சம் மிகைப் படுத்தி எழுதறாரோன்னு தோணும். ஆனா, சமீபத்துல என்னுடைய ஒரு நண்பரும் இதற்கு பலியாகி போகவே, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். நண்பருக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளர் வேலை. அரவிந்த சாமி மாதிரி ஒரு பர்சனாலிட்டி. கல்யாணம் ஆகி தாம்பத்யம் நல்லாத்தான் போயிட்டிருந்துச்சு. ஒரு ஐந்து மாதம் கழித்து ஆசை மனைவி, முகம் சிவக்க அந்த நல்ல விஷயத்தை சொல்ல, தலைவர் சந்தோஷத்தில் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தார். ஆனா, கொஞ்ச நாள்லயே நொந்து நூலாகிப் போனார். ஏன்னா, மனைவிகிட்டேருந்து எந்நேரமும் புகார்தான், நான் வயத்துல புள்ளயோட இருக்கேன்ற கவலை உனக்கு கொஞ்சமாச்சும் இருக்கான்னு ஒரே டார்ச்சர். ஒரு நாள் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன், நம்மாளு ஒரு சீரியஸான மீட்டிங்ல இருக்கற நேரம், வீட்டிலிருந்து போன்.

இப்ப உடனே கிளம்பி வா,

இல்லம்மா, நான் மீட்டிங்ல இருக்கேன். ரொம்ப முக்கியமான மீட்டிங்.

அப்ப வயித்துல புள்ளயோட இருக்கற நான் முக்கியமில்லையா, உனக்கு மீட்டிங் தான் முக்கியமா?? இப்ப நீ வரலைன்னா, நான் மாடியில இருந்து குதிச்சுருவேன்.

விரக்தியின் எல்லையில் இருந்த நண்பர் " சரி அதை செய் முதல்ல" ன்னுட்டு லைனை கட் பண்ணிவிட்டு, மீட்டிங்கில் சொதப்பியதற்காக மேலிடத்திலும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

மாலையில் மனதை சாந்தப் படுத்திக் கொண்டு வீட்டிற்கு போனால், வீட்டில் யாருமில்லை. மனைவியின் வீட்டிற்கு போனைப் போட்டால், மாமியார் மாத்திரம் போனை எடுத்து, அவ உங்க கூட பேச விரும்பலன்னு சொல்லீட்டாங்க.

இரண்டு மாதம் கழித்து இப்பொழுது எதிர் தரப்பு குழந்தை பிறந்ததும் இவர் மீது வரதட்சிணை வழக்கு பதிவதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கியிருப்பதாக கேள்விப்பட்டு, இதற்கு முன் ஜாமீனாக எதாவது செய்ய முடியுமா என பல பணம் புடுங்கும் வக்கீல்களுக்கு சம்பளத்தை அழுது கொண்டிருக்கிறார்.

என்ன சட்டமோ, என்ன மக்களோ போங்க.

இந்த வாரம் ங்கொய்யால எழுதற மூடே இல்ல.

Tuesday, September 8, 2009

பூஜைக்கேத்த பூ இது!!!!!!!!!!



ஊன்று கோலுடன் நடக்கும் பத்து வயது கலைச் செல்வி, அவள் நடக்கும் பொழுது சூம்பிப் போன வலது கால் காற்றில் ஆடியது. இரண்டு கண் இமையும் ஒரு பள்ளத்தை மூடியிருக்க, கைகளை விரித்தபடி மெதுவாக அடியெடுத்து வைக்கும் தென்னரசு, இரண்டு கையுமில்லாததால் சட்டையில் தைக்கப்பட்ட கைகள் காற்றில் ஆடியபடி இன்னொரு பையன், சாடையில் பேசும் மகேஸ்வரி, துருத்திய பற்களின் நடுவே நீண்டிருந்த நாக்கை சுழற்றி வழியும் எச்சையை உள்ளுக்கிளுக்கும் முஸ்தஃபா, இப்படி திரும்பிய பக்கமெல்லாம் ஊனம், இயற்கை இவர்கள் வாழ்வில் எழுதிய சோக வரலாற்றின் கோர தாண்டவம்.

இவர்களிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்ற குழப்பத்தில் மூவரும் அமர்ந்திருக்க சுரேஷ் தான் அமைதியை கலைத்தான். “பாப்பா, இங்க வா, உன் பேரென்ன?” என்று கேட்டதும் அங்கிருந்த பதினைந்து குழந்தைகளும் அவர்களின் தயக்கத்தை உதறிவிட்டு, ஒரு வேகத்துடன் வந்து இவர்களிடம் ஒட்டிக் கொண்டனர். “அண்ணா, உங்க பேரென்ன?” “இடு எண்ன, உங்க கலுதில டொங்கறது?” என அதிசயத்துடன் ஒரு குழந்தை அடையாள அட்டையை இழுக்க, “அண்ணா, நீங்க பெரிய ஆபீஸரா?” என கலைச் செல்வி கேட்டாள். குழந்தைகள் சகஜமாக பேச ஆரம்பித்ததும் அவர்களின் குறைகள் மறைய ஆரம்பித்து அவர்களுடன் விளையாட ஆரம்பித்தார்கள். எங்கும் சிரிப்பு, மனது நிறைய சந்தோஷம், அவர்களுக்கென வாங்கி வந்த சாக்லெட்டெல்லாம் கொடுத்து, மதியம் வரை அவர்கள் தோளில் ஏறியதையும் தொடையில் அமர்ந்ததையும் முழுதுமாக அனுபவித்து விட்டு, கேட்டரிங் சர்வீஸில் சொல்லியிருந்த சாப்பாடு வந்ததும் அவர்களுக்கு ஊட்டி விட்டார்கள். கொஞ்சம் சாப்பிட்டார்கள். அவர்களிடம் இருந்து விடைபெற்று வரும் பொழுது கையில் கொடுத்த செக்கை வாங்கிக் கொண்ட அந்த காப்பக கண்காளிப்பாளர் நிர்மலா ஒரு நன்றியுடைய புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார்.

கடற்கரையில் அமர்ந்திருக்கும் பொழுது மனது மிகவும் லேசானதைப் போல் உணர்ந்தார்கள். எதையோ சாதித்ததைப் போன்ற பெருமிதம் மனதில் நிறைந்திருந்தது.

“மாப்ள, இனிமே ஒவ்வொரு சண்டேயும் அங்க போரம்டா” என பீட்டர் கூற “ஆமாண்டா” என்றான் கதிர்.

அப்புறம் வாரா வாரம் அங்கு போக ஆரம்பித்ததும், கல்யாணம் செய்தால் ஒரு ஊனமுள்ள பெண்ணைத்தான் கல்யாணம் செய்வது என்று முடிவெடுத்ததும், அப்படியே மூன்று வருடங்களுக்கு முன் கண்ணில்லாத வளர்மதியை சுரேஷ் கல்யாணம் செய்ததுயும், வாய் பேச முடியாத மீனாவை கதிர் கல்யாணம் செய்ததும் இதோ இப்போது நடந்தது போல் இருக்கிறது. இன்று பீட்டருக்கு கல்யாணம்,

சுரேஷ்.வளர்மதியை கையைப் பிடித்து அழைத்து வந்து சர்ச்சின் முதல் வரிசையில் அமர வைத்து விட்டு, குழந்தையை அவள் கையில் கொடுத்து விட்டு கதிருக்காக காத்திருந்தான். சிலுவையில் தொங்கிய இயேசு கிறிஸ்துவின் சிலைக்கு கீழே கம்பங்களைப் போல் எழுந்திருந்த மெழுகு வர்த்திகளை வெள்ளை உடையணிந்த பாதிரி ஒருவர் வந்து கொளுத்தி வைத்து விட்டு, வந்திருக்கும் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு மறைந்து போனார்.

பீட்டர் நீல கலர் கோட் அணிந்து மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்தான். பாடகர் குழுவினர் வந்து இசைக் கருவிகளை தட்டி சரி பார்க்க, இனி திருமணம் ஆரம்பிக்கிறது என்பது தெரிந்தும், கதிர் வராததால் சுரேஷ் பொறுமையிழந்து வாசலை பார்த்த படியே இருந்தான்.

“பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே உங்களுக்கு சந்தோஷமும் சமாதானமும் உண்டாவதாக. ஆமென்” என்ற குரலை கேட்டு முன்புறம் திரும்பினான். திருமணம் ஆரம்பித்திருந்தது, இன்னமும் இந்த கதிரையும் காணவில்லை, கல்யாண பெண்ணையும் காணவில்லை. கல்யாண பெண் எப்படி இருக்காங்கடா என்று போனில் கேட்டதுக்கு, “நீங்களே வந்து பார்த்துக்குங்க, அது வரைக்கும் சஸ்பென்ஸ்” என்று பீட்டர் போனில் சொல்லியிருந்தான்.

“நாமெல்லாரும் எழுந்திருந்து நமது கையிலிருக்கும் பாட்டுத்தாளில் உள்ள முதல் பாடலான ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே எனற பாடலை பாடுவோம், அது சமயம் மண மகள் நம்மத்தியிலே வருவார்” என பாதிரி சொல்ல, மொத்த கூட்டமும் எழுந்து நிற்க இசைக்குழுவினர் பாட ஆரம்பித்தனர். மணப்பெண் வரும் பரபரப்பு வாசலில் தெரிந்தது. சுரேஷ் முழுவதும் திரும்பி மணப்பெண்ணை கண்கொட்டாமல் பார்த்தான். நல்ல சிவப்பாயில்லவிட்டாலும் எடுப்பான நிறம், இடது கையில் மணப்பெண்ணுக்குரிய மலர்கொத்தை பிடித்திருந்தாள். வலக்கையில் சுற்றி மடக்கிய கைக்குட்டை, பியூட்டி பார்லரில் அலங்கரிக்கப்பட்ட முகம், வசீகரிக்கும் கண்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் பழுதில்லாத கண்கள், இரண்டு கால்களும் சரியாக இருக்க நெற்றியில் இருந்து வழிந்தோடிய மெல்லிய வெள்ளை வலைத்துணி பின்னால் புரள, ரோஸ்கலர் பட்டுப் புடவையில் கம்பீரமாக வந்து கொண்டிருந்தாள் மணப்பெண். சுரேஷுக்குள் ஒரு சின்ன ஏமாற்றமும் குழப்பமும் வந்து வந்து போனது. பீட்டர் மாறி விட்டனோ, அல்லது கதிரைப்போல் வாய் பேசாத…..

“ஜெமிமா ராணியாகிய நீ, உன் அருகிலிருக்கும் சார்லஸ் பீட்டரை உன் வாழ்கைத் துணையாக ஏற்றுக் கொண்டு, இன்பத்திலும், துன்பத்திலும், வாழ்விலும், தாழ்விலும், மரணம் உங்களை பிரிக்கும் வரைக்கும் இவருக்கு மனைவியாயிருக்க, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும், இங்கு கூடியிருக்கும் அனைவரின் முன்னிலையிலும் வாக்கு கொடுக்கிறாயா?” என்று பாதிரியார் கேட்டதற்கு “வாக்குக் கொடுக்கிறேன்” என்று கணீரென பதில் சொன்ன ஜெமிமாவின் குரலை கேட்டதும் சே இப்படி மாறிப் போயிட்டானே, பேசாம எழுந்து போய்விடலாமா என சுரேஷ் கொதித்துக் கொண்டிருந்தான்.

தோளில் யாரோ தட்டவே, திரும்பினால் கதிர். “சாரிடா, டிராஃபிக்ல மாட்டிட்டோம்” என்று முன்னால் நடக்கும் திருமணத்தை பார்த்துக் கொண்டே சிரித்தான். அவங்க எங்கடா என கிசுகிசுப்பாய் கேட்க, அதோ என கண்ணாலேயே காண்பித்தான். சிநேகமாய் மீனா கைகளை குவித்து வாய் நிறைய புன்னகையுடன் வணக்கம் சொன்னாள். பதிலுக்கு வணக்கம் சொல்லும்போதுதான் கவனித்தான், என்னதான் பட்டு புடவையின் முந்தானையை இழுத்து தோள் வழியே போர்த்த முயற்சித்தாலும், மேடிட்டிருந்த வயிறு விஷேசம் என்று சொன்னது. அவன் பார்வை போன இடத்தை பார்த்த கதிர் சிரிக்க, விஷேசமா என புருவத்தை குவித்து கண்களாலேயே கேட்க, வெட்கத்துடன் கதிர் ஆமாம் என தலையசைத்தான். அவனை தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டு முன்னால் பார்க்க, மணமக்கள் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார்கள். மீனா வந்து, சுரேஷின் தோளை தட்டி, குழந்தை எங்கே என சைகையில் கேட்க, வளர்மதி அமர்ந்திருந்த இடத்தை கையால் காட்டினான். மீனா எழுந்து போய் அவள் அருகில் அமர்ந்து குழந்தையை தூக்க முயல, கைகளை தட்டி விட்டு குழந்தையை இறுக பற்றினாள் வளர்மதி. சுரேஷ் ஓடிவந்து மீனா என காதில் சொல்லவும், சிரித்துக் கொண்டே குழந்தையை நீட்டினாள். அவங்க விஷேசமா இருக்காங்க என்று காதில் சொன்னதும் முகம் முழுவதும் சந்தோஷத்துடன் மீனாவின் பக்கம் திரும்பி தடவி தடவி கரங்களை தேடி பற்றினாள்.

“தேவன் இணைத்த இவர்களை எந்த மனிதனும் பிரிக்காதிருப்பானாக, ஆமென்” என கடைசியாக பாதிரியார் ஆசீர்வதித்ததும், மணமக்கள் வெளியே வந்ததும், புல்வெளியில் இட்டிருந்த மேடையில் வரவேற்பு வைபவம் ஆரம்பமானது. எல்லோரும் சிரித்துக் கொண்டே வீடியோவுக்கு போஸ் கொடுத்து விட்டு போய் மிச்சம் ஒரு சிலரே இருந்த நேரத்தில், கடைசியாக பீட்டர் ஜெமிமாவை அழைத்துக் கொண்டு இவர்கள் இருவரிடமும் வந்தான். நண்பர்கள் இருவருக்கும் புது மனைவியை அறிமுகப் படுத்திவிட்டு அவர்களின் மனைவிகளையும் அறிமுகப் படுத்தினான். இருவர் முகத்திலும் இருந்த வெறுப்பை கண்டு கொள்ளாதவனாக, மீனாவிடத்தில் போய் அவளது வயிறை காட்டி, சிரித்துக் கொண்டே கை குலுக்கினான். வெட்கத்துடன் மீனாவும் கைகுலுக்க, பையனா, பொண்ணா என சைகையில் கேட்டு கலாய்த்தான்.

பிறகு நண்பர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்து கொஞ்சம் தள்ளி அழைத்து வந்து, “தெரியும் நீங்க ரெண்டு பேரும் என்ன நினைக்கறீங்கன்னு தெரியும், ஒரு குறையும் இல்லாத ஒரு பொண்ணா ஜெமிமா இருக்காளேன்னு பாக்கறீங்களா, நான் நம்ம மூணு பேரும் எடுத்துகிட்ட உறுதி மொழிய மீறிட்டேன்னு நினைக்கறீங்களா”, ஒரு புன்னகை முகத்தில் தவழ சொன்னான் “வளர்மதினால பார்க்க முடியாது, மீனானால பேசவோ கேட்கவோ முடியாது, ஜெமிமானால எல்லாம் முடியும், ஆனா ...................”
பீட்டர் சொல்லச் சொல்ல நண்பர்கள் இருவரும் அவனை கட்டி அணைப்பதைப் பார்த்து ஜெமிமா தலைகுனிய, மீனா புரியாமல் பார்த்தாள். வளர்மதி கையிலிருந்த குழந்தை சிரித்தது.

Monday, September 7, 2009

புண்ணாக்கு, வெளக்கெண்ணை, பருப்பு, வெங்காயம்

போடா புண்ணாக்கு, டேய் வெளக்கெண்ணை, இன்னா, நீ பெரிய பருப்பா, போடா வெண்ணை, டேய் வெங்காயம், ஆமா இவுரு பெரிய பன்னு, சுத்த பழம் மாதிரி இருக்காண்டா, அவன் ஒரு தயிர் வடைடா,

இப்படி எல்லாம் ஒவ்வொருத்தருக்கும் ஒரு பெயர் வெச்சு கூப்பிடறதை கேட்டிருப்பீங்க, அதுக்கு உண்மையிலயே இன்னா மீனிங்னு மல்லாக்க படுத்து யோசிச்சப்ப……….,,,,,,,

புண்ணாக்கு : எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசறவன், ஆனா உண்மையில ஒரு சரக்கும் இருக்காது. சந்திராயன் எரிபொருள் என்னாங்கறதுல இருந்து சந்திரமுகி படத்தின் கேமரா ஏங்கிள் வரை எல்லாத்தையும் மணிக்கணக்கா பேசுவான்.

வெளக்கெண்ணை : எதப் பத்தி பேசறமோ அதத் தவிர மத்ததெல்லாம் பேசறவன். கண்ணுல தூசி விழுந்துடுச்சுடான்னா கால் வலிக்கு மருந்து சொல்றவன்.

பருப்பு : எதுக்கெடுத்தாலும் ஓவரா சீன் காட்டறவன். எங்கிட்ட மட்டும் அவன் இந்த வார்த்தையை சொல்லீருந்தா, நடக்கறதே வேறன்னு டயலாக் உடறவன். ஆனா உண்மையிலயே இவருக்கு பேஸ்மெண்ட் வீக்.

வெண்ணை : எப்ப பார்த்தாலும் பெரிய நடுநிலைவாதி மாதிரி, நீதி, நேர்மை நியாயம்னு பேசறவன். என்ன இருந்தாலும் ஒசாமா பின் லேடனும் ஒரு மனிதன் தானே, அவரை எப்படி ஒரு ஓநாய் போலவெல்லாம் கார்ட்டூன் போடலாம்னு பேசுவான்.

பன்னு : ரொம்ப மென்மையானவனாகவும், இளகிய மனசுள்ளவனாகவும் காமிச்சுக்கறவன். ஏண்டா, ஒரு பொண்ண இப்பிடி எல்லாமா கலாய்ப்பாங்க, பாவண்டா, அது அழுதுறுமோன்னு பயந்துட்டேன்னு சொல்வான், ஆனா மனசுல மட்டும் என்னடா இதோட நிறுத்திட்டீங்களேன்னு சலிச்சுக்குவான்.

பழம் : வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருப்பது போல் காமிச்சுக்கறவன். டேய், அங்க பாரேன், காத்து அடிக்கும்போது அந்த குல்மோஹர் பூவெல்லாம் என்ன அருமையா தலை ஆட்டுதுன்னு பாரேன்னு சொல்லுவான், ஆனா, உண்மையில அந்த குல்மோஹர் பூவுக்கு பின்னால இருக்கற பால்கனியில துணி காயப் போடற ஆண்ட்டிய லுக் உட்டுட்டிருப்பான்.

தயிர்வடை : எப்பவுமே எதாவது ஒரு பிரச்சனையில இருப்பதாகவே கற்பனை பண்ணிக்கறவன். ரயில் டிரைவர் தூங்காம வண்டி ஓட்டி அவரு கண்ணு ஒரு மாதிரி இருக்கறத பார்த்துட்டு, டேய் எனக்கு இஞ்சினுக்கு அடுத்த கோச்சுடா, அந்தாளு கண்ணப் பாரேன், ஒரு ஃபுல் அடிச்ச மாதிரி இருக்காண்டா, ஒழுக்கமா ரயில ஓட்டுவானான்னு கவலைப் படுவான்.

ஆனா பாருங்க, இந்த எல்லா பட்டப் பெயர்களுமே ஒரு சாப்பிடற பொருளை மையமா வெச்சுத்தான் உருவாக்கியிருக்காய்ங்க, அது ஏன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க.

Friday, September 4, 2009

நவீன குருகுலங்கள்


என் மறுபாதி, சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பணி புரிகிறார் என்பதினால், என் வாரிசையும் அதே பள்ளியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்காளானேன். கடந்த சில நாட்களாக ஆணி புடுங்குவதிலிருந்து விடுப்பு என்பதால், இவர்கள் இருவரையும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், திரும்ப அழைத்து வருவதும் அடியேன் தலையில் விதிக்கப்பட்டது என்பதை விட திணிக்கப்பட்டது என்று சொல்லலாம். பள்ளி முடிவதற்கு சிறிது நேரம் முன்னாலேயே சென்று பள்ளியின் முன் காத்திருந்து நம்மவர்களை அழைத்து வரலாம் என ஒரு கால் மணி நேரம் முன்னாலேயே சென்றிருந்தேன். மிகவும் மேல்தட்டு ரக மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாதலால், பள்ளிக்கு அருகில் செல்லவே நமக்கு கூசுகிறது. எனது துணைவி அங்கு பணி புரிகிறாரே என்ற ஒரே காரணத்துக்காக என் குழந்தையையும் அங்கு சேர்க்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதால், இந்த கூச்சத்தையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. சென்னை நகரத்தை விட்டு சற்றே ஒதுக்குப் புறத்தில் பள்ளி வளாகம், கட்டிடப் பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அவசர கதியில் கட்டிய, இன்னும் ஒரு பள்ளிக்கான எந்த லட்சணங்களையும் கொண்டிராத நான்கு சுவர்களுக்குள் பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்துகிறார்கள். மாதத்திற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கிறார்கள். பள்ளி அமைந்திருப்பது ஒரு கிராமத்தில் என்பதால் போக வர சாலை வசதிகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் எப்படியும் ஏற்படுத்தப் படும் என நம்புவோம்.

இந்தியாவின் அனைத்து விலையுயர்ந்த கார்களையும் அதன் பணக்காரத்தன முகங்களையும் பார்க்க முடிந்தது. சிறிய கார்களில் வந்திருக்கும் அப்பாக்கள், குழந்தைகளை அழைத்துப் போக வந்திருக்கும் அம்மாக்களை சைட் அடித்தபடியே ஒதுங்கி நின்று மொபைல் போனில் பேசுகிறார்கள். பணக்கார படகு கார்களை ஓட்டி வந்திருக்கும் டிரைவர்கள், இன்னும் பத்து நிமிஷம் இருக்கல்ல, ஒரு தம் போட்டு விட்டு வருவோம் என பள்ளிக்கு முன்னே இருக்கும் செடி கொடிகளின் பக்கத்தில் ஒதுங்குகிறார்கள். ஒரு படகு காரில் இருந்து இறங்கிய பெண்மணி, காவலாளியிடம் “ எத்தின் மன்க்கி ஸ்கூல் ஃபினிஷ் ஆகும்” என சுத்தத் தமிழில் கேட்டுக் கொண்டிருந்தார்.

பள்ளிக்கு உள்ளே சென்றேன். தோளில் தொங்கிய லேப்டாப்பை இறுகப் பிடித்த படியே பிரின்ஸிபால் போல் தோன்றிய ஒரு பெண்மணி அவசர கதியில் ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார். குழந்தைகளின் வகுப்பு ஆசிரியரைக் காண வந்திருந்த பெற்றோர்களிடம் இருந்த பணக்காரத்தனம் எனக்கு ஒரு ஒவ்வாமையாய் தோன்றியது.

இன்று வாத்தியாரிடம் சென்று வாதிடும் பெற்றோர்கள் அதிகமாகி விட்டனர். என் மனைவியின் வகுப்பில் பெற்றோர் தினத்தன்று கேட்கப்படும் சில கேள்விகள் :

என் பையனுக்கு உங்க ஸ்கூல் சிலபஸ்ல ஒரு இன்ட்ரஸ்டே இல்ல, நீங்க இத மாத்தறதுக்கு முயற்சி எடுங்களேன்.

அவனை தமிழ் படிக்க சொல்லி அதிகம் கட்டாயப் படுத்தறீங்களாமே, அவன் தமிழ் படிச்சு என்ன பண்ணப் போறான்?

இந்த பெற்றோர்களை நினைத்தால் சிரிப்பும் வேதனையுமே வருகிறது.

முதலாவது எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே செலவு செய்தாலும் தன் மகனின் பேச்சைக் கேட்க எத்தனை பேருக்கு பொறுமை இருக்கிறது?

எல்லா பெற்றோருக்கும் தன் மகன் முதல் ரேங்க் வாங்க வேண்டும், அடுத்த சச்சின் டெண்டுல்கராய் திகழ வேண்டும், பெற்றோருக்கு பெருமை சேர்க்கிறவனாய் இருக்க வேண்டும் என விரும்பத் தோன்றுகிறதே தவிர, இப்படியெல்லாம் ஆவதற்கு பெற்றோராகிய நமது பங்களிப்பு அதிகம் தேவை என்ற அடிப்படை உண்மையை சௌகரியமாக மறந்து விட்டு, பணத்தை விசிறியடித்தவுடன் என் மகன் ஒரு சிறந்தவனாக மாற வேண்டும் என ஆசைப் படுகிறார்கள். அப்படி நடக்காத பட்சத்தில், கூசாமல் பள்ளிகளை குறை கூறவும் இவர்கள் தயங்குவதில்லை. வேணும்னா இன்னும் ஒரு தௌஸண்ட் ருப்பீஸ் ஃபீஸ் வாங்கிக்குங்க, ஆனா என் பையன் தான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கணும் என்ற ஒரு அவுட் சோர்சிங் மனப் பான்மை பெற்றோர்களிடத்தில் அதிகம் வளர்ந்திருக்கிறது. குழந்தை வளர்ப்பிலும், படிப்பிலும் பெற்றோராகிய தங்களுக்கும் சம பங்கு உண்டு என்பது தெரிந்தாலும், அதை வேலைப்பளு என்ற பாசாங்குத்தனமான காரணம் சொல்லி தட்டிக் கழிக்கிறார்கள். ஆனால் தனது தோழியிடம் மணிக் கணக்கில் மொபைலில் பேச நேரம் இருக்கிறது.

பள்ளி விட்டு குழந்தைகள் வெளியே வருகிறார்கள். ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் அந்த பணக்கார திமிரை பார்க்க முடிகிறது. பெருவாரியானவர்கள் கையில் எதாவது ஒரு சிப்ஸ் பாக்கெட் இருக்கிறது. பள்ளிக்கு உள்ளேயே ஒரு கேண்டீன் வைத்திருக்கிறார்களாம். பிஸ்ஸாவிலிருந்து அனைத்து குளிரூட்டப் பட்ட பானங்கள் வரை விற்கிறார்கள். எல்லா வகையான ஜங்க் ஃபுட் எனப்படும் துரித வகை பண்டங்கள் கிடைக்கிறது. வெளியே வரும் குழந்தைகளை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். நிறைய குழந்தைகள் அளவுக்கு மீறிய உடல் எடை கொண்டுள்ளனர். ஊளைச்சதை உடம்பு எங்கும் பிதுங்கித் தொங்குகிறது. தன் பையை வாங்கும் கார் டிரைவரை ஒரு பத்து வயது பையனும் ஒரு முதலாளித்துவ திமிரிலேயே பார்க்கிறான். அங்க வெயிட் பண்ணு, நான் வரேன் என ஏதோ ஒரு பிஸியான முதலாளி ஆணையிடுவதுபோல் ஆணையிடுகிறான்.

எத்தனை ஆயிரம் செலவானாலும் சரி, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் என் குழந்தைகள் படிக்கப் போக வேண்டும் என பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் பண முடிப்புகளுக்கென கவர்ச்சிகரமான பாடத்திட்டங்களை காண்பித்தே பள்ளிகள் பணம் பண்ணுகின்றன. ஏழு வயது பெண்ணுக்கும் கூட பள்ளியில் பரத நாட்டியம் கற்றுத்தரப்பட்டு, அதற்கென தனி பணம் வசூலிக்கப் படுகிறது. தனி மனித ஒழுக்கம், பெரியவர்களிடத்தில் மரியாதை போன்றவை கிலோ என்ன விலை என இந்த மேல்தட்டு குழந்தைகள் கேட்கிறார்கள். ஏனெனில் இவை இந்த பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்தில் கிடையாது. பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தியெடுக்கும் மனித இயந்திரங்கள்தான் இங்கு உருவாக்கப் படுகிறார்களே தவிர, நல்ல அறிவுச் செல்வங்களை இந்த நவீன குருகுலங்கள் உருவாக்குவதில்லை.

Thursday, September 3, 2009

மனதைத் திற, மகிழ்ச்சி வரட்டும் - 3

எங்க மேனேஜர் எம்மேல காண்டா இருக்கான்பா. என்ன செஞ்சாலும் ஒரு குத்தம் கண்டு பிடிக்கறான்.

நான் என்னதான் சரியா செஞ்சாலும் இன்னும் உங்கிட்ட இருந்து ரொம்ப எதிர்பார்க்கிறேன்னு முதலாளி சொல்றாருப்பா.

அந்த பொம்பள எனக்கு மேலதிகாரியா வந்தப்பவே நெனச்சேன். புருஷன விட்டுட்டு தனியா இருக்கறவளாச்சா, முழு ஆண் வர்க்கத்து மேலயும் காண்டு அவுளுக்கு, அதான் எந்நேரமும் ஆம்பளங்கள கண்டா எரிஞ்சு விழறா!!!!!! அவ புருஷன் மேல இருக்கற கோபத்தையெல்லாம் நம்ம கிட்ட பழி தீத்துக்கறா, எல்லா நம்ம நேரண்டா!!!!!!!

அந்த பெருசு சரியான ஜொள்ளு பார்ட்டிப்பா, எப்ப போனாலும் முந்தானைக்கு உள்ள பாக்கறதும், பல்ல இளிக்கறதும், கைய தொட்டு பேசறதும், டபுள் மீனிங்ல பேசறதும் தாங்க முடியல.

இப்ப வந்திருக்கானே அவன் ………………… ஜாதிக்காரன்யா, அதான் மத்தவனையெல்லாம் ஒழிக்கணும்னு இருக்கான். எல்லா நம்ம நேரம்…….. தணிஞ்சு தான் போக வேண்டியிருக்கு.

அதென்னமோடா, வட நாட்டுக்காரன்னா நம்மாளு தூக்கி தூக்கி குடுக்கறார்ரா, ஆனா அதே சமயத்துல நம்மாளுங்க வயத்துல ஏன் அடிக்கறார்ன்னு தெரியல.

வர்றவன் எல்லாம் பதவி உயர்வு வாங்கறான், கம்ப்யூட்டர்ல நாலு கலர்ல படம் போட்டுட்டா அவன் பெரிய ஆளா?? நேத்து பொறந்த பசங்க எல்லாம் நமக்கு மேனேஜர் ஆகறாங்கப்பா!!!!

இது போன்ற புலம்பல்களை எல்லா வகையான அலுவலகங்களிலும் கேட்க முடியும். இப்படி புலம்பும் நம் எல்லாருக்குள்ளும் ஒரே ஒரு கேள்வி , நான் என்ன தப்பு பண்ணுகிறேன், ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகிறது. கொஞ்சம் இப்படி வாங்க, இந்த புண்ணிய வானை பாருங்க


ராபெர்ட்டோ கொயிசூட்டா


க்யூபா தேசத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. சுருட்டு குடிச்சுகிட்டே போட்டோவுக்கெல்லாம் போஸ் குடுப்பாரே, அவரேதான் ஃபிடல் காஸ்ட்ரோ என்ற போராளி, வெறும் தீவாய் இருந்த ஒரு பிரதேசத்தை வளம் கொழிக்கும் நாடாக இவர் மாற்றிய வித்தை எல்லோருக்கும் தெரியும். (தெரியலேண்ணா அதப் பத்தி படிச்சு தெரிஞ்சுக்கோங்க). அந்த தீவில் உள்ள ஹவானா என்ற இடத்தில் பிறந்தவர் தான், மேலே கொட்டை எழுத்தில் எழுதப் பட்டிருக்கும் ராபர்ட்டோ கொயிசா, இல்ல கொயாசீ, அடச்சீ விடுங்கப்பா, வெறும் ராபர்ட்டோனே வெச்சுக்கலாம். இவரின் தாத்தாவுக்கு ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. முதலாளி வர்க்கத்தில் பிறந்ததால், செல்வச் செழிப்புடனேயே வளர்ந்த ராபர்ட்டோ அண்ணாச்சி, கியூபாவில் படித்தார், பிறகு அமெரிக்காவில் படித்தார், அங்கு படித்தார் , இங்கு படித்தார், என்னென்னவெல்லமோ படித்தார். இறுதியில் கொக்க கோலா கம்பெனியில் ஒரு பானம் நிரப்பும் பிரிவில் பணிக்கு சேர்ந்தார். எப்பவுமே துறு துறுன்னு இருக்கும் இவர், குறுகிய காலத்தில் ஐந்து ஆலைகளுக்கு மேலாளராக பதவி உயர்வு செய்யப் பட்டார். சீக்கிரத்திலேயே கொக்க கோலாவின் தலைமையகமான அமெரிக்காவிலுள்ள ஜியார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டாவுக்கு மாற்றப் பட்டார். அங்கிருந்து பிடித்த ஏறுமுகம் இந்த மனிதரை நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மிகக் குறுகிய காலத்தில் இட்டுச் சென்றது.

இவர் தலைமைப் பொறுப்பை ஏற்ற நேரம் குளிர் பானக் கம்பெனிகளில் பெப்ஸி இவர்களுக்கு பெரிய தலைவலியாயிருந்தது. பெப்ஸி ஆறு பாட்டில் விற்றால் கோலா ஒரு பாட்டில் விற்பதற்குள் நாக்குத் தள்ளியது. மக்களும் பெப்ஸியை விரும்பி குடித்தனர். கோலாவின் விற்பனை பிரிவிலுள்ள மேலாளர்கள் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள். என்னென்னவோ கருத்துக் கணிப்புகள், விதவிதமான விளம்பரங்கள், ஒன்று வாங்கினால் மூன்று இலவசம் போன்ற கவர்ச்சித் திட்டங்கள் என எதுவும் வேலைக்காக வில்லை. மக்கள் பெப்ஸியை குடித்துக் கொண்டிருந்தார்கள். எதைத் தின்னால் பித்தம் தெளியும் என கோலாக்காரர்கள் காத்திருந்த வேளையில் தான் நமது நாயகன் ராபர்ட்டோ தலைமைப் பொறுப்பேற்றார். அனைத்து விற்பனை பிரிவு ஆட்களையும் உங்களிடமுள்ள சந்தையை பற்றிய கருத்து கணிப்புகள், நமது விற்பனை உத்திகளைப் பற்றிய விவரங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு நாளை வாருங்கள் சந்திப்போம் எனக் கூறினார்.

அந்த நாளையும் வந்தது. எப்பொழுதும் சிகரெட் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்த ராபர்ட்டோவும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு புகையை ஊதியவாறே அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அந்த அறையின் மௌனத்தை கலைத்தது அவரது காலணி அரவம் மட்டுமே. அமர்ந்திருந்த விற்பனைப் பிரிவு குப்புசாமிகளுக்கு என்ன நடக்கப் போகிறதோவென்ற பயத்தில் பில்டிங் ஸ்ட்ராங்காயும், பேஸ்மெண்டில் ஆட்டத்துடனும் இருந்தனர். இரண்டு மூன்று சிகரெட்டுகளுக்குப் பிறகு தொண்டையை செருமிக்கொண்டு கேட்டார்,

“சரி இப்ப என்ன பிரச்சனைன்னு எல்லாரும் நொந்து போயிருக்கீங்க?”

“சார், நம்ம ஐட்டத்தை விக்கறதுக்காக வானத்தை வளைத்தோம், பூமியை புரட்டினோம், காற்றை கட்டினோம், மலையை பெயர்த்தோம், கடலை கவிழ்த்தோம், ஒண்ணும் நடக்கல”

“சரி, பிரச்சனை எங்கன்னு பார்த்தீங்களா?”

“ஆமாம் சார், பிரச்சனையே இந்த பெப்ஸிக்காரந்தான் சார், அவனுது ஆறு வித்தா, நம்ம ஐட்டம் ஒண்ணுதான் சார் விக்குது”

“அதுதான் பிரச்சனையா?”

“ஆமா சார்”

“இல்லை அதுவல்ல பிரச்சனை” அனைத்து புருவங்களும் ஆச்சரியத்தில் விரிந்தன.

“சரி இந்தப் பிரச்சனையை வேறொரு கோணத்தில் அணுகுவோம், ஒரு சராசரி அமெரிக்கன் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் திரவம் குடிக்கிறான்?”

பட்டென பதில் வந்தது “ 14 அவுன்ஸ் சார்”

“அதில் எவ்வளவு கொக்க கோலா குடிக்கிறான்?”

“2 அவுன்ஸ் சார்”

“இப்ப புரிஞ்சுதா, பிரச்சனை எங்க இருக்குன்னு, மீதி 12 அவுன்ஸ் அவுனுக்கு வேற ஐட்டம் கிடைக்குது, அதனால அவன் மத்ததெல்லாம் குடிக்கிறான். அப்ப நம்ம போட்டி பெப்ஸியோட அல்ல, இந்த 12 அவுன்ஸோடதான். இந்த 12 அவுன்ஸும் கொக்க கோலாவா இருக்க நாம என்ன செய்யணும்னு யோசிங்க, ஒவ்வொரு அமெரிக்கனும் எப்பவெல்லாம் எதாவது குடிக்கணும்னு யோசிக்கறானோ, அப்ப அவன் கொக்க கோலாவைத்தான் குடிக்கணும். ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் கைக்கு எட்டற தூரத்துல கோலாவை கொண்டு போய் வைங்க”

எல்லார் மூளையிலும் பல்பு எரிந்தது, அமெரிக்காவின் மூலை முடுக்குகளிலெல்லாம் தானியங்கி பானம் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப் பட்டன, ஒரே வருடத்தில் கோலாவின் விற்பனை அசுர வளர்ச்சி கண்டது. அன்றிலிருந்து இன்று வரை அதன் வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாய் உள்ளது. இங்கு ராபர்ட்டோவின் அணுகு முறையை கவனியுங்கள்.

எதிரி என்பது மனிதர்களோ நிறுவனமோ அல்ல, நமது எண்ணங்களும், நம்மை சுற்றி நாமே எழுப்பியிருக்கும் மாய பிம்பங்களும் தான்.

பெப்ஸிதான் முழு எதிரி அல்ல எதிரிகளுள் அவர்கள் ஒருவர் மாத்திரமே.

நமது திறமை என்னவோ அதை மூலதனமாகக் கொண்டு போராடுவோம். பெப்ஸி கடையில் விற்கிறான், நாம் மனிதன் நடக்கும் இடத்திலெல்லாம் விற்போம்.

அப்படியே நம்மோடு அல்லது நமக்கு மேலாளராக வேலை செய்யும் எந்த சுப்பு சாமியும் நமக்கு எதிரிகளல்ல.

நமது அடுத்த வீட்டில் வாழும் பங்கஜா மாமி நமக்கு எதிரி அல்ல.

நமது முதல் எதிரி, நம்மிடம் உள்ள குறைகள் தான். அந்த குறைகளை கண்டுபிடி. தினமும் அந்த குறைகளை நிவர்த்தி செய்வது நமது இலக்காயிருக்கட்டும். 12 அவுன்ஸ் திரவம் என்னவென்று கண்டு பிடிக்காததுதான் நமது குறை. அந்த 12 அவுன்ஸ் தெரிந்த பின் அதை எப்படி ஆட்கொள்வது என முயற்சிப்போம்.

குறை கண்டுபிடிக்கும் மேலாளர் ஒரு குறையாகவே தெரிய மாட்டார், அதிகம் எதிர்பார்க்கும் முதலாளி ஒரு பொருட்டாகவே தெரிய மாட்டார். ஜொள்ளுவிடும் பெருசு கால் தூசாய் மாறிப் போகும். ஆம்பிளையை வெறுக்கும் பெண் அதிகாரி நண்பியாகி விடுவார். ஜாதி வெறி பிடித்த அதிகாரி சக தோழனாகி விடுவார்.

எதிரியோடு போராடுவதை விட, எதிரியாய் தோன்றி புலம்ப வைக்கும் சூழ்நிலையோடு போராடு, வெற்றி நிச்சயம்.

மனதைத் திற, மகிழ்ச்சி வரட்டும்.

Wednesday, September 2, 2009

ஜுகல்பந்தி - 2 - 09 - 2009, துருவங்களான தொப்புள் கொடி உறவு

நகரம் - நாக்பூர் – மத்திய நகரம்.

இந்திய வரைபடத்தின் மத்தியிலுள்ள நகரம். இங்கிருக்கும் பூஜ்ஜிய மைல் கல்லிலிருந்து இந்தியாவின் அனைத்து பாகங்களுக்குமான தொலைவு கணக்கிடப்படுகிறது. இந்தியாவிலேயே உள்ள அனைத்து விமான கட்டுப்பாடுடு அறைகளிலும் மிகவும் பரபரப்புடனும் சுறு சுறுப்புடனும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை நாக்பூரிலுள்ளது. தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் செல்லும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு விமானங்கள் இங்கு நாக்பூரில் கைநாட்டு போட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும். மேலும் ரயிலாகட்டும், தரை வழிப் போக்குவரத்தாகட்டும் எல்லோரும் நாக்பூரின் வழியாகத்தான் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் இந்த நகரத்திற்கான் முக்கியத்துவம் அதிகம் அதிகரித்திருக்கிறது.

வரலாற்று ரீதியாக இந்த நகரத்தின் பெருமை 3000 வருடங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. நாக்பூரின் நடுவில் ஓடும் ஒரு நதி பாம்பு போல் வளைந்து வளைந்து செல்வதால், இதை நாக் நதி (நாகப் பாம்பின் நினைவாக) என அழைக்க ஆரம்பித்து, அந்த நதியை சுற்றி கட்டப்பட்ட பட்டணத்துக்கு நாக்பூர் என்று பெயரிட்டு விட்டார்கள். இன்றும் இதன் நினைவாக நாக்பூர் நகராட்சியின் அதிகார முத்திரையில் படமெடுத்து நிற்கும் நாகப் பாம்பினை காணலாம். மத்திய நகரம் என்பதாலோ, அல்லது நதிக்கரையில் அமைந்து வளம் கொழித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ தெரியவில்லை, இந்த சமவெளிப் பரப்பில் தோன்றிய அனைத்து ஆட்சியாளர்களுக்கும் இந்த நகரத்தை தன்னகத்தே வைத்திருப்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாயிருந்தது. கி.மு 8 ம் நூற்றாண்டுக்கு இழுத்துச் செல்லும் வரலாற்று குறிப்புகள் நமக்கு இந்த நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள விந்திய பிரதேசங்களையும் ஆண்ட மகத அரசர்களின் அறிமுகத்தை தருகின்றன. அடுத்து இது 4 – ம் நூற்றாண்டில் குப்த பேரரசுடன் நல்லுறவு கொண்டிருந்த வாகடக வம்சத்தை சேர்ந்த முதலாம் பிருத்வி சேனா அரசனின் கீழ் நல்லாட்சி பெற்றிருக்கிறது.

பிறகு போன்ஸ்லே வம்சத்தின் ரகோஜி, ஜனோஜி, முதோஜி மற்றும் இரண்டாம் ரகோஜி என ஏகப்பட்ட ஜி ஜி க்களே இந்த பிரதேசத்தை ஆண்டிருக்கிறார்கள். அவரவர் பலத்திற்கு தகுந்தாற்போல் இந்த நகரம், மராத்தியர்கள், குஜராத்திகள், ராஜபுத்திரர்கள், குப்தர்கள் என பலர் கையிலும் மாறி மாறி வளர்ந்தும் செழித்துமிருக்கிறது. பிறகு ஆங்கிலேயர்களின் கைக்கு மாறியபின் இந்த போன்ஸ்லே வம்சத்திலிருந்த எள்ளு கொள்ளு பேரன்களில் ஒருவரான இன்னொரு ரகோஜியை பொம்மை அரசராக நியமித்துவிட்டு, நாட்டாமை பண்ணினார்கள். இந்திய வியாபார காந்தமான டாடா குடும்பத்தின் முதல் துணி தொழிற்சாலை இங்குதான் தொடங்கப் பட்டது. 1877 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இங்கிலாந்து மகாராணி விக்டோரியா இந்தியப் பேரரசியாக அறிவிக்கப்பட்டதை தொடந்து, தங்களது ஆங்கிலேய விசுவாசத்தை காண்பிக்கும் படியாக இந்தியாவின் முதல் துணி தொழிற்சாலைக்கு “எம்ப்ரஸ் மில்” என பெயரிட்டு, எங்க தொழில்ல குறுக்க வராதீங்க ராணி என சொல்லாமல் சொல்லி விட்டார்கள்.

இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடுகள் நடக்கும் இடமாகவும், ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய கேந்திரமாகவும் செயல்பட்ட இந்த நகரத்தில் தான் 1923 ஆம் ஆண்டு நடந்த இந்து முஸ்லிம் மோதல்களினால் வீறுகொண்டெழுந்த கே.பி. ஹெட்கேவார் என்பவர் 1925 ல் ஆர். எஸ். எஸ் ஐ துவக்கி வைத்தார். 1927 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 4 ம் தேதி, லக்ஷ்மி பூஜை தினத்தன்று, நடந்த ஒரு இந்து முஸ்லிம் கலவரம் ஆர்.எஸ். எஸ் க்கு ஒரு தேசிய அங்கீகாரத்தை அளித்ததும் இந்த நகரத்தில் தான். 1956 ல் அம்பேத்கார் தலைமையில் தலித் இனத்தவர்கள் புத்த மதத்திற்கு மாறி, ஒரு புது இயக்கத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதும் இந்த நாக்பூரில் தான். எது எப்படியோ, அதிகம் ஆரஞ்சுத் தோட்டங்கள் இந்த நகரத்தை சுற்றிலும் காணப் படுவதால் இதற்கு ஆரஞ்சு நகரம் என்ற பெருமையும் உண்டு.

நாட்டு நடப்புகள் : துருவங்களான தொப்புள் கொடி உறவு

ஏமென் நாட்டில் தேமேவென ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞனுக்கு திடீரென ஒரு தொழில் சாம்ராஜ்யக் கனவு உருவாகிறது. எப்படியாகிலும் ஒரு தொழிலதிபர் ஆகி விட வேண்டுமென்று முடிவெடுத்து விட்டு தாயகம் திரும்புகிறார். கையிலிருக்கும் முதலீடுகளை வைத்து தொழில் துவங்கி இன்று தொண்ணூறு ஆயிரம் கோடிக்கு (எவ்வளவு பூஜ்ஜியங்கள் என தலை சுற்றுகிறதா, ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்) மேலான சொத்துக்களுடன் வியாபித்து நிற்கும் சாம்ராஜ்யத்திற்கு அடிக்கோலிட்டவர் தான் தீரு பாய் அம்பானி. இவருக்கும் கோகிலா பென் என்ற இவரது மனைவிக்கும் பிறந்தவர்கள் தான் முகேஷ், அனில் என இரு ஆண்பிள்ளைகள். இதில் முகேஷ் சமர்த்தாக அப்பாவின் தகிடு தத்தங்களை படிப்பதில் நேரம் செலவிட, அனில் பதினாறடி பாய்ந்து, அரசியல் வியாதிகளுடன் கை குலுக்கினார், சினிமா காரர்களுடன் சிரித்துக் கொண்டிருந்தார், பேஷன் ஷோக்களுக்கு போய் வந்தார். ஆக அண்ணனுக்கும் தம்பிக்குமான ரசனையில் ஆரம்பித்த இடைவெளி, இப்பொழுது தந்தையின் மறைவிற்குப் பின் இரு துருவங்களாகி நிற்கும் அளவுக்கு தள்ளி வைத்துள்ளது. தீருபாய் உயிரோடிருந்த காலத்தில் தனது குழந்தைகளுக்கு என சொத்துக்களை பிரித்து வைத்திருந்தாரானால், ஒரு வேளை இந்த விரிசல் பெரிதாகி இருக்காதோ என்னவோ, இருவருக்கும் உள்ள தொழில் போட்டி இப்பொழுது வீதிக்கு வந்து சண்டையிடும் பரிதாபமான நிலைமைக்கு தள்ளி விட்டிருக்கிறது. தொலைத்தொடர்பு, கட்டுமானம், வர்த்தகம், கேளிக்கை, மின் உற்பத்தி என தனது எல்லைகளை விரிவு படுத்தி தம்பியானவன் தனியாவர்த்தனமாட, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற ஒரே குடையின் கீழ் அண்ணன் அடக்கி வாசிக்கிறார். பெட்ரோலியம், மற்றும் பெட்ரோலியம் சார்ந்த எல்லா கண்றாவி வேதிப் பொருள்கள், துணி மில்கள், மற்றும் சில்லறை வர்த்தகம், இன்னும் என்னென்னமோ எழவு துறைகள் என அண்ணனுக்கும் பல துறைகள் உண்டு. அண்ணனின் பெட்ரோலியத்துறை ஆந்திராவின் கிருஷ்ணா கோதாவரி பகுதியில் இயற்கை எரிவாயு இருப்பதை மோப்பம் பிடித்து, தனது கூடாரத்தை போட்டு இந்த வருட ஏப்ரல் மாதத்திலிருந்து பணம் அள்ள ஆரம்பித்தது. இதைக் கண்ட தம்பி, நான் முதலிலேயே அண்ணனுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறேன், அண்ணன் எனக்கும் இந்த எரிவாயுவில் பங்கு தர வேண்டுமென நீதிமன்றத்தின் கதவைத் தட்ட, அம்பானி விவகாரம் பூதாகாரமாக வெடித்து விட்டது. பங்குச்சந்தையின் பிதாமகர்களான இவர்களால், தினமும் ஏற்றமும், இறக்கமும் சர்வ சாதாரணமாக நிகழ்ந்தது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் தம்பியானவன் இந்த அழுகுணி ஆட்டத்துக்கு இப்பொழுது ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசும் துணை போகிறது என ஒரு குண்டை தூக்கி போட்டுவிட்டார். பெட்ரோலிய துறை அமைச்சரான முரளி தியோராவிலிருந்து, மன்மோகன் சிங் வரை எல்லோருக்கும் திருகு வலி கண்டிருக்கிறது. அனிலின் நண்பரும் சமாஜ் வாதி கட்சி தலைவரும், அரசியல் அரங்கில் ஆவேச சகுனியுமான அமர்சிங் இப்பொழுது சிங்கப்பூரிலுள்ள ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார். அவர் திரும்பி வந்ததும் இந்தப் பிரச்சனை எத்தனை வீரியம் பெறுமோவென டெல்லியில் அரசியல் தலைகள் குழம்பி தவிக்கின்றன. எது எப்படியோ, ஒரே கொடியில் பூத்த இரு மலர்களை பணம் இரு துருவங்களுக்குமுள்ள தூரத்துக்கு பிரித்து வைத்து விட்டது.


ங்கொய்யால பக்கங்கள் :

பணம் இருக்கற வரைக்கும் மதிக்கறது சொந்த பந்த உறவு,
குணம் இருக்கறவரைக்கும் மதிக்கறது தாலிக்கொடி உறவு,
உதவி செய்யற வரைக்கும் மதிக்கறது உனக்குப் பொறந்த உறவு,
ங்கொய்யால,
உலகம் இருக்கற வரைக்கும் மதிக்கறது தாண்டா நட்புங்கற உறவு.

Tuesday, September 1, 2009

பதிவுலக சொர்க்கம்

ஹாய் ஹாய் ஹாய்,

கொஞ்சம் லீவுல போயிருந்தேன். தாய் நாட்டிற்கு வந்து விட்டு திரும்பி வந்துட்டேன். சென்னை வந்தா சந்திப்போம்னு அப்துல்லா அண்ணனும், கேபிள் அண்ணனும் சொல்லியிருந்தாங்க. ஆனா, இங்க இருக்கறது ஆணின்னா, வீட்டுல இருக்கறது கடப்பாரைகளும், அத விட பெரிய கம்பங்களா இருக்குதண்ணே. அதயெல்லாம் புடுங்கி, ஒரு நிம்மதிப் பெரு மூச்சு விடுறதுக்குள்ள லீவு முடிஞ்சு போச்சுண்ணே. தயவு செஞ்சு கோவிச்சுக்காதீங்க. அப்துல்லா அண்ணன் போன் பண்ணாரு. கேரளாவுல ஒரு கல்யாணத்துல இருந்தப்ப கூப்பிட்டிருந்தாரு. சென்னைக்கு வந்து கூப்புடறேன்னு சொன்னேன். ஆனா, முடியலண்ணே. மன்னிச்சுக்கோங்க. எவ்வளவு தான் ஆணியிருந்தாலும், நம்மள இன்னும் உடன் பிறவா சொந்தங்களோட இணைத்து வைத்திருக்கும் பதிவுலகத்தை விட்டு தூரம் போயிட முடியுமா? அப்பப்ப நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து போயிட்டிருந்தேன்.

சிங்கை பதிவர் செந்தில் நாதனுக்காக பதிவர்கள் செய்த உதவி மனதை நெகிழ வைத்தது. இந்த மாதிரி மனித நேயமிக்க ஒரு கூட்டத்தில் தான் நானும் இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது, மிகவும் பெருமையாய் உணர்கிறேன். செந்தில் நாதனுக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டது என்று தெரிகிறது. சீக்கிரம் நலம் பெற வாழ்த்துகிறோம். நர்சிம் தல எடுத்த முயற்சிகளின் மூலம் அவர் தான் யார் என்று இன்னுமொரு முறை நிரூபித்து விட்டார். தலை வணங்குகிறேன் தல.

பதிவுலகம் மந்தமாகவே இருக்கிறது. முரளி கண்ணன் திரும்பி வந்து வழக்கம் போல கலக்கறாரு. கேபிள் அண்ணனோட சினிமா வியாபாரம் பயங்கரமா சூடு பிடிச்சுருக்கு. அண்ணே, நிறைய பேர திரும்பி பார்க்க வைக்கறீங்க. கலக்குங்க. ஆதி மாதிரியே அத்திரியும் ஓட்டுப்பெட்டியெல்லாம் வெச்சாரு, ஒரு பய சீந்த மாட்டேங்கறானேன்னு காண்டுல இருக்காரு போல. அப்புறம் நம்ம ஆதி அண்ணன் இன்னொரு குறும்படம் எடுத்து எல்லாரையும் பாடா படுத்திகிட்டிருக்காரு. நர்சிம் தல சாருவுக்கு எதிர்வினை அனுப்பி ஒரு வெடிய கொளுத்திப் போட்டாரு, எதிர்பார்த்த அளவுக்கு வெடிக்கல போலிருக்கு. கந்தசாமிய பார்த்து நொந்த சாமிகள் ஒரு பாட்டம் அழுது தீர்த்தாங்க.
பதிவுலகில் இருந்து கொஞ்ச காலத்துக்கு வடை பெறுகிறேன்னு சொல்லீட்டு போன அப்துல்லா அண்ணன் திரும்பி வந்திருக்காரு. பரிசல் அண்ணன் வழக்கம் போல கலக்கிகிட்டிருக்காரு. பதிவுலகத்தின் வருங்கால மாப்பிள்ளை கார்க்கி கொஞ்சம் கொஞ்சமா காதல், கனவுன்னு டிராக் மாறிகிட்டிருக்காரு.

எல்லாருடைய எதிர்பார்ப்புகளையும் கோக்கு மாக்கா ஏத்தி விட்டிருக்கிற சிறுகதைப் பட்டறை நிறைய பேரை கனவு காண வெச்சுருக்குது. குருஜிக்கும், பைத்தியகாரன் அண்ணாச்சிக்கும் ரொம்ப ரொம்ப டேங்சு.

ஆக மொத்தம் பதிவுலகம் என்ற சொர்க்கம் அதே சுகங்களுடன், அதே குறும்புகளுடன், அதே நக்கலுடன், அதே மொக்கைகளுடன் இப்படியே எப்பவும் இருக்கணும்னு வேண்டிக்கறேன்.