Wednesday, September 15, 2010

பெண்ணியம் பேசுவோம் வாருங்கள் – 2.


நேற்று நண்பரொருவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஒரு பெண்ணின் திருமண கால மனநிலையை உருக்கமாக பிரதிபலிக்கும் வர்ணனைகள் நிறைந்த வரிகளுடன் ஆரம்பிக்கும் இந்த எழுத்துக் கோர்வை, பின் பாதியில் புதிதாக திருமண உறவில் ஈடுபடும் ஆணின் மனநிலையையும் தொட்டும் தொடாமலும் சென்று முடிகிறது.

இப்படியாக அந்த செய்தி ஆரம்பிக்கிறது, அந்தப் பெண்ணின் மனதில் ஒரு ஓயாத கூக்குரல் இருக்கிறது. அவள் தன் வேதனைகளை கத்தித் தீர்க்க வேண்டுமென்று தருணம் தேடுகிறாள். அம்மா, எனக்கு திருமணம் வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால், வெறும் ஒரு சில நிமிடங்களே பார்த்த முன்பின் தெரியாத ஒரு ஆணுடன் நான் எப்படி வாழ்நாள் முழுக்க வாழ்வேன்? என் உணர்வுகளை, ஆதங்கங்களை புரிந்து கொள்ள முடியாத ஒருவனாய் அவன் இருந்து விட்டால், என் வாழ்க்கை ஒரு நரகமாக மாறி விடாதா? நான் பெண்ணாய் பிறந்தது என் குற்றமா? ஏன், என்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் இந்த உறவு முறைக்குள் திணிக்கிறீர்கள்? நல்ல குடும்பம், நல்ல ஜாதகம், நல்ல சம்பளம், நல்ல உயரம், நல்ல ஜாதி, நல்ல பழக்க வழக்கம் என்ற உங்களின் ஒரே ஒரு முக கோணத்தில் உருவகமெடுத்திருக்கும் தேடல் வாக்கியங்களான எல்லா “நல்ல” வைகளுக்குள்ளும் கச்சிதமாக பொருந்தும் இந்த ஆணுக்குள், என் மனதையும், என் தனித்துவத்தையும், என் பழக்க வழக்கங்களையும், என் விருப்பு வெறுப்புகளையும், குறிப்பாக என்னை மதிக்கிற அந்த “நல்ல” தன்மை எங்கே ஒழிந்திருக்கிறதென்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?

இப்படி மனதில் தோன்றும் ஆயிரம் கேள்விகளைக் கேட்டு ஓங்கிக் கத்த வேண்டும் போலுள்ள அந்தப் பெண்ணை அப்படியே கோழி அமுக்குவது போல் அமுக்கி, மணப்பெண் அலங்காரம் செய்வித்து, புது உடை உடுத்தி, நகை அணிவித்து, மணவறையில் அமரவைத்து, எல்லா சடங்குகளுக்கும் மறுப்புப் பேசாமல் தலையாட்டும் பொம்மையாய் நடிக்க வைத்து, நாளை முதல் இவன்தான் உன் உலகம், இவனுக்கு என்ன பிடிக்கிறதோ, அது உனக்கு பிடிக்காவிட்டாலும் பிடித்த மாதிரி வாழ பழகிக் கொள் என சொல்லாமல் சொல்வது பெண்ணினத்தின் மீது சமூக கட்டமைப்பால் ஏவி விடும் மிகப் பெரிய வன்முறை இல்லாமல் வேறென்ன என கேள்வி எழுப்புகிறது அந்த எழுத்து.

இந்த மின்னஞ்சல் என்று மட்டுமல்ல, எந்த ஒரு திருமண உறவின் விவரிப்புகளிலும் அந்தப் பெண்ணின் சம்மதம் இல்லாமலே பெண்ணை பெற்றோரிடமிருந்து பிரித்து, ஒரு புதிய சூழலில், புதியவர்களின் வாழ்விடத்தில், புதிய மனிதர்களின் அருகாமையில், புதிய பழக்க வழக்கங்களுக்கு மத்தியில், புதிய குடும்ப ஒழுங்குகளில் என அநேக ”புதிய”வைகளின் பட்டியல் பிரம்மாண்டமான வர்ணனை வார்த்தைகளால் விவரிக்கப்படுகிறது.

எனக்கு ஒரு சில சந்தேகங்கள் :

1. இன்றைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்பம் என்ற ஒன்றே அரிதாகி வரும் கால கட்டத்தில், இன்னுமா பெண்ணுக்கு இந்த பட்டியலிடப்பட்ட “புதிய” சூழலில் வாழ வேண்டிய அவசியம் ஏற்படுகிறது????

2. திருமணமானவுடன் முன்பின் சற்றும் அறிமுகமில்லாத ஆணுடன் ஒரு பெண் வாழும் படி நிர்பந்திக்கப் படுகிறாள் என்பதை இம்மியளவேனும் ஒரு அர்த்தமுள்ள கூற்றாக எடுத்துக் கொண்டோமென்றாலும், இதில் மண வாழ்வு என்பது வெறும் பெண் சம்பந்தப் பட்ட விஷயம் மாத்திரம் தானா, அந்த ஆணுக்கு ஒரு பெண்ணுடன் இணைந்து வாழ்வது என்பது ஒரு புதிய சூழலில்லையா????

3. பெற்றோரிடமிருந்து ஒரு பெண் பிரிந்து வருவது என்பதில் உள்ள பிரிவின் தாக்கம் பெண்மனதில் எவ்வளவு உள்ளதோ, அவ்வளவே ஆண் மனதையும் அதன் தாக்கம் ஆக்கிரமிக்கும் என்பதை ஏன் யாருமே உணர்வதில்லை????

4. அப்படியே ஒரு பெண் கூட்டுக் குடும்பத்தில் வாழும் நிலை ஏற்பட்டாலும், அங்கு எனது மன உணர்வுகள், என் பழக்க வழக்கங்கள், என் நியாயங்கள், என் சுதந்திரம் என ஒரு தனி ஆதிக்கப் போக்கை விட்டு, குடும்ப நலம், குடும்ப பழக்க வழக்கம், குடும்ப நியாயம் என்ற பரந்த நோக்குடன் இசைந்து வாழ்வது என்பது பெண்ணின் தன்மானத்துக்கு கேவலமான ஒன்றா????

5. பெண்ணை ஒரு முன்பின் அறிமுகமில்லாத ஆணுடன் இணைந்து வாழ வைப்பது என்பது பெண்ணின் சுய மரியாதையை குலைக்கும் ஒரு சமூக வன்முறை எனில், ஆண் அந்த வன்முறைக்கு இலக்காவதில்லையா????

தாம்பத்யத்தில் அன்பு, புரிந்துணர்வு, தனது துணையின் எண்ணங்கள் பால் மரியாதை இன்னும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத எத்தனையோ உணர்வு சார்ந்த சமாச்சாரங்கள் எல்லாம் இருபாலரிடத்தும் சரி விகித்த்தில் காணப்பட்டால் தான் அது தாம்பத்யம். இல்லையேல் பெண்ணின் உணர்வுகள், பெண்ணின் நியாயங்கள் (மட்டும்) மதிக்கப் பட வேண்டும் என போர்க்கொடி பிடிப்பது, மேடைக்கு அழகாய் இருக்கலாம், நான்கு சுவர்களுக்குள் அது அழுக்காய்த்தான் இருக்கும்.