Tuesday, December 15, 2009

முகவரி மாறும் முகங்கள்

சமீபத்தில் பதிவர் வெங்கிராஜாவின் பதிவான முகங்கள் படிக்க முடிந்தது. சென்னையின் இரவு நேர காட்சிகளை அழகான புகைப் படங்களுடன் பதிவு செய்திருந்தார். புகைப்படங்களில் வயதான முதியவர்கள், தாடி வைத்தவர்கள், காய் விற்கும் அம்மா, பூக்கட்டும் மூதாட்டி, காவித்துண்டை கழுத்தில் சுற்றிய ஒரு அய்யப்ப பக்தரோ அல்லது முருக பக்தரோ தெரியவில்லை, வெற்றுடம்புடன் குனிந்து நிற்கும் ஒரு வாலிபனும் முதியவரும் என காமிரா கவிதை பாடியிருக்கிறது. ஒரு விஷயம் மாத்திரம் புரியவில்லை, சென்னை என்றில்லை இந்தியாவின் எந்த நகரத்தையும் அதன் பரிமாணங்களை வெளிக்கொணர காமிரா பிடிப்பவர்களின் கண்களுக்கெல்லாம், வளர்ந்து நிற்கும் கட்டிடங்களோ, வழுக்கிச் செல்லும் சாலைகளோ, சாலைகளின் நடுவில் சுற்றிச் சுழலும் பாலங்களோ, மல்லிகைப் பூச்சூடி கொடியிடை கொண்ட எங்கள் மண்ணின் குமரிகளோ, மடிக்கணியை எதோ ஒரு விளையாட்டுப் பொருள் போல கழுத்தில் தொங்கவிட்டு அலுவலகம் விரைந்து வித்தை காட்டும் அறிவு ஜீவி இளைஞர்களோ, பரந்து விரிந்து நிற்கும் கடற்கரைகளோ (ஏ யப்பா மூச்சு முட்டுதய்யா) கண்ணிலேயே படுவதில்லை.

காமிராவில் தெரிவதெல்லாம் பிச்சைக்காரர்கள், வறுமையில் வாடுபவர்கள், முகத்தில் ஈ மொய்க்க அழுக்கு கரங்களில் ஒரு சோற்றுப் பருக்கையை வாய்க்குள் திணித்து, ஒழுகும் சளி மூக்குடன் உள்ள குழந்தைகள், திறந்து கிடக்கும் சாக்கடைகள், போஸ்டர் ஒட்டிய வெளிச்சுவர்கள், உடைந்த பின்னும் ஓடிக் கொண்டிருக்கும் அபாயநிலை வாகனங்கள், பெருநகரங்களில் உடல் விற்க காத்திருக்கும் விபச்சாரிகள், வயிறு பெருத்த காவல் துறையினர், மஞ்சள் கோட்டை தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் என எதிர்மறைக் காட்சிகளாகவே ஏன் தெரிகிறதென்று தெரியவில்லை.

வெங்கி ராஜா என்ன நினைத்து இந்தப் படங்களை பிடித்தார் என தெரியவில்லை. ஆனால் இரவில் சென்னையில் படம் பிடிக்க எத்தனையோ சிறப்பான விஷயங்கள் இருக்கும்பொழுது வெறும் வயது முதிர்ந்த தாடிக்காரர்களும், தள்ளாத வயதிலும் பூக்கட்டும் பூக்காரம்மாவும் தானா கண்ணில் பட்டார்கள். அவர் சுற்றிய வழியான ராமாவரம் பாலத்திலிருந்து தோமையர் மலை போகும் வழியில் எதிர்படும் கத்திப் பாராவின் பாலம் இரவில் ஒரு தனி அழகுதான். ராடிசன் ஹோட்டல் வரை செல்லும் ஜி.எஸ்.டி சாலை இரவில் வண்ணமயமான விளக்குகளால் ஒளியூட்டப் பட்டு துடைத்து விட்டாற்போல் பளிச்சென்றிருக்கும். மனிதர்களைத்தான் படம் பிடிக்க வேண்டும் என நினைத்தால், எத்தனையோ மனிதர்கள் இந்த நாட்டின் செழிப்பை வெளிப்படுத்த கடிகார முட்களின் ஒவ்வொரு நகர்விற்கும் எங்கள் சாலைகளின் எல்லா மூலைகளிலும் தென்படுவார்கள். அவர்களை எல்லாம் விடுத்து ஏழ்மையை மாத்திரம் படம் பிடித்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என தெரியவில்லை.

எனது பல ஆண்டுகால வெளிநாட்டு வாசத்தில், அங்கு அமர்ந்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காணும் பொழுதெல்லாம், இந்தியாவைப் பற்றிய ஏதாவது ஒரு நிகழ்ச்சியென்றால், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிந்ததெல்லாம் விநாயகர் சிலைகளும், குப்பை நிறைந்த குறுக்குச் சந்துகளும், மும்பை, டெல்லி மற்றும் கல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதியின் மித மிஞ்சிய உதட்டுச் சாய மங்கைகளும், திறந்த சாக்கடைகளும், நாய்களுடன் கூட்டுச் சேர்ந்து எச்சிலையில் சாப்பிடும் பிச்சைக் காரர்களும், வாகன நெரிசலில் ஒலிப்பான் பிளிர சிக்கித் தவிக்கும் மாநகர சாலைகளும் என அலங்கோலங்கள் மாத்திரமே காண்பிக்கப் படும். இது இந்தியாவின் வளர்ச்சியைப் கண்டு வயிறெரியும் மேற்கத்திய மக்களின் வக்கிரப் பிரச்சாரம் என்றே நான் சொல்லுவேன்.

ஆனால் நாம், நம்மைப் பற்றி கூறும் பொழுது ஏன் இப்படி வறுமையையும், அவலங்களையும் மாத்திரம் கூற வேண்டும்? யதார்த்தத்தை காண்பிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஏன் நாம் நம்மை தாழ்த்திக் கொள்கிறோமோ தெரியவில்லை. நான் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில் அங்கிருக்கும் இந்தியர்களால் தயாரிக்கப் பட்ட Broken Promises என்ற ஒரு இந்திய திரைப் படத்தை காண முடிந்தது. குமாரன் நாயுடு என்ற இந்தியரால் இயக்கப் பட்டு முற்றிலும் இந்திய நடிகர்களே நடித்த படம். அதிலும் கூட தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் பழக்க வழக்கங்களை எள்ளி நகையாடியிருப்பார் இந்த நாயுடு. இந்தியப் பெண்கள் ரோட்டின் நடுவில் நின்று பூரிக் கட்டையை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதில் வரும் கதாநாயகர்களான இந்திய இளைஞர்கள் வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்றுபவர்களாகவும், சரக்கடிக்க மற்றவர்களை ஏமாற்றி காசு பார்ப்பவர்களாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் தென் ஆப்பிரிக்கா வாழ் மக்களிலேயே மூன்று வேளை சாப்பாடு சாப்பிட்டு, குடும்ப அமைப்பு சிதையாமல் வாழும் இனம் இந்திய இனம் தான். ஆனால், அவர்களை ஒரு இந்தியன் இப்படி இழிவாக சித்தரிப்பதையும், அதைப் பார்த்து இந்தியர்களே எள்ளி நகையாடுவதும் வேதனையாக உள்ளது. வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இந்த பழக்கத்தை அதிகமாக நான் கண்டிருக்கிறேன். சக இந்தியனின் இந்திய பழக்க வழக்கங்களுக்காக வெள்ளையர்களுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்யும் இந்தியர்களை வெகுவாக கண்டிருக்கிறேன்.


இந்தியாவின் யதார்த்தங்கள் இன்னும் ஏழ்மைக் கோலத்தில் தானா இருக்கிறது? கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய நிதியமைச்சரிலிருந்து மற்ற அமைச்சர்கள் வரை, பாராளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரின் ஆரம்பத்திலேயே சொன்னார்களே, இந்தியா 7.2 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறதென்று, இந்த நல்ல செய்திகள் நம்மவர்களின் மனங்களிலும் சரி, ஊடகங்களின் பார்வையிலும் சரி ஏன் ஒரு உப்புப் பெறாத விஷயமாகவே போய் விடுகிறதோ தெரியவில்லை. நண்பர்களே, நம்புங்கள். நாம் வளர்கிறோம். சிகரங்களை தொடுகிறோம். சராசரி இந்தியனின் வருமானம் உயர்ந்து கொண்டிருக்கிறது. உலகத் தரம் என்பது இந்தியாவிலும் பல துறைகளில் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. வெளி நாட்டவர்கள் இந்தியாவை நோக்கி சம்பளத்துக்காக வர ஆரம்பித்து விட்டார்கள். இந்தியர்களின் ஆளுமை உலகின் பல துறைகளிலும் கோலோச்சுகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சுருக்கம் விழுந்த முகங்களையும், கடுக்கன் தொங்கும் காதுகளையும், கோவணமணிந்த உடல்களையும் எதார்த்தம் என்ற பெயரில் காண்பித்துக் கொண்டிருப்பீர்கள்?

Tuesday, December 8, 2009

எங்க அய்யாமாருக பெருமைப் பட்டாக!!!!!

நிலாவுல நீர் இருக்குதாம். இந்தியந்தான் கண்டு பிடிச்சானாம்

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக

அய்யா, ராசா, எங்கூருக்கு

எப்பய்யா தண்ணி கண்டு பிடிப்பீக.?



பங்குச்சந்தைல பதினேழாயிரம் புள்ளியாம்,

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக.

அய்யா, ராசா, பருப்பு தின்னு பல மாசம்

ஆச்சய்யா, பங்குச் சந்தைல பருப்பு விப்பீகளா?



எல்லாரும் எல்லாம் படிக்க சமச்சீர் கல்வி வருதாம்

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக,

அய்யா ராசா, சமச்சீரோ, சமையாத சீரோ

படிக்க மொதல்ல பள்ளிக் கூடம் குடுங்கைய்யா?



கிரிக்கெட் போட்டியில மொத இடமாம்

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக

அய்யா ராசா, விளையாட்டெல்லாம் சரிதான்யா

எங்க வாழ்கைக்கு ஒரு வழி சொல்லுங்கைய்யா

Friday, December 4, 2009

என்னத்தைச் சொல்ல.......



பெங்களூருவிலிருக்கும் நாராயணா ஹ்ருதயாலயாவின் சிறப்பு மருத்துவரான தேவி ஷெட்டி, விப்ரோ தொழிலாளர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் ஒரு கலந்துரையாடலுக்கு சென்றிருந்தார். நவீன உலகின் இளைஞர், இளைஞிகளுக்கு வரும் இருதய நோய்களைப் பற்றிய கலந்துரையாடலில், மாரடைப்பை தடுப்பது எப்படி என்பது பற்றிய கேள்விகளுக்கு பெரும்பாலான பதில்களில், உடற்பயிற்சி செய்யுங்கள், சிரித்துக் கொண்டிருங்கள், பழ வகைகளை அதிகம் உண்ணுங்கள், ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் குறைந்த அளவில் எதையாவது சாப்பிடுங்கள், எண்ணையை தவிர்த்து விடுங்கள் என பதிலளித்துக் கொண்டே வந்தவரிடம் திடீரென கேட்கப் பட்ட ஒரு கேள்வி:

கேள்வி : பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் மாரடைப்பு வருகிறதே ஏன்?

பதில் : 45 வயது வரை பெண்களை இயற்கையே பாதுகாக்கிறது.

அய்யா, டாக்டரய்யா இந்த 45 வயசுக்குள்ள இவுங்க படுத்தற படுத்துல தான் ஆம்பளைங்களுக்கு எல்லாம் மாரடைப்பு வருதுன்னு சொல்லாம சொல்றீங்களா? இல்ல, 45 வயசு வரைக்கும் பெண்களுக்கெல்லாம் பில்டிங் ஸ்ட்ராங்கு, மொட்டைமாடிதான் எப்பவுமே காலின்னு சொல்ல வர்றீங்களா? தெளிவா சொல்லாம இப்படி குழப்பறீங்களே….. என்னத்தச் சொல்ல…..

****************************************************************************
அகில இந்திய வானொலியின் பண்பலை சேவையில் தமிழ் பண்பலை வரிசையில் நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டிருந்தேன். வழக்கமாக காட்டுக் கத்து கத்திக் கொண்டு, உங்கள் மனதுக்கு பிடித்த பாடலின் பிடித்த வரியில் வரும் பிடித்த வார்த்தையின் பிடித்த எழுத்தை எங்களுக்கு போன் பண்ணி சொல்லுங்க, நாங்க அந்த எழுத்தில் ஆரம்பிக்கற வேற ஒரு பாட்டை உங்களுக்காக் ஒலி பரப்புகிறோம் என்ற அருவருப்பான பண்பலை வானொலி நிகழ்ச்சிகளை விட, அனைத்திந்திய வானொலி நிலையத்தார் நிகழ்ச்சிகளை கதம்பமாக கோர்த்திருந்த விதம் சிறப்பாக இருக்கிறது.

ஆனால் இடையில் இப்படி ஒரு விளம்பரம்:

அண்ணே, ஒரு சந்தோஷமான விஷயம். நான் அம்மாவாகப் போறேன். தினமும் கோயிலுக்குப் போயி சுக பிரசவம் வேணும்னு ஒண்ணே கால் ரூபாய் காணிக்கை போட்டுட்டு வர்றேன்.

அப்படியா தங்கச்சி, சுக பிரசவம் வேணும்னா, அயோடின் உப்பு சேர்த்துக்க, அதுதான் உடம்புக்கு நல்லது.. கோவில்ல போடுற ஒண்ணேகால் ரூவாயை அயோடின் உப்பு வாங்கறதுக்கு செலவு பண்ணேன்னா, உனக்கு மட்டுமல்ல, உன் வயத்துல இருக்கற குழந்தைக்கும் நல்லது

அய்யா, வானொலி நிலையத்தாரே, நீங்க என்ன சொல்றீங்கன்னு தெரிஞ்சுதான் சொல்றீங்களா, இதை எங்கயாவது இந்த கோக்கு மாக்கா பக்தி பரவசத்திலாழ்ந்திருக்கும் பக்த கோடிகள் கேட்டுட்டாங்கன்னா, அப்புறம் நாலு பஸ் எரியும், ஆட்டோ ஓடாது, கடை கண்ணிக பத்தி எரியும், ரெண்டு மூணு வழிபாட்டுத்தலங்கள் தரை மட்டமாகும், பள்ளிக்கூடம் லீவு, ஆபீசு லீவு, ஒவ்வொரு தெரு முனையிலும் கூட்டம், சட்டசபையில வெளிநடப்பு செய்யறவங்கெல்லாம், திடீர்னு உள்நடப்பு செஞ்சு கேள்வி கேட்க ஆரம்பிச்சுருவாங்க, கடல் தண்ணி இருந்தாதான் உப்பு விளையுது, உப்பு விளைஞ்சாத்தான அயோடின் சேர்ப்பீங்க, அதனால கடலையே அழித்து விட அணி திரண்டு வாரீர்னு டிஜிட்டல் பேனர் கட்டுவாங்க, இது நாட்டை சீர்குலைக்க வந்த வெளிநாட்டு சதின்னு உளவுத்துறை ரிப்போட்டு வரும், ஏய்ய்ய்யப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா, ஆளை விடுங்க சாமி, ஒரு உப்புப் பெறாத உப்பு மேட்டர்ல எவ்வளவு வில்லங்கம் இருக்கு பாருங்க,,,,,, என்னத்தச் சொல்ல.

********************************************************************************

அது என்னன்னே தெரியலீங்க, நம்மளுக்குத்தான் இந்த மாதிரி நடக்குதா, இல்ல எல்லாருக்குமே நடக்குதான்னு தெரியல. டோல் கேட்ல நம்ம கார் எந்த வரிசையில நிக்குதோ, அந்த வரிசையில மாத்திரம், முன்னால இருக்கற கார்காரர், காசு வாங்கறவன் கிட்ட சண்டை போடுவார், இல்லைன்னா 500 ரூபாய் நோட்டை தேடி எடுத்துக் குடுத்து, சில்லறை வாங்கி சரி பார்த்து நிதானமா பர்ஸுல வெச்சுட்டு, அப்புறமா கிளம்புவாரு, இல்லைண்ணா நமக்கு முன்னால ரெண்டு கார் இருக்கும்போது அங்க மெஷின் கெட்டுப் போயிரும், இப்பிடி எதாவது ஒண்ணு நடந்து, நம்ம பொறுமையின் அளவை சோதிச்சுட்டே இருக்கும்.


பெட்ரோல் நிரப்ப போனா, நமக்கு முன்னால இருக்கற கார்காரர், சாவகாசமா கிரெடிட் கார்டை எடுத்துக் குடுத்து, அது வேலை செய்யாமப் போய், அப்புறம் இன்னொரு கார்டை எடுத்து குடுத்து, நிதானமா ரசீதுல கையெழுத்துப் போட்டு, ஏன், இல்ல, ஏன் இப்படி எனக்கு மாத்திரம் நடக்குது. என்னத்த சொல்ல…….
***********************************************************************************
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில், தினமும் மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போகும் பொழுது, நிறைய மாடுகள் ரோட்டில் படுத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறேன். அவைகளை ஒதுங்கச்சொல்லி ஹாரன் அடித்து விட்டு ஓரிருமுறை சென்றிருக்கிறேன். ஒருமுறை ஒரு இளம் கன்னுக்குட்டி நடு சாலையில் நின்று கொண்டிருக்க, நான் ஹாரன் அடிக்க, அந்த கன்றுக்குட்டி மிரண்டு ஓடாமல் சாவகாசமாக திரும்பி என்னை நெடு நேரம் பார்த்தது. அதன் பார்வையில் அது என்னிடம் ஆயிரம் வார்த்தைகள் பேசியது போல் தோன்றியது. வீட்டுக்கு போகும் வரை அது பேசியிருந்தால் என்ன பேசியிருக்கும் என யோசித்துக் கொண்டே போனேன். அது பேசியிருந்தால்……..

“டேய், வெண்ணை, பெருசா காருக்குள்ள உக்காந்துட்டு என்னைப் பார்த்து ஒதுங்கிப் போகச்சொல்லி ஹாரன் அடிக்கறயே, நீயும் உன் காரும் எங்க நிக்கறீங்க தெரியுமாடா, மவனே, இந்த இடம் நாங்க ஓடி விளையாட, நின்னு மூத்திரம் பேய, குனிஞ்சு புல்லு திங்கன்னு எங்களுக்காகவே உதிச்ச இடம்டா, அதுல ஒரு கான்கிரீட் சதுரத்தை வெச்சுட்டு ஆபீஸூங்கறீங்க, ஒரு வண்டி தாரைக்கொட்டி ரோடுங்கறீங்க, அதுக்கும் மேல என்னைப் பார்த்தே தள்ளி நில்லுன்னு ஹாரன் அடிக்கறயா, கசுமாலம், உன் இடத்துல நான் நிக்கலடா, என் இடத்துல தாண்டா நீ நிக்கற, சீ, தூரமாப் போடா”

இதை நினைத்த போது அந்த கன்னுக் குட்டியிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். இப்பொழுதெல்லாம் இந்த சாலையில் நான் மாடுகளைப் பார்த்து ஹாரன் அடிப்பதில்லை. என்னத்தைச் சொல்ல……