Tuesday, November 17, 2009

தங்கமணிக்கு பத்து விதிகள்

ஆதி மாத்திரம் தான் தங்கமணி ரங்கமணி பதிவு போடுவாரா என்ன, இதா நாங்களும் போடறம்ல,

பரிசல் மாத்திரம் தான் பத்து பத்தா எழுதுவாரா என்ன, நாங்களும் எழுதறம்ல.

தங்கமணிக்கு பத்து விதிகள் :

உனக்கு என்ன வேணுமோ அதை நேரடியா கேளு, இந்த குறிப்பாலுணர்த்துதல், பார்வையிலயே பேசறது, அடைமொழியில பேசறது, சங்கேத வார்த்தைகள், சமையல்ல மறதிகள்ங்கற விளையாட்டே வேணாம். எதுன்னாலும் நேரா சொல்லித் தொலை.

கடந்த 17 மாசமா உனக்கு அடிக்கடி தலைவலின்னு சொல்லிகிட்டிருக்கியே, அதுக்கு ஒரே மருந்து உடனே போய் டாக்டர பார்க்கறதுதான். அதுக்காக பரிதாபப் படுவது கூட மருந்துதான் அப்டீன்னு நெனச்சியானா, அந்த மருந்து உன் ஃபிரண்ட்ஸ் கிட்டதான் கிடைக்கும்.


வீட்ல என்ன வேலை செய்யணும்னு மாத்திரம் சொல்லு, அதை எப்படி செய்யணும்னு உனக்குத் தெரியும்னா, அதை நீயே செஞ்சிடேன். அல்லது நான் செய்யும்போது அமைதியாவாவது இரேன். ஏன்னா, நாங்கெல்லாம் கொலம்பஸ் பரம்பரை, எங்க போகணும்கறதை மாத்திரம் சொல்லுங்க, எப்படி போகணும்கறதை நாங்க பாத்துக்குவோம்.


எல்லா ஆம்பளைக்கும் கண்ணு வந்து Windows default setting மாதிரித்தான். 16 கலரைத்தான் புரிஞ்சுக்கும். மயில் கழுத்து நீலம்னா அதுல ரெண்டு மேட்டர் இருக்கு, ஒண்ணு ஒரு பறவையோட கழுத்து, இன்னொண்ணு கலர், இதுல உனக்கு புடவை எந்த மாதிரி வேணும்??? காஃபி ப்ரௌன்னுன்னா ஆமா, காஃபி எப்பவுமே ப்ரௌன்தான். வெங்காயத் தோல் கலர்னா, நீ எந்த வெங்காயத்தை சொல்ற, சாம்பார் வெங்காயமா, பெரிய வெங்காயமா?????


6 மாசத்துக்கு முன்னால எதாவது சொல்லீருந்தா, அதையெல்லாம் இன்னைக்கு உதாரணமா சொல்லக் கூடாது. உண்மையிலயே, நாங்க சொல்ற கருத்துகள் எல்லாம் 7 நாளைக்குத்தான். அதுக்கப்புறம் சிந்தனைச் சிற்பிகளாகிய எங்களுக்குள்ளதான் புதுக் கருத்து வந்துரும்ல.


நான் சொல்ற ஒவ்வொரு கருத்துக்கும் ரெண்டு அர்த்தமிருக்கும். இதுல ஒரு அர்த்தம் உனக்கு புடிக்கலைன்னா, நான் எப்பவுமே அந்த அடுத்த அர்த்தத்தைதான் சொன்னேன்னு அர்த்தம்...


நீ குண்டா இருக்கியோன்னு உனக்கு தோணிச்சுன்னா, ஆமா, நீ குண்டா தான் இருக்கே. அத என் வாயால சொல்ல வெச்சு ஒரு புது பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட வேண்டாம்.


நான் என்னைக்குமே ஒரு நல்ல ஷேப்புலதான் இருக்கேன். ரவுண்டா இருக்கறது கூட ஒரு ஷேப் தான. அதையெல்லாம் அடிக்கடி சொல்லிக் காமிக்க கூடாது.


நீ விளம்பர இடைவேளைகளில் பேசற ஒவ்வொரு மேட்டரும் எவ்வளவு சூப்பரா இருக்குது தெரியுமா…. மத்த நேரங்கள்ல நீ எதையாவது சொல்லீட்டு, அடுத்த சண்டைல அத ஆதாரமா காமிக்க கூடாது.


என்னம்மா பிரச்சனைன்னு நான் கேட்டா, நீ ஒண்ணும் இல்லன்னு சும்மா சொல்லீட்டேன்னா, நாங்க அத ஒண்ணும் இல்லன்னுதான் எடுத்துக்குவோம். எங்களுக்குத் தெரியும் நீ பொய் சொல்றேண்ணு, ஆனா இந்த ஒண்ணும் இல்லைங்கற பதில் எவ்வளவு தெளிவா இருக்கு தெரியுமா……

Monday, November 16, 2009

கேபிள் சங்கரின் தந்தையும் நண்பனும்

கேபிள் அண்ணன் இழந்தது தன் தகப்பனை மாத்திரமல்ல, ஒரு நல்ல நண்பனையும்தான் என்று அறியும் பொழுது மனது நெகிழ்கிறது. ஜாக்கி சேகர் தன் பதிவில் இதை சொல்லியிருந்தார்.

இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றானாலும், தந்தையின் இழப்பு என்பது விட்டுச் செல்லும் வெற்றிடம் நிரப்ப முடியாததாகி விடுகிறது. உலகின் எந்த ஒரு மன்னனாகட்டும், மாமேதையாகட்டும், அவரின் தந்தையின் இழப்பு என்பது துக்கம் தருவது தான். இதே கட்டத்தை அடியேனும் கடந்து வந்திருக்கிறேன்.

இன்றும் என் அப்பா உபயோகித்த கைத்தடி, அவரின் கண்ணாடி, அவர் வாசித்த பைபிள், அவர் படுத்திருந்த படுக்கை, அவரது ஷேவிங் செட், அவரது வேஷ்டிகள் என இவற்றில் ஒன்றைக் கண்டாலும் தந்தையின் இழப்பு கண்ணை நிறைக்கும்.

கேபிள் அண்ணன் ஆறுதல் அடைய கொஞ்ச நாட்கள் பிடிக்கும். அவரது தேவையின் சமயத்தில் உண்மையாலுமே தோள் கொடுக்க பதிவுலகம் திரண்டு வந்திருக்கிறது என்பதை கேட்கும் பொழுது, பதிவுலகம் மூலம் உருவாகியிருக்கும் நட்பு வளையம் எவ்வளவு உறுதியும் நேயமும் மிக்கது என்பது தெரிகிறது. நர்சிம் தல, உங்கள் செயல்களால் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகிறீர்கள். வணங்குகிறேன்.

இதே ஒற்றுமை, இதே நட்பு, ஆக்க பூர்வமான செயல்களில் வரிந்து கட்டிக் கொண்டு முதலில் களம் இறங்கும் குணம் ஆகியவை பதிவர்களுக்குள் என்றும் நிலைத்திருக்க வேண்டுகிறேன்.

கேபிள் அண்ணே, தொலை தூரத்திலிருப்பதால் எழுத்தால் மட்டுமே, உங்கள் துக்கத்தில் பங்கெடுக்கவும், உங்களுக்கு ஆறுதல் சொல்லவும் முடியும். சென்னை வந்ததும் கண்டிப்பாக சந்திக்கிறேன்.

Wednesday, November 11, 2009

ஜுகல்பந்தி – 11 – 11 – 2009 – அமெரிக்க பொங்கல்.

அமெரிக்காவில் பொங்கல் விழா

17 ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் கிளம்பிய பகுத்தறிவு வாதிகள், மத குருமார்களை கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். பாரம்பரியங்கள், சடங்குகள், மூட நம்பிக்கைகள் என சர்ச்சின் குருக்களால் போதிக்கப்பட்ட எல்லாமுமே கேள்விக்குள்ளாக்கப் பட்டன. இப்படியே கருத்து வேருபாடுகள் தொடர்ந்து, நீயா, நானா வரை வந்த இந்த பகுத்தறிவு வாதம், சர்ச்களில் பிரிவினைக்கு வித்திட்டது. அதே சமயத்தில் அமெரிக்க கண்டத்தையும் சில முதலாளிகள் புரட்டிப் பார்க்க ஆரம்பித்த காரணத்தால் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் பெருகிக் கொண்டிருந்தது. இங்கிலாந்தில் சர்ச் எழுதும் கவிதைக்கு எதிர்கவிதை எழுதி யாரும் உயிரோடு இருக்க முடியாது என்ற காரணத்தினாலும், அமெரிக்காவின் நிலத்திலிருக்கும் சிறப்புகளைப் பற்றி அவ்வப்பொழுது அங்கு சென்று வரும் கப்பல்கள் கதை கதையாய் சொல்வதாலும், இங்கிலாந்தின் ஒரு கூட்டம், அலை கடலென ஆர்த்தெழுந்து அமெரிக்கா கிளம்பியது. இங்கிலாந்திலிருந்து கிளம்பியதின் உண்மை நோக்கமென்னவோ சர்ச் உடனான பிணக்கு தான் காரணமென்றாலும், அமெரிக்க கனவும் (ஹூக்கும், அப்பயுமா) சம அளவில் வசீகரித்ததென்னவோ உண்மைதான்.

1620 ஆம் ஆண்டு, செப்டெம்பர் 6 ம் தேதியோ அல்லது 16 ம் தேதியோ,(சரியான தேதியைக் குறித்த குழப்பங்கள் வரலாற்றுப் பக்கங்களில் இன்னும் இருக்கிறது) இங்கிலாந்திலிருந்து கிளம்பிய “மே ஃபிளவர்” என்ற கப்பலில் ஏறிய 102 பயணிகள் தங்கள் பயணத்தை துவக்கினர். கடும் பனிப் பொழிவு, கப்பலை புரட்டிப் போட துடிக்கும் கடல் காற்று என எல்லா சிரமங்களுக்கு மத்தியிலும் 66 நாட்கள் பயணித்து, அமெரிக்காவின் கிழக்கு பகுதியிலிருக்கும் பிளை மவுத் என்ற ஊருக்கு இவர்கள் வந்து சேர்ந்தனர். இந்த 66 நாட்களில் கப்பலிலேயே இருந்த ஒரு நிறைமாத கர்ப்பிணி ஒரு குழந்தையையும் பெற்றிருந்தாள்.

தரை இறங்கியதும், அங்கு உறைந்து கிடந்த பனியும், வெற்றிடமும் மட்டுமே அவர்களை வ்ரவேற்றது. உண்ண உணவு இல்லை, குவியலாக வைக்கப் பட்டிருந்த மணற்குன்றுகளின் மீது படிந்திருந்த பனிக்கட்டிகளை எப்படியோ உடைத்தெடுத்து, மண்ணைக் கிளறி பார்த்தால், அதனுள் மக்காச்சோள கதிர்கள் புதைத்து வைக்கப் பட்டிருந்தன. அடித்ததடா லாட்டரி என குதூகலித்தவர்களுக்கு ஒரு சில குன்றுகளிலிருந்து எலும்புக் கூடுகளும் கிடைத்தன. எப்படியோ, உண்ணக் கிடைத்ததை எண்ணி சந்தோஷப் பட்டு உண்டு களித்து, பசியின் தாக்கம் போன பின் தான் அந்த பயங்கரம் அவர்களுக்கு உறைத்தது. மண்ணுக்குள் புதைக்க வேண்டுமென்றால், அதை புதைத்தவர்கள் இங்குதான் இருக்க வேண்டும். ஆஹா, பசி மயக்கத்தில் அடுத்தவன் சோத்தை ஆட்டையப் போட்டுட்டமா, இனி என்னவெல்லம் நடக்கப் போகுதோ என பயந்திருந்தவர்கள் மீது, அந்த மண்ணின் மைந்தர்களான வெள்ளந்தி மனிதர்கள் அன்பையே பொழிந்தனர். ஒரு வழியாக அவர்களின் தயவில் உயிர் பிழைத்த ஆங்கிலேயர்கள், அந்த பயணத்தின் வெற்றிக்காகவும், உள்ளூர் ஆசாமிகளின் கண்களில் கிடைத்த தயவிற்காகவும், இறைவனுக்கு நன்றி சொல்லி ஆரம்பித்ததுதான் ‘நன்றி சொல்லும் பண்டிகை”. பின்னாளில் இவர்களுக்கு சோறு போட்டு கட்டி அணைத்த அந்த வெள்ளை மனசுக் காரர்களை, குத்தி வகுந்தெடுத்து விட்டு, ஆங்கிலேயர்களுக்கே உரிய அந்த குரூர புத்தியுடன் எல்லாவற்றையும் கபளீகரம் செய்தது வேறு கதை.

இப்படியாய் ஆரம்பித்த “Thanks Giving Day” கொண்டாட்டங்கள் பின்னாளில் ஒரு அறுவடைப் பண்டிகையாக மாறிப் போனது. விளை நிலத்தின் பலன்களை கடவுளுக்கு படைப்பது என்பது ஒரு சம்பிரதாயமாகிவிட்டது. மே ஃபிளவர் கப்பல் வந்து இங்கு கரை சேர்ந்தது ஒரு நவம்பர் மாதத்து வியாழக் கிழமையாயிருந்ததோ என்னவோ, ஒவ்வொரு நவம்பர் மாதத்தின் கடைசி வியாழக் கிழமைகளிலும் இந்தப் பண்டிகை கொண்டாடப் படுகிறது.

முழு வான்கோழியை அப்படியே தீயில் வாட்டி எடுத்து, வீட்டில் உள்ள அனைவரும் குடும்பமாக குளிருக்கு இதமாயிருக்க இரவில் தீமூட்டி ஒரு வட்டத்தில் அமர்ந்து, பழங்கள், காய்கறிகள், மதுவகைகள் என எல்லாவற்றையும் புசிப்பதும் குடிப்பதும் மட்டுமே இன்று நிலைத்திருக்கிறது.

புசிப்பதற்கும், குடிப்பதற்கும் இது ஒரு காரணமும் தருணமுமாயிருப்பதினால், நம்மூர் பொங்கலைப் போலவே நிலத்தில் அறுவடை செய்தவனும் சரி, செய்யாதவனும் சரி எல்லாரும் கொண்டாடுகிறார்கள்.

பாகிஸ்தானா- பட்டாசுக்கடையா

எதோ தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கறமாதிரி, குண்டு வெடிச்சுகிட்டிருக்காங்க. பெஷாவர் நகரில் நகர மேயரே சிவலோக பிராப்தி அடைந்திருக்கிறார். இங்குதான் என்பது இல்லை, இதில்தான் என்பது இல்லை. காரில், பஸ்ஸில், சைக்கிளில், ராணுவ முகாமுக்கு அருகில், இன்னும் மக்கள் கூடும் இடங்கள் எல்லாவற்றிலும் குண்டுகள் வெடிக்கின்றன. மரணமும், ஓலங்களும், அறிக்கைகளும் த்தூ…..,

அங்குள்ள அரசியல் வியாதிகள் மக்கள் கவனத்தை திசை திருப்ப, இந்தியா தீவிரவாதிகளுக்கு துணை நின்று பாகிஸ்தானில் குண்டு வைக்கிறார்கள் என்று கத்திப் பார்த்தார்கள். ஆனால் எதுவும் எடுபடவில்லை. குண்டுகள் வெடிக்கத்தான் செய்கிறது, காமன் மேன் கதறத்தான் செய்கிறான்.

இதைத்தான் அய்யன் வள்ளுவன் சொன்னானோ::

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் – தமக்கின்னா
பிற்பகல் தாமே விளையும்.
சாப்பாடு

கேபிள் அண்ணன் மாத்திரம் கொத்துப் புரோட்டாவுல எப்பப் பார்த்தாலும் சாப்பாடு சாப்பாடுன்னு ஒரு ஐட்டம் போட்டற்ராரு, இதா நாங்களும் எழுதுவம்ல….,

இங்க வட நாட்ல நொந்துகிட்டிருக்கறததான் எழுத முடியும். கடவுள் மாத்திரம் உருளைக்கிழங்கை படைக்காம இருந்திருந்தார்னா, வட இந்தியாவுல முக்காவாசிப்பேர் பசியிலயே செத்துப் போயிருப்பான். அய்யய்யோ, எதுக்கெடுத்தாலும் ஆலு, ஆலு, ஆலு, ச்சே, ரம்மி ஆட்டத்துல ஜோக்கர் சொருகுறமாதிரி, எதுல வேண்ணாலும் உருளைகிழங்கை சொருகி விட்டற்ராய்ங்க. எத்தனை நாளைக்குத்தான் மனுஷன் இந்த ஒரே ஐட்டத்த சாப்பிட முடியும். ம்ஹூம், கார்க்கிய மாதிரி கூடிய சீக்கிரம் எஸ்கேப்பாகலாம்னு பார்க்கிறேன்.

ங்கொய்யால பக்கங்கள்

நாலுகாசு கையில இருந்தா பணக்காரங்கறான்,
நாலு வார்த்தை பேசிப்புட்டா மேதாவிங்கறான்,
நாலு எழுத்து சேர்த்து எழுதுனா எழுத்தாளர்ங்கறான்,
நாலு பேரு கூட நடந்தா தலைவருங்கறான்,
ங்கொய்யால
மொபைலு எத்தனை பெருசா இருந்தாலும்
சிம்கார்டு ஒரே சைசுதாண்டா.

Monday, November 9, 2009

வந்தே மாதரம் – வருதய்யா ஆத்திரம்.

1835 ம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் மிட்நாப்பூர் நகரில், ஆங்கிலேய அரசில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு இந்திய அதிகாரியின் வீட்டில் பிறந்தவர் பங்கிம் சந்தர சட்டர்ஜி. 1891 – ஆம் ஆண்டு வரை, நீதிபதியாக ஆங்கிலேய அரசாங்க உத்தியோகம் பார்த்து விட்டு, தினமும் சாரட் வண்டியில் வீட்டுக்கு போய் சகதர்மிணி செய்து வைக்கும் மீன்குழம்பை ஒரு பிடி பிடித்து விட்டு, ஒழுங்காக தூங்கப் போன இந்த மனிதருக்குள்ளும், ஆங்கிலேய எதிர்ப்பு என்பது மனதுக்குள் கனன்று கொண்டிருந்தது. கவிதைகள் எழுதுவதிலும், புனைவுகள் எழுதுவதிலும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த இந்த மனிதர், 1882 ஆம் ஆண்டு “அனந்தாமத்” என்ற ஒரு புத்தகம் எழுதினார். ஆங்கிலேயர்களின் வரி வசூலிக்கும் கொள்கைக்கு எதிராக இந்து மற்றும் இஸ்லாமிய துறவிகளால் நடத்தப் பட்ட “துறவிகளின் போரையும்”, அந்நாட்களில் (1770 களில்) வங்காள பகுதியில் தலைவிரித்தாடிய பஞ்சத்தின் கோர விளைவுகளையும் மையப் படுத்தி எழுதிய ஒரு புனைவு இது.

பஞ்சத்தின் பிடியிலிருந்த வங்கத்தில் மனிதர்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு, கடைசியில் மனிதர்களையும் விற்கத் தொடங்கினார்கள். ஆனால் வாங்குவோர் தான் யாரும் இல்லை. கல்யாணி என்ற வங்கப் பெண் தன் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு ஆள் பிடித்து விற்பவர்களின் கண்களில் தப்பித்து ஓடுகிறாள். ஆனால் வாணலிக்குத் தப்பி நெருப்பில் விழுந்த கதையாய், அவள் ஆங்கிலேய சிப்பாய்களின் காமக் கண்களில் பட்டு விடுகிறாள். உதவி உதவி என்று கதறி அந்த பெண், ஒரு ஆற்றங்கரையில் மூர்ச்சையானதும், அவளை காப்பாற்றும் ஒரு இந்துத் துறவி அவளை பாதுகாப்பு கருதி துறவிகள் கூட்டமாய் குழுமியிருக்கும் இடத்தில் மறைத்து வைக்கிறார். ஏற்கெனவே ஆங்கிலேயர்களின் அடாவடி வரி வசூலிப்பினால் தங்களது புண்ணிய தலங்களுக்கு சுதந்திரமாக சென்று வர முடியாமல் வெறுப்படைந்திருந்த துறவிகள், கல்யாணிக்கு ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட அவமானத்தின் கதையை கேட்டதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெகுண்டு எழுகிறார்கள் . இதன் விளைவாக நடந்தது தான் துறவிகளின் போர். இதில் நிராயுத பாணிகளாய் வெறும் கோபத்தையும் ஒற்றுமையையும் மாத்திரமே ஆயுதங்களாக கொண்டு போரிட்ட துறவிகளால், ஆங்கிலேய ராணுவம் மற்றும் ஆயுத பலத்துக்கு முன்பாக சில மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. கலகத்தை அடக்கி விட்டோம் என சில ஆங்கில அதிகாரிகள் இங்கிலாந்து அரசியின் கையால், தங்கள் சட்டைகளில் மெடல் குத்திக் கொண்டார்கள். இப்படியாக போகும் அந்தப் புனைவில் இந்திய நாட்டை ஒரு அன்னையாக உருவகப் படுத்தி அந்த அன்னையின் சிறப்புகளை தனக்கே உரிய சமஸ்கிருத மற்றும் வங்க மொழி புலமையின் சிறப்பில் எழுதிய வரிகள் தான் “வந்தே மாதரம்”.

1890களின் பின்பகுதியில், ஆங்கிலேயர்களின் அட்டகாசம் அதிகமாகி, இங்கிலாந்து ராணிக்கு தங்களது விசுவாசத்தைக் காட்ட “ O God, Save the Queen” என்ற பாட்டை இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாடவேண்டும் என கட்டாயப் படுத்தினார்கள். எங்கேயோ இருந்து வந்து நம்மீது ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்துக் காரனின் ராணி நன்றாயிருக்க வேண்டுமென நான் ஏன் வேண்ட வேண்டும் என ஒவ்வொரு இந்தியனும் வெகுண்டு கொண்டு இருந்த நேரத்தில், 1896 ஆம் ஆண்டு கல்கத்தாவில் அப்போதைய தலைவர் ரஹிமத்துல்லா சயானி என்பவரின் தலைமையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், ராணியின் பாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம் பாரத தாயைப் பற்றிப் பாட வேண்டும் என தீர்மானித்து முதன்முதலாக வந்தே மாதரம் பாடப் பட்டது. பிறகு இந்தப் பாட்டின் முழு அர்த்தமும், அந்த வர்ணனை வரிகளில் வெளிப்படும் இந்திய மண்ணோடுள்ள உளம் சார்ந்த உணர்வுகளும், ஒவ்வொரு இந்தியனையும் ஈர்க்க, மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் வந்தே மாதரம் ஒலித்தது. குறிப்பாக நாம் அறிய வேண்டியது, அப்பொழுது சுதந்திரப் போராட்டத்தில் வெகுவாக ஈடுபட்டிருந்த இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே எந்த வித கருத்து பேதங்களுமின்றி இந்தப் பாடல் பாடப் பட்டு வந்தது.

இதற்கிடையே இஸ்லாமிய அறிவாளர்களால் ஜமாய்த் உலேமா – ஏ – ஹிந்த் (இந்திய அறிவாளிகள் குழுமம்) என்ற ஒரு அமைப்பு, 1919 – ம் ஆண்டு தோறுவிக்கப்பட்டது. இவர்கள் தங்கள் பங்குக்கு ஆங்கிலேய எதிர்ப்பை வெளிப்படுத்த “கிலாஃபத் இயக்கம்” என்ற ஒன்றை நடத்த இந்த இயக்கமும் இஸ்லாமிய மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. பிற்காலத்தில் இவர்கள், கொள்கை ரீதியில் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர். இவர்களில் பலர் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்த வேளையில், இவர்களுக்குள்ளேயே ஒரு தனி பிரிவினர் பிரிவினைக்கு ஆதரவாகவும் கிளர்ந்தனர். இந்த பிரிவினை ஆதரவாளர்கள் எல்லாம் சேர்ந்து பின்னாளில் ஜமாய்த் உலேமா – ஏ – இஸ்லாம் (இஸ்லாமிய அறிவாளிகள் குழுமம்) என்ற தனிக் குழுவாய் பிரிந்து போய் விட்டனர்.

இந்திய அறிவாளிகள் குழுமம் அன்றிலிருந்து இன்றுவரை, தங்களை இந்திய இறையாண்மையை முழுதும் மதிப்பவர்களாகவும், மதச் சார்பின்மைக்கு முழுதும் ஆதரவு தருபவர்களாகவும் தான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் அவர்களும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். மற்றும் பிராந்திய ரீதியில் அங்கங்கே இருக்கும் மாநில கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல்களில் பங்கேற்று, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து அரசியல் செய்து என இந்திய அரசியலின் ஒரு அங்கமாகவே திகழ்கிறார்கள்.

இப்படி சாதுவாக குல்லாய் அணிந்து கொண்டும், தாடியை நீவிக் கொண்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டும், ஐந்து முறை தொழுது கொண்டும் இருந்த இந்த அறிவாளிகள், சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் த்யோபந்த் என்ற இடத்தில் நடந்த அறிவாளிகள் மாநாட்டில் நிறைவேற்றிய ஒரு தீர்மானம் தான் இந்திய அரசியலில் ஒரு புதிய சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கிறது. தியோபந்தில நடந்த மாநாட்டில் நமது நாட்டுக்கோட்டை வீட்டுக்காரரான மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்கள் அறிவாளிகளின் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொள்ள, அந்த நேரம் பார்த்து அறிவாளிகளின் அறிவு கோக்கு மாக்காக வேலை செய்து, இஸ்லாமியர்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என ஃபத்வா வெளியிட்டு விட்டார்கள். இதென்னடா வம்பு, எக்குத் தப்பாக வந்து மட்டிக் கொண்டோமோ என நினைத்து, சிதம்பரமும் மாநாட்டில் பேசும் பொழுது, மிகுந்த எச்சரிக்கையுடன், இந்த ஃபத்வா மேட்டரை தொடாமலே பேசி விட்டு ஆளை விடுங்கடா சாமி என ஓடி வந்து விட்டார். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

இப்பொழுது இருக்கிற அரசியல் நிலைமையில், இறங்கு முகத்தில் இருக்கும் பாஜக திரும்பிய பக்கமெல்லாம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தனிக் கொடி பிடிக்க தயாராகி வருகிறார். அத்வானியின் தலைமை என்பது கட்சிக்கு எதிர்பார்த்த கவர்ச்சியை மக்களிடம் தர முடியவில்லை. ஜஸ்வந்து சிங் தனியாக ஜின்னா புராணம் பாடி விட்டு பிரிந்து விட்டார். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் வேளையில், நடந்து முடிந்த மாநிலத்தேர்தல்கள் அனைத்திலும் மண்ணைக் கவ்வ வேண்டியதாகி விட்டது. தென்னாட்டில் கால் ஊன்றக் கிடைத்த ஒரே ஒரு இடமான கர்நாடகத்தில், ரெட்டி சகோதரர்கள் தரும் குடைச்சல் வேறு திருகு வலியாய் மாறிக் கொண்டிருக்கிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என திரிந்தவர்களுக்கு, இந்த விஷயம் அகப் படவே வானுக்கும் மண்ணுக்கும் எகிறத் தொடங்கி விட்டார்கள்.

உடனே சிதம்பரம் பதவி விலக வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர், பிரவீண்பாய் தொகாடியா அறிக்கை விடுகிறார். சிதம்பரம் மௌனமாய் இருந்தது ஏன் என கேள்விகள், உருவ பொம்மை எரிப்புகள் என அரசியல் மேடை களை கட்டியுள்ளது. ஆனால் ஃபத்வா கொடுத்த அறிவாளிகள் சங்கம் என்ன காரணத்தால் இந்த தடையை விதித்தார்கள் என்றால், இதில் ஒரு பெண் தெய்வத்திற்கான துதிப்பாடல் வரிகள் வருகின்றன, அந்த வரிகளை உச்சரிக்கும் எந்த ஒரு இஸ்லாமியனும் அல்லாவை தூஷிக்கிறான் என திருவாய் மலர்ந்தருளி விட்டார்கள். இதற்கு இந்த அறிவாளிகள் கூட்டத்திலேயே ஒரு சிறு எதிர்ப்பு கிளம்பினாலும், அது திருவிழாக் கூட்டத்தில் ஒலித்த ஒரு குருட்டுப் பாடகனின் குரலாய் அமுங்கிப் போனது.

இந்த அறிவாளிகளுக்கு சில கேள்விகள்:

1919 ம் ஆண்டிலிருந்து நீங்களும் நெஞ்சை நிமிர்த்தி இந்தப் பாடலை பாடினீர்களே, அப்பொழுதெல்லாம் ஒளிந்து கொண்டிருந்த பெண்தெய்வம், திடீரென வெளிவந்தது ஏன்?

இறையாண்மைக்கும் ஆன்மீகத்துக்குமுள்ள வித்தியாசம் அறிவாளிகளான உங்களுக்கு கடுகளவாவது புரியாமல் போனது ஏன்?

ஃபத்வா கொடுப்பது என்பது ஆன்மீக காரணங்களுக்காக மாத்திரம் தானா அல்லது அரசியல் காரணங்களுக்காகவும் கூடவா?

வகுப்புவாத அரசியலின் அருவருப்பான விளைவுகளை சற்றே மறந்து முன்னேற்றம் என்ற பாதையில் எப்படி அடியெடுத்து வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் சாமான்ய இந்தியனை இத்தைகைய ஃபத்வாக்கள் எப்படி பாதிக்கும் என அணுவளவாவது யோசித்தீர்களா?

ஆடுகள் முட்டி சண்டை போட்டவுடன், எந்த ஆடு முதலில் மயங்கி விழும் அதில் எத்தனை கறி தேரும் என நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் வெட்கங்கெட்ட இந்திய ஊடக நரிகள், வழக்கம் போல சிண்டு முடியும் வேலையை துவங்கி விட்டன. இது எங்கு போய் முடியுமோ அந்த பாரத மாதாவுக்கே வெளிச்சம்.

வந்தே மாதரம் – வருதய்யா ஆத்திரம்.

Wednesday, November 4, 2009

ஜுகல்பந்தி – 4 – 11 – 2009 - தெய்வத்தின் வாசல்



நகரம் - ஹரித்துவார் - தெய்வத்தின் வாசல்.

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்து வழித்தெடுத்த அமுதத்தின் ஒரு குடம் (கும்பம்) இங்கு வைக்கப்பட்டிருந்ததாகவும், அதிலிருந்து சில துளிகள் தரையில் சிந்தியதாகவும் சொல்லப்படும் ஒரு இடம் இது. அமுதத்தை வழித்தெடுத்த பின் வழக்கம் போல தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கை கொடுக்காமல் அழுகுணி ஆட்டம் ஆட, அசுரர்கள் அதைப் பறிக்க முயல, அமுதத்தை நான்கு குடங்களில் ஊற்றி, அந்த வழியே வந்த கருட பகவானிடத்தில் கொடுத்து அனுப்புகிறார்கள். கருட பகவான் நான்கு குடங்களையும் நான்கு இடங்களில் மறைத்து வைக்கிறார். உஜ்ஜைன், நாசிக், அலகாபாத் மற்றும் ஹரித்துவார். இந்த நான்கு இடங்களிலும் கும்பங்களில் வைக்கப்பட்டிருந்த அமுதம் சில துளிகள் சிந்தி விட்டதால் தான் இங்கு “கும்பமேளா” க்கள் கொண்டாடப் படுகின்றன. மேலும் இந்த பாற்கடலை கடைந்து, அதற்கப்புறம் நடந்த களேபரங்களில் தெரிந்தோ, தெரியாமலோ பார்வதியுடன் ரொமான்ஸில் இருந்த சிவனும் பங்கெடுத்துக் கொண்டதாலும், அதே சமயத்தில் பாற்கடலை கடைய எடுத்து வந்த மந்தராச்சல மலை கடலில் மூழ்கும் பொழுது, அதை தாங்கிப் பிடிப்பதற்காக ஆமையாய் அவதாரமெடுத்து விஷ்ணுவும் ஆட்டத்தில் உள்ளதாலும், ஹரித்துவார் என்னும் இந்நகரம் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பெருமை சேர்க்கிறது.

நிதர்சனத்தில், எக்கச்சக்க பெயர்தெரியா மூலிகைகளுக்குள் புகுந்து, நறுமணமெடுத்து, அநேக வியாதிகளுக்கு ஒரே மருந்தாயிருந்து, பொங்கிப் பிரவாகமெடுக்கும் கங்கை நதி மலைகளிலிருந்தெல்லாம் கீழிறங்கி சமவெளியில் சாதுவாக நடைபயில ஆரம்பிப்பது இந்தப் புள்ளியில் தான். அதனால் இங்கு கங்கையில் குளிப்பவர்களுக்கு உடல் சுகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்ற ஒரே ஒரு காரணம் தான் இந்த இடம் செழித்து வளர்ந்து ஒரு புண்ணிய தலமானதற்கு மூல காரணமாயிருக்க வேண்டும். ஆனால் இதற்கு அடுத்த நகரங்களில் தெரியாமல் கூட கங்கையில் குளித்து விடாதீர்கள். உங்களுக்கு எதாவது வியாதிகள் தொற்றிக் கொண்டால் கம்பெனி பொறுப்பாகாது. இந்த ஒரே காரணத்துக்காக சிறப்புப் பெற ஆரம்பித்த இந்த கங்கையின் சமவெளிப் பகுதியில், மனிதன் காலடி எடுத்து வைத்து பல காலம் வரை சிவனும் விஷ்ணுவும் நுழையாமல் தான் இருந்திருக்கிறார்கள். இவர்கள் நுழைந்தவுடன் தான் மோட்சமும், புனித குளியலும், ஆலகால விஷமும், பாற்கடலும், வாசுகி என்னும் பாம்பு கடலைக் கடைய கயிறானதும், விஷ்ணு ஆமையானதும், அமுதமும், பிறகு கும்பமும், அதுவும், இதுவும் பின்ன அது இது, அப்புறம் இது அதுவென எல்லா கதைகளும் ஆரம்பித்தது.

இன்னொரு விஷயம். இந்தியாவிலுள்ள இந்துக் குடும்பங்களின் வம்சாவளி விவரங்கள் இங்குள்ள பிராமிண பண்டிட்களிடம் கிடைக்கிறது. பண்டைய காலங்களில் முன்னோர்களின் சாம்பலை கரைக்க எல்லா இந்துக்களும் ஹரித்துவார்க்குத்தான் வந்தார்களாம். வருபவர்களின் ஊர், விலாசம், வம்சம், இன்னும் என்னென்ன விவரங்களையெல்லாம் பதிவு செய்ய முடியுமோ அதையெல்லாம் அவர்கள் பதிவு செய்து விட்டு போய் விட்டார்கள். இன்று அதில் அநேகர் முகமதுகளாகவும், ராபர்ட்டாகவும், பீட்டராகவும் மாறிப் போயிருக்கலாம். இன்று இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரால் உடனடி சுகமளிக்கிற அற்புத ஊழியர்களும், பகுத்தறிவு பகலவன்களும் தங்கள் ஏழு தலைமுறைக்கு முந்தைய பெயர்களை தேடவேண்டுமானால் இங்கு இன்றும் தேடலாம். ஆனால் எப்படி நாடி ஜோசியம் ஒரு பணம் கொழிக்கும் வியாபாரமாகிப் போனதோ அப்படியே இந்த வம்சாவளி விவரங்களை வைத்து வியாபாரம் பண்ண ஒரு கும்பல் கிளம்பியிருப்பதுதான் வேதனை.

எங்கு நோக்கினும் பூஜைகளும், மந்திரங்களும், மணியோசைகளும், ருத்திராட்ச மாலைகளும், சாம்பிராணி புகையும், கஞ்சா சாமியார்களும் கூடவே சாமியாரிணிகளும், கும்ப மேளாக்களுமென இந்நகரம் இன்னும் புராதன வழக்கங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நவீனத்தின் தாக்கமும் இல்லாமலில்லை. இன்டர்நெட் பார்லர்களும், மூலிகை மசாஜ்களும், ருத்திராட்சக் கொட்டைகளின் பல்வேறு வடிவங்களும் (பஞ்சமுகி ருத்திராட்சமென ஒரு ஐட்டத்தை காட்டி ஏமாற்றிய ஒரு சாதுவிடமிருந்து தப்பித்து வருவதற்குள் டரியலாகி விட்டோம்) என வேகமாக நவீன மடைந்து வருகிறது.

நாட்டு நடப்புகள் :

ஆயிரம் கருத்து கணிப்புகள், ஒரு புறம் தாலிபான்களின் அச்சுறுத்தல், பழங்குடியினரின் மிருகத்தனமான தனி அரசாங்கம், தீவிரவாதத்தின் கோர விளையாட்டில் தினமும் துண்டாடப்படும் இறையாண்மை, எப்பொழுதும் வேறு நாடுகளிடம் கையேந்தி நிற்க வேண்டிய ஏழ்மைத்தனம், உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆயிரம் தடைகள், ஒருபுறம் மத வாதிகளின் ஏச்சு என எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் சிரித்த முகத்தை தாடிக்குள் புதைத்தபடி வலம் வரும் குல்லாக்கார ஹமீத் கர்ஸாய், மறுபடியும் ஒருமுறை தேர்தலில் வென்று ஆப்கானிஸ்தான அதிபராயிருக்கிறார். தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் வரை எத்தனையோ முட்டுக்கட்டைகளை கொடுத்த வடக்கு ஆப்கானிஸ்தானத்தின் முடிசூடா இளவரசரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான அப்துல்லா அப்துல்லா திடீரென தான் ஆட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விட, கர்ஸாய் மறுபடியும் அரியணை ஏறப் போகிறார்.

இங்கும் நம்மூர் காத்து அடிச்சிருக்குதுங்கோவ். ஒரு ஓட்டுக்கு இத்தனை ரூபாய் என்று இந்த தேர்தலிலும் பணம் விளையாடி இருக்கிறது. பாஹ்க்லான், ஹெல்மாந்த் போன்ற மாநிலங்களில் பணமூட்டைகளை வீடு வீட்டுக்கு கர்ஸாயின் ஆட்கள் விநியோகித்ததாய் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாக்காளர் அட்டைகள் காபூல் நகரத்தில் வெளிப்படையாய் விற்கப் பட்டதை BBC காரர்களே பார்த்துள்ளனர். கலவரத்தால் மூடப்பட்ட பெருவாரியான வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவு முறைப்படி நடத்தப் பட்டதாகப் பதிவு செய்யப்பட்டு, அதில் எல்லா இடங்களிலும் கர்ஸாயே வெற்றி பெற்றிருக்கிறார். ஆக மொத்தம் தேர்தலில் வெற்றியடையும் நுணுக்கம் எவ்வளவு சீக்கிரமா நம்மூரிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கே போயிருக்குது பாருங்க.

ங்கொய்யால பக்கங்கள்.

கோபம் வந்தா திட்டி எழுதலாம்,
காதல் வந்தா கவுஜ எழுதலாம்,

சோகம் வந்தா அழுது எழுதலாம்,

சரக்கடிச்சா உளறி எழுதலாம்,

குஜாலா இருந்தா குஷியா எழுதலாம்,

ங்கொய்யால,

ஒண்ணுமே தோண மாட்டேங்குதே

என்னத்த எழுத?????

Monday, November 2, 2009

நான் நிறுத்தீட்டேன், நீங்க........

தினமும் காலையில கணினிக்கு உயிரூட்டி, வந்திருக்கிற மின் அஞ்சல்களுக்கெல்லாம் பதில் சொல்லீட்டு, ஆணி புடுங்க ஆரம்பிச்சு, ஒரு 10 மணி வாக்குல, பதிவுலகத்துல பூந்து, நமக்கு புடிச்ச கடைகளுக்கெல்லாம் போய் புதுசா எதாவது வந்திருக்கான்னு ஒரு தரம் பார்த்துட்டு, அப்படியே பின்னூட்டமும் போட்டுட்டு வந்துருவேன். ஆனா ஒரு சிலர் அப்பத்தான் கடையில புது சரக்கு இறக்கியிருப்பாங்க, பின்னூட்ட பொட்டியில இன்னும் கணக்கே ஆரம்பிச்சிருக்காது. அங்க போயி பதிவ கிண்டல் ப்ண்ணியோ, பாராட்டியோ, அல்லது மேற்கோள் காட்டி கருத்து சொல்லியோ பின்னூட்டம் போட்டுட்டிருந்தேன். அப்படி பின்னூட்டம் போடறதுல ஒரு சிக்கல் இருக்குது. முதல் பின்னூட்டம் டெம்பிளேட் பின்னூட்டமா, “கலக்கல்”, “அசத்திட்டீங்க,” “ரசித்தேன்”, அப்படீன்னு எழுதுனாலோ, அல்லது கிண்டல் பண்ணி எழுதுனாலோ நிறைய விபரீதம் இருக்குது. அதாவது முதல் பின்னூட்டம் எந்த தோரணையில இருக்குதோ அதே மாதிரித்தான் அனைத்து பதிவர்களின் பார்வையும் இருக்கும்னு ஒரு சில பதிவர்கள் நினைக்கறாங்க. ஒரு பதிவு போடறதுக்கு அவனவன் எவ்வளவு கஷ்டப்பட்டு, நொந்து நூலாகி மேட்டர் தேத்தி பதிவு போடறாங்க, அதப் போயி முதல் முதலா கருத்து சொல்றேன்னு சொல்லி எதுக்கு பொழிக்கணும்னு தான் நான் முதல் பின்னூட்டம் போடறத நிறுத்தீட்டேன்.

***************************************************************************
1995ம் வருஷம், ராஜஸ்தானின் பில்வாடா பகுதியில் இருக்கும் சிரோஹி மாவட்டத்தில் வேலை செஞ்சுகிட்டிருந்தேன். எங்க ஆபீஸுக்கு கூட்டி பெருக்கவும், தேநீர் கொடுக்கவும் ஒரு பொண்ணு வேலைக்கு வருவா, ராஜஸ்தானி பழங்குடியினருக்கே உள்ள அந்த சிவப்பு நிறமும், மூக்கும் முழியுமா உள்ள ஒரு பதினஞ்சு வயசு வாலிப பொண்ணு. பக்கத்து கிராமத்துல இருந்து தினமும் வந்த அந்த பொண்ணோட அண்ணன் எங்களுக்கு டிரைவரா இருந்தான். ஒரு நாள் நான் தங்கியிருநத வீட்டுல இருந்து காலையில வேலைக்கு போறதுக்கு சைக்கிள எடுத்துட்டு கிளம்பி கொஞ்சம் தூரம் போனா, வேலைக்கு போக வேண்டிய எல்லாரும் கம்பெனில உள்ள காலனியில ஒரு நாலு ரோடு சந்திக்கற இடத்துல கும்பலா நிக்கறாங்க. என்னனு பார்த்தா, எங்க ஆபீஸ்ல வேலை செய்யற பொண்ணு இடுப்புக்கு மேல ஒரு பொட்டு துணியில்லாம கையை ரெண்டையும் நெஞ்சுக்கு குறுக்க கட்டிகிட்டு, குத்த வெச்சு உக்கார்ந்து, பாவாடையால நெஞ்ச மூட முயற்ச்சி பண்ணிகிட்டிருக்கா, கன்னத்துலயும், முழங்கையிலயும் சிராய்ப்புக் காயம் பட்டு ரத்தம் கசியுது, உதட்டுக்குப் பக்கத்துல ஒரு சின்ன வெட்டுக்காயம். காலையில வேலைக்கு போற அத்தன பேரும் சைக்கிள நிறுத்திகிட்டு அவ வெற்றுடம்பை வேடிக்கை பாக்கறாங்க. ஒருத்தரும் அவளுக்கு உதவ முன்வரல. நான் போய் என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு, பக்கத்து வீட்டு பையனோட சைக்கிள்ல பின்னால உக்காந்துட்டு வேலைக்கு வந்ததாகவும், அவன் சைக்கிள்ல துப்பட்டா மாட்டி, துப்பட்டாவோட சேர்ந்து சோளியும் சக்கரத்துல சுத்தி கிட்டதாகவும், தான் கீழ விழுந்து எல்லாம் காயமாகிவிட்டதாகவும் சொன்னா. (ராஜஸ்தான்ல பில்வாடா பகுதி ஆதி வாசி பெண்கள் இடுப்புக்கு மேல உள்ளாடை எதுவும் அணிய மாட்டார்கள், சோளி அதுவும் உடலின் முன்னே மார்புகளை மாத்திரம் தான் மறைக்குமே தவிர, முதுகு பக்கத்தில் வெறும் இரண்டு கயிறுகளைக் கொண்டு முடிச்சுகள் மாத்திரம் தான் இருக்கும். துப்பட்டா சரிந்து விடாமலிருக்க அதன் ஒரு நுனியை சோளியுடன் சேர்த்து, பின்னூசியால் குத்தியோ அல்லது முடிந்தோ வைத்திருப்பார்கள். சைக்கிள் சக்கரத்தில் சுற்றிய வேகத்தில் துப்பட்டா சோளியையும் கிழித்துக் கொண்டு போய் விட்டது). அத்தனை ஆண்கள் மத்தியில் வெற்றுடம்புடன் நிற்கிறோமே என்ற அவமானம் ஒருபுறம், கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயங்களின் வலி ஒருபுறமுமாக அந்தப் பெண் கூனிக் குறுகிக் கொண்டிருந்தாள். கண்ணுல பொல பொலன்னு கண்ணீரு வழியுது. சுற்றியிருப்பவர்களைப் பார்த்து எனக்கு கோபமே வந்தது, வெற்றுடம்புடன் உக்கார்ந்திருந்த அவளிடம் சென்று, பரபரவென என் சட்டையை கழற்றி அவளுக்கு கொடுத்து விட்டு, அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த அவளின் அண்ணனிடம், ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போ என சொல்லிவிட்டு, பனியனுடன், மறுபடியும் வீட்டுக்கு வந்து வேறு சட்டை அணிந்து வேலைக்கு போனேன். என்னை பனியனில் பார்த்த அனைவரும் என்ன செய்தி என கேட்டனர், விஷயத்தை சொன்னவுடன், கதை வேறு விதமாக திரிக்கப்பட்டு எனக்கும் அவளுக்கும் ஒரு இது என நான் வேலை செய்த இடத்தில் பேசப் பட்டது. அதனால இப்படி அதிரடியா களத்துல இறங்குறத அன்னைல இருந்து நிறுத்தீட்டேன்……..

**************************************************************************
ஒரு நாள் கிழக்கு கடற்கரை சாலையில மனைவி, மகளுடன் கார்ல போகும் போது, அப்பத்தான் தென் ஆப்பிரிக்க வாசம் முடிந்து வந்ததால, அங்க கார் ஓட்டுன பழக்க தோசத்துல, ரோடு நல்லாருக்குதேன்னு நினைச்சுகிட்டே, ஒரு அழுத்து அழுத்த, அந்த தக்ஷின் சித்ராவுக்கு பக்கத்துலன்னு நினைக்குறேன். ஒரு காவல நண்பர், குழாய் மாதிரி என்னத்தையோ ஒண்ணை கையில புடிச்சுகிட்டு என்னையே உத்துப் பாக்கறது தெரிஞ்சுது. அவுருக்கு பக்கத்துல ஒரு அதிகாரி பைக்குல உக்கார்ந்துகிட்டு பேப்பர் படிச்சுகிட்டிருக்காரு, ஒரு ஜீப்பு வேற நிக்குது. ஆஹா, மாட்டிகிட்டமடான்னு வேகத்தை குறைக்கறதுக்குள்ள அவுரு கையைக் காட்ட, வண்டிய சரியா அவுரு கிட்டவே நிறுத்தினேன். கைய காமிச்சவரு சுத்தி வர்றதுக்கும், நான் கண்ணாடிய இறக்கறதுக்கும் சரியா இருந்துச்சு, என்னப் பார்த்தவரு, என்ன ஏதுன்னு கூட கேக்காம, ஒரு வினாடி என்னை ஏற இறஞ்க பார்த்துட்டு, “என்ன சார், டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களே இப்படி பண்ணா எப்படி சார், கொஞ்சம் மெதுவா போங்க சார்” னு சொல்லீட்டு, பதிலுக்கு கூட காத்திராமல் அடுத்த வண்டிய பார்க்க கிளம்பீட்டார். என்ன நடந்ததுன்னே தெரியல, நானும் வண்டிய எடுத்துட்டு கிளம்பிட்டேன். அப்புறமா தான் தெரிஞ்சுது, அன்னைக்கு காலைல தான் தலை முடி வெட்டுனப்ப நல்லா குறைச்சு வெட்டுப்பான்னு சொல்லி நறுக்குன்னு வெட்டியிருந்தேன். நம்ம சிகைஅலங்காரத்தப் பார்த்துதான் அவரு டிப்பார்ட்மெண்ட் ஆளுன்னு நெனச்சுட்டாருங்கறது புரிஞ்சதுக்கப்புறம், டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களாட்டம் முடி வெட்டிக்கறத நிறுத்தீட்டேன்……..

Monday, October 26, 2009

நமக்கெதுக்குங்க இந்த வம்பு??????

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று நடுவர்கள், ஒரு தொகுப்பாளினி என்ஆட்டம் நன்றாகத்தான் களை கட்டுகிறது. ஆனால், நிகழ்ச்சியில் பேசப் படும் மொழியை கேட்டால் அருவருப்பாக இருக்கிறது. தமிழ் பாடல்கள் பாடப் படுகின்றன. சித்ரா என்னும் நடுவர், முடிந்தவரை தமிழில் பேசுகிறார். அவர் வேறு மொழிக்காரர் என்பதால் அதை பொறுத்துக் கொள்ளலாம். மனோ என்பவர் தமிழில் பேசுகிறார், ஆனால் கொஞ்சமாவது ஆங்கில கலப்படம் இல்லாமல் பேச திணறுகிறார். மூன்றாவதாக ஒரு நடுவர், அவர் பேசுவது என்ன மொழியென்றெ தெரியவில்லை, ஒரு பாடல் என்றால் அதில் சரணம், அனுபல்லவி, பல்லவி என்பவை இருக்கும். ஆனால் இவர் ச்ச்சரணம் என்று கஷ்டப்பட்டு உச்சரிக்கிறார். அதிகமாக புரியாத ஒரு மொழியில் பேசுகிறார். “ நீங்க நன்னா பாடினேள், அந்த top ல போறச்சே, உங்க voice வந்து flatter ஆகாம, steady ஆ இருக்கறது, அந்த ச்ச்ச்சரணத்தோட third word ஐ pronounce பண்ணும் போது ஒரு குட்டி jerk வர்றது. You will have to take note of these குட்டி குட்டி things.” என்று ஒரு புரியாத மொழியில் பேசுகிறார். சீய் தூ என்று துப்ப வேண்டும் போல் உள்ளது.

ஒரு பெண்குழந்தை போட்டியில் தோற்று விட்டதாக நடுவர்கள் தீர்ப்பு சொன்னதும், குழந்தைக்கே உரிய ஏமாற்றங்களுடன் அந்தக் குழந்தை கண்ணீர் வடிக்க, தொகுப்பாளினி அந்தக் குழந்தைக்கு ஆறுதல் சொல்கிறாராம். “அய்யய்யோ இதுக்கெல்லாமா அழுவாங்க, பாருங்க உங்க beautiful cheeks ல tears எல்லாம் roll ஆகி உங்க make up எல்லாம் வந்து spoil ஆகுது பாருங்க” மறுபடியும் காறி தூ தூ தூ

எது எப்படியோ தொலைக்காட்சி காரங்களுக்கு பணம் வந்தா சரிதானே, நமக்கெதுக்குங்க வம்பு?????

***********************************************************************************
இன்று மறுபடியும் இந்திய ஊடகத்தின் மற்றொரு அதிகப் பிரசங்கித்தனமான லொள்ளு:

அமெரிக்க ராணுவத்துடன் ஒரு கூட்டுப் பயிற்சியில் இந்திய ராணுவத்தினர் ஈடு பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள ஜான்சி நகரின் வெளிப்புறங்களில் ஒரு காடும் மலையும் சார்ந்த பகுதியை தேடிப் பிடித்து பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சியை நேரடியாக தொலைக் காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு இந்திய தலைவரையோ, அல்லது விருந்தினராக வந்துள்ள வெளிநாட்டு அரசாங்க முக்கிய மனிதரையோ, சீருந்தில் போகும் பொழுது, திடீரென தீவிர வாதிகள் தாக்கி விட்டால் அவர்களை எப்படி முறியடிப்பது என்பது இன்றைய நாளின் பயிற்சி. தொலைக்காட்சியின் நேர்முக வர்ணனை, இதோ முக்கிய விருந்தினர் வந்து கொண்டிருக்கிறார். அவரது சீருந்தை நோக்கி தீவிரவாதிகள் போகிறார்கள், தாக்குகிறார்கள், திடீரென ஒரு ஹெலிகாப்டர் வருகிறது, அதிலிருந்து அதிரடிப் படையினர் குதிக்கிறார்கள், அவர்கள் தீவிர வாதிகளை பதிலுக்கு தாக்க எப்படி வியூகம் அமைக்கிறார்கள் என நீங்கள் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதோ துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம், தீவிர வாதிகளை நோக்கி அலை அலையாக அதிரடிப் படையினர் முன்னேறுகின்றனர். கடைசியில் விருந்தினர் மீட்கப் பட்டார்.

அடேய் வெண்ணைகளா, மும்பை உல்லாச ஹோட்டலில் நீங்கள் நடத்திய அருவருப்பான நாடகத்தினால் எத்தனை வீரர்களை நாம் இழந்தோம் தெரியுமா, அதைப் பற்றிய குற்ற உணர்ச்சி ஒரு அணுவளவாவது இருக்கிறதா உங்களுக்கு? இப்பொழுது மறுபடியும் ஒரு ராணுவ நடவடிக்கையை படம் பிடித்து உங்கள் கஜானாவை நிரப்ப கிளம்பியிருக்கிறீர்களே, இந்தக் காட்சியை அந்த தீவிர வாதிகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லையா உங்களுக்கு??? ச்சீய், தூ தூ, தூ, எப்படா திருந்துவீங்க நீங்கெல்லாம். ??????

அதிகமா பேசுனா ஆட்டோ வந்துருமோ, நமக்கெதுக்குங்க இந்த வம்பு????

***********************************************************************************
சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று மாநில சட்ட சபை தேர்தல்களிலும் வித்தியாசமான செய்தியை மக்கள் அரசியல்வியாதிகளுக்கு சொல்லியிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று மதர்ப்பில் திரிகிறார்ப் போல் தெரிகிறது. ராகுல் காந்தியின் இளமைக் கவர்ச்சி கொஞ்சம் கை கொடுக்கிறதோ, அல்லது உண்மையாலுமே மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்ப ஆரம்பித்து விட்டார்களோ தெரியவில்லை. ஆமாம், காங்கிரஸ் ஜெயித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் சந்தடி சாக்கில், மகாராஷ்டிர மக்கள் ராஜ் தாக்கரே என்ற ஒரு பாம்புக்கும் பால் வார்த்திருக்கிறார்கள். எப்படி திராவிடம் பேசியே தங்கள் குடும்பத்தை வளர்க்க தென்னாட்டில் ஒரு கும்பல் உண்டோ, அப்படியே மண்ணின் மைந்தர்கள் என்ற ஒரு பிரிவினை வாதம் பேசி அரசியல் செய்ய ஒரு நச்சுப் பாம்பு கிளம்பியிருக்கிறது. இன உணர்வுகளை தூண்டி விட்டு தீப்பொறி பறக்க பேசி 15 இடங்களில் இந்தப் பாம்பு படமெடுத்திருக்கிறது. என்ன ஆகப் போகுதோ???????

அரசியல்னா அப்பிடி இப்படி இருக்கத்தானுங்க செய்யும். பாத்துட்டு ஒரு ரெண்டு நிமிஷம் புலம்பிட்டு போக வேண்டியது தான். நமக்கெதுக்குங்க இந்த வம்பு??????

************************************************************************************

Wednesday, October 21, 2009

ஜுகல்பந்தி – 21 – 10 – 2009 - விகாரங்களின் திருவிழா

நகரம் – புஷ்கர் – பிரம்மனின் நகரம்.

ராஜஸ்தானிய பாலைவன நகரங்களில் ஒன்று. ஜெய்ப்பூரிலிருந்து அஜ்மீர் சென்று அங்கிருந்து இன்னும் 11 கிலோமீட்டரில் இந்த மணல் பரப்பில் கால் பதித்து விடலாம். ஏரிகள், ஆலயங்கள், கடைகள், கலைகளின் வெவ்வேறு வடிவங்கள், இழுத்து சுருட்டப் பட்ட மீசை, ஒரு புடவையை விட நீளமான துணியில் தலைப் பாகை, அத்தனை வண்ணங்களையும் கலந்து ஒரே துணியில் தைத்து, மார்பை மட்டும் மறைத்து விட்டு முதுகு திறந்து நடமாடும் பெண்கள், மணல், மணல். மற்றும் மணல் என ஒரு குதூகலக் கலவை தான் இந்த நகரம்.

வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே களைகட்டும் விலங்குச் சந்தையில் ஒட்டகங்கள் முக்கிய பங்கு வகிக்கும். ஆயிரக் கணக்கான ஒட்டகங்கள், கழுதைகள், ஆடு மாடுகள், பறவைகள் என எல்லாம் விற்பனைக்கே. இவை அனைத்தும் சேர்ந்து ஒரு சேர கத்துவதில் ஒரு ஜுகல் பந்தி உருவாகும் பாருங்கள், ஆஹா, கேட்க காது கோடி வேண்டும்.

பிரம்மனுக்கு என ஒரு கோவில் உண்டென்றால் அது இங்குதான். பிரம்மனுக்கு மற்றும் சில கோவில்கள் இந்தோனேசியாவின் பாலித்தீவிலும், இன்னும் உத்தரப் பிரதேசத்திலும் உண்டென்றாலும், புஷ்கரில் எழுந்தருளியிருக்கும் பிரம்மன் விஷேசமானவனே. பிரம்மன் ராதாகிருஷ்ணனின் தரிசனம் வேண்டி அறுபது ஆயிரம் வருடங்கள் இங்கு காத்திருந்ததாக கதை சொல்லப்படுகிறது.

விசுவாமித்திரர் தவமிருந்த இடமென்றும், தேவலோக அப்சராவான மேனகை குளித்த ஏரியென்றும், மகாபாரத அவதார புருஷனான தரும ராஜா, இந்த ஊர் வழியாகத்தான் சிந்து நதியின் சமவெளி பிரதேசத்துக்கு கடந்து போனாரென்றும், வாமன புராணத்து கதைகளின் படி, பிரகலாதன் இங்கு வாழ்ந்தானென்றும் இன்னும் எத்தனையோ கதைகள் உள்ளன.

இத்தனை புராதனங்கள் நாடி நரம்புகளிலெல்லாம் ஓடி ஊடுருவினாலும், இன்று இந்த நகரமும் நவீன மயமாக்கலின் தாக்கத்திலிருந்து விடுபடவில்லை. ஒருபுறம் வெள்ளி ஜரிகைகளாலும், வண்ண போர்வைகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்களின் பவனி, திருவிழா நாட்களில் வெப்பக் காற்று பலூனில் ஆகாயத்தில் மனிதர்கள், நீண்ட மீசையை சுருட்டி முகமெங்கும் படரவிட்டு முண்டாசுகளுடன் பெருசுகள், நீண்ட மீசை யாருக்கு என போட்டிகள், ஒட்டகங்களின் ஓட்டப் பந்தயங்கள் என ஊரே ஒரு பதினைந்து நாட்களுக்கு திமிலோகப் பட்டுக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் இந்த ஊரையும் விட்டு வைக்கவில்லை, பிராந்திய புஷ்கர் கிரிக்கெட் அணிக்கும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வெள்ளைத்தோல் அணிக்கும் இடையே இந்த மணற்பரப்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரபலம். (வா, ராசா, லலித் மோடி, எங்கப்பா போயிட்ட நீ, கிரிக்கெட்டை வைத்து பணம் பண்ண இதோ இன்னொரு ஐடியா தயார். அடுத்து பாலைவன கிரிக்கெட்னு ஒண்ணு ஆரம்பிச்சு, சந்தோஷமா வாழ்க்கை நடத்தற அரேபிய நாடுகளையும் வளைச்சுப் போட்டு, அவங்க நிம்மதியையும் கெடுத்துரு ராசா, இது இன்னும் உங்கண்ணுக்கு ஏன்தான் தெரியலயோ)

இந்த களேபரங்களுக்கு மத்தியில் வெளிநாட்டவரை கவர்வதற்கெனவே, இந்த மணற்பரப்பில், ஆடல் பாடல், கேளிக்கைகள், விபச்சாரம், போதை வஸ்து என எல்லா கண்றாவிகளும் இருள் கவிந்ததும் நடக்கும்.

கார்த்திகை மாதத்து பௌர்ணமிக்கு முன்னாலும் பின்னாலுமென ஒரு 15 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவை, ஒரு முறையேனும் பார்த்து விட்டு, பிரம்மனின் அருள் பெற்று, பௌர்ணமியன்று பிரம்மனின் கரம் பட்ட ஏரிகளில் குளித்து, உங்களுக்கு எந்த விளைவு ஏற்பட்டாலும் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

ஹாலோவீன் – விகாரங்களின் திருவிழா.

ஐரோப்பிய தேசங்களில் கோடைகாலம் முடிந்து குளிர்கால தொடக்கத்திற்கு அறிகுறியாக, தங்கள் விளைநிலங்களின் பலன்களை முன்னோர்களுக்கு அர்ப்பணித்து மகிழ்ந்த விவசாயிகளுக்கு அசுத்த ஆவிகளின் பரிச்சயம் எங்கு ஏற்பட்டதோ தெரியவில்லை. கெட்ட ஆவிகளை விரட்டியடிக்க விகாரமான முக மூடிகளை அணிந்து கொண்டு விழாவெடுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் மதவாதிகள் உள்ளே புகுந்து முன்னோர்களின் ஆவிகளுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற ஒரு சடங்கை புகுத்தி, அதை இயேசு கிறிஸ்துவின் திருப் பெயரால் கட்டாயப் படுத்தி “All Saints Day” என்ற ஒரு தத்துவத்தை மக்களின் மீது திணித்து விட்டார்கள். இந்த புனிதர்களின் திருநாள் தான் பெயர் மருவி, நோக்கம் மருவி, குணம் மருவி, இன்னும் என்னென்னமெல்லாமோ மருவி விகாரங்களின் நாளாகி விட்டது.

1840களில், முற்றிலும் விவசாய தேசங்களான, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளில் ஏற்பட்ட பஞ்சத்தில் அடிபட்ட விவசாயிகள், தங்கள் பரம்பரை பழக்கங்களோடு அமெரிக்க மண்ணில் பஞ்சம் பிழைக்க தஞ்சம் புக, இந்த ஆவிகளோடு பேசும், பழகும் பழக்கம் ஒரு புது பரிமாணம் எடுத்தது. சூனியக் காரர்கள், கண்கட்டு வித்தை செய்பவர்கள், மந்திரவாதிகள், எலுமிச்சைப் பழத்தில் ஊசி குத்தி ரத்தம் வரவழைக்கும் மோடி மஸ்தான்கள், ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் என்னும் அறிவு ஜீவிகள் என எல்லோருக்கும் இந்த நாள் ஒரு விழா நாளாக மாறிவிட்டது. உடம்பில் விகார உருவங்களை பச்சை குத்திக் கொண்டு, எலும்பில்லாத இடங்களிலெல்லாம் துளையிட்டு வளையங்களை மாட்டிக் கொண்டு, ஆணும் பெண்ணும் மறைக்க வேண்டிய உடல் உறுப்புகளை திறந்து காட்டி, அசுத்த ஆவிகளை பயமுறுத்துகிறோம் என்ற போர்வையில் அருவருப்பான் முக மூடிகளுடன் ஊர்வலம் போகிறார்கள்.

அக்டோபர் மாதத்தின் கடைசி நாளில் நியூயார்க நகர வீதிகளில் இந்த விகார முகமூடி ஊர்வலங்கள் நாள் முழுவதும் நடக்கும்.

பதிவர் வட்ட தீபாவளி

எல்லாரும் எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்லி, நான் டவுசர் போட்டிருந்த பொழுது, நாங்கள் பாவாடை சட்டையில் உலாத்திய பொழுது தீபாவளி எப்படி நல்லா இருந்துச்சு தெரியுமா என காலச் சக்கரத்தை பின்னோக்கி இழுத்து, பதிவுலக வன்முறைகளுக்கு கண்டனம் சொல்லி, காயப் பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி, காயப் படுத்தியவர்களுக்கு கொம்பு சீவி விட்டு, சினிமாக்களை பிரித்து மேய்ந்து, காமன் மேனை கவிழ்த்துப் போட்டு என பதிவுலகில் இந்த தீபாவளியிலும் பட்டாசு நன்றாகத்தான் வெடித்தது. என்ன ஒரே ஒரு குறை, வேட்டைக்காரன் வந்திருந்தான்னா, அவன வெச்சு கொஞ்சம் மத்தாப்பு கொளுத்தி இருப்போம், ஆனா அவுரு என்னமோ இப்பத்தான் அம்பு செதுக்காறாரு போல இருக்குது, ஏன்னா வில்லு தான் வெளங்காம போயிடுச்சே, இனி வேட்டைக்காரன் எதுல அம்பு விடுவாரோ தெரியல.

ங்கொய்யால பக்கங்கள்


அப்பாவுக்கு புதுக் கண்ணாடி,

அம்மாவுக்கு புது புடவை,

ஆத்துக்காரிக்கு புதுப் பட்டு,

தங்கச்சிக்கு தங்கச் செயினு,

தம்பிக்கு டிஜிட்டல் கேமரா,

வாரிசுகளுக்கு புதுத்துணி, பட்டாசு,

வந்தவங்களுக்கு வழிச்செலவு,

பக்கத்து வீட்டுக்கு ஒரு தட்டு பலகாரம்,

ஒரு வழியா தீவாளி முடிஞ்சுது,

ங்கொய்யால,

இப்போதைக்கு இதெ வெச்சு ஓட்டு,

அடுத்த தீவாளிக்கு புதுச்செருப்பு வாங்கலாம்.

Tuesday, October 20, 2009

மூச்சு முட்ட முப்பது நாட்கள்

பன்னாட்டு நிறுவனமாம்,
பல மொழிகள் பேசுவார்களாம்,
பளபளக்கும் மேசைகளும்,
உடல் சிறுத்த கணிணிகளும்,
கண்ணாடி அறைகளுக்குள்
கைதிகளாய் மனிதர்களும்.

வாடகைக்கு உடல்கள் இங்கு
வரிசையாய் நிற்பதுண்டு.
மூளையை முடக்கி வைத்த
முண்டங்கள் முக்கியங்கள்.
சொல்வதை செய்து விடு
சொல்ல நினைத்ததை மறந்து விடு.

சுயம்புகள் தூரப் போங்கள்,
சிந்திப்பவர் ஒழுக்கம் கெட்டவர்,
ஆமாம் சாமி தாரக மந்திரம்,
சாப்பிட மட்டும் வாயைத்திற,
குலுக்க மட்டுமே கையை உயர்த்து,
அவசியப்பட்டால் அசைந்து கொள்.

கைநாட்டு போட வேண்டாம்,
கழுத்திலொரு பட்டை தருவோம்.
புவியின் சுழற்சி முப்பது முடிந்தபின்
முடிந்து தருவோம் முடிப்பு ஒன்று,
மூச்சு விடாமல் வாங்கிக் கொள்.

Thursday, October 15, 2009

அதாவது என்ன சொல்ல வ்ர்றேண்ணா.....

அதாவது என்ன சொல்ல வ்ர்றேண்ணா, ஒரு கோடு, அது நேரா இருக்குதாண்ணு சொல்றதுக்கு ஒரு கோணயான கோடு பக்கத்துல இருக்கணுமில்லையா, அதாவது கோணையான கோட்டைப் போல இல்லாததுனால இது நேரான கோடா தெரியுது. ஆனா உண்மையா அது நேரா இருக்குதா இல்லயாண்ணு எதை வெச்சு சொல்றது. எனக்கு நேரா தெரியறது உங்களுக்கு கோணலா தெரியுது.

இப்படித்தாங்க இருளும் வெளிச்சமும்னு ஒருத்தர் பேசுனாரு, அய்யா வெளிச்சம் எவ்வளவு இருக்குதுன்னு சொல்லீரலாம், ஆனா இருள் எவ்வளவு இருக்குதுன்னு சொல்ல முடியுமா, ஏன்னா இருள் என்னைக்குமே இருக்கறது, வெளிச்சம்தான் கொஞ்சங் கொஞ்சமா உருவாகி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு போகுது, ஆக, வெளிச்சம்னு ஒண்ணை சொல்லணும்னா, இருளின் இல்லாமைதான் வெளிச்சம்னு சொல்லலாமா???

அப்புறம் நல்லவன் கெட்டவன்னு சொல்றாங்க, எவன் நல்லவனோ அவன் முழுசா நல்லவனான்னு எப்படி சொல்றது, அதாவது ஒரு கெட்டவனப் போல இல்லாததுனால அவன் நல்லவனா தெரியறான், ஆனா நல்லவன்னா இன்னான்னா, யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க, ஆனா, இதுலயும் பாருங்க, ஒரு கெட்டவனப் போல அவன் இல்லாததால அவன் நல்லவனா, இல்ல நிஜமாவே நல்லவனா இருக்குறதுனால அவன் நல்லவனா?????

இதெல்லாம் எதுக்கு சொல்ல வர்றேண்ணா, அதாவது உலகத்துல, அதாங்க நாம வாழற பிரபஞ்சத்துல, தினமும் பாருங்க, அதுக்காக எங்கன்னு திரும்பி பாக்காதீங்க, நேராவே பாருங்க, ஆங், என்ன சொன்னேன், இதை எதுக்கு சொல்றேண்ணா, அதாவது…………………………………….

அட விடுங்க சாமி, போய் புள்ள குட்டிகளோட தீபாவளி கொண்டாடறதப் பாருங்க, நாந்தான் எதோ எழுதிகிட்டே போறேன்னா, நீங்களும் சும்மா வெட்டியா உக்காந்து இதையெல்லாம் படிச்சுகிட்டு……………..

தீபாவளி வாழ்த்துக்கள்.