Tuesday, September 8, 2009

பூஜைக்கேத்த பூ இது!!!!!!!!!!



ஊன்று கோலுடன் நடக்கும் பத்து வயது கலைச் செல்வி, அவள் நடக்கும் பொழுது சூம்பிப் போன வலது கால் காற்றில் ஆடியது. இரண்டு கண் இமையும் ஒரு பள்ளத்தை மூடியிருக்க, கைகளை விரித்தபடி மெதுவாக அடியெடுத்து வைக்கும் தென்னரசு, இரண்டு கையுமில்லாததால் சட்டையில் தைக்கப்பட்ட கைகள் காற்றில் ஆடியபடி இன்னொரு பையன், சாடையில் பேசும் மகேஸ்வரி, துருத்திய பற்களின் நடுவே நீண்டிருந்த நாக்கை சுழற்றி வழியும் எச்சையை உள்ளுக்கிளுக்கும் முஸ்தஃபா, இப்படி திரும்பிய பக்கமெல்லாம் ஊனம், இயற்கை இவர்கள் வாழ்வில் எழுதிய சோக வரலாற்றின் கோர தாண்டவம்.

இவர்களிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்ற குழப்பத்தில் மூவரும் அமர்ந்திருக்க சுரேஷ் தான் அமைதியை கலைத்தான். “பாப்பா, இங்க வா, உன் பேரென்ன?” என்று கேட்டதும் அங்கிருந்த பதினைந்து குழந்தைகளும் அவர்களின் தயக்கத்தை உதறிவிட்டு, ஒரு வேகத்துடன் வந்து இவர்களிடம் ஒட்டிக் கொண்டனர். “அண்ணா, உங்க பேரென்ன?” “இடு எண்ன, உங்க கலுதில டொங்கறது?” என அதிசயத்துடன் ஒரு குழந்தை அடையாள அட்டையை இழுக்க, “அண்ணா, நீங்க பெரிய ஆபீஸரா?” என கலைச் செல்வி கேட்டாள். குழந்தைகள் சகஜமாக பேச ஆரம்பித்ததும் அவர்களின் குறைகள் மறைய ஆரம்பித்து அவர்களுடன் விளையாட ஆரம்பித்தார்கள். எங்கும் சிரிப்பு, மனது நிறைய சந்தோஷம், அவர்களுக்கென வாங்கி வந்த சாக்லெட்டெல்லாம் கொடுத்து, மதியம் வரை அவர்கள் தோளில் ஏறியதையும் தொடையில் அமர்ந்ததையும் முழுதுமாக அனுபவித்து விட்டு, கேட்டரிங் சர்வீஸில் சொல்லியிருந்த சாப்பாடு வந்ததும் அவர்களுக்கு ஊட்டி விட்டார்கள். கொஞ்சம் சாப்பிட்டார்கள். அவர்களிடம் இருந்து விடைபெற்று வரும் பொழுது கையில் கொடுத்த செக்கை வாங்கிக் கொண்ட அந்த காப்பக கண்காளிப்பாளர் நிர்மலா ஒரு நன்றியுடைய புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார்.

கடற்கரையில் அமர்ந்திருக்கும் பொழுது மனது மிகவும் லேசானதைப் போல் உணர்ந்தார்கள். எதையோ சாதித்ததைப் போன்ற பெருமிதம் மனதில் நிறைந்திருந்தது.

“மாப்ள, இனிமே ஒவ்வொரு சண்டேயும் அங்க போரம்டா” என பீட்டர் கூற “ஆமாண்டா” என்றான் கதிர்.

அப்புறம் வாரா வாரம் அங்கு போக ஆரம்பித்ததும், கல்யாணம் செய்தால் ஒரு ஊனமுள்ள பெண்ணைத்தான் கல்யாணம் செய்வது என்று முடிவெடுத்ததும், அப்படியே மூன்று வருடங்களுக்கு முன் கண்ணில்லாத வளர்மதியை சுரேஷ் கல்யாணம் செய்ததுயும், வாய் பேச முடியாத மீனாவை கதிர் கல்யாணம் செய்ததும் இதோ இப்போது நடந்தது போல் இருக்கிறது. இன்று பீட்டருக்கு கல்யாணம்,

சுரேஷ்.வளர்மதியை கையைப் பிடித்து அழைத்து வந்து சர்ச்சின் முதல் வரிசையில் அமர வைத்து விட்டு, குழந்தையை அவள் கையில் கொடுத்து விட்டு கதிருக்காக காத்திருந்தான். சிலுவையில் தொங்கிய இயேசு கிறிஸ்துவின் சிலைக்கு கீழே கம்பங்களைப் போல் எழுந்திருந்த மெழுகு வர்த்திகளை வெள்ளை உடையணிந்த பாதிரி ஒருவர் வந்து கொளுத்தி வைத்து விட்டு, வந்திருக்கும் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு மறைந்து போனார்.

பீட்டர் நீல கலர் கோட் அணிந்து மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்தான். பாடகர் குழுவினர் வந்து இசைக் கருவிகளை தட்டி சரி பார்க்க, இனி திருமணம் ஆரம்பிக்கிறது என்பது தெரிந்தும், கதிர் வராததால் சுரேஷ் பொறுமையிழந்து வாசலை பார்த்த படியே இருந்தான்.

“பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே உங்களுக்கு சந்தோஷமும் சமாதானமும் உண்டாவதாக. ஆமென்” என்ற குரலை கேட்டு முன்புறம் திரும்பினான். திருமணம் ஆரம்பித்திருந்தது, இன்னமும் இந்த கதிரையும் காணவில்லை, கல்யாண பெண்ணையும் காணவில்லை. கல்யாண பெண் எப்படி இருக்காங்கடா என்று போனில் கேட்டதுக்கு, “நீங்களே வந்து பார்த்துக்குங்க, அது வரைக்கும் சஸ்பென்ஸ்” என்று பீட்டர் போனில் சொல்லியிருந்தான்.

“நாமெல்லாரும் எழுந்திருந்து நமது கையிலிருக்கும் பாட்டுத்தாளில் உள்ள முதல் பாடலான ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே எனற பாடலை பாடுவோம், அது சமயம் மண மகள் நம்மத்தியிலே வருவார்” என பாதிரி சொல்ல, மொத்த கூட்டமும் எழுந்து நிற்க இசைக்குழுவினர் பாட ஆரம்பித்தனர். மணப்பெண் வரும் பரபரப்பு வாசலில் தெரிந்தது. சுரேஷ் முழுவதும் திரும்பி மணப்பெண்ணை கண்கொட்டாமல் பார்த்தான். நல்ல சிவப்பாயில்லவிட்டாலும் எடுப்பான நிறம், இடது கையில் மணப்பெண்ணுக்குரிய மலர்கொத்தை பிடித்திருந்தாள். வலக்கையில் சுற்றி மடக்கிய கைக்குட்டை, பியூட்டி பார்லரில் அலங்கரிக்கப்பட்ட முகம், வசீகரிக்கும் கண்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் பழுதில்லாத கண்கள், இரண்டு கால்களும் சரியாக இருக்க நெற்றியில் இருந்து வழிந்தோடிய மெல்லிய வெள்ளை வலைத்துணி பின்னால் புரள, ரோஸ்கலர் பட்டுப் புடவையில் கம்பீரமாக வந்து கொண்டிருந்தாள் மணப்பெண். சுரேஷுக்குள் ஒரு சின்ன ஏமாற்றமும் குழப்பமும் வந்து வந்து போனது. பீட்டர் மாறி விட்டனோ, அல்லது கதிரைப்போல் வாய் பேசாத…..

“ஜெமிமா ராணியாகிய நீ, உன் அருகிலிருக்கும் சார்லஸ் பீட்டரை உன் வாழ்கைத் துணையாக ஏற்றுக் கொண்டு, இன்பத்திலும், துன்பத்திலும், வாழ்விலும், தாழ்விலும், மரணம் உங்களை பிரிக்கும் வரைக்கும் இவருக்கு மனைவியாயிருக்க, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும், இங்கு கூடியிருக்கும் அனைவரின் முன்னிலையிலும் வாக்கு கொடுக்கிறாயா?” என்று பாதிரியார் கேட்டதற்கு “வாக்குக் கொடுக்கிறேன்” என்று கணீரென பதில் சொன்ன ஜெமிமாவின் குரலை கேட்டதும் சே இப்படி மாறிப் போயிட்டானே, பேசாம எழுந்து போய்விடலாமா என சுரேஷ் கொதித்துக் கொண்டிருந்தான்.

தோளில் யாரோ தட்டவே, திரும்பினால் கதிர். “சாரிடா, டிராஃபிக்ல மாட்டிட்டோம்” என்று முன்னால் நடக்கும் திருமணத்தை பார்த்துக் கொண்டே சிரித்தான். அவங்க எங்கடா என கிசுகிசுப்பாய் கேட்க, அதோ என கண்ணாலேயே காண்பித்தான். சிநேகமாய் மீனா கைகளை குவித்து வாய் நிறைய புன்னகையுடன் வணக்கம் சொன்னாள். பதிலுக்கு வணக்கம் சொல்லும்போதுதான் கவனித்தான், என்னதான் பட்டு புடவையின் முந்தானையை இழுத்து தோள் வழியே போர்த்த முயற்சித்தாலும், மேடிட்டிருந்த வயிறு விஷேசம் என்று சொன்னது. அவன் பார்வை போன இடத்தை பார்த்த கதிர் சிரிக்க, விஷேசமா என புருவத்தை குவித்து கண்களாலேயே கேட்க, வெட்கத்துடன் கதிர் ஆமாம் என தலையசைத்தான். அவனை தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டு முன்னால் பார்க்க, மணமக்கள் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார்கள். மீனா வந்து, சுரேஷின் தோளை தட்டி, குழந்தை எங்கே என சைகையில் கேட்க, வளர்மதி அமர்ந்திருந்த இடத்தை கையால் காட்டினான். மீனா எழுந்து போய் அவள் அருகில் அமர்ந்து குழந்தையை தூக்க முயல, கைகளை தட்டி விட்டு குழந்தையை இறுக பற்றினாள் வளர்மதி. சுரேஷ் ஓடிவந்து மீனா என காதில் சொல்லவும், சிரித்துக் கொண்டே குழந்தையை நீட்டினாள். அவங்க விஷேசமா இருக்காங்க என்று காதில் சொன்னதும் முகம் முழுவதும் சந்தோஷத்துடன் மீனாவின் பக்கம் திரும்பி தடவி தடவி கரங்களை தேடி பற்றினாள்.

“தேவன் இணைத்த இவர்களை எந்த மனிதனும் பிரிக்காதிருப்பானாக, ஆமென்” என கடைசியாக பாதிரியார் ஆசீர்வதித்ததும், மணமக்கள் வெளியே வந்ததும், புல்வெளியில் இட்டிருந்த மேடையில் வரவேற்பு வைபவம் ஆரம்பமானது. எல்லோரும் சிரித்துக் கொண்டே வீடியோவுக்கு போஸ் கொடுத்து விட்டு போய் மிச்சம் ஒரு சிலரே இருந்த நேரத்தில், கடைசியாக பீட்டர் ஜெமிமாவை அழைத்துக் கொண்டு இவர்கள் இருவரிடமும் வந்தான். நண்பர்கள் இருவருக்கும் புது மனைவியை அறிமுகப் படுத்திவிட்டு அவர்களின் மனைவிகளையும் அறிமுகப் படுத்தினான். இருவர் முகத்திலும் இருந்த வெறுப்பை கண்டு கொள்ளாதவனாக, மீனாவிடத்தில் போய் அவளது வயிறை காட்டி, சிரித்துக் கொண்டே கை குலுக்கினான். வெட்கத்துடன் மீனாவும் கைகுலுக்க, பையனா, பொண்ணா என சைகையில் கேட்டு கலாய்த்தான்.

பிறகு நண்பர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்து கொஞ்சம் தள்ளி அழைத்து வந்து, “தெரியும் நீங்க ரெண்டு பேரும் என்ன நினைக்கறீங்கன்னு தெரியும், ஒரு குறையும் இல்லாத ஒரு பொண்ணா ஜெமிமா இருக்காளேன்னு பாக்கறீங்களா, நான் நம்ம மூணு பேரும் எடுத்துகிட்ட உறுதி மொழிய மீறிட்டேன்னு நினைக்கறீங்களா”, ஒரு புன்னகை முகத்தில் தவழ சொன்னான் “வளர்மதினால பார்க்க முடியாது, மீனானால பேசவோ கேட்கவோ முடியாது, ஜெமிமானால எல்லாம் முடியும், ஆனா ...................”
பீட்டர் சொல்லச் சொல்ல நண்பர்கள் இருவரும் அவனை கட்டி அணைப்பதைப் பார்த்து ஜெமிமா தலைகுனிய, மீனா புரியாமல் பார்த்தாள். வளர்மதி கையிலிருந்த குழந்தை சிரித்தது.

18 comments:

Raju said...

படிச்சு முடிச்சதும் ஒரு பெருமூச்சு வர்றத தவிர்க்க முடியல தலைவரே...!
சூப்பர்.

கார்க்கிபவா said...

ம்ம்..

ராஜு சொலவது சரிதான்

ARV Loshan said...

மனதைக் கலங்க வைத்து விட்டீர்கள்.. கதையினுள்ளே வாழ்ந்து திரும்பியது போல இருக்கு.

பரிசல்காரன் said...

உள்ள இழுக்குது தல நடை! நல்லா இருக்கு!

தராசு said...

ராஜூ,

நன்றிப்பா.

தராசு said...

கார்க்கி,

டேங்சு தல

தராசு said...

Loshan,

நன்றி.

தராசு said...

பரிசலண்ணே,

டேங்சு.

க.பாலாசி said...

கதை முழுதும் அருமை...நல்ல நடை...ஒரு சஸ்பென்ஸ்...இப்படி நிறைய....

முடிவு அருமை....யூகிக்க முடியாத முடிவு...

நல்லாருக்கு அன்பரே....

தராசு said...

வாங்க பாலாஜி,

நன்றி.

நாஞ்சில் நாதம் said...

கடைசில ரெண்டு மூணு அர்த்தம் வருகிற மாதிரி இருக்கு. படிக்கிறவர்கள் அவரக்கு தகுந்த முடிவு எடுக்க வேண்டும் போல விட்டுட்டீங்களா?

சூப்பர்.

தராசு said...

வாங்க நாஞ்சில்,

நீங்க சொல்றதும் சரிதான், ஆனால் முடிவு தெளிவா இருக்கற மாதிரி தான் இருக்கு, கடைசி வரிய வாசியுங்க.

வந்ததுக்கு நன்றி.

Thamira said...

குளோஸ் பிரெண்ட்ஸ்னா முன்னாடியே பிரக்னன்ஸி பற்றியோ, மணப்பெண்னைப்பற்றியோ பேசிக்கொண்டிருக்கமாட்டார்களோ? அடப்போங்க.. கதையோட ஒன்றமுடியலை.

தராசு said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
குளோஸ் பிரெண்ட்ஸ்னா முன்னாடியே பிரக்னன்ஸி பற்றியோ, மணப்பெண்னைப்பற்றியோ பேசிக்கொண்டிருக்கமாட்டார்களோ? அடப்போங்க.. கதையோட ஒன்றமுடியலை.//

நன்றி தல, நீங்க சொல்றதும் ஒரு கோணத்துல சரியாத்தான் தோணுது.அடுத்த தரம் சரியா ஹோம் வொர்க் பண்ணீட்டு வர்றேன்.

இது நம்ம ஆளு said...

அருமை :)

தீப்பெட்டி said...

நல்ல கதை..

தராசு said...

இது நம்ம ஆளு said...

வந்ததுக்கு நன்றி.

தராசு said...

தீப்பெட்டி said...

வாங்க நண்பரே, நன்றி.