நகரம் - புவனேஷ்வர் - கோவில்களின் நகரம்.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில், 2000 வருடங்களுக்கு மேலாக இருக்கும் பழம்பெரும் நகரம். கிழக்குப் பகுதியின் தங்க முக்கோணம் என்று சொல்லப்படும் ஜெகநாதர் எழுந்தருளியுள்ள பூரி நகரமும், சூரிய தேவன் தேரில் ஏறி காட்சி தரும் கோனார்க் நகரமும், லிங்க ராஜ் ஆலயத்தில் சிவனும் விஷ்ணுவும் அருகருகே காட்சி தரும் புவனேஷ்வர் நகரமும் கலிங்கத்து கட்டிடக் கலைக்கு ஒரு உயர்ந்த சாட்சிகள்.
கலிங்க வம்சத்தில் வந்த கரவேல மன்னன் தான் இந்த பேரரசை நிர்மாணித்து, மாதம் மும்மாரி பொழிந்து, எல்லைகள் விஸ்தரிக்கப்பட்டு, செழித்து, தழைத்து, வளர்ந்து, நிமிர்ந்து, கொழித்து என ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார் இந்த கரவேலன். வடக்கே கங்கையிலிருந்து தெற்கே காவிரி வரை தன் எல்லையை விஸ்தீரணம் செய்த இந்த மாமன்னன், சும்மா சங்கம் வைத்து தமிழ் வளர்த்துக் கொண்டிருந்த பாண்டிய மன்னனையும் வம்புக்கிழுத்திருக்கிறார். மௌரிய வம்சத்து பேரரசரான அசோகருடன் நடந்த கலிங்கத்துப் போர் வரை இந்த கலிங்க மன்னன் கலக்கியிருக்கிறான். ஆனால் இந்த மாமன்னன் வாழ்ந்த காலத்தை கேட்கப் போனால், எல்லா வரலாற்று ஆசிரியர்களும், சும்மா காற்றில் கையை ஆட்டுகிறார்களே தவிர, இதுதான் என்று யாரும் சொலவதில்லை. ஒரு சிலர், கிறிஸ்துவுக்கு முந்தைய முதலாம் நூற்றாண்டு எனவும், சிலர் கிறிஸ்துவுக்கு பிந்தைய முதலாம் நூற்றாண்டு எனவும் குழப்புகிறார்கள். கலிங்கத்து வரலாற்றில் பழம்தின்னு கொட்டை போட்ட ஆர்.பி. மகாபத்ரா என்ற சரித்திர ஆய்வாளர் கூட ஆள விடுங்கடா சாமி என்கிறார். எது எப்படியோ, கற்குவியல்களை சிற்பங்களாய் மாற்றி இன்றும் நமது கண்ணுக்கு விருந்தாய் வைத்தவர்கள் இந்த கலிங்கர்கள்.
புவனேஷ்வர் நகரத்தில் உள்ள லிங்க ராஜ் ஆலயத்தில், சிவனும் விஷ்ணுவும் ஆளுக்கு ஒரு பாகத்தில் காட்சி தருகிறார்கள். முக்கிய ஆலயம், யக்ஞ சாலை, போக மண்டபம், நாட்டிய சாலை என நான்கு பிரிவுகளாய் பிரிந்திருக்கும் இந்த கோவிலில், கற்களை இத்தனை நுட்பமாக குடைவதற்கு எத்தனை வகை உளிகளை உபயோகித்தார்களோ தெரியவில்லை. எங்கும் சிற்பங்கள், நுண்ணிய வேலைப்பாடுகள் என பிரமிக்க வைக்கிறார்கள்.
புதிய புவனேஷ்வர நகரம் ஓட்டோ கொனிக்ஸ்பெர்கர் என்ற ஜெர்மானிய நகர வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் துணை நகரங்கள் தோன்ற ஆரம்பித்த உடனேயே இது மற்ற இந்திய நகரங்களைப் போலவே மாறி விட்டது. ஆனால் பசுமையை இன்னும் பாதுகாத்து வரும் புவனேஷ்வரர்கள் போற்றத்தகுந்தவர்களே. கற்கள் பேசும் கதைகள் கேட்க ஒரு முறையேனும் இந்த தங்க முக்கோணத்தில் மூழ்கி விட்டு வாருங்கள்.
நாட்டு நடப்புகள் - கலியுக மனு நீதிச் சோழன் - பரூக் அப்துல்லா.
2006 ம் ஆண்டில் தீவிரவாதிகள் காஷ்மீரில் வைக்கும் வெடி குண்டுகளை விட ஒரு பெரிய வெடி குண்டு வெடித்தது. ஆனால் இந்த குண்டில் அகப்பட்டது திருவாளர் பொது ஜனம் அல்ல. சிவப்பு விளக்கு காரில் பவனி வரும் மாண்பு மிகுக்கள், உயிரையும் துச்சமாக மதித்து எல்லையில் காவல் புரியும் வீர தீர எல்லைக் காவல் படை பிரிவின் தலைமை அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், வியாபார காந்தங்கள் என இதன் தொடர் நீண்டு கொண்டே போகிறது. மத்திய புலனாய்வுத்துறை களத்தில் குதித்திருக்கிறது.
சபீனா என்ற ஒரு புதுமைப்பெண் வறுமையில் இருக்கும் ஏழை சிறுமிகளை இந்த அதிகார வர்க்கத்தின் காமப் பசிக்கு இரையாக்கி பணம் சம்பாதித்திருக்கிறார். ஒரு சில சிறுமிகளை வைத்து தொழிலை ஆரம்பித்த சபீனாவுக்கு இந்த தொழிலில் இருக்கும் சுலபப்பணமும், வியாபார காந்தங்கள், அரசியல் வாதிகள், அரசாங்க உயர் பதவியினரின் நெருக்கம் என ஒரு முடிவில்லா சாம்ராஜ்யக் கனவே தோன்றியிருக்கிறது. அவர் சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி அதை வீடியோ படமெடுத்து, அதை வைத்து மிரட்டி மிரட்டியே மேலும் மேலும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறுமிகளை விருந்தாக்கியிருக்கிறார். இந்த தொழிலில் இருக்கும் சுலபப்பணத்தை கண்டு கொண்ட கேமராமேன்கள் ரியாஸ் லங்கூவும், நஸீரும், சபீனா அக்கா ஒரு சிடி கேட்டால் இரண்டாக பிரிண்ட் எடுத்து ஒன்றை அக்காவுக்கும் மற்றொன்றை மார்க்கெட்டில் நல்ல விலைக்கும் விற்று காசு பார்த்திருக்கிறார்கள். நாளடைவில் ஸ்ரீநகரின் முக்கிய கடைகளில் கூட இத்தகைய சி.டி.க்கள் குறைந்த விலையில் சிறந்த முறையில் கிடைக்க, அரசல் புரசலாக விஷயம் வெளியே கசிந்திருக்கிறது. இந்த சி.டி.க்களை வாங்கி கமுக்கமாக பார்த்து அனுபவிக்கலாம் என கிளம்பிய ஒரு கும்பலுக்கு, அதில் தனது ரத்த சம்பந்தங்களே வேறொரு ஆடவன் முன் நிர்வாணமாகி, அவனது காமப்பசிக்கு இரையாவது படமாக்கப்பட்டிருப்பது தெரிந்ததும் வெகுண்டு போயிருக்கிறார்கள். உடனே ஸ்ரீநகரின் மையப் பகுதியிலுள்ள ஷஹீத் கஞ்ச் காவல் நிலையத்தில் இரண்டு சி.டி.க்களை ஆதாரமாகக் கொண்டு முதல் புகார் செய்யப் பட்டிருக்கிறது. அங்கிருந்து நூல் பிடித்த போலீஸ், விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து மூர்ச்சையானது தான் மிச்சம். 43 சிறுமிகள் பாழ்படுத்தப் பட்டிருப்பதும், இதன் தொடர்பு சட்டசபை உறுப்பினர்களையும் விட்டு வைக்காததையும் கண்டு, விஷயம் மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பேதமேதுமில்லாமல் எல்லோரும் சம்பந்தப் பட்டிருப்பதால், அவரவர் சவுகரியத்துக்கு சேற்றை வாரி வீசிக் கொண்டனர். இதெல்லாம் நடந்து முடிந்தது 2006 ஆம் ஆண்டில்.
பிறகு, சூரியன் மறைந்து, மறுபடி உதித்து, மழை பெய்து, வெயிலடித்து என காலங்கள் மாறிக் கொண்டே போனதே ஒழிய குற்றவாளிகள் யாருக்கும் ஒரு இம்மியளவுக்கு கூட எந்த தீங்கும் ஏற்படவில்லை. அவர்கள் தைரியமாக இன்னொரு அக்காவை தேடிக் கொண்டார்கள் போலிருக்கிறது. விஷயம் இப்படியிருக்க, கடந்த திங்கள் கிழமை சட்ட சபையில் காஷ்மீரத்து பெண்சிங்கமான மஹபூபா சயீத், சபாநாயகரின் மைக்கை உடைத்தெறிந்து ரகளை செய்து, இந்த பிரச்சனையில் எண்ணை ஊற்றினார். செவ்வாய்கிழமை மஹபூபா சயீத்தின் கட்சிக்காரரான முஸாபர் உசைன் பேக் என்பவர் மத்திய புலனாய்வுத்துறை சமர்ப்பித்த அறிக்கையின்படி, தற்போதைய முதலமைச்சரான ஓமர் அப்துல்லாவுக்கும் கூட இந்த சிறுமிகள் பிரச்சனையில் தொடர்பு இருக்கிறது என ஒரு குண்டை தூக்கிபோட, உணர்ச்சி வசப்பட்ட ஓமர் அப்துல்லா உடனடியாக தான் பதவி விலகுவதாக அறிவித்து கடிதத்தையும் உடனே கவர்னரிடம் கொடுத்து விட, ஊடகங்களுக்கு ஒரு அருமையான தீனி கிடைத்து விட்டது.
உடனே NDTV ன் காஷ்மீரத்து விவகாரங்களுக்கான நாட்டாமை மனுஷி பர்க்கா தத் தனது பரி வாரங்களுடன் பரூக் அப்துல்லாவையும், முஸாபர் உசைன் பேக்கையும் மோத விட்டு வேடிக்கை காட்டினார். பதவி விலகுவதாக அதிரடியாக அறிவித்த ஓமர் அப்துல்லாவின் தகப்பன் பரூக் அப்துல்லா தான் மனுநீதிச் சோழன் ரேஞ்சுக்கு சவால் விட்டார். "எனது மகன் குற்றவாளி என நீரூபிக்கப் பட்டால், அவனை சட்டம் தண்டிக்கத் தேவையில்லை, நானே தூக்கிலிடுகிறேன்" என ஆவேசத்துடன் கூவினார். இப்படி மோத விட்டு விஷயத்தை சிறுமிகளின் வேதனை, பெரிய மனிதர்களின் சமூகக் குற்றம், அரசாங்க அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் போன்ற கோணங்களிலிருந்து முழுவதுமாய் திசை திருப்பி இதை ஆளும் கட்சி, எதிர்கட்சி பிரச்சனையாக்கி அரசியல் முலாம் பூசி விட்டதன் முழு பெருமையையும் பர்க்கா தத் போன்ற நாட்டாமை அம்மணிகள் தேடிக் கொண்டனர். ஊடகங்கள்?????!!!!!!! மறுபடியும் ஜெய் ஹோ !!!!!!!!!!!!!!!!
ஐயா, நீங்க தூக்கு மாட்டிட்டு சாகுங்க, ஆனா மலர வேண்டிய மொட்டுகளை, வேரோட சாய்க்கற அந்த பாவிகளையும் தூக்குல போட்டுட்டு சாகுங்கைய்யா, உங்களுக்கு புண்ணியமாப் போகும்.
ங்கொய்யால பக்கங்கள்
மீசை அரும்புனவுடனே லுக் வுட்டா
முளைச்சு மூணு எல உடலே
அதுக்குள்ள திமிரப் பாருங்கறீங்க,
காலேஜ் வயசுல லுக் வுட்டா
படிக்கற வயசுல திமரப் பாருங்கறீங்க,
வேலைக்கு போய், ஆபீஸ்ல லுக் வுட்டா
இன்னும் ஆபீஸ்ல காலே வெக்கல
அதுக்குள்ள திமிரப் பாரூங்கறீங்க,
கல்யாண வயசுல லுக் வுட்டா
பொறுப்பா வேலையப் பாக்கறத வுட்டுட்டு
அலையுது பாருங்கறீங்க
கல்யாணம் பண்ணீட்டு லுக் வுட்டா,
கல்யாணம் ஆகியும் அடங்குதா பாருங்கறீங்க
குழந்தை பெத்துகிட்டு லுக் வுட்டா
முடி நரைக்கர வயசாகியும்
திமிரு அடங்குதா பாருங்கறீங்க,
குழந்தைக பெருசானதுக்கப்புறம் லுக் வுட்டா
கட்டைல போற வயசாச்சு,
திமிர் அடங்குதானு பாருங்கன்றீங்க
இப்படியே போனா ங்கொய்யால
நாங்க எப்பத்தாண்டா
ஃபிகர்கள லுக் வுடறது.