Tuesday, June 15, 2010

செவலக் காளை

பொழியில மொளை அடிச்சுக் கட்டியிருந்த கவுத்த அவுத்துகிட்டு, அடுத்த வயல்ல மேயப் போன செவலக் காளய பாத்து,

ஹோய், த்தா, த்தா, ஊச், போ அந்தள்ளைல என தூரத்துல நின்னே அதட்டுனா தாயம்மா கெளவி, அப்படியும் கேக்காம பக்கத்துக் காட்டுல வெளஞ்சிருந்த தட்டப் பயத்துச் செடிய மேயப் போனதும், வந்த கோவத்துல கையிலிருந்த அருவாளை வீசியூட்டா பாருங்க, அது காத்துல எதோ சங்குச் சக்கரம் சுத்தறாப்புல சுத்தீட்டு வந்து சரியா பின்னந்தொடைக்கு மேல ஒரு கீறு கீறீட்டு கீழ உளுந்துது. மாட்டுத் தோல் கிளிஞ்சு பொல பொலன்னு ரத்தம் வரவும், மாடு மிரண்டு போய் திரும்பி வந்து பொழி மேல நின்னுட்டு ரத்தம் வந்த இடத்துல வாலை சொழட்டி சொழட்டி அடிச்சுது. வால் மசுறுலெல்லாம் ரத்தம் பட ஆரம்பிச்சுது. தாயம்மா ஓடி வந்து, சனியனே, இங்க இத்தனை இருக்குதே இதைத் திண்ணேன், அடுத்தவிய வெள்ளாமைல போய் ஏன் வாய வெக்கறேன்னு திட்டி கிட்டே, மண்ணை எடுத்து காயத்துமேல அப்பியுட்டா, கொஞ்ச நேரத்துல ரத்தம் வர்றது நின்னு போச்சு, தாயம்மாளுக்கும் கொஞ்சம் மனசு நெகுந்தாப்புல இருந்துச்சு, பாவம் வாயில்லா சீவனுக்கு என்ன தெரியும், இப்புடி பண்ணிப் போட்டமேன்னு, மாட்டை கொஞ்சம் தடவிக்குடுத்தா, வெட்டுப்பட்ட காயம் தந்த வலி, தாயம்மாளோட இதமான தடவல்னு மாட்டுக்கு ஒண்ணும் புரியாம தலையை சிலுப்பீட்டு பொழி மேலயா நின்னுச்சு. மொளைல கட்டீருந்த கவுத்த அவுத்துட்டு மாட்டைக் கூட்டி வந்து சாளையோரமா இருந்த தென்னை மரத்துல கட்டி ,அதுக்கு தண்ணி வெச்சுட்டு, சாளைல இருந்த கயித்துக் கட்டல்ல உக்கார்ந்து, தான் செஞ்சத நினைச்சு வருத்தப் பட்டுகிட்டா, சுத்திக் கட்டீருந்த முந்தானையை அவுத்து வேர்வையை தொடச்சுகிட்டே செவலக் காளையவே பாத்துகிட்டு சித்த நேரம் உக்கார்ந்திருந்தா.

தாயம்மா—

அந்த கந்தம் பாளையத்துக்கு அவ கல்யாணமாயி வந்த நாள்ல இருந்து அவளை எல்லாரும் தாயம்மான்னு தான் கூப்புடறாங்க. அவிய அப்பனாத்தா வெச்ச கொழந்தைம்மாங்கற பேரு யாருக்குமே வாயில வர்றதில்லை. செங்கோட கவுண்டரு தாலி கட்டி கூட்டியாந்த நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் தாயம்மா சீரும் செனத்தியுமாத்தான் வாழறா. செங்கோட கவுண்டருக்கு பாகத்துல வந்த எட்டு ஏக்கர் நெலம், அவுருக்கு வாழ்க்கைப் பட்டதுக்கு மூணு பொம்பளைப் புள்ளயும் ஒரு ஆம்பளையுமா நாலு கொழந்தைகன்னு நல்லாத்தான் போயிட்டிருந்தது.

கோடாலிக் கொண்டையும், கழுத்துல தொங்கற அட்டியும், அரை வெரல் மொந்தத்துல தாலிக் கொடியும் போட்டுட்டு, பின்னால கொசுவம் வெச்சு கட்டுன சீலையோட முந்தானைய சும்மாடு கட்டி, தலைல வெச்சு அதுல ஈர்க்கூடைல சாப்பாட்டுப் பாத்திரமும் வெச்சு தாயம்மா செங்கோட கவுண்டருக்கு சாப்பாடு கொண்டு போறதை பாக்கறதுக்கு ஊர்வழித் தோட்டத்தோரமா ஊர்ச்சனமே கூடி நிக்கும். இல்லைன்னு வந்த ஒருத்தரையும் வெறுங்கையோட அனுப்பவே மாட்டா, ஒரு வள்ளம் அரிசின்னாலும், ஒரு வேளை சோறுன்னாலும் அவிய போதும்னு சொல்ற வரைக்கும் குடுத்துத்தான் அனுப்புவா, தோட்டத்துல வேலை செய்யற கூலிக்காரங்க ஏழை பாழைக வீட்டுல விஷேஷம்னா எதோ இவிய ஊட்டு விசேஷமாட்ட அத்தனையும் செய்வா தாயம்மா. நெல்லு நாத்து நடவுக்கு சீலைய தூக்கி கட்டீட்டு சேத்துல இறங்குனா, மளமளன்னு நட்டுகிட்டே வருவா, நாலாளு வேலைய ஒரே ஆளா செஞ்சுபோட்டு சளைக்காம நடப்பா.

மொதல்ல பொறந்தவ கனகா, சாலைத்தோட்டத்து முருகையனுக்கு கட்டிக் குடுத்துறுக்குது. ரெண்டாவதா லட்சுமி, மிசுனுதறிக் கவுண்டர் பையனுக்கு குடுத்துது. மூணாவதா மரகதம், பழனிக் கவுண்டர் பையனுக்கு குடுத்தது. நாலாவதா பொறந்தவந்தான் தங்கவேலு. மகனுக்கு சீமையெல்லாம் பொண்ணு பாத்து கடைசியில பக்கத்தூரு வாரப்பட்டியிலயே பொண்ணெடுத்தாச்சு. மருமகளும் ஒரு யோக லட்சுமிதான். பொறுப்பா இருந்து பண்ணயம் பாத்து பழகீட்டா, அவுளுக்கு பொறந்தது ஒரு பையனும் புள்ளயும். புள்ள பெரீவளாயிட்டு, பன்னெண்டாவது படிக்கறா, பையன் இப்பத்தான் பத்தாவது படிக்கறான்.

நாளும் பொழுதுமா செங்கோட கவுண்டரும் போயிட்டாரு, தங்கவேலனுக்கு சீக்கு வந்து அவுனும் அவுங்கப்பன் போன எடத்துக்கே போயிட்டான். மாமியாரும் மருமகளும் வெள்ளைச் சேல கட்டீட்டு ஒரே ஊட்லதான் இருக்கறாங்க.

மாட்டுக்கு ரெண்டு கை வைக்கப்புல்ல அள்ளிப் போட்டுட்டு, தாயம்மாளும் மாட்டையே பாத்துட்டு உக்காந்துட்டா, ஒருபக்கம் இத்தன கோவம் எதுக்குத்தான் வருதோ கருமம்னு நெனச்சாலும், இன்னொரு பக்கம், ஒருக்கா போட்டாத்தான் இதுக்கெல்லாம் புத்திவரும்னு நெனச்சுகிட்டா. கவுண்டரு இருந்தப்ப அடிக்கடி சொல்வாரு, தாயம்மா, உன்ர மூக்குத்திய கழட்டு, அதுல மூக்கணாங்கவுறு போடறேன். அந்தக் கவுறு இருந்தாத்தேன் உண்ணய கையில புடிக்க முடியும்பாரு.

கவுண்டர் நெனப்பு வந்தொடனயே தாயம்மா கண்ணு லேசா நீர்கட்டுனாப்புல ஆயிருச்சு. எப்புடி இருந்த மனுஷன், மசையன்னா மசையந்தான். தூணு கணக்கா காலும், மைதானமாட்டா நெஞ்சும், வண்டி நொகமாட்ட கையும், கன்னம் நிறைய முறுக்கு மீசை வெச்சுட்டு, ஆளு உருமாலை கட்டீட்டு வந்தாருன்னா, காத்து கூட கொஞ்சம் தள்ளி நின்னுதான் போகும். ஒரு சூது வாது தெரியாது, ஒருத்தருகிட்ட ஒரு வம்பு தும்புக்கு போக மாட்டாரு. எந்நேரமும் தோட்டமுண்டு, தானுண்டுன்னுதான் இருப்பாரு. மனுஷன் ஏர்ப்புடிச்சா அந்தக் கொனைலிருந்து இந்தக் கொனைவரைக்கும் நூலு கட்டுனாப்புல ஒரே கோடாப் போகும். அதென்னமோ, செங்கோட கவுண்டரு சாமி கும்புட்டுட்டு ஒழவு ஓட்டுனாருன்னா, அந்த போகம் சும்மா வெள்ளாமை கிண்ணுன்னு வெளயும். பங்காளிக பசங்கெல்லாம் வந்து, ஒழவு ஓட்டறண்ணைக்கு அவிய தோட்டத்துல இவரத்தான் மொத ஏர் புடிக்கச் சொல்லுவானுக. இவுரும் சித்த நேரம் ஓட்டிக் குடுத்துட்டு, இனி நீங்க ஓட்டுங்கடான்னுட்டு வருவாரு.

கொஞ்ச நாளாவே கவுண்டரு ஒரு போக்காத்தான் போயிகிட்டிருந்தாரு, தாயம்மா கருவாடும், கத்திரிக்காயும் போட்டு கொளம்பு வெச்சா வட்டலைக் கூட சுத்தமா நக்கீட்டு திங்கற ஆளு, இப்பல்லாம் சோத்துக்கு நேரத்துக்கு வர்றதில்லை. வந்தாலும் பேருக்கு இத்தனே திண்ணுட்டு திண்ணைல படுக்கறாரு, எத்தனை சண்டை வந்தாலும் அதெல்லாம் பொழுது சாயற வரைக்குந்தான், ராத்திரிக்கு தாயம்மாளும் கவுண்டரும் தனிய படுத்தது கிடையாது. ஒரு சில நாளைக்கு தக்காளிச் செடிக்கோ, வெண்டைக்காய்க்கோ ராத்திரில தண்ணி உடோணுமின்னாலும், கவுண்டர் ராத்திரி சோத்துக்கப்புறம் போயிட்டு நடு ராத்திரின்னாலும் திரும்பி வந்து ஊட்லதான் தூங்குவாரு, இப்பல்லாம் தோட்டத்து சாளைல தூங்கறாரு. ரெண்டு மாசமா பால் சொசைட்டிலிருந்து பால் காசு வேற வர்ல, ஒரு நாளு தாயம்மா போயி கேட்டதுக்கு அதெல்லாம் கவுண்டர் வாங்கீட்டுப் போயிட்டாருன்னாங்க, கவுண்டர்கிட்ட கேட்டா செலவாயிடுச்சுன்னு சொன்னாரு, தாயம்மாளுக்கு பொறி தட்டீருச்சு. கள்ளுக் குடிக்கற பழக்கமிருக்குதுன்னாலும் அதெல்லாம் சோட்டுக் காரங்களோட, தென்னந்தோப்புலதான் குடிப்பாரு, கடைக்குப் போற வழக்கமில்லை. எங்கியாவது சீட்டாடப் பழகீட்டாரோன்னு தாயம்மாளுக்கு ஒரு கவலை வந்துது.

மாரியாத்தா கோயில்ல நோம்பி சாட்டி, கொடி மரம் கட்டீட்டாங்கோ. ஊரே திருவிழா கோலத்துல முசுவா இருக்குது. இன்னைக்கு ராத்திரி “பவளக் கொடி” நாடகம் போடறதுக்கு டவுனுல இருந்து ஆளுங்கெல்லாம் வந்துட்டாங்கம்மான்னு தங்கவேலான் சொல்லீட்டு ஓட்டமா ஓடறான். பெரிய புள்ள கனகாவும் மாப்பிள்ளயும் நோம்பிக்கி வந்துருக்கறாங்க. அப்ப அவுளுக்கு மட்டுந்தான் கலியாணம் ஆயிருக்குது. சின்னவுளுக ரெண்டு பேரும் அப்பத்தான் தாவணி போடற வயசு. தங்கவேலு ஆறாவது படிக்கறான். மாப்பளைக்கு புது வேட்டி சட்டை வாங்கியாறென்னுட்டு சிவாலிங்க செட்டியாரு கடைக்கு போனவரு ஆள இன்னமும் காணமேன்னு தாயம்மா தவிக்கறா. கனகா மாப்புளயும் கனகாவும், தங்கச்சிகளொட சேந்து நாடகம் பாக்கப் போயிட்டாங்க. தங்கவேலான் அவிய கூட்டுப் பசங்களோட போயிட்டான். தாயம்மா மாத்திரம் தனியா இருந்தா, திடீர்னு ஒரு நெனப்பு வந்து செட்டியார் கடைல போயி கேட்டா, செட்டியாரு சந்தனப் பொட்டு வெச்சுட்டு கடையில இருந்தவரு,

“என்ன தாயம்மா, பெரிய மகளும் மாப்பளயும் நோம்பிக்கு வந்தாங்களாக்கும்”

“ஆமாங்கையா, கவுண்டரு துணி எடுக்கறேன்னுட்டு வந்தாருங்களே”

“மருமகனுக்கு வேட்டி துண்டு எடுத்திருக்காரு, உங்களுக்கும் சீல வாங்கிட்டு அப்பளயே போனாரே”

சரின்னுட்டு வந்தவளுக்கு, மனசுக்குள்ள கருக்குன்னுச்சு, எனக்கு சீல வாங்கறத சொல்லவே இல்லயே, என்ன மனுஷன் இவுருன்னு ரோசன பண்ணீட்டு போகயில, நட்ராசு குறுக்க வந்தான். “என்ன தாயம்மா, கருக்கல்ல எங்க போறீங்க, ஊரே நோம்பி கும்புடுது, நீங்க எங்க இந்நேரத்துல”

“நட்ராசு, பெரீப்பன பாத்தியா”

“ஆமா, துணிக்கடை பைய கக்கத்துல இடுக்கீட்டு, கெழக்க போனாரு, சரி, காலைலயே சாணான் தென்னங்கள்ளு எறக்குனானே, செட்டுக்காரங்கெல்லாம் தென்னந்தோப்புல உக்காந்து இன்னைக்கு ரெண்டு பானையும் முடிச்சுட்டுதான் கோயலுக்கு வருவாங்களோன்னு நெனச்சேன்”

“அப்பிடியா செரி செரி நீ போ”ன்னுட்டு நேரா தோப்புக்கு போனா, அங்க அப்பிடி எதுவும் நடக்கல, அப்புறம் எங்க போனாருன்னுட்டு திலும்பனப்போ, தோட்டத்து சாளைல லேசா ஒரு வெளிச்சம். கதவு தெறந்து மூடுனாப்புல இருந்துது. தாயம்மாளுக்கு அது சரியாப்படுல. மெல்ல சத்தமில்லாம சாளைப் பக்கத்துல போனா, முன்னால வழியா போகாம, கெணத்தைச் சுத்தீட்டு பின்னால வழியா போனா, உள்ள ராந்தலு வெளிச்சம் இருக்கறது கண்ணுக்குத் தெரியுது. பேச்சுச் சத்தம் கேக்குது. கூடவே வளையல் சத்தமும். யாருன்னு பாக்கோணுமின்னு சத்தமில்லாம பின்னால வந்து செவுத்துல பாதி ஒசரத்துக்கு ரெண்டு கூடையப் போட்டு அதுமேல ஏறி, வெட்டுக்கை சந்துல பாத்தா.

கவுண்டரு கயித்துக் கட்டல்ல மல்லாக்க படுத்திருக்க, அவுரு நெஞ்சுமேல பால்கார சிவகாமி ஏடாகூடமா பரவிப் படுத்திருந்தா. பகீர்னுச்சு தாயம்மாளுக்கு, இப்பவே அவீயல ரெண்டு பேர்த்தையும் வகுந்தறலாமான்னு கோவம் வந்துச்சு. சத்தமில்லாம இறங்குனா, மனசுல ஒரு முடிவு எடுத்துட்டு, மறுபடியும் கெணத்தச் சுத்தி வந்து கூடை எங்க இருந்ததோ அங்கயே வெச்சுட்டு இருட்டுல உக்காந்திருந்தா. கொஞ்ச நேரங் கழிச்சு சிவகாமி மாத்திரம் முந்தானையை இழுத்துச் சொருகீட்டு போறதப் பாத்தா, அவ கையில புதுச் சேலை. அப்புறமா கவுண்டரு வந்தாரு…….

பவளக் கொடி நாடகம் படு தமாஷா நடந்துச்சு. பொம்பள வேஷம் போட்டவன் நெஞ்சுல ரெண்டு லப்பர் பந்தை வெச்சுட்டு வந்தான். ஊரே உக்காந்து சிரிக்குது. தாயம்மாளும் வந்து புள்ளைக பக்கத்துல உக்காந்துட்டா. நாடகம் பாக்கற முசுவுல அம்மா வந்ததயே புள்ளைக கவனிக்கல. அத்தன சிரிப்புக்கு நடுவுல திடீர்னு திரும்புன கனகா, தாயம்மாளப் பாத்து எப்பம்மா வந்தேன்னு கேக்க, நானு அப்பவே வந்துட்டேன், நீங்கதான் என்னை கவனிக்கலேன்னு சொன்னா, நாடக தமாஷுல மனசு ஒட்டி இருந்ததாலயும், அங்க மேடைல மட்டுந்தான் வெளிச்சம் இருந்ததாலயும், அந்த கொற வெளிச்சத்துல தாயம்மா மொகம் இறுகிப் போயிருந்ததை கனகா கவனிக்கல.கொஞ்ச நேரத்துல தாயம்மா கனகாகிட்ட, கனகு அய்யாவை பாத்தியான்னு கேட்டா, இல்லம்மா அய்யா எங்கியாவது உக்காந்திருப்பாரு பாருன்னு சொன்னா, அன்னைக்கு பொழுதன்னக்கும் நாடகம் நடந்துச்சி. கோழி கூப்படறதுக்கு சித்த முன்ன எல்லாரும் ஊட்டுக்கு போனாங்க. அப்பவும் கவுண்டரு ஊட்டுக்கு வரல. புள்ளைக எல்லாம் படுத்து தூங்கீட்டாங்க, தாயம்மாளும் தூங்கப் போனா, ஆனா மனசுக்குள்ள அந்த நெனப்பே வந்து தூக்கத்தை தொரத்துது….

காலைல வெளிச்சுனு ஆன ஒடனே, நடராசு ஓடியாந்தான், தாயம்மோவ், தாயம்மோவ்னு மூச்சு வாங்குனான்,

என்ன நட்ராசு, சொல்லு, சொல்லுப்பா

பெரீப்பன், பெரீப்பனங்கே கிணத்து மேட்டுலன்னுட்டு அழுதான்.

அய்யோ என்னாச்சு உங்க பெரீப்பனுக்குன்னுட்டு தாயம்மா, கனகா எல்லாரும் ஒரே பாய்ச்சலா ஓடுனாங்க, அங்க கெணத்து மேட்டுல குத்துக்கல்லுல தல பட்டு செங்கோட கவுண்டரு குப்புறக் கெடந்தாரு. அவுரு தலயிலிருந்து ரத்தம் வழிஞ்சு மண்ணை நனைச்சுருக்குது. கொஞ்ச தூரந்தள்ளி அந்தள்ளைல மருமகனுக்கு வாங்குன வேட்டியும் சட்டையும் மஞ்சப் பைக்குள்ள கெடந்தது.

அன்னைக்கு வெள்ளச் சீல கட்டுனவதான் தாயம்மா, இதா இப்பவும் அப்பிடியே அந்த கெணத்து மேட்டப் பாத்துட்டு உக்காந்திருக்கா,

பேரன் சின்னக் கண்ணான் வந்து “ஆத்தா, ஏன் மத்தியான சோத்துக்கு வல்லியாமா, அம்மா கேட்டுது”ன்னு சொல்லீட்டு, மாட்டைப் பாத்தான்.

“ஆத்தா, அதென்னாத்தா செவலக் காளைக்கு தொடையில வெட்டுக் காயம்??”

“அது பக்கத்து தோட்டத்துல வாய் வெச்சுது, அருவாள வீசிப் போட்டுட்டேன் சின்னக் கண்ணா, அத அவுத்துட்டு வா, ஊட்டுக்குப் போலாம்”னு சொல்லீட்டு, நாலு பருத்திமார எடுத்து ஒரு செமையாக் கட்டி தலைல வெச்சுட்டு முன்னால நடந்தா.

நடக்கைல மாட்டோட காயத்தைப் பாத்துட்டு மனசு கேக்காம பேரன் கேட்டான்.

“ஏனாத்தா, அது வாயில்லா சீவன், அதுக்கென்ன தெரியும், அதப் போயி அருவால்ல வெட்டீட்டியே, பாவம்”

தாயம்மா, நின்னு திரும்பி பாத்து நிதானமா சொன்னா “பேராண்டி, ஒண்ணு மாத்திரம் நல்லா கெவனம் வெச்சுக்கோ, அடுத்தவிய ஊட்டுல வாய வெச்சா, அது மாடாருந்தாலுஞ் செரி, மனுஷனாருந்தாலுஞ் செரி, அப்பவே தீத்துப் போடோணுமுடோய்”

செவலைக் காளைக்கு என்னமோ புரிந்தது போல் தலய தலய ஆட்டுது.




18 comments:

Paleo God said...

//தாயம்மா, நின்னு திரும்பி பாத்து நிதானமா சொன்னா “பேராண்டி, ஒண்ணு மாத்திரம் நல்லா கெவனம் வெச்சுக்கோ, அடுத்தவிய ஊட்டுல வாய வெச்சா, அது மாடாருந்தாலுஞ் செரி, மனுஷனாருந்தாலுஞ் செரி, அப்பவே தீத்துப் போடோணுமுடோய்”//

தல, தராசு முள்ளு சும்மா நேரா நிக்குதுங்கோவ்!!

தராசு said...

வாங்க சங்கர்,

வந்ததுக்கு டேங்சு. கமெண்ட் புது விதமா இருக்கு

Raju said...

நல்லாக்கீதுண்ணே..!
வட்டாரவழக்கு அசத்தல்.

விக்னேஷ்வரி said...

இந்த மொழி வாசிக்க சிக்கலாயிருக்கு அண்ணே.

மாதேவி said...

நல்ல மொழிநடை.

தராசு said...

வாங்க ராஜூ,

டேங்சு

தராசு said...

விக்கி,

இது கொங்குநாட்டு மொழி,

வடநாட்டு காரங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்

தராசு said...

வாங்க மாதேவி,

டேங்சு.

ஹுஸைனம்மா said...

ரொம்ப ரசிச்சுப் படிச்சேன். நல்ல நடை!!

தராசு said...

வாங்க ஹுஸைனம்மா,

டேங்சு.

Romeoboy said...

நல்லா இருக்குது பாஸ் ..

Cable சங்கர் said...

ம்.. ரைட்டு.. புனைவு.. :)

தராசு said...

வாங்க ரோமியோ,

டேங்சு

தராசு said...

கேபிள் அண்ணே,

அதேதான், டேங்சு

க ரா said...

நல்லாயிருக்குன்னே.

தராசு said...

வாங்க ராமசாமி,

டேங்சு

எம்.எம்.அப்துல்லா said...

பொள்ளாச்சி சென்று வந்த சுகம் :)

தராசு said...

வாங்க அப்துல்லா அண்ணே,

இப்படித்தான் லேட்டா வர்றதா,

டேங்சு