Friday, May 27, 2011

புலிகளும் புள்ளிமான்களும்

எங்கிருந்து ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. நீண்ட நாட்களாக நான் தொடர்ந்து வரும் பல பதிவர்களின் பதிவுகளை படிக்க முடியவில்லை. (நம்புங்க, ஆணி அதிகம்). இன்று தான் நேரம் கிடைத்து படித்தேன். நான் எப்பொழுதும் தொடரும் ஒரு பதிவர், ஏப்ரல் மாதத்தில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். தான் ஒரு கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில், அங்கு தான் கண்ட ஆண் பெண் உறவுகளை விவரித்து, அந்த உறவுகளைக் குறித்த தனது விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார். புலிகள் என்றும் சைவமாவதில்லை என மிக எளிதாக ஒரு பாலரை நோக்கி விரல் நீட்டியிருப்பது அதிர்ச்சியளிப்பது மட்டுமல்லாமல் வேதனை தருவதாகவும் உள்ளது. To be Honest, அவர்களது பதிவுகளில் உள்ள முதிர்ச்சியையும், தெளிவையும் கண்டு எப்பொழுதும் மகிழ்ந்திருந்த நான் இத்தகைய ஒரு ஒருதலைப் பட்சமான குரூர குற்றச்சாட்டைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். ”ஆண்கள் விரிக்கும் வலையில்” என ஒற்றைவரியில், ஒரு சில வார்த்தைகளில் ஒட்டு மொத்த ஆண் வர்க்கமும் நயவஞ்சக நம்பிக்கை துரோகிகள், இரு வேடமிடும் வேஷதாரிகள் என ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருப்பது இம்மியளவும் பொறுத்துக் கொள்ள முடியாதது சகோதரி.

கூடவே இன்னொரு பெண்பதிவரின் பதிவையும் படித்தேன். தமிழ்கவிஞர் ஒருவர் சொன்ன வெகுளித்தனம் என்ற ஒரு வார்த்தைக்காக ஒட்டு மொத்த ஆண் சமூகத்தையும் சாட்டையால் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஏன்? ஏன்? இங்கு அந்த கவிஞர் என்ன சொன்னார்? அது எப்படி புரிந்து கொள்ளப் பட்டது என்பதை விவாதிக்க நான் விரும்பவில்லை. ஆனால், ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின் மீதும் ஏன் இப்படி அபாண்டப் பழி சுமத்தப் படுகிறது என தெரியவில்லை. சமீபத்தில் ரயிலில் பயணம் செய்தேன். அதில் ரயில் பெட்டியில் சில பாதுகாப்பு விதிகளை ரயில்வே நிர்வாகத்தார் எழுதி ஒட்டி வைத்துள்ளனர். புகை பிடிக்காதீர்கள், மது அருந்தாதீர்கள் என்ற விதிகளோடு கூட பெண்களை தொந்தரவு செய்யாதீர்கள் எனவும் எழுதி, அதில பெண்கள் மீதான தொந்தரவு என்னென்ன என தெளிவாக ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் விவரித்திருந்தார்கள். அதில் குற்றங்கள் என வகைப்படுத்தியிருந்தவற்றை வாசித்தால் வயிற்றைக் கலக்குகிறது. ”பெண்களை உற்றுப்பார்ப்பது (stareing), அவர்கள் அருகில் சத்தமாக பேசுவது, பாட்டுப் பாடுவது”….. இப்படியாக அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. எல்லா ஆண்களின் பார்வைகளுமே பெண்களை துகிலுரிந்து அம்மணம் ரசிக்கும் அருவருப்பு நிறைந்ததுதானா?? எப்பொழுதுமே ஒரு ஆண்பிறவி என்பது வக்கிரம் பிடித்த காமுகனாகத்தான் சித்தரிக்கப்படும் கேவலமான சமூகத்திலா வாழ்கிறோம்??? இந்த முரணான குற்றச்சாட்டுகளுக்கு பதிவுலகமும் விதிவிலக்கல்ல என பார்க்கும் பொழுது வேதனைதான் மிஞ்சுகிறது.

ஒருவேளை பதிவுலகமும், இணையமும் தரும் முகமறியா சுதந்திரம் தான் இந்த கொடூர குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளிக்கும் சௌகர்யத்தையும், உரிமையையும் தருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் :
நான் பணி செய்யும் இடத்தில் உள்ள ஒரு நண்பி, எனக்கு நன்கு பரிச்சயமானவர், அவ்வப்பொழுது பணி நிமித்தமான உரையாடல்கள், மரியாதை நிமித்தமான சம்பிரதாயமான நலம் விசாரிப்புகள் என எனது உரையாடல்கள் அவர்களுடன் நிகழும். சில சமயம் பணி சம்பந்தப்பட்ட விளக்கங்கள் கேட்பார், என்னால் முடிந்தவரை உதவி செய்வதுண்டு. அவரை வேறு துறைக்கு மாற்றியவுடன் எப்பொழுதாவது சந்திக்கும் பொழுது வெறும் நலம் விசாரிப்புகளோடும், பண்டிகை தின வாழ்த்துகள் என Skype chat – லும் பேசிக் கொள்வோம். அப்படியான உரையாடலின் ஒரு பகுதியின் தமிழாக்கம்.

வணக்கம் சார், எப்படி இருக்கீங்க???

நல்லாருக்கேன், நீங்க எப்பிடி இருக்கீங்க???

நலம். அப்புறம் என்ன சார் விசேஷம்???

ஒண்ணும் இல்லை. அப்பிடியே போயிட்டிருக்கு.

ஆமா, சார் உங்க டிபார்ட்மெண்ட்ல புதுசா யாரோ வந்திருக்காங்களாமே???

ஆமாம், நேத்துத்தான் வேலையில் சேர்ந்தாங்க.

ஆளு எப்பிடி சார்???

எப்பிடி இருந்தா என்னங்க, நம்ம கம்பெனில ஒருத்தர இண்டர்வியூ பண்ணி வேலைக்கு சேர்த்தாங்கன்னா, அவுங்க நல்லா வேலை செய்வாங்கன்னு தெரிஞ்சதுனால தான வேலைக்கு எடுக்கறாங்க, அப்புறம் எதுக்கு இந்த கேள்வி???

அய்யோ, அதையா கேட்டேன், ஆளு பாக்கறதுக்கு எப்பிடி சார், சூப்பர் ஃபிகரா???

ஹலோ, இந்த கேள்வி தேவையில்லாதது. என் பார்வையில உலகத்துல இருக்கற எல்லாருமே அழகானவங்கதான்.

அடாடடா, என்னா ஒரு தத்துவம், என்னா தத்துவம்.. உங்க கிட்ட படிச்சுக்க வேண்டியது நிறைய இருக்கு சார்..

சரி, அப்புறம் பேசுவோம், இப்ப கொஞ்சம் வேலை இருக்கு.

இந்த உரையாடல் முடிந்து சில நாட்கள் கழிந்தபின், நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். வேறு பெண்ணும் இன்னொரு ஆண் நண்பரிடம் ஒரு மூன்றாவது பெண்ணைப் பற்றி ஒரு கமெண்ட் அடிக்க, அதை ஆமோதிப்பது போல் இந்த ஆண் நண்பரும் எதையோ உளறி வைக்க, அது அந்த பெண்ணைப் பற்றி அவர் வலியப் போய் வக்கிரமாய் கமெண்ட் அடித்ததாய் திரிக்கப்பட்டு, கடைசியில் அவர் வேலையை விட்டு தூக்கி எறியப் பட்டார். இதைக் கேட்டவுடன் பகீரென்றது எனக்கு.

ஒன்று அல்லது இரண்டு பெண்கள் இப்படி வம்பு பேசுவதும், கதை திரிப்பதுமாக சுற்றித் திரிகிறார்கள் என்றால், உடனே எல்லா பெண்களையும் பார்த்து விரல் நீட்டுவது எவ்வளவு அபத்தமோ, அப்படியே எதோ ஓரிரு காமுகர்கள் உள்ளனர் என்பதற்காய், ஒட்டு மொத்த ஆண் உலகத்தையும் பார்த்து வெகு சுலபமாக ஓநாய் கூட்டம் எனச் சொல்லி கேவலப்படுத்துவதும் அபத்தம் தான்.

மனைவி சமைப்பதில் தலையிடுவது ஆணாதிக்கம், கணவன் ” இன்னைக்கு சப்பாத்தி சாப்பிட வேண்டும் போலுள்ளது, அந்த சுண்டக்கடலைல தேங்காய் போட்டு அம்சமா ஒரு குருமா வைப்பயே அதையும் செய்யும்மா” என்று மனைவியிடம் கேட்டால் கூட அது ஆணாதிக்கம்தான். என்ன சமைக்கணும்னு நீ எப்படி ஒருதலைப் பட்சமாக முடிவு செய்யலாம்?? இதெல்லாம் உன் ஆதிக்கத்திமிர் இல்லாம் வேறென்ன?? ” நீ அந்த மயில் கழுத்துக் கலர் புடவையில் ஜம்முனு இருக்க செல்லம்” என்று தன் மனைவியிடம் கணவன் சொன்னால், அது கூட அடக்கு முறைதான், ஏனெனில் ஒரு பெண்ணின் உடை அணியும் சுதந்திரத்தில் கூட ஆண் தனது கட்டுப்பாடுகளை விதிக்கிறான். இங்கு தனது ஆதிக்கத்தை வன்மையாக அல்ல, மிகவும் நாசூக்காக, நலம் விரும்பி போல் நடித்து தனது ஆளுமையை நிலை நாட்டுகிறான். யமுனா ராகவன் சொல்வது போல, ஆண் எப்பொழுதும் தன் மனைவியுடன் உறவு கொள்ளும் பொழுது கூட கேவலமாக அவளை கேலி செய்து கொண்டே புணர்கிறான், உடல் உறவு என்பது வெறும் ஆண்களின் உடல்பசி தீர்க்கும் ஒரு செயல் அவ்வளவே, அல்லது பெண்ணுக்கு உடல் பசி என்ற ஒரு உணர்வே கிடையாது. ஒவ்வொரு முறையும் தம்பதிகளுக்குள் உடல் உறவு நிகழ்வதும் கூட ஆணின் வேட்கை நிறைவு பெறவே அன்றி, பெண்ணுக்கு அதில் எள்ளளவும் வேட்கை என்ற பேச்சுக்கே இடமில்லை.

இதுதானா, பெண்ணுரிமைக்கான கூக்குரல், அல்லது இதுதான் நீங்கள் குறிப்பிடும் ஆணாதிக்கமா????

இரண்டே இரண்டு வினாக்கள்:

முளைத்திருக்கும் ஓரிரு விழலுக்காக ஒட்டு மொத்த வயலையும் தீக்கொளுத்துவதுதான் பெண்ணுரிமையா???

ஆணின் செய்கைகள் அனைத்துக்கும் ஆணாதிக்கம் என்ற ஒரே சாயம் பூசும் நீங்களே, உங்கள் பார்வையில் ஆணாதிக்க திமிரில்லாத ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என வரையறை வகுத்து கொடுங்களேன்.

அடியேனின் இந்தப் பதிவில் இன்றைய பெண்களைக் குறித்த எனது பார்வையையும் சற்று வாசித்துப் பார்த்து விட்டு, இனிமேலாவது கல்லெறிவதற்கு முன், கூட்டத்தில் எறியாமல், குறி வைத்து எறியுங்கள் நண்பிகளே.

16 comments:

Anonymous said...
This comment has been removed by the author.
தராசு said...

என்ன சொல்ல வருகிறீர்கள் அனாமிகா?

உங்கள் அப்பாவை நீங்கள் அப்பாவாகப் பார்க்கிறீர்களா..., இல்லை ஒரு சராசரி ஆணாகப் பார்க்கிறீர்களா???

பிணந்தின்னிக் கழுகுகளையும், வல்லூறுக்களையும் கண்டு அச்சப்படவும் அருவருக்கவும் தெரிந்த நமக்கு, புறாக்களை நேசிக்கத் தெரிந்திருக்கிறதே. அப்படி இல்லாதிருந்தால், பறவை என்ற ஒரே காரணத்துக்காக கழுகைப் போல புறாவும் ஒரு பறவைதானே என வெறுத்து ஏன் ஒதுக்குவதில்லை??, ஐந்தறிவு படைத்த பறவைகளுக்குள்ளே உங்களால் வேறுபடுத்திப் பார்க்க முடிகிறதென்றால், ஆறறிவு படைத்த மனிதர்களை உங்களால் இனம் காண முடியவில்லையா???

// யாரோ குடிகார தகப்பன் செய்திருக்கிறார் என்று மூளைக்குப் புரிந்தாலும் //

மூளைக்கு புரிகிறது என நீங்கள் ஒத்துக் கொள்கிறபோது, பெற்ற தகப்பனும் கேவலம் ஒரு ஆண் தானே என்ற ஒரே பார்வையில் பார்க்க எப்படி தைரியம் வருகிறது??? அல்லது நான் ஒரு பெண், ஆகையினால் எந்த ஆண் மீதும் சர்வ சாதரணமாக பாலியல் குற்றம்/மற்றும் ஆதிக்கம் சுமத்தும் ஆணவம் நிறைந்தவன் என்ற குற்றம் சுமத்தும் உரிமை நான் ஒரு பெண் என்பதாலேயே எனக்கு இயல்பாக இருக்கிறது, நீ ஒரு ஆண், நீ தகப்பனானாலென்ன, சகோதரனானாலென்ன, நீ ஒரு ஆண் அது போதும், என்னால் உன்னை எப்பொழுது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் குற்றம் சுமத்தி கூனிக் குறுக வைக்க முடியும் என்று சொல்கிறீர்களா???

தராசு said...

// மனதின் சஞ்சலங்களை / மன உளைச்சல்களைக் கொட்டும் போது வரிக்கு வரி தவறாக எடுத்துக் கொண்டு போர்க்கொடி உயர்த்துவது சரியாகப் படவில்லை. //

மனதின் சஞ்சலங்களை கொட்டுங்கள் யாரும் தடுக்கவில்லை., ஆனால் வல்லூறுகளுக்கும், புறாக்களுக்கும் வித்தியாசம் தெரிந்து கொட்டுங்கள்.

வரிக்கு வரி நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.என் பதிவின் முதல் பத்தியை வாசியுங்கள். அவரது முழு பதிவையும் குறிப்பிட்டுத்தான் எழுதியிருக்கிறேன்.

தராசு said...

//கவனமாக இரு என்று சொன்னால் எல்லோரையும் தவறாகப் பார் என்று அர்த்தமில்லை. கொஞ்சம் கோஷஷ் ஆக இருப்பது தவறுமில்லை.//

(கோஷஷ் = cautious என்றுதான் எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்)

எல்லோரையும் தவறாகப் பார் என்று அர்த்தமில்லை என்பதை எங்காவது சுட்டிக் காட்டுங்கள். நான் கூறியிருந்த இன்னொரு பதிவரின் “வெகுளித்தனம்” குறித்த பதிவை வாசித்துப் பாருங்கள். அவர் என்ன சம்பந்தப்பட்ட ஆண்/ஆண்களை மட்டுமா விமர்சித்திருக்கிறார்????

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by the author.
வலிப்போக்கன் said...

சமூகத்தில் பெரும்பாலனவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.நேர்மையாய் ஒழுக்கமாய் இருப்பவர்களுக்கு மாற்று பெயர் வைத்து கூப்பிடும் பழக்கமும் உள்ளது.

தராசு said...

அப்பாவின் பக்கத்தில் நிற்க பயமாய் இருக்கிறது என்று நீங்கள் சொல்லும் பொழுது, அதற்கு என்ன அர்த்தம் கொள்ள முடியும் அனாமிகா? குதர்க்கம் பேசுவது யார்???

உங்கள் கூற்றுப்படி மூளைக்கு அவர் என் தகப்பந்தான் என புரிகிறது என்கிறீர்கள். அப்படி இருக்க பயம் ஏன் வருகிறது???

முதலில் நீங்கள் குறிப்பிட்ட தட்டிக் கொடுக்கும் ஆண்களுக்குள் இருக்கும் நல்ல குணத்தை மற்ற ஆண்களில் உங்களால் காண முடிவதில்லையா???

சரியாகச் சொன்னீர்கள், கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்த்தால் இப்படித்தான்!!!!!!!

விமானத்தில் போகும் பொழுது கூட இந்த பயம் இருக்கிறது என்கிறீர்கள், ஒரு விமானத்தின் இரைச்சல் கேட்டவுட்ன அது பயணியர் விமானமா, அல்லது குண்டு வீர்சும் விமானமா என உங்களால் சடுதியில் புரிந்து கொள்ள முடிவதில்லை, அதனால் தான் பயம் வருகிறது, ஆனால், நீங்கள் பயணம் செய்யும் விமானத்தைப்[ பார்த்தாலும் கூட பயம் என்று சொன்னால்,, கறுப்புக் கண்ணாடியை தயவு செய்து கழற்றி விடுங்கள்.

நான் ஹுஸைனம்மாவை தாக்கியோ, அல்லது அவரை மதிக்கத் தகாதவர் என்றோ எங்கும் பேசவில்லை. மறுபடியும் பதிவை வாசியுங்கள். அவரது கருத்துகளை அவர் தெரிவித்திருக்கிறார். இதில் அவர் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமோ, கோபமோ இல்லை.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். பொதுவெளியில் கருத்துகளை வைத்தால், அதற்கு எதிர் கருத்துகளும் விமர்சனங்களும் வருவது இயல்பே. இதற்கெல்லாம் வருத்தப் பட்டு பதிவுலகை விட்டு துரத்துகிறோம் என்று சொல்வது டூ மச் அனாமிகா..., உணர்ச்சி வசப் பட்டு எழுதாதீர்கள்.

நான் பதிவுலகின் ஏகபோக உரிமையாளன் அல்ல, நான் எதிர்பார்த்தது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை மட்டுமே, ஆனால், பதிவுலகை விட்டு துரத்தும் எழுத்துகளாய் என் பதிவு உங்களுக்கு தெரிகிறதென்றால், கண்ணாடியை கழட்டி விடுங்கள் என்று மறுபடியும் அறிவுறுத்துகிறேன்.

Anonymous said...
This comment has been removed by the author.
தராசு said...

சரியாகச் சொன்னீர்கள் அனாமிகா....

நாம் பேசுவது வேறு, ஆனால், பிரச்சனையை குண்டு வீசும் விமானத்தின் பால் திருப்பி பேசும் உங்களுடன் இது பற்றி பேச முடியாது.
Please take rest.

ஹுஸைனம்மா said...

அடடா, எப்படி இந்தப் பதிவை மிஸ் பண்ணேன்? :-(

அழுகை அழுகையா வருது இந்தப் பதிவப் படிச்சு - பயப்படாதீங்க ஆனந்தக் கண்ணீர்தான்!! என் பதிவுக்கும் எதிர்பதிவு எழுதுமளவு பதிவுலகில் நான் பெரிய ஆளா!!

//மொத்த ஆண் உலகத்தையும் பார்த்து வெகு சுலபமாக ஓநாய் கூட்டம் எனச் சொல்லி//
அடடா, நான் எவ்ளோ பெருமையா ஆண்களை, நம்ம தேசிய விலங்கான புலிக்கு நிகராச் சொல்லிருக்கேன், நீங்க ஓநாய்னு சொல்லிட்டீங்களே!! ம்ம்.. நம்மள அறியாமலேயே உண்மை பேசிடுவோம் சிலசமயம்.

//தமிழ்கவிஞர் ஒருவர் சொன்ன வெகுளித்தனம்//
அட, நீங்களும் அப்படித்தான் நெனச்சீங்களா!! அது தமிழ்க்கவிஞர் இல்லையாம். அதே பேர்கொண்ட ஒரு கிராமத்துப் பெண்ணாம்!!

அனாமிகா!! கூல், கூல்!! இதுக்கெல்லாம் போய் இவ்ளோ டென்ஷனா!! உண்மை எப்பவுமே கசக்கும்.

தராசண்ணே, இந்த என் பதிவு உங்களைக் கோபப்படுத்துமளவுக்கு நல்லவரா நீங்க இருக்கீங்கங்கிறது ஆறுதலா இருக்கு. நன்றி.

ஹுஸைனம்மா said...

தொடர...

DHANS said...

நல்லாத்தான் சொல்றீங்க ஆனா ஏழையின் குரல் அம்பலம் ஏறாது

தராசு said...

ஹுஸைனம்மா...

ஆமாம், உண்மை எப்பொழுதும் கசக்கும். அதனால் தான் எந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லி விவாதிப்பதை விட்டுவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டீர்களோ??.

ஹா...ஹா... நான் கோபப்பட்டேனென்று நினைத்தீர்களா?? அது மட்டும் உங்களால இந்த பிறவியில் முடியாது.

ப.கந்தசாமி said...

நல்ல சப்ஜெக்ட். ஆனால் நல்ல விதமாக விவாதம் தொடரவில்லையே.

சமுதாயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சில வரைமுறைகள் இருக்கின்றன. யாராயிருந்தாலும் இதை மீறும்போது தேவையற்ற சிக்கல்கள் உருவாகின்றன.

இதை எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

theerppavan said...

நல்லா எழுதியிருக்கிங்க சார். கொஞ்சம் இந்தப் பதிவையும் வாசிச்சுப் பாருங்களேன்: http://shank-mukilan.blogspot.com/2011/07/blog-post.html