Tuesday, April 12, 2011

ஜுகல் பந்தி 12–4-2011 - குண்டுக்கு தெரியுமோ குருதியின் நிறம்??

குண்டுக்கு தெரியுமோ குருதியின் நிறம்??

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரம், வசதி வாய்ந்தவர்கள் சொற்பமாயும், நடுத்தர வர்க்கத்தின் சொர்க்கமாகவும், தென் அமெரிக்க நாடுகளுக்கென ஒரு தனி முகவரி தாங்கிய கேளிக்கை நகரம். முற்றும் திறந்த குலுங்கும் மார்புகளும், இடுப்புக்கு கீழே ஒரு சாண் துணியும் அணிந்து, இந்நகரத்து வீதிகளில் நடக்கும் கார்னிவல் எனும் விழா ஊர்வலங்களில் குதித்துக் கும்மாளமிடும் தென் அமெரிக்க கோதுமை நிற அழகிகளை பல படங்களில் பார்த்திருப்பீர்கள். கால்பந்தாட்ட ரசிகர்களல்ல, வெறியர்கள் நிறைந்த நகரம்.

கடந்த 7ம் தேதி இந்நகரத்தில் சூரியன் சோம்பல் முறித்து கிரணம் பாய்ச்ச தலை நீட்டிய பொழுது, இந்நகரத்தின் உயர்ந்த மலையின் மீது தன் இரு கரங்களையும் விரித்து கால்கடுக்க நின்றபடியே உள்ள இயேசுகிறிஸ்துவை சூழ்ந்திருந்த பனிப்படலம் பின்னங்கால் பிடறியில் பட விலகி ஓடியது. சரியாய் காலை 8 மணிக்கு இந்நகரத்தின் மத்திய தர மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்த ஒரு பள்ளிக்கு அதன் முன்னாள் மாணவனான வெலிங்டன் மெனோசிஸ் வந்தான். பள்ளியின் 40 வது ஆண்டு விழாவை ஒட்டி முன்னாள் மாணவனான தான் அங்கு மாணவர்களுக்கென சிறப்புரையாற்றப் போவதாக பொய் சொல்லி விட்டு வாயில் காப்போனை கடந்து உள்ளே சென்றான்.

சென்றவன் உள்ளே நுழைந்து பாடம் கேட்பதில் ஆர்வமாயிருந்த மாணவர்களிடம், “கைகளை தூக்கி நில்லுங்கள்” என கத்தவும் மிரண்ட அந்த பச்சிளம் பாலகர்கள் நடப்பது என்ன என உணரும் முன்பே கண்மூடித்தனமாக சுட்டு விட்டான். நான் சுடப்பட்டேன் என உணரும் முன்பே அந்த மொட்டுகள் சுருண்டு விழுந்து கருகி விட்டன. ஒரு வகுப்பில் தன் கோரத்தனத்தை காட்டிய இவன், இன்னொரு வகுப்பிற்கும் சென்று இப்படி செய்திருக்கிறான். பக்கத்து வகுப்புகளில் கேட்ட துப்பாக்கி சத்தமும், குழந்தைகளின் மரண ஓலமும் அடுத்திருந்த வகுப்புகளின் ஆசிரியைகளுக்கு ஏதோ விபரீதம் நடப்பதை உணர்த்தவே அவர்கள் தங்கள் வகுப்புகளின் கதவுகளை பூட்டி விட்டனர். இப்பொழுது எங்கு நுழைவது என கொலைகாரன் குழம்பி நின்றிருந்த வேளையில் சடுதியில் அங்கு நுழைந்த போலீஸ் அதிகாரி மார்க்கோஸ் இந்த மனித மிருகத்தின் காலில் சுட்டு அவனை கீழே விழத் தள்ளியிருக்கிறார். தன்னால் இனி நகர முடியாது என்பதை உணர்ந்தவுடனே தன் கையிலிருந்த துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டு அந்தக் குரூர ஆத்மா அடங்கியிருக்கிறது.

இறந்த 12 குழந்தைகளில் 10 பேர் மாணவிகள். இன்னும் இந்த அதிர்ச்சியிலிருந்து மொத்த பிரேசில் நாடே வெளிவரவில்லை. அதற்குள் நெதர் லாண்டிலும் இப்படிப்பட்ட ஒரு சம்பவம், அதே போல் துப்பாக்கி ஏந்திய இன்னொரு மனித மிருகம், ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைந்து 6 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்று விட்டு தன்னையும் சுட்டுக் கொண்டது. இந்த சம்பவங்கள் சொல்வது என்ன?
1. ஆயுதம் கிடைப்பது எளிதாகி விட்டதா???

2. மனித மனதில் வக்கிரங்கள் நிறைந்து விட்டதா???

3. சினிமாவில் நாயகன் ஒரே கைத்துப்பாக்கியை கொண்டு பல பேரை சுட்டு வீழ்த்துகிறானே, இத்தகைய சாகசங்களை இளைய தலைமுறை விரும்ப ஆரம்பித்து விட்டதா????

எதுவாயிருந்தாலும், தொலைக்காட்சியும் சினிமாவும் இந்தளவுக்கு மனித மனத்தில் தன் இனத்தையே வேரறுக்கும் விஷ விதைகளை தூவுகிறதோ என பயப்பட வேண்டியுள்ளது.

வருது வருது, அட விலகு விலகு

அட அவுங்களை விட இவுங்க பரவால்லப்பா, ஆமா இவிங்க மாத்திரம் என்ன கிழிச்சாங்க, அப்ப, அங்க குடும்பம் சொத்து சேர்த்தலைங்கறயா, சரி இங்க மட்டும் என்ன வாழுது, இங்கயும் ஒரு குடும்பம்தான் ஆட்டிப் படைக்குது, சரி அங்க கூட்டணி பலமா இருக்குன்றீங்க, அப்ப இங்க மட்டும் என்ன சொத்தையா போயிடுச்சா, போன தரம் அவிங்க ஜெயிச்சா, இந்த தரம் இவிங்க ஜெயிக்கணும்னு ரூல்ஸ் இருக்கா என்ன, ஆனா என்ன இருந்தாலும் இந்தப்பக்கம்தான் இள ரத்தமா இருக்குப்பா, ஆனா அங்கயும் நாங்க இளசுகளை இறக்கியிருக்கம்ல, நீங்க இலவசமா எதைக் குடுத்தாலும் நாங்களும் அதுக்கு டபுளா குடுக்கறம்ல, ஏ யப்பா டேய் நிறுத்துங்கடா, கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சுடா, நீங்கெல்லாம் எப்படா சாவீங்க, நாங்க கொஞ்சம் நிம்மதியா வாழணும்டா, தேர்தல் வருதாம், நாசமாப் போக.

ங்கொய்யால பக்கங்கள்.

வீதி முழுக்க விளம்பர தோரணம்,

காது கிழிய கொள்கை பாட்டு,

செவுத்துல எல்லாம் சிரிக்கற போஸ்டரு,

மேடைல ஏறி கெட்ட வார்த்தை

ராத்திரி முழுக்க தலைவர் கூட்டம்

வீட்டுக்கு வீடு இலவச லஞ்சம்,

எதுவுமேயில்ல, ஆனாலும் தேர்தலாம்

ங்கொய்யால,

இதுக்கு பேர்தான் எலெக்ஷன் கமிஷனா??

1 comment:

பரிசல்காரன் said...

ங்கொய்யால :-))))

ப்ரெசில் - :-(

நடுப்ல இருக்கறதுக்கு :-|