Wednesday, April 7, 2010

ஜுகல்பந்தி – 7 -4 – 2010 - அமெரிக்கா காட்டிய பெப்பே


நகரம் – அஹமதாபாத்.

பெர்ஸிய பிராந்தியத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த முஜாஃபரி சமஸ்தானத்தின் வாரிசுகளில் ஒருவரான அகமது ஷா தான் இந்த நகரத்தை நிர்மாணிக்க அஸ்திவாரமிட்டவர். இவர் இந்த நகரத்தை கட்டுவதற்கு ஏவுதலாக ஒரு கதை இன்றளவும் நாட்டுப் புறங்களில் பேசப்படுகிறது. எங்கு கூடாரம் போடலாம் என யோசித்தவாறே அலைந்த அகமது ஷா, கர்ணாவதி நதியின் கரையில் ஒரு முயல், நாயை துரத்தியதை கண்டாராம். கண்டதும் இந்த மண்ணின் வீரத்தில் மனதைப் பறி கொடுத்த மன்னர், இங்கு யாம் நகரம் கட்டுவோம் என சொல்ல, அவரது நினைவாகவே இது இன்றுவரை அஹமதாபாத் என அழைக்கப்படுகிறது. இதற்கு முன் இந்த பிராந்தியம் ராஜபுத்திரர்களின் வசம் இருந்த பொழுதும் இருந்த ராஜபுத்திரர்களான வகேலா பரம்பரையும், சோலங்கி பரம்பரையும், “ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம், சுகம், சுகம்” என சுகித்து விட்டு போய் விட்டார்களே ஒழிய மக்கள் நலன் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்குத்தான் அவர்களின் ஆட்சியின் லட்சணம் இருந்தது.


அகமது ஷாவின் பேரனான மஹமூத் பேகாடா, 1487 ஆம் ஆண்டு இந்நகரைச்சுற்றி 10 கி.மீ சுற்றளவில் பெரிய கோட்டை மதில் கட்டி அதில், பீரங்கி தாக்குதலுக்கென 189 பீரங்கித் தளங்கள், கோட்டை முற்றுகையிடப்பட்டால், மதில் மேலிருந்து எதிர் தாக்குதல் நடத்த 6000 பதுங்குமிடங்கள் என ஒரு வலிமையான அரணை இந்த நகரைச் சுற்றி எழுப்பியுள்ளார். அதில் இவர் கட்டிய அலங்கார வளைவுகளுடன் கூடிய 12 வாயில்கள் (பாரா தர்வாஜா) மிகவும் பிரசித்தி பெற்றவை.
முக்கிய வியாபார கேந்திரமாக இந்தியாவின் மேற்குக் கோடியில் உருவெடுத்த இந்த நகரம், இன்றுவரை வியாபாரத்தில் செழித்து, கொழித்து, குளித்து வருகிறது. கொஞ்சநாள் முகலாயர்களிடம், பின் மராட்டிய பேஷ்வாக்களின் மேற்பார்வையில், அதற்குப் பின் பரோடா சமஸ்தானத்து கெய்க்வாட் பரம்பரையின் கீழ், இறுதியாக ஆங்கிலேயர்களிடம் என பல முறை இந்ந்கரம் கைமாறியிருக்கிறது.

இந்திய தேசப்பிதாவின் பாதங்கள் பட்ட இந்த நகரம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பல நிகழ்வுகளுக்கு சாட்சியம் அளிக்கிறது. 1919 – ல் ரௌலத் சட்டத்திற்கான எதிர்ப்பு போராட்டங்களின் துவக்கப் புள்ளி இந்த நகரம் தான். 1930 – ல் நடந்த உப்பு சத்தியாகிரகத்தின் முக்கிய நிகழ்வான தண்டி யாத்திரை இங்கிருந்துதான் தொடங்கியது. 1942 ல் நடந்த வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தின் குரல் முதல் முதலாக ஒலிக்கத் தொடங்கியது இந்நகரத்து வீதிகளில் தான்.

2001 – ல் நடந்த பூகம்பத்தால் பெரும் அழிவு, அதைத் தொடர்ந்து வந்த கோத்ரா கலவரத்தல் ஓடிய ரத்த ஆறு என வரிசையாக அழிவுகள் வந்தாலும், தனக்கே உரிய தொழிற்சாலைகள், துணி உற்பத்தி ஆலைகள், பால்பண்ணைகள், தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் என முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடும் ஒரு நகரமிது. பட்டம் விடும் பண்டிகை, தாண்டியா நடனங்கள், விதவிதமான இனிப்புகள், தங்கநிற மங்கைகள் என கலாச்சாரத்தில் இனிக்கும் இன்னொரு இடமிது.

அமெரிக்காவின் பெப்பே

டேவிட் ஹெட்லி – அமெரிக்காவின் கைப்பாவை, உளவாளி, தீவிரவாதி, மும்மை குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டியவர், லஷ்கர் – ஏ – தொய்பா வுக்காக உளவு பார்த்தவர், இன்றைய மனம் திருந்திய மைந்தன் என பல வர்ணனைகள் கொடுக்கலாம் இவருக்கு. பாகிஸ்தானிய அப்பனுக்கும், அமெரிக்க அம்மாவுக்கும் பிறந்த இவருக்கு நேர்வழியில் யோசிப்பதென்றால் கொஞ்சம் அலர்ஜிதான். அப்பவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வர, அப்பா தன் அருமை புதல்வனை பாகிஸ்தானுக்கு அழைத்துப்போய் சீராட்டி பாராட்டி படிக்க வைத்திருக்கிறார். படித்ததின் விளைவு புனிதப் போரில் நாட்டம். புனிதப் போர் என்பதே மற்றவர்களை குறிப்பாக இந்தியர்களை கொல்வதுதானே, ஆகவே தனது வெள்ளைத்தோல் முகவரியை வைத்துக் கொண்டு, இந்தியாவில் சர்வ சுதந்திரமாக சுற்றித் திரிந்து உளவு பார்த்திருக்கிறான். நம்மவர்களும் வெள்ளைத் தோலை கண்டவுடன் வாய்விரிய, முகம்மலர, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்து, அவனை இந்தியாவின் எல்லா இடங்களிலும் உலவ விட்டிருக்கிறார்கள். ஆனால், இதில் மிகப் பெரும் கூத்து என்னவெனில், அமெரிக்க உளவு நிறுவனத்துக்கு வேலை பார்ப்பதாக கூறிக் கொண்டு, இவன் லஷ்கருக்கு கையாளாக வேலை பார்த்திருக்கிறான். அந்த மாபெரும் உளவு நிறுவனத்தின் மூக்குக்கு அடியிலேயே ஒரு கறுப்பு ஆடு உலவுகிறது என்பதை கடைசி வரை கண்டு பிடிக்க முடியாத தத்திகளாகத்தான் அமெரிக்க உளவுத்துறை இன்றும் இருக்கிறது.

எல்லாம் முடிந்து, வெடிக்க வேண்டியதெல்லாம் வெடித்து, இந்திய ஊடகங்களின் நாடகங்கள் முடிந்து, அவர்கள் இனி அடுத்த நாடக மேடைக்கு சென்றவுடன், இந்திய துப்பு துலக்கிகள் இவனை கையைக்காட்ட, அமெரிக்காவின் வயிற்றில் சேர்ந்தாற்போல் ஆயிரம் தீப்பந்தம் பற்றிக் கொண்டது. தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் ஒரே நாடு என மார்தட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலேயே, ஒருவன் தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறானென்றும், அவனை விசாரிக்க இந்தியா விரும்புகிறதென்றும் தெரிந்ததும், அமெரிக்காவின் இளிச்சவாய்த்தனத்தைப் பார்த்து மற்ற நாடுகள் தலையிலடித்துக் கொண்டன.

உடனே அவனை அவசர அவசரமாக விசாரணைக்குட்படுத்தி, அதில் தீர்ப்பும் வழங்கிவிட்டார்கள். அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற தீர்ப்புக்கு பிறகு அமெரிக்கா அள்ளித்தெளித்த அறிக்கைகள்தான் உலக மகா காமெடி – “எங்கூட்டுப் பையன் எதோ தப்பு பண்ணீட்டானாம், அதையெல்லாம் அவன் தப்புன்னு ஒத்துகிட்டான், நாங்களும் அவனை நிக்க வெச்சு கையை நீட்டச்சொல்லி, நல்லா காயவெச்ச புளியங்குச்சிய எடுத்து, பளார், பளார்னு அடிச்சுட்டோம். அப்படியே அவன் கையெல்லாம் கன்னிப்போச்சு, அவன் இனிமே இந்த மாதிரியெல்லலம் செய்ய மாட்டேன்னு சொல்லீட்டான். அதனால சும்மா அவன விசாரணை அது இதுன்னு தொந்தரவு பண்ணாதீங்க, நீங்க போயி உங்க பொழப்பை பாருங்க என்னா, உங்களுக்கு வேற எதாவது வேணும்னா எங்கிட்ட கேளுங்க, என்ன சரியா, போயிட்டு வாங்க, ஆனா அதுல பாருங்க இப்பவும் தீவிர வாதத்துக்கு எதிரா கோடி கோடியா செலவழிச்சு போராடற நாடுன்னு ஒன்னு இந்த பூமியில இருந்துச்சுன்னா, அது அமெரிக்க ஒண்ணுதான். இதை மட்டும் மனசுல வெச்சுக்கங்க ” என்று இந்திய அரசுக்கு பெப்பே காட்டி விட்டது.

நமது அரசாங்க மாண்புமிகுக்களும், சரி, சரி லூசுல விடுறா, மண்ணைத் தொடச்சுட்டு போயிட்டே இருப்போம்னு திரும்பி வந்து விட்டார்கள். அவர்கள் நாட்டில் இருக்கும் ஒரு தீவிர வாதி நமது மண்ணில் வந்து, ரத்தத்தில் கோலம் போட்டு விட்டு போகிறான், இரட்டை வேடமிடும் அவன் நாட்டுக்காரர்களே அவனை அடைகாக்கிறார்கள். அப்புறம் என்ன மண்ணாங்கட்டிக்கடா அவுனுகளோடு கூட்டு சேர்ந்துகிட்டு, நாங்களும் போராடறோம்னு எங்க வரிப்பணத்தையெல்லாம் வீணாக்கறீங்க…..

நா(வீ)ட்டு நடப்புகள் :

ஹோட்டல்ல போய் உக்கார்ந்து மெனு கார்டை எடுத்து பார்த்து விட்டு, தேனொழுகும் குரலில்….

என்ன சாப்டலாம் கண்மணி,

எதாவது நல்லதா பாத்து நீங்களே சொல்லுங்க…

புரோட்டா சொல்லட்டா…

அய்யோ, அதுவே வெந்தும் வேகாம இருக்கும், அதுக்கு இவங்க வெக்கற குருமா வேற என்னமோ நேத்தத்த பழைய குழம்பு மாதிரி இருக்கும், வேற எதாவது சொல்லுங்க…

சரி பூரி….

அய்யோ எண்ணைல முக்கி அப்படியே வழியும்…

அப்ப, வெஜிடபிள் புலாவ்….

சே, அவுனுங்க அந்த காய்கறியையெல்லாம் வெட்டி இருக்கறத பார்த்தாலே சாப்பிட பிடிக்காது.

அப்ப பட்டர் நான்…

அது ஜவ்வு மாதிரி இழுத்துகிட்டே இருக்கும்,

இங்க சிக்கன் பிரியாணி ரொம்ப நல்லா இருக்குமாம், அது சொல்லட்டா,

வேணாம், ரொம்ப ஹெவியா ஆயிரும். எனக்கு ஏற்கனவே வயிறு ஒரு மாதிரி இருக்கு….

அப்ப சும்மா ஆர்டினரி மீல்ஸ் சொல்லட்டா, சாம்பார், ரசம், கூட்டு பொரியலோட….

ஏந்தான் உங்களுக்கு புத்தி இப்படி போகுதோ, இதைத்தான தினமும் வீட்டுல சாப்பிடறீங்க, இங்க வந்தும் அதே தானா……

அடியேன் கொஞ்சம் கடுப்புடன், அப்ப என்ன தான் சாப்டலாங்கற,

என்னையவே கேட்டுட்டு இருந்தா எப்படி, வேற எதாவது சாப்டறமாதிரி நல்ல ஐட்டமா பார்த்து சொல்லுங்க,

அடியேன் (முகத்தை வேறு பக்கம் திருப்பி) இந்த தொல்லைக்குத்தான் நான் வீட்லயே ரசம் சாதம் சாப்டுட்டு தூங்கிறலாம்னு நெனச்சேன்.

ஹோட்டலுக்குன்னு கூட்டிட்டு வந்துட்டு ஒரு நல்ல ஐட்டம் பாத்து ஆர்டர் பண்ணத் தெரியல, அங்க என்ன முணு முணுப்பு வேண்டிக் கெடக்கு

17 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நா(வீ)ட்டு நடப்புகள் :) :) :)

Raju said...

பரோடா மஸ்தானத்து கெய்க்வாட்டா..?
அப்போ,ரஜினிகாந்த் குஜராத்தியா..!
என்ன கொடுமை சார் இது..

பதிவு சுவாரஸியம்!!

Raju said...

பை த வே, வேர் இஸ் ங்கொய்யால பக்கங்கள்..?!?

anujanya said...

இந்தியா முழுதும் சுற்றிக்கொண்டே இருப்பீங்களா தல? அகமதாபாத் பற்றி எழுதியது நல்லா இருக்கு.

நீங்க ஏன் நல்லா சமைக்கக் கற்றுக்கொள்ளக் கூடாது? (என்னை மாதிரி) :)))

அனுஜன்யா

மணிஜி said...

ரெண்டு கிளாஸ் சுடுதண்ணி ப்ளீஸ்..

தராசு said...

குருஜீ,

டேங்சு

தராசு said...

ராஜூ,

பரோடாவை ஆண்ட மன்னர் யார்னு தெரியாம, நீயெல்லாம் குஜராத்துல இருந்து என்ன பிரயோஜனம்.

வரலாறு ரொம்ப முக்கியம்.

தராசு said...

இத எழுதுனதுக்கே பதிவு கொஞ்சம் நீளமாயிடுச்சு, ஆதி அண்ணன் திட்டுவாரு, அதனால ங்கொய்யால அடுத்த முறை வரும்.

தராசு said...

வாங்க தல,

Except North East அநேகமா எல்லா ஊரும் பார்த்தாச்சு தல. அடுத்து உங்க மாநிலத்து ஊர்களை பத்தித்தான் தொடரப் போறேன்.

ஆமா, எனக்கு சமைக்க தெரியாதுன்னு யார் சொன்னது????

தராசு said...

வாங்க மணி அண்ணே,

ஏன், ஏன் இப்படி?

டேங்சு.

Athisha said...

நான் ஹோட்டலுக்கு போனப்ப பின்னால வந்து பாத்து எழுதினமாதிரியே இருக்கு..! ;-))

தராசு said...

வாங்க அதிஷா,

இப்பத்தான்யா கல்யாணம்னு பத்திரிக்கை அனுப்பிச்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள இந்த நிலைமையா???

டேங்சு.

பனித்துளி சங்கர் said...

அமெரிக்கா காட்டிய பெப்பே" மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் . மீண்டும் வருவேன்

தராசு said...

வாங்க சங்கர்,

வந்ததுக்கு டேங்சு

Anonymous said...

அண்ணே !! இந்த முறை !! கலக்கிடீங்க !!!!!

அனானியப்பன்

Anonymous said...

அனானியப்பன்

வந்ததுக்கு, பிடிங்க ஒரு டேங்சு !!

இந்த தபா, நீங்க கேக்காததால நானே சொல்லிட்டனே !!

கேட்டு பெறுவதில்லை "டேங்சு" என்பதை இனியாவது உணரவும்

ஆமா எங்க ஆதி , இன்னும் காணலை

அன்பு நண்பன்

Anonymous said...

அன்பு நண்பன்,

நீங்க அவரில்லை. அவர் ஐடி-யில வாராததால இதை நான் தெரிஞ்சுக்கலை. ஐஸ்ட் ஸ்டைல வச்சு.

அண்ணன் ஸ்டைல் இப்படி இருக்கும்

வாங்க அனானியப்பன்,

டேங்சு