Monday, February 8, 2010

பெண்ணியம் பேசுவோம் வாருங்கள்

முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்த எதிர்ப்புக் குரல்கள், இன்று நாடெங்கும் ஒலிக்கும் அபய குரல்களாக மாறி விட்டிருக்கிறது. குடும்பம் என்ற கட்டுக் கோப்பான அமைப்பை சிதைத்து, வெறியாட்டம் ஆட ஒரு வலிமையான ஆயுதமாக பெண்ணுரிமைச் சட்டங்கள் மாறி வருகின்றன. இந்த சட்டத்தை எவ்வளவுக்கெவ்வளவு ஈனத்தனமாக பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு தூரத்தையும் இந்த பெண்ணிய வாதிகள் கடந்து விட்டார்களோ என வருந்த வேண்டியிருக்கிறது. இதுவரை இந்த வரதட்சிணை சட்ட கொடுமைகளையும் அதன் தவறான பயன்பாட்டையும் பதிவுகளில் படித்து, இந்த சட்டத்துக் கெதிராக எழும் இத்தைகைய குரல்கள், பிரச்சனையை கொஞ்சம் மிகைப் படுத்தித்தான் பிரதிபலிக்கிறதோ என எண்ணியதுண்டு. ஆனால், இது எல்லாவற்றையும் மீறி நாக்பூரிலே இந்த சட்டத்தின் தவறான பயன்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு மாரத்தான் ஓட்டமே நடத்த வேண்டிய அவலத்துக்கு இந்த பிரச்சனை வீரியம் கொண்டு எழுந்திருக்கிறதென்றால், நெருப்பு நம்மை தீண்டும் தூரத்தில் தான் உள்ளது என தெரிகிறது.

இந்த கேவலத்துக்கு துணை போக வழக்கறிஞர்களும், காவல் துறையும் கைகட்டி நிற்பது இன்னும் வேதனையளிக்கிறது. பிரசாந்த் – கிரகலட்சுமி பிரச்சனையில் வெளியான தீர்ப்பிலிருந்தும், இந்த சட்டத்தை எப்படியெல்லாம் வளைக்க முடியும் என பார்க்க முடிகிறது. எல்லாவற்றையும் விட ஒருபடி மேலே போய் பிறந்து சில மாதங்களே ஆன கைக்குழந்தைகள் மீது கூட இந்த வரதட்சணை சட்டத்தை பாய்ச்ச எப்படித்தான் கல்நெஞ்சக்காரர்களுக்கு மனது வருகிறதோ தெரியவில்லை. குழந்தைகள், வாழக்கையில் ஒரு முறை மட்டுமே சந்தித்த கணவனின் நண்பனின் தாயார் இப்படி சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் இதில் இழுத்து விட முடியுமென்றால், இது ஒரு மனநிலை பிறழ்ந்த ஒரு சாரரின் பழிவாங்கும் வக்கிர வெறிக்கு அடிகோலும் சட்டமில்லாமல் வேறென்ன?

இன்றுசுந்தர்ஜியின் "எனது நேர்காணல்" பேட்டியை வாசித்துக் கொண்டிருந்தேன். பேட்டியிலுள்ள ஒரு கேள்வியும் அதற்கான அவரது பதிலும் இதை மெய்பிப்பது போல்தான் உள்ளது. அதிகாரம் கையில் கிடைத்தால் இந்தப் பெண்கள் அதை ஆக்கபூர்வமாக பயன்படுத்தியிருக்கிறார்களா என்றால், ஒற்றை இலக்க சதவீதத்திலேயே அதை கணிக்க முடியும். ஒருமுறை விஜய் டிவியில் கூட நீயா, நானாவில், வரதட்சணை கொடுமையால் பாதிக்கப் பட்டவர்களையும், இந்த கொடிய சட்டத்தால் பாதிக்கப் பட்டவர்களையும் பேச வைத்து இந்த சட்டத்தின் அவசியத்தையும், அதே சமயத்தில் இந்த சட்டத்தின் தவறான பயன்பாட்டையும் வெளிக்கொணர கோபிநாத் முயற்சித்தார்.

எது எப்படியோ, வரதட்சிணை என்பது ஒரு சமூக அவலம், ஆனால் அதை தடுக்க வந்த சட்டத்தை வைத்து கைக்குழந்தை முதற்கொண்டு அப்பாவிகள் பழிவாங்கப் படுவது என்பது ஒரு சமூக கேவலம்.

ஆவதும் பெண்ணாலே, மனிதன் அழிவதும் பெண்ணாலே என்பது இதுதானோ??

5 comments:

Unknown said...

நீங்கள் சொலவ்து உண்மை தான்...

மணிஜி said...

என் நண்பர் இந்த சட்டத்தால் பழிவாங்கப்பட்டார். மனைவி மன்னிப்பு கேட்டதும் மன்னித்து விட்டார்.

எம்.எம்.அப்துல்லா said...

யோவ்!பதிவெழுதி திட்டு வாங்க நீர் ரெடி. பின்னூட்டம் போட்டு திட்டுவாங்க நான் ரெடியில்லை :)

ஹுஸைனம்மா said...

ஏண்ணே, சும்மா தேவையில்லாம ஒரு சட்டம் இயற்றுவாங்களா? அவசியம் வரப்போய்த்தானே அந்த சட்டம் வந்துது?

இன்றும் இப்படி ஒரு சட்டம் இருப்பதே தெரியாமல் இருட்டில் அழுதுகொண்டிருப்பவர்களும் உண்டு; இதைத் தவறாகப் பயன்படுத்துபவர்களும் உண்டு.

வெள்ளிநிலா said...

அப்துல்லா - "யோவ்" போடாமல் வழிமொழிகிறேன்