Monday, November 7, 2011

மேனகாவை அடக்கி வையுங்கள் !!!!!

பொறி வைத்து பிடிப்பது என கேள்விப் பட்டிருக்கிறீர்களா?? ஒரு எலியை கொல்ல என்ன செய்வோம்??? ஒரு எலிப் பொறி வாங்கி வந்து அதற்குள் ஒரு துண்டு பழத்தையோ அல்லது எலியின் நாக்கில் எச்சில் ஊறவைக்கும் எதாவது ஒரு விஷயத்தை தொங்க விடுவோம். தனது உயிருக்கே ஆபத்து இருக்கிறது என்பதை கொஞ்சமும் அறியாத எலி, அந்த பழத் துண்டின் மீதுள்ள ஆசையில் வந்து, பழத்தை பிடித்து இழுத்தவுடன், அந்த பொறிக்கான கதவு அடைபட்டு, எலி மாட்டிக் கொள்ளும். அப்பொழுது நமக்கு வரும் ஆனந்தம் இருக்கிறதே ஆஹா, உடனே அந்த எலியை பிடித்து ஊசியால் குத்தி, அதன் தலையில் அடித்து என எல்லா வகை சித்திரவதைகளையும் செய்து அது துடி துடித்து சாகும் வரை பொறுத்திருந்து ரசித்து நமது குரூர வன்மங்களை எல்லாம் தீர்த்த பின் அதை வெளியே வீசி எறிந்து, அதை ஒரு காக்கை கொத்திக் கொண்டு போனால் மட்டுமே நமது மனம் திருப்திப் படும். இதே போன்ற பொறி வைக்கும் முறைகளைத்தான் தொல்லை செய்யும் புலி, சிறுத்தை போன்ற வற்றை பிடிப்பதற்கும், மற்றும் தோட்டத்தில் புகுந்த யானைகளை பிடிப்பதற்கும் பயன் படுத்துவார்கள்.

ஆனால், விலங்குகளை பிடிப்பதில் இன்னொரு முறை இருக்கிறது, அதுதான் வேட்டையாடுவது. அதாவது அந்த விலங்கிடம் நேரடியாக மோதி அழிப்பது, சீறும் சிறுத்தையையோ, அல்லது பாய்ந்தோடும் மானையோ அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து அழிப்பது என்பது ஒரு வீர விளையாட்டு.

முந்தைய வகை கொலை என்பது, விலங்கிற்கு தீனி வைப்பது போல் வைத்து அதைக் கொல்வதாகும், அதாவது வஞ்சித்து, ஏமாற்றி, அந்த விலங்கின் பலவீனத்தை முழுவதுமாக உபயோகித்து கொல்வதாகும். இரண்டாவது வகை அதன் பலத்தோடு முழுவதும் மோதி, தன் உயிரை பணயம் வைத்து ஜெயிப்பதாகும். முதல்வகை கோழைகளின் விளையாட்டு, இரண்டாவது வகை வீர விளையாட்டு.

இப்படி ஒரு கோழைத்தனமான அருவருப்பான கேவல விளையாட்டைத்தான் வெள்ளைக்கார நிற வெறி ஊடகங்கள் மற்றுமொருமுறை ஆடித் தீர்த்திருக்கின்றன. அதாவது பொறி வைப்பது தப்பில்லை எனவும், பொறியில் சிக்குவதுதான் தவறு எனவும் சித்தரித்திருக்கிறார்கள். பலியானதென்னவோ பாவம் பாகிஸ்தானியர்கள்.


News of the World என்ற ஒரு வெள்ளைக்கார நிற வெறி ஊடகம். இங்கிலாந்தை தலைமையகமாகக் கொண்டு உலகின் சில நாடுகளில் கால் பதித்திருந்த இந்த ஊடகம், மக்களுக்கு பயன் தரும் நல்ல செய்திகளை என்றுமே அச்சில் வார்த்ததில்லை. 1843 ம் ஆண்டு தனது செய்தி தரும் சேவையை துவக்கிய இந்த செய்தி நிறுவனம், அரசின் நலத்திட்டங்களையோ, அல்லது தனி மனிதர்களின் சாதனைகளையோ, அறிவியல் கண்டு பிடிப்புகளையோ, மக்களின் ஆழ்மனக் கிடக்கைகளையோ எப்பொழுதுமே சேகரித்ததில்லை. மாறாக, தனி மனித அந்தரங்கங்களை, காம விளையாட்டுகளை, படுக்கையறை ரகசியங்களை மட்டுமே விற்று, பரபரப்பு செய்திகளை தந்து, ஊடகத்துக்கே உரிய கிளுகிளுப்பு மாயையை மட்டுமே காசாக்கிக் கொண்டு இருந்திருக்கிறது.

நடிகைகளின் அந்தரங்ககள், வியாபார புள்ளிகளின் காம லீலைகள், அரசாங்க அதிகாரிகளிடம் பெண்களை அனுப்பி, ரகசியங்களை கறந்த பின், இந்த கேவலமான அரசியல் வாதியை பாரீர், இப்படி ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள் விடும் ஆசாமியிடம் தான் நாட்டின் மிக முக்கியமான துறை சிக்கியிருக்கிறது என பல செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தனது விற்பனையை பெருக்கி வந்திருக்கிறது. அந்த பெண்ணை அவனிடம் அனுப்பும் கேவலமான மாமா வேலையை நான் தான் செய்தேன் எனவும் அந்த ஊடகம் பரபரப்புக்கு மத்தியில் ஒப்புக்கு ஒரு வாக்கியமாக சொல்லியது, ஆனால் அரசியல்வாதியின் பலவீனம் ஊதிப் பெரிதாக்கப் படும் பொழுது, இந்த மாமா வேலையின் கேவலத்தன்மை அடி பட்டுப் போகும்.

2010 – ம் ஆண்டில் இங்கிலாந்தையே உலுக்கிய தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிக்கிய இந்தப் பத்திரிக்கையின் முதலாளி, அப்போதைய இங்கிலாந்துப் பிரதமரான கார்டன் பிரௌனையும், அவரது தொழிலாளர் கட்சி உறுப்பினர்களையும், இந்த ஒட்டுக் கேட்பு வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும்படி மிரட்டியிருக்கிறார்.

இப்படி பரபரப்புக்கு பெயர் போன இந்த பத்திரிகைக்கு மஜர் மொகம்மது என்ற ஒரு தெருப் பொருக்கி மனப் பான்மை கொண்ட ஒருவன் 20 வருடங்களுக்கு மேல் நிருபராக வேலை செய்துள்ளான். தனது 18 வது வயதிலேயே, தனது தந்தையின் நம்பிக்கைகுரிய குடும்ப நண்பர்களின் வியாபாரத்தை, திருட்டு சி.டி. விற்பனை என்று சொல்லி அம்பலப் படுத்தி வெளிச்சத்துக்கு வந்தவன் தான் இந்த கேவலப் பிறவி. எல்லா இடங்களிலும் தன்னை ஒரு அரேபிய ஷேக்கு போல் காண்பித்துக் கொள்ளும் இவன் பல இடங்களில் பல பெயர்களில் ஊடுருவியிருக்கிறான்.

பலமுறை தவறான செய்திகளை பிரசுரித்து, அரசின் கண்டனத்தையும் பெற்றிருக்கிறான். 2004 – ம் ஆண்டில் ஒரு இஸ்லாமிய தீவிரவாத குழு அணு ஆயுதம் தயாரிக்க மூலப் பொருள் வாங்கியதாகவும், அந்த பரிமாற்றத்திற்கான முழு ஆதாரமும் தன்னிடம் உள்ளது எனவும், இந்த மூன்று நபர்கள் தான் அந்த தீவிர வாத குழுவை சேர்ந்தவர்கள் என ஒரு மூன்று பேரை இவன் அடையாளம் காட்ட, தீவிரவாதத்தால் கதி கலங்கிப் போயிருந்த இங்கிலாந்து உடனே அவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் அப்பாவிகள் எனவும், இந்த மஜர் மொகம்மது தான் பரபரப்புக்காக ஒரு புரளியை கிளப்பியுள்ளான் எனவும் தெரிய வந்தது. இப்படி பல விஷயங்களில் இங்கிலாந்து பாராளுமன்றத்தையே அதிர வைக்கும் அளவுக்கு இவனது புரளிகள் இருந்துள்ளன.

2003 –ம் ஆண்டில் இங்கிலாந்தின் மாடலிங், இசை, மற்றும் பல வியாபாரத்துறைகளில் கோலோச்சிக் கொண்டிருந்தவரும், கவர்ச்சிக் கட்டழகியாக வலம் வந்தவரும், புகழ்பெற்ற இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமின் மனைவியுமாகிய விக்டோரியாவை கடத்தப் போகிறார்கள். அந்த கடத்தல் திட்டத்திற்கான முழு ஆதாரமும் என்னிடம் உள்ளது என செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினான். கடத்தல் காரர்களாக அவன் அடையாளம் காட்டிய நபர்களை பிடித்து தீவிரமாக விசாரித்ததில் அப்படியொரு திட்டம் இருந்ததற்கான சாத்தியங்களே இல்லை என காவல் துறை கண்டறிந்தது.

இப்படி ஒரு கேவல பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த இந்த மஜர் மொகம்மதுக்கு, பாகிஸ்தானிய கிரிக்கெட் அணியுடன் ஒரு தனி விளையாட்டு விளையாடி பார்க்கும் விபரீத ஆசை திடீரென உதித்தது. இதற்கு தகுந்தாற்போல் கடந்த வருடத்தில் பாகிஸ்தான் அணியும் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. அப்பொழுது ஒரு கிரிக்கெட் சூதாட்ட வித்தகனான மஜர் மஜீத் என்பவனுடன் கூட்டணி அமைத்து பாகிஸ்தான் ஆட்டக்காரர்களுக்கு பொறி வைத்தார்கள். இதில் சிக்கிய ஏழு பாகிஸ்தானியர்களில், மூன்று பேர் மீது குற்றம் நிரூபணமாகி, அவர்களது எதிர்காலம் முழுவதும் பாழாகி இன்று சிறையில் கம்பி எண்ண வேண்டிய அவல நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

இங்கு கவனிக்க வேண்டியது, இந்த விளையாட்டு வீரர்கள் பணத்தாசை பிடித்து அலைந்தவர்கள் போலவும், பணத்துக்காக தனது ஒட்டு மொத்த விளையாட்டுத் திறனையும், தனது நாட்டின் புகழையும் விற்கத் துணிந்த கேவல பிறவிகள் போலவும் சித்தரிக்கப் படுகிறார்கள். ஆனால், இதற்குப் பின்னால் உள்ள ஊடக தகிடு தத்தங்கள் சகல சௌகர்யங்களுடன் மறைக்கப் பட்டு, பரிதாபமான விளையாட்டு வீரர்கள் தான் தேச துரோகிகள் என அடையாளம் காட்டப் படுகிறார்கள். இந்த புனித பணியை செய்த மஜர் மொகம்மது ஒரு பெரிய உத்தமன் போல் உலாவி வருகிறான். மேலும் கிரிக்கெட் எனும் புனித விளையாட்டை சூதாட்டத்தின் கோரப் பிடியிலிருந்து காப்பாற்ற வந்த பாரமாத்மாவின் மறு உருவமாகவே மஜர் மொகம்மது அவதாரமெடுத்திருக்கிறான்.

இங்கு சில கேள்விகள் :

1. பாகிஸ்தானின் குக்கிராமங்களில் இருந்து தனது திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து விளையாட வரும், இந்த சிறுவர்களுக்கு, இந்த பணம் கொழிக்கும் விளையாட்டின் அனைத்து பரிமாணங்களும், அந்தபரிமாணங்களுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் விபரீதங்களைப் பற்றிய பால பாடங்களும் எப்பொழுதாவது சொல்லிக் கொடுக்கப் பட்டதா??
2. ஒரு வெளி நாட்டு மண்ணில் விளையாடப் போகும் பொழுது, அவர்கள் யாருடன் பேச வேண்டும், அல்லது குறிப்பாக யாருடன் பேசக் கூடாது என்பது போன்ற வரையறைகள் சொல்லித் தரப் பட்டதா??
3. அப்படியே சொல்லித் தரப் பட்டிருந்தாலும், ஒரு விளையாட்டு வீரனின் தொடர்புகளை, அவனுடன் பேசும் நபர்களை, அல்லது அவனை சந்திக்கும் பத்திரிகையாளர்களை அந்த நாட்டு விளையாட்டு குழுவின் தலைமை, இம்மியளவேனும் கண்டுகொள்ளாமலிருக்குமா??
4. அப்படியே பணத்திற்கு ஆசைப்பட்டு, இந்த வீரர்கள் தங்களது திறமையையும், தன் மானத்தையும் அடகு வைக்க முன்வந்து, தப்பாட்டம் ஆடுகிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டாலும், அவர்களை தப்பாட்டம் ஆட வைத்தவர்களையும் குற்றவாளிகளாக்காமல், அவலங்களை துகிலுரிக்க வந்த மகாத்மா போல சித்தரிப்பது ஏன்??
5. லஞ்சம் வாங்குவது குற்றமென்றால், லஞ்சம் கொடுப்பது தார்மீக செயலா??
6. ஊடகம் என்றால் எந்த ஒரு தரம் தாழ்ந்த செயலையும் செய்யலாம், ஆனால், பலியாடுகள் பரிசுத்தவான்களாய் இருக்க வேண்டுமென்பது எவ்வகை நியாயம்??
7. பாகிஸ்தானியர்களுடன் இந்த அருவருப்பான விளையாட்டை ஆடிய வெள்ளைக்கார நிறவெறி ஊடகங்கள், தனது நாட்டு வீரர்களையும் இப்படி பரீட்சித்துப் பார்க்க தயாரா??
8. இன்று கருப்பர்களான பாகிஸ்தானிய வீரர்கள் மீது விசாரணை நடத்தி உடனடி தீர்ப்பு வழங்கும் சர்வதேச கிரிக்கெட் சங்கமாகட்டும், இங்கிலாந்தின் நீதிமன்றமாகட்டும், வெள்ளைக்கார தென் ஆப்பிரிக்க வீரன் ஹர்ஷெல் கிப்ஸ் மீதும் சூதாட்ட குற்றச் சாட்டு உள்ளதே அதை விசாரிக்காதது ஏன்??
9. அவன் வெள்ளைத்தோல் என்பதால், அவனை விசாரிப்பது அவசியமில்லையா??

ஊடகப் போர்வையில் உலா வரும் கேவலப் பிறவிகளே, இங்கு மேனகைகள் தொடை தெரிய ஆடையணிந்து, இடுப்பின் வளைவுகளை எடுப்பாய் காட்டி, மார்பு குலுங்க நடனமாடுவார்களாம், ஆனால், விசுவாமித்திரன் மட்டும் தன் தவத்தில் நிலைத்திருக்க வேண்டுமா??? எந்த ஊர் நியாயமிது??

மேனகாவை அடக்கி வையுங்கள். எங்கள் விசுவாமித்திரர்கள் தவத்தில் நிலைத்திருக்கட்டும்.

2 comments:

Raja said...

http://anbudan-raja.blogspot.com
ஒரு புதிய முயற்சி படித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

ம.தி.சுதா said...

உண்மையில் அந்த அமீர் என்ற அப்பாவிச் சிறுவன் தான் என் கண் மன் நிற்கிறான் அவனுக்கு திருந்த வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)

நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record

சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்