Wednesday, March 17, 2010

என்னத்தச் சொல்ல.....



இந்த மின்னஞ்சல் அனுப்பறது ரொம்ப சௌகரியமா இருந்தாலும், சுகங்கள் என்றுமே ஆபத்தானவைதானே. எங்கள் நட்பு வட்டாரத்தில், மகாபாரதத்தைப் பற்றி சுற்றில் விடப்பட்ட ஒரு மின்னஞ்சலை எனக்கு ஒரு நண்பர் ஃபார்வேர்டு (இதற்கு யாராவது சரியான தமிழ் வார்த்தை சொல்லுங்களேன்) செய்ய, அதை நான் மற்றவர்களுக்கு அனுப்ப, மற்றவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்கள் என அனுப்ப, அந்த சங்கிலி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறதோ அல்லது முடிந்து விட்டதோ தெரியவில்லை. ஆனால், வில்லங்கமே இந்த மாதிரி தொடர் மின்னஞ்சல்களில்தான் ஆரம்பிக்கிறது. நமக்கு அனுப்பியவர்களின் முகவரியோடு கூட நாம் அதை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறோம். அது நமது நண்பர்கள் வட்டத்தை விட்டு, பல வட்டங்களில் போய், பல நாடுகளில் சுற்றும் பொழுது, எத்தனையோ முகவரிகள் இணைந்து விடுகிறது. இப்படி பல முகவரிகளை பார்த்த ஒரு வக்கிர மனிதன், அதிலிருக்கும் பெண்முகவரிகளை பொறுக்கிஎடுத்து, அவர்களுக்கு வக்கிர மெயில்களை அனுப்ப ஆரம்பித்தவுடன், அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. இந்த இம்சை தொடர்ந்து நடைபெறவே, ஒரு சில மென்பொருள் துறை பெண்கள், எங்கிருந்து இது ஆரம்பித்தது என துப்புத்துலக்கி அவனை பிடித்தும் விட்டார்கள். அதற்கு முன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் அனைத்து ஆண்களையும் அவர்கள் சந்தேகப்பட்டது தான் மனதை நோகடித்து விட்டது. அவன் ஐரோப்பாவில் இருக்குமொரு தமிழன்.(வெட்கக் கேடு). பிறகு என்ன, பொது மன்னிப்பு, நான் இதை விளையாட்டுக்குத்தான் செய்தேன். இதை பெருந்தன்மையுடன் எடுத்துக் கொள்வார்கள் என நினைத்தேன்.(ங்கொய்யால கையில கிடைச்சா உனக்கு இருக்குடி) இவ்வளவு வீரியமடையும் என நான் நினைக்கவில்லை என்பது போன்ற வழக்கமான வழிதல்களுடன் அவன் நண்பர்கள் வட்டத்திற்கு வெளியே தூக்கி எறியப் பட்டிருக்கிறான். இப்பொழுதெல்லாம் பொது மின்னஞ்சல்களை முகவரிகளையெல்லாம் அழித்து விட்டு, BCC ல் முகவரி இட்டு அனுப்புகிறேன். ஆனால் இதையும் கண்டு பிடிக்க உத்திகள் இருக்கிறதோ என்னவோ, என்னைப் போன்ற ஞான சூன்யங்களுக்கு தெரியவில்லை. அவன் எங்கள் நட்பு வட்டத்தில் இல்லவே இல்லை. ஆனால் இந்த மின்னஞ்சல் என்பது எவ்வளவு ஒரு சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனமாயிருக்கிறதோ, அதிலும் நம்மை அறியாமலே நாம் ஒரு சில வக்கிர ஆசாமிகளின் வலைக்குள் இழுக்கப்படுகிறோம் என்பதை அறியும் போது என்னத்தைச் சொல்ல.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஒரு வழியாக நித்தியானந்தாக்கள் சகாப்தம் அமைதியாகி, மக்கள் வேறு பிரச்சனைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இனி அடுத்த சாமியாரோ, பாஸ்டரோ அல்லது மௌலாவோ கிடைக்கும் வரை அமைதி காக்க வேண்டியதுதான். ஊடகங்களும் அலைந்து திரிந்து, எப்படியாவது அடுத்தவரை வெகு சீக்கிரத்தில் நம்முன் கொண்டு வந்து நிறுத்தி விடும். அப்புறமென்ன கொஞ்சம் அடித்துக்கொள்ளுவோம், அடுத்தவன் சுதந்திரம், அப்பள மந்திரம், ஊடக தந்திரம் என்று பலரும் குமுறுவோம். அமைதியாகிவிடுவோம். இந்த சாமியார்களுடன் தொடர்புகொண்ட நமக்குத்தெரிந்த நபர் இருப்பின் அவரை பார்த்து கொஞ்சமும் கூசாமல் விரல்களை நீட்டி, “சே, இவுரு ரொம்ப நல்லவர்னு நினைச்சேன். இவுருமா அப்படி, என்னால நம்பவே முடியல” ன்னு சொல்லி நமது நடுநிலைமையை நிலை நாட்டிக் கொள்வோம். என்னத்தச் சொல்ல…..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பகுஜன் சமாஜ் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சி, தனதி 25வது பிறந்த நாளை கொண்டாடியது. அதற்காக லக்னௌ நகரமே நீல வர்ணம் பூசிக் கொண்டு விழாக் கோலம் பூண்டது. தனது ஆடம்பரங்களுக்கு பெயர் போன இன்றைய உத்தர பிரதேச முதலமைச்சரான மாண்புமிகு (ஹூக்கும்), மாயாவதி அவர்களுக்கு, அவரது கட்சியின் ஏழைத் தொண்டர்கள் எல்லாம் தங்களது எளிய வருமானத்திலிருந்து ஒரு மாலையை உருவாக்கி பரிசளித்தார்கள். கர்நாடகாவிலிருந்து இதற்கெனவே சிறப்பாக அழைத்துச் செல்லப்பட்ட மாலை தயாரிப்பாளர்களின் மூன்று மாத கடின உழைப்பில் உருவானதுதான் இந்த சர்ச்சைக்குரிய மாலை. என்னன்னு கேக்கறீங்களா, பூவைக் கோத்து மாலை போட்ட எவன்யா கேக்கப்போறான், இவுங்க கோத்ததெல்லாம் 1000 ரூவா நோட்டு, மொத்தம் எத்தனை நோட்டு தெரியுமா, இருவத்தி ரெண்டரை கோடி ரூபாயாம். இந்த கட்சியின் ஏழைத்தொண்டர்கள் கொடுத்த பணத்திலிருந்து 200 கோடி ரூபாய் செலவு பண்ணி ஒரு விழா, அதுல கட்சியின் தலைவிக்கு இருவத்திரெண்டரை கோடியில ஒரு மாலை, யப்பா, தலைவருங்களா, எங்கியோ போயிட்டீங்க, என்னத்தச் சொல்ல….

Tuesday, March 2, 2010

சச்சினின் சாதனை விரைவில் முறியடிக்கப்படும்.

வரலாற்று ஆதாரங்கள் எத்தனையோ கொடுக்க முடியும். கிரிக்கெட் அங்கு தோன்றியது, இங்கு வளர்ந்தது, இப்படி நிமிர்ந்தது, அப்படி நடந்தது, அழகாய் அமர்ந்தது, ஜோதியாய் ஜொலிக்கிறது என வர்ணிக்கவும் முடியும். ஆனால், ஒரு சில வெள்ளைக்கார வாலிபர்களுக்கு இளவேனிற்காலத்தில் வெய்யிலின் கதகதப்பில் நாள் முழுதும் நின்று, தங்களது தோல் நிறத்தை மாற்றி மெருகேற்ற தேவைப்பட்ட பொழுது போக்கின் பரிணாம வளர்ச்சிதான் இந்த விளையாட்டு என்பதுதான் உண்மை.

இந்தியா கிரிக்கெட்டில் உலகக்கோப்பை வென்று வரும் வரை ஹாக்கியும், மல்யுத்தமும் இந்தியா முழுக்க பரவலாகவும், கால்பந்து என்பது மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும், மற்றும் போர்ச்சுகீசிய தடயம் இன்னும் மிச்சமிருக்கும் கோவா பிராந்தியத்திலும் விளையாடப் பட்டது என்றாலும், இந்த விளையாட்டுகள் கிரிக்கெட்டுக்கு முன்பாக தனது முக்கியத்துவத்தை இழந்து இன்று பரிதாபமாக நிற்கிறதே, அந்த நிலைக்கு முழுமையாக தள்ளப் படவில்லை.

ஆனால் குறுகிய காலத்திற்குள், இந்த எல்லா விளையாட்டுகளையும் பின்தள்ளி விட்டு, கிரிக்கெட் என்பது மாத்திரம் எப்படி இவ்வளவு தூரம் ஒவ்வொரு இந்தியனையும் ஆக்கிரமித்திருக்கிறது என்பது ஒரு விந்தையாக தோன்றினாலும், இந்த ஆளுமைக்குப் பின் இருக்கும் உலகளாவிய தில்லாலங்கடிகள் மலைக்க வைக்கிறது.

முக்கியமாக தொலைக்காட்சி என்னும் ஊடகம் இந்த விளையாட்டை வளர்த்தெடுத்து நிலை நிறுத்தியதில் முக்கிய பங்காற்றியது. கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கும், கிரிக்கெட்டுக்கும் அதன் இயல்பிலுள்ள ஒரு மிகப் பெரிய வித்தியாசமே கிரிக்கெட்டை மாத்திரம் தூக்கி நிறுத்த ஒரு மிகப் பெரிய காரணமாகி விட்டது.

கால்பந்தில் போட்டி ஆரம்பிக்கும் நொடி முதல் 45 நிமிடங்களுக்கு கேமராவை வேறு எங்கும் திருப்ப முடியாது, பந்து போகும் இடங்களையும், ஆட்டக் காரர்களின் கால்களின் லாவகத்தையும் மட்டுமே காட்ட வேண்டியிருக்கும். ஹாக்கியும், கைப்பந்தும், கூடைப் பந்தும் கூட இப்படித்தான், ஆட்டத்தின் துவக்கத்திலிருந்து இறுதி வரை விளையாட்டைத்தவிர வேறு எதையுமே உங்களால் தொலைக் காட்சியில் காட்ட முடியாது. ஆனால் கிரிக்கெட் அப்படியல்ல, ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்குமான இடைவெளியில் குறைந்த பட்சம் மூன்று விளம்பரங்களை காட்டலாம். தொலைக்காட்சியின் கணக்குப் படி பார்த்தீர்களானால், ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு நிமிடத்திற்கொருமுறை, குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்கள் விளம்பரங்களுக்கான நேரம் கிடைக்கும். இதில் ஆட்டக்காரருக்கு அதிகம் வியர்த்து வடிந்தால், அவர் தண்ணீர் குடித்தால், அவரது பேண்ட் கிழிந்தால், அவருக்கு கால் வலித்தால், தும்மல் வந்தால், பந்து பழையதானால் என எத்தனையோ காரணங்களுக்காக முழு ஆட்டத்தையும் நிறுத்தி விட்டு, விளம்பரம் காண்பிக்க முடியும். அவர் நான்கு ரன்களோ, ஆறு ரன்னோ அடித்தால், பந்து பவுண்டரி லைனை தொட்டால் அந்த கோட்டில் கூட ஒரு விளம்பரம், விளம்பரத் தட்டிகள் வைத்து இந்த தட்டியின் மீது அடித்தால் இத்தனை ரூபாய் என சொல்ல முடியும். ஸ்டம்பில் படும் பந்தை காண்பித்தால் ஸ்டம்பிலும் விளம்பரம், பேட்ஸ்மேனின் பேட்டில், அவரது சட்டையில் என் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரப்படுத்த முடியும். ஆனால் கால்பந்திலே 45 நிமிடங்களுக்கு விளையாட்டைத்தவிர தவிர வேறு எதுவும் காட்ட முடியாது என்பதாலேயே, எந்த தொலைக்காட்சியும் அந்த விளையாட்டுகளில் விருப்பம் கொள்வதில்லை.

மேலும் கால்பந்தாகட்டும், மற்ற விளையாட்டுகளாகட்டும், வெறும் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரங்களில் முடிந்து விடும். அப்படியே விளம்பரம் காட்டப்பட்டாலும் இந்த இரண்டு மணி நேரத்தில் இரண்டு முறைதான் காட்ட முடியும். ஆனால் கிரிக்கெட்டில் அப்படியல்ல, ஒவ்வொரு 7 நிமிடத்திற்கொரு முறையும், தொடர்ந்து 8 லிருந்து 9 மணி நேரம் வரை உங்களால் விளம்பரம் செய்ய முடியும். அப்படியானால் இந்த விளம்பர வருமானத்தை கணக்கெடுத்துப் பாருங்கள். இந்த விளம்பர உத்தியை சரியாக பயன் படுத்திக் கொண்ட விளம்பரதாரர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தார்களை மொய்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதில் வரும் பிரம்மாண்ட வருமானத்தின் வண்ணக் கனவுகள், தொலைக்காட்சி நிறுவனங்களை கிரிக்கெட் விளையாட்டை மட்டும் காதலிக்க நிர்பந்தித்தது.

இவர்களும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை நோக்கி படையெடுக்க, வாரியம் ஒரு பணம் காய்க்கும் மரமாகிப் போனது. ஜக்மோகன் டால்மியாக்களும், சரத்பவாரும் வாரியத்தலைவர் பதவிக்கென குடுமிபிடி சண்டை போட காரணம், இந்த விளையாட்டில் விளம்பரங்கள் மூலமாக வரும் அளவிட முடியா பணம் மாத்திரமே. ஆக வாரியமும் வீரர்களை அதிக போட்டிகளில் விளையாட நிர்பந்திக்க ஆரம்பித்தது. அதிக போட்டிகள் – அதிக விளம்பரம் – வீரர்களுக்கு அதிக சம்பளம் – வாரியத்துக்கு அதிக பணம் என எனக்கு உனக்கு என அனைவரும் அள்ள ஆரம்பித்தனர். இன்னமும் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த களேபரத்தில், ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு சற்றும் குறைவில்லாத திறமை கொண்டிருந்த கேரள போலீஸ்காரரான விஜயனாகட்டும், கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தை பல மட்டைகளுக்கு நடுவிலிருந்து அன்னப் பறவை பாலைப் பிரித்தெடுக்கும் லாவகத்துடன் பிரித்தெடுத்து, கோல் அடிக்கும் தன்ராஜ் பிள்ளையாகட்டும், புள்ளிமானாய் துள்ளி ஓடி ஹாக்கியில் முன் வரிசை ஆட்டக்காரராக இருந்த பர்கத் சிங் ஆகட்டும் இந்த திருவிழா கூட்டத்தில் சந்தடியில்லாமல் காணாமல் போய்விட்டார்கள். ஏனெனில் அவர்கள் விளையாடிய விளையாட்டுகளை நேசிக்க விளம்பரதாரர்கள் யாருமில்லை.

இப்படி கிரிக்கெட் தன் இயல்பிலேயே விளம்பரங்களுக்கென பிறந்த விளையாட்டாகிப் போனதால், அதில் ஆடும் வீரர்களும் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தார்கள். இங்கிலாந்தில் ஒரு அரங்கத்தில் அமர்ந்து ஒரு போட்டியை ரசித்துக் கொண்டிருந்த சர் சோபர்ஸ் தனது கால கிரிக்கெட் விளையாட்டை நினைவு கூறும் பொழுது இப்படியாக கூறினார். “ எங்களுக்கெல்லாம் கிரிக்கெட்டில் அதிக பட்சமாக கிடைத்த பரிசு ஒரு சைக்கிள்தான்” என்றார். ஆனால், இன்றைய வீரர்களை விலையுயர்ந்த ஆடம்பர கார், மற்றும் லட்சக்கணக்கான ரூபாய்களை பரிசளித்து களத்தில் நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது. இவர்கள் இல்லையேல் கிரிக்கெட் உலகமும் இல்லை, விளம்பரங்களும் இல்லை என ஆகிவிடும்.

வரும் காலத்தில் விளம்பரங்களுக்கு வளைந்து கொடுக்கும் வண்ணமாக இந்த பணம் காய்க்கும் விளையாட்டுக்கு புதிய பரிமாணங்கள் கொடுக்கப்படும். இப்பொழுது T 20 என்ற புதிய வடிவம் எல்லோரையும் கவர்ந்து வருகிறது. இனி வரும் காலங்களில் இதையும் சுருக்கியோ, நீட்டியோ வேறொரு வடிவம் தரப்படலாம். இப்பொழுதே இந்தியாவில் நடக்கிற ஹாக்கி உலகக் கோப்பையாகட்டும், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளாகட்டும், இந்தியாவுக்கு சர்வதேச விளையாட்டு அரங்கில் ஒரு முக்கியத்துவம் தர சகல தகுதிகளையும் கொண்ட இந்த போட்டிகளுக்கான விளம்பரங்கள், பண பலம் படைத்த IPL 20 போட்டிகளின் விளம்பரங்களுக்கு முன் நிற்க முடியாமல் தவிடு பொடியாகி விட்டது.

இப்படிப்பட்ட பண வலைகள் விரிக்கப் படும்வரை, கிரிக்கெட் என்னும் விளையாட்டு பணம் தரும் இயந்திரமாக இருக்கும்வரை சச்சினைப் போன்றவர்கள் தினம் தினம் புதிய சாதனைகளை நிகழ்த்த நிர்பந்திக்கப் படுவார்கள். பண பலத்தால் நிறைய வாய்ப்புகள் அவர்களுக்கு அளிக்கப்படும். அவர்கள் நிகழ்த்தும் சாதனைகளை முறியடிக்க இன்னும் நிறைய சச்சின்கள் பிறப்பார்கள்.

சாதனை படைத்த சச்சினுக்கு வாழ்த்துக்கள். அவரது தனிப்பட்ட விளையாட்டுத்திறமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் இந்த சாதனையும் சீக்கிரத்தில் முறியடிக்கப்படும். விளையாட்டுத் திறமை அந்த சாதனையை முன்னெடுத்துச் செல்வதை விட, சாதனையை வைத்து பணம் பண்ணும் வித்தைகள் தான் சாதனையாளர்களை உருவாக்கும்.

Wednesday, February 24, 2010

திரௌபதி சேலைய யார் இஸ்தா உனக்கு இன்னா??

நம்ம தம்ஸ் அப் தங்கம் ஒரு மீட்டிங் போட்டுனுக்கறாரு, இந்த தம்ஸ் அப் தங்கம் யாருன்னு கேக்கறியா, அப்டி கேளு, இன்னாத்துக்கு சொல்றேண்ணா, ஒரு தலீவரு அப்டீன்னு ஃபார்ம் ஆயிட்டாக்கா, நாளைக்கு வரலாறு எழுத சொல்ல மேட்டரே இல்லண்ணா எப்டி, அதான், கரீக்டா நோட் பண்ணிக்க,

நம்ம தங்கம் அண்ணன் பேரு தங்க ராசு, அண்ணன் ஒரு போர்ல வார் பண்ண சொல்ல, இடது கை பெரு விரலை ஒரு கபோதி கட் பண்ணி வுட்டுட்டான், ஆனா அண்ணன் அவன் தலை முடி முழுசையும் வாயாலயே கடிச்சு துப்பிட்டாருங்கறது தனி கதை. என்னிக்கு அண்ணனுக்கு பெருவிரல் போயிருச்சோ, அன்னீலெருந்து அண்ணன் பேரு தம்ஸ் அப் தங்கம். இப்ப வரலாறு புரிஞ்சுடுச்சா, கம்னு சைலண்டா மீட்டிங்க்கு வா.

தலீவரு மீட்டிங்ல ஒரு சோபாவுல இருக்க சொல்ல, லெப்டுல நம்ம பக்கெட் பாரதி, பலூன் பரமசிவம், கண்மை கரீம், பந்தல் பாபு, ஸ்டெம்ப் சிந்தாமணி, ஸ்பேனர் மகேஷ் அல்லாரும் குந்தினுக்கறாங்க, ரைட் சைட்ல நம்ம ஆத்துக்கடை அலமேலு, மல்லீப்பூ மரகதம், வண்டிக்கார சின்னான், கர்சீப் கதிர்வேலு, பைப் சேகர், பினாயில் பீட்டரு, சைலண்ட் சங்கரு, அண்டர்கட் ஆறுமுகம்னு அல்லாரும் குந்தினு இருக்க சொல்ல அவசரமா ஓடி வந்து மூச்சு வாங்க நின்னான் நம்ம காத்தாடி கந்தன். “இன்னா தல, அவசரமா மீட்டிங்னு சொன்னியே, எதுனா மேட்டர் பிகுருசலா ஆயிடுச்சா தல? யாருன்னு மாத்திரம் சொல்லு, முடிச்சுட்டு வந்து அப்புறம் பேசறேன்” னு வீரவுரை நிகழ்த்த, அவனை தன் கையசைவிலேயே அமரச் சொன்னார் தம்ஸ் அப். அவனும் ஜோதியில் ஐக்கியமாகிவிட, நீண்ட யோசனையில் இருக்கும் தம்ஸ் அப்பை பார்த்து எல்லோரும் பிரச்சனை ஒரு பெரிய லெவல்ல இருக்கும் போலன்னு ரோசனையில இருக்க, தம்ஸ் அப்பின் தொண்டை செருமல் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது.

“நான் இன்னாத்துக்கு அல்லாரையும் வர சொன்னேன்னா, இப்பல்லாம் நம்ப தொழில்ல ஒரு மஜாவே இல்லாம போயினுக்குது, வாரத்துக்கு ஒரு தபா எதாவது கேசு, கீசுன்னு போட்டு போலீஸ் உள்ள தள்றானுவ, அவனுங்க போதைக்கு நம்பள ஊறுகாய் ஆக்கறானுவ, இத்து ஒரு சைடுலன்னா, இந்த பப்ளிக் பண்ற அட்டூழியம் தாங்க முடியாம போயின்னுக்குது, A T M னு ஒரு மிசின் வெச்சுகினு, எத்தினி துட்டு வோணுமோ அத்தினி மாத்திரம் எட்த்துகுனு போய்னுக்கறாங்கோ, வூட்ல பணமே வைக்கலைன்னா நம்மாளுங்கெல்லாம் வேற இன்னா தொழில் செய்யறது, எத்தினி நாளைக்குத்தான் பார்க்கிங்ல இருந்து பைக் கண்ணாடி, ஸ்கூட்டர் கண்ணாடின்னு உஷார் பண்ணி சோறு துன்றது, அதனால நான் ஒரு முடிவு பண்ணீட்டேன்”.

இந்த முடிவைக் குறித்த ஆவல் தன் சகாக்களிடம் அதிகம் உருவாக வேண்டும் என்ற உள்நோக்கமோ என்னவோ, தம்ஸ் அப் பலூன் பரமசிவத்தை ஒரு பார்வை பார்க்க, அவனும் தயாராயிருந்த சோடாவை திறந்து கொடுக்கிறான், சோடாவை ஒரு மிடறு குடித்த தம்ஸ் அப், மறுபடியும் ஒரு முறை தொண்டையை கனைத்தார். கூட்டத்திலிருந்த சலசலப்பு அடங்கவும் எல்லோரையும் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் முடிவை திட்ட வட்டமாக சொன்னார்.

“நாம அல்லாரும் சாமியார் ஆயிர்லாம்னு முடிவு பண்ணீட்டேன்”

இன்னாது என கோரஸாக எல்லோரிடமிருந்தும் ஒரு ஆச்சரியக் குரல் வர, அதை வெகுவாக எதிர்பார்த்திருந்த ஸ்வாமி தம்ஸ் அப் தங்கமானந்தா ஒரு புன்னைகையுடன் அதற்கு பதிலளித்தார்.

“இன்னான்னு கேக்கறவன் பாலு குடிக்கற கொயந்த, எப்டீன்னு கேக்கறவந்தான் வளரத்துடிக்கும் சீடன்” என்று தன் முதல் தத்துவத்தை உதிர்த்தார்.

எல்லோரும் ஆச்சரியமும் குழப்பமுமாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருந்த வேளையில் தன் முகத்தில் ஒரு தெய்வீக தேஜஸை வரவழைத்துக் கொண்ட சுவாமி தம்ஸ் அப் தங்கமானந்தா எல்லோரையும் பார்த்து வலது கையை உயர்த்தி அமைதி என்பது போல சைகை செய்தார். சலசலப்பு அடங்கியவுடன் ஒரு புன்னைகையையும் நெற்றிச் சுருக்கங்களையும் வலிய வரவழைத்துக் கொண்ட சுவாமி, “நான் இன்னாத்துக்கு நம்ப லைனை மாத்திக்கலாம்னு சொல்றேண்ணா, நம்ப தொழில்லயும் சரி, சாமியார் தொழில்லயும் சரி, கடைசீல லாபம் இன்னாவோ ஒண்ணுதான். ஆனா இதுல இன்னான்னா ஒரு பாலீஸா துட்டு பார்க்க முடியும், போலீஸ் பேஜாரு இல்ல, இன்கம்டேக்ஸ் ரிஸ்க் எதுமே கடியாது. பப்ளிக் அவுனுங்களா வந்து துட்டு குடுத்துட்டு கும்புட்டுட்டு போவானுங்க, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆயிகினே போனா, சீக்கிரமா பாலிடிக்ஸ்ல என்டிரி குடுக்கலாம். ஆனா, நாம இப்ப இருக்கறாப்ல இப்படியே இதே தொழில்ல இருந்தாக்கா, போலீஸ்கிட்ட பேர் வாங்கி, அப்பாலிக்கா கட்சியில பேர் வாங்கி எம். எல். ஏ ஆகாங்காட்டியும் வயசு முடிஞ்சு போகும். இந்த லைன்ல அந்த பேஜார் அல்லாம் கடியாது, துட்டுக்கு துட்டும் ஆச்சு, மரியாதைக்கு மரியாதையும் ஆச்சு, இன்னா நான் சொல்றது? என்று கேட்கவும் கூட்டத்திலிருந்தவர்கள் ஏதோ புரிந்தது போலவும், ஆனால் முழுமையாய் புரியாததை வெளிக் காட்டிக் கொள்ள விரும்பாமல் ஒரு குன்சாக தலையை ஆட்டி வைத்தனர்.

அடுத்ததாக சுவாமிகளின் கட்டளை மின்னல் வேகத்தில் பறந்தது, பந்தல் பாபு பந்தல் போட்டான். சைலண்ட் சங்கர் மைக்செட் கட்ட, அண்டர்கட் ஆறுமுகமும், பக்கெட் பாரதியும் போஸ்டர் அடித்து ஒட்டி மாநகரத்தையே களேபரப் படுத்தி விட்டார்கள். ஆத்துக்கடை அலமேலு, மல்லீப்பூ மரகதம் இருவரும் பான் பராக் போடுவதை ஒரு வாரமாக நிறுத்தி விட்டு, பியூட்டி பார்லர் போய் ஒரு எக்ஸ்ட்ரா மேக்கப்புடன் வந்து பந்தலில் தங்களது சக பரிவாரங்களுடன் வளைய வந்தார்கள். ஒரு வார விளம்பரத்துக்குப் பின் அந்த ஆன்மீக சொற்பொழிவு நாளும் வந்தது. வரிசையாக பிளாஸ்டிக் சேர்கள் இடப்பட்டு, சிஷ்ய கேடிகளான அனைவரும் திரு நீறும் சந்தனமும் பூசி, பக்த கோடிகளாக நிற்க, சொற்பொழிவின் ஒத்திகை நடந்தது.

"டாய், மைக் கரீக்டா இக்குதா, யார்ராது மைக்காரன், இட்னு வாங்கடா அவன, இதா பாருப்பா, நான் வாழ்க்கையில மொத வாட்டி மைக்ல பேசப் போறேன், அதும் ஆன்மீகம் பேசப் போறேன், இடையில எங்கனா உன் மைக்கு கீ, கூன்னுச்சு, அப்புறம் மவனே உம் மூஞ்சி லவுட் ஸ்பீக்கர் ஆயிரும் பாத்துக்க,


அப்புறம், டேய் பைப் சேகர், அந்த ஸ்கிரீன் கரீக்டா தொறந்து மூடுதா, நான் ஷ்டார்ட் பண்ணும்போது கரீக்டா தொறக்கணும், தெர்தா, இன்னா தெர்தா. ம்…….அப்புறம்"

"டேய் கரீம், மொத தபா பேசப் போறேன் நான், எதுனா பிரச்சனை ஆச்சுன்னா அதுக்கு இன்னா பண்ணப் போற?"



"அண்ணே, நீ பேஜார் ஆவாதண்ணே, நீ பாட்டுக்கு பேசிண்ணே இருண்ணே, நம்ம பசங்களை அல்லா எடத்துலயும் நிறுத்தீருக்கேன் அவுங்க பாத்துப்பாங்கண்ணே."

"டேய் பீட்டரு, சின்னான், நீங்க ரெண்டு பேரும் கையில ஒரு டார்ச் லைட் வெச்சுக்கோங்க, கூட்டத்துல இருந்து யாராவது கேள்வி கேட்டா அவுங்க முகத்துல டார்ச் அடிக்கணும் தெர்தா,"

"டேய் சிந்தாமணி, உண்டியல் எத்தினி வெச்சிருக்க, மவனே உண்டியல்ல எவனா துட்டு போடாம போனா, அவன் செவுளு பிகுலு ஊதணும் தெர்தா"

"ரைட் ஆளுங்க எல்லாம் வர்ற டைம் ஆயிருச்சு, எல்லாம் கரீக்டா அவுங்க அவுங்க எடத்துல நில்லுங்க, ஏ மரகதம், அலமேலு, லேடீஸ் சைடுல அல்லாம் கரீக்டா இக்குதா, ஒரு பிரச்சனையும் வரக் கூடாது இன்னா….. "

மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்து, சேர்கள் எல்லாம் நிரம்பி விட்டது. உடனே பந்தல் பாபு ஓடி வந்து "அண்ணே அல்லாம் கரீக்டா போயினிக்குதண்ணே, இப்ப ஷ்டார்ட் பண்ணுங்கண்ணே" என்றதும் நம் தம்ஸ் அப் சுவாமிகள் வந்து மேடையில் விரிக்கப் பட்டிருந்த மெத்தையில் அமர்ந்து விட்டு மைக்கை மூன்று தரம் தட்டி சரி பார்த்துக் கொண்டார்.

இடது பக்கத்தில் திரைக்கு பின்புறம் நின்ற பைப் சேகரைப் பார்த்து சுவாமிகள் கண் சாடை காட்ட, பைப் சேகரும் திரை கட்டியிருந்த கயிற்றைப் பிடித்து இழுக்க திரை மெதுவே விலகி சுவாமிகளின் மீது ஒரு ஒளி வட்டம் வரும்படி லைட் ஃபோகஸ் செய்யப் பட்டது. அதே சமயத்தில் பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்த விளக்குகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அணைக்கப் பட்டன.

சுவாமி தனது பக்திப் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

“எல்லாருக்கும் வணக்கம், நதியெல்லாம் ஓடி கடல்ல கலக்கறது கணக்கா, பூவெல்லாம் பூத்து ஒரு தோட்டத்துல மணக்கறது கணக்கா நீங்க எல்லாரும் இப்ப எங்கெங்கெயோ இருந்து வந்து இந்த ஒரு பந்தல்ல குந்தினுக்கறீங்கோ, மனுஷன் பாக்கற பார்வைல தான் வித்தியாசம் இக்குது, அது இன்னான்னா, இப்படித்தான் சீதா காட்டுக்குள்ளாற குட்சைல குந்தினுக்கறப்போ, ஒரு ஆட்டுக்குட்டி அப்டிக்கா வந்துக்குது, அத்த பாத்த சீதாம்மா, அத்து என்க்கு வேணுன்னு சொல்ல, ராம்ர் தம்பி லட்சுமணரு அத புட்சுணு வர போகங்காட்டியும், சைக்கிள் கேப்புல அங்க வந்த நராகாசுரன் இன்னா பண்ணான்னா, சீதாம்மாவை லவுட்டிகினு போயே போய்ட்டான்.”

இப்பொழுது பார்வையாளர் பகுதியிலிருந்து ஒருவர் எழுந்து,

“சாமி, நீங்க சொல்றது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு, அது ஆட்டுக்குட்டியல்ல மான்குட்டி, அப்புறம் சீதாவை அபகரிச்சது நரகாசுரன் அல்ல, இலங்கையின் மன்னன் ராவணன்……”

“யார்ராது, டேய் பீட்டரு, லைட் அடி,” என்றதும் பீட்டர் அவர் முகத்தில் லைட் அடிக்க, சுவாமிகள் அவரைப் பார்த்து, “நீயாப்பா அத்து, இன்னா வோணும் உன்க்கு, டேய், அவுர சைட்ல இட்னு போயி இன்னா வேணுன்னு கேட்டு குடுங்கடா,” மனதுக்குள் “(ங்கொய்யால நம்ம லைன மாத்திகினு வேற பிசினஸ் பண்லாம்னா வுடமாட்டானுங்க போலக்குதே)”

இப்பொழுது சுவாமிகள் மறுபடியும் கூட்டத்தைப் பார்த்து புன்னகை வழியும் முகத்துடன், “தடங்கலுக்கு வருந்துகிறோம், அத்து இன்னாண்ணா, மனுஷ வாழ்க்கைங்கறதே நிறைய வேஷம் நிறைஞ்சதா இக்குது. மனுஷன் திடீர் திடீர்னு வேஷம் கட்டறான், வேஷம் மாத்தறான், இப்ப நம்ம திரௌபதி அம்மாவ பார்த்தாக்கா, அவுங்க வாழ்க்கைல எத்தினி கஷ்டம், எத்தினி துன்பம், ஆனா அல்லாத்துக்கும் அவுங்க கிட்ட ஒரே பதில்தான் இருந்துச்சு, பொறுமை, இந்த பொறுமையாலதான் எல்லாத்தையும் சாதிச்சாங்க, ஒரு காட்டுப்பய வந்து அவுங்க சீலைய அவுத்து அவமானப் படுத்தறேன்னு வந்தான். அவன் பேரு சங்கமித்திரன், அவன் சேலைய உருவுரான் உருவுரான் அத்து மைல்கணக்கா வந்துகுனே இக்குது, திரௌபதி அம்மா சிரிச்சுகுனே இக்குறாங்க, அவுனும் உருவி உருவி பேஜாரகிப் போய் இது இன்னாடா மேட்டர்னு திரும்பி ஒரு லுக் வுட்டப்போ, அங்க கையில சுதர்ஸன சக்கரத்தை வெச்சுகுனு விநாயகர் சிரிச்சுகினே நின்னாரு, இன்னா கணபதி நீதானா அத்துன்னு அவன் கேக்க சொல்லோ ............”

இதற்குள் கூட்டத்திலிருந்து இன்னொருவர் எழுந்து, “சுவாமி, எங்கியோ தப்பு நடக்குது, திரௌபதியோட சேலையை அவுத்தது சங்கமித்திரன் இல்ல, அது துச்சாதனன், அப்புறம் அவுங்கள காப்பாத்தனது விநாயகர் இல்ல, கிருஷ்ண பரமாத்மா”

“இத்து யார்றா, புச்சாக்குது, டேய் பீட்டர் லைட் அடிடா”

லைட் கொஞ்சம் விலகி அடிக்க, சுவாமிகள் ஒருவரை பார்த்து "யாருப்பா அது, சந்தேகம் கேட்டது, நீயா ?" என ஒருவரை கேட்க, அவர் கோணலான வாயுடன், “நான் இல்ல ஷாமி, இந்தா இவுருதான் ஷாமி, நான் மொதல்லயே டவுட் கேட்டு எல்லாம் கிளியர் ஆயிருச்சு ஷாமி, இப்ப இவருக்கு பதில் சொல்லுங்க”

"டேய், பீட்டரு, அந்தாள மேடைக்கு இட்டுணு வா,"
என்றார் சுவாமிகள். அவரை மேடைக்கு தள்ளிக் கொண்டு வந்ததும், திரையை மூடச்சொல்லி மைக்கையும் ஆஃப் பண்ணிய சுவாமிஜியையும் அவரது சீடர்களையும் பார்த்து அவருக்கு ஏதோ ஒன்று புரிய, அவர் கையெடுத்து கும்பிட்டு, “சாமி, தெரியாம கேட்டுட்டேன் சாமி, என்னை விட்டுடுங்கோ” என அழுக, சுவாமிஜி அவரைப் பார்த்து,

“ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லு நான் உன்னை விட்டுடறேன்”,

“சுவாமி, கேளுங்கோ, நான் பதில் சொல்லிடறேன், ஆனா என்ன ஒண்ணும் பண்ணாதீங்கோ,”

“சரி இப்ப இதுக்கு பதில் சொல், சங்கமித்தரனோ இல்ல துச்சாதனனோ, திரௌபதி சேலைய யார் இஸ்த்தா உனக்கு இன்னா பிரச்சனை, இதுக்கு மாத்திரம் பதில் சொல்,”

இப்படி அரை மணி நேரமாக அந்த மனிதர் சிஷ்ய கோடிகளால் கவனிக்கப்பட, வெறுத்துப் போன பக்தர்கள் கூட்டம் திரையை திறந்து வந்து பார்த்தால் மேடையில் ஒருவரும் இல்லை. அப்பொழுது தான் ஒரு கேஸ் புக் பண்ண அந்த பக்கமாக வந்த போலீஸ் காரர்கள், தம்ஸ் அப் மற்றும் அவர் சகாக்கள் அனைவரையும் அள்ளி ஜீப்பில் போட்டுக்கொண்டு போனதும், தம்ஸ் அப் தங்கத்தின் சாமியார் கனவு அத்தோடு சமாதியானதும் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?



பின் குறிப்பு : தம்ஸ் அப் தங்கம் அடுத்த வாரமும் வேறொரு அவதாரத்தில் தொடருவார்.

Friday, February 19, 2010

வாங்க பாஸ், எதாவது செய்யலாம்

தமிழ்

இது மனிதனின் குரல்வளையிலிருந்து புறப்பட்டு, நாவால் நயப்பட்டு, உதடு கிழித்து வெளிக்கிளம்பும் ஓசையின் மறு உருவம் மட்டும் தானா,

ஒலிகளின் ஏற்றத்தாழ்வுகளால் உருவெடுத்து, ஒருவரிலிருந்து பலருக்குள் ஊடுருவும் காற்றின் மறு வடிவமா,

ஓசையெனும் உருவிலிருந்து எழுத்து என்னும் வடிவத்திற்கு வளர்ச்சியடைந்த பரிமாண விந்தையா,

எழுத்தெனும் மலர்கள் ஒரு சேரக் கட்டப்பட்டு வார்த்தைக் கதம்பமாகி வண்ணக் காட்சி தரும் வித்தக சரமா,

ஏ யப்பா, எப்புடியெல்லாம் பில்டப் குடுக்க வேண்டியிருக்கு, நான் சொல்ல வந்தது இதுதான். போன வருஷம் செப்டெம்பர் மாதம் நம்ம இணைய தளபதி (நல்லா பார்த்துக்குங்க, இ ணை ய தளபதின்னு சரியா எழுதியிருக்கேன்) கார்க்கி உலகத்தமிழ் மாநாட்டில் பதிவர்களாகிய நாம் என்ன செய்யலாம்னு ஒரு பதிவு போட்டாரு, (http://www.karkibava.com/2009/09/blog-post_28.html). இதற்கு நாமெல்லாருமே ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தோம்.

இப்பொழுது மாநாடு மே மாதம் நடக்க விருக்கும் நிலையில், திட்டங்கள் இப்பொழுதிருந்தே தீட்டுவது நலமாயிருக்கும் என நினைக்கிறேன்.

வாங்க பாஸ், எதாவது செய்யலாம்.

Tuesday, February 16, 2010

எங்க அப்பா ஒரு காமெடி பீஸூ

காதலர் தினத்தன்று, மாலைப் பொழுதின் மயக்கத்திலே வண்டியை உருட்டிக் கொண்டு கே.கே. நகரின் அந்த சரித்திர பிரசித்தி பெற்ற அரங்கத்துக்கு சரியான நேரத்துக்கு சென்றேன். வண்டியிலிருந்து இறங்கும் பொழுதே எதிரே தரிசனம் தந்தார் நம் கார்க்கி. பச்சை தேநீர் சட்டை அணிந்து காதலர் தின நினைவுகளோடு தனக்குத்தானே பேசிக் கொண்டு நடந்து கொண்டிருந்தவருக்கு நிர்மலா பெரியசாமியைப் போல் ஒரு வணக்கம் சொன்னேன். திடுக்கிட்டு சுதாரித்தவர், புன்முறுவலோடு வணக்கம் சொன்னார். பரஸ்பர விசாரிப்புகளுடன் விழா அரங்கை அடைந்தோம். அரங்கத்தில் நாங்கள் தான் இரண்டாவதாக வந்தோமோ என நினைத்தால் அட ஆமாம். முதலில் வந்தது கேபிள் மற்றும் பரிசல் மற்றும் உறவும், சுற்றமும், நட்பும்.

நேரம் ஆக ஆக பதிவர்கள் ஒருவர்பின் ஒருவராக வர அரங்கம் நிறைந்ததோடல்லாமல், பதிவர்களின் அன்பினால் ஒவ்வொருவர் மனமும் நிறைந்தது. முக்கிய விருந்தினர்கள் வர தாமதமானதை மிக சாமார்த்தியமாக சமாளிக்க நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேகா (கலக்கல் பார்ட்டிப்பா இவுரு) ஒவ்வொருவரின் அறிமுகப் படலத்தை ஆரம்பித்து வைத்தார்.

முதலில் பிரமிட் நடராஜன் வர, பின்னாலேயே மற்ற எல்லா நாட்டாமைகளும் வந்து விட, தொகுப்பாளர் நிகழ்ச்சியின் ஆரம்பத்திற்கு அடையாளமாக தமிழ்தாய் வாழ்த்து பாடவைத்தார். ஏன் எல்லோரும் இப்படி மெதுவாக உதட்டுக்கு நடுவில் பாடுகிறார்களே என்று பார்த்தால், பாதிப் பேர் முதல் சில வரிகளுக்கு மேல் வெறும் உதட்டை மாத்திரம் அசைத்தனர். வாழ்த்துதுமே, வாழ்த்துதுமேவுக்கு பிறகு நிகழ்ச்சி ஆரம்பமானது. முதலில் வரவேற்புரை, பொன்னாடை போர்த்துதல், புத்தக வெளியீடு, நாட்டாமைகளின் வாழ்த்துரைகள், எழுத்தாளர்களின் ஏற்புரைகள், பதிவர்கள் வாழ்த்துரைகள் என நிகழ்ச்சியில் சுவராஸ்யத்திற்கு பஞ்சமில்லாதிருந்தாலும் ஒரு சில விஷயங்கள் மனதை நெருடவே செய்தன.

ஒரு நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினராக நீங்கள் அழைக்கப் பட்டால், அங்கு ஏதோ அழைத்தார்கள் போனோம் என கடமைக்காக செல்வதை விட்டுவிட்டு, எதற்காக அழைத்தார்களோ அதற்கு முற்றிலும் ஆயத்தமாக செல்வதே, அந்த அழைப்புக்கு நீங்கள் செய்யும் மரியாதையாகும். புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப் பட்டிருக்கிறீர்கள், உங்கள் பொற்கரங்களால் ஒரு படைப்பாளியின் படைப்பு முதல் முதலாக இந்த உலகை காணப் போகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டியது அந்த முக்கிய மனிதரின் தலையாய கடமை. அதை விட்டுவிட்டு எனக்கு நேரமில்லை, அதனால் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று படிக்க முடியவில்லை என சப்பை கட்டு கட்டுவது எந்த நாகரீகத்தில் சேர்த்தி என தெரியவில்லை. ஒருவேளை இவர்கள் கைகளால் வெளியிடும் புத்தகத்தில் இவர்களுக்கு சற்றும் உடன்பாடில்லாத கருத்துக்கள் இருக்குமானால், அதற்கு இவர்கள் பொறுப்பேற்பார்களா??

பிரமிட் நடராஜன் தன் பங்குக்கு கேபிளின் கதைகளை சிலாகித்து பேசிவிட்டார். “கேபிள் சங்கரின் கதைகளை படித்தால், ஒரு 55 வயது மனிதரின் முதிர்ச்சி தெரிகிறது” என்று சொல்லி, அவரை நிரந்தர யூத் ஆக்கி விட்டார். அவர் ஒன்றோ அல்லது இரண்டு கதைகளையாவது படித்திருப்பார் போல் தோன்றுகிறது. ஆனால் அஜயன் பாலா, ம்ஹூம் ……. சாரி பாஸ். நீங்கள் அரங்கத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் அமர்ந்திருந்தீர்கள். இந்த சமயத்திலாவது நீங்கள் வெளியிட்ட பரிசலின் புத்தகத்தை சில பக்கங்கள் புரட்டி படித்திருக்கலாம்.

இங்கு பிழை எங்கு நடந்தது என தெரியவில்லை. பதிப்பகத்தார்தான் புத்தகத்தை விருந்தினரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா, அல்லது படைப்பாளியா என தெரியவில்லை.

கார்க்கியின் வாழ்த்துரை பதிவர்களுக்கு ஒரு உற்சாக டானிக். எப்பொழுது வேண்டுமானாலும் எழுதுங்கள், எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள், ஆனால் எழுதுங்கள் என்றார்.

அனைவரும் கேபிளிடமும், பரிசலிடமும் கையழுத்து பெறுவதில் மிக ஆர்வம் காட்டினோம். கூட்டம் முடிந்து வழக்கம் போல பதிவர்கள் குழுக்குழுவாக கே.கே நகர் முனுசாமி சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அண்ணன் அப்துல்லா, நர்சிம், சுந்தர்ஜி, பைத்தியக்காரன், ஆதி, அடியேன் எல்லோரும் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென ஒரு மாநகர காவல் கார் ஒன்று வந்தது. சில விநாடிகள் அங்கு கும்பலாய் நின்றிருக்கும் அனைவரையும் பார்த்தார் அந்த கடமை தவறா காவலர். பதிவர்கள் பலர் கையில் சிகரெட் வேறு புகைந்து கொண்டிருக்கிறது. சரி, பொது இடத்தில் சிகரெட்டா என தீட்டப் போகிறார் என நினைத்தேன். ஆனால் அந்த கடமை வீரரை யாருமே ஒரு பொருட்டாகவே எண்ணாமல் அவரவர் அரட்டையில் மூழ்கியிருக்க, காவலர் பொறுமை இழந்து விட்டார். “சார், யார் நீங்க, இப்படி கும்பலா எதுக்கு நிக்கறீங்க” என கேட்டவுடன், அப்துல்லா அண்ணன் “அய்யா, நாங்கெல்லாம் இலக்கியவியாதீங்க, இலக்கிய கூட்டம் முடிஞ்சுட்டு நிக்கறோம்” என்று சொன்னவுடன், காவலருக்கு முகம் சுருங்கிப் போய் விட்டது. இங்க எதாவது துட்டு தேத்தலாம்னு பார்த்தா, முதல்லயே இவனுங்க பெரிய வியாதிங்கறானுங்களே, போலாம் ரைட் என சென்று விட்டார்.

விழாவின் ஹைலைட் கேபிள் அண்ணனை அவரது மகன் அறிமுகம் செய்து வைத்ததுதான்.

“எங்கப்பா ஒரு காமெடி பீஸூ”

Monday, February 8, 2010

பெண்ணியம் பேசுவோம் வாருங்கள்

முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்த எதிர்ப்புக் குரல்கள், இன்று நாடெங்கும் ஒலிக்கும் அபய குரல்களாக மாறி விட்டிருக்கிறது. குடும்பம் என்ற கட்டுக் கோப்பான அமைப்பை சிதைத்து, வெறியாட்டம் ஆட ஒரு வலிமையான ஆயுதமாக பெண்ணுரிமைச் சட்டங்கள் மாறி வருகின்றன. இந்த சட்டத்தை எவ்வளவுக்கெவ்வளவு ஈனத்தனமாக பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு தூரத்தையும் இந்த பெண்ணிய வாதிகள் கடந்து விட்டார்களோ என வருந்த வேண்டியிருக்கிறது. இதுவரை இந்த வரதட்சிணை சட்ட கொடுமைகளையும் அதன் தவறான பயன்பாட்டையும் பதிவுகளில் படித்து, இந்த சட்டத்துக் கெதிராக எழும் இத்தைகைய குரல்கள், பிரச்சனையை கொஞ்சம் மிகைப் படுத்தித்தான் பிரதிபலிக்கிறதோ என எண்ணியதுண்டு. ஆனால், இது எல்லாவற்றையும் மீறி நாக்பூரிலே இந்த சட்டத்தின் தவறான பயன்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு மாரத்தான் ஓட்டமே நடத்த வேண்டிய அவலத்துக்கு இந்த பிரச்சனை வீரியம் கொண்டு எழுந்திருக்கிறதென்றால், நெருப்பு நம்மை தீண்டும் தூரத்தில் தான் உள்ளது என தெரிகிறது.

இந்த கேவலத்துக்கு துணை போக வழக்கறிஞர்களும், காவல் துறையும் கைகட்டி நிற்பது இன்னும் வேதனையளிக்கிறது. பிரசாந்த் – கிரகலட்சுமி பிரச்சனையில் வெளியான தீர்ப்பிலிருந்தும், இந்த சட்டத்தை எப்படியெல்லாம் வளைக்க முடியும் என பார்க்க முடிகிறது. எல்லாவற்றையும் விட ஒருபடி மேலே போய் பிறந்து சில மாதங்களே ஆன கைக்குழந்தைகள் மீது கூட இந்த வரதட்சணை சட்டத்தை பாய்ச்ச எப்படித்தான் கல்நெஞ்சக்காரர்களுக்கு மனது வருகிறதோ தெரியவில்லை. குழந்தைகள், வாழக்கையில் ஒரு முறை மட்டுமே சந்தித்த கணவனின் நண்பனின் தாயார் இப்படி சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் இதில் இழுத்து விட முடியுமென்றால், இது ஒரு மனநிலை பிறழ்ந்த ஒரு சாரரின் பழிவாங்கும் வக்கிர வெறிக்கு அடிகோலும் சட்டமில்லாமல் வேறென்ன?

இன்றுசுந்தர்ஜியின் "எனது நேர்காணல்" பேட்டியை வாசித்துக் கொண்டிருந்தேன். பேட்டியிலுள்ள ஒரு கேள்வியும் அதற்கான அவரது பதிலும் இதை மெய்பிப்பது போல்தான் உள்ளது. அதிகாரம் கையில் கிடைத்தால் இந்தப் பெண்கள் அதை ஆக்கபூர்வமாக பயன்படுத்தியிருக்கிறார்களா என்றால், ஒற்றை இலக்க சதவீதத்திலேயே அதை கணிக்க முடியும். ஒருமுறை விஜய் டிவியில் கூட நீயா, நானாவில், வரதட்சணை கொடுமையால் பாதிக்கப் பட்டவர்களையும், இந்த கொடிய சட்டத்தால் பாதிக்கப் பட்டவர்களையும் பேச வைத்து இந்த சட்டத்தின் அவசியத்தையும், அதே சமயத்தில் இந்த சட்டத்தின் தவறான பயன்பாட்டையும் வெளிக்கொணர கோபிநாத் முயற்சித்தார்.

எது எப்படியோ, வரதட்சிணை என்பது ஒரு சமூக அவலம், ஆனால் அதை தடுக்க வந்த சட்டத்தை வைத்து கைக்குழந்தை முதற்கொண்டு அப்பாவிகள் பழிவாங்கப் படுவது என்பது ஒரு சமூக கேவலம்.

ஆவதும் பெண்ணாலே, மனிதன் அழிவதும் பெண்ணாலே என்பது இதுதானோ??

Thursday, January 28, 2010

ஆமாடா, ரூல்ஸ் எல்லாம் எங்களுக்குத்தானா??????

கடந்த 25ம் தேதி, பங்களாதேஷுடன் டெஸ்ட் போட்டியில் ஆடிக் கொண்டிருந்த இந்திய அணியில், கொஞ்சம் உணர்ச்சி வசப்படும் வீரரான ஹர்பஜன் சிங்கின் ஒரு செய்கை உலக கிரிக்கெட் கவுன்சிலின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது. ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்டார் என ஊடகங்கள் கத்தித் தீர்த்து நிம்மதியடைந்தது. இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே கொஞ்சம் அதீத உணர்ச்சி வசப் படுபவர் இந்த ஹர்பஜன். அவர் ஒரு விக்கெட் வீழ்த்தியவுடன் செய்யும் ஆரவாரமாகட்டும், ஸ்ரீசாந்த்தை பளாரென அறைந்ததாகட்டும், 25ம் தேதி பங்களாதேஷில், தன்னைக் கடந்து பவுண்டரி லைனுக்கு போன பந்தைக் கண்டு வெறுப்புற்று, விளம்பரப் பலகையை எட்டி உதைத்ததாகட்டும், இவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதால் வம்பை விலைக்கு வாங்கும் நபராகவே திகழ்கிறார்.

சரி, கோபப்பட்டு, எட்டி உதைத்து, அது நடுவரின் கண்களில் பட்டு, அதற்காக மன்னிப்பும் கேட்டு விட்டார். ஆனால் ஊடகங்கள் அதை விடுவதாயில்லை, குறிப்பாக மேற்கத்திய வெள்ளைத்தோல் ஊடகங்கள் “இங்க பார்றா, இவுருக்கெல்லாம் கோபம் வருதாம், கோபம்” என்ற உள்குத்து நக்கலுடனேயே இதை வர்ணித்து வருகின்றன. புது விதமான ஆங்கில வார்த்தையில் “ Harbhajan reprimanded for kicking the board” என்ற ரீதியில் இதை எழுதி வருகிறர்கள்.

உலக கிரிக்கெட் வரலாற்றிலும் சரி, இன்னும் எந்த விளையாட்டு வடிவத்திலும் சரி, நிறவெறி என்பது இன்னும் முற்றிலும் ஒழிந்து விடவில்லை. இம்ரான் கான் பாகிஸ்தான் அணித்தலைவராயிருந்து 1992 – ல் உலகக் கோப்பை வென்ற போது, எதிரணியில் விளையாடி தோற்ற இங்கிலாந்து அணித்தலைவர் கிரகாம் கூச் ஒரு மரியாதைக்கு கூட இம்ரான் கானுடன் கைகுலுக்க வரவில்லை. கடைசியில் வேண்டா வெறுப்பாய் ஒரு முறை கையை தொட்டு விட்டு சென்றார். இதை போட்டியில் தோற்றதால் ஏற்படும் விரக்தியாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இப்படியாக ஒவ்வொரு முறையும் வெள்ளையரல்லாத ஒரு வீரர் எந்த வெற்றிகளை அடைந்தாலும் அதை கறுப்பர்களுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் வெள்ளையர் உலகம் பார்க்கிறதே தவிர, தேர்ந்த விளையாட்டு வீரன் வெற்றி பெற்றான் என்ற மனப் பான்மை இன்னமும் வரவில்லை.

டென்னிஸில் ஜான் மெக்கென்ரோ விம்பிள்டன்னின் மைய அரங்கில் காறித்துப்பலாம். ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப், யுவராஜ் சிங்கை வெளிப்படையாக திட்டலாம். ஆண்டி ரோடிக் என்ற அமெரிக்க சுள்ளான், டென்னிஸ் மட்டையை ஓங்கி வீசிவிட்டு அந்த நான்கெழுத்து வார்த்தையை சொல்லி கத்தலாம். ஷேன் வார்ன் பந்தை எப்படி வேண்டுமானாலும் எறியலாம். இல்லிங்வொர்த் என்ற இங்கிலாந்து சுழல் பந்து வீச்சாளைரின் கையசைப்பிலேயே தெரியும் அவர் பந்தை வீசுகிறாரா அல்லது எறிகிறாரா என்று, இன்னும், தென் ஆப்பிரிக்க வெள்ளையரான பேட் சிம்காக்ஸ் சுழல் பந்து வீசுவது லகான் படத்தில் அமீர்கானின் அணி வீரர்கள் பந்தை எறிவார்களே அப்படித்தான் இருக்கும். ஆனால் இதைக் குறித்து விமரிசனங்கள் எழும் பொழுதெல்லாம் ஊடகங்கள், குறிப்பாக மேற்கத்திய ஊடகங்கள் அவர்களது முதுகு தடவி, சரி சரி லூசுல விடுப்பா என வேதம் ஓதும்.

அதே சமயத்தில் முத்தையா முரளிதரன் அதிக விக்கெட் எடுக்க ஆரம்பித்தவுடன், எல்லா வெள்ளைத் தோல்களும் ஒருசேரக் கத்தும், அது எப்படி ஒரு கறுப்பன் பந்து வீச்சில் பிரகாசிக்கலாம், பிடியுங்கள் அவனை. அவன் பந்தை எறிகிறான். சர்வதேச பந்து வீச்சு நிபுணர்கள் அவனை சோதிக்க வேண்டும் என்பார்கள். பாகிஸ்தானின் ஷாக்குலின் முஷ்தாக் “தூஸ்ரா” விசினார் என்றால், அவன் எப்படி புது முறையை கண்டுபிடிக்கலாம், அது முற்றிலும் தவறு, உடனே ஷாக்குலின் சோதிக்கப் படவேண்டும் என்பார்கள். ஹர்பஜன் சிங் சுழலில் சுழட்டி எடுத்தவுடன், ஹர்பஜனுக்கு பந்து வீசவே தெரியவில்லை, உடனே சோதியுங்கள் என கூக்குரல் எழுந்தது.

இந்திய வீரர்களை எந்த வெள்ளைத்தோல் வீரனும், முறைக்கலாம், காறித்துப்பலாம், திட்டலாம், என்ன வேண்டுமானலும் செய்யலாம், இதெல்லாம் விளையாட்டில் சகஜமப்பா என்பார்கள். ஆனால், ஸ்ரீசாந்த் ஒருமுறை மேத்யூ ஹெய்டனை முறைத்து விட்டால், இவன் எப்படி முறைக்கலாம் என புருவங்கள் உயரும்.

இந்த நிறவெறி கல்லும் மண்ணும், நீரும் நிலமும், காற்றும் வானும், நிறமும் உள்ளவரை அப்படியேதான் இருக்குமோ???

டிஸ்கி : இதற்காக ஹர்பஜனின் அச்சு பிச்சுகளையோ, ஸ்ரீசாந்தின் அதிகப் பிரசங்கத்தனத்தையோ அடியேன் ஆதரிக்கவில்லைங்கோ.......

Wednesday, January 20, 2010

மழை - கேபிள், தண்டோரா பார்வையில்

மழையைப் பற்றி பேசாத மனிதர்கள் இருப்பது அபூர்வம். எல்லா மொழிகளிலும் மழையை வர்ணித்து ஒரு கவிதையாவது கண்டிப்பாய் இருக்கும். இங்கு தமிழில் சில கவிஞர்கள் மழையை வர்ணித்தால் எப்படி இருக்கும் என ஒரு பார்வை:

சிலப்பதிகாரத்தில் மழை

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற் கவனளி போல்
மேனின்று தான் சுரத்தலான்

(மழை பொழிகையில் எல்லாருக்கும் பெய்யும். இரண்டு பேர் மழையில் இருந்தால் இருவருக்கும் ஒரே மழைதான். அதுபோல அரசனுடைய கொடையும், நீதி நியாயங்களும் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது மறைபொருள்.)

வைரமுத்துவின் வார்த்தை விளையாட்டில் மழை :

யாரங்கே?
வாருங்கள்

விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்

திரவ முத்துக்கள்
தெறிப்பது பாருங்கள்

யாசித்த பூமிக்கு
அந்த வானம்
வைரக் காசுகள்
வீசுவது பாருங்கள்

மழை மழை
மழைமழை
மழை மழை

மண்ணின் அதிசயம் மழை


சேவியர் அண்ணாவின் செதுக்கிய வார்த்தைகளில் :

மழை

மழைத் துளியல்ல,

சோர்வின் வடுக்களை

அழுத்தித் துடைக்க

மேகப் பருத்தி நெய்து

இறக்கும்

மழைத் துணி

எங்கள் நிரந்தர யூத் கவிஞர் அனுஜன்யாவின் பார்வையில்:

நீ புறப்பட்டு விட்டது தெரிந்த
மனது சொல்லியது
அடுத்த சாலையில்
நீ வந்துகொண்டிருப்பதை ;
பரபரக்கும் அந்தக் கணங்கள்
மிகத் துல்லியமான தருணங்கள்.
புரியவில்லையா? இதைக் கேள்!
மழைக்கு முன் சோதனை முயற்சியாய்
இலேசான தூறல் விழும் -
மண்வாசனையைப் பூசிக் கொண்டு;
அதற்கு முந்தைய தருணத்தை
யோசித்திருக்கிறாயா கண்ணே !

இருளத் துவங்கும் முன் வானம்
கடைசியாய் ஒரு முறை பிரகாசிக்கும்
எங்கிருந்தோ தென்றலும் சேர்ந்து
ஓரிரு மின்னல்களுடனான இடியும் கலந்து
ஒரு அரிய இசைக் கச்சேரியின்
அனைத்து ஆயத்தங்களும்
அதில் புலப்படும்.
சொற்ப காலமே எனினும்
அரிய, துல்லிய தருணங்கள்.
தூரலில் நீ வேகமாய் வந்ததும்
பிறகு நாம் மழையை கொண்டாடியதும்
காதலின் உன்னதம் எனினும்
முன் சொல்லிய துல்லிய தருணங்களுக்கு
எதுவுமே ஈடாகாது -
பெருமழை மற்றும்
உன்னையும் சேர்த்து


இனி இதே மழையைப் பற்றி எங்கள் என்டர் மன்னன் கேபிள் அண்ணன் எழுதினால்:

வானத்தின் முலைகள்
வெள்ளை மேகங்கள்
விம்மிப் புடைத்தன
நிறம் மாறி கருத்தன

கசமுசா செய்ய
காற்று வந்தது.
கரங்களினாலே
கசக்கிப் பிழிந்தது.
பொழிந்தது மேகம்
தணிந்தது தாகம்
நிறம் மாறி நிலத்தில்
ஓடுது வெள்ளம்.

இதே மழையைப் பற்றி எங்கள் பின் நவீனத்துவ விமர்சகர் தண்டோரா எழுதினால்:

பூமியை வானம் புணர்ந்ததின் உச்சம்
உச்சத்தின் எச்சத்தில்
நிறமில்லா மச்சம்………
மழைத்துளி.

Friday, January 8, 2010

நூற்றைம்பது ரூபாயில் சூனியம்

வருடத்தின் முதல் நாள். உருப்படியா எதாவது செய்யணும்னு நெனச்சு, என்ன பண்ணலாம்னு கிட்னிய கசக்கி, சே, மூளைய கசக்கி யோசிச்சு யோசிச்சே நேரம் போயிட்டிருந்தது. அதுக்குள்ள வீட்ல இருந்து அதிகார மையத்தார் ஒரு பெரிய லிஸ்டே போட ஆரம்பிச்சதுனால, அதுல இருக்கற வேலைகளை எல்லாம் செய்து முடிக்கறதுக்குள்ள 2012 ம் வருடம் வந்து உலகம் அழிந்து விடக் கூடிய சாத்தியங்கள் அதிகமிருப்பதால், எப்படியும் இந்த வன்முறைக்கு ஒரு முடிவு கட்டணும்டா முனியாண்டின்னு முடிவு எடுத்துட்டு, புத்தகக் கண்காட்சி போலாம்னு என் மசோதாவை தாக்கல் செய்தேன்.

அதிகார மையத்திடமிருந்து “கண்ணி வைக்காமலே வேங்கை வீழ்கிறதே, ஆச்சரியக்குறி” என்ற கவிதை கலந்த பார்வை வந்தவுடனேயே, ரூட்ட மாத்தியிருக்கலாம். ஆனா, நாம போன வருஷத்துல பண்ணுன பாவத்துக்கெல்லாம், இந்த வருஷ முதல் நாளிலிருந்தே தண்டனை அனுபவிக்கணும்னு எம்பெருமான் எழுதி வெச்சுட்டாரோ என்னவோ, விதி யாரை விட்டது.

புத்தாண்டு கொண்டாட்டங்களில் களைத்துப் போயிருந்த சென்னை நகரம் சற்றே துயிலெழுந்து கொட்டாவி விட்ட மாலை நேரம். சாலைகள் வெறித்திருக்காவிடினும், நெரித்துத்தள்ளவில்லை. ஒரு வழியா கண்காட்சி மைதானத்துக்கு போகும்போது மாலை 6 மணி. இந்த முறை கார் நிறுத்துவதற்கு நல்ல ஏற்பாடுகள் இருந்தது. அல்லது 1 ம் தேதி குறைவான கார்களே இருந்ததோ என்னவோ, சீக்கிரத்தில் நிறுத்தி விட்டு பிளக்ஸ் பேனர்களில் சிரித்துக் கொண்டிருந்த எழுத்தாளர்களை எல்லாம் வரிசையாக பார்த்துக் கொண்டே நடந்தோம். நுழை வாயிலிலேயே மகள் பாப் கார்ன் வாங்கிக் கொண்டாள். அனுமதிச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் குழப்பம். நம்ம என்னைக்கு நேர் வழியில போயிருக்கறோம், வழக்கம் போல கடைசியில இருந்தே ஆரம்பிப்போம் என ஆரம்பித்தோம்.

என்ன புத்தகம் வாங்கவேண்டும் என ஒரு பட்டியலே போட்டுக் கொண்டு போனேன். ஆனால், நாம ஒண்ணு நினைக்க தெய்வம் வேற ஒண்ணுதான நினைக்கும். கடைசியில இருந்து அப்படியே ஊர்ந்துகிட்டே போய் நாம எதிர்பார்த்தது கிடைக்கல. சரி இருக்கறத எதிர்பார்ப்போம்னு இன்னும் நடந்துகிட்டே இருக்கும்போது தான் அந்தப் பதிப்பகம் கண்ணுல பட்டுது. இதுக்குள்ள போய் பார்க்கலாமேன்னு போனப்பதான் அதன் உரிமையாளர் கடைக்கு வெளியில சக்கர நாற்காலில அமர்ந்து கைபேசியில சிரித்து சிரித்து பேசிகிட்டிருந்தாரு. அடடே, அந்த பிரபல எழுத்தாளரோட புத்தகமெல்லாம் இருக்குதேன்னு பார்த்துட்டு இருக்கறப்போ, “இது யாரு இது, காதுல வளையமெல்லாம் போட்டுகிட்டு, இப்படி ஆம்பளைங்க ஒரு காதுல வளையம் போட்டுகிட்டா என்ன அர்த்தம் தெரியுமில்ல” னு என் மறுபாதி கேட்பதற்கும், அந்தக் குரல் கேட்டு அந்த காதுல வளையம் ஆசாமி திரும்பிப் பார்ப்பதற்கும் சரியாய் இருந்தது. அவருக்கு இவுங்க சொன்னது சரியா கேட்டுச்சோ இல்லையோ தெரியல, ஆனா அவுரு பார்த்த பார்வையிலயே கேட்டிருக்குமோன்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. சரி எதுக்கும் இருக்கட்டுமேன்னு “புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்”னு நான் கையை நீட்டிவிடவும். என்பக்கம் திரும்பினார் அவர். அப்பொழுது தான் கவனித்தேன் ஆஹா, அவரா, இவுருன்னு கிலியடிச்ச மாதிரி நின்னுட்டேன். கணப் பொழுதில் சுதாரித்துக் கொண்டு, நானும் ஒரு பதிவர் தான், உங்க எழுத்தையெல்லாம் படிச்சிருக்கேன்னு சொன்னேன். அப்படியான்னு முகத்தில் எந்த வித மாற்றமுமில்லாமல் உணர்ச்சியே இல்லாதவரைப் போல கேட்டாரு. வேற யாராவது பதிவர்களைப் பார்த்தீங்களான்னு கேட்டேன். ஆமாம், லக்கியும் டாக்டர் புரூனோவும் வந்திருக்காங்கன்னு சொன்னாரு. உடனே அவுருகிட்ட கையெழுத்து வாங்கறதுக்காக ஒருத்தர் வந்தாரு. அவருக்கு கையெழுத்து போட்டுகிட்டிருக்கும்போதே, நானும் இந்த பிரபலத்துகிட்ட கையெழுத்து வாங்கலாமேங்கற நப்பாசையில அவர் எழுதுன புத்தகம் எதாவது இருக்குதான்னு பார்த்தா, அந்த பூஜ்ஜியக் கோணம் இருந்துது. டக்குனு அதை எடுத்து, இதுல கையெழுத்து போட்டுக் குடுங்க சார்னு சொன்னவுடனே, உங்க பேரென்னன்னு கேட்டாரு, சொன்னதும் என் அன்பு நண்பர்…………… அவர்களுக்குன்னு எழுதி அவர் பெயரையும் எழுதி குடுத்தாரு.

மனுஷன் அநியாயத்துக்கு அன்பு பாராட்டறாரேன்னு பார்த்துட்டு, அந்த கடையிலயே இன்னமும் கொஞ்சம் தேடினப்பதான், அந்த ஆச்சரியம் காத்திருந்தது. இந்த காதுல வளையம் பார்ட்டி, யாரை பரம்பரை எதிரி மாதிரி திட்டுவாரோ அவர் எழுதின புத்தகங்கள் நேர் எதிர் வரிசையில் இருந்தது. இது என்னடா, “இம்மியளவு இடைவெளியில் இரண்டு துருவங்களா, ஆச்சரியக் குறி” (என்னமா கவிதை பாருங்க) அப்படீன்னு மனசுல நெனச்சுகிட்டு, அதுலயும் ஒண்ணை வாங்கிட்டு சரி போலாம் ரைட்னு இன்னும் தேடலை ஆரம்பித்தோம்.

கிழக்கு பக்கமா போயி அந்த அரசர்களெல்லாம் குஜால் பண்ணதப் பத்தி தலையணை சைஸ்ல ஒருத்தர் எழுதுன புத்தகம் இருக்கான்னு கேட்டா, இன்னும் வரலீங்க, வர்றதுக்கு ரெண்டு நாளாகும்னு சொல்லீட்டாங்க. ஒரே ஏமாற்றம். அதுக்காக விடுவமா, இன்னும் மூணு மாசம் கழிச்சுத்தான் தமிழ்நாட்டுப் பக்கமே வரப் போறோம், அதுவரைக்கும் தாக்குப் பிடிக்கணுமேன்னு, மூணு மாசத்துக்கான சரக்கை தேத்திக்கிட்டு, அப்படி இப்படீன்னு மகளுக்கு கொஞ்சம், அப்புறம் அதிகார மையத்துக்கு கொஞ்சம்னு கைநிறைய புத்தகங்களை வாங்கிகிட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.

வீட்டுல வந்து அந்த பூஜ்ஜியக் கோணத்தை திறந்து படிக்க உக்கார்ந்தா, ரெண்டு பக்கம்தான் படிச்சிருப்பேன், உவ்வே, வ்வே, வ்வ்வ்வ்வ்வ்வே, த்தூ, த்தூ. வாந்தி, வாந்தியா வருது. கஷ்டப்பட்டு வாந்தி எடுத்து முடிச்சிட்டு, அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியில வர்றதுக்கு ஆறு நாள் ஆச்சு. ஆறு நாளைக்கப்புறம் கணினியைத் திறந்தா, இன்னொரு மனிதனின் குமுறல் வேற.

மனசுக்குள்ள ஒரு குறுகுறுப்பு, இந்த வருட முதல் நாள்லயே கைக்காசை செலவு பண்ணி வாந்தியெடுக்கறதுக்காக ஒரு புத்தகம் வாங்கி, அதுல கையெழுத்து வேற வாங்கிட்டு வந்துட்டமே, இதைத்தான் சொந்த செலவுல சூனியம்ங்கறதா?????

Wednesday, January 6, 2010

மறுபடியும் ஆணி புடுங்க ஆரம்பிச்சாச்சு

அய்யாமாருங்களே, அம்மாமாருங்களே, அண்ணன்களே, அவர்களே, இவர்களே எல்லாரும் நல்லாருக்கீங்களா? புதுவருஷம் பூத்து குலுங்குது, எல்லாரும் இந்த புது வருஷத்துல ஒரு இதுவா இருக்கணும்னு வேண்டிக்கறேன்.

அப்பப்பா, என்னா டென்ஷன், என்னா டென்ஷன்…, வேலை செய்யற இடத்துல கிறிஸ்மஸூக்கு லீவுல போறேன்னு சொன்னா, அது டிசம்பர் 25ம் தேதி தானே, நீ ஏன் 22ம் தேதியே போறேன்னு கழுத்தறுத்தாங்க. ங்கொய்யால, நீங்கெல்லாம் சாப்பாடு தொண்டைல விக்குனதுக்கு அப்புறம்தான் தண்ணிக்குடம் எடுத்து கிணத்துக்கு போவீங்களாடான்னு வாய்வரை வந்த கவிதையை ஒலி வடிவத்துல மாத்தாம, மனசுக்குள்ளயே மடிச்சு வெச்சுட்டு, லீவு சொல்லி, விமானம் பிடித்து, சென்னை விமான நிலைய ஓடுதளத்தை விமானம் தொட்டவுடனே ஒரு ஃபீலிங்கஸ் மனசுக்குள்ள வரும் பாருங்க, ஆஹா, அத்த இன்னான்னு சொல்றது.

இந்த வருஷம் நமக்கு அதிகம் வேலை வெக்காம, தங்கமணியே கிறிஸ்மஸ் மரம் வெச்சு, ஸ்டார் கட்டி, அப்படி இப்படின்னு எல்லா வேலையும் முடிச்சுட்டாங்க. அதனால நமக்கு கொஞ்சம் வேலை கம்மி. இல்லைன்னா ஒவ்வொரு வேலைக்கும் பல்பு வாங்கியே கிறிஸ்மஸ் மறந்து போயிருக்கும்.

இந்த லீவுல வண்டி எடுத்து என்ஜின் கதறக் கதற ஒரு 3240 கிலோ மீட்டர் சுத்துனோம். சொந்த மண்ணான கொங்குநாடு, அப்புறம் த்ங்கமணிக்காக கேரளா, அப்புறம் அங்க இங்கன்னு ஒரே யாத்திரைதான். நிறைய சபரிமலை பக்தர்களை பார்க்க முடிந்தது. அவுங்க போற வர்ற வழியிலெல்லாம், அவுங்களுக்குன்னு கவர்ச்சி விளம்பரம் கொடுத்து துட்டு பார்க்கற வியாபாரிகள் கலக்கறாங்க. அதுவும் கம்பம், குமுளி, தேக்கடியிலெல்லாம் கடைகள் இரவு பகல்னு பார்க்காம திறந்திருக்கு. குமுளி மசாலா பொருள்கள் விளையும் இடம்கறதால, மசாலாங்கற பேர்ல என்னத்த வெச்சாலும் சாமிகள் கூட்டம் அள்ளீட்டுப் போகுது. அந்த காட்டுல கிடைக்கற மஞ்சியையெல்லாம் அள்ளிகிட்டு வந்து, அதை கொண்டையில ஒரு பந்து வைப்பாங்களே அந்த சைஸ்ல தட்டையா உருட்டி, பிளாஸ்டிக் காகிதத்துல அடைச்சுட்டாங்கன்னா அதுதான் மூலிகை மஞ்சியாம். அதை உடம்புல தேச்சு குளிச்சா சருமத்துக்கு நல்லதுங்கறாங்க. குமுளில விளையறதென்னமோ மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை இந்த மாதிரி பொருள்கள்தான். ஆனா சோம்பு, கொத்தமல்லின்னு மதுரையிலிருந்து வாங்கிட்டு வந்து பாக்கெட்டுல போட்டு, அதை மதுரையிலிருந்து வர்ற சாமிக்கே விக்கறாங்க. அதையும் மதுரைக்கார சாமி பேரம் பேசி ரொம்ப மலிவா இருக்குன்னு வாங்கிட்டு போறார்.

பெரிய பிரியாணி சட்டியில எவ்வளவு கொள்ளுமோ அந்த அளவுக்கு மைதா மாவு, அதுல தோராயமா சர்க்கரை சேர்த்து, கொஞ்சம் முந்திரியையும் திராட்ச்சையும் போட்டு, அடுப்புல வெச்சு, தீய நல்லா எரிய விட்டு கலக்கு கலக்குன்னு கலக்கறது.சர்க்கரைப் பாகு இளகி, மாவோட கலநது கெட்டியாகற நேரத்துல, பச்சையோ, மஞ்சளோ, சிவப்போ எதாவது ஒரு கலர்பொடிய போட்டு இறக்கி வெச்சா அதுதான் அல்வாவாம்.

நம்மளுக்கு வேண்டப்பட்டவங்களும் நேந்திரங்காய் சிப்ஸ் கடை போட்டிருந்ததால கொஞ்ச நேரம் இந்த கூத்தையெல்லாம் பார்க்க முடிஞ்சுது. இந்த தரம் அங்கிருக்கற மலையாள மக்கள் பண்ணுனதுதான் ரொம்ப சூப்பரா இருந்துது.

மலையிலிருந்து திரும்பி வர்ற ஒரு கர்நாடகா சாமிகள் கும்பல். குமுளியில நின்னு மசாலாவெல்லாம் வாங்கிகிட்டிருந்தாங்க. அப்ப அங்க ரோட்டோரக் கடை வெச்சிருக்கற ஒரு நாலைஞ்சு சேட்டன்கள் ஒரு கன்னட சாமியப் புடிச்சு உங்க உருவப் படம் வரைஞ்சு குடுக்கறேன்னு சொல்லி அதுக்கு நூறு ரூவா ஆகும்னு சொல்ல, அவரும் எதோ மகாராஜா ஸ்டைல்ல உக்கார்ந்துட்டாரு. ஒரு பென்சிலும் பேப்பரும் எடுத்த ஒரு சேட்டன் ஒரு பதினைஞ்சு நிமிசத்துல மனித உருவம் மாதிரியே தெரியற ஒரு படத்தை வரைஞ்சு, இதுதான் நீங்கன்னாங்க. கன்னட சாமி டென்ஷனாயிருச்சு. இதுக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லன்னு அவரு கன்னடத்துல கத்த, அதுக்கு இவுங்க சொன்ன பதிலைக்கேட்டு சாமி டரியலாயிட்டாரு. ஒரு சேட்டன் சொன்னாரு, “சாமி, இவட நோக்கு, ஈ படத்துல தாடியும் மீசையும் உண்டோ, இல்லல்லோ, பக்ஷே சாமி மலைக்கு போயதைக் கொண்டு தாடியும் மீசையும் வெச்சுட்டுண்டு, பெங்களூரில் போயி, சாமி ஷேவிங் கட்டிங் ஒக்க செய்துட்டு, பின்ன ஈ படத்த நோக்கு. ஷெரிக்கு இது போலத்தன்ன காணும்”னு சொன்னவுடனே சாமிக்கு திடீர்னு அட ஆமாம்ல, பய புள்ளக சரியாத்தான் சொல்லுதுகளோன்னு ஒரு சந்தேகம் வந்து, படத்தை எல்லா ஏங்கிள்லயும் பார்க்க, கடைசியில அம்பது ரூவாய்க்கு அந்த படத்த சாமிதலையில கட்டி விட்டுட்டாங்க. சாமியும் நூறு ரூவாய்னு சொல்லி அம்பதுக்கு வாங்கீட்டம்ல, எப்பூடீன்னு ஒரு வெற்றிக் களிப்போட போனாரு.

புது வருஷம் சூப்பரா இருந்துச்சு. நண்பர் அதிஷா கூப்பிட்டு வாழ்த்து சொன்னாரு. திண்டுக்கல் பக்கத்துல எதோ வேலையா போயிருக்காராம். அப்புறம் எல்லாருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி, எனக்கு அனுப்புனவுங்களுக்கு டேங்ஸ் சொல்லி அனுப்பின்னு புத்தாண்டு தினம் போயிருச்சு. குறுஞ்செய்திக்கு அண்ணன் ஆதி அனுப்புன பதில்தான் டெரரா இருந்துச்சு. “ Happy New Year, Be careful from other Duplicate wishers, I am tha only authorized ISO 9001 – 2009 certified distributor of New Year Wishes” னு பதில் அனுப்புனாரு. புது வருஷத்துல ஆரம்பமே இப்படியா நல்லா இருங்கப்பு.

அப்துல்லா அண்ணனும், கேபிள் அண்ணனும் சென்னைக்கு வந்தா கண்டிப்பா சந்திக்கணும்னு சொன்னாங்க. ஆனா முடியல. அதுக்காக அவுங்க ஆள் வெச்சு அடிப்பாங்களோன்னு பயமா இருக்கு.

அப்புறமா, புத்தக கண்காட்சி போயிருந்தேன். அங்க தாங்க வருஷத்தின் முதல் நாள்லயே டரியலாக்கும் அந்த மேட்டர் நடந்தது. என்னான்னு கேக்கறீங்களா, அடுத்த பதிவுல சொல்றேனே.

மறுபடியும் ஆணி புடுங்க மத்தியப் பிரதேசம் வந்தாச்சு.