சகோதரி யமுனா ராகவன் எழுதிய இந்தப் பதிவை வாசித்துப் பார்த்தேன். ஒரு பெண்ணின் பிரச்சனைகளை மிக மிக துல்லியமாகவும் எதார்த்தம் நிறைந்த வார்த்தைகளாலும் எழுத்தில் வடித்து விட்டார்.
நேற்றைய நாளை தொலைத்து விட்டு, வரும் நாளைய நாளின் துன்பங்களை எதிர் நோக்கி நொந்து பயந்து, இதோ இப்பொழுது கடக்கும் இந்த விநாடியிலும் தான் சந்திக்கும் ஒவ்வொரு ஆணாலும் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்ணின் இழிநிலையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் அற்புத காவியமிது. தன் வீட்டினுள் எந்தவொரு நொடிப் பொழுதிலும் அன்பு என்பதையே இம்மியளவும் அனுபவிக்காமல், சூரியன் உதித்து, சூரியன் மறையும் வரை, ஏன் சூரியன் மறைந்த பின்பும் கதறக் கதற சித்திரவதைப் படுத்தப் படுவதே வாழ்கை நியதியாகிவிட்ட நடுத்தர வர்க்க பெண் தெய்வங்களின் ஒட்டு மொத்த மனக் குமுறலையும் ஒரே மூச்சில் குமுறியிருக்கிறார்.
வாழ்த்துக்கள் சகோதரி.
ஒரு மானுட உயிருக்கான வாழ்க்கை எனும் பந்தயத்தில் முதலிடம் பெறுவது மட்டுமல்ல, முழு ஓட்டத்தையும் ஓடி முடிப்பதே ஒரு மாபெரும் சாதனைதான். இதில் பாலின பேதமின்றி எந்த ஒரு உயிரினத்திற்கும் தன்னம்பிக்கை என்ற ஒரு சக்தி இருந்தால் மாத்திரமே அது சாத்தியம். தடைகளை எளிதாய் தாண்டி முதலிடம் எனும் சிறப்பு பெற தைரியம்/துணிவு உள்ளிட்ட பல சிறப்புகளினால் நெஞ்சு நிறைந்த உயிரினம் மட்டுமே உயர்வை அடைய முடியும்.
ஆனால், எனக்கு முன்னே பாழ்நிலம் இருந்தது, என் பாதையெங்கும் முட்கள் முளைத்திருக்கிறது, என் ஓட்டப் பாதையில் சிகரங்களை செதுக்கி வைத்து விட்டார்கள் என பாசாங்குத் தனமான சாக்குப் போக்கு சொல்வோமெனில் நாமும் பத்தோடு பதினொன்றாய் தடம் மாறி ஓடிக்கொண்டிருக்கலாம்.
உங்கள் எண்ணங்களின் வெளிப்பாடுகளிலிருந்து நீங்கள் முன்வைக்கும் குற்றச் சாட்டுகள் :
உலகில் பிறந்த ஒவ்வொரு ஆண்மகனும் பெண்ணினத்தை மனதளவில் சிறுமைப் படுத்த கிடைக்கும் எந்தவொரு தருணத்தையும் தவறவிடாது உபயோகிக்கிறான்.
மூலைக் கடையில் சிகரெட் பிடித்து , பெண்ணைக் கண்டதும் முகத்தில் ஊதுகிறான்.
காலையில் எழுந்தவுடன் தன் மனைவியை தேடிப் பிடித்து அவளை வசவுகளால் கதறக் கதற குதறிவிட்டு, அவள் படும் வேதனைகளை பார்த்து உள்ளூர மகிழ்கிறான்.
பெண்கள் பயணிக்கும் ஒவ்வொரு பஸ்ஸிலும் இப்படி காலையில் சாட்டையால் அடிக்கப்பட்ட பெண்ணை தேடி வந்து அவர்களின் உடலில் தன் ஆணுறுப்பை உரசி மகிழவென்றே பயணிக்கிறான். அல்லது அப்படி உரசும் பொழுது அந்த பெண் படும் வேதனைகளை கண்டு மனம் மகிழ்கிறான்.
உங்கள் மொழியில் சொல்வதென்றால், பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன் “மாம்ஸ் இன்னைக்கு பஸ்ஸூல ஒரு Aunty செமயா Company குடுத்தாடா” என சொல்லி சந்தோஷமடைகிறான்.
நீங்கள் வெண்டைக்காயோ தக்காளியோ வாங்குவதில் முனைப்பாய் இருக்க, உங்களின் இடுப்பையோ, பிட்டத்தையோ அல்லது சேலைத் தலைப்பு விலகியிருக்கும் மார்பையோ பார்ப்பதில் இன்பம் கொள்கிறான்.
அலுவலகத்தில் நீங்கள் உங்கள் சுய திறமையினால் செய்யும் எந்தவொரு வேலையின் வெற்றியையும், நீங்கள் உடல்காட்டி ஜெயித்தீர்கள் என சொல்லியே உங்களை காயப் படுத்துகிறான்.
நீங்கள் சந்தித்த 90 % ஆண்கள் உங்கள் மார்பை பார்த்தே பேசியிருக்கிறார்கள். மீதி பத்து சதவீதம் பேர் பார்க்கவில்லை என நீங்கள் சொல்லவில்லை, ஆனால், அவர்கள் பார்த்ததை நீங்கள் பார்க்கவில்லை என சொல்கிறீர்கள், அப்படியானால் நீங்கள் சந்தித்த அல்லது உங்களை பார்த்த ஒரு ஆண்மகன் கூட யோக்கியன் இல்லை, எல்லாரும் உங்கள் ஆடையை அவிழ்த்து அம்மணமாக்கி, உங்கள் நிர்வாணத்தை அணு அணுவாய் ரசிக்கும் காமுக வக்கிரர்களாகவே இருக்கிறார்கள்.
புள்ளி விவரங்கள் தருகிறீர்கள், எத்தனை பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்று. வாருங்கள், இன்னொரு புள்ளி விவரம் பார்ப்போம், இன்றைய தேதியில் தொடுக்கப்படும் பாதுகாப்பு கோரும் வழக்குகளில் 62 % வழக்குகள் ஆண்களால் தொடுக்கப்படுகிறது. (வாசியுங்கள்). இந்த வழக்குகள் எதற்காக தொடுக்கப்படுகிறது என்றால் தன் மனைவியிடமிருந்து தனக்கு பாதுகாப்பு கோரி தொடுக்கப்படுகிறது. பெண்களால் தொடுக்கப்படும் 97% வரதட்சணை வழக்குகள் பொய்யானவை என தினமும் ஒவ்வொரு நீதிமன்றத்தாலும் கண்டிக்கப்படுகிறது. இப்பொழுது சொல்லுங்கள், அல்லது உங்கள் மொழியிலே சொன்னால் எப்பொழுதும் உங்களை காமத் தினவெடுத்துப் பார்க்கும் உங்களைச் சுற்றியுள்ள ஆண்களில் 62 பேர் பெண்களைப் பற்றிய பயத்திலேயே வாழ்கிறார்கள். 97 பேர் பொய் வழக்குகளினால் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு, செய்யாத குற்றத்திற்காய் போலீசாலும் சமுதாயத்தாலும் அவமானப் படுத்தப் பட்டு, சிறுகி குறுகி, நடைபிணங்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுது நான் சொல்லட்டுமா, நான் சந்திக்கும் பெண்கள் அனைவருமே, பெண் எனும் போர்வையில் ஒழிந்துகொண்டு என்னை எப்படி எல்லாம் சித்திரவதைப் படுத்தலாம் என 24 மணி நேரம் கணக்குப் போடும் மனநிலை பிறழ்ந்த சைக்கோத் தனமானவர்கள் என்று.
அல்ல, அப்படியல்ல தோழி.
Physical Abuse and Verbal Abuse என தினமும் ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக் குடும்பத்திற்குள் கொடுமைப் படுத்தப் படுகிறாள் என குமுறி யிருக்கிறீர்கள். எனது பார்வையில் இந்த சுதந்திரத்திற்கு மாத்திரம் குடும்பம் எனும் அமைப்பில் ஒரு எல்லையே இருக்க முடியாது. (May be it sounds absurd, but practically this is the truth ). வாதத்திற்காக பல எதிர்மறை கருத்துகளை சொல்லி இதுதான் எல்லை என நீங்கள் வண்ணமும் தீட்டி விடலாம், ஆனால் எல்லைகள் வரைந்தபின் குடும்பம் என்ற ஒன்றை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
மனைவி மஞ்சள் கலர் புடவை கட்டியிருக்கும்பொழுது, கணவன் “அந்த ரோஸ் கலர் புடவைல தாம்மா நீ அம்சமா இருக்க” என சொன்னால், இதை உங்கள் கோணத்திலிருந்து பார்த்தால், ஆண் தன் விருப்பத்தை பெண்மீது திணிக்கிறான், அவளது உடை விஷயத்தில் கூட தனது ஆதிக்கத்தை நிலைப்படுத்துகிறான். ஆனால் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது வெளித் தெரியாமலிருக்க மென்மையான வார்த்தைகளில் அன்பொழுக பேசி, ஒன்றும் அறியா அப்பாவி பெண் மனதை தன் வசப் படுத்துகிறான். உண்மைதானே சகோதரி, இதுதானே உங்கள் வாதம். இங்கு தானே எல்லை தேவைப் படுகிறது என்று உரக்கச் சொல்கிறீர்கள்?
இப்படியும் யோசித்துப் பாருங்கள், தன் உயிரில் பாதியான தன் மனைவியிடம் தன் விருப்பத்தை வெளிப்படுத்துவதும் கூட ஆதிக்க வெளிப்பாடா? விருப்பம் எனபது உடல், உள்ளம், உணர்வு இன்னும் எதையெல்லாம் சொல்ல முடியுமோ, அத்தனைமீதும் ஆண் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினால், அதுவும் Abuse தானா?
ஒவ்வொரு கணவனும் தன் துணையின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தினமும் அவளை வன்புணர்கிறான். அந்த கலவி வேளையிலும் கூட பெண்ணின் ஒழுக்கத்தை கேலி செய்தே புணர்கிறான் என்கிறீர்களே, இது ஒரு அதீத கற்பனையாக தெரியவில்லையா தோழி? அல்லது எதாவது குற்றம் சொல்ல வேண்டுமே என்பதற்காக புனைந்து தெளிக்கிறீர்களா? தன் உடல் தேவையை தீர்த்துக் கொள்ள கணவன் யாரிடம் செல்வான்? அல்லது பெண்களுக்கு உடல் தேவையே என்றும் இருந்ததில்லையா?
மற்றபடி நீங்கள் சொல்லும் Financial Abuse மற்றும் Alpha Male ஐப் பற்றி என்னால் யோசிக்கவும் முடியவில்லை. ஏனெனில் உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடு என் கற்பனை எல்லைக்கு அப்பால் இருக்கிறது. இந்த தலைப்பில் நீங்கள் சொன்ன கருத்துக்கள் எல்லாம் என்னவோ ஒவ்வொரு ஆணும் தனது மனைவியின் உடலை விற்று சம்பாதிக்கும் மாமா பயல்கள் என்கிறீர்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆமாம், வேசி உடலை விற்க கட்டாயப் படுத்தப் படுகிறாள், நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பெண்ணும் தன் திறமைகளை விற்க கணவனால் கட்டாயப் படுத்தப் படுகிறாள். பெரிதான வித்தியாசம் ஒன்றும் இல்லை. நான் ஏன் நான் மட்டும், கண்டிப்பாக நீங்களும் கூடத்தான் இத்தகைய ஒரு சமூகத்தில் வாழ்வதில்லையாதலால் என்னால் இதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
வருகிற கோபத்தில், யாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆத்திரத்தில், கண்ணை மூடிக் கொண்டு அம்பெய்கிறீர்கள் தோழி, உங்கள் மார்பை மட்டுமே பார்த்துப் பேசிய 100 சதவீத ஆண்களில் உங்கள் ரத்த உறவுகள் யாரும் இல்லையா? அல்லது அவர்களையும் சேர்த்துத்தான் சாட்டையால் அடிக்கிறீர்களா? உங்கள் நந்த வனத்தில் புகுந்த ஒரு சில ஓநாய்களுக்காக, ஒட்டு மொத்த விலங்குகளையும் பட்டயக் கருக்கில் வெட்டிக் கொல்லத் துணியாதீர்கள். அப்படிச் செய்தால் உங்கள் நந்தவனம் புள்ளிமான்களின் பிணக்காடாகி விடும்.
பஸ்ஸில் உங்களை உரசி நிறகும் மிருகப் பயலை ஏன் சகித்துக் கொள்கிறீர்கள்? அவன் தாடையைப் பெயர்த்து விடுங்கள். அலுவலகத்தில் புறம் பேசும் கையாலாகாத ஆண்சிங்கங்களுக்கு தக்க பதிலடி கொடுங்கள்.
பெண்மை என்பது வெறும் மென்மை மாத்திரமல்ல, அவசியப்பட்டால் அடித்து நொறுக்கும் வன்மையும் கூடத்தான் என புரிய வையுங்கள்.
பெண் என்பவள் சிரித்து நிற்பது மட்டுமல்ல, சிலிர்த்து சீறவும் வேண்டும் தோழி.
இதை விடுத்து கண்ணில் பட்ட ஆண்களுக்கெல்லாம் மிருக வேஷம் கட்டாதீர்கள். அப்படியானால் மிருகங்களுக்கு மத்தியில் வாழ்வது கிடக்கட்டும், மூச்சு விடுவதே சிரமமாகி விடும்.
பகிர்தலும், புரிதலும் கொண்டு உங்களை போலவே என்னையும் நடத்த வேண்டும் என்பதே நான் இறுதியில் முன்வைக்கும் ஒன்று என்று சொல்லுகிறீர்கள்
இங்கு நீங்கள் உன்னை முழுதும் பகிர்ந்து கொள், என்னை முழுதும் புரிந்து கொள் என சொல்லியிருந்தால் மிகவும் சந்தோஷப் பட்டிருப்பேன். ஆனால், இங்கு பகிர்தலுக்கும் புரிதலுக்கும் விகித அளவுகளை முன்வைக்கிறீர்களே, இது எவ்வகையில் சாத்தியம்?
எனக்கான சுதந்திரத்தை நீங்கள் கொடுக்கவேண்டாம். என்னிடம் இருந்து பிடுங்காது இருந்தால் போதும் என்கிறீர்கள்.
இந்தப் புரிதலில்தான் வாழ்வின் மொத்த சூட்சுமமும் அடங்கியிருக்கிறது. எனது சுதந்திரம் என எல்லை வகுக்காதீர்கள். நமது சுதந்திரம் என உரத்துச் சொல்லுங்கள். எங்கு எனது மறைந்து நமது வருகிறதோ அந்த உலகமே ஒரு உல்லாச புரியாயிருக்கும். வாழ்த்துக்கள். வளமையோடு, வல்லமையோடு வாழுங்கள்.
