Showing posts with label கேள்விகள். Show all posts
Showing posts with label கேள்விகள். Show all posts

Thursday, October 4, 2012

நெருப்பு இன்னும் அணையவில்லையோ ???

இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. (இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும். உனக்கு என்ன நினைவிருக்கிரதென்று யார் கேட்கப் போகிறார்கள்) 1988 – ம் வருடம், அப்பொழுது சண்டிகர் நகரிலிருந்து சிம்லா செல்லும் நெடுஞ்சாலையில் 28 வது கிலோமீட்டரில் சூரஜ்பூர் என்றொரு கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தை அடுத்து உள்ள ஒரு சிமென்ட் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். என் அண்ணா ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவில் இந்திய விமானப் படையில் பணி புரிந்து வந்தார். நவம்பர் மாத ஞாயிற்றுக் கிழமையொன்றில் என் அண்ணாவை அம்பாலாவுக்கு சென்று பார்த்து விட்டு, சண்டிகர் வந்து, அடுத்து சண்டிகரிலிருந்து பஸ் பிடித்து சூரஜ்பூர் போகவேண்டும்.

சண்டிகர் நகரின் பஸ்நிலையத்துக்கு எதிரே உள்ள ஒரு ஹோட்டலில் அமர்ந்து இரவு உணவு உண்டு கொண்டிருக்கிறேன். ஹோட்டலில் இன்னும் இரண்டு பேர் அமர்ந்து உண்டு கொண்டிருந்தார்கள். கல்லாவில் முதலாளி அமர்ந்திருக்கிறார். நல்ல குளிர். குளிருக்கு இதமாக சூடான ரொட்டியும் சிக்கன் குருமாவும் அருமையான சுவை. அப்பொழுதுதான் அவரை பார்த்தேன்.

ஆறரை அடி உயரம், பறந்து விரிந்த தோள்கள். நெஞ்சுக்கு கீழே வரை வளர்ந்து படர்ந்த தாடி, முறுக்கிய மீசை, நீலக்கலரில் ஒழுங்காக சுற்றிக் கட்டிய தலைப்பாகை, மெல்லிய துணியில் தைத்த ஒரு குர்த்தா, நெஞ்சுக்கு குறுக்கே தொங்கும் ஒரு தோல்பட்டை அதனுள் இடது புறமாக தொங்கும் கிர்ப்பான் (சீக்கியர்களுக்கே உரிய ஒரு குறுவாள்), வலது புறத்தில் ஒரு ரிவால்வர் துப்பாக்கி. ஆஜானுபாகான அந்த மனிதன் நடந்து வருவதைப் பார்த்தாலே கையும் காலும் உதறல் எடுத்தது. அவரைக் கண்டவுடனே மனதுக்குள் ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது. நவம்பர் மாத குளிருக்கு எல்லாரும் ஸ்வெட்டர், குல்லா என ஏதாவது ஒரு கம்பளி ஆடை அணிந்திருக்க இந்த மனிதன் மாத்திரம் எதற்கு இப்படி ஒரு மெல்லிய துணியுடன் சுற்றுகிறான். ம்ஹும், என்னவோ சரியில்லை என மனதுக்குள் மணியடித்தது. அதை நிரூபிப்பது போலவே அந்த சீக்கியர் தாறுமாறாக நடந்து வந்தார். ரிவால்வரையும் கத்தியையும் இரு பக்கமும் பார்த்தவுடன் ஆஹா, இந்த சிக்கன் முடிவதற்குள்ளாகவே நான் முடிந்து விடுவேனோ என ஒரு பயம் வந்து கையும் காலும் நடுங்க ஆரம்பித்தது. ரொட்டியை பிய்த்த கை அப்படியே அசைவற்றிருக்க இமைத்த கண்களை மூட மறந்து பீதியில் உறைந்து போயிருந்தேன். அதே அளவு பீதியில் கல்லாவில் இருந்தவரும் இருந்தாரோ என்னவோ அவரும் அசைவற்று என்னைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தார். வந்த மனிதர், எனக்கு முன்னால் இரண்டு மேஜைகள் தள்ளி அமர்ந்திருந்த இருவரையும் ஒரு நொடி நின்று பார்த்தார். அவர்களும் அதே பீதியில் இருந்தார்களோ என்னவோ, அவர்களை விட்டுவிட்டு என்னிடத்தில் வந்தார். ஒரு முறை என்னையும் பிறகு நான் சாப்பிடும் உணவையும் பார்த்தார். ஓரிரு நொடிகள் பார்த்தவுடன் என்னைப் பார்த்து ஹிந்தியில் “க்யூம், கைசா ஹை” என்றார். வார்த்தைகள் தொண்டையிலேயே மரித்து விட்டதால் ஈன ஸ்வரத்தில் “டீக் ஹை” என்றேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உடனே திரும்பி சென்று விட்டார்.

அதற்கு அடுத்து நடந்ததுதான் நம்ப முடியாதது. அந்த சீக்கியர் சென்றவுடன், முதலாளி கல்லாவிலிருந்து நடந்து வந்தார் என சொல்ல முடியாது, பறந்து வந்தார். உடனடியாக ஒரு சொம்பு தண்ணீரை தூக்கி வந்து உடனே கையை கழுவு இடத்தை காலி பண்ணு என்றார். இதற்குள் உண்டு கொண்டிருந்த மற்ற இருவரும் காணாமல் போயிருந்தனர். என்ன நடக்கிறது என தெரியாமலே ஒரு வித பீதியுடன் கையை கழுவி நிமிர்ந்து பார்த்தால் அடுத்த அதிர்ச்சி, கடையின் முன்கதவு அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. திரும்பிப்பார்த்த முதலாளி, என் கையைப் பிடித்து பின்பக்கமாய் சமையலறை வழியாக இழுத்துக் கொண்டு போய் என்னை வெளியே தள்ளிவிட்டு பின்பக்க கதவையும் சாத்தி விட்டார். கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல், அடிக்கும் குளிர் முகத்தில் உறைக்க, கடையை சுற்றி முன்பக்கம் வந்தேன். ஐந்து நிமிடத்திற்கு முன் இருந்த அத்தனை சத்தங்களும் அழிந்து போய், ஓரிரு மனிதர்கள் மட்டும் வேகமாய் நடந்து கொண்டிருந்தார்கள். ஜமீன்தார்கள் வேட்டைக்கு போனால் ஒரு திறந்த ஜீப்பில் போவார்களே அப்படி ஒரு ஜீப்பில் இரண்டோ மூன்றோ சீக்கியர்கள் அமர்ந்திருந்தார்கள். மூளைக்குள் எதுவோ ஆபத்து என்ற அபாய சங்கு ஒலிக்க பஸ்ஸ்டேண்டில் ஏதாவது பஸ் இருக்கிறதா என பார்த்தால் மூன்று பஸ்கள் இருந்தது. இப்பொழுது நான் இருக்கும் இருட்டான இடத்தில் இருந்து பஸ்ஸுக்கு செல்ல ரோட்டை கடக்க வேண்டும், ரோட்டை கடந்தால் அந்த ஜீப்பில் இருப்பவர்கள் கண்ணில் படுவேன், ஜீப்பில் இருப்பவர்களை பார்த்தால் நல்லவர்கள் போல் தெரியவில்லை, என்ன செய்யலாம். இங்கு இருட்டில் நிற்பதும் சரியானதாய் படவில்லை. ஒரு குருட்டு தைரியத்தில் ஒரே ஓட்டமாக ரோட்டை கடந்து பஸ்சுக்குள் தாவி ஏறி விட்டேன். ஓடும் பொழுது அந்த எழவு ரிவால்வர் வேறு ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது. அப்பாடா நிம்மதி, பஸ்சுக்குள் வந்தாகி விட்டது. அடுத்த சில நொடிகளில் பஸ்சும் கிளம்பி விட்டது. பின்பு சூரஜ்பூர் வந்து படுக்கையில் விழுந்ததும் இரவு முழுவதும், துப்பாக்கி, தாடி வைத்த சர்தார்கள், வேட்டைக்கு போகும் ஜீப் என எல்லாமுமாக ஒரு த்ரில் பட ரேஞ்சுக்கு கனவுகள் வந்தது.

காலையில் கொட்டை எழுத்தில் செய்தித்தாள்களில் “பஞ்சாப் மாநில போலீஸ் உயர் அதிகாரி நேற்று இரவு சண்டிகர் பஸ் நிலையம் முன்பு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்” என செய்தி வந்தது. என்னைப் பார்த்து நலம் விசாரித்த சர்தார்ஜிதான் ......... டேய் அவனா நீயி, யப்பா யார் செஞ்ச புண்ணியமோ தப்பித்தேன்.

இப்படி பஞ்சாப் மாநிலத்தை தீவிரவாதம் தன் கோரப்பிடிக்குள் வைத்திருந்த காலம் மிகவும் கொடுமையான காலமிது. எல்லா பஞ்சாபியர்களும் மறக்க நினைக்கும் காலமது. நல்ல விளைநிலங்கள், வற்றாத ஜீவ நதிகள், பாசத்தோடு பழகும் வெள்ளந்தி மனிதர்கள், சத்தான சாப்பாடு, மகிழ்ச்சி தரும் கலாச்சாரம் என ஒரு அமைதிப் பூங்காவாக விளங்கிய பஞ்சாபில் தான் தீவிரவாதமும் தன் கோர தாண்டவத்தை ஒரு முறை ஆடித்தீர்த்தது. மதவெறியும் இனவெறியும் மக்களை தன்வசம் ஈர்த்தது. சீக்கியர்கள் தங்களின் உயிரினும் மேலாய் மதிக்கும் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை புக வைத்து ஒவ்வொரு சீக்கியனின் நெஞ்சிலும் ஈட்டியை சொருகியது. இந்தியப் பிரதமர் ஒருவரின் உயிரை காவு வாங்கியது. இப்படி எல்லா கொடுமைகளையும் விளைவித்து தீர்த்த தீவிரவாதம் தானாகவே தணியவும் தொடங்கியது. மக்களும் மீண்டெழுந்து வந்தார்கள். இந்த தீவிரவாதம் நமது வாழ்கையை முடக்கும் ஒரு முடக்கு வாதம் என புரிந்து கொண்டார்களோ என்னவோ, வெகு சீக்கிரமாகவே அதன் சுவடுகள் அழிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி விட்டது என நிம்மதிப் பெருமூச்சு விட்டு இளைப்பாற ஆரம்பிக்க கூட இல்லை. இதோ மறுபடியும் அதன் வேர்களிலே நீரூற்றி தழைய விட முயற்சி செய்கிறார்கள்.

லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங் ப்ரார் – 1984 ம் வருடம் மே மாதம் முப்பத்தொன்றாம் தேதி, மீரட் நகரத்தில் இருக்கும் இந்திய படைப்பிரிவுக்கு தலைமை வகித்திருந்த குப்தீப் சிங்குக்கு தலைமையிடமிருந்து போன் வருகிறது. உடனடியாக கிளம்பி சண்டிகருக்கு அருகிலிருக்கும் சண்டி மந்திர் ராணுவ தளத்திற்கு வா.., அடுத்த நாள் மனைவியுடன் ஒரு மாத விடுப்பில் பிலிப்பைன்ஸ் நாட்டு மணிலாவுக்கு சென்று விடுமுறையை கழிப்பதற்காக துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவர், ஒரு மீட்டிங் இருக்குதும்மா போயிட்டு வந்திர்றேன், ராத்திரி பிளைட்டுக்கு தயாரா இரு என்று சொல்லி விட்டு சென்றார். சண்டி மந்திரில் லெப்டினென்ட் ஜெனரல் கிருஷ்ணசாமி சுந்தர்ஜியும், லெப்டினென்ட் ஜெனரல் ரஞ்சித் சிங் தாயாலும் வரவேற்றனர். இன்று இரவே நாம் அமிர்தசரஸ் போகிறோம். பொற்கோவிலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து கொண்டு தரிசிக்க வந்த பக்தர்களை மனித கேடயமாக பயன்படுத்துகிறார்கள். அவர்களை மீட்க வேண்டும். அதற்கு நீங்கள் தலைமை ஏற்கப் போகிறீர்கள் என்று மேலிட ஆணையை காண்பித்தார்கள். மனதில் ஒரு கணம் துணிகளை அடுக்கும் மனைவியிடம் என்ன மன்னிச்சுரும்மா என மானசீகமாக மன்னிப்பு கேட்டு விட்டு அமிர்தசரசுக்கு விமானமேறிவிட்டார். பிறகு அவர் செய்ததெல்லாம் “ஆப்பரேஷன் ப்ளு ஸ்டார்” என்று படித்திருப்பீர்கள். அதன் எதிரொலியாகத்தான் அதில் ஈடுப்பட்ட அத்தனை பேரையும் காலிஸ்தான் குழுவினர் வரிசையாக போட்டுத்தள்ளிக் கொண்டே இருந்தார்கள். இந்திரா காந்தி கொல்லப்பட்டதும் இதன் காரணமாகத்தான். ஆண்டுகள் முப்பது முடிந்து விட்ட பொழுதும் இன்னமும் அந்தக் கனல் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. இந்திய அரசாங்கமும் அந்த துரதிஷ்டவசமான ஆப்பரேஷனில் கலந்து கொண்ட அத்தனை பெருந்தலைகளையும் பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்தது. வருகிறது. இந்த குல்தீப் சிங் இப்பொழுது மும்பை நகரில் ஒரு உயரிய பாதுகாப்பு வளையத்துக்குள் வாழ்ந்து வருகிறார்.

கொஞ்சம் மாற்றத்திற்காக லண்டன் சென்ற அவர், அந்நகரில் தனது மனைவியுடன் ஒரு உணவு விடுதியில் உணவு அருந்தி விட்டு வெளியே வந்தவுடன், அதற்காகவே காத்திருந்தவர்கள் போல் நான்கு பேர் அவர் மீது பாய்ந்து அவரது குரல்வளையை அறுக்க முயற்சித்திருக்கிறார்கள். என்னதான் வயசானாலும் ராணுவ ரத்தமாயிற்றே, தன் மனைவியை ஓடி விடும்படி சொல்லி விட்டு தனியே அந்த நால்வரையும் சமாளித்திருக்கிறார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர் மனைவி பெருங்குரலெடுத்து ஓலமிட, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வருவதை கண்ட நால்வரும் உடனே இவரை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். ஆனால் அதற்குள் கணிசமான அளவு கத்திக் குத்துகள் உடலில் ஏற்பட்டு விட்டது. ரத்தம் வழிய வழிய அவரை அப்படியே தூக்கி ஒரு ஆம்புலன்சில் போட்டு மருத்துவ மனைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். மனிதன் உயிர் தப்பி விட்டார்.

காலிஸ்தான் தீவிரவாதம் முழுவதும் ஒழிக்கப்பட்டு விட்டது என நிம்மதியாக இருந்தோமே, அடேய், தாடிக்கார தம்பிகளா, இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா இந்த பொற்கோயில் வன்மத்தை மனசுல வெச்சுகிட்டு குரல்வளையை அறுத்துகிட்டு திரீவீங்க..., வேண்டாம்பா வினை விதைத்தவன் தினை அறுத்ததில்லை. இந்த தீவிரவாதத்திற்கு தீனி போட்ட யாருமே நிம்மதியா வாழ்ந்ததில்லையப்பா.... நெருப்பு அணைஞ்சுருசுன்னு நினைச்சமே, நீங்க இன்னமும் அணைக்கவே இல்லையோ......

Monday, February 27, 2012

அழித்து விடு அர்ஜுனா...

“”எதிரே நிற்பவர்கள் என் குடும்பத்தார், என் உறவினர்கள், நேற்று வரை ஒரே குடும்பத்தில் ஒரே உறைவிடத்தில் ஒன்றாய் வளர்ந்து, ஒன்றாய் உறங்கி, ஒன்றாய் உண்டு களித்தவர்கள் என்ற உறவின் உணர்வுகளை ஒட்டு மொத்தமாய் கொன்று விடு, அம்பராத்தூணியில் அயர்ந்துறங்கும் அம்பை எடு, வில்லில் பொருத்தி நிமிர்த்திப் பிடி, புருவத்துக்கு மத்தியில் புலன்களை அடக்கு, எதிரில் தெரிவது அதர்மம் எனும் எதிரி மட்டுமே, நாணை இழு, அம்பின் கூர்முனைக்கு அதர்மம் வாழும் இதயம் மட்டுமே இலக்காக்கட்டும். அர்ஜுனா, அழித்து விடு, விழுவது உறவானாலும், அழிவது அதர்மமாகட்டும்””

குருஷேத்திர என்கவுண்டர் நமக்கெல்லாம் ஒரு பால பாடம். எத்தனையோ யுகங்கள் கழிந்த பின்பும் இந்த என்கவுண்டர் நியதி இன்னும் நியாயப் படுத்தப்படுவது இந்திய மண்ணின் இயல்பாகிப் போனது.
குற்றங்கள் எவ்வகையாயினும், மனித சமூகத்தின் உச்ச பட்ச தண்டனைகளை விசாரணையில்லாமலே வாரி வழங்கிவிட, அதிகாரம் எனும் தர்மத்தின் செங்கோல், கேள்விகள் ஏதுமில்லாமல் அனுமதி அளிக்கிறது. பசு மேடையேறி மணியை அடித்தவுடன், விசாரணை ஏதுமில்லாமல் தன் மகனையும் பலி கொடுப்பவர்களின் செயல் இங்கு நீதியை நிலை நாட்ட செய்த தியாகமாகத்தான் சித்தரிக்கப்படுகிறதே ஒழிய, அது ஒரு விசாரணை இல்லா படுகொலை என்பதும் அரச அதிகாரத்தின் உச்ச பட்ச துஷ்பிரயோகம் என்பதும் சௌகரியமாக மறைக்கப்படுகிறது. ஒரு கல்லில் இரண்டு மாங்காயாக ஒரு தகப்பனின் தியாகம் எனவும், மன்னனின் நீதி வழுவாமை எனவும் புண்ணியச் செயல்களின் சாயம் பூசப் படுகிறது.

ஆமாய்யா, உன்னோட பணத்தை திருடிட்டு போயிருந்தா உனக்கு வலி தெரியும்...
உன்னோட வீட்டுக்கு பக்கத்துல ஒருத்தன் துப்பாக்கி எடுத்துட்டு சுட்டுகிட்டிருந்தா இந்த பாலபாடம், குருஷேத்திரம்கர புண்ணாக்கெல்லாம் பேசுவியா???
அவனை புடிக்கப் போன போலீஸ்ல உன்னோட அண்ணனோ தம்பியோ இருந்திருந்து அவனை வீட்டுக்குள்ள ஒழிஞ்சிருக்கறவன் துப்பாக்கியால சுட்டிருந்தா இப்பிடித்தான் கேள்வி கேப்பியா???
அது எப்பிடியா போலீஸ்காரன் மாத்திரம் கருணையின் மறு உருவமா இருக்கணும்னு சொல்லி சொம்பு தூக்கீட்டு கொஞ்சம் கூட கூசாம ஜால்ரா போடறீங்க???
ரோட்ல நீ வண்டி ஓட்டும் போது, உன்னை ஒருத்தன் முந்திகிட்டு போனாலே அவனை கெட்ட வார்த்தைல திட்டற நீ, உன்னை ஒருத்தன் அருவாளை எடுத்து வெட்ட வரும்போது, ஏ, கொஞ்சம் நில்லுப்பா, அதாவது அஹிம்சைங்கறது என்னான்னா........ அப்பிடின்னு நீதி போதனை பண்ணிகிட்டிருப்பயா????
வந்துட்டானுக சும்மா, மனித உரிமை, மண்ணாங்கட்டி பெருமைன்னு பேசிகிட்டு...போய்யா..., போய் பொழப்ப நடத்தற வழியைப் பாருய்யா....
எல்லாருடைய மனதிலும் மேற்கண்ட கேள்விகள் ஊற்றென பெருக்கெடுத்து வருவதும் இயல்புதான்.

இந்த அவசர யுகத்தில் உடனடி தீர்வுகளை நோக்கி மனித மனம் ஏங்கித் தவிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. பொறுமை என்பது காட்சிப் பொருளாய் மாறி விட்ட இந்த யுகத்தில் உடனடி தீர்வுகள் மட்டுமே மனம் விரும்பும் மந்திரமாயிருக்கிறது. புண்ணை அறுத்து சீழ் பிதுக்கி, தீயால் சுட்டால், புண்ணை உருவாக்கும் கிருமி அழிந்து போவதோடு, இன்னொரு முறை புண் வருவதற்கான சாத்தியமே இல்லாது போகும். இது நிரந்தர தீர்வு. ஆனால், புண்ணுக்கு மேலே களிம்பு பூசி, சருமத்தை மட்டும் சரி செய்து விட்டால், பார்ப்பதற்கென்னவோ சருமம் அழகாகலாம். ஆனால், புண்ணும் புரையும் குணப்படுவதில்லை.

இப்படித்தான் இன்று எல்லா சமூகப் பிரச்சனைக்கும் உடனடி தீர்வு விரும்பப் படுகிறது. கடிக்கும் கொசுவிலிருந்து நம்மை பாதுகாக்க, கவச வளையங்களின் பாதுகாப்பை நம்பும் நாம், கொசு உற்பத்தியை தடுக்க விழைகிறோமா என்றால் இல்லை. எட்டு மணி நேரத்திற்கு கொசுத்தொல்லையிலிருந்து விடுதலை என்ற விளம்பரத்தில் மயங்கிப் போகும் நாம், கொசுவிலிருந்து நிரந்தர விடுதலை எப்படி என யோசிக்க மறுக்கிறோம்.

கொள்ளைக்கு கொலைதான் மருந்தென்பது புரையோடிய புண்ணை மூடி மறைத்து களிம்பு புசி சருமத்தை அழகு செய்யும் அலங்கார வைத்தியமே தவிர, புண்ணை புடமிட்டு குணப்படுத்தும் சரியான வைத்தியமல்ல.
கொள்ளை ஒரு சமுதாய வியாதி என்றால், இந்த கொலை செய்யும் வியாதிக்கு எது மருந்து???

மின்வெட்டால் உற்பத்தித் துறை முழுவதும் முடங்கிக் கிடக்கிறது. மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருக்கும் பஞ்சாலைத் தொழிலாளர்கள் இப்பொழுதே நகைகளையும், வாகனத்தையும் அடமானம் வைத்து சோறு தின்ன வேண்டிய அவல நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள். மின் வெட்டால் பொதுத் தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் இருட்டில் படிக்க வேண்டிய கட்டாயம் வந்ததில், ஒரு சந்ததியின் எதிர்காலமே கேள்விக் குறியாகி நிற்கிறது. நெற்களஞ்சியமாம் தஞ்சையில் விவசாயிகள் ஈரத் துண்டுகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டுள்ளனர்.

மக்களின் கோபம் ஒட்டு மொத்தமாய் வெடித்துச் சிதறும் முன் எதையாவது செய்து மக்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டிய கட்டாயத்தில் ஆளும் வர்க்கம் உள்ளது. தொடர் கொள்ளைகளில் ஒரு துப்பும் கிடைக்காமல் திண்டாடிய காவல் துறையின் ஒட்டு மொத்த கோபத்தின் வெளிப்பாடாய் ஒரு கொலை நாடகம் அரங்கேறியுள்ளது.

மக்களும் இதை இரண்டு நாட்கள் விடிய விடிய, வாய் வலிக்க வலிக்க பேசுவார்கள். மனித உரிமை, மக்களின் பெருமை, மடிவது கொடுமை, மடிசார் அருமை, மறப்பது சிறுமை, முனியம்மா கண்மை என ஒரு சில அறிவு ஜீவிகள் டை கட்டிக்கொண்டு, தொலை காட்சியில் நுனி நாக்கு ஆங்கிலத்தில் மினரல் வாட்டர் குடித்துக் கொண்டு பேட்டி கொடுப்பார்கள். ஊடகங்களும் அடுத்த ஊழல் வெடிக்கும் வரை, அடுத்த நடிகை அம்மாவாகும் வரை, அடுத்த ஆசிரியர் கொல்லப்படும் வரை, ஐந்து மாநில தேர்தல் முடிவு வரை இதே மாவை அரைத்துக் கொண்டிருப்பார்கள்.

மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை முன்வைக்காமல், தற்காலிகமாக களிம்பு பூசி அழகு பார்க்கும் குறுகிய நெஞ்சுடையோர் கைகளில் அதிகாரம் இருக்கும் வரை, அர்ஜுனா நீ சூதாடினாலும் அதுவும் தர்மமே, உன் வீட்டு பெண்ணை பணயம் வைத்து, பெண்ணும் ஒரு போகப் பொருள்தான் என சொல்லாமல் சொன்னாயே அதுவும் தர்மமே, நட்ட நடு சபையில் உன் பெண்ணின் உடல் தெரிய அவள் உடைகள் உரியப் பட்ட பொழுதும் சூதாட்ட விதிகளுக்கு முற்றும் கட்டுப்பட்டு முழுதும் மௌனம் காத்தாயே அதுவும் தர்மமே, அதர்மம் எதுவென்று அதிகாரம் படைத்த நான் அரிச்சுவடி சொல்லுகிறேன். ஆர்த்தெழு அர்ஜுனா, அம்பை வில்லில் பொருத்து, புருவத்துக்கு மத்தியில் புலன்களை அடக்கு, நாணை இழுத்து நன்றாக குறி பார், வில்லில் வீரனான உன் முன் நிற்கும் எதுவும் அதர்மமே... வில் வித்தை எனும் அதிகாரம் உன் கையில் இருக்கும் வரை உன் முன் நிற்கும் எதுவும் அதர்மமே... அழித்து விடு அர்ஜுனா.... அழித்து விடு.....

Monday, November 7, 2011

மேனகாவை அடக்கி வையுங்கள் !!!!!

பொறி வைத்து பிடிப்பது என கேள்விப் பட்டிருக்கிறீர்களா?? ஒரு எலியை கொல்ல என்ன செய்வோம்??? ஒரு எலிப் பொறி வாங்கி வந்து அதற்குள் ஒரு துண்டு பழத்தையோ அல்லது எலியின் நாக்கில் எச்சில் ஊறவைக்கும் எதாவது ஒரு விஷயத்தை தொங்க விடுவோம். தனது உயிருக்கே ஆபத்து இருக்கிறது என்பதை கொஞ்சமும் அறியாத எலி, அந்த பழத் துண்டின் மீதுள்ள ஆசையில் வந்து, பழத்தை பிடித்து இழுத்தவுடன், அந்த பொறிக்கான கதவு அடைபட்டு, எலி மாட்டிக் கொள்ளும். அப்பொழுது நமக்கு வரும் ஆனந்தம் இருக்கிறதே ஆஹா, உடனே அந்த எலியை பிடித்து ஊசியால் குத்தி, அதன் தலையில் அடித்து என எல்லா வகை சித்திரவதைகளையும் செய்து அது துடி துடித்து சாகும் வரை பொறுத்திருந்து ரசித்து நமது குரூர வன்மங்களை எல்லாம் தீர்த்த பின் அதை வெளியே வீசி எறிந்து, அதை ஒரு காக்கை கொத்திக் கொண்டு போனால் மட்டுமே நமது மனம் திருப்திப் படும். இதே போன்ற பொறி வைக்கும் முறைகளைத்தான் தொல்லை செய்யும் புலி, சிறுத்தை போன்ற வற்றை பிடிப்பதற்கும், மற்றும் தோட்டத்தில் புகுந்த யானைகளை பிடிப்பதற்கும் பயன் படுத்துவார்கள்.

ஆனால், விலங்குகளை பிடிப்பதில் இன்னொரு முறை இருக்கிறது, அதுதான் வேட்டையாடுவது. அதாவது அந்த விலங்கிடம் நேரடியாக மோதி அழிப்பது, சீறும் சிறுத்தையையோ, அல்லது பாய்ந்தோடும் மானையோ அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து அழிப்பது என்பது ஒரு வீர விளையாட்டு.

முந்தைய வகை கொலை என்பது, விலங்கிற்கு தீனி வைப்பது போல் வைத்து அதைக் கொல்வதாகும், அதாவது வஞ்சித்து, ஏமாற்றி, அந்த விலங்கின் பலவீனத்தை முழுவதுமாக உபயோகித்து கொல்வதாகும். இரண்டாவது வகை அதன் பலத்தோடு முழுவதும் மோதி, தன் உயிரை பணயம் வைத்து ஜெயிப்பதாகும். முதல்வகை கோழைகளின் விளையாட்டு, இரண்டாவது வகை வீர விளையாட்டு.

இப்படி ஒரு கோழைத்தனமான அருவருப்பான கேவல விளையாட்டைத்தான் வெள்ளைக்கார நிற வெறி ஊடகங்கள் மற்றுமொருமுறை ஆடித் தீர்த்திருக்கின்றன. அதாவது பொறி வைப்பது தப்பில்லை எனவும், பொறியில் சிக்குவதுதான் தவறு எனவும் சித்தரித்திருக்கிறார்கள். பலியானதென்னவோ பாவம் பாகிஸ்தானியர்கள்.


News of the World என்ற ஒரு வெள்ளைக்கார நிற வெறி ஊடகம். இங்கிலாந்தை தலைமையகமாகக் கொண்டு உலகின் சில நாடுகளில் கால் பதித்திருந்த இந்த ஊடகம், மக்களுக்கு பயன் தரும் நல்ல செய்திகளை என்றுமே அச்சில் வார்த்ததில்லை. 1843 ம் ஆண்டு தனது செய்தி தரும் சேவையை துவக்கிய இந்த செய்தி நிறுவனம், அரசின் நலத்திட்டங்களையோ, அல்லது தனி மனிதர்களின் சாதனைகளையோ, அறிவியல் கண்டு பிடிப்புகளையோ, மக்களின் ஆழ்மனக் கிடக்கைகளையோ எப்பொழுதுமே சேகரித்ததில்லை. மாறாக, தனி மனித அந்தரங்கங்களை, காம விளையாட்டுகளை, படுக்கையறை ரகசியங்களை மட்டுமே விற்று, பரபரப்பு செய்திகளை தந்து, ஊடகத்துக்கே உரிய கிளுகிளுப்பு மாயையை மட்டுமே காசாக்கிக் கொண்டு இருந்திருக்கிறது.

நடிகைகளின் அந்தரங்ககள், வியாபார புள்ளிகளின் காம லீலைகள், அரசாங்க அதிகாரிகளிடம் பெண்களை அனுப்பி, ரகசியங்களை கறந்த பின், இந்த கேவலமான அரசியல் வாதியை பாரீர், இப்படி ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள் விடும் ஆசாமியிடம் தான் நாட்டின் மிக முக்கியமான துறை சிக்கியிருக்கிறது என பல செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தனது விற்பனையை பெருக்கி வந்திருக்கிறது. அந்த பெண்ணை அவனிடம் அனுப்பும் கேவலமான மாமா வேலையை நான் தான் செய்தேன் எனவும் அந்த ஊடகம் பரபரப்புக்கு மத்தியில் ஒப்புக்கு ஒரு வாக்கியமாக சொல்லியது, ஆனால் அரசியல்வாதியின் பலவீனம் ஊதிப் பெரிதாக்கப் படும் பொழுது, இந்த மாமா வேலையின் கேவலத்தன்மை அடி பட்டுப் போகும்.

2010 – ம் ஆண்டில் இங்கிலாந்தையே உலுக்கிய தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிக்கிய இந்தப் பத்திரிக்கையின் முதலாளி, அப்போதைய இங்கிலாந்துப் பிரதமரான கார்டன் பிரௌனையும், அவரது தொழிலாளர் கட்சி உறுப்பினர்களையும், இந்த ஒட்டுக் கேட்பு வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும்படி மிரட்டியிருக்கிறார்.

இப்படி பரபரப்புக்கு பெயர் போன இந்த பத்திரிகைக்கு மஜர் மொகம்மது என்ற ஒரு தெருப் பொருக்கி மனப் பான்மை கொண்ட ஒருவன் 20 வருடங்களுக்கு மேல் நிருபராக வேலை செய்துள்ளான். தனது 18 வது வயதிலேயே, தனது தந்தையின் நம்பிக்கைகுரிய குடும்ப நண்பர்களின் வியாபாரத்தை, திருட்டு சி.டி. விற்பனை என்று சொல்லி அம்பலப் படுத்தி வெளிச்சத்துக்கு வந்தவன் தான் இந்த கேவலப் பிறவி. எல்லா இடங்களிலும் தன்னை ஒரு அரேபிய ஷேக்கு போல் காண்பித்துக் கொள்ளும் இவன் பல இடங்களில் பல பெயர்களில் ஊடுருவியிருக்கிறான்.

பலமுறை தவறான செய்திகளை பிரசுரித்து, அரசின் கண்டனத்தையும் பெற்றிருக்கிறான். 2004 – ம் ஆண்டில் ஒரு இஸ்லாமிய தீவிரவாத குழு அணு ஆயுதம் தயாரிக்க மூலப் பொருள் வாங்கியதாகவும், அந்த பரிமாற்றத்திற்கான முழு ஆதாரமும் தன்னிடம் உள்ளது எனவும், இந்த மூன்று நபர்கள் தான் அந்த தீவிர வாத குழுவை சேர்ந்தவர்கள் என ஒரு மூன்று பேரை இவன் அடையாளம் காட்ட, தீவிரவாதத்தால் கதி கலங்கிப் போயிருந்த இங்கிலாந்து உடனே அவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் அப்பாவிகள் எனவும், இந்த மஜர் மொகம்மது தான் பரபரப்புக்காக ஒரு புரளியை கிளப்பியுள்ளான் எனவும் தெரிய வந்தது. இப்படி பல விஷயங்களில் இங்கிலாந்து பாராளுமன்றத்தையே அதிர வைக்கும் அளவுக்கு இவனது புரளிகள் இருந்துள்ளன.

2003 –ம் ஆண்டில் இங்கிலாந்தின் மாடலிங், இசை, மற்றும் பல வியாபாரத்துறைகளில் கோலோச்சிக் கொண்டிருந்தவரும், கவர்ச்சிக் கட்டழகியாக வலம் வந்தவரும், புகழ்பெற்ற இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமின் மனைவியுமாகிய விக்டோரியாவை கடத்தப் போகிறார்கள். அந்த கடத்தல் திட்டத்திற்கான முழு ஆதாரமும் என்னிடம் உள்ளது என செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினான். கடத்தல் காரர்களாக அவன் அடையாளம் காட்டிய நபர்களை பிடித்து தீவிரமாக விசாரித்ததில் அப்படியொரு திட்டம் இருந்ததற்கான சாத்தியங்களே இல்லை என காவல் துறை கண்டறிந்தது.

இப்படி ஒரு கேவல பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த இந்த மஜர் மொகம்மதுக்கு, பாகிஸ்தானிய கிரிக்கெட் அணியுடன் ஒரு தனி விளையாட்டு விளையாடி பார்க்கும் விபரீத ஆசை திடீரென உதித்தது. இதற்கு தகுந்தாற்போல் கடந்த வருடத்தில் பாகிஸ்தான் அணியும் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. அப்பொழுது ஒரு கிரிக்கெட் சூதாட்ட வித்தகனான மஜர் மஜீத் என்பவனுடன் கூட்டணி அமைத்து பாகிஸ்தான் ஆட்டக்காரர்களுக்கு பொறி வைத்தார்கள். இதில் சிக்கிய ஏழு பாகிஸ்தானியர்களில், மூன்று பேர் மீது குற்றம் நிரூபணமாகி, அவர்களது எதிர்காலம் முழுவதும் பாழாகி இன்று சிறையில் கம்பி எண்ண வேண்டிய அவல நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

இங்கு கவனிக்க வேண்டியது, இந்த விளையாட்டு வீரர்கள் பணத்தாசை பிடித்து அலைந்தவர்கள் போலவும், பணத்துக்காக தனது ஒட்டு மொத்த விளையாட்டுத் திறனையும், தனது நாட்டின் புகழையும் விற்கத் துணிந்த கேவல பிறவிகள் போலவும் சித்தரிக்கப் படுகிறார்கள். ஆனால், இதற்குப் பின்னால் உள்ள ஊடக தகிடு தத்தங்கள் சகல சௌகர்யங்களுடன் மறைக்கப் பட்டு, பரிதாபமான விளையாட்டு வீரர்கள் தான் தேச துரோகிகள் என அடையாளம் காட்டப் படுகிறார்கள். இந்த புனித பணியை செய்த மஜர் மொகம்மது ஒரு பெரிய உத்தமன் போல் உலாவி வருகிறான். மேலும் கிரிக்கெட் எனும் புனித விளையாட்டை சூதாட்டத்தின் கோரப் பிடியிலிருந்து காப்பாற்ற வந்த பாரமாத்மாவின் மறு உருவமாகவே மஜர் மொகம்மது அவதாரமெடுத்திருக்கிறான்.

இங்கு சில கேள்விகள் :

1. பாகிஸ்தானின் குக்கிராமங்களில் இருந்து தனது திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து விளையாட வரும், இந்த சிறுவர்களுக்கு, இந்த பணம் கொழிக்கும் விளையாட்டின் அனைத்து பரிமாணங்களும், அந்தபரிமாணங்களுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் விபரீதங்களைப் பற்றிய பால பாடங்களும் எப்பொழுதாவது சொல்லிக் கொடுக்கப் பட்டதா??
2. ஒரு வெளி நாட்டு மண்ணில் விளையாடப் போகும் பொழுது, அவர்கள் யாருடன் பேச வேண்டும், அல்லது குறிப்பாக யாருடன் பேசக் கூடாது என்பது போன்ற வரையறைகள் சொல்லித் தரப் பட்டதா??
3. அப்படியே சொல்லித் தரப் பட்டிருந்தாலும், ஒரு விளையாட்டு வீரனின் தொடர்புகளை, அவனுடன் பேசும் நபர்களை, அல்லது அவனை சந்திக்கும் பத்திரிகையாளர்களை அந்த நாட்டு விளையாட்டு குழுவின் தலைமை, இம்மியளவேனும் கண்டுகொள்ளாமலிருக்குமா??
4. அப்படியே பணத்திற்கு ஆசைப்பட்டு, இந்த வீரர்கள் தங்களது திறமையையும், தன் மானத்தையும் அடகு வைக்க முன்வந்து, தப்பாட்டம் ஆடுகிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டாலும், அவர்களை தப்பாட்டம் ஆட வைத்தவர்களையும் குற்றவாளிகளாக்காமல், அவலங்களை துகிலுரிக்க வந்த மகாத்மா போல சித்தரிப்பது ஏன்??
5. லஞ்சம் வாங்குவது குற்றமென்றால், லஞ்சம் கொடுப்பது தார்மீக செயலா??
6. ஊடகம் என்றால் எந்த ஒரு தரம் தாழ்ந்த செயலையும் செய்யலாம், ஆனால், பலியாடுகள் பரிசுத்தவான்களாய் இருக்க வேண்டுமென்பது எவ்வகை நியாயம்??
7. பாகிஸ்தானியர்களுடன் இந்த அருவருப்பான விளையாட்டை ஆடிய வெள்ளைக்கார நிறவெறி ஊடகங்கள், தனது நாட்டு வீரர்களையும் இப்படி பரீட்சித்துப் பார்க்க தயாரா??
8. இன்று கருப்பர்களான பாகிஸ்தானிய வீரர்கள் மீது விசாரணை நடத்தி உடனடி தீர்ப்பு வழங்கும் சர்வதேச கிரிக்கெட் சங்கமாகட்டும், இங்கிலாந்தின் நீதிமன்றமாகட்டும், வெள்ளைக்கார தென் ஆப்பிரிக்க வீரன் ஹர்ஷெல் கிப்ஸ் மீதும் சூதாட்ட குற்றச் சாட்டு உள்ளதே அதை விசாரிக்காதது ஏன்??
9. அவன் வெள்ளைத்தோல் என்பதால், அவனை விசாரிப்பது அவசியமில்லையா??

ஊடகப் போர்வையில் உலா வரும் கேவலப் பிறவிகளே, இங்கு மேனகைகள் தொடை தெரிய ஆடையணிந்து, இடுப்பின் வளைவுகளை எடுப்பாய் காட்டி, மார்பு குலுங்க நடனமாடுவார்களாம், ஆனால், விசுவாமித்திரன் மட்டும் தன் தவத்தில் நிலைத்திருக்க வேண்டுமா??? எந்த ஊர் நியாயமிது??

மேனகாவை அடக்கி வையுங்கள். எங்கள் விசுவாமித்திரர்கள் தவத்தில் நிலைத்திருக்கட்டும்.

Friday, October 28, 2011

எப்படி கொல்வது ?????

உங்கள் நாட்டில் எண்ணெய் இருக்கிறதா???? நீ என் நண்பன். உனக்கு புது தொழில் நுட்பம் கற்றுத் தருகிறேன். உன் குடிமக்களுக்கு உல்லாச புரிகள் கட்டித் தருகிறேன். உன் குழந்தைகளுக்கு உலகின் முதல் தர கல்வி கற்றுத் தருகிறேன். உன் பாரம்பரியமெல்லாம் உதவாக்கரை சமாச்சாரங்கள், அவைகளையெல்லாம் உதறிவிட்டு வெளியே வா, தினமும் மதுவைக் குடி, கண்ணில் கண்ட பெண்ணின் இடுப்பிலெல்லாம் கைகளால் விளையாடி இன்பத்தில் திளைத்திரு, ஒரு புதிய உலகம் காண்பிக்கிறேன் வா….

பதிலுக்கு என் நாட்டு எண்ணெய் கம்பெனிகள் உன் நாட்டில் கொடி நாட்டட்டும், தினமும் என் நாட்டு எண்ணெய் கப்பல்கள் உன் துறைமுகத்தில் வலம் வரும். மறுபேச்சு பேசாமல் அவைகளின் அனைத்து இடுக்குகளையும் உன் எண்ணை வளத்தால் நிறைத்து அனுப்பு…… என்னது பணமா, ம், அதுவும் வேண்டுமா உனக்கு,,, சரி சரி,,, உலகச் சந்தையில் நான் வைத்திருக்கும் விலையை விட ஒரு ரூபாய் அதிகம் தருகிறேன். வாங்கிக் கொண்டு வாயை மூடிக் கொண்டிரு. எல்லா நாட்டுத் தலைவர்கள் நடுவிலும் உனக்கும் ஒரு நாற்காலி போட்டு, உலகில் இருக்கும் உதவாக்கரை விருதுகள் அத்தனையும் தருகிறேன். பல்லை இளித்து விட்டு பரிசு வாங்கிக் கொண்டு போ. என்னது…. காது கேக்கலை கொஞ்சம் சத்தமா சொல்லு, என்னது, உன் நாட்டு மக்களா, அவுங்கள விடுய்யா, அவுங்களா உனக்கு சோறு போடறாய்ங்க, உன் நாட்டு எண்ணெய் தான சோறு போடுது… அதை எப்பிடி வியாபாரம் பண்றதுன்னு பாரு. உனக்கும் உன் குழந்தைகளுக்கும் உலகின் சிறந்த நகரங்களில், கேளிக்கை விடுதிகள் கட்டித் தருகிறோம்…. அழகா உக்கார்ந்து சீமைச் சரக்கை உறிஞ்சுகிட்டே, முன்னால இடுப்பை வளைச்சு ஆடுற அழகுப் பெண்ணை அனுபவிச்சுகிட்டு சுகமா இருங்கப்பா, நாட்டு மக்கள் இருந்தாங்க, இருக்கறாங்க, இன்னமும் இருப்பாங்க, அவுங்களைப் பத்தியெல்லாம் கவலைப் படாத கண்ணு. அவுங்க மேட்டரை நான் கவுனுச்சுக்கறேன்.

என்னது, இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டியா, அப்ப எண்ணெய் தர மாட்டியா…. இப்ப பாருடா, என் சுய ரூபத்தை…… ங்கொய்யால… உன் நாட்டில் மனித உரிமை மீறப்படுகிறது. நீ மனித இனத்துக்கு எதிரான நியூக்ளியர் குண்டுகள் தயாரிக்கிறாய். ஐ.நா அமைப்பு உன்னை சோதிக்க வேண்டும், எப்ப பார்த்தாலும் குண்டு தயாரிப்பதிலேயே நீ உன் பணத்தை செலவிடுகிறாய், உன் நாட்டு மக்கள் ஒரு துண்டு ரொட்டிக்கும், ஒரு வேளை சோத்துக்கும் வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது நீ மட்டும் மாட மாளிகைகளில் வாழ்கிறாய், எங்கள் நாட்டு ஊடகங்கள் இனி உன் மீது படையெடுக்கும், அழுக்கு நிறைந்த வீதிகளும், விபச்சாரம் செய்யும் பெண்களும், சோத்துக்கில்லாத குழந்தைகளும் படம் பிடிக்கப்பட்டு, உனது நாடு என்றாலே இப்படி சிங்கியடிக்கும் கூட்டம் தான் என பிரச்சாரம் செய்வோம், நேட்டோ படைகள், ஐ.நாவின் கூட்டு படைகள், இன்னும் எங்கள் நாட்டு சொந்தப் படைகளெல்லாம் உன் நாட்டில் முகாமிட்டாலொழிய உன் நாடு உருப்படாமல் போகும், உலகத்தையே ரட்சிக்க அவதாரமெடுத்திருக்கும் நான், ஐ.நா என்ற பெயரில், நேட்டோ என்ற பெயரில் இன்னும் என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள், அந்த எல்லா பெயரிலும் உன்னை கண்காணிப்பது அவசியம். பாவம், உன் நாட்டு மக்கள், உன்னைப் போன்ற அரக்கனின் கையில் சிக்கி, தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாரங்கே…. ஐ.நா. சபையின் செயலரா, தலைவரா, தலையாரியா, பூசாரியா…., என்ன எழவோ, கூப்பிடுயா அந்த ஆளை, யோவ், உடனே அறிக்கை ஒண்ணு ரெடி பண்ணு, நான் சொல்றத அப்பிடியே எழுது. நான் சொன்ன பேச்சுக்கு அடங்காமல் அழிச்சாட்டியம் பண்ணும் அவன் நாட்டில் வறுமை, மனித உரிமை மீறல், தினம் தினம் பட்டினிச் சாவு, உலகத்தையே அச்சுறுத்தும் அணுகுண்டுகள் தயாரிப்பு, ஆட்சியாளர்களின் சுக போக வாழ்வால் மக்கள் நலப் பணிகள் பாதிப்பு என்று ஒரு அறிக்கை தயார் செய்து உடனே வாசித்து விடு. அந்த நாட்டின் வளங்கள் பாதுகாக்கப் பட வேண்டியது அவசியம் என மறக்காமல் பல முறை சொல்லு…..
அப்புறம், யாருப்பா அது, நம்ம கைத்தடிகளெல்லாம் எங்கடா ஒழிஞ்சீங்க, சீக்கிரம் வாங்கடா, இங்க பாரு, இவன் நமக்கு எண்ணெய் குடுக்க மாட்டிங்கறான், நம்ம சொன்ன பேச்சை கேக்க மாட்டிங்கறான், ஒண்ணு பண்ணுங்க, அவன் ஊர்ல இருக்கற தெருப் பொறிக்கிகளை எல்லாம் ஒண்ணு சேருங்க ”புரட்சிகர மனித நேய புனித இதிகாச தேசிய விடுதலை இளைஞர் முன்னணி” இந்த வார்த்தைகளையெல்லாம் முன்னால பின்னால எப்பிடி வேண்ணாலும் மாத்தி மாத்தி போட்டு ஒப்புக்கு ஒரு பெயர் வைத்து ஒரு கட்சியை தயார் பண்ணுங்க, கொடுங்கோல் ஆட்சிக்கெதிராக ஒரு வீரிய புரட்சின்னு ஃபிளக்ஸ் பேனர் கட்டுங்க, அவுங்களுக்கு துப்பாக்கி, பீரங்கி, வெடி குண்டு இன்னும் என்ன குண்டெல்லம் வேணுமோ எல்லாத்தையும் குடுங்க, மத ரீதியான உணர்வை தூண்டி விடுங்க, தினமும் எங்கயாவது ஒரு இடத்துல குண்டு வைக்க சொல்லிக் குடுங்க. தினமும் எத்தனை பொண்ணுங்களை கற்பழிக்க முடியுமோ அத்தனையும் செய்யச் சொல்லுங்க, புரட்சின்னு வந்துட்டா, இதெல்லாம் சகஜம் தானே, அப்புறம் கண்ணுல பட்டவனையெல்லாம் குருவி சுடற மாதிரி சுடச் சொல்லுங்க. என்னது பணம் வேணுமா, நம்ம மரப் பீரோவுல அடுக்கி வெச்சிருக்குது பாருப்பா, ஒரு பத்து இருபது கட்டுகளை எடுத்து விசுறுங்க, எல்ல பேட்டை ரவுடியும் நம்ம கிட்ட வாலாட்டுவான், அப்புறம் பார்க்கலாம் அவங்க நாட்டாமை எங்க போறான்னு, ங்கொய்யால …. தனி ஆவர்த்தனமா பண்ற,, இப்ப வெக்கறண்டா ஆப்பு உனக்கு…… எப்பூடி….

எங்கு பார்த்தாலும் மணல் குவிந்த பாலைவனம், ஒப்புக்கு ஒரு சில இடங்களில் மாத்திரம் அரிதாக காணப் படும் நீரூற்றுகள், மிகக் குறைந்த அளவில் விவசாயம் என பாலைவன நாடுகளுக்கே உரிய எல்லா அழகுடனும் அவஸ்தைகளுடனும்தான் லிபியாவின் மக்களும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வெய்யில் காலத்தில் 57 டிகிரி வெய்யிலோடு இலவச இணைப்பாக மணற்புயலும் அடிக்கும். குளிர் காலத்திலோ எலும்புக்குள் ஊசியேற்றி குசலம் விசாரிக்கும் பயங்கரக் குளிர், தண்ணீர் என்பதே ஒரு அதிசய காட்சிப் பொருள்தான். இப்படி வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு தென் லிபியாவில் கிடைத்த அற்புத சுரங்கம்தான் அவர்களது வாழ்வாதாரத்தையே மாற்றிப் போட்டது. ஆம், 1953 ம் ஆண்டின் ஒரு சுபயோக சுப தினத்தில், எல்லா ராசிகளும் ஒன்று கூடி ஒரே கோணத்தில் பார்க்க, சுக்கிரன் திசை மட்டும் உக்கிரமாய் இருக்க, எண்ணய் கிடைக்குமா என பூமியை தோண்டப் போக அங்கு ஒரு அதிசய சுரங்கமே கிடைத்தது. பாலைவனத்தில் தெளிந்த தண்ணீர் ஊற்றைவிட பெரிய அதிசய சுரங்கம் வேறென்ன இருக்க முடியும். ஆமாம், தோண்டத் தோண்ட நிறைய இடங்களில் தண்ணீர் கிடைத்தது. போதாதா, மக்கள் குதூகலித்தார்கள். உலகத்தின் எட்டாவது அதிசயமாக ஒரு செயற்கை நதியையே உருவாக்கினார்கள். தெற்கில் இருந்த தண்ணீரை வடக்கு, கிழக்கு மேற்கு இன்னும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் தங்கு தடையின்றி எடுத்துப் போனார்கள். நாட்டில் எல்லோரும் தலைமுழுகி ஆனந்தமாக குளிக்க ஆரம்பித்ததே இந்த தண்ணீர் வந்த பின்தான் போலுள்ளது. உலகின் ஒரே ஒரு செயற்கை நதி என பெயரிட்டார்கள்.

சரி, தாகத்துக்கு தண்ணீர் வந்தாயிற்று, அடுத்தது என்ன என யோசித்தார், அப்போதைய ஆட்சியாளர் கடாபி. அடுத்தது இருக்கிற எண்ணை வளத்தை வைத்து தன்னிறைவடைவோம் என ஒரு உயரிய நோக்குடன் தனது எண்ணை வியாபாரத்தை பல மடங்கு பெருக்கினார். யார் வேண்டுமானாலும் வாருங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளுங்கள், ஆனால் விலை நான் சொல்வதுதான். ஒழுக்கமாக கையில காசு, வாயில தோசைங்கற கொள்கையில் வியாபாரம் பண்ணுங்கள் என கறாராக சொல்லி விட்டார். வேறு வழியில்லை, ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். காடாபியிடம் இருப்பது உயர்தர சரக்கு, அந்த மனிதனை பகைத்துக் கொண்டால், சரக்கு கிடைக்காமல் போனாலும் போய்விடும். ஆக, கடாபிக்கு வணக்கம் சொல்லுங்கள், எண்ணெயை அள்ளுங்கள் என பல்லைக் கடித்துக் கொண்டு உலக நாட்டாமைகள் எண்ணெய் அள்ளின.

சிறுகச் சிறுக கடாபியின் கஜானா நிரம்பலாயிற்று. முதலில் என் மக்களுக்கு படிப்பறிவு வேண்டும் என பள்ளிகளை திறந்தார். தொடர்ச்சியாக, கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என வளர்ந்து கொண்டே போய், கல்வி கட்டாயமாக்கப் பட்டு, இப்போதைய கணக்குப் படி லிபியாவில் 82 சதவீதம் பேர் கல்வியறிவுள்ளவர்களாய் உள்ளனர்.
எல்லோருக்கும் வீடு என்ற தனது கனவை நனவாக்கினார் கடாபி. லிபியாவின் குடிமக்களுக்கு அரசாங்கமே வீடு கட்டிக் கொடுத்தது. எந்த நாட்டிடமும், அல்லது உலக வங்கி, அல்லது எந்த நிதி நிறுவனத்திடமும் தனது நாட்டின் வளர்ச்சிக்காக கடாபி கையேந்த வில்லை. முற்றிலும் சுய உழைப்பு, சுய சம்பாத்தியம் அதன் மூலம் தன்னிறைவு என்பது கடாபின் கொள்கையாயிருந்தது. அதன் மூலம் வெற்றியும் கண்டார். ஆனால் எண்ணெய் விவகாரத்தில் மாத்திரம் மூக்கை நுழைக்க முயன்ற உலக நாட்டாமைகளை அப்படியே விரட்டி அடித்தார். ஆப்பிரிக்கா மீது தீராத காதல் கொண்டிருந்த இந்த தொப்பிக்கார முரட்டு மனிதர் ஒருங்கிணைந்த ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்காவின் வளங்களெல்லாம் ஆப்பிரிக்க மண்ணின் மைந்தர்கள் அனுபவிக்கவே இறைவன் படைத்தான், இதை வெளிநாட்டு சக்திகள் கொள்ளை கொண்டு போக வேண்டாம் என ஒரு பரந்த கனவை கொள்கையாக வைத்து அதற்கென அயராது பாடு பட்டார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஒருங்கிணைந்த ஆப்பிரிக்கா என உரத்த சத்தமிட்டார். “ஆப்பிரிக்கர்களே ஒன்று கூடுங்கள், நமது வளங்களை நாம் பங்கிடுவோம், நாம் உழைப்போம், தன்னிறைவடைவோம்” என அறைகூவல் விடுத்தார். ஏகாதிபத்தியத்தின் மரு உருவமான மேற்கு நாடுகளின் அனைத்து கொள்கைகளையும் தன் கால் தூசுக்கும் கூட மதிக்காமல் எதிர்குரல் கொடுத்தார்.
இது போதுமே, உலக நாட்டாமை என தன்னை சுய பிரகடனப் படுத்திக் கொண்டு முக மூடி அணிந்த ஓநாயான அமெரிக்காவுக்கு மூக்கு மட்டுமல்ல, உடலின் எல்லா பாகங்களிலும் வேர்த்தது. கடாபியை கண்காணியுங்கள். எந்த ஒரு நாடும் எங்களிடம் கையேந்திக் கொண்டு, ஆமாம் சாமி போட்டு தலையாட்டிக் கொண்டிருக்கிற வரை நாமும் நல்லுறவு என்ற போர்வையில் அவர்களுடன் கைகுலுக்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம். ஆனால் இவன், ஆப்பிரிக்க ஒருங்கிணைப்பு என்கிறான், ஆப்பிரிக்க வளங்களை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டான். இவனை வளர விட்டால் ஆப்பிரிக்கா என்ற அட்சய பாத்திரத்தில் நாம் அள்ள முடியாது. இவனை தனிமைப் படுத்துங்கள் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பொருளாதார தடைகள், அவ்வப்பொழுது லிபியாவிலிருக்கும் பொறுக்கிகளுக்கு கொம்பு சீவி விடுதல் என தன் தகிடு தத்தங்களை முடிந்த வரை ஆடிப் பார்த்தார்கள். ஆனால் கடாபி அசரவில்லை. அவர்கள் ஒரு அடி பாய்வதற்குள், இவர் நான்கு அடி பாய்ந்தார். பொறுத்து பொறுத்து பார்த்தார்கள். கடாபி இனி எண்ணெய் வர்த்தகம் டாலர் , யூரோ போன்ற மதிப்பிழந்த பணங்களில் இல்லை, நான் சொல்லும் பணத்தில் தான் பேரம் நடக்க வேண்டுமென்றார். ஆஹா, இனியும் விட்டால் இவன் எங்க போய் நிப்பானோ தெரியாதுடா என்றார்கள். ரைட்டு ஆரம்பிச்சுரு, அடிங்கடா அவனை, மனித உரிமை மீறல்கள், ரசாயன ஆயுதங்கள் இன்னும் என்ன வேணுமானாலும் சொல்லு. ஆனால் அவனை ஒழிச்சுக் கட்டு, அதோட விடாதே அங்க நமக்கு ஆமாம் சாமி போடற ஒருத்தனை ஆட்சியில வை…… அடித்தார்கள்.

ஒரு பைசா கடன் வாங்காத அந்த கடாபியை அடித்தார்கள், தன்னிறைவு என்றால் அது கடின உழைப்பினால் மாத்திரமே சாத்தியம் என்ற கடாபியை அடித்தார்கள், ஒரு சில நீரூற்றுகளை ஒட்டு மொத்த தேசத்துக்கும் வழங்கி, பாலைவனத்தில் சோலைகளை ஏற்படுத்திய கடாபியை, ஒன்று பட்ட ஆப்பிரிக்கா என்ற உயர்ந்த கனவை வாயிலாவது உச்சரித்த கடாபியை, எழுத்தறிவில்லா தேசத்தின் குடிமக்களுக்கு, பட்டப்படிப்பையும் இலவசமாக வழங்கிய கடாபியை, ஆப்பிரிக்க வளங்களெல்லாம் மண்ணின் மைந்தர்களுக்கே என முழங்கிய கடாபியை, என் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சொந்த வீட்டில்தான் வாழ வேண்டும் என எல்லாருக்கும் வீடு கட்டிக் கொடுத்த கடாபியை, பெண்கள் முன்னேற வேண்டும் என பாடுபட்ட கடாபியை, உலக நாட்டாமைகளின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய கடாபியை, எங்கெல்லாம் நட்பின் பெயரில் சுரண்டல்கள் நடந்ததோ, அதற்கு எதிராக குரல் கொடுத்த கடாபியை, பிச்சைக் காரர்களே இல்லாத ஒரு தேசத்தை உருவாக்கிய கடாபியை ஒரு சில தெருப் பொறுக்கிகள் சேர்ந்து நாயை அடிப்பது போல் அடித்து அவரது ரத்தம் வழியும் உடலை தெருவில் இழுத்துக் கொண்டு போய் அவமானப் படுத்தினார்கள்.

ஆமாம், கடாபி கொஞ்சம் கோக்கு மாக்கான ஆசாமிதான், பகட்டு உடைகள் அணிவது பிடிக்கும், பள பள நகைகள் அணிவது பிடிக்கும், எப்போதும் அழகிய பெண்கள் சூழ நடப்பது பிடிக்கும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வித விதமான உடைகள் அணிவது பிடிக்கும், ஆன்மீகம் பேச பிடிக்கும், எந்த எதிர் விளைவுகளையும் யோசிக்காமல் மனதில் பட்டதை அப்படியே பேசப் பிடிக்கும், தனது அரசியல் விரோதிகளுக்கு மேலோக பதவி அளித்து கௌரவிப்பது பிடிக்கும், முக்கியமாக தன்னிறைவு, அகண்ட சாம்ராஜ்யம் போன்ற கனவுகள் காண்பது பிடிக்கும். ஆனால், அவர் அழித்தொழிக்கப் பட வேண்டிய ஆபத்தான மனிதன் அல்ல, அவ்வப்பொழுது பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்தான், ஆனால் அதுவும் இஸ்ரேலியர்களின் அத்து மீறல்களுக்கெதிரான எதிர்ப்புக் குரலாகவே இருந்தது. தீவிரவாதத்தை அவர் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. மாறாக தன் மக்கள், தன் நாடு, தன் வளங்கள் என்று சதா சிந்தித்துக் கொண்டிருந்தவர். அரசியல் சதுரங்கத்தில் அவரும் பல காய்களை வெட்டியவர்தான் இல்லை என சொல்லவில்லை, ஆனால், அவைகளுக்கென பிரத்யேக காரணங்கள் இருந்ததோ என்னவோ, யாருக்குத் தெரியும். பொதுவில் அவரை ஒரு சர்வாதிகாரியாக, மத வெறியனாக, ஸ்த்ரீ லோலனாக இன்னும் எப்படியெல்லாம் திரித்துக் கூற முடியுமோ அப்படியெல்லாம் மேற்கத்திய ஊடகங்கள் திரித்துக் கூறினாலும், தனது நாட்டு மக்களின் மேம்பாட்டிற்கென உடல் பொருள் ஆவியை கொடுத்து உழைத்தவர் என்பதில் சந்தேகமில்லை.

இப்படி இருந்த ஒரு மனிதனை ஒரு தெரு நாயைப் போல சுட்டு, ரத்தம் தோய்ந்த ஆடையில்லா உடல் தெருக்களில் இழுத்துச் செல்லப் பட்டு சித்திரவதை செய்து கொல்வது தான் நீதி என்றால், இப்பொழுது ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், ஒரு காலத்தில் வியட்நாமிலும் இன்னும் உலகின் பல நாடுகளிலும் தினமும் பெண்களை கற்பழித்துக் கொண்டும், எண்ணெய் வளங்களை சுரண்டிக் கொண்டுமிருக்கிற உலக நாட்டாமைக் காரர்களை எப்படிக் கொல்வது??????

Tuesday, August 9, 2011

நிறவெறி - நிதர்சனம்


இங்கிலாந்து தேசத்தின் லண்டன் நகரம். ஒரு காலத்தில் மனித வர்க்கத்தின் சொர்க்க புரி, ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், துடைத்து விடப்பட்ட சாலைகள், பூக்களைச் சொறியும் நந்தவனங்கள், பூமியிலிருந்து திடீரெனக் கிளம்பி வானத்தை நோக்கி பீறிட்டுக் கிளம்பும் செயற்கை நீரூற்றுகள், கம்பீரம் நிறைந்த இங்கிலாந்து அரச குடும்பத்து அரண்மனை, உலகின் மூலை முடுக்கெல்லாம் கோலோச்சிய இங்கிலாந்தின் ராஜ குடும்பத்தினரின் தனிப்பட்ட உல்லாச மாளிகைகள், நவீனத்தின் உச்சமாக எங்கு நோக்கினும் மினுக்கும் ஆடம்பரம், சுரங்கத்தில் ஓடும் ரயில் வண்டிகள் என ஒரு உல்லாசபுரியின் அனைத்து முகவரிகளையும் இந்த நகரத்தில் காணலாம்.

ஆனால் இதற்கெல்லாம் திருஷ்டிப் பொட்டு வைத்த விதமாக, இங்கிலாந்து பாதம்பதித்து, காலால் மிதித்து அரசாண்ட நாடுகளின் ஒருசில வெள்ளையரல்லாத வர்க்கத்தினருக்கான குடியிருப்புகளை லண்டன் நகரத்தின் வெளிப்புறப் பகுதிகளில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இந்த வெள்ளையரல்லாத மக்கள், தங்கள்சொந்த நாட்டிலிருந்து (இங்கிலாந்தின் தொழில் துறௌ முன்னேற்றத்துக்கென வியர்வை சிந்துவதற்காகவே) அழைத்து வரப்பட்டு, இங்கிலாந்தின் கௌரவ குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டு, இங்கிலாந்தில் குடியுரிமை வழங்கப்பட்டாலும், எந்த ஒரு வெள்ளையனும் வேறு நிறத்தவனை அவனது அண்டை வீட்டுக்காரனாக இன்றுவரை அங்கீகரிக்கவில்லை. மிகக் கவனமாக அவனுக்கு ஒரு நவீன அடிமையின் முகவரி கொடுத்து நகரத்தின் ஒதுக்குப் புறத்தில் வைத்திருக்கிறார்கள். (இந்தியர்களும் இதற்கு விதி விலக்கல்ல)

வெள்ளையர்களின் தெருவுகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் மேன்மை தங்கிய அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட இந்த அடிமைகளின் பிராந்தியங்களுக்கென செயல்படுத்தப் படுவதில்லை. எப்பொழுதும் ஒரு மூன்றாந்தர தெரு நாய்களைப் போலத்தான் இவர்கள் நடத்தப் படுகிறார்கள். ஆனால் இவர்களின் உடல் உழைப்பை உறிஞ்சுவதில் வெள்ளைத் தோல்களுக்கு என்றுமே சிறிதும் தயக்கம் இருந்ததில்லை. அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவது போல் நடித்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளாகத்தான் கட்சி வேறுபாடின்றி ஒவ்வொரு அரசாங்கமும் இருந்திருக்கின்றது.

லண்டன் நகர வாசியான ரிச்சர்ட் ரோஸ் இப்படியாக எழுதுகிறார் “ நான் முப்பது வருடத்திற்கு முன், லண்டன் நகரின் டாட்டன்ஹாம் பகுதிக்கு குடி வந்தேன். (டாட்டன் ஹாம் என்பது வடக்கு லண்டனில் உள்ள கருப்பர்கள் மட்டுமே வாழும் பகுதி). அப்பொழுதெல்லாம் இது ஒரு உழைக்கும் வர்க்கத்தின் சொர்க்க புரியாகத் திகழ்ந்தது. எங்கு நோக்கினும் திறமை மிகுந்த வாலிபர்கள் தங்களின் உழைப்பினால் பொருளீட்டினார்கள். மாலை நேரங்கள் விளையாட்டிலும் ஆடல் பாடலிலும் கழியும். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலய ஆராதனைகளில் இன வேறுபாடின்றி கூட்டம் நிரம்பி வழியும். எல்லாம் கிரமமாயும் ஒழுங்காகவும்தான் போய்க் கொண்டிருந்தது” என்கிறார்.

உழைக்கும் மக்கள் நிறைந்த பகுதியாதலால், பணப் புழக்கம் அதிகமிருந்தது. இந்த பணப் பெருக்கத்தைக் கண்டு அரசாங்கம் பயந்ததோ என்னவோ, தெரியவில்லை, 80 களில் பதவியேற்ற பிரதமரான மார்கரெட் தாட்சரின் ஆட்சியிலிருந்து ஆரம்பித்து, ஜான் மேஜர், டோனி பிளேர் மற்றும் இப்போதைய காட்டன் பிரௌன் வரையிலான எல்லா ஆட்சியாளர்களுமே இந்த வாலிபர்களின் திறமை மிகு எழுச்சியை, அவர்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தின் சக்தியை, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு எழுச்சியாகவே உணர்ந்தனர். தங்களது சொந்த மண்ணில் வேறொரு இனம் செழிப்பதா என நினைத்தார்களோ என்னவோ, 80 களின் ஆரம்பத்தில் இருந்தே கருப்பர்களை புறக்கணிப்பது மறைமுகமாக அரங்கேற ஆரம்பித்தது. (இந்த மார்கரெட் தாட்சர், இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஐரோப்பிய நாடுகளில் யூதர்களுக்கெதிராக நடந்த வன்முறையில் தப்பிப் பிழைத்து இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த ஒரு யூத குடும்பத்துப் பெண்மணி, யூதர்களுக்குள் உறைந்து கிடக்கும் நிற வெறியைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன???? தனது பிரதமர் பதவியை பயன்படுத்தி கருப்பர்களின் புறக்கணிப்பு என்பதை ஒரு அரசியல் நிலைப்பாடாக உருவாக்கிய புண்ணியம் இந்த புரட்சிப் பெண்மணியையே சாரும்)

இந்த அதிகார பூர்வ புறக்கணிப்பினால் கருப்பு இன மக்கள் வெகுண்டு எழுந்ததின் விளைவாக, இளம் வாலிபர்கள் அரசுக்கு எதிராக குழுக்களாக திரண்டனர். ஒரு தகுதியும் இல்லாத வெள்ளை வாலிபர்கள் வெறும் வெள்ளை நிறத்தவர்கள் என்ற ஒரே தகுதிக்காக அரசாங்கத்தால் உயர்த்திப் பிடிக்கப்படுவதும், அனைத்து தகுதிகளும் தன்னிடம் இருந்தும், இங்கிலாந்தின் இறையாண்மையை முழுவதும் மதிக்கும் ஒரு குடிமகனாக தான் வாழ முற்பட்டாலும், கருப்பு நிறத்தவன் என்ற ஒரே காரணத்துக்காக தான் புறக்கணிக்கப்படுவதும் ஒவ்வொரு கருப்பு இன வாலிபனின் நெஞ்சிலும் வஞ்சத்தை விதைத்தது. இதை எதிர்பார்த்தது போலவே அரசாங்கமும் இவர்களை சர்வ சௌகர்யத்துடன் சமூக விரோத கும்பல் என்று முத்திரை குத்தி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவ்வப்பொழுது வேட்டையாடி வந்திருக்கிறது.

இந்த வேட்டையாடலின் ஒரு பகுதியாகத்தான் கடந்த வார இறுதியில் போலீஸாரால் திட்டமிட்டு நடத்தப் பட்ட ஒரு படுகொலை. மார்க் துக்கன் என்ற 29 வயது வாலிபனை தெரு நாயை சுடுவது போல சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். அதற்கு கண்டனம் தெரிவித்து, கருப்பர்களால் நடத்தப்பட்ட ஒரு அமைதி ஊர்வலத்தில் வெள்ளை போலீஸ் காவலர்களால் திட்டமிட்டு வன்முறை அரங்கேற்றப் பட்டு, வெள்ளை முகமூடி அணிந்த ஊடகங்களின் காமிராக்களில் கறுப்பர்களின் வெறியாட்டம் மட்டுமே படம்பிடிக்கப்பட்டு, கறுப்பர்களின் ஈனத்தனத்தைப் பாரீர் என உலக அரங்கில் வெட்கமில்லாமல் ஒளிபரப்பும் அளவுக்கு நிற வெறியானது வெள்ளையர்களையும், அவர்களது ஊடகங்களையும் ஆட்கொண்டுள்ளது. மார்க் துக்கன் ஒரு தீவிரவாதியாகவும், போதைப் பொருள் விற்பவனாகவும் வெள்ளைய ஊடகங்களால் அடையாளம் காட்டப் படுகிறார்.

உண்மையில், பொருளாதார ரீதியாக மிகவும் கேவலமான நிலைமைக்கு சீரழிந்து ஆட்டம் காணும் இங்கிலாந்து, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கருப்பர்களை அணுஅணுவாக சித்திரவதை செய்து வருகிறது. இந்த சிக்கன நடவடிக்கைகளால் அரசின் உதவித்திட்டங்கள் மற்றும் அரசின் இயல்பான மக்கள் நலப் பணிகள் கூட சிக்கனம் என்ற பெயரில் கருப்பர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த சிக்கன நடவடிக்கைகளால் எந்த ஒரு வெள்ளையனும் பாதிக்கப்படவில்லை என்பது வேலை இல்லாத் திண்டாட்டத்தின் விகிதங்களைக் காணும் பொழுது தெளிவாகிறது. (முழுத்திறமையும் தகுதியும் உள்ள கருப்பர்களில் 30 சதவீதம் பேருக்கு வேலை இல்லை எனும் பொழுது, ஒரு தகுதியும் இல்லாத வெள்ளைய இளைஞர்களில் வெறும் 4 சதவீதமே வேலையற்றிருக்கிறார்கள்)
மார்க் துக்கனின் மரணம் ஒரு பிரளயத்தையே கிளப்பி, அதற்கு அடுத்தாற்போல் கருப்பர்களின் மீது ஏவி விடப்பட்ட வன்முறையால் லண்டன் நகரின் சில பாகங்கள் உண்மையிலேயே பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. சரி, அது அவர்கள் நாட்டு பிரச்சனை என முகத்தைத் திருப்பிக் கொண்டு இந்தியா இருக்கவேண்டுமா???

•காமன்வெல்த் போட்டிகளுக்கான ஆயத்த கட்டுமான நடவடிக்கைகளின் போது, இன்னும் இந்தியா இந்தப் போட்டிகளுக்காக தயாராகவில்லை, இதுக்குத்தான் இந்தியா மாதிரி பன்னாடை பரதேசி நாடுகளிலெல்லாம் இந்த விளையாட்டை நடத்தாதீர்கள் என்று எத்தனை தரம் சொன்னோம் என வெள்ளைய ஊடகங்கள் முழங்கியது (ஆனால், அவர்கள் படம் பிடித்துக் காட்டியதெல்லாம், டெல்லி நகரத்தின் இயல்பான கட்டுமான பணிகளைத்தான், காமன்வெல்த் கிராமத்தின் பணிகளை அல்ல)

•அதே போல இந்தியாவும் இப்பொழுது 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தனது வீளையாட்டு வீரர்களை அனுப்புவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். நிறவெறி வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் லண்டன் நகரம் இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பானதா என ஒரு உயர் மட்டக் குழுவை அனுப்பி ஆய்வு செய்து வர வேண்டும்.

•தற்சமயம் இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியினரை, வன்முறையிலும் வறுமையிலும் சிக்கித்தவிக்கும் இங்கிலாந்தின் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் விளையாட அனுமதிக்காமல் உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும்.

•இங்கிலாந்தில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளை வன்முறை முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பும்வரை இந்தியா திரும்ப அழத்துக் கொள்ள வேண்டும்.

•வன்முறை ஒழிந்து, இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை, இந்திய விமானங்களும், கப்பல்களும் இங்கிலாந்திற்கு செல்வதை தடை செய்ய வேண்டும்.

•இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து குடிமகன்கள் எல்லோரும், கடினமான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட்டு, தங்களது பின்னணி வரலாறின் குற்றமற்ற தன்மை நீரூபிக்கபட்ட பின்னரே, இந்திய மண்ணில் காலடி வைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

வெள்ளையனின் காலணியைக் கூட (அது வெள்ளையனுடையது என்ற ஒரே காரணத்துக்காக) பூஜித்துப் போற்றும் இந்தியா இதை செய்யுமா???

Wednesday, April 13, 2011

தேர்தல் ஆணையத்தின் தகிடுதத்தம்


இன்று வாக்களிக்க சென்றிருந்தேன். வாக்குச் சாவடிக்கு செல்வதற்கே பல தடைகளை தாண்டி செல்ல வேண்டியிருந்தது. வழியிலேயே தடுத்த கட்சிக்காரர்கள் மாம்பழத்தை கையில் வைத்திருந்தனர். சார், மாம்பழத்துக்கு ஓட்டுப் போட்டுட்டு வந்து மாம்பழம் வாங்கிக்கோங்க என்றனர். அதற்கு சற்றுப் பக்கத்தில், சுத்தியல் அரிவாள் சின்னத்தினர், நல்ல வேளை இவர்கள் அரிவாள் எதுவும் காண்பிக்கவில்லை, அல்லது ஓட்டுப் போட்டுவிட்டு வந்து அரிவாள் வாங்கிக் கொள் என சொல்லவில்லை.


ஓட்டுச்சாவடியில் நுழைய முடியவில்லை. எங்கு பார்த்தாலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி மக்கள் செய்த அட்டூழியம் தாங்க முடியவில்லை. பணியிலிருந்த போலீஸாரின் நிலை பரிதாபமாயிருந்தது. கொளுத்தும் வெய்யிலில் அவர்கள் ஒரு வாய் தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருந்தார்கள்.


வாக்குச்சாவடி விவரங்கள், மற்றும் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் ஆகியவை மிக மிக தெளிவாக மக்கள் பார்வையில் படும்படி வைக்கப் பட்டிருந்தன. மின்னணு வாக்கு இயந்திரத்தை எப்படி உபயோகிப்பது என்பதையும் தெளிவாகவே எழுதி அங்கங்கே ஒட்டி இருந்தனர். மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.




பணியிலிருந்த தேர்தல் பணியாளர்கள் அனைவரும் மிகவும் கனிவாக பேசினார்கள். பாவம் முந்தைய நாள் இரவே அவர்களை அந்த பள்ளியில் தங்கச் சொல்லி விட்டார்களோ என்னவோ, இரவில் அவர்கள் பட்ட அவஸ்தைகளான கொசுக்கடியும், குளிக்க/குடிக்க தண்ணீர் இல்லாமை போன்ற குறைகளை ஒரு மேற்பார்வை அதிகாரியிடம் ஆவேசத்தோடு உரத்த குரலில் ஒருவர் கொட்டிக் கொண்டிருந்தார். ஆனால் வாக்களிக்க வந்த மக்களிடம் மிகவும் கனிவோடு நடந்து கொண்டனர்.


வாக்குச் சாவடியில் நுழைந்ததும் நம் அடையாள அட்டையை ஒருவர் சரி பார்க்கிறார். பின் அந்த அடையாள அட்டையுடன் தொடர்புடைய எதோ ஒரு கூறிப்பிட்ட எண்ணை உரத்துச் சொல்கிறார். இவர் இப்படி சொன்னவுடன் இந்த அலுவலர்களுக்கு பின்னே அமர்ந்திருக்கும் கட்சிப் பிரதிநிதிகள் அந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்கின்றனர், இன்னொரு அலுவலர் ஒரு குறியீட்டு எண்ணுடன் நமது பெயரை எழுதிக் கொண்டு, நம்மிடம் கையெழுத்து வாங்குகின்றனர். பிறகு கை விரலில் மை வைக்கின்றனர். மை வைத்து விட்டு அதே மை வைக்கும் நபர் ஒரு துண்டு சீட்டை நம் கையில் கொடுக்கிறார். அதில் என்ன எழுதி இருக்கிறது என பார்க்கும் முன்பே அதை நம் கையில் இருந்து ஒருவர் பிடுங்கிக் கொண்டு தன் முன்னே வைக்கப் பட்டிருக்கும் ஒரு இயந்திரத்தில் ஒரு பொத்தானை அழுத்துகிறார். அழுத்தி விட்டு அந்த மறைவிடத்தில் இருக்கும் இயந்திரத்தில் உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள் என சொல்கிறார். இங்கு தான் வில்லங்கம் ஆரம்பமாகியது.


நான் எனக்கு 49 O வில் எனது வாக்கை பதிவு செய்ய வேண்டுமென்றும், இங்கு காண்பிக்கப்பட்டிருக்கும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றும் சொன்னேன். அங்கு அமர்ந்திருந்த அத்தனை பேருடைய முகமும் “பொன்னியின் செல்வனி”ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ”இடும்பன் காரி” யின் முகத்தைப் போல ஒரு விகார முகமாயிற்று. “டேய், வந்தமா, கையில மை வெச்சமா, எதாவது ஒரு பொத்தனை அழுத்தனமா, ஓட்டுப் போட்டமான்னு, போயிட்டே இருக்காம, அது என்னடா புதுசா 49 O, அது இதுன்னு எத்தனை பேர்டா இப்பிடி கிளம்பி இருக்கீங்க” என்பது போல் அந்த அலுவலர்கள் அனைவரும் பார்த்தனர். அதற்கும் மேலாக அந்த கட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் தங்களிடம் இருந்த பேப்பரில் என் புகைப்படம் முகவரி ஆகியவற்றை தனியாக வட்டமிட்டு வைத்துக் கொண்டனர். ”ஆஹா, 49 O வா, வாடா மகனே வா, நாளைக்கு ஜெயிக்கப் போறது எங்க அண்ணந்தான், அப்பறம் வருவயில்ல, சார் அது வேணும், சார் இது வேணும்னு வருவயில்ல, அப்ப வெச்சுக்கறம்டா, இப்ப 49 O போட்டுட்டு போ” என ஒரு ஏளனத்துடன் பார்த்தனர்.


அப்புறம் அந்த தேர்தல் அதிகாரி என் பெயரும் அதற்கு நேராக எழுதி இருந்த எதோ ஒரு குறியீட்டு எண்ணுக்கு பக்கத்திலேயே “ Refused to Vote” என ஆங்கிலத்தில் எழுதி இதில் கையெழுத்திடுங்கள் என்றார். ஆனால், நான் விதிகளின் படி நீங்கள் எனக்கு படிவம் 17 A தர வேண்டுமே, அதை தாருங்கள் என கேட்டாலும், “சார் இதுல கையெழுத்து போடறதுன்னா போடுங்க, இல்லைன்னா இப்பிடியே போயிட்டிருங்க” என்பது போல் பேசினர். வேறு வழியில்லாமல், அவர்களுடன் மேலும் வாதம் செய்ய விரும்பாமல் அதில் கையெழுத்திட்டு விட்டு வந்தேன்.


தேர்தல் ஆணையத்திற்கு என் கேள்விகள்:


1. வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்கு எப்படி பதிவு செய்வது என்பதை சுவரொட்டியின் மூலமாக விளக்கும் நீங்கள், ஒருவேளை வாக்குப் பதிவு செய்ய விரும்பாத பட்சத்தில் ஒரு குடிமகன் என்ன செய்ய வேண்டும் என சொல்லாதது ஏன்?


2. இப்படி நீங்கள் சொல்லாமலிருப்பது மக்களுக்கு இந்த 49 O விதி பற்றிய விழிப்புணர்வு சிறிதும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தானே? அப்படி இல்லாவிடில் தைரியமாக 49 O வைப் பற்றியும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாதது ஏன்?



3. தேர்தல் அலுவலர்கள் 49 O விற்கென விண்ணப்பிக்கும் ஒரு நபரிடம் அதற்கான படிவங்களை தர மறுப்பதுடன், அத்தகைய நபர்களை உடனே வாக்குச் சாவடியிலிருந்து வெளியேற்றுவதில் ஏன் அவசரம் காட்டுகிறார்கள்? அத்தோடு மட்டுமல்லாது எந்த விதத்திலும் ஆவணப்படுத்த முடியாத காகிதங்களில் ஏமாற்றி ஏன் கையெழுத்து வாங்குகிறார்கள்?


4. இப்படி செய்வதினால், எனது கூற்றுப்படி கொஞ்சமும் தகுதியில்லாத கறைபடிந்த வேட்பாளர்களுக்கு துணை போவதுடன், இந்திய இறையாண்மைக்கு எதிராக தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றம் செய்கிறீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? அதாவது ஒரு குடிமகனுக்கு வாக்களிக்க விருப்பமின்மை என்னும் உரிமையை பல அர்த்தமற்ற காகிதங்களில் கையெழுத்து வாங்கி விட்டு பொய் சொல்வதன் மூலம் உங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு சராசரி குடிமகனது உரிமையை நிராகரிக்கிறீர்கள் என ஒத்துக் கொள்கிறீர்களா?


5. வாக்குச்சாவடியில் உங்களது நாற்காலிகளுக்குப் பின்னே கட்சிப் பிரதிநிதிகள் என்ற பெயரில் அமர வைக்கப் பட்டிருக்கும் நபர்களை அனுமதிப்பதும், யார் யார் வாக்களிக்கிறார்கள், அவர்கள் எந்த விதமான வாக்களிக்கிறார்கள் என அவர்களுக்கு தெரிய வைப்பதும், ஒரு தனி மனித உரிமைக்கு விரோதமான செயல் என்பதை தெரிந்தே தான் செய்கிறீர்களா?


இத்தனை கேள்விகளோடு நானும் வாக்குச்சாவடியிலிருந்து வெளியேறினேன்.


கடைசியில் கையில் கறை பட்டதுதான் மிச்சம். விளம்பரங்களில் வரும் கறை நல்லதோ கெட்டதோ, இந்த கறை ஏன் என் விரலில் பட்டதோ என இன்னும் நொந்து கொண்டிருக்கிறேன்.

Wednesday, February 9, 2011

ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!! - (பாகம் 1)


ஒரு கல்லூரியில் என் மேற்படிப்புக்காக விண்ணப்பித்தேன். உங்களின் எல்லா சான்றிதழகளையும் பார்க்க வேண்டும் என்றார்கள். என் ஜாதகம் தவிர மற்ற அனைத்தையும் எடுத்துக் கொண்டு போனேன்.

“சார், எல்லாம் வெச்சிருக்கறீங்க, ஜாதி சர்டிபிகேட் இல்லையே சார்??”
“சார், ஜாதியெல்லாம் நான் பார்க்கறதில்லை சார்”
“அது சரிதான் சார், ஆனா, அரசாங்கம் கேக்குதே?”
“சார், என் பள்ளி மற்றுச் சான்றிதழ்ல ஜாதி போட்டிருக்குதே சார், அது போதாதா?”
இப்பொழுது, பேசிக் கொண்டிருந்த கல்லூரிப் பணியாளரின் குரல் கொஞ்சம் மாறுபடுகிறது...
“இங்க பாருங்க சார், ஜாதி சர்டிபிகேட் கொண்டு வந்தா, உங்களுக்கு அட்மிஷன் கிடைக்கும், இல்லைன்னா இல்லை, அவ்வளவுதான், இடத்தை காலி பண்ணுங்க”
ஒரு சமத்துவ விரும்பியை சோதித்துப் பார்ப்பதில் சமுதாயத்திற்கு இவ்வளவு ஆனந்தமா என யோசித்து விட்டு நடையைக் கட்டினேன். இனி ஜாதி சர்டிபிகேட் வாங்குவது எப்படி என்ற ஒரு பெரிய கேள்விக்கு யார் பதிலளிப்பார்கள் என்று கிட்னியை கசக்கி சாரி, சாரி, மூளையை கசக்கி யோசித்ததற்கு கை மேல் பலன் கிட்டியது. நமது மாண்புமிகு வார்டு கவுன்சிலரை கேட்கலாம் என நினைத்து அவருக்கு தொலை பேசியதும் மிகவும் கனிவாக பதிலளித்தார்.
“ஜாதி சர்டிபிகேட் தான சார், அது ஒண்ணும் பிரச்சனையில்லை சார். நீங்க உங்க ரேசன் கார்டு காப்பி ஒண்ணு, உங்க பள்ளி சான்றிதழ் காப்பி ஒண்ணு எடுத்துட்டு, கூடவே ஒரு விண்ணப்பமும் எழுதி எடுத்துகிட்டு, கிராம நிர்வாக அலுவலர் ஆபீஸூக்கு போய், அவர் கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிக்கிட்டு, அப்புறமா, ரெவின்யூ இன்ஸ்பெக்டர் கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிட்டு, அப்பிடியே தாலூக்கா ஆபீஸுக்கு போனீங்கன்னா அங்க அப்ளிகேஷனை வாங்கி வெச்சுட்டு என்னைக்கு வரணும்னு சொல்லுவாங்க, அப்ப போய் சர்டிபிகேட் வாங்கிக்கங்க” என ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். இப்படி சென்னை நகரம் முழுவதையும் கிரிவலம் வந்து இந்த மூன்று மூர்த்திகள் கையொப்பம் இட்டு நான் இன்ன ஜாதியை சேர்ந்தவன் என்று சொன்னால் தான் நான் மேல் படிப்பு படிக்க முடியும் என நினைத்தால் இந்த படிப்பு அவசியமாவென யோசிக்க தோன்றியது.
இருப்பினும் விதி வலியது அல்லவா? கொஞ்சம் கிரிவலம் வருவோமேவென கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சென்றேன். ஒரு பத்துக்கு பத்து அறைக்கு இரண்டு ஜன்னல்கள் வைத்து, ஒரு பக்கத்தில் ஒரு இரும்பு கதவில் அரதப் பழசான ஒரு பூட்டுடன், கிராம நிர்வாக அலுவலகம் என்ற பெயர்ப் பலகையை தலையில் தாங்கியவண்ணம் இருந்த அந்த அலுவலக அறையை பார்த்தாலே கிராம நிர்வாகம் எப்படி இருக்கிறதென்று சொல்லி விடலாம். காலை ஒன்பது மணிக்கும் பூட்டு தொங்கிய அலுவலகத்தை பார்த்ததும் இன்னும் விடியவில்லையோ என சந்தேகம் வர, யாரிடமாவது கேட்கலாம் என நினைத்து அங்கு விசாரித்ததில் “ வழக்கமா 10 மணிக்கெல்லாம் திறந்துருவாங்க சார்” என பதில் கிடைத்தது. காத்திருந்து, காத்திருந்து, காத்திருந்......, ஆ யாரோ பூட்டைத் திறக்கிறார்கள். ஒரு 20 வயது மதிக்கத்தக்க வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்று கதவைத் திறந்து விட்டு, உள்ளே இருந்த மேஜைகளில் இருந்த காகிதங்களை ஒழுங்காக அடுக்க ஆரம்பித்தார்.
”சார், வணக்கம்” என்றேன்.
தன் வேலையில் சற்றும் கவனம் பிசகாமல் எங்கும் திரும்பாமல், எனக்கு முதுகை காண்பித்தபடியே, “வோட்டர் ஐ.டி. யெல்லாம் இங்க பாக்கறதில்லை சார், எந்த டீச்சர் வந்து உங்க வீட்ல பேர் எழ்துனாங்களோ, அங்கியே போய் பேசுங்க”
“சார் அதில்லை சார், நான் வேற விஷயத்துக்காக வந்தேன்”
“அப்ப வீ.ஓ வரங்காட்டியும் வெளீல வெயிட் பண்ணுங்க”.
இன்னும் அவரது முக தரிசனமே கிடைக்காத ஏமாற்றத்தில் நான் வெளீல வெயிட்டினேன். சிரிது நேரத்தில் ஒரு ஒல்லியான தேகத்துடன் ஒருவர் சைக்கிளில் வந்து இறங்கி, அந்த சைக்கிளை அலுவலக சுவரோரம் நிறுத்தி விட்டு, கவனமாக பூட்டினார். ஒருவேளை இவர்தான் அவரோ என ஒரு வினாடி நினைத்துவிட்டு, சே, இவரா இருக்காதுப்பா, என நினைத்துக் கொண்டு, இவர் யார் என பார்த்தால் அவர் எழுத்தராம். என்ன எழுதுவாரோ தெரியவில்லை.
அவருக்கும் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு நான் வந்த நோக்கத்தை சொன்னவுடன், என்னை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, என் கையிலிருந்த காகிதங்களை வாங்கினார். முதல் பக்கத்தை பார்த்தவுடன் முகத்தில் அப்படி ஒரு கோபம் கொப்பளிக்க, “இது யார் எள்துனது???” என கேட்டார்.
”சார், நான் நா நானேதான் எழுதினேன்”
“உன்க்கு எள்த தெர்ஞ்சா, நீயே எள்தீர்வையா? இன்னா எள்தணும்னு உன்கு தெரிமா??, இதெல்லாம் வேலைக்காவாது, அதா அந்த பொட்டிக்கடைல, ஜாதி சர்டிபிகேட்டுக்குனு ஒரு ஃபார்ம் குடுப்பாங்க, அத்த வாங்கினு வா, நீயெல்லாம் எள்த கூடாது, அதுக்குதான் நாங்க இர்க்கறோம், தெர்தா”
நான் அந்த அதா,அந்த பொட்டிக்கடைக்கு போய் பத்து ரூபாய் கொடுத்து, ஒரு ஃபார்ம் வாங்கி, அதை அந்த எள்த தெரிஞ்சவரிடத்தில் கொடுத்து விட்டு அடுத்த கட்டளைக்காக கால் கடுக்க நின்றேன். என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு என் சான்றிதழ்களை கேட்டவர், ஃபார்ம்மில் என் பெயரை எழுதிவிட்டு
“இன்னா ஜாதி??” என்று கேட்டவுடன் தான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ பறந்து வந்த இரண்டு வாக்காளர் அட்டைகள் அவரது தலையில் மோதி மேஜையில் விழுந்தன. இந்த ஏவுகணைகளை ஏவியது யார் என அவர் நிமிர்ந்து பார்த்ததும், ரௌத்திரம் நிரம்பிய பார்வையுடன் ஒரு தாய்க்குலம்....
“நீ, இன்னா நென்ச்சுனுக்கற, இல்லா இன்னா நெனச்சுனுக்கறேன்னு கேக்கறேன்??”
”ஏம்மா, இன்னா பிரச்சனை உன்க்கு??”
“இன்னா பிரச்சனையா, பண்றதெல்லாம் பண்ணிட்டு இன்னா பிரச்சனைன்னா கேக்கற நீ, மருவாதி கெட்டுப் போயிரும், சொல்லீட்டன்” அவருக்கு வந்த கோபத்தில் மூச்சு வாங்கியது.
அட்டைகளை திருப்பி பார்த்தபடியே “ இந்தா, இன்னான்னு சொல்லு, சும்மா நீ பாட்டுக்கு பேசினே போனியானா, எனக்கு இன்னா தெர்யும்??”
”இன்னும் இன்னா தெரியணும் உனக்கு? அத்துல இன்னா பேர் போட்டுக்கற நீ ??”
”த்தாம்மா, இது உம் பேர்தான??”
“அத்தெல்லாம் எம் பேர்தான், அதுக்கு கீழ யார் பேரு போட்டுக்குது??”
“யேன், உன் ஊட்டுக்கார் பேர் போட்டுக்குது, அதுக்கு இன்னா இப்ப??”
“அத்து என் வூட்டு ஆம்பளை பேரா, உன்க்கு தெரிமா, என் வூட்டு ஆம்பள பேர் இன்னான்னு தெரிமா??’
”பின்ன இத்து யார் பேரு, இன்னா வோணும் உன்க்கு??”
“மேல எம்பேர் போட்டுனு, புருஷன் பேர்ல பக்கத்து வூட்டுக்காரன் பேர் போட்டுக்கறயே, முட்ச்சவிக்கி, நீயெல்லாம் நல்லார்ப்பயா நீ, முட்ச்சவிக்கி, என் வாய்ல நல்லா வர்து ஆமாம்”
இப்பொழுதுதான் பிரச்சனையின் முழு பரிமாணத்தையும் புரிந்து கொண்ட அவர், “ஏம்மா, இதுக்கு நான் இன்னா பண்றது??, யாரு உங்க வூட்டாண்ட வந்து பேர் எள்தினு போனாங்களோ அவுங்க கைல் போய் கேளுமா, எங்கிட்ட இன்னா வீரங்காட்டற நீ??”
”அவுங்கள இன்னா கேக்கறது, கார்டு நீதான் குட்க்கற, அப்ப யார் பேரு எங்க எள்தீக்குதுன்னு பாக்க வேண்டா நீ, உன்கெல்லாம் கவுர்மெண்ட்ல இன்னாத்துக்கு சம்பளம் குட்க்கறாங்க??”
“த்தா, அந்த பையன் கைல ஒரு கம்ப்ளெயிண்ட் எள்தி குட்த்துட்டு போ, அப்பாலிக்கா கரெக்‌ஷன் ஆகி வந்தா வந்து வாங்கிக்க”
“த்தா, அத்த எள்தறதெல்லாம் இருக்கட்டும், இப்ப என் வூட்டு ஆம்பள என்ன சந்தேகப் பட்டுனுக்கறான், அதுக்கு இன்னான்ற??”
“அதுக்கு நான் இன்னாம்மா பண்றது, யாரோ தப்பு பண்ணாக்கா, நீ இங்க வந்து சவுண்ட் உட்டுனுக்கற, எள்துனவுங்களை போய் கேளு போ”
பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொண்ட அந்த பூட்டைத் திறந்த பையன் அந்தப் பெண்மணியை சமாதானப் படுத்தி வேறு பக்கமாக நகர்த்திக் கொண்டு போனார்.
எழுத்தர் இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, என்பக்கம் திரும்பி “ சார் நீங்க என்ன ஜாதின்னு சொன்னீ........”
“ஏம்பா, அந்த சேலை குடுக்கறேன்னு சொன்னாங்களே, எங்க குடுக்கறாங்க??” என்றபடி ஒரு வயதான அம்மாள் வந்தார்.
“அம்மா, சேலை எல்லாம் இப்ப குடுக்கறதில்லைமா, மத்தியானத்துக்கு மேல வா”
“யேன், இப்ப குட்தா இன்னாவாம், கவுர்மெண்ட் குடுக்கறதை எட்து குடுக்க உன்க்கு கஷ்டமாக்குதா”
“எனக்கு வேற வேலைக்குதும்மா, நீ மத்தியானம் வாம்மா”
“எத்தினி மணிக்கு வர்றது???”
“ஒரு மூணு மணிக்கா வாம்மா, இப்ப எட்த்த காலி பண்ணு”
“அப்ப மூணு மனி வரைக்கும் என்ன குளிக்காத இர்க்க சொல்றியா, நீ எப்ப சீலை குடுக்கறது, நான் எப்ப குளிச்சுகுனு கட்றது??”
என்னை பரிதாபமாக பார்த்தவர், “சார், நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க சார்” என சொல்லி விட்டு அந்தம்மாவுக்கு சேலையை எடுத்து கொடுத்து விட்டு, கை ரேகையை பதிவு செய்து விட்டு, வந்து மறுபடியும் “சார், நீங்க என்னா ஜாதி...........??”
இப்பொழுது கோரஸாக ஒரு மூன்று பெண்களின் குரல், “இந்த எலெக்‌ஷன் கார்டு எங்க குடுக்கறாங்க” என கேட்க, இவர் என் பக்கம் திரும்பி “ சார் நீங்க என்ன ஜாதியானாலும் சரி, இதுல நீங்களே எள்தினு வந்திருங்க சார்” என்றார்.
“சார், நீங்கதான் இதுல யாரும் எளுத கூடாதுன்னு சொன்னீங்களே???”
”அதெல்லாம், எளுத படிக்க தெரியாதவங்களுக்கு சார், பட்ச்சவங்க நீங்க என் நிலைமைய புரிஞ்சுக்கங்க சார்” என என் கையில் மொத்த காகிதங்களையும் திணித்தார்.
(இன்னும் வரும்)


Thursday, December 23, 2010

நிறங்கள் - ஏன் இப்படி????


நாம் பேசும் பொழுது எதாவது ஒரு விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வர்ணிப்பதற்கு பதிலாக, ஒரே வார்த்தையில் அதை புரிய வைக்க ஒரு நிறத்தை குறிப்பிடுகிறோம். இப்படி நிறங்களின் குறியீடு ஏன் வந்தது???

1. ஒரு குழுவாய் செயல்படும் மனிதர்கள் மத்தியில் நல்லவன் போல் நடித்து, ஆனால், குழுவுக்கு எதிராய் செயல்படுபவனை ”கறுப்பு ஆடு” என்கிறோமே, இதில் ஏன் கறுப்பு நிறம் சொல்லப் படுகிறது????

2. ஆபாசமாக எழுதி, வக்கிரங்களினால் வாசகர்களை கவர்ந்து தன் விற்பனையை பெருக்கிக் கொள்ளும் பத்திரிகைக்கு ”மஞ்சள் பத்திரிக்கை” என்ற பெயர் எப்படி வந்தது??? இந்த மஞ்சளுக்கும் ஆபாசத்துக்கும் என்ன சம்பந்தம்???

3. ஆண் பெண் உடல் உறவுக் காட்சிகளை படமெடுத்து, அவற்றை காட்சிப் பொருளாக்கி விற்பனை செய்யும் படங்களை “நீலப் படம்” என்கிறோமே, நீலமும் காமமும் எப்படி இணைந்தன???

4. ஒருவரை திட்டும் பொழுது அதீத கோபத்தால் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அந்தரங்க அல்லது ரகசிய விஷயங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதற்காக அப்புறம் நான் உன்னைப் பத்தின மேட்டரெல்லாம் “பச்சை பச்சையா” சொல்லீருவேன் என மிரட்டுகிறோமே, பச்சைக்கும் ரகசியத்துக்கும் என்ன சம்பந்தம்???

5. ஒருவர் கையும் களவுமாக பிடிக்கப் பட்டார் என சொல்வதற்கு ஆங்கிலத்தில் “Caught by RED HAND” என்று சொல்கிறோமே, இந்த சிவப்பு நிறமும், களவும் எந்த கோணத்தில் இணைகிறது???

6. அவுருக்கென்னப்பா ”வெள்ளைக் காலர் வேலை” என அலுவலகங்களில் வேலை செய்யும் ஆபீசர்களைக் கூறுகிறோமே, வெள்ளை நிறமென்ன அவ்வளவு உசத்தியா???

7. ஒருவரை ஒரு நிறுவனம் பணியிலிருந்து நீக்கி, பணி நீக்க உத்தரவை வழங்குகிறதென்றால், ஏன் அதை “Pink Slip” என சொல்லுகிறோம். பின்க் நிறத்திற்கும் பணி நீக்கத்திற்கும் இன்னா கனிக்‌ஷன்???

தெரிந்தவர்கள் நிற வாரியாக பதில் சொல்லுங்கள்.

Wednesday, November 17, 2010

யோவ், ஆதி.... என்ன ஆச்சு உனக்கு...???

யோவ், நல்லத்தானய்யா எழுதிகிட்டிருந்தீரு, துறை சார்ந்த பதிவு, தங்கமணி பதிவு, அப்புறம் விமர்சனம், அப்புறம் அது, அப்புறம் இதுன்னு எல்லாம் ஒழுக்கமாத்தானய்யா போயிகிட்டிருந்தது, இப்ப என்ன ஆச்சுன்னு இப்பிடி ஒரு வம்பு பண்ண வந்திருக்கீங்க? இப்பத்தானய்யா போட்டியெல்லாம் வெச்சு, அதுக்கு நீ பட்ட கஷ்டத்தையெல்லாம் பார்த்து மலைக்க வெச்சீகளே, என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன், இல்ல ஏன்னு கேக்குறேன்.

How do you feel if, I stop blogging?

திடு திப்புன்னு ஏன்யா புத்தி இப்பிடி வேலை செய்யுது? வேணாய்யா எதாவது சொல்லீரப்போறேன். வழக்கமா, ஒழுக்கமா கடையை தொறந்தமா, பதிவை போட்டமான்னு போயிகிட்டேயிரு, அதை வுட்டுட்டு சும்மா இப்பிடி கோக்கு மாக்கா எதாவது யோசனை பண்ணுனே, அப்புறம் தாம்பரம் முழுக்க உனக்கு பேனர் கட்டிருவோம், அண்ணி கிட்ட சொல்லி கொள்ளிக்கட்டைல சூடு வெக்க சொல்லீருவோம், ஆமா....., சர்வே எடுக்கறாராம் சர்வே, வாயில நல்லா வர்றதுக்குள்ள ஒழுக்கமா அந்த சர்வேவை தூக்குற நீ.... # கடுப்பு.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அது என்னன்னே தெரியல, எங்க ஆபீஸ்ல எல்லார் கடையையும் படிக்க முடியுது, ஆனா தல நர்சிம் கடை, லக்கி லுக்கு கடை, வித்யாக்கா கடை எல்லாம் தொறந்தா அதை மாத்திரம் இந்த பொட்டி தட்டற கும்பல் தொறக்க வுட மாட்றாங்கோ, கடுப்பேத்தறாங்க மை லார்ட்.... # ஏமாற்றம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவர் சந்திப்பு நடந்து பல நூற்றாண்டு ஆன மாதிரி இருக்கு, இப்ப கொஞ்ச நாளா ஊர்பக்கம் தலை காட்ட முடியுதே, சந்திப்பு எதாவது வைப்பாங்களான்னு நானும் பார்க்கிறேன், மூத்த பதிவர்கள் எல்லாம் ஒரே பிஸியா இருக்காங்க போல இருக்குது. கேபிள் அண்ணன்கிட்ட கூட சமீபத்துல கேட்டேன், பார்க்கலாம்னு சொன்னாரு. இந்த வருஷ கடைசிக்குள்ள ஒரு பதிவர் சந்திப்பு வைங்கப்பு....... # ஏக்கம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவுலகுல எல்லாம் பரபரப்பான விஷயங்களை மாத்திரம்தான் பேசறாய்ங்க, அதாவது வில்லங்கமான மேட்டர்னா அதை வெச்சு ஒரு நூறு பதிவாவது வருது, காமன்வெல்த், ஆதர்ஷ் அபார்ட்மெண்ட், ஒபாமா விஜயம், ராசா என்பார் மந்திரி என்பார்னு எல்லாமே ஒரு பரபரப்பான விஷயங்களைத்தான் எழுதறாய்ங்களே ஒழிய, காமன்வெல்த் போட்டில மெடல்களை அள்ளிக் குவிச்ச இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டிகள்ல மண்ணைக் கவ்வுதே அது ஏன்னு ஒரு வார்த்தை கேக்கறாங்களா???? இல்ல, நம்ம வீரர்கள் எல்லாம் நம்ம பேட்டைக்குள்ள மட்டும்தான் வீரர்களா??? இதைப் பத்தி யாருமே எழுத மாட்டேங்கறாய்ங்களே???? # கொளுத்தி போடல்

Monday, October 11, 2010

என்னத்தச் சொல்ல....

ஒரு உயிர் இனத்தை சினிமா என்ற ஒரு சமுதாய நோய் இந்த அளவுக்கா வசியப்படுத்தும்??? அப்பப்பா, எத்தனை விமர்சனம், எத்தனை அமர்க்களம். இந்திய நாட்டின் அனைத்து ஜீவராசிகளையும் தன் பக்கம் ஈர்க்கிற ஒரு சாராரின் வியாபார உத்திக்கு, ஒவ்வொரு இந்தியனும் தனது கணிசமான நேரத்தை எதாவது ஒரு வழியில் செலவிடுகிறான். சமீபத்தில் கொங்கு மண்டலம் வரை தரை வழியாக பயணம் செய்தேன். இதற்கு முன்பாக இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் ஊர் பெயர் தாங்கிய பலகை காணப் படுகிறதோ இல்லையோ, கொக்கோ கோலாவின் விளம்பர பெயர் தாங்கிய பலகைகள் கண்டிப்பாக காணப்படும். ஆனால், இப்பொழுது தங்கள் தங்கத் தலைவனின் புதுப்படம் வெற்றியடைய ஒவ்வொரு கிராமத்தானும் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பர பேனர் கட்டியிருக்கிறான்.

விளம்பர பேனர் கட்டுவதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. அதில் இவனது தங்கத்தலைவன் நின்று, நடந்து, படுத்துக் கொண்டிருக்கும் இடத்திலெல்லாம் அவன் காலடியில் கை கூப்பி சிரித்த வண்ணம் இவன் தன் படத்தை போட்டிருக்கிறான். அட முட்டாள் தமிழர்களா, நீங்கள் இவ்வளவு கொண்டாடும் தங்கத்தலைவன் ஒரு முறையாவது உங்கள் அன்புக்கு ஊசிமுனையளவாவது மதிப்பு கொடுத்திருக்கிறானா??? ஹிந்தி திரையுலகிலும் இந்தப் படம் வசூலை அள்ள வேண்டுமென்பதற்காக, மெனக்கெட்டு மும்பை சென்று, அங்கு பால் தாக்கரேயை சந்தித்து குலாவிக் கொண்டிருக்கும் அவனுக்கு நீங்கள் பாலாபிஷேகம் செய்கிறீர்களே, எப்படா இந்த துதி பாடற வியாதில இருந்து வெளிய வருவீங்க.....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காமன்வெல்த் போட்டிகளின் குளறுபடிகள் ஒருபுறமிருந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என் நிரூபிக்கும் வண்ணமாக ஒரு துவக்க விழா நடத்திக் காட்டி விட்டு, போட்டிகள் சுமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஒரு சில நிறவெறியர்களின் தாகுதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முன்பதாக முற்றிலும் நிறவெறி கொண்ட மேற்கத்திய ஊடகங்களான பி.பி.சி, மற்றும் இன்ன பிற ஊடகங்கள், எங்கோ மூலையில் தொங்கும் ஒரு மின்சார ஒயரையும், இன்னமும் கட்டி முடிக்கப்படாத பாதசரி நடை மேடைகளையும், தொடர்ந்து ஒளிபரப்பி இந்தியர்களின் மேலுள்ள நிறவெறியை அப்பட்டமாக பறை சாற்றின. அடுத்த்தாக குத்துச் சண்டை வீரர்களை போட்டிக்கு முன்பாக எடை பார்க்கப் போனால், அந்த எடை இயந்திரங்கள் தரம் தாழ்ந்தவை என ஒரு முறை கூவித் தீர்த்தார்கள். எந்த மின்னணு இயந்திரத்திலும் கோளாறுகள் நடப்பதி இயல்பு தானே ஒழிய, அது இந்தியாவில் நடந்தால் அதை மட்டுமே வைத்து கூவிக் கூவி ஒப்பாரி வைப்பதை நிறவெறி என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்.

தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள போனாராம், அவர் நீந்தப் போகும் பொழுது இந்திய ரசிகர்கள் கூச்சலிட்டதால் அவரால் சரியாக நீந்த முடியவில்லையாம். அதனால் இந்தியர்கள் குரங்கு போல் கூச்சலிடுகிறார்கள் என திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் கால்பந்தானாலும் சரி, கிரிக்கெட்டானாலும் சரி, அங்கு அவர்கள் ஊதும் ஒலிப்பான்களால் காது கிழியும். ஆனால் அவருக்கு இங்கு இந்தியனின் சத்தம் குரங்கு சத்தமாய் கேட்கிறதாம், அதை நமது ஊடகங்கள் தவறாமல் ஒளிபரப்புகிறது. டேய், போய் முதல்ல உங்க முதுகுல இருக்கற அழுக்கை கழுவுங்கடா, அப்புறமா அடுத்தவனை பார்ப்பீங்களாம்.
ஆனால், இதில் வேதனை என்னவென்றால், இவர்களோடு சேர்ந்து கொண்டு நமது இந்திய ஊடகங்களும் இப்படி ஒப்பாரி வைப்பதுதான் வேதனையின் உச்சகட்டம்.... ம்.. என்னத்தைச் சொல்ல......

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கொஞ்ச நாட்களாகவே எங்கள் வீட்டில் ஆவின் பால் அட்டை வாங்க வேண்டும் என்ற குரல் எல்லா மூலைகளிலிருந்தும் ஒலிக்க ஆரம்பிக்க, கடைசியாக சென்ற வாரத்தில் ஒருநாள், அந்த அலுவலகம் நோக்கி அடியெடுத்து வைத்தேன். வழக்கம் போல வெளிச்சம் இல்லா இருட்டறையில், கைவைத்து தேய்ந்து போன மர மேஜைகளின் பின்னால், கட்டுக்கட்டான காகித மலைகளுக்கு நடுவில் அமர்ந்திருந்த ஒரு புண்ணியவான் என்னை ஏறெடுத்துப் பார்த்து விட்டு நான் வணக்கம் சொன்னவுடன் என்னை ஒரு வேற்று கிரக வாசி போல நினைத்தாரோ என்னவோ, ஒரு கேவலமான பார்வை பார்த்து விட்டு மறுபடியும் அந்த காகிதக் குவியலில் முகம் புதைத்துக் கொண்டார்.
“சார்”
“என்ன???”
“புது பால் கார்டு வாங்க என்ன செய்யணும்”
“புது கார்டு இப்பல்லாம் குடுக்கறதில்லை, ஒரு 5 மாசம் கழிச்சு வாங்கோ”
“சார், இப்பத்தான் கால் செண்டர்ல பேசினேன், அவுங்க உங்க கிட்ட விண்ணப்பம் குடுக்க சொன்னாங்க”
”அப்ப கால் செண்டர்லயே போய் விண்ணப்பம் குடுத்துருங்க, யார் சொன்னாங்களோ, அவுங்க கிட்ட போய் விண்ணப்பிக்கறதுதான முறை?”
“இல்ல சார், அவுங்க உங்க கிட்ட விண்ணப்பம் குடுக்க சொன்னாங்க”
“இங்க விண்ணப்பம் வாங்கறதில்லை, ஒரு 5 மாசம் கழிச்சு வாங்க”
“அப்ப விண்ணப்பம் வாங்குவீங்களா???”
“என்ன நீங்க கேள்வி மேல கேள்வி கேக்கறீங்க, ஒரு தரம் சொன்னா அதுக்கு மேல பேசக் கூடாது”
எனக்கு ஒண்ணு மாத்திரம் புரியல, இவுனுங்களுக்கெல்லாம் அரசாங்க சம்பளம் எதுக்கு குடுக்கறாங்களோ, ஒரு வாடிக்கையாளரிடம் எப்படி பேசணும்னு கூட தெரியாதா....., ம்.. என்னத்தைச் சொல்ல....

Thursday, July 29, 2010

தங்க மணிக்கு மறுபடியும் பத்து கேள்விகள்

எப்ப உங்க ஊருக்கு வந்தாலும், தூங்கிகிட்டிருக்கற மனுஷனை எழுப்பி உக்காரவெச்சு, அப்புறம் மாப்ள வட நாட்ல இருக்கீகளோ, அங்கெல்லாம் வறவறன்னு சப்பாத்திதான் சாப்புடுவாக என்ன? அவுகெல்லாம் ஹிந்திதான் பேசுவாக என்னன்னு அறிவு பூர்வமான கேள்வி கேட்டு மனுஷனுக்கு காதுல கழுத்துலயெல்லாம் ரத்தம் வந்தாலும் விடாம குறைந்தது நாலு மணி நேரம் அறுக்கறதுக்குன்னே ஒரு நாலு பெருசுகளை காசு (காபி) குடுத்து செட்டப் பண்ணி வெச்சிருக்கீங்களே, இது ஏன்???

கரெக்டா நான் உங்க வீட்டுக்கு வந்தவுடனே, உங்க அக்கா பையனுக்கு ட்ரிகிணாமெட்ரில, அல்ஜீப்ராவுல எல்லாம் உலகத்துலயே யாருக்கும் வராத சந்தேகம் வருதே, அது ஏன்?? அப்பிடி வரலைன்னா கூட சித்தப்பா கிட்ட கேட்டு எல்லாத்தையும் படிச்சுக்கோன்னு அவனை உசுப்பி விடறீங்களே, நான் கணக்குல புலின்னு என்னைக்காச்சும் சொன்னனா? ஏன் இந்த வன்முறை???

நீங்க பிரியாணி செஞ்சா சூப்பரா இருக்குதும்மான்னு மனசார பாராட்டிட்டு நாங்க சாப்படறமே, அதே மாதிரி நாங்க சிக்கன் செஞ்சா அருமையா இருக்குன்னு மனசு சொன்னாலும் அதை வெளிக்காட்டிக்காம, சட்டில ஒட்டிகிட்டு இருக்கற கடைசி துளியையும் வழிச்சு சாப்பிட்டுட்டு, மல்லித்தூள் ஜாஸ்தி, மஞ்சள் தூள் கம்மின்னு ஒரு இருபது குறை சொல்றீங்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா???

ஸ்கூல்ல பேரண்ட்ஸ் டே க்கு போகும் போது வீட்டிலிருந்து ஒண்ணா கார்ல வர்ற நீங்க, பாப்பாவோட மிஸ் கிட்ட போகும் போது மாத்திரம் நீ கார்லயே இருன்னு என்னை விட்டுட்டு தனியா போறீங்களே, எம்பொண்ணு எப்பிடி படிக்கறான்னு நான் மிஸ்ஸூகிட்ட டீடெய்லா கேட்டு தெரிஞ்சுக்க வேண்டாமா???

உங்க ஆபீஸ் பார்ட்டிக்கு எங்களை கூட்டிட்டு போகும் போது, ஷேவ் பண்ணு, முடி வெட்டு, வெள்ளை சட்டைய போடு, ஏன் இப்பிடி சர்க்கஸ் கோமாளியாட்டம் சட்டைய பேண்ட்ல துணிச்சு வெச்சிருக்க, ஒழுக்கமா இன் பண்ணுன்னு ஆயிரம் கண்டிஷன் போடறீங்களே, அதே எங்க ஆபீஸ் பார்டிக்கு போகும் போது மட்டும் இந்திய தேசியக் கொடியாட்டம் சம்பந்த மில்லாத கலர்லயெல்லாம் சுடிதார், துப்பட்டானெல்லாம் போட்டு ஏன் எங்க மானத்த வாங்கறீங்க????

உங்க பார்ட்டில என்னமோ நீங்க இல்லைன்னா இந்த உலகமே சுத்தறத நிறுத்திரும்கற மாதிரி, கடைசி கிளாஸை கழுவி வைக்கற வரைக்கும் இருந்து, (உங்களுக்கும் அதுக்கும் சம்பந்த மில்லா விட்டாலும் கூட, என்னை வெறுப்பேத்தறதுக்காகவே), பார்ட்டி ஆர்கனைஸர் கிட்ட போய் எல்லாம் ஓ கே தான, நான் போகட்டுமான்னு கேட்டு, அவசியமே இல்லாம சீன் போடற நீங்க, என் ஆபீஸ் பார்ட்டில நான் ஆர்கனைஸரா இருந்தாலும், பார்ட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே தலைவலிக்குது சீக்கிரம் போலாம்னு வெறுப்பேத்தறீங்களே அது ஏன்???

உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனா, இவுரு இந்த ஆர்ட் வொர்கெல்லாம் நல்லா பண்ணுவாருங்கன்னு சொல்லி கோத்துவுட்டுட்டு, அந்த மணவறை ஜோடிக்கற ஆளுக்கு (அவுரு எதோ தோட்டா தரணி ரேஞ்சுக்கு அலப்பறை உடறாரு) எடுபிடியா என்னை ராத்திரி முழுக்க நிக்க வெச்சீங்களே, ஏன் இந்தக் கொலை வெறி?

நீங்க உடைச்சா மண்பானை, நாங்க உடைச்சா அது தங்கப் பானையா? போனமாசம் நீங்க உடைச்சது 7000 ரூபாய் மீன் தொட்டி, போன வாரம் நான் உடைச்சது, 25 ரூபாய் கண்ணாடி கிளாஸ். ஆனா கிளாஸ் உடைச்சதுக்கு மட்டும் வீடே உடைஞ்ச மாதிரி எஃபக்ட் குடுத்தீங்களே ஏன், இல்லை ஏன்னு கேக்கறேன்???

நாங்க கடல்லயே போய் மீன் புடிச்சுட்டு வந்தாலும், உங்களுக்கு மாத்திரம் அது ஏன் பழைய மீனாவே தெரியுது? நான் செடில பறிச்சுட்டு வந்த வெண்டைக்காய் கூட முத்துனதாவே தெரியற சோகக் கதையை எங்க போய் சொல்ல???

நாங்க ஆபீஸ்ல இருந்து போன் பண்ணா அரை மணி நேரம் கழிச்சு எடுக்கற நீங்க, உங்க ஃபிரண்ட் பேசுனா மட்டும் உடனே எடுக்கறீங்களே அது ஏன்?


Tuesday, May 25, 2010

வாந்தி வாந்தியா வருது.......

ஒரு எட்டோ அல்லது ஒன்பதோ வயதுப் பையன் ஒரு ஏழு வயதுப் பெண்ணின் தொடைகளுக்கு நடுவே கையைவிட்டு பிடித்து அலாக்காக தூக்குகிறான். தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்து விட்டு விட்டு அந்தப் பெண் குழந்தையை கீழே விடுகிறான். அவன் அணிந்திருக்கும் ஜீன்ஸ் பேண்ட் முழங்காலுக்கு கீழே கிழிந்திருக்கிறது. பட்டையான ஒரு பெல்ட் கட்டி, சட்டையின் மேல் பட்டன்களை திறந்து விட்டு சட்டையின் கீழ் முனைகளை முடிச்சு போட்டிருக்கிறான். தலையில் ஒரு கைக்குட்டையை பட்டையாக சுற்றிக் கட்டியிருக்கிறான். இடது முழங்காலுக்கு மேல் ஒரு கைக்குட்டையை சுருட்டிக் கட்டி, வலது மணிக்கட்டில் ஒரு கைக்குட்டையை கட்டி என ஒரு எட்டு வயது பையனில் ஒரு திரைப்பட நடிகனின் அத்தனை அலங்காரங்களையும் பார்க்க முடிகிறது.

அந்த ஏழு வயதுப் பெண்ணின் மார்பில் ஒரு துணி சுற்றியிருக்கிறது. தொப்புளை சுற்றிலும் ஜிகினா மாதிரி எதுவோ ஜொலிக்கிறது. ஒரு ஆறு அல்லது எட்டு அங்குலத்துணி இடுப்பில் சுற்றியிருக்க கறுப்பு நிறத்தில் ஒரு உள்ளாடை அணிந்து அம்மணம் மறைத்திருக்கிறாள். முகத்தில் மிதமிஞ்சிய பூச்சுகள், உதட்டுச்சாயம், காதில் புரியாத வடிவத்தில் தொங்கட்டான்கள்.

80 களில் வெளிவந்த ஒரு ஹிந்திப் பாடலுக்கு ஹெலன் என்னும் கவர்ச்சி நடிகை அரைகுறை ஆடையுடன் ஆடிய ஒரு நடனத்தை இந்த இருவரும் ஆடுகிறார்கள். அந்த நடனத்தை வடிவமைக்க இரு நடன கலைஞர்கள். அந்த நடனத்திற்கு மதிப்பெண் கொடுக்க ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரண்டு நடுவர்கள், ஒரு காலத்தில் ஹிந்தி திரைப்பட உலகின் சிறந்த நடன இயக்குனராக இருந்த ஒரு வயதான பெண்மணி சிறப்பு விருந்தினர், இத்துடன் இந்தக் குழந்தைகளின் பெற்றோர் என ஆட்டம் களை கட்டுகிறது. ஒரு பிரபல ஹிந்தித் தொலைக்காட்சியில் இந்த நடனப் போட்டி.

அந்த இரண்டு பிஞ்சுகளும் பின்னணியில் ஒலிக்கும் பாடலுக்கு ஏற்றபடி உடலை நெளிக்கவும், கால்களை தூக்கவும், ஒருவரையொருவர் கட்டித் தழுவவும் செய்கிறார்கள். நடுவர்களும் கூட்டமும் பார்த்து ஆர்ப்பரிக்கிறது. பெற்றோர்கள் சிறப்பு நடுவரின் பாராட்டைக்கேட்டு எதோ பிறவிப் பயனை அடைந்துவிட்டது போல் கைகளை தட்டி குதூகலமடைகிறார்கள். சிறப்பு நடுவர் இந்த நடனத்தை சால்சா வகை நடனம் என்கிறார். பெற்றோருக்கு பெருமிதம் தாங்கவில்லை.

அடுத்ததாக ஒரு ஜோடி, வேறு ஒரு பாடல், இப்பொழுது பையன் ஒரு எட்டு வயதுப் பெண்ணின் மார்பை ஏடாகூடமாக தடவி கழுத்தில் முத்த மிடுகிறான். திடீரென்று அவன் கால்களை விரித்து நிற்க இந்தப் பெண் அவன் கால்களுக்கு நடுவே வழுக்கிப் போகிறாள். மேடையின் முழு அளவிற்கும் ஓடித்திரியும் இந்த ஜோடி, திடீரென்று ஒருவர் இடுப்பை ஒருவர் அணைத்தபடி உடலுறவு கொள்வது போல் அசைகின்றனர். உடனே நடுவர் ஒருவர் எழுந்து நின்று கையைத் தட்டுகிறார். முடிவில் அந்த Pelvic thrust was a perfect movement என்று சொல்கிறார். இங்கும் பெண்ணுக்குஅதே அங்குல அளவு உடைகளும், பையனுக்கு கைக்குட்டை கட்டுகளும் தவறாது இடம் பெறுகிறது. பெற்றோர்கள் கையைத் தட்டி குதூகலிக்கின்றனர். முடிவில் சிறப்பு நடுவர் இதை Contemporary dance என்கிறார்.

இதற்கு அடுத்த ஜோடி, இரண்டு பொடியன்கள், ஒரு ஏழோ அல்லது எட்டு வயதுப் பெண், இரண்டு பையன்களும் பாடல் ஆரம்பித்தவுடன் வந்து இந்த பெண்ணை தங்களது இடுப்பால், அவளது இடுப்பில் இடிக்கிறார்கள். அந்தப் பெண் கெக்க பிக்கவென சிரித்து விட்டு ஹூம், Crazy Boys என நடையை கட்டுகிறாள். கூட்டம் கையைத்தட்டி ஆரவாரிக்கிறது.


இருங்கள், இதை எழுதும் பொழுதே எனக்கு வாந்தி வரும்போல் இருக்கிறது. கொஞ்சம் வாந்தி எடுத்துவிட்டு பின்பு வருகிறேன்.


எந்த தொலைக்காட்சியை எடுத்தாலும் நடனப் போட்டிகள் அல்லது பாட்டுப் போட்டிகள் தான். அதுவும் பிஞ்சு குழந்தைகளின் Pelvic Thrust. இந்த வக்கிரங்களை தங்கள் குழந்தைகள் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியுறும் பெற்றோர்கள், அதற்கென அவர்கள் செலவழிக்கும் பணம், நேரம். அதற்கு மதிப்பெண் கொடுக்கும் நடுவர்கள், அதை பாராட்டிப் பேசும் சிறப்பு விருந்தினர்கள், இதை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி,

யோவ், ங்கொய்யால, எங்கய்யா போயிட்டிருக்கறோம் நம்ம என ஓங்கி தொண்டை கிழிய கத்தவேண்டும் போலுள்ளது.

90 களில் ஒவ்வொரு இந்திய தொலைக் காட்சிகளிலும் மாணவர்களுக்கென வினாடி வினா போட்டிகள் நடத்தப் பட்டது, ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து பள்ளி வாரியாக அவர்களிடத்தில் பொது அறிவு, விஞ்ஞானம், மற்றும் விளையாட்டு போன்றவற்றில் கேள்விகள் கேட்கப் பட்டு, மதிப்பெண்கள் கொடுக்கப் பட்டன, வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் அளித்தார்கள். சித்தார்த்த பாஸு நடத்திய அல்ஃபா ப்ளஸ் என்ற நிகழ்ச்சி அநேக பெற்றோரால் அவர்கள் குழந்தைகளுடன் விரும்பி பார்க்கப் பட்டது. நவ்ரோத்தம் பூரி என்ற மனிதரை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. விளையாட்டில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்வையும் மனிதர் விரல் நுனியில் வைத்திருப்பார். அவரின் விளையாட்டு கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கு பெற அன்றைய மாணவ மணிகள் கனவு கண்டு தவமே இருந்தார்கள் எனலாம். ஏன் இப்பொழுது எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் அங்கு தவறாது ஆஜராகி வர்ணனையில் கலக்கும் ஹர்ஷா போக்ளே கூட ஒரு காலத்தில் ESPN தொலைக்காட்சியில் விளையாட்டு கேள்வி பதில் போட்டிகள் நடத்தியவர்தான்.

இதனால் குழந்தைகளின் அறிவு தாகம் பெருகியது. பெற்றோர்களும் குழந்தைகளும் சரிசமமாக இந்த போட்டிகளிலும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிகழ்ச்சிகளோ அல்லது இதன் முக்கியத்துவமோ எப்படி இவ்வளவு சீக்கிரம் ஒழிந்து போனது என தெரியவில்லை.

இன்று விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு பாட்டு போட்டிக்காக அந்த குழந்தைகள் எத்தனை வகுப்புகளை தியாகம் செய்தார்களோ தெரியவில்லை, இன்னும் அவர்களுக்கு எத்தனை விதமான உடைகள் அணிவித்து பாடவைப்பார்களோ ஈஸ்வரா…. நிகழ்ச்சியை எவ்வளவு நீட்டி முழக்கி நாட்களை கடத்துகிறார்களோ அவ்வளவும் தொலைக் காட்சிக்கு லாபம் தான். ஆனால், அந்த பிஞ்சுகள் இந்த வயதில் எதைக் கற்க வேண்டுமோ, எதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமோ அதை விட்டு விட்டு “ அந்த ரெண்டாவது லைன்ல வர்ற மூணாவது வார்த்தைல ஒரு குட்டி ஜெர்க் வர்றது, அதை கரெக்ட் பண்ணுங்க, அடுத்ததா ஆலாப்ல கொஞ்சம் சுதி பிசிறடிக்குது, அதை சரி பண்ணிக்கோங்க” போன்ற அறிவுரைகளில் சீரழிகிறார்கள். பெற்றோர்களே தங்களது பிஞ்சுக் குழந்தைகளின் Pelvic thrust ஐ பார்த்து ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்கிறார்கள்.

ஒரு வருங்கால சமுதாயத்தின் முழுகவனத்தையும் சினிமா என்ற சமூக அவலத்தின் பால் திசை திருப்பி, முற்றிலும் சீரழிக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இந்த சமூக வன்முறை கும்பலிடம் இல்லையா? பிஞ்சுகளின் மூளையை சினிமா ஆக்கிரமித்தால், வருங்கால சந்ததியில் மனித வளம் என்பது மருந்துக்கு கூட இருக்காது.

Tuesday, December 15, 2009

முகவரி மாறும் முகங்கள்

சமீபத்தில் பதிவர் வெங்கிராஜாவின் பதிவான முகங்கள் படிக்க முடிந்தது. சென்னையின் இரவு நேர காட்சிகளை அழகான புகைப் படங்களுடன் பதிவு செய்திருந்தார். புகைப்படங்களில் வயதான முதியவர்கள், தாடி வைத்தவர்கள், காய் விற்கும் அம்மா, பூக்கட்டும் மூதாட்டி, காவித்துண்டை கழுத்தில் சுற்றிய ஒரு அய்யப்ப பக்தரோ அல்லது முருக பக்தரோ தெரியவில்லை, வெற்றுடம்புடன் குனிந்து நிற்கும் ஒரு வாலிபனும் முதியவரும் என காமிரா கவிதை பாடியிருக்கிறது. ஒரு விஷயம் மாத்திரம் புரியவில்லை, சென்னை என்றில்லை இந்தியாவின் எந்த நகரத்தையும் அதன் பரிமாணங்களை வெளிக்கொணர காமிரா பிடிப்பவர்களின் கண்களுக்கெல்லாம், வளர்ந்து நிற்கும் கட்டிடங்களோ, வழுக்கிச் செல்லும் சாலைகளோ, சாலைகளின் நடுவில் சுற்றிச் சுழலும் பாலங்களோ, மல்லிகைப் பூச்சூடி கொடியிடை கொண்ட எங்கள் மண்ணின் குமரிகளோ, மடிக்கணியை எதோ ஒரு விளையாட்டுப் பொருள் போல கழுத்தில் தொங்கவிட்டு அலுவலகம் விரைந்து வித்தை காட்டும் அறிவு ஜீவி இளைஞர்களோ, பரந்து விரிந்து நிற்கும் கடற்கரைகளோ (ஏ யப்பா மூச்சு முட்டுதய்யா) கண்ணிலேயே படுவதில்லை.

காமிராவில் தெரிவதெல்லாம் பிச்சைக்காரர்கள், வறுமையில் வாடுபவர்கள், முகத்தில் ஈ மொய்க்க அழுக்கு கரங்களில் ஒரு சோற்றுப் பருக்கையை வாய்க்குள் திணித்து, ஒழுகும் சளி மூக்குடன் உள்ள குழந்தைகள், திறந்து கிடக்கும் சாக்கடைகள், போஸ்டர் ஒட்டிய வெளிச்சுவர்கள், உடைந்த பின்னும் ஓடிக் கொண்டிருக்கும் அபாயநிலை வாகனங்கள், பெருநகரங்களில் உடல் விற்க காத்திருக்கும் விபச்சாரிகள், வயிறு பெருத்த காவல் துறையினர், மஞ்சள் கோட்டை தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் என எதிர்மறைக் காட்சிகளாகவே ஏன் தெரிகிறதென்று தெரியவில்லை.

வெங்கி ராஜா என்ன நினைத்து இந்தப் படங்களை பிடித்தார் என தெரியவில்லை. ஆனால் இரவில் சென்னையில் படம் பிடிக்க எத்தனையோ சிறப்பான விஷயங்கள் இருக்கும்பொழுது வெறும் வயது முதிர்ந்த தாடிக்காரர்களும், தள்ளாத வயதிலும் பூக்கட்டும் பூக்காரம்மாவும் தானா கண்ணில் பட்டார்கள். அவர் சுற்றிய வழியான ராமாவரம் பாலத்திலிருந்து தோமையர் மலை போகும் வழியில் எதிர்படும் கத்திப் பாராவின் பாலம் இரவில் ஒரு தனி அழகுதான். ராடிசன் ஹோட்டல் வரை செல்லும் ஜி.எஸ்.டி சாலை இரவில் வண்ணமயமான விளக்குகளால் ஒளியூட்டப் பட்டு துடைத்து விட்டாற்போல் பளிச்சென்றிருக்கும். மனிதர்களைத்தான் படம் பிடிக்க வேண்டும் என நினைத்தால், எத்தனையோ மனிதர்கள் இந்த நாட்டின் செழிப்பை வெளிப்படுத்த கடிகார முட்களின் ஒவ்வொரு நகர்விற்கும் எங்கள் சாலைகளின் எல்லா மூலைகளிலும் தென்படுவார்கள். அவர்களை எல்லாம் விடுத்து ஏழ்மையை மாத்திரம் படம் பிடித்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என தெரியவில்லை.

எனது பல ஆண்டுகால வெளிநாட்டு வாசத்தில், அங்கு அமர்ந்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காணும் பொழுதெல்லாம், இந்தியாவைப் பற்றிய ஏதாவது ஒரு நிகழ்ச்சியென்றால், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிந்ததெல்லாம் விநாயகர் சிலைகளும், குப்பை நிறைந்த குறுக்குச் சந்துகளும், மும்பை, டெல்லி மற்றும் கல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதியின் மித மிஞ்சிய உதட்டுச் சாய மங்கைகளும், திறந்த சாக்கடைகளும், நாய்களுடன் கூட்டுச் சேர்ந்து எச்சிலையில் சாப்பிடும் பிச்சைக் காரர்களும், வாகன நெரிசலில் ஒலிப்பான் பிளிர சிக்கித் தவிக்கும் மாநகர சாலைகளும் என அலங்கோலங்கள் மாத்திரமே காண்பிக்கப் படும். இது இந்தியாவின் வளர்ச்சியைப் கண்டு வயிறெரியும் மேற்கத்திய மக்களின் வக்கிரப் பிரச்சாரம் என்றே நான் சொல்லுவேன்.

ஆனால் நாம், நம்மைப் பற்றி கூறும் பொழுது ஏன் இப்படி வறுமையையும், அவலங்களையும் மாத்திரம் கூற வேண்டும்? யதார்த்தத்தை காண்பிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஏன் நாம் நம்மை தாழ்த்திக் கொள்கிறோமோ தெரியவில்லை. நான் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில் அங்கிருக்கும் இந்தியர்களால் தயாரிக்கப் பட்ட Broken Promises என்ற ஒரு இந்திய திரைப் படத்தை காண முடிந்தது. குமாரன் நாயுடு என்ற இந்தியரால் இயக்கப் பட்டு முற்றிலும் இந்திய நடிகர்களே நடித்த படம். அதிலும் கூட தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் பழக்க வழக்கங்களை எள்ளி நகையாடியிருப்பார் இந்த நாயுடு. இந்தியப் பெண்கள் ரோட்டின் நடுவில் நின்று பூரிக் கட்டையை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதில் வரும் கதாநாயகர்களான இந்திய இளைஞர்கள் வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்றுபவர்களாகவும், சரக்கடிக்க மற்றவர்களை ஏமாற்றி காசு பார்ப்பவர்களாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் தென் ஆப்பிரிக்கா வாழ் மக்களிலேயே மூன்று வேளை சாப்பாடு சாப்பிட்டு, குடும்ப அமைப்பு சிதையாமல் வாழும் இனம் இந்திய இனம் தான். ஆனால், அவர்களை ஒரு இந்தியன் இப்படி இழிவாக சித்தரிப்பதையும், அதைப் பார்த்து இந்தியர்களே எள்ளி நகையாடுவதும் வேதனையாக உள்ளது. வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இந்த பழக்கத்தை அதிகமாக நான் கண்டிருக்கிறேன். சக இந்தியனின் இந்திய பழக்க வழக்கங்களுக்காக வெள்ளையர்களுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்யும் இந்தியர்களை வெகுவாக கண்டிருக்கிறேன்.


இந்தியாவின் யதார்த்தங்கள் இன்னும் ஏழ்மைக் கோலத்தில் தானா இருக்கிறது? கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய நிதியமைச்சரிலிருந்து மற்ற அமைச்சர்கள் வரை, பாராளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரின் ஆரம்பத்திலேயே சொன்னார்களே, இந்தியா 7.2 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறதென்று, இந்த நல்ல செய்திகள் நம்மவர்களின் மனங்களிலும் சரி, ஊடகங்களின் பார்வையிலும் சரி ஏன் ஒரு உப்புப் பெறாத விஷயமாகவே போய் விடுகிறதோ தெரியவில்லை. நண்பர்களே, நம்புங்கள். நாம் வளர்கிறோம். சிகரங்களை தொடுகிறோம். சராசரி இந்தியனின் வருமானம் உயர்ந்து கொண்டிருக்கிறது. உலகத் தரம் என்பது இந்தியாவிலும் பல துறைகளில் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. வெளி நாட்டவர்கள் இந்தியாவை நோக்கி சம்பளத்துக்காக வர ஆரம்பித்து விட்டார்கள். இந்தியர்களின் ஆளுமை உலகின் பல துறைகளிலும் கோலோச்சுகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சுருக்கம் விழுந்த முகங்களையும், கடுக்கன் தொங்கும் காதுகளையும், கோவணமணிந்த உடல்களையும் எதார்த்தம் என்ற பெயரில் காண்பித்துக் கொண்டிருப்பீர்கள்?

Friday, December 4, 2009

என்னத்தைச் சொல்ல.......



பெங்களூருவிலிருக்கும் நாராயணா ஹ்ருதயாலயாவின் சிறப்பு மருத்துவரான தேவி ஷெட்டி, விப்ரோ தொழிலாளர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் ஒரு கலந்துரையாடலுக்கு சென்றிருந்தார். நவீன உலகின் இளைஞர், இளைஞிகளுக்கு வரும் இருதய நோய்களைப் பற்றிய கலந்துரையாடலில், மாரடைப்பை தடுப்பது எப்படி என்பது பற்றிய கேள்விகளுக்கு பெரும்பாலான பதில்களில், உடற்பயிற்சி செய்யுங்கள், சிரித்துக் கொண்டிருங்கள், பழ வகைகளை அதிகம் உண்ணுங்கள், ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் குறைந்த அளவில் எதையாவது சாப்பிடுங்கள், எண்ணையை தவிர்த்து விடுங்கள் என பதிலளித்துக் கொண்டே வந்தவரிடம் திடீரென கேட்கப் பட்ட ஒரு கேள்வி:

கேள்வி : பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் மாரடைப்பு வருகிறதே ஏன்?

பதில் : 45 வயது வரை பெண்களை இயற்கையே பாதுகாக்கிறது.

அய்யா, டாக்டரய்யா இந்த 45 வயசுக்குள்ள இவுங்க படுத்தற படுத்துல தான் ஆம்பளைங்களுக்கு எல்லாம் மாரடைப்பு வருதுன்னு சொல்லாம சொல்றீங்களா? இல்ல, 45 வயசு வரைக்கும் பெண்களுக்கெல்லாம் பில்டிங் ஸ்ட்ராங்கு, மொட்டைமாடிதான் எப்பவுமே காலின்னு சொல்ல வர்றீங்களா? தெளிவா சொல்லாம இப்படி குழப்பறீங்களே….. என்னத்தச் சொல்ல…..

****************************************************************************
அகில இந்திய வானொலியின் பண்பலை சேவையில் தமிழ் பண்பலை வரிசையில் நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டிருந்தேன். வழக்கமாக காட்டுக் கத்து கத்திக் கொண்டு, உங்கள் மனதுக்கு பிடித்த பாடலின் பிடித்த வரியில் வரும் பிடித்த வார்த்தையின் பிடித்த எழுத்தை எங்களுக்கு போன் பண்ணி சொல்லுங்க, நாங்க அந்த எழுத்தில் ஆரம்பிக்கற வேற ஒரு பாட்டை உங்களுக்காக் ஒலி பரப்புகிறோம் என்ற அருவருப்பான பண்பலை வானொலி நிகழ்ச்சிகளை விட, அனைத்திந்திய வானொலி நிலையத்தார் நிகழ்ச்சிகளை கதம்பமாக கோர்த்திருந்த விதம் சிறப்பாக இருக்கிறது.

ஆனால் இடையில் இப்படி ஒரு விளம்பரம்:

அண்ணே, ஒரு சந்தோஷமான விஷயம். நான் அம்மாவாகப் போறேன். தினமும் கோயிலுக்குப் போயி சுக பிரசவம் வேணும்னு ஒண்ணே கால் ரூபாய் காணிக்கை போட்டுட்டு வர்றேன்.

அப்படியா தங்கச்சி, சுக பிரசவம் வேணும்னா, அயோடின் உப்பு சேர்த்துக்க, அதுதான் உடம்புக்கு நல்லது.. கோவில்ல போடுற ஒண்ணேகால் ரூவாயை அயோடின் உப்பு வாங்கறதுக்கு செலவு பண்ணேன்னா, உனக்கு மட்டுமல்ல, உன் வயத்துல இருக்கற குழந்தைக்கும் நல்லது

அய்யா, வானொலி நிலையத்தாரே, நீங்க என்ன சொல்றீங்கன்னு தெரிஞ்சுதான் சொல்றீங்களா, இதை எங்கயாவது இந்த கோக்கு மாக்கா பக்தி பரவசத்திலாழ்ந்திருக்கும் பக்த கோடிகள் கேட்டுட்டாங்கன்னா, அப்புறம் நாலு பஸ் எரியும், ஆட்டோ ஓடாது, கடை கண்ணிக பத்தி எரியும், ரெண்டு மூணு வழிபாட்டுத்தலங்கள் தரை மட்டமாகும், பள்ளிக்கூடம் லீவு, ஆபீசு லீவு, ஒவ்வொரு தெரு முனையிலும் கூட்டம், சட்டசபையில வெளிநடப்பு செய்யறவங்கெல்லாம், திடீர்னு உள்நடப்பு செஞ்சு கேள்வி கேட்க ஆரம்பிச்சுருவாங்க, கடல் தண்ணி இருந்தாதான் உப்பு விளையுது, உப்பு விளைஞ்சாத்தான அயோடின் சேர்ப்பீங்க, அதனால கடலையே அழித்து விட அணி திரண்டு வாரீர்னு டிஜிட்டல் பேனர் கட்டுவாங்க, இது நாட்டை சீர்குலைக்க வந்த வெளிநாட்டு சதின்னு உளவுத்துறை ரிப்போட்டு வரும், ஏய்ய்ய்யப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா, ஆளை விடுங்க சாமி, ஒரு உப்புப் பெறாத உப்பு மேட்டர்ல எவ்வளவு வில்லங்கம் இருக்கு பாருங்க,,,,,, என்னத்தச் சொல்ல.

********************************************************************************

அது என்னன்னே தெரியலீங்க, நம்மளுக்குத்தான் இந்த மாதிரி நடக்குதா, இல்ல எல்லாருக்குமே நடக்குதான்னு தெரியல. டோல் கேட்ல நம்ம கார் எந்த வரிசையில நிக்குதோ, அந்த வரிசையில மாத்திரம், முன்னால இருக்கற கார்காரர், காசு வாங்கறவன் கிட்ட சண்டை போடுவார், இல்லைன்னா 500 ரூபாய் நோட்டை தேடி எடுத்துக் குடுத்து, சில்லறை வாங்கி சரி பார்த்து நிதானமா பர்ஸுல வெச்சுட்டு, அப்புறமா கிளம்புவாரு, இல்லைண்ணா நமக்கு முன்னால ரெண்டு கார் இருக்கும்போது அங்க மெஷின் கெட்டுப் போயிரும், இப்பிடி எதாவது ஒண்ணு நடந்து, நம்ம பொறுமையின் அளவை சோதிச்சுட்டே இருக்கும்.


பெட்ரோல் நிரப்ப போனா, நமக்கு முன்னால இருக்கற கார்காரர், சாவகாசமா கிரெடிட் கார்டை எடுத்துக் குடுத்து, அது வேலை செய்யாமப் போய், அப்புறம் இன்னொரு கார்டை எடுத்து குடுத்து, நிதானமா ரசீதுல கையெழுத்துப் போட்டு, ஏன், இல்ல, ஏன் இப்படி எனக்கு மாத்திரம் நடக்குது. என்னத்த சொல்ல…….
***********************************************************************************
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில், தினமும் மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போகும் பொழுது, நிறைய மாடுகள் ரோட்டில் படுத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறேன். அவைகளை ஒதுங்கச்சொல்லி ஹாரன் அடித்து விட்டு ஓரிருமுறை சென்றிருக்கிறேன். ஒருமுறை ஒரு இளம் கன்னுக்குட்டி நடு சாலையில் நின்று கொண்டிருக்க, நான் ஹாரன் அடிக்க, அந்த கன்றுக்குட்டி மிரண்டு ஓடாமல் சாவகாசமாக திரும்பி என்னை நெடு நேரம் பார்த்தது. அதன் பார்வையில் அது என்னிடம் ஆயிரம் வார்த்தைகள் பேசியது போல் தோன்றியது. வீட்டுக்கு போகும் வரை அது பேசியிருந்தால் என்ன பேசியிருக்கும் என யோசித்துக் கொண்டே போனேன். அது பேசியிருந்தால்……..

“டேய், வெண்ணை, பெருசா காருக்குள்ள உக்காந்துட்டு என்னைப் பார்த்து ஒதுங்கிப் போகச்சொல்லி ஹாரன் அடிக்கறயே, நீயும் உன் காரும் எங்க நிக்கறீங்க தெரியுமாடா, மவனே, இந்த இடம் நாங்க ஓடி விளையாட, நின்னு மூத்திரம் பேய, குனிஞ்சு புல்லு திங்கன்னு எங்களுக்காகவே உதிச்ச இடம்டா, அதுல ஒரு கான்கிரீட் சதுரத்தை வெச்சுட்டு ஆபீஸூங்கறீங்க, ஒரு வண்டி தாரைக்கொட்டி ரோடுங்கறீங்க, அதுக்கும் மேல என்னைப் பார்த்தே தள்ளி நில்லுன்னு ஹாரன் அடிக்கறயா, கசுமாலம், உன் இடத்துல நான் நிக்கலடா, என் இடத்துல தாண்டா நீ நிக்கற, சீ, தூரமாப் போடா”

இதை நினைத்த போது அந்த கன்னுக் குட்டியிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். இப்பொழுதெல்லாம் இந்த சாலையில் நான் மாடுகளைப் பார்த்து ஹாரன் அடிப்பதில்லை. என்னத்தைச் சொல்ல……


Monday, November 9, 2009

வந்தே மாதரம் – வருதய்யா ஆத்திரம்.

1835 ம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் மிட்நாப்பூர் நகரில், ஆங்கிலேய அரசில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு இந்திய அதிகாரியின் வீட்டில் பிறந்தவர் பங்கிம் சந்தர சட்டர்ஜி. 1891 – ஆம் ஆண்டு வரை, நீதிபதியாக ஆங்கிலேய அரசாங்க உத்தியோகம் பார்த்து விட்டு, தினமும் சாரட் வண்டியில் வீட்டுக்கு போய் சகதர்மிணி செய்து வைக்கும் மீன்குழம்பை ஒரு பிடி பிடித்து விட்டு, ஒழுங்காக தூங்கப் போன இந்த மனிதருக்குள்ளும், ஆங்கிலேய எதிர்ப்பு என்பது மனதுக்குள் கனன்று கொண்டிருந்தது. கவிதைகள் எழுதுவதிலும், புனைவுகள் எழுதுவதிலும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த இந்த மனிதர், 1882 ஆம் ஆண்டு “அனந்தாமத்” என்ற ஒரு புத்தகம் எழுதினார். ஆங்கிலேயர்களின் வரி வசூலிக்கும் கொள்கைக்கு எதிராக இந்து மற்றும் இஸ்லாமிய துறவிகளால் நடத்தப் பட்ட “துறவிகளின் போரையும்”, அந்நாட்களில் (1770 களில்) வங்காள பகுதியில் தலைவிரித்தாடிய பஞ்சத்தின் கோர விளைவுகளையும் மையப் படுத்தி எழுதிய ஒரு புனைவு இது.

பஞ்சத்தின் பிடியிலிருந்த வங்கத்தில் மனிதர்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு, கடைசியில் மனிதர்களையும் விற்கத் தொடங்கினார்கள். ஆனால் வாங்குவோர் தான் யாரும் இல்லை. கல்யாணி என்ற வங்கப் பெண் தன் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு ஆள் பிடித்து விற்பவர்களின் கண்களில் தப்பித்து ஓடுகிறாள். ஆனால் வாணலிக்குத் தப்பி நெருப்பில் விழுந்த கதையாய், அவள் ஆங்கிலேய சிப்பாய்களின் காமக் கண்களில் பட்டு விடுகிறாள். உதவி உதவி என்று கதறி அந்த பெண், ஒரு ஆற்றங்கரையில் மூர்ச்சையானதும், அவளை காப்பாற்றும் ஒரு இந்துத் துறவி அவளை பாதுகாப்பு கருதி துறவிகள் கூட்டமாய் குழுமியிருக்கும் இடத்தில் மறைத்து வைக்கிறார். ஏற்கெனவே ஆங்கிலேயர்களின் அடாவடி வரி வசூலிப்பினால் தங்களது புண்ணிய தலங்களுக்கு சுதந்திரமாக சென்று வர முடியாமல் வெறுப்படைந்திருந்த துறவிகள், கல்யாணிக்கு ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட அவமானத்தின் கதையை கேட்டதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெகுண்டு எழுகிறார்கள் . இதன் விளைவாக நடந்தது தான் துறவிகளின் போர். இதில் நிராயுத பாணிகளாய் வெறும் கோபத்தையும் ஒற்றுமையையும் மாத்திரமே ஆயுதங்களாக கொண்டு போரிட்ட துறவிகளால், ஆங்கிலேய ராணுவம் மற்றும் ஆயுத பலத்துக்கு முன்பாக சில மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. கலகத்தை அடக்கி விட்டோம் என சில ஆங்கில அதிகாரிகள் இங்கிலாந்து அரசியின் கையால், தங்கள் சட்டைகளில் மெடல் குத்திக் கொண்டார்கள். இப்படியாக போகும் அந்தப் புனைவில் இந்திய நாட்டை ஒரு அன்னையாக உருவகப் படுத்தி அந்த அன்னையின் சிறப்புகளை தனக்கே உரிய சமஸ்கிருத மற்றும் வங்க மொழி புலமையின் சிறப்பில் எழுதிய வரிகள் தான் “வந்தே மாதரம்”.

1890களின் பின்பகுதியில், ஆங்கிலேயர்களின் அட்டகாசம் அதிகமாகி, இங்கிலாந்து ராணிக்கு தங்களது விசுவாசத்தைக் காட்ட “ O God, Save the Queen” என்ற பாட்டை இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாடவேண்டும் என கட்டாயப் படுத்தினார்கள். எங்கேயோ இருந்து வந்து நம்மீது ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்துக் காரனின் ராணி நன்றாயிருக்க வேண்டுமென நான் ஏன் வேண்ட வேண்டும் என ஒவ்வொரு இந்தியனும் வெகுண்டு கொண்டு இருந்த நேரத்தில், 1896 ஆம் ஆண்டு கல்கத்தாவில் அப்போதைய தலைவர் ரஹிமத்துல்லா சயானி என்பவரின் தலைமையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், ராணியின் பாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம் பாரத தாயைப் பற்றிப் பாட வேண்டும் என தீர்மானித்து முதன்முதலாக வந்தே மாதரம் பாடப் பட்டது. பிறகு இந்தப் பாட்டின் முழு அர்த்தமும், அந்த வர்ணனை வரிகளில் வெளிப்படும் இந்திய மண்ணோடுள்ள உளம் சார்ந்த உணர்வுகளும், ஒவ்வொரு இந்தியனையும் ஈர்க்க, மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் வந்தே மாதரம் ஒலித்தது. குறிப்பாக நாம் அறிய வேண்டியது, அப்பொழுது சுதந்திரப் போராட்டத்தில் வெகுவாக ஈடுபட்டிருந்த இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே எந்த வித கருத்து பேதங்களுமின்றி இந்தப் பாடல் பாடப் பட்டு வந்தது.

இதற்கிடையே இஸ்லாமிய அறிவாளர்களால் ஜமாய்த் உலேமா – ஏ – ஹிந்த் (இந்திய அறிவாளிகள் குழுமம்) என்ற ஒரு அமைப்பு, 1919 – ம் ஆண்டு தோறுவிக்கப்பட்டது. இவர்கள் தங்கள் பங்குக்கு ஆங்கிலேய எதிர்ப்பை வெளிப்படுத்த “கிலாஃபத் இயக்கம்” என்ற ஒன்றை நடத்த இந்த இயக்கமும் இஸ்லாமிய மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. பிற்காலத்தில் இவர்கள், கொள்கை ரீதியில் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர். இவர்களில் பலர் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்த வேளையில், இவர்களுக்குள்ளேயே ஒரு தனி பிரிவினர் பிரிவினைக்கு ஆதரவாகவும் கிளர்ந்தனர். இந்த பிரிவினை ஆதரவாளர்கள் எல்லாம் சேர்ந்து பின்னாளில் ஜமாய்த் உலேமா – ஏ – இஸ்லாம் (இஸ்லாமிய அறிவாளிகள் குழுமம்) என்ற தனிக் குழுவாய் பிரிந்து போய் விட்டனர்.

இந்திய அறிவாளிகள் குழுமம் அன்றிலிருந்து இன்றுவரை, தங்களை இந்திய இறையாண்மையை முழுதும் மதிப்பவர்களாகவும், மதச் சார்பின்மைக்கு முழுதும் ஆதரவு தருபவர்களாகவும் தான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் அவர்களும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். மற்றும் பிராந்திய ரீதியில் அங்கங்கே இருக்கும் மாநில கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல்களில் பங்கேற்று, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து அரசியல் செய்து என இந்திய அரசியலின் ஒரு அங்கமாகவே திகழ்கிறார்கள்.

இப்படி சாதுவாக குல்லாய் அணிந்து கொண்டும், தாடியை நீவிக் கொண்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டும், ஐந்து முறை தொழுது கொண்டும் இருந்த இந்த அறிவாளிகள், சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் த்யோபந்த் என்ற இடத்தில் நடந்த அறிவாளிகள் மாநாட்டில் நிறைவேற்றிய ஒரு தீர்மானம் தான் இந்திய அரசியலில் ஒரு புதிய சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கிறது. தியோபந்தில நடந்த மாநாட்டில் நமது நாட்டுக்கோட்டை வீட்டுக்காரரான மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்கள் அறிவாளிகளின் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொள்ள, அந்த நேரம் பார்த்து அறிவாளிகளின் அறிவு கோக்கு மாக்காக வேலை செய்து, இஸ்லாமியர்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என ஃபத்வா வெளியிட்டு விட்டார்கள். இதென்னடா வம்பு, எக்குத் தப்பாக வந்து மட்டிக் கொண்டோமோ என நினைத்து, சிதம்பரமும் மாநாட்டில் பேசும் பொழுது, மிகுந்த எச்சரிக்கையுடன், இந்த ஃபத்வா மேட்டரை தொடாமலே பேசி விட்டு ஆளை விடுங்கடா சாமி என ஓடி வந்து விட்டார். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

இப்பொழுது இருக்கிற அரசியல் நிலைமையில், இறங்கு முகத்தில் இருக்கும் பாஜக திரும்பிய பக்கமெல்லாம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தனிக் கொடி பிடிக்க தயாராகி வருகிறார். அத்வானியின் தலைமை என்பது கட்சிக்கு எதிர்பார்த்த கவர்ச்சியை மக்களிடம் தர முடியவில்லை. ஜஸ்வந்து சிங் தனியாக ஜின்னா புராணம் பாடி விட்டு பிரிந்து விட்டார். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் வேளையில், நடந்து முடிந்த மாநிலத்தேர்தல்கள் அனைத்திலும் மண்ணைக் கவ்வ வேண்டியதாகி விட்டது. தென்னாட்டில் கால் ஊன்றக் கிடைத்த ஒரே ஒரு இடமான கர்நாடகத்தில், ரெட்டி சகோதரர்கள் தரும் குடைச்சல் வேறு திருகு வலியாய் மாறிக் கொண்டிருக்கிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என திரிந்தவர்களுக்கு, இந்த விஷயம் அகப் படவே வானுக்கும் மண்ணுக்கும் எகிறத் தொடங்கி விட்டார்கள்.

உடனே சிதம்பரம் பதவி விலக வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர், பிரவீண்பாய் தொகாடியா அறிக்கை விடுகிறார். சிதம்பரம் மௌனமாய் இருந்தது ஏன் என கேள்விகள், உருவ பொம்மை எரிப்புகள் என அரசியல் மேடை களை கட்டியுள்ளது. ஆனால் ஃபத்வா கொடுத்த அறிவாளிகள் சங்கம் என்ன காரணத்தால் இந்த தடையை விதித்தார்கள் என்றால், இதில் ஒரு பெண் தெய்வத்திற்கான துதிப்பாடல் வரிகள் வருகின்றன, அந்த வரிகளை உச்சரிக்கும் எந்த ஒரு இஸ்லாமியனும் அல்லாவை தூஷிக்கிறான் என திருவாய் மலர்ந்தருளி விட்டார்கள். இதற்கு இந்த அறிவாளிகள் கூட்டத்திலேயே ஒரு சிறு எதிர்ப்பு கிளம்பினாலும், அது திருவிழாக் கூட்டத்தில் ஒலித்த ஒரு குருட்டுப் பாடகனின் குரலாய் அமுங்கிப் போனது.

இந்த அறிவாளிகளுக்கு சில கேள்விகள்:

1919 ம் ஆண்டிலிருந்து நீங்களும் நெஞ்சை நிமிர்த்தி இந்தப் பாடலை பாடினீர்களே, அப்பொழுதெல்லாம் ஒளிந்து கொண்டிருந்த பெண்தெய்வம், திடீரென வெளிவந்தது ஏன்?

இறையாண்மைக்கும் ஆன்மீகத்துக்குமுள்ள வித்தியாசம் அறிவாளிகளான உங்களுக்கு கடுகளவாவது புரியாமல் போனது ஏன்?

ஃபத்வா கொடுப்பது என்பது ஆன்மீக காரணங்களுக்காக மாத்திரம் தானா அல்லது அரசியல் காரணங்களுக்காகவும் கூடவா?

வகுப்புவாத அரசியலின் அருவருப்பான விளைவுகளை சற்றே மறந்து முன்னேற்றம் என்ற பாதையில் எப்படி அடியெடுத்து வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் சாமான்ய இந்தியனை இத்தைகைய ஃபத்வாக்கள் எப்படி பாதிக்கும் என அணுவளவாவது யோசித்தீர்களா?

ஆடுகள் முட்டி சண்டை போட்டவுடன், எந்த ஆடு முதலில் மயங்கி விழும் அதில் எத்தனை கறி தேரும் என நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் வெட்கங்கெட்ட இந்திய ஊடக நரிகள், வழக்கம் போல சிண்டு முடியும் வேலையை துவங்கி விட்டன. இது எங்கு போய் முடியுமோ அந்த பாரத மாதாவுக்கே வெளிச்சம்.

வந்தே மாதரம் – வருதய்யா ஆத்திரம்.

Monday, November 2, 2009

நான் நிறுத்தீட்டேன், நீங்க........

தினமும் காலையில கணினிக்கு உயிரூட்டி, வந்திருக்கிற மின் அஞ்சல்களுக்கெல்லாம் பதில் சொல்லீட்டு, ஆணி புடுங்க ஆரம்பிச்சு, ஒரு 10 மணி வாக்குல, பதிவுலகத்துல பூந்து, நமக்கு புடிச்ச கடைகளுக்கெல்லாம் போய் புதுசா எதாவது வந்திருக்கான்னு ஒரு தரம் பார்த்துட்டு, அப்படியே பின்னூட்டமும் போட்டுட்டு வந்துருவேன். ஆனா ஒரு சிலர் அப்பத்தான் கடையில புது சரக்கு இறக்கியிருப்பாங்க, பின்னூட்ட பொட்டியில இன்னும் கணக்கே ஆரம்பிச்சிருக்காது. அங்க போயி பதிவ கிண்டல் ப்ண்ணியோ, பாராட்டியோ, அல்லது மேற்கோள் காட்டி கருத்து சொல்லியோ பின்னூட்டம் போட்டுட்டிருந்தேன். அப்படி பின்னூட்டம் போடறதுல ஒரு சிக்கல் இருக்குது. முதல் பின்னூட்டம் டெம்பிளேட் பின்னூட்டமா, “கலக்கல்”, “அசத்திட்டீங்க,” “ரசித்தேன்”, அப்படீன்னு எழுதுனாலோ, அல்லது கிண்டல் பண்ணி எழுதுனாலோ நிறைய விபரீதம் இருக்குது. அதாவது முதல் பின்னூட்டம் எந்த தோரணையில இருக்குதோ அதே மாதிரித்தான் அனைத்து பதிவர்களின் பார்வையும் இருக்கும்னு ஒரு சில பதிவர்கள் நினைக்கறாங்க. ஒரு பதிவு போடறதுக்கு அவனவன் எவ்வளவு கஷ்டப்பட்டு, நொந்து நூலாகி மேட்டர் தேத்தி பதிவு போடறாங்க, அதப் போயி முதல் முதலா கருத்து சொல்றேன்னு சொல்லி எதுக்கு பொழிக்கணும்னு தான் நான் முதல் பின்னூட்டம் போடறத நிறுத்தீட்டேன்.

***************************************************************************
1995ம் வருஷம், ராஜஸ்தானின் பில்வாடா பகுதியில் இருக்கும் சிரோஹி மாவட்டத்தில் வேலை செஞ்சுகிட்டிருந்தேன். எங்க ஆபீஸுக்கு கூட்டி பெருக்கவும், தேநீர் கொடுக்கவும் ஒரு பொண்ணு வேலைக்கு வருவா, ராஜஸ்தானி பழங்குடியினருக்கே உள்ள அந்த சிவப்பு நிறமும், மூக்கும் முழியுமா உள்ள ஒரு பதினஞ்சு வயசு வாலிப பொண்ணு. பக்கத்து கிராமத்துல இருந்து தினமும் வந்த அந்த பொண்ணோட அண்ணன் எங்களுக்கு டிரைவரா இருந்தான். ஒரு நாள் நான் தங்கியிருநத வீட்டுல இருந்து காலையில வேலைக்கு போறதுக்கு சைக்கிள எடுத்துட்டு கிளம்பி கொஞ்சம் தூரம் போனா, வேலைக்கு போக வேண்டிய எல்லாரும் கம்பெனில உள்ள காலனியில ஒரு நாலு ரோடு சந்திக்கற இடத்துல கும்பலா நிக்கறாங்க. என்னனு பார்த்தா, எங்க ஆபீஸ்ல வேலை செய்யற பொண்ணு இடுப்புக்கு மேல ஒரு பொட்டு துணியில்லாம கையை ரெண்டையும் நெஞ்சுக்கு குறுக்க கட்டிகிட்டு, குத்த வெச்சு உக்கார்ந்து, பாவாடையால நெஞ்ச மூட முயற்ச்சி பண்ணிகிட்டிருக்கா, கன்னத்துலயும், முழங்கையிலயும் சிராய்ப்புக் காயம் பட்டு ரத்தம் கசியுது, உதட்டுக்குப் பக்கத்துல ஒரு சின்ன வெட்டுக்காயம். காலையில வேலைக்கு போற அத்தன பேரும் சைக்கிள நிறுத்திகிட்டு அவ வெற்றுடம்பை வேடிக்கை பாக்கறாங்க. ஒருத்தரும் அவளுக்கு உதவ முன்வரல. நான் போய் என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு, பக்கத்து வீட்டு பையனோட சைக்கிள்ல பின்னால உக்காந்துட்டு வேலைக்கு வந்ததாகவும், அவன் சைக்கிள்ல துப்பட்டா மாட்டி, துப்பட்டாவோட சேர்ந்து சோளியும் சக்கரத்துல சுத்தி கிட்டதாகவும், தான் கீழ விழுந்து எல்லாம் காயமாகிவிட்டதாகவும் சொன்னா. (ராஜஸ்தான்ல பில்வாடா பகுதி ஆதி வாசி பெண்கள் இடுப்புக்கு மேல உள்ளாடை எதுவும் அணிய மாட்டார்கள், சோளி அதுவும் உடலின் முன்னே மார்புகளை மாத்திரம் தான் மறைக்குமே தவிர, முதுகு பக்கத்தில் வெறும் இரண்டு கயிறுகளைக் கொண்டு முடிச்சுகள் மாத்திரம் தான் இருக்கும். துப்பட்டா சரிந்து விடாமலிருக்க அதன் ஒரு நுனியை சோளியுடன் சேர்த்து, பின்னூசியால் குத்தியோ அல்லது முடிந்தோ வைத்திருப்பார்கள். சைக்கிள் சக்கரத்தில் சுற்றிய வேகத்தில் துப்பட்டா சோளியையும் கிழித்துக் கொண்டு போய் விட்டது). அத்தனை ஆண்கள் மத்தியில் வெற்றுடம்புடன் நிற்கிறோமே என்ற அவமானம் ஒருபுறம், கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயங்களின் வலி ஒருபுறமுமாக அந்தப் பெண் கூனிக் குறுகிக் கொண்டிருந்தாள். கண்ணுல பொல பொலன்னு கண்ணீரு வழியுது. சுற்றியிருப்பவர்களைப் பார்த்து எனக்கு கோபமே வந்தது, வெற்றுடம்புடன் உக்கார்ந்திருந்த அவளிடம் சென்று, பரபரவென என் சட்டையை கழற்றி அவளுக்கு கொடுத்து விட்டு, அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த அவளின் அண்ணனிடம், ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போ என சொல்லிவிட்டு, பனியனுடன், மறுபடியும் வீட்டுக்கு வந்து வேறு சட்டை அணிந்து வேலைக்கு போனேன். என்னை பனியனில் பார்த்த அனைவரும் என்ன செய்தி என கேட்டனர், விஷயத்தை சொன்னவுடன், கதை வேறு விதமாக திரிக்கப்பட்டு எனக்கும் அவளுக்கும் ஒரு இது என நான் வேலை செய்த இடத்தில் பேசப் பட்டது. அதனால இப்படி அதிரடியா களத்துல இறங்குறத அன்னைல இருந்து நிறுத்தீட்டேன்……..

**************************************************************************
ஒரு நாள் கிழக்கு கடற்கரை சாலையில மனைவி, மகளுடன் கார்ல போகும் போது, அப்பத்தான் தென் ஆப்பிரிக்க வாசம் முடிந்து வந்ததால, அங்க கார் ஓட்டுன பழக்க தோசத்துல, ரோடு நல்லாருக்குதேன்னு நினைச்சுகிட்டே, ஒரு அழுத்து அழுத்த, அந்த தக்ஷின் சித்ராவுக்கு பக்கத்துலன்னு நினைக்குறேன். ஒரு காவல நண்பர், குழாய் மாதிரி என்னத்தையோ ஒண்ணை கையில புடிச்சுகிட்டு என்னையே உத்துப் பாக்கறது தெரிஞ்சுது. அவுருக்கு பக்கத்துல ஒரு அதிகாரி பைக்குல உக்கார்ந்துகிட்டு பேப்பர் படிச்சுகிட்டிருக்காரு, ஒரு ஜீப்பு வேற நிக்குது. ஆஹா, மாட்டிகிட்டமடான்னு வேகத்தை குறைக்கறதுக்குள்ள அவுரு கையைக் காட்ட, வண்டிய சரியா அவுரு கிட்டவே நிறுத்தினேன். கைய காமிச்சவரு சுத்தி வர்றதுக்கும், நான் கண்ணாடிய இறக்கறதுக்கும் சரியா இருந்துச்சு, என்னப் பார்த்தவரு, என்ன ஏதுன்னு கூட கேக்காம, ஒரு வினாடி என்னை ஏற இறஞ்க பார்த்துட்டு, “என்ன சார், டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களே இப்படி பண்ணா எப்படி சார், கொஞ்சம் மெதுவா போங்க சார்” னு சொல்லீட்டு, பதிலுக்கு கூட காத்திராமல் அடுத்த வண்டிய பார்க்க கிளம்பீட்டார். என்ன நடந்ததுன்னே தெரியல, நானும் வண்டிய எடுத்துட்டு கிளம்பிட்டேன். அப்புறமா தான் தெரிஞ்சுது, அன்னைக்கு காலைல தான் தலை முடி வெட்டுனப்ப நல்லா குறைச்சு வெட்டுப்பான்னு சொல்லி நறுக்குன்னு வெட்டியிருந்தேன். நம்ம சிகைஅலங்காரத்தப் பார்த்துதான் அவரு டிப்பார்ட்மெண்ட் ஆளுன்னு நெனச்சுட்டாருங்கறது புரிஞ்சதுக்கப்புறம், டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களாட்டம் முடி வெட்டிக்கறத நிறுத்தீட்டேன்……..