Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Monday, August 2, 2010

சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு......

ஞாயிற்றுக் கிழமை, விடுமுறை நாள்.

கொஞ்சம் தாமதமாகவே எழுந்து, குளித்து, டிபன் சாப்பிட்டு, இன்னும் மடிப்புக் கலையாத ஹிண்டு பேப்பரை கையிலெடுத்து விட்டு, சோபாவில் சாய்ந்து அமர்ந்து, டீ கப்பை டீபாயில் வைத்து விட்டு பேப்பரை பிரித்தார். வீட்டுக்கு வெளியே காலையிலேயே பையன்கள் கிரிக்கெட் விளையாடும் சத்தம் கேட்டது. பேப்பரை விரித்து கண்களை ஓட விட்டவருக்கு, அந்த சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்டது.

கீச், கீச் சென இரண்டு குருவிகள், பால்கனியின் கிரில் கம்பிகளில் அமர்வதும், விசுக்கென திரும்புவதும், ஒன்றையொன்று பார்த்துக் கொண்டு கத்துவதும், பறந்து வந்து பால்கனியில் இருந்த ஷூ ஸ்டேண்டின் கீழே அமர்ந்து, கழுத்தை சாய்த்து, ஆராய்ச்சி செய்வதும், மறுபடியும் கிரில், கீச் கீச், உடனே அடுத்த குருவி, அதே ஆராய்ச்சி, கிரில், கீச், கீச். இப்பொழுது இரண்டு குருவிகளின் பார்வையும் மேலே இருந்த வெண்டிலேட்டர் திறப்பில் பட, விர்ரென பறந்த ஒரு குருவி, அங்கும் ஆராய்ச்சி செய்து மறுபடியும் கிரில், கீச் கீச். இப்பொழுது அடுத்த குருவி, அதே ஆராய்ச்சி, கிரில் கீச் கீச்.

இரண்டையும் உன்னிப்பாக கவனித்தார் சிவராமன். ஆணும் பெண்ணுமாக வீடு கட்ட இடம் பார்க்க வந்திருக்கிறார்கள். அவைகளின் ஆராய்ச்சியையே கொஞ்சநேரம் பார்த்து விட்டு, கடவுளோட படைப்பு தான் எவ்வளவு அற்புதம் என மனசில் நினைத்தவராய் பேப்பரில் மூழ்கிப் போனார்.

அடுத்த நாள் காலை ஆபீசுக்கு போகையில் ஷூவை எடுக்க ஷூ ஸ்டேண்டுக்கு போனவர், அதை கவனித்தார். காய்ந்த புற்கள் சில ஷூ ஸ்டேண்டுக்கு அடியில். சரி கூடு கட்ட ஆரம்பித்து விட்டதோ என யோசித்து மேலே வெண்டிலேட்டர் பக்கம் பார்த்தால், ஒரு கற்றைப் புற்கள் இன்னும் வடிவம் பெறாமல் குவித்து வைக்கப் பட்டிருந்தது. சரி, வீடு கட்ட ஆரம்பிச்சுருச்சுன்னு நினைச்சுகிட்டே அன்றைய நாளை தொடங்கப் போனார்.

“ஏங்க, பெரியவள அவ ஆபீஸ்ல விட்டுட்டு போயிருங்களேன்”

“ஏன், மலரு இன்னைக்கு லேட்டா, என்னாச்சு?”

“தலைக்கு தண்ணி குளிச்சு, அவ காய வைக்கறதுக்கே ரெண்டு மணி நேரம் பண்ணுவா”

”சரி, சரி. லேட்டாக்காம வரச்சொல்லு” என்றபடியே காரின் கதவைத்திறந்து தன் பையை பின்சீட்டில் வைத்தார்.அவசர அவசரமாக செருப்பை போட்டுக் கொண்டு கைப் பையை தோளில் மாட்டிய பெரியமகள் மலர்விழி, ஒரு சாஃப்ட் வேர் கம்பெனியில் வேலை செய்கிறாள். ஈரக் கூந்தலை விரித்துப் போட்டபடியே ஓடி வந்த மகளை நோக்கி, “ஏய், மலரு, இந்தா உன் செல் போனு” என நீட்டியபடியே அம்மாவும் ஓடி வந்தாள். ஒரு நொடி நின்று செல்போனை வாங்கிக் கொண்டு கார்க்கதவைத் திறந்து, முன்சீட்டில் அமர்ந்தாள். ”போலாம்மாம்மா”, ”ம் போலாம்ப்பா” என்றவாறே, கண்ணாடி வழியாக அம்மாவுக்கு டாட்டா காட்டினாள்.

அன்று சாயந்திரம் ஆபீஸிலிருந்து வந்தவர் ஷூவை வைக்கப் போகும் போதும் பார்த்தார், இன்னும் அந்த வெண்டிலேட்டர் பக்கத்தில் புற்கள் கூடி இருந்தது. பாவம் சுவற்றில் ஒரு பிடிப்பு கிடைக்கவில்லையோ என்னவோ என எட்டிப் பார்த்தவருக்கு ஆச்சரியம். ஆணும் பெண்ணும் உடலைக் குறுக்கிக் கொண்டு அந்த வெண்டிலேட்டர் திட்டில் அமர்ந்திருந்தன. ஒரு புன்னகையுடன் உள்ளே போனவர், சின்ன மகளிடம், ”கவிதா உன் ஷூ பெட்டி ஒரு அட்டைப் பெட்டி இருந்ததே அது எங்கம்மா”
”மேல கெடக்குப்பா”

”அத எடுத்துட்டு ஒரு கத்தியும் எடுத்துட்டு வா”

பிளஸ் டூ படிக்கும் சின்ன மகள் தந்த அட்டைப் பெட்டியை வெட்டி ஒரு துவாரம் பண்ணி, ஒரு கூடு போல செய்து அதற்கு உள்ளே ஒரு சிறிய துண்டுத்துணியை மடித்து மெத்தை போல வைத்து பால்கனியில் ஷூ ஸ்டேண்டை நகர்த்தி ஒரு ஓரமாக வைத்து விட்டு, இந்த பெட்டியில் சிறிது அரிசியை போட்டு, ஒரு மூலையில் வைத்தார். இரண்டே நாட்களில் அதற்குள் வட்ட வடிவில் அளந்தெடுத்தாற்போல் புற்களால் செய்த ஒரு கூடு கட்டி கணவனும் மனைவியும் குடி வந்தார்கள்.

தினமும் கீச், கீச்சென்ற சத்தமும், கிரில் கம்பியில் உட்கார்ந்து அலகோடு அலகு உரசி ஒரே சந்தோஷக் குலாவலுமாக இருந்த அந்த தம்பதிகளை குடும்பமே நேசிக்க ஆரம்பித்தது, சின்னவள் கவிதாவுக்கு, தினமும் அந்த கூட்டுக்கு பக்கத்தில் ஒரு டப்பாவில் தண்ணீர் வைப்பதும், அரிசி வைப்பதுமே ஒரு சந்தோஷமான பொழுது போக்காகிவிட்டது. சில நாட்களில் கவிதாதான் அதை முதலில் பார்த்தாள்.

“அம்மா, கூட்டுக்குள்ள ரெண்டு முட்டை இருக்குதும்மா”

“ஏய், அந்த முட்டையை தொடாதே, பாவம் அந்த குருவிங்க”

தொடர்ந்து ஒரு குருவி அடைகாக்க ஒரு குருவி இரை கொண்டு வருவதுமாக, மாறி மாறி நிறைய வாழ்வியல் தத்துவங்களை அந்த இரண்டு பறவைகளும் இந்த குடும்பத்துக்கு போதித்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் காலையில், “அம்மா, இங்க வந்து பாரேன், ரெண்டு சின்ன குஞ்சுகம்மா”

அம்மா குருவியின் வயிற்றுக்குக் கீழிருந்து இன்னமும் இறகு முளைக்காத மொட்டைத்தலையுடன் அலகுகளை விரித்த வண்ணம், ச்ச, ச்ச என்ற விநோத ஒலி யெழுப்பிக் கொண்டு அந்த இரண்டு புதிய உயிர்களும் தலையை நீட்டிக் கொண்டு நின்றது. கவிதா, பக்கத்தில் போனதும், தாய்க்குருவி குய்யோ முறையோன்னு சத்தம் போட ஆரம்பித்தது, தனது இறகுகளை விரித்து, இரண்டு குஞ்சுகளையும் இறுக்கமாக அணைத்துக் கொண்டது.

“ஏய், கவிதா, அது பக்கத்துல போகாதடி, அதுதான் பயப் படுதில்ல, போய் கொஞ்சம் அரிசி கொண்டுவந்து போடு”

அரிசியை தூரத்தில் இருந்தே போட்டதும் பக்கத்தில் விழுந்த ஒரு தானியத்தை எடுத்து, தனது சிறிய அலகால் கொத்தி, அதை பொடியாக்கி, ஒரு சிறிய துணுக்கை எடுத்து தாய்க்குருவி குஞ்சுகளுக்கு ஊட்டியது. பார்க்க பார்க்க பரவசமாயிருந்தது.

தினமும், குஞ்சுகளின் வளர்ச்சியை அளவெடுப்பது கவிதாவுக்கு தொழிலாகி விட்டது. சில நாட்களில் குஞ்சுகளும் தாய்க்குருவியைப் போல் கத்துவதும், அம்மாவின் அணைப்பிலிருந்து வெளிவந்து கூட்டுக்குள் விளையாடுவதும் பார்க்க பார்க்க கொள்ளை அழகாய் இருந்தது.

சில நாட்களில், குஞ்சுகள் இரண்டையும் தனியே விட்டு விட்டு, தாய்க் குருவியும் இரைதேட வெளியே போய் விட்டது. குஞ்சுகளுக்கும் இறகுகள் வளர்ந்து அழகாய் சிறகடிக்க ஆரம்பித்தது. இரவில் நான்கு உயிர்களும் ஒன்றாய் அந்த சிறிய புல் வட்டத்தில் உடலைக் குறுக்கி படுத்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும்.

மலர் விழி ஆபீஸில் எதோ பார்ட்டியாம், லேட்டா வருவேன்னு போன் செய்தாள். நேரம் ஆக ஆக சகுந்தலாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை, “ஏங்க, எதுக்கும் ஒருதரம் போய் பார்த்துட்டு வந்துருங்களேன்”
”ஏம்மா, அவ என்ன சின்ன குழந்தையா, பார்ட்டி முடிஞ்சதும் அவளா வருவா” என்று சொல்வதற்கும், மலர்விழி காம்பவுண்டு கேட்டை திறந்து வருவதற்கும் சரியாய் இருந்தது. ஒரு அவசரத்தோடேயே கேட்டை பூட்டியவள், அவசரமாக செருப்பை கழட்டி விட்டு, அவசரமாகவே ரூமுக்குள் ஓடினாள். சிறிது நேரத்தில் கவிதா வந்து “அக்கா, பார்ட்டிலயே சாப்ட்டுட்டாங்களாம், சாப்பாடு வேண்டாமாம், தலைவலியா இருக்குன்னு படுத்துட்டாங்க” என்றாள்.

கொஞ்ச நாள் கழித்து, வேறு ஒரு ஞாயிற்றுக் கிழமையில், காலையில் 6 மணிக்கே வீட்டில் விசும்பல் சத்தம். சோபாவில் அமர்ந்திருந்த சகுந்தலா சேலையை சுருட்டி வாயில் வைத்தபடி விம்மிக் கொண்டிருந்தாள்.
கவிதாவின் கையில் ஒரு வெள்ளை காகிதம்.
“அப்பா,

இதை உங்களிடம் சொல்லி, அனுமதி பெற மனது துடித்தது உண்மைதான். நீங்களும் என் விருப்பத்திற்கு குறுக்கே நிறக் மாட்டீர்கள் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால், நவீனின் வீட்டில் எனக்கு வாய்த்தாற்போல் புரிந்து கொள்ளும் பெற்றோர் இல்லை. ஆகவே தான் இந்த முடிவுக்கு வந்தோம்.

நவீன் நல்லவர். இருவரும் இணைய முடிவெடுத்து விட்டோம். அதற்காக உங்களை உதறிச் செல்கிறோம் என நினைக்காதீர்கள். சீக்கிரத்தில் உங்களோடு இணைய வருவோம். இணைவோம்.

கண்டிப்பாக ஆசீர்வதிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

மலர்விழி.”

மெதுவே எழுந்து பால்கனிப் பக்கம் போய், வானத்தை வெறித்துக் கொண்டிருந்தார். அப்பா, கோபப் படுவாரோ, கத்து கத்தென கத்தித் தீர்ப்பாரோ என எதிர்பார்த்திருந்த கவிதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. பாதகி, இப்படிப் பண்ணீட்டாளே, இனி இருக்கிற இன்னொன்றை எப்படி கரை சேர்ப்பது என நினைத்த சகுந்தலாவின் விம்மல் பெரும் அழுகையாக வெடித்தது. எதுவுமே பேசாமல் நிற்கும் கணவனை பார்க்க ஆத்திரமாய் வந்தது.

“அப்பிடியே நிக்கறீங்களே, எதாவது பண்ணுங்களேன்”

குருவிக் கூட்டை பார்த்தார் சிவராமன், ஆண்குருவியும், பெண்குருவியும் மாத்திரம் அரிசியை கொத்திக் கொண்டு இருந்தது. குஞ்சுகளை காணவில்லை.

புரிந்தது போல சோபாவில் வந்தமர்ந்தவர் சொன்னார்,

“சகுந்தலா, குஞ்சுகளுக்கு சிறகு முளைச்சிருச்சு, அதான் வானம் பார்க்க போயிருக்கு, திரும்பவும் வரும், அதுக வீடு தேடி வரும்”

Tuesday, June 15, 2010

செவலக் காளை

பொழியில மொளை அடிச்சுக் கட்டியிருந்த கவுத்த அவுத்துகிட்டு, அடுத்த வயல்ல மேயப் போன செவலக் காளய பாத்து,

ஹோய், த்தா, த்தா, ஊச், போ அந்தள்ளைல என தூரத்துல நின்னே அதட்டுனா தாயம்மா கெளவி, அப்படியும் கேக்காம பக்கத்துக் காட்டுல வெளஞ்சிருந்த தட்டப் பயத்துச் செடிய மேயப் போனதும், வந்த கோவத்துல கையிலிருந்த அருவாளை வீசியூட்டா பாருங்க, அது காத்துல எதோ சங்குச் சக்கரம் சுத்தறாப்புல சுத்தீட்டு வந்து சரியா பின்னந்தொடைக்கு மேல ஒரு கீறு கீறீட்டு கீழ உளுந்துது. மாட்டுத் தோல் கிளிஞ்சு பொல பொலன்னு ரத்தம் வரவும், மாடு மிரண்டு போய் திரும்பி வந்து பொழி மேல நின்னுட்டு ரத்தம் வந்த இடத்துல வாலை சொழட்டி சொழட்டி அடிச்சுது. வால் மசுறுலெல்லாம் ரத்தம் பட ஆரம்பிச்சுது. தாயம்மா ஓடி வந்து, சனியனே, இங்க இத்தனை இருக்குதே இதைத் திண்ணேன், அடுத்தவிய வெள்ளாமைல போய் ஏன் வாய வெக்கறேன்னு திட்டி கிட்டே, மண்ணை எடுத்து காயத்துமேல அப்பியுட்டா, கொஞ்ச நேரத்துல ரத்தம் வர்றது நின்னு போச்சு, தாயம்மாளுக்கும் கொஞ்சம் மனசு நெகுந்தாப்புல இருந்துச்சு, பாவம் வாயில்லா சீவனுக்கு என்ன தெரியும், இப்புடி பண்ணிப் போட்டமேன்னு, மாட்டை கொஞ்சம் தடவிக்குடுத்தா, வெட்டுப்பட்ட காயம் தந்த வலி, தாயம்மாளோட இதமான தடவல்னு மாட்டுக்கு ஒண்ணும் புரியாம தலையை சிலுப்பீட்டு பொழி மேலயா நின்னுச்சு. மொளைல கட்டீருந்த கவுத்த அவுத்துட்டு மாட்டைக் கூட்டி வந்து சாளையோரமா இருந்த தென்னை மரத்துல கட்டி ,அதுக்கு தண்ணி வெச்சுட்டு, சாளைல இருந்த கயித்துக் கட்டல்ல உக்கார்ந்து, தான் செஞ்சத நினைச்சு வருத்தப் பட்டுகிட்டா, சுத்திக் கட்டீருந்த முந்தானையை அவுத்து வேர்வையை தொடச்சுகிட்டே செவலக் காளையவே பாத்துகிட்டு சித்த நேரம் உக்கார்ந்திருந்தா.

தாயம்மா—

அந்த கந்தம் பாளையத்துக்கு அவ கல்யாணமாயி வந்த நாள்ல இருந்து அவளை எல்லாரும் தாயம்மான்னு தான் கூப்புடறாங்க. அவிய அப்பனாத்தா வெச்ச கொழந்தைம்மாங்கற பேரு யாருக்குமே வாயில வர்றதில்லை. செங்கோட கவுண்டரு தாலி கட்டி கூட்டியாந்த நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் தாயம்மா சீரும் செனத்தியுமாத்தான் வாழறா. செங்கோட கவுண்டருக்கு பாகத்துல வந்த எட்டு ஏக்கர் நெலம், அவுருக்கு வாழ்க்கைப் பட்டதுக்கு மூணு பொம்பளைப் புள்ளயும் ஒரு ஆம்பளையுமா நாலு கொழந்தைகன்னு நல்லாத்தான் போயிட்டிருந்தது.

கோடாலிக் கொண்டையும், கழுத்துல தொங்கற அட்டியும், அரை வெரல் மொந்தத்துல தாலிக் கொடியும் போட்டுட்டு, பின்னால கொசுவம் வெச்சு கட்டுன சீலையோட முந்தானைய சும்மாடு கட்டி, தலைல வெச்சு அதுல ஈர்க்கூடைல சாப்பாட்டுப் பாத்திரமும் வெச்சு தாயம்மா செங்கோட கவுண்டருக்கு சாப்பாடு கொண்டு போறதை பாக்கறதுக்கு ஊர்வழித் தோட்டத்தோரமா ஊர்ச்சனமே கூடி நிக்கும். இல்லைன்னு வந்த ஒருத்தரையும் வெறுங்கையோட அனுப்பவே மாட்டா, ஒரு வள்ளம் அரிசின்னாலும், ஒரு வேளை சோறுன்னாலும் அவிய போதும்னு சொல்ற வரைக்கும் குடுத்துத்தான் அனுப்புவா, தோட்டத்துல வேலை செய்யற கூலிக்காரங்க ஏழை பாழைக வீட்டுல விஷேஷம்னா எதோ இவிய ஊட்டு விசேஷமாட்ட அத்தனையும் செய்வா தாயம்மா. நெல்லு நாத்து நடவுக்கு சீலைய தூக்கி கட்டீட்டு சேத்துல இறங்குனா, மளமளன்னு நட்டுகிட்டே வருவா, நாலாளு வேலைய ஒரே ஆளா செஞ்சுபோட்டு சளைக்காம நடப்பா.

மொதல்ல பொறந்தவ கனகா, சாலைத்தோட்டத்து முருகையனுக்கு கட்டிக் குடுத்துறுக்குது. ரெண்டாவதா லட்சுமி, மிசுனுதறிக் கவுண்டர் பையனுக்கு குடுத்துது. மூணாவதா மரகதம், பழனிக் கவுண்டர் பையனுக்கு குடுத்தது. நாலாவதா பொறந்தவந்தான் தங்கவேலு. மகனுக்கு சீமையெல்லாம் பொண்ணு பாத்து கடைசியில பக்கத்தூரு வாரப்பட்டியிலயே பொண்ணெடுத்தாச்சு. மருமகளும் ஒரு யோக லட்சுமிதான். பொறுப்பா இருந்து பண்ணயம் பாத்து பழகீட்டா, அவுளுக்கு பொறந்தது ஒரு பையனும் புள்ளயும். புள்ள பெரீவளாயிட்டு, பன்னெண்டாவது படிக்கறா, பையன் இப்பத்தான் பத்தாவது படிக்கறான்.

நாளும் பொழுதுமா செங்கோட கவுண்டரும் போயிட்டாரு, தங்கவேலனுக்கு சீக்கு வந்து அவுனும் அவுங்கப்பன் போன எடத்துக்கே போயிட்டான். மாமியாரும் மருமகளும் வெள்ளைச் சேல கட்டீட்டு ஒரே ஊட்லதான் இருக்கறாங்க.

மாட்டுக்கு ரெண்டு கை வைக்கப்புல்ல அள்ளிப் போட்டுட்டு, தாயம்மாளும் மாட்டையே பாத்துட்டு உக்காந்துட்டா, ஒருபக்கம் இத்தன கோவம் எதுக்குத்தான் வருதோ கருமம்னு நெனச்சாலும், இன்னொரு பக்கம், ஒருக்கா போட்டாத்தான் இதுக்கெல்லாம் புத்திவரும்னு நெனச்சுகிட்டா. கவுண்டரு இருந்தப்ப அடிக்கடி சொல்வாரு, தாயம்மா, உன்ர மூக்குத்திய கழட்டு, அதுல மூக்கணாங்கவுறு போடறேன். அந்தக் கவுறு இருந்தாத்தேன் உண்ணய கையில புடிக்க முடியும்பாரு.

கவுண்டர் நெனப்பு வந்தொடனயே தாயம்மா கண்ணு லேசா நீர்கட்டுனாப்புல ஆயிருச்சு. எப்புடி இருந்த மனுஷன், மசையன்னா மசையந்தான். தூணு கணக்கா காலும், மைதானமாட்டா நெஞ்சும், வண்டி நொகமாட்ட கையும், கன்னம் நிறைய முறுக்கு மீசை வெச்சுட்டு, ஆளு உருமாலை கட்டீட்டு வந்தாருன்னா, காத்து கூட கொஞ்சம் தள்ளி நின்னுதான் போகும். ஒரு சூது வாது தெரியாது, ஒருத்தருகிட்ட ஒரு வம்பு தும்புக்கு போக மாட்டாரு. எந்நேரமும் தோட்டமுண்டு, தானுண்டுன்னுதான் இருப்பாரு. மனுஷன் ஏர்ப்புடிச்சா அந்தக் கொனைலிருந்து இந்தக் கொனைவரைக்கும் நூலு கட்டுனாப்புல ஒரே கோடாப் போகும். அதென்னமோ, செங்கோட கவுண்டரு சாமி கும்புட்டுட்டு ஒழவு ஓட்டுனாருன்னா, அந்த போகம் சும்மா வெள்ளாமை கிண்ணுன்னு வெளயும். பங்காளிக பசங்கெல்லாம் வந்து, ஒழவு ஓட்டறண்ணைக்கு அவிய தோட்டத்துல இவரத்தான் மொத ஏர் புடிக்கச் சொல்லுவானுக. இவுரும் சித்த நேரம் ஓட்டிக் குடுத்துட்டு, இனி நீங்க ஓட்டுங்கடான்னுட்டு வருவாரு.

கொஞ்ச நாளாவே கவுண்டரு ஒரு போக்காத்தான் போயிகிட்டிருந்தாரு, தாயம்மா கருவாடும், கத்திரிக்காயும் போட்டு கொளம்பு வெச்சா வட்டலைக் கூட சுத்தமா நக்கீட்டு திங்கற ஆளு, இப்பல்லாம் சோத்துக்கு நேரத்துக்கு வர்றதில்லை. வந்தாலும் பேருக்கு இத்தனே திண்ணுட்டு திண்ணைல படுக்கறாரு, எத்தனை சண்டை வந்தாலும் அதெல்லாம் பொழுது சாயற வரைக்குந்தான், ராத்திரிக்கு தாயம்மாளும் கவுண்டரும் தனிய படுத்தது கிடையாது. ஒரு சில நாளைக்கு தக்காளிச் செடிக்கோ, வெண்டைக்காய்க்கோ ராத்திரில தண்ணி உடோணுமின்னாலும், கவுண்டர் ராத்திரி சோத்துக்கப்புறம் போயிட்டு நடு ராத்திரின்னாலும் திரும்பி வந்து ஊட்லதான் தூங்குவாரு, இப்பல்லாம் தோட்டத்து சாளைல தூங்கறாரு. ரெண்டு மாசமா பால் சொசைட்டிலிருந்து பால் காசு வேற வர்ல, ஒரு நாளு தாயம்மா போயி கேட்டதுக்கு அதெல்லாம் கவுண்டர் வாங்கீட்டுப் போயிட்டாருன்னாங்க, கவுண்டர்கிட்ட கேட்டா செலவாயிடுச்சுன்னு சொன்னாரு, தாயம்மாளுக்கு பொறி தட்டீருச்சு. கள்ளுக் குடிக்கற பழக்கமிருக்குதுன்னாலும் அதெல்லாம் சோட்டுக் காரங்களோட, தென்னந்தோப்புலதான் குடிப்பாரு, கடைக்குப் போற வழக்கமில்லை. எங்கியாவது சீட்டாடப் பழகீட்டாரோன்னு தாயம்மாளுக்கு ஒரு கவலை வந்துது.

மாரியாத்தா கோயில்ல நோம்பி சாட்டி, கொடி மரம் கட்டீட்டாங்கோ. ஊரே திருவிழா கோலத்துல முசுவா இருக்குது. இன்னைக்கு ராத்திரி “பவளக் கொடி” நாடகம் போடறதுக்கு டவுனுல இருந்து ஆளுங்கெல்லாம் வந்துட்டாங்கம்மான்னு தங்கவேலான் சொல்லீட்டு ஓட்டமா ஓடறான். பெரிய புள்ள கனகாவும் மாப்பிள்ளயும் நோம்பிக்கி வந்துருக்கறாங்க. அப்ப அவுளுக்கு மட்டுந்தான் கலியாணம் ஆயிருக்குது. சின்னவுளுக ரெண்டு பேரும் அப்பத்தான் தாவணி போடற வயசு. தங்கவேலு ஆறாவது படிக்கறான். மாப்பளைக்கு புது வேட்டி சட்டை வாங்கியாறென்னுட்டு சிவாலிங்க செட்டியாரு கடைக்கு போனவரு ஆள இன்னமும் காணமேன்னு தாயம்மா தவிக்கறா. கனகா மாப்புளயும் கனகாவும், தங்கச்சிகளொட சேந்து நாடகம் பாக்கப் போயிட்டாங்க. தங்கவேலான் அவிய கூட்டுப் பசங்களோட போயிட்டான். தாயம்மா மாத்திரம் தனியா இருந்தா, திடீர்னு ஒரு நெனப்பு வந்து செட்டியார் கடைல போயி கேட்டா, செட்டியாரு சந்தனப் பொட்டு வெச்சுட்டு கடையில இருந்தவரு,

“என்ன தாயம்மா, பெரிய மகளும் மாப்பளயும் நோம்பிக்கு வந்தாங்களாக்கும்”

“ஆமாங்கையா, கவுண்டரு துணி எடுக்கறேன்னுட்டு வந்தாருங்களே”

“மருமகனுக்கு வேட்டி துண்டு எடுத்திருக்காரு, உங்களுக்கும் சீல வாங்கிட்டு அப்பளயே போனாரே”

சரின்னுட்டு வந்தவளுக்கு, மனசுக்குள்ள கருக்குன்னுச்சு, எனக்கு சீல வாங்கறத சொல்லவே இல்லயே, என்ன மனுஷன் இவுருன்னு ரோசன பண்ணீட்டு போகயில, நட்ராசு குறுக்க வந்தான். “என்ன தாயம்மா, கருக்கல்ல எங்க போறீங்க, ஊரே நோம்பி கும்புடுது, நீங்க எங்க இந்நேரத்துல”

“நட்ராசு, பெரீப்பன பாத்தியா”

“ஆமா, துணிக்கடை பைய கக்கத்துல இடுக்கீட்டு, கெழக்க போனாரு, சரி, காலைலயே சாணான் தென்னங்கள்ளு எறக்குனானே, செட்டுக்காரங்கெல்லாம் தென்னந்தோப்புல உக்காந்து இன்னைக்கு ரெண்டு பானையும் முடிச்சுட்டுதான் கோயலுக்கு வருவாங்களோன்னு நெனச்சேன்”

“அப்பிடியா செரி செரி நீ போ”ன்னுட்டு நேரா தோப்புக்கு போனா, அங்க அப்பிடி எதுவும் நடக்கல, அப்புறம் எங்க போனாருன்னுட்டு திலும்பனப்போ, தோட்டத்து சாளைல லேசா ஒரு வெளிச்சம். கதவு தெறந்து மூடுனாப்புல இருந்துது. தாயம்மாளுக்கு அது சரியாப்படுல. மெல்ல சத்தமில்லாம சாளைப் பக்கத்துல போனா, முன்னால வழியா போகாம, கெணத்தைச் சுத்தீட்டு பின்னால வழியா போனா, உள்ள ராந்தலு வெளிச்சம் இருக்கறது கண்ணுக்குத் தெரியுது. பேச்சுச் சத்தம் கேக்குது. கூடவே வளையல் சத்தமும். யாருன்னு பாக்கோணுமின்னு சத்தமில்லாம பின்னால வந்து செவுத்துல பாதி ஒசரத்துக்கு ரெண்டு கூடையப் போட்டு அதுமேல ஏறி, வெட்டுக்கை சந்துல பாத்தா.

கவுண்டரு கயித்துக் கட்டல்ல மல்லாக்க படுத்திருக்க, அவுரு நெஞ்சுமேல பால்கார சிவகாமி ஏடாகூடமா பரவிப் படுத்திருந்தா. பகீர்னுச்சு தாயம்மாளுக்கு, இப்பவே அவீயல ரெண்டு பேர்த்தையும் வகுந்தறலாமான்னு கோவம் வந்துச்சு. சத்தமில்லாம இறங்குனா, மனசுல ஒரு முடிவு எடுத்துட்டு, மறுபடியும் கெணத்தச் சுத்தி வந்து கூடை எங்க இருந்ததோ அங்கயே வெச்சுட்டு இருட்டுல உக்காந்திருந்தா. கொஞ்ச நேரங் கழிச்சு சிவகாமி மாத்திரம் முந்தானையை இழுத்துச் சொருகீட்டு போறதப் பாத்தா, அவ கையில புதுச் சேலை. அப்புறமா கவுண்டரு வந்தாரு…….

பவளக் கொடி நாடகம் படு தமாஷா நடந்துச்சு. பொம்பள வேஷம் போட்டவன் நெஞ்சுல ரெண்டு லப்பர் பந்தை வெச்சுட்டு வந்தான். ஊரே உக்காந்து சிரிக்குது. தாயம்மாளும் வந்து புள்ளைக பக்கத்துல உக்காந்துட்டா. நாடகம் பாக்கற முசுவுல அம்மா வந்ததயே புள்ளைக கவனிக்கல. அத்தன சிரிப்புக்கு நடுவுல திடீர்னு திரும்புன கனகா, தாயம்மாளப் பாத்து எப்பம்மா வந்தேன்னு கேக்க, நானு அப்பவே வந்துட்டேன், நீங்கதான் என்னை கவனிக்கலேன்னு சொன்னா, நாடக தமாஷுல மனசு ஒட்டி இருந்ததாலயும், அங்க மேடைல மட்டுந்தான் வெளிச்சம் இருந்ததாலயும், அந்த கொற வெளிச்சத்துல தாயம்மா மொகம் இறுகிப் போயிருந்ததை கனகா கவனிக்கல.கொஞ்ச நேரத்துல தாயம்மா கனகாகிட்ட, கனகு அய்யாவை பாத்தியான்னு கேட்டா, இல்லம்மா அய்யா எங்கியாவது உக்காந்திருப்பாரு பாருன்னு சொன்னா, அன்னைக்கு பொழுதன்னக்கும் நாடகம் நடந்துச்சி. கோழி கூப்படறதுக்கு சித்த முன்ன எல்லாரும் ஊட்டுக்கு போனாங்க. அப்பவும் கவுண்டரு ஊட்டுக்கு வரல. புள்ளைக எல்லாம் படுத்து தூங்கீட்டாங்க, தாயம்மாளும் தூங்கப் போனா, ஆனா மனசுக்குள்ள அந்த நெனப்பே வந்து தூக்கத்தை தொரத்துது….

காலைல வெளிச்சுனு ஆன ஒடனே, நடராசு ஓடியாந்தான், தாயம்மோவ், தாயம்மோவ்னு மூச்சு வாங்குனான்,

என்ன நட்ராசு, சொல்லு, சொல்லுப்பா

பெரீப்பன், பெரீப்பனங்கே கிணத்து மேட்டுலன்னுட்டு அழுதான்.

அய்யோ என்னாச்சு உங்க பெரீப்பனுக்குன்னுட்டு தாயம்மா, கனகா எல்லாரும் ஒரே பாய்ச்சலா ஓடுனாங்க, அங்க கெணத்து மேட்டுல குத்துக்கல்லுல தல பட்டு செங்கோட கவுண்டரு குப்புறக் கெடந்தாரு. அவுரு தலயிலிருந்து ரத்தம் வழிஞ்சு மண்ணை நனைச்சுருக்குது. கொஞ்ச தூரந்தள்ளி அந்தள்ளைல மருமகனுக்கு வாங்குன வேட்டியும் சட்டையும் மஞ்சப் பைக்குள்ள கெடந்தது.

அன்னைக்கு வெள்ளச் சீல கட்டுனவதான் தாயம்மா, இதா இப்பவும் அப்பிடியே அந்த கெணத்து மேட்டப் பாத்துட்டு உக்காந்திருக்கா,

பேரன் சின்னக் கண்ணான் வந்து “ஆத்தா, ஏன் மத்தியான சோத்துக்கு வல்லியாமா, அம்மா கேட்டுது”ன்னு சொல்லீட்டு, மாட்டைப் பாத்தான்.

“ஆத்தா, அதென்னாத்தா செவலக் காளைக்கு தொடையில வெட்டுக் காயம்??”

“அது பக்கத்து தோட்டத்துல வாய் வெச்சுது, அருவாள வீசிப் போட்டுட்டேன் சின்னக் கண்ணா, அத அவுத்துட்டு வா, ஊட்டுக்குப் போலாம்”னு சொல்லீட்டு, நாலு பருத்திமார எடுத்து ஒரு செமையாக் கட்டி தலைல வெச்சுட்டு முன்னால நடந்தா.

நடக்கைல மாட்டோட காயத்தைப் பாத்துட்டு மனசு கேக்காம பேரன் கேட்டான்.

“ஏனாத்தா, அது வாயில்லா சீவன், அதுக்கென்ன தெரியும், அதப் போயி அருவால்ல வெட்டீட்டியே, பாவம்”

தாயம்மா, நின்னு திரும்பி பாத்து நிதானமா சொன்னா “பேராண்டி, ஒண்ணு மாத்திரம் நல்லா கெவனம் வெச்சுக்கோ, அடுத்தவிய ஊட்டுல வாய வெச்சா, அது மாடாருந்தாலுஞ் செரி, மனுஷனாருந்தாலுஞ் செரி, அப்பவே தீத்துப் போடோணுமுடோய்”

செவலைக் காளைக்கு என்னமோ புரிந்தது போல் தலய தலய ஆட்டுது.




Monday, April 12, 2010

ஒண்ணாம் நம்பர் பிளாட்பாரம்



தலையை சுற்றுவது போல இருந்தது தமிழரசிக்கு, ரெண்டு நாளா என்ன தின்னாலும் ஒரே வாந்தியா வருது. மருந்துக்கடை தாமு அண்ணங்கிட்ட மாத்திரை வாங்கி சாபிட்டாலும் வாந்தி நிக்க மாட்டேங்குது. சோர்ந்து போயி அவளோட இடத்துல வந்து உக்கார்ந்துட்டா, அவ இடம்னா அது அவளுக்கே சொந்தமான ஒரு குட்டி ராஜ்ஜியம். ஒண்ணா நம்பர் பிளாட்பாரத்துல இருக்கற ஓவர் பிரிட்ஜ் படிக்கட்டுக்கு கீழ ஒரு துணி மூட்டை, கீழ படுக்கறதுக்குன்னு விரிச்ச அட்டைப்பெட்டிகள், இதுதான் அவளோட ராஜ்ஜியம். 12 வயசுல பாட்டி கையை பிடிச்சுகிட்டே இந்த பிளாட்பாரத்துக்கு வந்தது. இதா, பாட்டியும் போயி சேர்ந்துட்டா, கண்ணு ரெண்டும் தெரியலைன்னாலும் தமிழரசி வாயத்தொறந்து பாடுனா, அப்படியே கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கும், ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்னு அவ பாடுனா, கையில பொல பொலன்னு காசு வந்து விழும். இதா அவுளும் வந்து 10 வருஷமாச்சு, இந்த பிளாட்பாரத்தை விட்டு எங்கயுமே போனதில்ல. தண்ணி பைப்புல தண்ணி புடிக்கவும், கக்கூஸுக்கு போகவும் அவ நடந்து போறதப் பாத்தா, அவளுக்கு கண் இல்லன்னு யாரும் சொல்ல மாட்டங்க. அவ வந்த புதுசுல ஒரு நாளைக்கு ஏழு ரயிலுத்தான் இங்க நிக்கும், இப்ப தினமும் இருவது ரயிலு நிக்குது, இவ பாட்டைக்கேட்டு காசும் நல்லா கிடைக்குது.

“என்ன தமிளு, உடம்ம்புக்கு சரியில்லையா” டீ விக்கற ரமேஷ் அண்ணன் கேட்டாரு,

“ஆமாண்ணா, ஒரே மயக்கமா வருது”.


“டீ குடிக்கறயா”


“வேண்டாண்ணா, எதை குடிச்சாலும் வாந்தியா வருது”


“சரி, சரி எதாவது மாத்திரை வாங்கிட்டு வரட்டா”


“இல்லண்ணா, தாமு அண்ணன் குடுத்தாரு, சாப்புடறேன்”

மாத்திரையை எடுத்து வாயில் போட்டு ஒரு வாய் தண்ணீர் குடித்தாள். இந்த ராமதாசு எப்ப வருவான், மூணு நாளாச்சு ஆளவே காணோம் என யோசித்தவளாக வலது கையை மடித்து தலைக்கு வைத்து படுத்துக் கொண்டாள்.

ராமதாசு – ஜங்ஷனில் போர்ட்டர். பேருக்குத்தான் போர்ட்டர். ஆனா அவன் தொழிலே பொட்டலம் விக்கறதுதான். ஜங்ஷன்ல பொட்டலம் கிடைக்கும்னு நிறைய பேருக்குத் தெரியும். அவுங்க வந்தா ராமதாசை தேடி, சரியா சிக்னல் குடுத்தாங்கன்னா, இவன் ரேட் பேசி, பொட்டலத்தை கை மாத்தறது மின்னல் வேகத்துல முடிஞ்சு போயிரும். அவன் சிவப்புச்சட்டையும், டவுசர் தெரிய மடிச்சுக் கட்டிய லுங்கியும், தலையில கட்டியிருக்கற துண்டும் பார்த்தா, இவனெல்லாம் ஒரு சின்னப் பையை கூட தூக்குவானாங்கறதே சந்தேகமாயிருக்கும். அவ்வளவு ஒடிசலான தேகம், பீடியும் கஞ்சாவும் இளுத்து உள்ள ஒடுங்குன கன்னம், ஈர்க்குச்சி மாதிரி கையும் காலும், பாதி நரைச்ச தலைமுடி, ஆணிக்காலை விந்தி விந்தி நடப்பான். அவன் எப்பவாச்சும் தான் பெட்டி தூக்குவான், மத்த நேரத்துல எல்லாம் பொட்டல வியாபாரம்தான். இந்த உடம்புக்குள்ள பொட்டலத்தை எங்க மறைச்சு வெச்சிருப்பான்னு தெரியாது, ஆனா கரக்டா கை மாத்துவான். பிளாட்பாரத்துல வண்டியில்லாம காலியா இருக்கற நேரத்துல நீங்க என்ன கோடி ரூவா குடுத்தாலும் அவங்கிட்ட இருந்து ஒண்ணும் பேராது. வண்டி வந்து நின்னு ஆளுங்க போகவும் வரவும் கூட்டமா இருந்தா நிமிஷத்துல வியாபாரத்த முடிச்சுட்டு, வேற வேலைக்கு போயிருவான். அவுனுக்கும் இந்த பிளாட்பாரத்தை விட்டா நாதியில்லை. அந்த காக்கிசட்டைக் காரரு கொண்டுவந்து குடுக்கற சரக்கை வித்துக் குடுக்கறதுல எதோ கொஞ்சம் துட்டு தேறுது. வெளியைல போயி அப்பப்ப சிக்கனு வருவல் புரோட்டான்னு சாப்டுட்டு வந்து பிளாட்பாரத்துலயே படுத்துக்குவான். போலீஸ்காரங்க எப்பவாச்சும் கேஸ் கிடைக்கலன்னா, வந்து இவனை இளுத்துட்டு போய் ஒரு மூணு நாள் உள்ள வெச்சு, அவுங்களே ஜாமீன்லயும் விட்டுருவாங்க. அவுங்க சொல்றபடி கேக்கணும் அவ்வளவுதான்.


மறுபடியும் வயித்தப் பொரட்டிகிட்டு வாந்தி வர்ற மாதிரி இருக்க தமிளு எந்திரிச்சி ஒக்கார்ந்து வாயை குவிக்க, வாந்தி வர்ற மாதிரி இருக்கு, ஆனா வர மாட்டேங்குது. ராமதாசு இருந்தாலாவது எதாவது பேசீட்டிருக்கலாம். எங்க போனானோ என நினச்சுகிட்டே மறுபடியும் படுத்துகிட்டா. ராமதாசு – நீ எங்க இருக்க………

பாட்டி செத்ததுக்கப்புறம், இவுளுக்குன்னு யாருமில்ல, குருட்டு பொண்ணா இருந்தாலும் லட்சணமாயிருப்பா, சிவப்புமில்லாம கருப்புமில்லாம ஒரு நிறம், காலைல மெட்ராஸ் போற வண்டி வந்ததும் 5 மணிக்கெல்லாம் எந்திரிச்சு, கக்கூசுக்குள்ள இருக்கற அந்த ரூம்ல போயி, குளிச்சுட்டு, கட்டியிருக்கற சீலை, ஜாக்கெட், பாவாடை எல்லாத்தையும் தொவச்சு எடுத்துட்டு வந்து காயப் போட்டுட்டு, தலை சீவி பொட்டு வெச்சுக்குவா. தினமும் குளிக்கறது பழகிப் போச்சு. குண்டா இல்லைன்னாலும் பூசுனாப்புல இருந்த உடம்பு அங்க இருந்த பலர் கண்ணுலயும் படத்தான் செய்தது. தனக்கு கண் இல்லைன்னாலும் தன்னைப் பாக்கறவங்க எப்படி பாக்கறாங்கங்கறது அவுளுக்கு எப்படித்தான் தெரியுமோ, கைத்தடியை எடுத்து ஒரு ஆட்டு ஆட்டுனான்னா, அவள பாக்கறவன் அவ்வளவுதான்.

ஒருநா, நல்ல மழை, பிளாட்பாரத்துல தண்ணியா கொட்டறப்போ, தமிழு படிக்கட்டுக்கு கீழ செவுத்துல சாஞ்சு உக்கார்ந்துட்டு இருந்தா, பக்கத்துல லொக்கு லொக்குனு இருமற சத்தம் கேட்டுது.

“என்ன தாசு, இப்படி இருமுற” ன்னு இவ கேக்க,


“என்னன்னு தெரியல தமிளு, ரெண்டு நாளாவே இருமலு குடலைப் பொரட்டுது” ன்னு சொல்லீட்டு பீடியை கடைசி இழுப்பு இழுத்துட்டு சுண்டி விட்டான்.


“அதான், இருமுறயில்ல, அப்புறம் எதுக்கு அந்த கிரகம் பீடிய குடிக்கற, அதத்தான் விட்டுத் தொலையேன்”


அவளை ஒரு தரம் திரும்பிப் பார்த்து விட்டு தலையை குனிந்து கொண்டான்.


“இந்தா, சூடா டீ இருக்குது குடிக்கறயா” என கேட்க, அந்த மழைக்கு டீயின் சூடும் சுவையும் அவனுக்கு இதமாயிருந்தது. இதற்கு முன் பலமுறை அவளை பார்த்தும், பேசியும் இருக்கிறானென்றாலும், இந்த உபசரிப்பு அவனை என்னவோ செய்தது.

“யேய், தமிளு, உன்னை இன்ஸ்பெக்டர் கூட்டியாரச் சொன்னாரு” ன்னு, கான்ஸ்டபிள் வந்து சொல்லவும், ராமதாசுக்கு புரிந்தது. இன்ஸ்பெக்டரு ஒரு வாரமா தமிழ் இருக்கற பக்கம் அடிக்கடி வந்து நிக்கறதும், அவளயே பாக்கறதுமா இருந்தப்பவே இவனுக்கு சந்தேகம் தட்டியது. ராமதாசு கேட்டான்.

“எதுக்கு?”

“டேய், நீ என்ன அவுளுக்கு வக்காலத்தா, வாயை மூடுறா”

“அவ வரமாட்டான்னு போய் சொல்லு போ”

“டேய், நீ என்னடா பெரிய பருப்பாட்டம் குறுக்க பேசுற, எத்துனன்னா மவனே ஒரேயடியா போயிருவ, எச்சக்கல நாயி” என அவனை கை வைக்க போனதும்,


“ஏய், செவப்பு சட்டை மேலயே கை வைக்கறயா” என இவன் சத்தம் போடவும், அங்கு நாலைந்து சிவப்பு சட்டைகள் வந்து “என்ன, என்ன பிரச்சனை, யோவ் அவன் சட்டைய விடுயா” என சொல்ல, நிலைமையை புரிந்து கொண்ட கான்ஸ்டபிள் பின் வாங்கினான். தமிழுக்கு எல்லாம் புரிந்தது, இன்ஸ்பெக்டர் எதுக்கு கூப்புடறான்னு புரிஞ்சது. நெஞ்சு திக்கு திக்குன்னு அடிச்சுகிச்சு.

ராமதாசு விரு விரு ன்னு ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட போனான். ஒரு அரை மணி நேரத்துல திரும்பி வந்தான். “ஏய், தமிளு, ஒண்ணும் பயப்படாத, சொல்ல வேண்டிய இடத்துல சொல்லீட்டுத்தான் வந்திருக்கேன். யாருக்கும் பயப்படாத”ன்னு சொல்லவும், தமிழுக்கு அழுகை அழுகையா வந்தது. இதுவரை உணராத நேசம், தனக்குன்னு பரிஞ்சுகிட்டு வர ஒரு உயிர் உலகத்துல இருக்குன்னு நினைச்சப்ப வர்ற சந்தோஷம், இந்நேரம் இவன் மாத்திரம் இங்க இல்லன்னா என்ன நடந்திருக்கும்னு நெனச்சா பயம் எல்லாமா சேர்ந்து மனசை என்னவோ செய்ய, அத்தனை உணர்ச்சிகளையும் ஒரே மழைநேரத்தில் அழுது தீர்த்தாள். அவ அழுவறதைப் பார்த்து, ராமதாசு இன்னும் பக்கத்துல வந்து, “த்தே, எதுக்கு சும்மா அழுகற, அதான் நான் எல்லாம் சொல்லீட்டு வந்துட்டேங்கறன்ல”

“இல்ல, இப்ப நீ இருந்ததுனால தப்பிச்சேன், இல்லைன்னா ….”

“ஒண்ணும் ஆகாது, சும்மா பொலம்பாத”

“தாசு, நீ எங்கயும் போவாத” என அவன் குரல் வந்த திசையை நோக்கி அவன் கைகளை பிடிக்க காற்றில் தேடினாள். கையை பிடித்ததும் இருவருக்கும் அது முதல் ஸ்பரிசம். ஒரு ஆணின் கையை பிடித்திருக்கிறோம் என அவள் உணர்ந்ததும், ஒரு பெண் தன் கையை பிடித்திருக்கிறாள் என இவன் உணர்ந்ததும் இருவருக்குள்ளுமிருந்து ஒரு பெருமூச்சு ஒரே சமயத்தில் வெளிப்பட்டது. தமிழுக்கு அந்த ஸ்பரிசம் கொஞ்சம் வெட்கத்தையும் தந்தது. ராமதாசின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்ததும், வெட்கத்தில் தலை தானாக குனிந்தது. முதலில் சுதாரித்த ராமதாசு, “சரி, சரி, மழை ஜாஸ்தியா இருக்குது பேசாம படுத்துக்க, இதா நான் இந்த பெஞ்சுலதான் தூங்கறேன்”னு சொல்லிவிட்டு கைகளை விடுவித்தான்.

தமிழின் மனதுக்குள் மத்தாப்பு. இது சரியா, இதுதான் சரியா, அவசியமா, வேலியில்லாமல் பூச்செடி வளரவே முடியாதா, முள்ளாயிருந்தாலும் அந்த முள்தானே பாதுகாப்பு….. என்னென்னவோ நினைத்தாள், நினைத்தான். நினைத்தார்கள். இரண்டே நாளில் தமிழரசி கழுத்தில் மஞ்சள் கயிறுடன் தமிழரசி தாஸ் ஆகிவிட்டாள். ரயில்வே பிரிட்ஜின் படிக்கட்டிற்கு கீழே இப்பொழுதெல்லாம் இரவில் ஒரு கோணிப்பை தடுப்பு திரைச்சீலைபோல் தொங்குகிறது. தடுப்புக்கு உள்ளே, மல்லிகைப் பூ மணக்கிறது.

ஒரு பத்து நாள் போயிருக்கும், நடுநிசி. இன்ஸ்பெக்டர் வந்தார். கோணித் தடுப்பை விலக்கிப் பார்த்தார், பிளாட்பார லைட் வெளிச்சத்தில் அந்தக் காட்சியை கண்டு, கொஞ்சம் கிளு கிளு அதிர்ச்சி. பின்னி பிணைந்திருந்த இரு உடல்கள், அவசரமாக பிரிந்தன. அவசர கதியில் கோணித் தடுப்பையே சுருட்டி தமிழ் மறைத்துக் கொண்டாள்.

“எந்தர்றா, ………. மவனே, இது வேற கேக்குதா உனக்கு”

“ஏய், இந்தாரு, குருட்டு முண்டை உன்னை அப்புறம் வந்து கவனிக்கறேன், முதல்ல இவனை இழுத்துட்டு போங்கடா, பொட்டலம் விக்கறியா, பொட்டலம். மவனே பொலி போட்டுருவேன்”

“சார், ஒரு காலத்துல வித்துட்டிருந்தேன் சார், இப்ப அதெல்லாம் விட்டுட்டேன் சார்”

“அதாண்டா, கேக்குறேன், ஏன் நிறுத்துன, ஏண்டா உன்னை மாதிரி பொறுக்கி பரதேசிங்கெல்லாம் மகாத்மாவாயிட்டீங்கன்னா, நாங்க ஒவ்வொருதரமும் புது ஆள் தேடணுமா, ஒழுக்கமா நாளையிலிருந்து சரக்கு எடுத்துட்டு போயி வித்துட்டு வந்துரு, இல்ல மவனே உயிரோட இருக்க மாட்ட நீ”

"சார், முடியாது சார், இனிமே இதெல்லாம் நிறுத்திர்றதுன்னு முடிவு பண்ணீட்டேன் சார்”

நாற்காலியிலிருந்து எழுந்து வந்து தனது பூட்ஸ் காலால் எத்தி ஒரு உதை விட்டார், ஜெயில் அறையின் கம்பிகளில் தலை பாடரென மோத சுருண்டு கீழே விழுந்தான். மூக்கிலிருந்து லேசாக ரத்தம் வர ஆரம்பித்தது.

“யோவ், என்னாச்சுன்னு பாருங்கைய்யா”

“சார், முடிஞ்சது சார்”

“சரி, சரி, ஆம்புலன்ஸ்ல போட்டு ஆஸ்பத்திரிக்கி எடுத்துட்டு போங்க, நான் டாக்டர் கிட்ட பேசிக்கறேன்.”

ராமதாசு ஆம்புலன்ஸில் போனான்.

மாதம் நான்காகி விட்டது, இப்பொழுதும் அந்த ஒண்ணாம் நம்பர் பிளாட்பாரத்தில் மேடிட்ட வயிறுடன் கணீரென்ற குரல்

“என் தலைவன் அவனே அவனே என்று பாடும் ஒலி கேட்டேன்”

Tuesday, September 8, 2009

பூஜைக்கேத்த பூ இது!!!!!!!!!!



ஊன்று கோலுடன் நடக்கும் பத்து வயது கலைச் செல்வி, அவள் நடக்கும் பொழுது சூம்பிப் போன வலது கால் காற்றில் ஆடியது. இரண்டு கண் இமையும் ஒரு பள்ளத்தை மூடியிருக்க, கைகளை விரித்தபடி மெதுவாக அடியெடுத்து வைக்கும் தென்னரசு, இரண்டு கையுமில்லாததால் சட்டையில் தைக்கப்பட்ட கைகள் காற்றில் ஆடியபடி இன்னொரு பையன், சாடையில் பேசும் மகேஸ்வரி, துருத்திய பற்களின் நடுவே நீண்டிருந்த நாக்கை சுழற்றி வழியும் எச்சையை உள்ளுக்கிளுக்கும் முஸ்தஃபா, இப்படி திரும்பிய பக்கமெல்லாம் ஊனம், இயற்கை இவர்கள் வாழ்வில் எழுதிய சோக வரலாற்றின் கோர தாண்டவம்.

இவர்களிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்ற குழப்பத்தில் மூவரும் அமர்ந்திருக்க சுரேஷ் தான் அமைதியை கலைத்தான். “பாப்பா, இங்க வா, உன் பேரென்ன?” என்று கேட்டதும் அங்கிருந்த பதினைந்து குழந்தைகளும் அவர்களின் தயக்கத்தை உதறிவிட்டு, ஒரு வேகத்துடன் வந்து இவர்களிடம் ஒட்டிக் கொண்டனர். “அண்ணா, உங்க பேரென்ன?” “இடு எண்ன, உங்க கலுதில டொங்கறது?” என அதிசயத்துடன் ஒரு குழந்தை அடையாள அட்டையை இழுக்க, “அண்ணா, நீங்க பெரிய ஆபீஸரா?” என கலைச் செல்வி கேட்டாள். குழந்தைகள் சகஜமாக பேச ஆரம்பித்ததும் அவர்களின் குறைகள் மறைய ஆரம்பித்து அவர்களுடன் விளையாட ஆரம்பித்தார்கள். எங்கும் சிரிப்பு, மனது நிறைய சந்தோஷம், அவர்களுக்கென வாங்கி வந்த சாக்லெட்டெல்லாம் கொடுத்து, மதியம் வரை அவர்கள் தோளில் ஏறியதையும் தொடையில் அமர்ந்ததையும் முழுதுமாக அனுபவித்து விட்டு, கேட்டரிங் சர்வீஸில் சொல்லியிருந்த சாப்பாடு வந்ததும் அவர்களுக்கு ஊட்டி விட்டார்கள். கொஞ்சம் சாப்பிட்டார்கள். அவர்களிடம் இருந்து விடைபெற்று வரும் பொழுது கையில் கொடுத்த செக்கை வாங்கிக் கொண்ட அந்த காப்பக கண்காளிப்பாளர் நிர்மலா ஒரு நன்றியுடைய புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார்.

கடற்கரையில் அமர்ந்திருக்கும் பொழுது மனது மிகவும் லேசானதைப் போல் உணர்ந்தார்கள். எதையோ சாதித்ததைப் போன்ற பெருமிதம் மனதில் நிறைந்திருந்தது.

“மாப்ள, இனிமே ஒவ்வொரு சண்டேயும் அங்க போரம்டா” என பீட்டர் கூற “ஆமாண்டா” என்றான் கதிர்.

அப்புறம் வாரா வாரம் அங்கு போக ஆரம்பித்ததும், கல்யாணம் செய்தால் ஒரு ஊனமுள்ள பெண்ணைத்தான் கல்யாணம் செய்வது என்று முடிவெடுத்ததும், அப்படியே மூன்று வருடங்களுக்கு முன் கண்ணில்லாத வளர்மதியை சுரேஷ் கல்யாணம் செய்ததுயும், வாய் பேச முடியாத மீனாவை கதிர் கல்யாணம் செய்ததும் இதோ இப்போது நடந்தது போல் இருக்கிறது. இன்று பீட்டருக்கு கல்யாணம்,

சுரேஷ்.வளர்மதியை கையைப் பிடித்து அழைத்து வந்து சர்ச்சின் முதல் வரிசையில் அமர வைத்து விட்டு, குழந்தையை அவள் கையில் கொடுத்து விட்டு கதிருக்காக காத்திருந்தான். சிலுவையில் தொங்கிய இயேசு கிறிஸ்துவின் சிலைக்கு கீழே கம்பங்களைப் போல் எழுந்திருந்த மெழுகு வர்த்திகளை வெள்ளை உடையணிந்த பாதிரி ஒருவர் வந்து கொளுத்தி வைத்து விட்டு, வந்திருக்கும் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு மறைந்து போனார்.

பீட்டர் நீல கலர் கோட் அணிந்து மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்தான். பாடகர் குழுவினர் வந்து இசைக் கருவிகளை தட்டி சரி பார்க்க, இனி திருமணம் ஆரம்பிக்கிறது என்பது தெரிந்தும், கதிர் வராததால் சுரேஷ் பொறுமையிழந்து வாசலை பார்த்த படியே இருந்தான்.

“பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே உங்களுக்கு சந்தோஷமும் சமாதானமும் உண்டாவதாக. ஆமென்” என்ற குரலை கேட்டு முன்புறம் திரும்பினான். திருமணம் ஆரம்பித்திருந்தது, இன்னமும் இந்த கதிரையும் காணவில்லை, கல்யாண பெண்ணையும் காணவில்லை. கல்யாண பெண் எப்படி இருக்காங்கடா என்று போனில் கேட்டதுக்கு, “நீங்களே வந்து பார்த்துக்குங்க, அது வரைக்கும் சஸ்பென்ஸ்” என்று பீட்டர் போனில் சொல்லியிருந்தான்.

“நாமெல்லாரும் எழுந்திருந்து நமது கையிலிருக்கும் பாட்டுத்தாளில் உள்ள முதல் பாடலான ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே எனற பாடலை பாடுவோம், அது சமயம் மண மகள் நம்மத்தியிலே வருவார்” என பாதிரி சொல்ல, மொத்த கூட்டமும் எழுந்து நிற்க இசைக்குழுவினர் பாட ஆரம்பித்தனர். மணப்பெண் வரும் பரபரப்பு வாசலில் தெரிந்தது. சுரேஷ் முழுவதும் திரும்பி மணப்பெண்ணை கண்கொட்டாமல் பார்த்தான். நல்ல சிவப்பாயில்லவிட்டாலும் எடுப்பான நிறம், இடது கையில் மணப்பெண்ணுக்குரிய மலர்கொத்தை பிடித்திருந்தாள். வலக்கையில் சுற்றி மடக்கிய கைக்குட்டை, பியூட்டி பார்லரில் அலங்கரிக்கப்பட்ட முகம், வசீகரிக்கும் கண்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் பழுதில்லாத கண்கள், இரண்டு கால்களும் சரியாக இருக்க நெற்றியில் இருந்து வழிந்தோடிய மெல்லிய வெள்ளை வலைத்துணி பின்னால் புரள, ரோஸ்கலர் பட்டுப் புடவையில் கம்பீரமாக வந்து கொண்டிருந்தாள் மணப்பெண். சுரேஷுக்குள் ஒரு சின்ன ஏமாற்றமும் குழப்பமும் வந்து வந்து போனது. பீட்டர் மாறி விட்டனோ, அல்லது கதிரைப்போல் வாய் பேசாத…..

“ஜெமிமா ராணியாகிய நீ, உன் அருகிலிருக்கும் சார்லஸ் பீட்டரை உன் வாழ்கைத் துணையாக ஏற்றுக் கொண்டு, இன்பத்திலும், துன்பத்திலும், வாழ்விலும், தாழ்விலும், மரணம் உங்களை பிரிக்கும் வரைக்கும் இவருக்கு மனைவியாயிருக்க, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும், இங்கு கூடியிருக்கும் அனைவரின் முன்னிலையிலும் வாக்கு கொடுக்கிறாயா?” என்று பாதிரியார் கேட்டதற்கு “வாக்குக் கொடுக்கிறேன்” என்று கணீரென பதில் சொன்ன ஜெமிமாவின் குரலை கேட்டதும் சே இப்படி மாறிப் போயிட்டானே, பேசாம எழுந்து போய்விடலாமா என சுரேஷ் கொதித்துக் கொண்டிருந்தான்.

தோளில் யாரோ தட்டவே, திரும்பினால் கதிர். “சாரிடா, டிராஃபிக்ல மாட்டிட்டோம்” என்று முன்னால் நடக்கும் திருமணத்தை பார்த்துக் கொண்டே சிரித்தான். அவங்க எங்கடா என கிசுகிசுப்பாய் கேட்க, அதோ என கண்ணாலேயே காண்பித்தான். சிநேகமாய் மீனா கைகளை குவித்து வாய் நிறைய புன்னகையுடன் வணக்கம் சொன்னாள். பதிலுக்கு வணக்கம் சொல்லும்போதுதான் கவனித்தான், என்னதான் பட்டு புடவையின் முந்தானையை இழுத்து தோள் வழியே போர்த்த முயற்சித்தாலும், மேடிட்டிருந்த வயிறு விஷேசம் என்று சொன்னது. அவன் பார்வை போன இடத்தை பார்த்த கதிர் சிரிக்க, விஷேசமா என புருவத்தை குவித்து கண்களாலேயே கேட்க, வெட்கத்துடன் கதிர் ஆமாம் என தலையசைத்தான். அவனை தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டு முன்னால் பார்க்க, மணமக்கள் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார்கள். மீனா வந்து, சுரேஷின் தோளை தட்டி, குழந்தை எங்கே என சைகையில் கேட்க, வளர்மதி அமர்ந்திருந்த இடத்தை கையால் காட்டினான். மீனா எழுந்து போய் அவள் அருகில் அமர்ந்து குழந்தையை தூக்க முயல, கைகளை தட்டி விட்டு குழந்தையை இறுக பற்றினாள் வளர்மதி. சுரேஷ் ஓடிவந்து மீனா என காதில் சொல்லவும், சிரித்துக் கொண்டே குழந்தையை நீட்டினாள். அவங்க விஷேசமா இருக்காங்க என்று காதில் சொன்னதும் முகம் முழுவதும் சந்தோஷத்துடன் மீனாவின் பக்கம் திரும்பி தடவி தடவி கரங்களை தேடி பற்றினாள்.

“தேவன் இணைத்த இவர்களை எந்த மனிதனும் பிரிக்காதிருப்பானாக, ஆமென்” என கடைசியாக பாதிரியார் ஆசீர்வதித்ததும், மணமக்கள் வெளியே வந்ததும், புல்வெளியில் இட்டிருந்த மேடையில் வரவேற்பு வைபவம் ஆரம்பமானது. எல்லோரும் சிரித்துக் கொண்டே வீடியோவுக்கு போஸ் கொடுத்து விட்டு போய் மிச்சம் ஒரு சிலரே இருந்த நேரத்தில், கடைசியாக பீட்டர் ஜெமிமாவை அழைத்துக் கொண்டு இவர்கள் இருவரிடமும் வந்தான். நண்பர்கள் இருவருக்கும் புது மனைவியை அறிமுகப் படுத்திவிட்டு அவர்களின் மனைவிகளையும் அறிமுகப் படுத்தினான். இருவர் முகத்திலும் இருந்த வெறுப்பை கண்டு கொள்ளாதவனாக, மீனாவிடத்தில் போய் அவளது வயிறை காட்டி, சிரித்துக் கொண்டே கை குலுக்கினான். வெட்கத்துடன் மீனாவும் கைகுலுக்க, பையனா, பொண்ணா என சைகையில் கேட்டு கலாய்த்தான்.

பிறகு நண்பர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்து கொஞ்சம் தள்ளி அழைத்து வந்து, “தெரியும் நீங்க ரெண்டு பேரும் என்ன நினைக்கறீங்கன்னு தெரியும், ஒரு குறையும் இல்லாத ஒரு பொண்ணா ஜெமிமா இருக்காளேன்னு பாக்கறீங்களா, நான் நம்ம மூணு பேரும் எடுத்துகிட்ட உறுதி மொழிய மீறிட்டேன்னு நினைக்கறீங்களா”, ஒரு புன்னகை முகத்தில் தவழ சொன்னான் “வளர்மதினால பார்க்க முடியாது, மீனானால பேசவோ கேட்கவோ முடியாது, ஜெமிமானால எல்லாம் முடியும், ஆனா ...................”
பீட்டர் சொல்லச் சொல்ல நண்பர்கள் இருவரும் அவனை கட்டி அணைப்பதைப் பார்த்து ஜெமிமா தலைகுனிய, மீனா புரியாமல் பார்த்தாள். வளர்மதி கையிலிருந்த குழந்தை சிரித்தது.