Showing posts with label ஆசை. Show all posts
Showing posts with label ஆசை. Show all posts

Tuesday, August 9, 2011

நிறவெறி - நிதர்சனம்


இங்கிலாந்து தேசத்தின் லண்டன் நகரம். ஒரு காலத்தில் மனித வர்க்கத்தின் சொர்க்க புரி, ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், துடைத்து விடப்பட்ட சாலைகள், பூக்களைச் சொறியும் நந்தவனங்கள், பூமியிலிருந்து திடீரெனக் கிளம்பி வானத்தை நோக்கி பீறிட்டுக் கிளம்பும் செயற்கை நீரூற்றுகள், கம்பீரம் நிறைந்த இங்கிலாந்து அரச குடும்பத்து அரண்மனை, உலகின் மூலை முடுக்கெல்லாம் கோலோச்சிய இங்கிலாந்தின் ராஜ குடும்பத்தினரின் தனிப்பட்ட உல்லாச மாளிகைகள், நவீனத்தின் உச்சமாக எங்கு நோக்கினும் மினுக்கும் ஆடம்பரம், சுரங்கத்தில் ஓடும் ரயில் வண்டிகள் என ஒரு உல்லாசபுரியின் அனைத்து முகவரிகளையும் இந்த நகரத்தில் காணலாம்.

ஆனால் இதற்கெல்லாம் திருஷ்டிப் பொட்டு வைத்த விதமாக, இங்கிலாந்து பாதம்பதித்து, காலால் மிதித்து அரசாண்ட நாடுகளின் ஒருசில வெள்ளையரல்லாத வர்க்கத்தினருக்கான குடியிருப்புகளை லண்டன் நகரத்தின் வெளிப்புறப் பகுதிகளில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இந்த வெள்ளையரல்லாத மக்கள், தங்கள்சொந்த நாட்டிலிருந்து (இங்கிலாந்தின் தொழில் துறௌ முன்னேற்றத்துக்கென வியர்வை சிந்துவதற்காகவே) அழைத்து வரப்பட்டு, இங்கிலாந்தின் கௌரவ குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டு, இங்கிலாந்தில் குடியுரிமை வழங்கப்பட்டாலும், எந்த ஒரு வெள்ளையனும் வேறு நிறத்தவனை அவனது அண்டை வீட்டுக்காரனாக இன்றுவரை அங்கீகரிக்கவில்லை. மிகக் கவனமாக அவனுக்கு ஒரு நவீன அடிமையின் முகவரி கொடுத்து நகரத்தின் ஒதுக்குப் புறத்தில் வைத்திருக்கிறார்கள். (இந்தியர்களும் இதற்கு விதி விலக்கல்ல)

வெள்ளையர்களின் தெருவுகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் மேன்மை தங்கிய அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட இந்த அடிமைகளின் பிராந்தியங்களுக்கென செயல்படுத்தப் படுவதில்லை. எப்பொழுதும் ஒரு மூன்றாந்தர தெரு நாய்களைப் போலத்தான் இவர்கள் நடத்தப் படுகிறார்கள். ஆனால் இவர்களின் உடல் உழைப்பை உறிஞ்சுவதில் வெள்ளைத் தோல்களுக்கு என்றுமே சிறிதும் தயக்கம் இருந்ததில்லை. அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவது போல் நடித்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளாகத்தான் கட்சி வேறுபாடின்றி ஒவ்வொரு அரசாங்கமும் இருந்திருக்கின்றது.

லண்டன் நகர வாசியான ரிச்சர்ட் ரோஸ் இப்படியாக எழுதுகிறார் “ நான் முப்பது வருடத்திற்கு முன், லண்டன் நகரின் டாட்டன்ஹாம் பகுதிக்கு குடி வந்தேன். (டாட்டன் ஹாம் என்பது வடக்கு லண்டனில் உள்ள கருப்பர்கள் மட்டுமே வாழும் பகுதி). அப்பொழுதெல்லாம் இது ஒரு உழைக்கும் வர்க்கத்தின் சொர்க்க புரியாகத் திகழ்ந்தது. எங்கு நோக்கினும் திறமை மிகுந்த வாலிபர்கள் தங்களின் உழைப்பினால் பொருளீட்டினார்கள். மாலை நேரங்கள் விளையாட்டிலும் ஆடல் பாடலிலும் கழியும். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலய ஆராதனைகளில் இன வேறுபாடின்றி கூட்டம் நிரம்பி வழியும். எல்லாம் கிரமமாயும் ஒழுங்காகவும்தான் போய்க் கொண்டிருந்தது” என்கிறார்.

உழைக்கும் மக்கள் நிறைந்த பகுதியாதலால், பணப் புழக்கம் அதிகமிருந்தது. இந்த பணப் பெருக்கத்தைக் கண்டு அரசாங்கம் பயந்ததோ என்னவோ, தெரியவில்லை, 80 களில் பதவியேற்ற பிரதமரான மார்கரெட் தாட்சரின் ஆட்சியிலிருந்து ஆரம்பித்து, ஜான் மேஜர், டோனி பிளேர் மற்றும் இப்போதைய காட்டன் பிரௌன் வரையிலான எல்லா ஆட்சியாளர்களுமே இந்த வாலிபர்களின் திறமை மிகு எழுச்சியை, அவர்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தின் சக்தியை, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு எழுச்சியாகவே உணர்ந்தனர். தங்களது சொந்த மண்ணில் வேறொரு இனம் செழிப்பதா என நினைத்தார்களோ என்னவோ, 80 களின் ஆரம்பத்தில் இருந்தே கருப்பர்களை புறக்கணிப்பது மறைமுகமாக அரங்கேற ஆரம்பித்தது. (இந்த மார்கரெட் தாட்சர், இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஐரோப்பிய நாடுகளில் யூதர்களுக்கெதிராக நடந்த வன்முறையில் தப்பிப் பிழைத்து இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த ஒரு யூத குடும்பத்துப் பெண்மணி, யூதர்களுக்குள் உறைந்து கிடக்கும் நிற வெறியைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன???? தனது பிரதமர் பதவியை பயன்படுத்தி கருப்பர்களின் புறக்கணிப்பு என்பதை ஒரு அரசியல் நிலைப்பாடாக உருவாக்கிய புண்ணியம் இந்த புரட்சிப் பெண்மணியையே சாரும்)

இந்த அதிகார பூர்வ புறக்கணிப்பினால் கருப்பு இன மக்கள் வெகுண்டு எழுந்ததின் விளைவாக, இளம் வாலிபர்கள் அரசுக்கு எதிராக குழுக்களாக திரண்டனர். ஒரு தகுதியும் இல்லாத வெள்ளை வாலிபர்கள் வெறும் வெள்ளை நிறத்தவர்கள் என்ற ஒரே தகுதிக்காக அரசாங்கத்தால் உயர்த்திப் பிடிக்கப்படுவதும், அனைத்து தகுதிகளும் தன்னிடம் இருந்தும், இங்கிலாந்தின் இறையாண்மையை முழுவதும் மதிக்கும் ஒரு குடிமகனாக தான் வாழ முற்பட்டாலும், கருப்பு நிறத்தவன் என்ற ஒரே காரணத்துக்காக தான் புறக்கணிக்கப்படுவதும் ஒவ்வொரு கருப்பு இன வாலிபனின் நெஞ்சிலும் வஞ்சத்தை விதைத்தது. இதை எதிர்பார்த்தது போலவே அரசாங்கமும் இவர்களை சர்வ சௌகர்யத்துடன் சமூக விரோத கும்பல் என்று முத்திரை குத்தி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவ்வப்பொழுது வேட்டையாடி வந்திருக்கிறது.

இந்த வேட்டையாடலின் ஒரு பகுதியாகத்தான் கடந்த வார இறுதியில் போலீஸாரால் திட்டமிட்டு நடத்தப் பட்ட ஒரு படுகொலை. மார்க் துக்கன் என்ற 29 வயது வாலிபனை தெரு நாயை சுடுவது போல சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். அதற்கு கண்டனம் தெரிவித்து, கருப்பர்களால் நடத்தப்பட்ட ஒரு அமைதி ஊர்வலத்தில் வெள்ளை போலீஸ் காவலர்களால் திட்டமிட்டு வன்முறை அரங்கேற்றப் பட்டு, வெள்ளை முகமூடி அணிந்த ஊடகங்களின் காமிராக்களில் கறுப்பர்களின் வெறியாட்டம் மட்டுமே படம்பிடிக்கப்பட்டு, கறுப்பர்களின் ஈனத்தனத்தைப் பாரீர் என உலக அரங்கில் வெட்கமில்லாமல் ஒளிபரப்பும் அளவுக்கு நிற வெறியானது வெள்ளையர்களையும், அவர்களது ஊடகங்களையும் ஆட்கொண்டுள்ளது. மார்க் துக்கன் ஒரு தீவிரவாதியாகவும், போதைப் பொருள் விற்பவனாகவும் வெள்ளைய ஊடகங்களால் அடையாளம் காட்டப் படுகிறார்.

உண்மையில், பொருளாதார ரீதியாக மிகவும் கேவலமான நிலைமைக்கு சீரழிந்து ஆட்டம் காணும் இங்கிலாந்து, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கருப்பர்களை அணுஅணுவாக சித்திரவதை செய்து வருகிறது. இந்த சிக்கன நடவடிக்கைகளால் அரசின் உதவித்திட்டங்கள் மற்றும் அரசின் இயல்பான மக்கள் நலப் பணிகள் கூட சிக்கனம் என்ற பெயரில் கருப்பர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த சிக்கன நடவடிக்கைகளால் எந்த ஒரு வெள்ளையனும் பாதிக்கப்படவில்லை என்பது வேலை இல்லாத் திண்டாட்டத்தின் விகிதங்களைக் காணும் பொழுது தெளிவாகிறது. (முழுத்திறமையும் தகுதியும் உள்ள கருப்பர்களில் 30 சதவீதம் பேருக்கு வேலை இல்லை எனும் பொழுது, ஒரு தகுதியும் இல்லாத வெள்ளைய இளைஞர்களில் வெறும் 4 சதவீதமே வேலையற்றிருக்கிறார்கள்)
மார்க் துக்கனின் மரணம் ஒரு பிரளயத்தையே கிளப்பி, அதற்கு அடுத்தாற்போல் கருப்பர்களின் மீது ஏவி விடப்பட்ட வன்முறையால் லண்டன் நகரின் சில பாகங்கள் உண்மையிலேயே பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. சரி, அது அவர்கள் நாட்டு பிரச்சனை என முகத்தைத் திருப்பிக் கொண்டு இந்தியா இருக்கவேண்டுமா???

•காமன்வெல்த் போட்டிகளுக்கான ஆயத்த கட்டுமான நடவடிக்கைகளின் போது, இன்னும் இந்தியா இந்தப் போட்டிகளுக்காக தயாராகவில்லை, இதுக்குத்தான் இந்தியா மாதிரி பன்னாடை பரதேசி நாடுகளிலெல்லாம் இந்த விளையாட்டை நடத்தாதீர்கள் என்று எத்தனை தரம் சொன்னோம் என வெள்ளைய ஊடகங்கள் முழங்கியது (ஆனால், அவர்கள் படம் பிடித்துக் காட்டியதெல்லாம், டெல்லி நகரத்தின் இயல்பான கட்டுமான பணிகளைத்தான், காமன்வெல்த் கிராமத்தின் பணிகளை அல்ல)

•அதே போல இந்தியாவும் இப்பொழுது 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தனது வீளையாட்டு வீரர்களை அனுப்புவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். நிறவெறி வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் லண்டன் நகரம் இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பானதா என ஒரு உயர் மட்டக் குழுவை அனுப்பி ஆய்வு செய்து வர வேண்டும்.

•தற்சமயம் இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியினரை, வன்முறையிலும் வறுமையிலும் சிக்கித்தவிக்கும் இங்கிலாந்தின் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் விளையாட அனுமதிக்காமல் உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும்.

•இங்கிலாந்தில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளை வன்முறை முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பும்வரை இந்தியா திரும்ப அழத்துக் கொள்ள வேண்டும்.

•வன்முறை ஒழிந்து, இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை, இந்திய விமானங்களும், கப்பல்களும் இங்கிலாந்திற்கு செல்வதை தடை செய்ய வேண்டும்.

•இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து குடிமகன்கள் எல்லோரும், கடினமான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட்டு, தங்களது பின்னணி வரலாறின் குற்றமற்ற தன்மை நீரூபிக்கபட்ட பின்னரே, இந்திய மண்ணில் காலடி வைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

வெள்ளையனின் காலணியைக் கூட (அது வெள்ளையனுடையது என்ற ஒரே காரணத்துக்காக) பூஜித்துப் போற்றும் இந்தியா இதை செய்யுமா???

Tuesday, May 24, 2011

பரமண்டலங்களிலிருக்கும் எங்கள் பிதாவே - 24 மே 2011

சமச்சீர் கல்வித்திட்டம் எதற்காக கொண்டு வரப் பட்டதோ தெரியவில்லை பிதாவே. மக்களின் ஆங்கில மோகத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஆங்கில வழியில் கல்வி கற்றுத் தருகிறோம் என கவர்ச்சி விளம்பரம் செய்து மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதோடு, எங்கேயோ குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து, நரைத்த தலையும் தடித்த கண்ணாடியும் அணிந்த அறிவு ஜீவிகள் என அறியப்பட்ட இரண்டு மூன்று பேர் தெரிவு செய்யும் பாடத்திட்டங்கள்தான் இந்தியாவின் தலை சிறந்த கல்விப் பாடம் என சொல்லி, விற்பனை செய்யும் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலிருந்து எங்கள் குழந்தைகளை காத்தருள்வீர் பிதாவே.
இதை ஒழித்து விட்டு பயனுள்ள பாடங்களை மக்கள் பயில வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித்திட்டத்திலும் தங்களின் சுய புராணங்களை புகுத்தி, எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்தையே கேலி செய்யும் அரசியல் வாதிகள் என்னும் கேவலமான அற்பப் பதர்களின் கொடிய பிடியிலிருந்து கல்வியை மீட்டுத் தாருங்கள் பிதாவே.
ஆனால், அதற்கும் ஒரு படி மேலே போய், பழைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக அந்த திட்டத்தில் ஆயிரம் நன்மைகள் இருந்தாலும் அதை அப்படியே அழித்தொழிப்போம், எங்களின் அழித்தொழிப்பு நடவடிக்கைகள் முடியும் வரை மாணவர்கள் காத்திருக்கவும் என ஆணையிட்டு, பல கோடி மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் அயோக்கிய அரசியல் வியாதிகளிடமிருந்தும் எங்களை காத்தருள்வீர் பிதாவே.

சென்னையின் சிறப்பு என்று சொல்வது போல் ஒரு அரிய பெரிய நூலகம் “அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்” என்ற பெயரில் போன ஆட்சியில் ஒரு அருமையான நூலகம் அமைத்தார்கள் பிதாவே. உலகில் காணப்படும் பல அரிய நூல்களை சேகரித்து, வாசக தளங்களை விரிவு படுத்தி, பட்டதாரி மாணவர்களுக்கென ஒரு பெரிய பொக்கிஷத்தை வைத்துப் போயிருக்கிறார்கள். குறிப்பாக மருத்துவம், மற்றும் பொறியியல் மாணவர்களின் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத பல சர்வதேச புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அங்கு வந்து போகும் ஒவ்வொரு மாணவனும், இந்த அரிய பெரிய இமாலய முயற்சிக்காகவும், அதை சாத்தியமாக்கி இளம் மாணவ சமுதாயத்தினரின் பயனுக்காக இலவசமாக அர்ப்பணித்ததையும் பாராட்டி பாராட்டி புகழாரம் சூட்டி விட்டு போகிறார்கள்.

ஆனால் வழக்கம் போல காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு புதிய அரசும் அதன் மக்கள் விரோத கொள்கைகளும், உழவர் சந்தைகளை மூடி, சட்டசபை கட்டிடத்தை வெறுத்து ஒதுக்கி என வெறுப்பை உமிழும் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்த அறிவுக்களஞ்சியமான நூலகத்தை அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள் பிதாவே.

இந்த நாசா விஞ்ஞானிகள் எனும் மனநிலை பிறழ்ந்த பைத்தியக்கார கும்பல்களின் பிதற்றல்களுக்கும் உளறல்களுக்கும் ஒரு முடிவு கட்டுங்கள் பிதாவே.
சில இந்திய புராணங்களிலும் இதிகாசங்களிலும் அவதார புருஷனாக சித்தரிக்கப்பட்டும், இந்தியாவில் அதிகமாகவும் இன்னும் உலகின் சில பாகங்களிலும் தெய்வமாக வணங்கப்பட்டும் வருகிற இராமன் கட்டிய பாலம் இதுதான் என திடீரென ஒரு புகைப்படத்தை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்கள் என மின்னஞ்சல்கள் பறந்து பரபரப்பை ஏற்படுத்தின. அதற்கு அடுத்ததாக, சொர்க்கம் என்றால் இதுதான் என்பதை கூட இந்த விஞ்ஞானிகள் செயற்கை கோள்களின் மூலமும் வான ஆராய்ச்சி மூலமும் கண்டு பிடித்து விட்டதாக கதை விட்டார்கள். நல்லவேளை அவர்கள் அப்படி கண்டு பிடித்த சொர்க்கத்துக்கு நேரடி விமான சேவையை துவக்கவில்லை. இப்பொழுது புதிதாக ஒரு சூரியப் புயல் உலகத்தை 2012 ல் தாக்கப் போவதாகவும், இதன் தாக்கம் 100 மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளை விட அதிகமாக இருக்குமாம். அதனால் 2012 ல் உலகத்தின் பெரும் பகுதியோ அல்லது உலகம் முழுவதுமோ அழிந்து விடும் என புதிதாக கதை கட்டுகிறார்கள்.

உலகத்தின் அழிவிலிருந்தல்ல, இந்த பைத்தியக் காரர்களின் உளறல்களிலிருந்து எங்களை பாதுகாத்தருளும் பிதாவே.

Monday, May 9, 2011

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே.... 9/5/2011

மனித இனத்திற்கு விரோதியாக, மதத்தின் பெயரால் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதும் ஒரு தெய்வீக செயலே என நியாயங்கள் கற்பித்து, தான் பிறந்து வளர்ந்த மண்ணின் மேம்பாட்டுக்கென பாடுபட்டு வியர்வை சிந்த வேண்டிய இளசுகளின் மொத்த மன மற்றும் மனித வளத்தை தீவிர வாத நோக்கத்துக்காக திசை திருப்பி ரத்த ஆறு ஓட வைத்த மகானுபாவர்களின் மரணம் கூட மாபெரும் தியாகமாக திரிக்கப்படும் அவலத்திலிருந்து எங்களை காப்பாற்றுங்கள் பிதாவே. அப்படியானால் அவனை கொன்றவன் யோக்கியனா என்ற விவாதத்திற்கு சொம்பு தூக்கிக் கொண்டு வரும் புள்ளி விவர புலிகளிடமிருந்தும் எங்களை காப்பாற்றுங்கள் பிதாவே.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

டாஸ்மாக் என்னும் சுனையிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் நதிப் பிரவாகத்தில் குளித்து, திளைத்து நீந்திக் கரையேறி, இலவச தொலைக்காட்சி பார்த்து விட்டு, ஒரு ரூபாய் அரிசியில் பொங்கித்தின்று, பொங்கலுக்கும் தீபாவளிக்கும் இலவச சேலையும், வேட்டியும் வாங்கி உடுத்தி மகிழ்ந்து, மாதம் மும்மாரி வேண்டாம், பெய்கிற ஒரே மாரியில் வெள்ளக் காடுகளுக்குள் தீவு வாழ்க்கை வாழ்வதைக் கண்டு, மனம் இளகி ஆளும் ஆண்டவக் குடும்பம் தரும் வெள்ள நிவாரண நிதிகளுக்கென கையேந்தி நின்று என நாங்கள் வாழும் பிச்சைக்கார வாழ்க்கை போதும் பிதாவே. வரும் 13ம் தேதிக்கு மேல் புதிதாக வரும் ஆட்சியாளர்களாவது மேலும் இலவசங்கள் தந்து எங்களை மேலும் பிச்சைக்காரர்களாக்காமல் காத்தருளுங்கள் பிதாவே. வெள்ள நிவாரணம் தருவதை விட வெள்ளத்தை வடிந்தோடச் செய்ய ஒரு நிரந்தர வடிகாலாவது கட்டச்சொல்லுங்கள் பிதாவே.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


ஆமாம், ஒவ்வொரு வருடம் போலவே இந்த வருடமும் வெய்யில் கொடுமை உக்கிரமாக உள்ளது. ஆனால், ஒவ்வொரு கோடை காலத்திலும், ”கோடையில் குளுகுளுவென இருப்பது எப்படி??” என ஒவ்வொரு ஊடகத்திலும் தொடை தெரிய உடையணிந்து ” நான் வெள்ளரி பழத்தில் உள்ளாடை அணிவேன், தர்ப்பூசணியை தலையில் கவிழ்ப்பேன், பசலைக்கீரையை பால் போல் குடிப்பேன், பச்சை மிளகாயால் பல் விளக்குவேன் ” என அருவருக்கும் பேட்டி கொடுக்கும் நடிகைகளிடம் இருந்து எங்களை பாதுகாத்தருளும் பிதாவே.

இது போதாதென்று “ வெய்யிலின் கொடுமையிலிருந்து தப்பிப்பது எப்படி??” என கேள்வி மட்டும் கேட்பதோடு நிற்காமல் அதற்கு பதிலாக, ஒரு நாளைக்கு முப்பது லிட்டர் தண்ணீர் குடியுங்கள், நாற்பது முறை தலைக்கு குளியுங்கள், கண்ணை மூடிக்கொண்டு சாலையில் நடவுங்கள், காதின் வழியாக சுவாசம் செய்யுங்கள், வாழைநாரில் ஆடை அணியுங்கள், புளியம் பூவின் பொரியல் சாப்பிடுங்கள் என சகட்டு மேனிக்கு அறிவுரை சொல்லி ஈ மெயில் அனுப்பும் நாதாரி நண்பர்களிடமிருந்து எங்களை காத்தருள்வீர் பிதாவே …

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


ஒவ்வொரு வருடமும் தவறாது வருகைதரும் வைகாசித் திருவிழாப் போல, ஒவ்வொரு முறையும் பெருவாரி இந்தியனின் நேரத்தையும் பணத்தையும் கொள்ளையடித்து, எங்களையெல்லாம் கூத்தாடிகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு எங்களை ஆக்கிரமித்து நிற்கும் இந்த IPL என்னும் கொடிய நோயின் வீரியத்திலிருந்து எங்களை உடனடியாக காப்பாற்றுங்கள் பிதாவே…

Monday, January 3, 2011

கிடா வெட்டி கிறிஸ்மஸு


அது என்னமோ தெரியல, எல்லாருக்கும் கிறிஸ்மஸுன்னாலே கேக் ஞாபகம்தான் வருது. எப்படி இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பிரியாணி செய்யத் தெரியும்னு ஒரு மூட நம்பிக்கை இருக்குதோ, அது மாதிரி கிறிஸ்தவங்க எல்லாருமே கேக் செஞ்சுதான் கிறிஸ்மஸ் கொண்டாடுவாங்கன்னு ஒரு அதி மூட நம்பிக்கை மக்கள் மனசுல இருக்குது. (தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, நான் கொஞ்சம் கூட விரும்பாத பட்சத்திலும், எந்தையும் தாயும் எனக்கீந்த பெயர் காரணத்தினால் கிறிஸ்தவன் என்ற முத்திரை என்மீது குத்தப் பட்டிருப்பது ஒரு தவிர்க்க முடியாத வேதனையான விஷயமே). கிறிஸ்மஸ் வந்தாலும் வந்துச்சு, கேக் எங்க, கேக் எங்கன்னு எல்லாரும் பிச்சு குதறி எடுத்துட்டாங்க. ஆனா, நாங்க கேக் வெட்டற கிறிஸ்தவங்க இல்லை, கிடா வெட்டற கிறிஸ்தவங்கன்னு எத்தனை பேருக்கு சொல்லறது.....

இதுல இன்னொரு கொடுமை என்னான்னா, நம்ம தமிழ் கூறும் நல்லுலகத்தில், பண்டிகைன்னு ஒன்னு வந்துட்டா, பக்கத்து வீட்டுக்கு எல்லாம் பலகாரம் குடுக்கணுமாம். தீபாவளிக்கு, பொங்கலுக்கு எல்லாம் பக்கத்து வீடுகளில் இருந்து பலகாரம் வந்துருச்சு, நம்ம கிறிஸ்மஸுக்கு குடுக்கலைன்னா அவுங்க தப்பா நினைச்சுக்குவாங்க என்ற ஒரு நன்றி கலந்த கடமை உணர்ச்சி வேற நம்ம சகதர்மிணிக்கு பொங்கி வழிய, பலகாரம் போடற வேலைல ஏறக் குறைய எல்லா வேலையும் நம்ம தலைல விழுந்து தொலைத்தது.

இந்த வருடம் கிறிஸ்மஸுக்கு முறுக்கு சுடலாம் என்ற விபரீத ஆசை எங்க மேலிடத்துக்கு முறுக்கிக் கொண்டு வர, வீட்டுல இருக்கற அத்தனை பேரோட வாழ்க்கையும் எத்தனையோ முறுக்குகளை சந்திக்க வேண்டி இருந்தது. முதல்ல அதற்கான பால பாடங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் புகட்டப் பட்டு, அதற்கான ஆயத்தங்கள் எதோ அடுத்த ஏவுகணை ஏவப்போகும் விஞ்ஞானியின் கட்டளைகள் போல புறப்பட்டு வந்தது. யாரங்கே, வீட்டுக்கு வெளியே விறகு அடுப்பு மூட்டுங்கள் என விறகு சுமக்க வைத்தார்கள். முறுக்கு பிழிய தனியே ஒரு ஆசனம், அதை வாணலியில் எடுத்து இடுவதற்கென ஒரு தனி ஆயுதம், அடுப்பில் எரியும் விறகு சரியான முறையில் எரிகிறதா என பார்த்து அதை சரியாய் எரிய வைக்க ஒரு குழந்தை தொழிலாளி, முறுக்கு பிழிவதற்கென ஒரு அடிமை என சகல ஆயத்தங்களுடன் இந்த முறுக்கு பிழியும் படலம் ஆரம்பமாகியது. ஒன்றுக்குள் ஒன்றை நுழைந்து இடையில் இருக்கும் மாவை, அடியில் இருக்கும் அச்சின் வடிவத்தில் வெளிக்கொணர அசுர பலத்தில் அந்த முறுக்கு சுட்டியை அழுத்த வேண்டியதாயிற்று. இப்படி அழுத்தியபின் வெளிவரும் நூலிழை போன்ற மாவுக்கு ஒரு வடிவம் கொடுப்பதில் தான் பிரச்சனையே ஆரம்பமாகியது. முறுக்கு என்ற வஸ்து வட்ட வடிவத்தில் தான் இருக்க வேண்டும் என்பது எந்த நாட்டின் விதியோ தெரியவில்லை. இந்த அடிமை அழுத்திய முறுக்குகளெல்லாம் எம். எஃப். ஹுசேனின் மாடர்ன் ஆர்ட் போன்ற வடிவங்களில் வெளிவர, வட்டமாக சுற்றத் தெரியாத நீயெல்லாம்... ம்ஹூம்.... என்பது போன்ற ஏளனப் பார்வைகளை சகித்துக் கொள்ள வேண்டிய அவலநிலைக்கு அந்த அடிமை தள்ளப்பட்டான். (கடைசியில் அந்த ஏவுகணை விஞ்ஞானியும் பல முறை முயன்றும் முறுக்கை ஒரு முறை கூட வட்டமாக சுற்றவில்லை என்பது வேறு விஷயம்).

இப்படியாய் ஒரு நான்கு மணிநேர ரணகள போராட்டங்களுக்குப் பிறகு, முறுக்கு சுற்றும் படலம் இனிதே (ஹூக்கும்... இதுல இனிதே வேற) நிறைவுக்கு வந்தது. அடுத்தது பலரது வேண்டுகோளுக்கிணங்க, ரசிகப் பெருமக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெறும் வண்ணமாக கேக் செய்யும் கோக்கு மாக்கான ஐடியா எதாவது மேலிடத்தாருக்கு உதித்து விடுமோ என பயந்து கொண்டிருந்தவனுக்கு, கேக்கை வெளியிலயே வாங்கிடலாம்னு சொன்னவுடனே வயிற்றில் பீர் வார்த்த்து,,,,, சாரி, பால் வார்த்தது மாதிரி இருந்தது.

அடுத்ததாக, கிறிஸ்மஸ் அன்று, பிரியாணி செஞ்சாத்தான் அது கிறிஸ்மஸ் மாதிரி இருக்குமாம். அதனால நல்ல கிடாக் கறியாக வாங்கி வருமாறு அடியேன் பணிக்கப் பட்டேன். இப்ப கறிக்கடைக்குப் போய் இதுல பெண்ணாட்டுக் கறி வேண்டாம், ஆணாட்டுக் கறி தான் வேண்டும் சொன்னால் உடனே என்னை ஆணாதிக்க வாதி என்று சொல்லி விடுவார்களோ என்ற பயம் வேறு தனியாய் வதைத்தது. அங்கு தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல், மற்ற எதுவும் இல்லாமல் தொங்கும் சதைப் பிண்டங்களில், ஆணாடு எது, பெண்ணாடு எது என எப்படி கண்டு பிடிப்பது என்பது ஒரு பெரும் போராட்டமாக இருந்தது. வாசகர்கள் விவகாரமாக எதையும் நினைக்க வேண்டாம், அந்த அங்க அடையாளங்களெல்லாம் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டுத்தான் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் காதர் பாயின் கறிக் கடையில் ஆடுகளின் உடல்களை தொங்க விட்டிருப்பார்கள். எது எப்படியோ போகட்டும், வதைக்கப் படுவது எப்பொழுதுமே ஆணாடு தானே என்ற தைரியத்தில் கிடைத்த கறியை வாங்கி வந்தேன். இருந்தாலும், இது கிடாக் கறிதானே என வீட்டில் வீசப்பட்ட கேள்விக்கு பலியாடு போல தலையாட்டி வைத்தேன். ஒரு சில தர பரிசோதனைகளுக்குப் பிறகு அது கிடாக் கறிதான் என மேலிடம் சான்றிதழ் அளித்ததும் மறுபடியும் வயிற்றில் பீர்...., சாரி சாரி.....பால்.

மறுபடியும் பிரியாணி செய்யவும் அதே போன்ற ஏவுகணை ஆயத்தங்கள், சராமாரியான கட்டளைகள், சமையலறையே ஒரு போர்க்களம் போல் கோலம் கொண்டு, வீட்டில் இருக்கும் ஒரே ஒரு குழந்தை தொழிலாளியில் ஆரம்பித்து, இருக்கிற ஒரே ஒரு அடிமை வரை எல்லோருடைய முதுகெலும்பையும் முறித்தெடுத்து, கடைசியில் அந்த பிரியாணி என்ற வஸ்து தயாரானதை நினைத்துப் பார்த்தால், பாவிகளை ரட்சிக்க பூவுலகில் மனிதனாய் அவதரித்த கிறிஸ்துவே, ஒவ்வொரு வருடமும் எங்களை இந்த முறுக்குப் பிழியும் மற்றும் பிரியாணி செய்யும் கொடுமையில் இருந்து ரட்சிக்க இன்னொரு முறை பிறக்க மாட்டாயா என வேண்ட வேண்டும் போல இருந்தது.

Wednesday, November 17, 2010

யோவ், ஆதி.... என்ன ஆச்சு உனக்கு...???

யோவ், நல்லத்தானய்யா எழுதிகிட்டிருந்தீரு, துறை சார்ந்த பதிவு, தங்கமணி பதிவு, அப்புறம் விமர்சனம், அப்புறம் அது, அப்புறம் இதுன்னு எல்லாம் ஒழுக்கமாத்தானய்யா போயிகிட்டிருந்தது, இப்ப என்ன ஆச்சுன்னு இப்பிடி ஒரு வம்பு பண்ண வந்திருக்கீங்க? இப்பத்தானய்யா போட்டியெல்லாம் வெச்சு, அதுக்கு நீ பட்ட கஷ்டத்தையெல்லாம் பார்த்து மலைக்க வெச்சீகளே, என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன், இல்ல ஏன்னு கேக்குறேன்.

How do you feel if, I stop blogging?

திடு திப்புன்னு ஏன்யா புத்தி இப்பிடி வேலை செய்யுது? வேணாய்யா எதாவது சொல்லீரப்போறேன். வழக்கமா, ஒழுக்கமா கடையை தொறந்தமா, பதிவை போட்டமான்னு போயிகிட்டேயிரு, அதை வுட்டுட்டு சும்மா இப்பிடி கோக்கு மாக்கா எதாவது யோசனை பண்ணுனே, அப்புறம் தாம்பரம் முழுக்க உனக்கு பேனர் கட்டிருவோம், அண்ணி கிட்ட சொல்லி கொள்ளிக்கட்டைல சூடு வெக்க சொல்லீருவோம், ஆமா....., சர்வே எடுக்கறாராம் சர்வே, வாயில நல்லா வர்றதுக்குள்ள ஒழுக்கமா அந்த சர்வேவை தூக்குற நீ.... # கடுப்பு.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அது என்னன்னே தெரியல, எங்க ஆபீஸ்ல எல்லார் கடையையும் படிக்க முடியுது, ஆனா தல நர்சிம் கடை, லக்கி லுக்கு கடை, வித்யாக்கா கடை எல்லாம் தொறந்தா அதை மாத்திரம் இந்த பொட்டி தட்டற கும்பல் தொறக்க வுட மாட்றாங்கோ, கடுப்பேத்தறாங்க மை லார்ட்.... # ஏமாற்றம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவர் சந்திப்பு நடந்து பல நூற்றாண்டு ஆன மாதிரி இருக்கு, இப்ப கொஞ்ச நாளா ஊர்பக்கம் தலை காட்ட முடியுதே, சந்திப்பு எதாவது வைப்பாங்களான்னு நானும் பார்க்கிறேன், மூத்த பதிவர்கள் எல்லாம் ஒரே பிஸியா இருக்காங்க போல இருக்குது. கேபிள் அண்ணன்கிட்ட கூட சமீபத்துல கேட்டேன், பார்க்கலாம்னு சொன்னாரு. இந்த வருஷ கடைசிக்குள்ள ஒரு பதிவர் சந்திப்பு வைங்கப்பு....... # ஏக்கம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவுலகுல எல்லாம் பரபரப்பான விஷயங்களை மாத்திரம்தான் பேசறாய்ங்க, அதாவது வில்லங்கமான மேட்டர்னா அதை வெச்சு ஒரு நூறு பதிவாவது வருது, காமன்வெல்த், ஆதர்ஷ் அபார்ட்மெண்ட், ஒபாமா விஜயம், ராசா என்பார் மந்திரி என்பார்னு எல்லாமே ஒரு பரபரப்பான விஷயங்களைத்தான் எழுதறாய்ங்களே ஒழிய, காமன்வெல்த் போட்டில மெடல்களை அள்ளிக் குவிச்ச இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டிகள்ல மண்ணைக் கவ்வுதே அது ஏன்னு ஒரு வார்த்தை கேக்கறாங்களா???? இல்ல, நம்ம வீரர்கள் எல்லாம் நம்ம பேட்டைக்குள்ள மட்டும்தான் வீரர்களா??? இதைப் பத்தி யாருமே எழுத மாட்டேங்கறாய்ங்களே???? # கொளுத்தி போடல்

Wednesday, March 24, 2010

வா, என் கண்மணி மறுபடி போவோம்.




பேருந்தில் பயணம்,
ஒரே இருக்கை,
என் தோளில் நீ,
உன் மடியில் நான்
நெருக்கம் இனித்தது.

பேருந்து பயணம்,
நேர விரயம்,
தனிமையின் காவு,
பயணம் கசந்தது.

பைக்கில் பயணம்,
முதுகில் முட்டல்கள்,
காதருகே சுவாசங்கள்,
செல்ல சீண்டல்கள்,
வாழ்க்கை இனித்தது.

இனித்தது இயங்கியது,
இன்னொரு உயிராய்,
இருவரின் இடையில்,
அதே பைக்கில்
அங்குலத்தில் இடைவெளி.

பைக்கும் மாறியது.
காருக்குள் மூவர்.
அதே சாலை, அதே பூமரம்
அதே காலை, அதே சூரியன்
ஆனால் அங்குலம் அடிகளாகிவிட்டதடி.
நீ அருகிலிருந்தும் துருவ தூரத்தில்.

இந்த வசதிகள் நமக்குள்
வரப்புகள் வரைந்தது,
சொகுசுகள் எல்லாம்
சுகங்களின் விலையில்.
வீணைகள் வாங்க
விரலையா விற்பது?

வா, என் கண்மணி
மறுபடி போவோம்,
பைக்கில் பயணம்,
முதுகில் முட்டல்கள்,
காதருகே சுவாசங்கள்,
செல்ல சீண்டல்கள்,
இனிக்கும் வாழ்க்கை
இன்னொரு முறை வாழ்வோம்.