Showing posts with label ஊடகம். Show all posts
Showing posts with label ஊடகம். Show all posts

Monday, November 7, 2011

மேனகாவை அடக்கி வையுங்கள் !!!!!

பொறி வைத்து பிடிப்பது என கேள்விப் பட்டிருக்கிறீர்களா?? ஒரு எலியை கொல்ல என்ன செய்வோம்??? ஒரு எலிப் பொறி வாங்கி வந்து அதற்குள் ஒரு துண்டு பழத்தையோ அல்லது எலியின் நாக்கில் எச்சில் ஊறவைக்கும் எதாவது ஒரு விஷயத்தை தொங்க விடுவோம். தனது உயிருக்கே ஆபத்து இருக்கிறது என்பதை கொஞ்சமும் அறியாத எலி, அந்த பழத் துண்டின் மீதுள்ள ஆசையில் வந்து, பழத்தை பிடித்து இழுத்தவுடன், அந்த பொறிக்கான கதவு அடைபட்டு, எலி மாட்டிக் கொள்ளும். அப்பொழுது நமக்கு வரும் ஆனந்தம் இருக்கிறதே ஆஹா, உடனே அந்த எலியை பிடித்து ஊசியால் குத்தி, அதன் தலையில் அடித்து என எல்லா வகை சித்திரவதைகளையும் செய்து அது துடி துடித்து சாகும் வரை பொறுத்திருந்து ரசித்து நமது குரூர வன்மங்களை எல்லாம் தீர்த்த பின் அதை வெளியே வீசி எறிந்து, அதை ஒரு காக்கை கொத்திக் கொண்டு போனால் மட்டுமே நமது மனம் திருப்திப் படும். இதே போன்ற பொறி வைக்கும் முறைகளைத்தான் தொல்லை செய்யும் புலி, சிறுத்தை போன்ற வற்றை பிடிப்பதற்கும், மற்றும் தோட்டத்தில் புகுந்த யானைகளை பிடிப்பதற்கும் பயன் படுத்துவார்கள்.

ஆனால், விலங்குகளை பிடிப்பதில் இன்னொரு முறை இருக்கிறது, அதுதான் வேட்டையாடுவது. அதாவது அந்த விலங்கிடம் நேரடியாக மோதி அழிப்பது, சீறும் சிறுத்தையையோ, அல்லது பாய்ந்தோடும் மானையோ அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து அழிப்பது என்பது ஒரு வீர விளையாட்டு.

முந்தைய வகை கொலை என்பது, விலங்கிற்கு தீனி வைப்பது போல் வைத்து அதைக் கொல்வதாகும், அதாவது வஞ்சித்து, ஏமாற்றி, அந்த விலங்கின் பலவீனத்தை முழுவதுமாக உபயோகித்து கொல்வதாகும். இரண்டாவது வகை அதன் பலத்தோடு முழுவதும் மோதி, தன் உயிரை பணயம் வைத்து ஜெயிப்பதாகும். முதல்வகை கோழைகளின் விளையாட்டு, இரண்டாவது வகை வீர விளையாட்டு.

இப்படி ஒரு கோழைத்தனமான அருவருப்பான கேவல விளையாட்டைத்தான் வெள்ளைக்கார நிற வெறி ஊடகங்கள் மற்றுமொருமுறை ஆடித் தீர்த்திருக்கின்றன. அதாவது பொறி வைப்பது தப்பில்லை எனவும், பொறியில் சிக்குவதுதான் தவறு எனவும் சித்தரித்திருக்கிறார்கள். பலியானதென்னவோ பாவம் பாகிஸ்தானியர்கள்.


News of the World என்ற ஒரு வெள்ளைக்கார நிற வெறி ஊடகம். இங்கிலாந்தை தலைமையகமாகக் கொண்டு உலகின் சில நாடுகளில் கால் பதித்திருந்த இந்த ஊடகம், மக்களுக்கு பயன் தரும் நல்ல செய்திகளை என்றுமே அச்சில் வார்த்ததில்லை. 1843 ம் ஆண்டு தனது செய்தி தரும் சேவையை துவக்கிய இந்த செய்தி நிறுவனம், அரசின் நலத்திட்டங்களையோ, அல்லது தனி மனிதர்களின் சாதனைகளையோ, அறிவியல் கண்டு பிடிப்புகளையோ, மக்களின் ஆழ்மனக் கிடக்கைகளையோ எப்பொழுதுமே சேகரித்ததில்லை. மாறாக, தனி மனித அந்தரங்கங்களை, காம விளையாட்டுகளை, படுக்கையறை ரகசியங்களை மட்டுமே விற்று, பரபரப்பு செய்திகளை தந்து, ஊடகத்துக்கே உரிய கிளுகிளுப்பு மாயையை மட்டுமே காசாக்கிக் கொண்டு இருந்திருக்கிறது.

நடிகைகளின் அந்தரங்ககள், வியாபார புள்ளிகளின் காம லீலைகள், அரசாங்க அதிகாரிகளிடம் பெண்களை அனுப்பி, ரகசியங்களை கறந்த பின், இந்த கேவலமான அரசியல் வாதியை பாரீர், இப்படி ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள் விடும் ஆசாமியிடம் தான் நாட்டின் மிக முக்கியமான துறை சிக்கியிருக்கிறது என பல செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தனது விற்பனையை பெருக்கி வந்திருக்கிறது. அந்த பெண்ணை அவனிடம் அனுப்பும் கேவலமான மாமா வேலையை நான் தான் செய்தேன் எனவும் அந்த ஊடகம் பரபரப்புக்கு மத்தியில் ஒப்புக்கு ஒரு வாக்கியமாக சொல்லியது, ஆனால் அரசியல்வாதியின் பலவீனம் ஊதிப் பெரிதாக்கப் படும் பொழுது, இந்த மாமா வேலையின் கேவலத்தன்மை அடி பட்டுப் போகும்.

2010 – ம் ஆண்டில் இங்கிலாந்தையே உலுக்கிய தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிக்கிய இந்தப் பத்திரிக்கையின் முதலாளி, அப்போதைய இங்கிலாந்துப் பிரதமரான கார்டன் பிரௌனையும், அவரது தொழிலாளர் கட்சி உறுப்பினர்களையும், இந்த ஒட்டுக் கேட்பு வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும்படி மிரட்டியிருக்கிறார்.

இப்படி பரபரப்புக்கு பெயர் போன இந்த பத்திரிகைக்கு மஜர் மொகம்மது என்ற ஒரு தெருப் பொருக்கி மனப் பான்மை கொண்ட ஒருவன் 20 வருடங்களுக்கு மேல் நிருபராக வேலை செய்துள்ளான். தனது 18 வது வயதிலேயே, தனது தந்தையின் நம்பிக்கைகுரிய குடும்ப நண்பர்களின் வியாபாரத்தை, திருட்டு சி.டி. விற்பனை என்று சொல்லி அம்பலப் படுத்தி வெளிச்சத்துக்கு வந்தவன் தான் இந்த கேவலப் பிறவி. எல்லா இடங்களிலும் தன்னை ஒரு அரேபிய ஷேக்கு போல் காண்பித்துக் கொள்ளும் இவன் பல இடங்களில் பல பெயர்களில் ஊடுருவியிருக்கிறான்.

பலமுறை தவறான செய்திகளை பிரசுரித்து, அரசின் கண்டனத்தையும் பெற்றிருக்கிறான். 2004 – ம் ஆண்டில் ஒரு இஸ்லாமிய தீவிரவாத குழு அணு ஆயுதம் தயாரிக்க மூலப் பொருள் வாங்கியதாகவும், அந்த பரிமாற்றத்திற்கான முழு ஆதாரமும் தன்னிடம் உள்ளது எனவும், இந்த மூன்று நபர்கள் தான் அந்த தீவிர வாத குழுவை சேர்ந்தவர்கள் என ஒரு மூன்று பேரை இவன் அடையாளம் காட்ட, தீவிரவாதத்தால் கதி கலங்கிப் போயிருந்த இங்கிலாந்து உடனே அவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் அப்பாவிகள் எனவும், இந்த மஜர் மொகம்மது தான் பரபரப்புக்காக ஒரு புரளியை கிளப்பியுள்ளான் எனவும் தெரிய வந்தது. இப்படி பல விஷயங்களில் இங்கிலாந்து பாராளுமன்றத்தையே அதிர வைக்கும் அளவுக்கு இவனது புரளிகள் இருந்துள்ளன.

2003 –ம் ஆண்டில் இங்கிலாந்தின் மாடலிங், இசை, மற்றும் பல வியாபாரத்துறைகளில் கோலோச்சிக் கொண்டிருந்தவரும், கவர்ச்சிக் கட்டழகியாக வலம் வந்தவரும், புகழ்பெற்ற இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமின் மனைவியுமாகிய விக்டோரியாவை கடத்தப் போகிறார்கள். அந்த கடத்தல் திட்டத்திற்கான முழு ஆதாரமும் என்னிடம் உள்ளது என செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினான். கடத்தல் காரர்களாக அவன் அடையாளம் காட்டிய நபர்களை பிடித்து தீவிரமாக விசாரித்ததில் அப்படியொரு திட்டம் இருந்ததற்கான சாத்தியங்களே இல்லை என காவல் துறை கண்டறிந்தது.

இப்படி ஒரு கேவல பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த இந்த மஜர் மொகம்மதுக்கு, பாகிஸ்தானிய கிரிக்கெட் அணியுடன் ஒரு தனி விளையாட்டு விளையாடி பார்க்கும் விபரீத ஆசை திடீரென உதித்தது. இதற்கு தகுந்தாற்போல் கடந்த வருடத்தில் பாகிஸ்தான் அணியும் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. அப்பொழுது ஒரு கிரிக்கெட் சூதாட்ட வித்தகனான மஜர் மஜீத் என்பவனுடன் கூட்டணி அமைத்து பாகிஸ்தான் ஆட்டக்காரர்களுக்கு பொறி வைத்தார்கள். இதில் சிக்கிய ஏழு பாகிஸ்தானியர்களில், மூன்று பேர் மீது குற்றம் நிரூபணமாகி, அவர்களது எதிர்காலம் முழுவதும் பாழாகி இன்று சிறையில் கம்பி எண்ண வேண்டிய அவல நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

இங்கு கவனிக்க வேண்டியது, இந்த விளையாட்டு வீரர்கள் பணத்தாசை பிடித்து அலைந்தவர்கள் போலவும், பணத்துக்காக தனது ஒட்டு மொத்த விளையாட்டுத் திறனையும், தனது நாட்டின் புகழையும் விற்கத் துணிந்த கேவல பிறவிகள் போலவும் சித்தரிக்கப் படுகிறார்கள். ஆனால், இதற்குப் பின்னால் உள்ள ஊடக தகிடு தத்தங்கள் சகல சௌகர்யங்களுடன் மறைக்கப் பட்டு, பரிதாபமான விளையாட்டு வீரர்கள் தான் தேச துரோகிகள் என அடையாளம் காட்டப் படுகிறார்கள். இந்த புனித பணியை செய்த மஜர் மொகம்மது ஒரு பெரிய உத்தமன் போல் உலாவி வருகிறான். மேலும் கிரிக்கெட் எனும் புனித விளையாட்டை சூதாட்டத்தின் கோரப் பிடியிலிருந்து காப்பாற்ற வந்த பாரமாத்மாவின் மறு உருவமாகவே மஜர் மொகம்மது அவதாரமெடுத்திருக்கிறான்.

இங்கு சில கேள்விகள் :

1. பாகிஸ்தானின் குக்கிராமங்களில் இருந்து தனது திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து விளையாட வரும், இந்த சிறுவர்களுக்கு, இந்த பணம் கொழிக்கும் விளையாட்டின் அனைத்து பரிமாணங்களும், அந்தபரிமாணங்களுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் விபரீதங்களைப் பற்றிய பால பாடங்களும் எப்பொழுதாவது சொல்லிக் கொடுக்கப் பட்டதா??
2. ஒரு வெளி நாட்டு மண்ணில் விளையாடப் போகும் பொழுது, அவர்கள் யாருடன் பேச வேண்டும், அல்லது குறிப்பாக யாருடன் பேசக் கூடாது என்பது போன்ற வரையறைகள் சொல்லித் தரப் பட்டதா??
3. அப்படியே சொல்லித் தரப் பட்டிருந்தாலும், ஒரு விளையாட்டு வீரனின் தொடர்புகளை, அவனுடன் பேசும் நபர்களை, அல்லது அவனை சந்திக்கும் பத்திரிகையாளர்களை அந்த நாட்டு விளையாட்டு குழுவின் தலைமை, இம்மியளவேனும் கண்டுகொள்ளாமலிருக்குமா??
4. அப்படியே பணத்திற்கு ஆசைப்பட்டு, இந்த வீரர்கள் தங்களது திறமையையும், தன் மானத்தையும் அடகு வைக்க முன்வந்து, தப்பாட்டம் ஆடுகிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டாலும், அவர்களை தப்பாட்டம் ஆட வைத்தவர்களையும் குற்றவாளிகளாக்காமல், அவலங்களை துகிலுரிக்க வந்த மகாத்மா போல சித்தரிப்பது ஏன்??
5. லஞ்சம் வாங்குவது குற்றமென்றால், லஞ்சம் கொடுப்பது தார்மீக செயலா??
6. ஊடகம் என்றால் எந்த ஒரு தரம் தாழ்ந்த செயலையும் செய்யலாம், ஆனால், பலியாடுகள் பரிசுத்தவான்களாய் இருக்க வேண்டுமென்பது எவ்வகை நியாயம்??
7. பாகிஸ்தானியர்களுடன் இந்த அருவருப்பான விளையாட்டை ஆடிய வெள்ளைக்கார நிறவெறி ஊடகங்கள், தனது நாட்டு வீரர்களையும் இப்படி பரீட்சித்துப் பார்க்க தயாரா??
8. இன்று கருப்பர்களான பாகிஸ்தானிய வீரர்கள் மீது விசாரணை நடத்தி உடனடி தீர்ப்பு வழங்கும் சர்வதேச கிரிக்கெட் சங்கமாகட்டும், இங்கிலாந்தின் நீதிமன்றமாகட்டும், வெள்ளைக்கார தென் ஆப்பிரிக்க வீரன் ஹர்ஷெல் கிப்ஸ் மீதும் சூதாட்ட குற்றச் சாட்டு உள்ளதே அதை விசாரிக்காதது ஏன்??
9. அவன் வெள்ளைத்தோல் என்பதால், அவனை விசாரிப்பது அவசியமில்லையா??

ஊடகப் போர்வையில் உலா வரும் கேவலப் பிறவிகளே, இங்கு மேனகைகள் தொடை தெரிய ஆடையணிந்து, இடுப்பின் வளைவுகளை எடுப்பாய் காட்டி, மார்பு குலுங்க நடனமாடுவார்களாம், ஆனால், விசுவாமித்திரன் மட்டும் தன் தவத்தில் நிலைத்திருக்க வேண்டுமா??? எந்த ஊர் நியாயமிது??

மேனகாவை அடக்கி வையுங்கள். எங்கள் விசுவாமித்திரர்கள் தவத்தில் நிலைத்திருக்கட்டும்.

Monday, October 18, 2010

ஜுகல்பந்தி 19 - 10 - 2010 , நாட்டு/வீட்டு நடப்புகள்


நாட்டு நடப்புகள் :


வெற்றிகரமாக காமன்வெல்த் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கும்படியாக ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நூற்றியொரு பதக்கங்கள், 4 X 100 மீட்டர் தூர ஓட்டத்திலும் தட்டு எறிதலிலும் நம் இந்திய வீராங்கனைகள் நிகழ்த்திய சாதனைகள் எந்த இந்தியனது நெஞ்சையும் நிமிரச் செய்யும். குத்துச் சண்டையும், மல்யுத்தமும் இந்தியர்களுக்கெனவே எழுதப் பட்டதோ என்னவோ என நினைக்க வைக்கும் படியாய் பதக்கங்களை வாரிக் குவித்து விட்டனர். இந்தியாவின் தங்க பதக்கங்களில் கடைசி பதக்கத்தை போராடிப் பெற்ற சானியா நெய்ல்வாலின்ஒவ்வொரு அடியையும் ரசித்த ரசிகர்களின் கர கோஷத்தால் அரங்கமே அதிர்ந்தது. கடைசியில் இறுதி விழா நிகழ்ச்சிகளில் கண்ணைப் பறிக்கும் லேசர் விளக்குகளின் ஜாலம், இந்திய பாரம்பரிய வீர விளையாட்டுகளின் வீர சாகசங்கள், ராணுவ வீர்ர்களின் கட்டுக்கோப்பான இசை நிகழ்ச்சி என இறுதி விழா களைகட்டினாலும், குழப்பங்களின் நாயகனான சுரேஷ் கல்மாடி இறுதி உரையில் உளறித்தள்ளி ஒரு வழியாய் முடித்தார்.


ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகாரிகளின் திறமையின்மை, ஒப்பந்தக்காரர்களின் கையாலாகத்தனம், தெளிவான திட்டமிடாமை, கடைசி நிமிடம் வரை ஒருவரையொருவர் குற்றம் சொல்லி விரல் நீட்டி விளையாடியது, போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்புவரை அடாமல் பெய்த மழையால் விழைந்த இயற்கையின் சதி, பொறுப்பானவர்களின் சோம்பேறித்தனம், எங்கு குற்றம் கண்டு பிடிக்கலாம் என கண்ணில், மூக்கில், வாயில் இன்னும் எல்லா இடத்திலும் விளக்கெண்ணய் ஊற்றிக்கொண்டு ஆராய்ந்து, பேனை பெருமாளாக்கி, அதை உலகம் முழுவதும் தம்பட்டம் அடித்து, தனது நிறவெறிக்கு தீனி போட்டு தனக்குத்தானே திருப்தியாகிக் கொண்ட மேற்கத்திய நிறவெறி ஊடகங்களின் பொய் பிரச்சாரம், அதற்கு துதி பாடிய வெட்கங்கெட்ட, மான ரோஷமில்லாத, உப்புப் போட்டு சோறு திங்காத இந்திய ஊடகங்களின் உள்நாட்டு சதி என எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்தியா சாதித்துக் காட்டியிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமாய் இருந்த அந்த 21,000 தன்னார்வ சேவையாளர்களுக்கும், மற்றும் தனது கடைமையில் சற்றும் தளராது சர்வ தேச அரங்கில் இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்க வைத்த ஒவ்வொரு ஊழியனுக்கும் எங்களது நன்றிகலந்த வணக்கங்கள்.
ஆனால், அதே வேளையில் நாங்கள் இன்னும் பரிணாம வளர்ச்சியில் ஒரு படி பின் தங்கித்தான் இருக்கிறோம், நாங்கள் மனிதர்களாய் வளர்வதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகும் என நிரூபித்து விட்ட ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களின் அருவருப்பான நிறவெறியாட்டத்துக்காக அவர்களை செருப்பிலடித்து சிறையிலடைத்திருக்க வேண்டும். ஆனால் இந்திய போலீஸோ வழக்கம் போல வெள்ளைத்தோலின் முன் மண்டியிட்டிருக்கிறது. இதற்கு எங்கள் வன்மையான கண்டனங்கள்.


உலக நடப்பு :


சிலி நாட்டில் நடந்த சுரங்க விபத்தும், பின் சிறைப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களும், அவர்களை அதிசயமாய் மீட்ட கதையையும் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதில் நிறைய சுவராஸ்யமான சம்பவங்களும் நிகழ்ந்திருக்கிறது. எல்லாம் ”கில்மா” மேட்டர்தான்.
யோன்னி பாரியோஸ் என்ற இந்த சுரங்கத் தொழிலாளிக்கு 28 வருடங்களுக்கு முன் மார்த்தா சாலினாஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. சகதர்மிணியுடன் ஒழுக்கமாகத்தான் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். என்னவாயிற்றோ ஏதோ தெரியவில்லை, திடீரென ஒருநாள் இருவருக்கும் பிணக்கு ஏற்பட 2009 ம் ஆண்டில் மனைவிக்கு தெரிவிக்காமலே, அவரை விவாகரத்து செய்யாமலே படத்தில் அவர் அணைத்திருக்கும் பெண்ணுடன் (சூசன்னா) தனியே வசித்து வந்திருக்கிறார்.


இவர் சுரங்கத்தினடியில் மாட்டிக் கொண்டதும் சக நண்பர்களுக்கு ஒரு மருத்துவரைப் போல இருந்து உதவிகள் செய்தும், அவ்வப்பொழுது எல்லோரையும் சிரிக்க வைத்தும் மனோதிடம் கெடாமல் பார்த்துக் கொண்ட இந்த நல்ல மனிதருக்கு இப்படி ஒரு மறுபக்கம் இருக்கிறதென எல்லாரும் அறிந்து கொண்டது இந்த சுரங்க அடைப்பு விவகாரத்துக்கு அப்புறம்தான்.
இவர்கள் உள்ளே இருக்கும்போதே, நீங்கள் வெளியே வந்த்தும் யாரைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்க்கப்பட்ட கேள்விக்கு, நான் என் பெரிய வீட்டையும் சின்ன வீட்டையும் பார்க்க விரும்புகிறேன் என்று இவர் சொல்லிவிட, இரண்டு அம்மணிகளும் சுரங்கத்துக்கு வெளியே நேருக்கு நேர் சந்தித்ததில் குடுமி பிடி சண்டையாகிவிட, கஷ்டப்பட்டு விலக்கி வைத்திருக்கிறார்கள். இதை அறிந்து கொண்டதும் இவரது மனைவி இவர் வெளியே வருவதை நான் தொலைக்காட்சியில் கூட பார்க்க விரும்பவில்லை என வீம்பு பிடித்து கோபம் கொண்டு போய் விட்டார். ஆனால் இவரது இப்போதைய நாயகி மாத்திரம் கால்கடுக்க நின்று கண்ணீர் மல்க வரவேற்றிருக்கிறார்.


இப்படி உள்ளிருந்த இன்னும் நிறைய பேரின் ரகசிய சொந்தங்கள் சுரங்கத்துக்கு வெளியே அவர்கள் பெயர்கள் ஏந்திய பலகைகளுடன் குவிந்து விட, ஏகத்துக்கும் குடுமி பிடி சண்டைகள் நிகழும் அபாயம் இருப்பது கண்டு அரசாங்கம் இதை எப்படி சமாளிப்பது என திணறிப் போய் விட்டதாம்.


ங்கொய்யால பக்கம் : (கொஞ்சம் மீள்ஸ்)


அப்பா, அம்மாக்கு புது துணி


தங்கச்சிக்கு புது செல்போன்


தம்பிக்கு டிஜிட்டல் கேமரா


பொண்டாட்டிக்கு புது சங்கிலி


புள்ளைங்களுக்கு பட்டாசு


பக்கத்து வீட்டுக்கு பலகாரம்


ங்கொய்யால


விட்றா, விட்றா, அடுத்த தீவாளிக்கு


புதுச்செருப்பு வாங்கிக்கலாம்.

Tuesday, May 25, 2010

வாந்தி வாந்தியா வருது.......

ஒரு எட்டோ அல்லது ஒன்பதோ வயதுப் பையன் ஒரு ஏழு வயதுப் பெண்ணின் தொடைகளுக்கு நடுவே கையைவிட்டு பிடித்து அலாக்காக தூக்குகிறான். தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்து விட்டு விட்டு அந்தப் பெண் குழந்தையை கீழே விடுகிறான். அவன் அணிந்திருக்கும் ஜீன்ஸ் பேண்ட் முழங்காலுக்கு கீழே கிழிந்திருக்கிறது. பட்டையான ஒரு பெல்ட் கட்டி, சட்டையின் மேல் பட்டன்களை திறந்து விட்டு சட்டையின் கீழ் முனைகளை முடிச்சு போட்டிருக்கிறான். தலையில் ஒரு கைக்குட்டையை பட்டையாக சுற்றிக் கட்டியிருக்கிறான். இடது முழங்காலுக்கு மேல் ஒரு கைக்குட்டையை சுருட்டிக் கட்டி, வலது மணிக்கட்டில் ஒரு கைக்குட்டையை கட்டி என ஒரு எட்டு வயது பையனில் ஒரு திரைப்பட நடிகனின் அத்தனை அலங்காரங்களையும் பார்க்க முடிகிறது.

அந்த ஏழு வயதுப் பெண்ணின் மார்பில் ஒரு துணி சுற்றியிருக்கிறது. தொப்புளை சுற்றிலும் ஜிகினா மாதிரி எதுவோ ஜொலிக்கிறது. ஒரு ஆறு அல்லது எட்டு அங்குலத்துணி இடுப்பில் சுற்றியிருக்க கறுப்பு நிறத்தில் ஒரு உள்ளாடை அணிந்து அம்மணம் மறைத்திருக்கிறாள். முகத்தில் மிதமிஞ்சிய பூச்சுகள், உதட்டுச்சாயம், காதில் புரியாத வடிவத்தில் தொங்கட்டான்கள்.

80 களில் வெளிவந்த ஒரு ஹிந்திப் பாடலுக்கு ஹெலன் என்னும் கவர்ச்சி நடிகை அரைகுறை ஆடையுடன் ஆடிய ஒரு நடனத்தை இந்த இருவரும் ஆடுகிறார்கள். அந்த நடனத்தை வடிவமைக்க இரு நடன கலைஞர்கள். அந்த நடனத்திற்கு மதிப்பெண் கொடுக்க ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரண்டு நடுவர்கள், ஒரு காலத்தில் ஹிந்தி திரைப்பட உலகின் சிறந்த நடன இயக்குனராக இருந்த ஒரு வயதான பெண்மணி சிறப்பு விருந்தினர், இத்துடன் இந்தக் குழந்தைகளின் பெற்றோர் என ஆட்டம் களை கட்டுகிறது. ஒரு பிரபல ஹிந்தித் தொலைக்காட்சியில் இந்த நடனப் போட்டி.

அந்த இரண்டு பிஞ்சுகளும் பின்னணியில் ஒலிக்கும் பாடலுக்கு ஏற்றபடி உடலை நெளிக்கவும், கால்களை தூக்கவும், ஒருவரையொருவர் கட்டித் தழுவவும் செய்கிறார்கள். நடுவர்களும் கூட்டமும் பார்த்து ஆர்ப்பரிக்கிறது. பெற்றோர்கள் சிறப்பு நடுவரின் பாராட்டைக்கேட்டு எதோ பிறவிப் பயனை அடைந்துவிட்டது போல் கைகளை தட்டி குதூகலமடைகிறார்கள். சிறப்பு நடுவர் இந்த நடனத்தை சால்சா வகை நடனம் என்கிறார். பெற்றோருக்கு பெருமிதம் தாங்கவில்லை.

அடுத்ததாக ஒரு ஜோடி, வேறு ஒரு பாடல், இப்பொழுது பையன் ஒரு எட்டு வயதுப் பெண்ணின் மார்பை ஏடாகூடமாக தடவி கழுத்தில் முத்த மிடுகிறான். திடீரென்று அவன் கால்களை விரித்து நிற்க இந்தப் பெண் அவன் கால்களுக்கு நடுவே வழுக்கிப் போகிறாள். மேடையின் முழு அளவிற்கும் ஓடித்திரியும் இந்த ஜோடி, திடீரென்று ஒருவர் இடுப்பை ஒருவர் அணைத்தபடி உடலுறவு கொள்வது போல் அசைகின்றனர். உடனே நடுவர் ஒருவர் எழுந்து நின்று கையைத் தட்டுகிறார். முடிவில் அந்த Pelvic thrust was a perfect movement என்று சொல்கிறார். இங்கும் பெண்ணுக்குஅதே அங்குல அளவு உடைகளும், பையனுக்கு கைக்குட்டை கட்டுகளும் தவறாது இடம் பெறுகிறது. பெற்றோர்கள் கையைத் தட்டி குதூகலிக்கின்றனர். முடிவில் சிறப்பு நடுவர் இதை Contemporary dance என்கிறார்.

இதற்கு அடுத்த ஜோடி, இரண்டு பொடியன்கள், ஒரு ஏழோ அல்லது எட்டு வயதுப் பெண், இரண்டு பையன்களும் பாடல் ஆரம்பித்தவுடன் வந்து இந்த பெண்ணை தங்களது இடுப்பால், அவளது இடுப்பில் இடிக்கிறார்கள். அந்தப் பெண் கெக்க பிக்கவென சிரித்து விட்டு ஹூம், Crazy Boys என நடையை கட்டுகிறாள். கூட்டம் கையைத்தட்டி ஆரவாரிக்கிறது.


இருங்கள், இதை எழுதும் பொழுதே எனக்கு வாந்தி வரும்போல் இருக்கிறது. கொஞ்சம் வாந்தி எடுத்துவிட்டு பின்பு வருகிறேன்.


எந்த தொலைக்காட்சியை எடுத்தாலும் நடனப் போட்டிகள் அல்லது பாட்டுப் போட்டிகள் தான். அதுவும் பிஞ்சு குழந்தைகளின் Pelvic Thrust. இந்த வக்கிரங்களை தங்கள் குழந்தைகள் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியுறும் பெற்றோர்கள், அதற்கென அவர்கள் செலவழிக்கும் பணம், நேரம். அதற்கு மதிப்பெண் கொடுக்கும் நடுவர்கள், அதை பாராட்டிப் பேசும் சிறப்பு விருந்தினர்கள், இதை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி,

யோவ், ங்கொய்யால, எங்கய்யா போயிட்டிருக்கறோம் நம்ம என ஓங்கி தொண்டை கிழிய கத்தவேண்டும் போலுள்ளது.

90 களில் ஒவ்வொரு இந்திய தொலைக் காட்சிகளிலும் மாணவர்களுக்கென வினாடி வினா போட்டிகள் நடத்தப் பட்டது, ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து பள்ளி வாரியாக அவர்களிடத்தில் பொது அறிவு, விஞ்ஞானம், மற்றும் விளையாட்டு போன்றவற்றில் கேள்விகள் கேட்கப் பட்டு, மதிப்பெண்கள் கொடுக்கப் பட்டன, வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் அளித்தார்கள். சித்தார்த்த பாஸு நடத்திய அல்ஃபா ப்ளஸ் என்ற நிகழ்ச்சி அநேக பெற்றோரால் அவர்கள் குழந்தைகளுடன் விரும்பி பார்க்கப் பட்டது. நவ்ரோத்தம் பூரி என்ற மனிதரை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. விளையாட்டில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்வையும் மனிதர் விரல் நுனியில் வைத்திருப்பார். அவரின் விளையாட்டு கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கு பெற அன்றைய மாணவ மணிகள் கனவு கண்டு தவமே இருந்தார்கள் எனலாம். ஏன் இப்பொழுது எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் அங்கு தவறாது ஆஜராகி வர்ணனையில் கலக்கும் ஹர்ஷா போக்ளே கூட ஒரு காலத்தில் ESPN தொலைக்காட்சியில் விளையாட்டு கேள்வி பதில் போட்டிகள் நடத்தியவர்தான்.

இதனால் குழந்தைகளின் அறிவு தாகம் பெருகியது. பெற்றோர்களும் குழந்தைகளும் சரிசமமாக இந்த போட்டிகளிலும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிகழ்ச்சிகளோ அல்லது இதன் முக்கியத்துவமோ எப்படி இவ்வளவு சீக்கிரம் ஒழிந்து போனது என தெரியவில்லை.

இன்று விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு பாட்டு போட்டிக்காக அந்த குழந்தைகள் எத்தனை வகுப்புகளை தியாகம் செய்தார்களோ தெரியவில்லை, இன்னும் அவர்களுக்கு எத்தனை விதமான உடைகள் அணிவித்து பாடவைப்பார்களோ ஈஸ்வரா…. நிகழ்ச்சியை எவ்வளவு நீட்டி முழக்கி நாட்களை கடத்துகிறார்களோ அவ்வளவும் தொலைக் காட்சிக்கு லாபம் தான். ஆனால், அந்த பிஞ்சுகள் இந்த வயதில் எதைக் கற்க வேண்டுமோ, எதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமோ அதை விட்டு விட்டு “ அந்த ரெண்டாவது லைன்ல வர்ற மூணாவது வார்த்தைல ஒரு குட்டி ஜெர்க் வர்றது, அதை கரெக்ட் பண்ணுங்க, அடுத்ததா ஆலாப்ல கொஞ்சம் சுதி பிசிறடிக்குது, அதை சரி பண்ணிக்கோங்க” போன்ற அறிவுரைகளில் சீரழிகிறார்கள். பெற்றோர்களே தங்களது பிஞ்சுக் குழந்தைகளின் Pelvic thrust ஐ பார்த்து ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்கிறார்கள்.

ஒரு வருங்கால சமுதாயத்தின் முழுகவனத்தையும் சினிமா என்ற சமூக அவலத்தின் பால் திசை திருப்பி, முற்றிலும் சீரழிக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இந்த சமூக வன்முறை கும்பலிடம் இல்லையா? பிஞ்சுகளின் மூளையை சினிமா ஆக்கிரமித்தால், வருங்கால சந்ததியில் மனித வளம் என்பது மருந்துக்கு கூட இருக்காது.

Wednesday, March 17, 2010

என்னத்தச் சொல்ல.....



இந்த மின்னஞ்சல் அனுப்பறது ரொம்ப சௌகரியமா இருந்தாலும், சுகங்கள் என்றுமே ஆபத்தானவைதானே. எங்கள் நட்பு வட்டாரத்தில், மகாபாரதத்தைப் பற்றி சுற்றில் விடப்பட்ட ஒரு மின்னஞ்சலை எனக்கு ஒரு நண்பர் ஃபார்வேர்டு (இதற்கு யாராவது சரியான தமிழ் வார்த்தை சொல்லுங்களேன்) செய்ய, அதை நான் மற்றவர்களுக்கு அனுப்ப, மற்றவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்கள் என அனுப்ப, அந்த சங்கிலி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறதோ அல்லது முடிந்து விட்டதோ தெரியவில்லை. ஆனால், வில்லங்கமே இந்த மாதிரி தொடர் மின்னஞ்சல்களில்தான் ஆரம்பிக்கிறது. நமக்கு அனுப்பியவர்களின் முகவரியோடு கூட நாம் அதை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறோம். அது நமது நண்பர்கள் வட்டத்தை விட்டு, பல வட்டங்களில் போய், பல நாடுகளில் சுற்றும் பொழுது, எத்தனையோ முகவரிகள் இணைந்து விடுகிறது. இப்படி பல முகவரிகளை பார்த்த ஒரு வக்கிர மனிதன், அதிலிருக்கும் பெண்முகவரிகளை பொறுக்கிஎடுத்து, அவர்களுக்கு வக்கிர மெயில்களை அனுப்ப ஆரம்பித்தவுடன், அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. இந்த இம்சை தொடர்ந்து நடைபெறவே, ஒரு சில மென்பொருள் துறை பெண்கள், எங்கிருந்து இது ஆரம்பித்தது என துப்புத்துலக்கி அவனை பிடித்தும் விட்டார்கள். அதற்கு முன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் அனைத்து ஆண்களையும் அவர்கள் சந்தேகப்பட்டது தான் மனதை நோகடித்து விட்டது. அவன் ஐரோப்பாவில் இருக்குமொரு தமிழன்.(வெட்கக் கேடு). பிறகு என்ன, பொது மன்னிப்பு, நான் இதை விளையாட்டுக்குத்தான் செய்தேன். இதை பெருந்தன்மையுடன் எடுத்துக் கொள்வார்கள் என நினைத்தேன்.(ங்கொய்யால கையில கிடைச்சா உனக்கு இருக்குடி) இவ்வளவு வீரியமடையும் என நான் நினைக்கவில்லை என்பது போன்ற வழக்கமான வழிதல்களுடன் அவன் நண்பர்கள் வட்டத்திற்கு வெளியே தூக்கி எறியப் பட்டிருக்கிறான். இப்பொழுதெல்லாம் பொது மின்னஞ்சல்களை முகவரிகளையெல்லாம் அழித்து விட்டு, BCC ல் முகவரி இட்டு அனுப்புகிறேன். ஆனால் இதையும் கண்டு பிடிக்க உத்திகள் இருக்கிறதோ என்னவோ, என்னைப் போன்ற ஞான சூன்யங்களுக்கு தெரியவில்லை. அவன் எங்கள் நட்பு வட்டத்தில் இல்லவே இல்லை. ஆனால் இந்த மின்னஞ்சல் என்பது எவ்வளவு ஒரு சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனமாயிருக்கிறதோ, அதிலும் நம்மை அறியாமலே நாம் ஒரு சில வக்கிர ஆசாமிகளின் வலைக்குள் இழுக்கப்படுகிறோம் என்பதை அறியும் போது என்னத்தைச் சொல்ல.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஒரு வழியாக நித்தியானந்தாக்கள் சகாப்தம் அமைதியாகி, மக்கள் வேறு பிரச்சனைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இனி அடுத்த சாமியாரோ, பாஸ்டரோ அல்லது மௌலாவோ கிடைக்கும் வரை அமைதி காக்க வேண்டியதுதான். ஊடகங்களும் அலைந்து திரிந்து, எப்படியாவது அடுத்தவரை வெகு சீக்கிரத்தில் நம்முன் கொண்டு வந்து நிறுத்தி விடும். அப்புறமென்ன கொஞ்சம் அடித்துக்கொள்ளுவோம், அடுத்தவன் சுதந்திரம், அப்பள மந்திரம், ஊடக தந்திரம் என்று பலரும் குமுறுவோம். அமைதியாகிவிடுவோம். இந்த சாமியார்களுடன் தொடர்புகொண்ட நமக்குத்தெரிந்த நபர் இருப்பின் அவரை பார்த்து கொஞ்சமும் கூசாமல் விரல்களை நீட்டி, “சே, இவுரு ரொம்ப நல்லவர்னு நினைச்சேன். இவுருமா அப்படி, என்னால நம்பவே முடியல” ன்னு சொல்லி நமது நடுநிலைமையை நிலை நாட்டிக் கொள்வோம். என்னத்தச் சொல்ல…..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பகுஜன் சமாஜ் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சி, தனதி 25வது பிறந்த நாளை கொண்டாடியது. அதற்காக லக்னௌ நகரமே நீல வர்ணம் பூசிக் கொண்டு விழாக் கோலம் பூண்டது. தனது ஆடம்பரங்களுக்கு பெயர் போன இன்றைய உத்தர பிரதேச முதலமைச்சரான மாண்புமிகு (ஹூக்கும்), மாயாவதி அவர்களுக்கு, அவரது கட்சியின் ஏழைத் தொண்டர்கள் எல்லாம் தங்களது எளிய வருமானத்திலிருந்து ஒரு மாலையை உருவாக்கி பரிசளித்தார்கள். கர்நாடகாவிலிருந்து இதற்கெனவே சிறப்பாக அழைத்துச் செல்லப்பட்ட மாலை தயாரிப்பாளர்களின் மூன்று மாத கடின உழைப்பில் உருவானதுதான் இந்த சர்ச்சைக்குரிய மாலை. என்னன்னு கேக்கறீங்களா, பூவைக் கோத்து மாலை போட்ட எவன்யா கேக்கப்போறான், இவுங்க கோத்ததெல்லாம் 1000 ரூவா நோட்டு, மொத்தம் எத்தனை நோட்டு தெரியுமா, இருவத்தி ரெண்டரை கோடி ரூபாயாம். இந்த கட்சியின் ஏழைத்தொண்டர்கள் கொடுத்த பணத்திலிருந்து 200 கோடி ரூபாய் செலவு பண்ணி ஒரு விழா, அதுல கட்சியின் தலைவிக்கு இருவத்திரெண்டரை கோடியில ஒரு மாலை, யப்பா, தலைவருங்களா, எங்கியோ போயிட்டீங்க, என்னத்தச் சொல்ல….

Tuesday, March 2, 2010

சச்சினின் சாதனை விரைவில் முறியடிக்கப்படும்.

வரலாற்று ஆதாரங்கள் எத்தனையோ கொடுக்க முடியும். கிரிக்கெட் அங்கு தோன்றியது, இங்கு வளர்ந்தது, இப்படி நிமிர்ந்தது, அப்படி நடந்தது, அழகாய் அமர்ந்தது, ஜோதியாய் ஜொலிக்கிறது என வர்ணிக்கவும் முடியும். ஆனால், ஒரு சில வெள்ளைக்கார வாலிபர்களுக்கு இளவேனிற்காலத்தில் வெய்யிலின் கதகதப்பில் நாள் முழுதும் நின்று, தங்களது தோல் நிறத்தை மாற்றி மெருகேற்ற தேவைப்பட்ட பொழுது போக்கின் பரிணாம வளர்ச்சிதான் இந்த விளையாட்டு என்பதுதான் உண்மை.

இந்தியா கிரிக்கெட்டில் உலகக்கோப்பை வென்று வரும் வரை ஹாக்கியும், மல்யுத்தமும் இந்தியா முழுக்க பரவலாகவும், கால்பந்து என்பது மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும், மற்றும் போர்ச்சுகீசிய தடயம் இன்னும் மிச்சமிருக்கும் கோவா பிராந்தியத்திலும் விளையாடப் பட்டது என்றாலும், இந்த விளையாட்டுகள் கிரிக்கெட்டுக்கு முன்பாக தனது முக்கியத்துவத்தை இழந்து இன்று பரிதாபமாக நிற்கிறதே, அந்த நிலைக்கு முழுமையாக தள்ளப் படவில்லை.

ஆனால் குறுகிய காலத்திற்குள், இந்த எல்லா விளையாட்டுகளையும் பின்தள்ளி விட்டு, கிரிக்கெட் என்பது மாத்திரம் எப்படி இவ்வளவு தூரம் ஒவ்வொரு இந்தியனையும் ஆக்கிரமித்திருக்கிறது என்பது ஒரு விந்தையாக தோன்றினாலும், இந்த ஆளுமைக்குப் பின் இருக்கும் உலகளாவிய தில்லாலங்கடிகள் மலைக்க வைக்கிறது.

முக்கியமாக தொலைக்காட்சி என்னும் ஊடகம் இந்த விளையாட்டை வளர்த்தெடுத்து நிலை நிறுத்தியதில் முக்கிய பங்காற்றியது. கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கும், கிரிக்கெட்டுக்கும் அதன் இயல்பிலுள்ள ஒரு மிகப் பெரிய வித்தியாசமே கிரிக்கெட்டை மாத்திரம் தூக்கி நிறுத்த ஒரு மிகப் பெரிய காரணமாகி விட்டது.

கால்பந்தில் போட்டி ஆரம்பிக்கும் நொடி முதல் 45 நிமிடங்களுக்கு கேமராவை வேறு எங்கும் திருப்ப முடியாது, பந்து போகும் இடங்களையும், ஆட்டக் காரர்களின் கால்களின் லாவகத்தையும் மட்டுமே காட்ட வேண்டியிருக்கும். ஹாக்கியும், கைப்பந்தும், கூடைப் பந்தும் கூட இப்படித்தான், ஆட்டத்தின் துவக்கத்திலிருந்து இறுதி வரை விளையாட்டைத்தவிர வேறு எதையுமே உங்களால் தொலைக் காட்சியில் காட்ட முடியாது. ஆனால் கிரிக்கெட் அப்படியல்ல, ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்குமான இடைவெளியில் குறைந்த பட்சம் மூன்று விளம்பரங்களை காட்டலாம். தொலைக்காட்சியின் கணக்குப் படி பார்த்தீர்களானால், ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு நிமிடத்திற்கொருமுறை, குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்கள் விளம்பரங்களுக்கான நேரம் கிடைக்கும். இதில் ஆட்டக்காரருக்கு அதிகம் வியர்த்து வடிந்தால், அவர் தண்ணீர் குடித்தால், அவரது பேண்ட் கிழிந்தால், அவருக்கு கால் வலித்தால், தும்மல் வந்தால், பந்து பழையதானால் என எத்தனையோ காரணங்களுக்காக முழு ஆட்டத்தையும் நிறுத்தி விட்டு, விளம்பரம் காண்பிக்க முடியும். அவர் நான்கு ரன்களோ, ஆறு ரன்னோ அடித்தால், பந்து பவுண்டரி லைனை தொட்டால் அந்த கோட்டில் கூட ஒரு விளம்பரம், விளம்பரத் தட்டிகள் வைத்து இந்த தட்டியின் மீது அடித்தால் இத்தனை ரூபாய் என சொல்ல முடியும். ஸ்டம்பில் படும் பந்தை காண்பித்தால் ஸ்டம்பிலும் விளம்பரம், பேட்ஸ்மேனின் பேட்டில், அவரது சட்டையில் என் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரப்படுத்த முடியும். ஆனால் கால்பந்திலே 45 நிமிடங்களுக்கு விளையாட்டைத்தவிர தவிர வேறு எதுவும் காட்ட முடியாது என்பதாலேயே, எந்த தொலைக்காட்சியும் அந்த விளையாட்டுகளில் விருப்பம் கொள்வதில்லை.

மேலும் கால்பந்தாகட்டும், மற்ற விளையாட்டுகளாகட்டும், வெறும் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரங்களில் முடிந்து விடும். அப்படியே விளம்பரம் காட்டப்பட்டாலும் இந்த இரண்டு மணி நேரத்தில் இரண்டு முறைதான் காட்ட முடியும். ஆனால் கிரிக்கெட்டில் அப்படியல்ல, ஒவ்வொரு 7 நிமிடத்திற்கொரு முறையும், தொடர்ந்து 8 லிருந்து 9 மணி நேரம் வரை உங்களால் விளம்பரம் செய்ய முடியும். அப்படியானால் இந்த விளம்பர வருமானத்தை கணக்கெடுத்துப் பாருங்கள். இந்த விளம்பர உத்தியை சரியாக பயன் படுத்திக் கொண்ட விளம்பரதாரர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தார்களை மொய்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதில் வரும் பிரம்மாண்ட வருமானத்தின் வண்ணக் கனவுகள், தொலைக்காட்சி நிறுவனங்களை கிரிக்கெட் விளையாட்டை மட்டும் காதலிக்க நிர்பந்தித்தது.

இவர்களும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை நோக்கி படையெடுக்க, வாரியம் ஒரு பணம் காய்க்கும் மரமாகிப் போனது. ஜக்மோகன் டால்மியாக்களும், சரத்பவாரும் வாரியத்தலைவர் பதவிக்கென குடுமிபிடி சண்டை போட காரணம், இந்த விளையாட்டில் விளம்பரங்கள் மூலமாக வரும் அளவிட முடியா பணம் மாத்திரமே. ஆக வாரியமும் வீரர்களை அதிக போட்டிகளில் விளையாட நிர்பந்திக்க ஆரம்பித்தது. அதிக போட்டிகள் – அதிக விளம்பரம் – வீரர்களுக்கு அதிக சம்பளம் – வாரியத்துக்கு அதிக பணம் என எனக்கு உனக்கு என அனைவரும் அள்ள ஆரம்பித்தனர். இன்னமும் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த களேபரத்தில், ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு சற்றும் குறைவில்லாத திறமை கொண்டிருந்த கேரள போலீஸ்காரரான விஜயனாகட்டும், கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தை பல மட்டைகளுக்கு நடுவிலிருந்து அன்னப் பறவை பாலைப் பிரித்தெடுக்கும் லாவகத்துடன் பிரித்தெடுத்து, கோல் அடிக்கும் தன்ராஜ் பிள்ளையாகட்டும், புள்ளிமானாய் துள்ளி ஓடி ஹாக்கியில் முன் வரிசை ஆட்டக்காரராக இருந்த பர்கத் சிங் ஆகட்டும் இந்த திருவிழா கூட்டத்தில் சந்தடியில்லாமல் காணாமல் போய்விட்டார்கள். ஏனெனில் அவர்கள் விளையாடிய விளையாட்டுகளை நேசிக்க விளம்பரதாரர்கள் யாருமில்லை.

இப்படி கிரிக்கெட் தன் இயல்பிலேயே விளம்பரங்களுக்கென பிறந்த விளையாட்டாகிப் போனதால், அதில் ஆடும் வீரர்களும் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தார்கள். இங்கிலாந்தில் ஒரு அரங்கத்தில் அமர்ந்து ஒரு போட்டியை ரசித்துக் கொண்டிருந்த சர் சோபர்ஸ் தனது கால கிரிக்கெட் விளையாட்டை நினைவு கூறும் பொழுது இப்படியாக கூறினார். “ எங்களுக்கெல்லாம் கிரிக்கெட்டில் அதிக பட்சமாக கிடைத்த பரிசு ஒரு சைக்கிள்தான்” என்றார். ஆனால், இன்றைய வீரர்களை விலையுயர்ந்த ஆடம்பர கார், மற்றும் லட்சக்கணக்கான ரூபாய்களை பரிசளித்து களத்தில் நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது. இவர்கள் இல்லையேல் கிரிக்கெட் உலகமும் இல்லை, விளம்பரங்களும் இல்லை என ஆகிவிடும்.

வரும் காலத்தில் விளம்பரங்களுக்கு வளைந்து கொடுக்கும் வண்ணமாக இந்த பணம் காய்க்கும் விளையாட்டுக்கு புதிய பரிமாணங்கள் கொடுக்கப்படும். இப்பொழுது T 20 என்ற புதிய வடிவம் எல்லோரையும் கவர்ந்து வருகிறது. இனி வரும் காலங்களில் இதையும் சுருக்கியோ, நீட்டியோ வேறொரு வடிவம் தரப்படலாம். இப்பொழுதே இந்தியாவில் நடக்கிற ஹாக்கி உலகக் கோப்பையாகட்டும், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளாகட்டும், இந்தியாவுக்கு சர்வதேச விளையாட்டு அரங்கில் ஒரு முக்கியத்துவம் தர சகல தகுதிகளையும் கொண்ட இந்த போட்டிகளுக்கான விளம்பரங்கள், பண பலம் படைத்த IPL 20 போட்டிகளின் விளம்பரங்களுக்கு முன் நிற்க முடியாமல் தவிடு பொடியாகி விட்டது.

இப்படிப்பட்ட பண வலைகள் விரிக்கப் படும்வரை, கிரிக்கெட் என்னும் விளையாட்டு பணம் தரும் இயந்திரமாக இருக்கும்வரை சச்சினைப் போன்றவர்கள் தினம் தினம் புதிய சாதனைகளை நிகழ்த்த நிர்பந்திக்கப் படுவார்கள். பண பலத்தால் நிறைய வாய்ப்புகள் அவர்களுக்கு அளிக்கப்படும். அவர்கள் நிகழ்த்தும் சாதனைகளை முறியடிக்க இன்னும் நிறைய சச்சின்கள் பிறப்பார்கள்.

சாதனை படைத்த சச்சினுக்கு வாழ்த்துக்கள். அவரது தனிப்பட்ட விளையாட்டுத்திறமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் இந்த சாதனையும் சீக்கிரத்தில் முறியடிக்கப்படும். விளையாட்டுத் திறமை அந்த சாதனையை முன்னெடுத்துச் செல்வதை விட, சாதனையை வைத்து பணம் பண்ணும் வித்தைகள் தான் சாதனையாளர்களை உருவாக்கும்.

Monday, November 9, 2009

வந்தே மாதரம் – வருதய்யா ஆத்திரம்.

1835 ம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் மிட்நாப்பூர் நகரில், ஆங்கிலேய அரசில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு இந்திய அதிகாரியின் வீட்டில் பிறந்தவர் பங்கிம் சந்தர சட்டர்ஜி. 1891 – ஆம் ஆண்டு வரை, நீதிபதியாக ஆங்கிலேய அரசாங்க உத்தியோகம் பார்த்து விட்டு, தினமும் சாரட் வண்டியில் வீட்டுக்கு போய் சகதர்மிணி செய்து வைக்கும் மீன்குழம்பை ஒரு பிடி பிடித்து விட்டு, ஒழுங்காக தூங்கப் போன இந்த மனிதருக்குள்ளும், ஆங்கிலேய எதிர்ப்பு என்பது மனதுக்குள் கனன்று கொண்டிருந்தது. கவிதைகள் எழுதுவதிலும், புனைவுகள் எழுதுவதிலும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த இந்த மனிதர், 1882 ஆம் ஆண்டு “அனந்தாமத்” என்ற ஒரு புத்தகம் எழுதினார். ஆங்கிலேயர்களின் வரி வசூலிக்கும் கொள்கைக்கு எதிராக இந்து மற்றும் இஸ்லாமிய துறவிகளால் நடத்தப் பட்ட “துறவிகளின் போரையும்”, அந்நாட்களில் (1770 களில்) வங்காள பகுதியில் தலைவிரித்தாடிய பஞ்சத்தின் கோர விளைவுகளையும் மையப் படுத்தி எழுதிய ஒரு புனைவு இது.

பஞ்சத்தின் பிடியிலிருந்த வங்கத்தில் மனிதர்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு, கடைசியில் மனிதர்களையும் விற்கத் தொடங்கினார்கள். ஆனால் வாங்குவோர் தான் யாரும் இல்லை. கல்யாணி என்ற வங்கப் பெண் தன் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு ஆள் பிடித்து விற்பவர்களின் கண்களில் தப்பித்து ஓடுகிறாள். ஆனால் வாணலிக்குத் தப்பி நெருப்பில் விழுந்த கதையாய், அவள் ஆங்கிலேய சிப்பாய்களின் காமக் கண்களில் பட்டு விடுகிறாள். உதவி உதவி என்று கதறி அந்த பெண், ஒரு ஆற்றங்கரையில் மூர்ச்சையானதும், அவளை காப்பாற்றும் ஒரு இந்துத் துறவி அவளை பாதுகாப்பு கருதி துறவிகள் கூட்டமாய் குழுமியிருக்கும் இடத்தில் மறைத்து வைக்கிறார். ஏற்கெனவே ஆங்கிலேயர்களின் அடாவடி வரி வசூலிப்பினால் தங்களது புண்ணிய தலங்களுக்கு சுதந்திரமாக சென்று வர முடியாமல் வெறுப்படைந்திருந்த துறவிகள், கல்யாணிக்கு ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட அவமானத்தின் கதையை கேட்டதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெகுண்டு எழுகிறார்கள் . இதன் விளைவாக நடந்தது தான் துறவிகளின் போர். இதில் நிராயுத பாணிகளாய் வெறும் கோபத்தையும் ஒற்றுமையையும் மாத்திரமே ஆயுதங்களாக கொண்டு போரிட்ட துறவிகளால், ஆங்கிலேய ராணுவம் மற்றும் ஆயுத பலத்துக்கு முன்பாக சில மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. கலகத்தை அடக்கி விட்டோம் என சில ஆங்கில அதிகாரிகள் இங்கிலாந்து அரசியின் கையால், தங்கள் சட்டைகளில் மெடல் குத்திக் கொண்டார்கள். இப்படியாக போகும் அந்தப் புனைவில் இந்திய நாட்டை ஒரு அன்னையாக உருவகப் படுத்தி அந்த அன்னையின் சிறப்புகளை தனக்கே உரிய சமஸ்கிருத மற்றும் வங்க மொழி புலமையின் சிறப்பில் எழுதிய வரிகள் தான் “வந்தே மாதரம்”.

1890களின் பின்பகுதியில், ஆங்கிலேயர்களின் அட்டகாசம் அதிகமாகி, இங்கிலாந்து ராணிக்கு தங்களது விசுவாசத்தைக் காட்ட “ O God, Save the Queen” என்ற பாட்டை இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாடவேண்டும் என கட்டாயப் படுத்தினார்கள். எங்கேயோ இருந்து வந்து நம்மீது ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்துக் காரனின் ராணி நன்றாயிருக்க வேண்டுமென நான் ஏன் வேண்ட வேண்டும் என ஒவ்வொரு இந்தியனும் வெகுண்டு கொண்டு இருந்த நேரத்தில், 1896 ஆம் ஆண்டு கல்கத்தாவில் அப்போதைய தலைவர் ரஹிமத்துல்லா சயானி என்பவரின் தலைமையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், ராணியின் பாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம் பாரத தாயைப் பற்றிப் பாட வேண்டும் என தீர்மானித்து முதன்முதலாக வந்தே மாதரம் பாடப் பட்டது. பிறகு இந்தப் பாட்டின் முழு அர்த்தமும், அந்த வர்ணனை வரிகளில் வெளிப்படும் இந்திய மண்ணோடுள்ள உளம் சார்ந்த உணர்வுகளும், ஒவ்வொரு இந்தியனையும் ஈர்க்க, மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் வந்தே மாதரம் ஒலித்தது. குறிப்பாக நாம் அறிய வேண்டியது, அப்பொழுது சுதந்திரப் போராட்டத்தில் வெகுவாக ஈடுபட்டிருந்த இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே எந்த வித கருத்து பேதங்களுமின்றி இந்தப் பாடல் பாடப் பட்டு வந்தது.

இதற்கிடையே இஸ்லாமிய அறிவாளர்களால் ஜமாய்த் உலேமா – ஏ – ஹிந்த் (இந்திய அறிவாளிகள் குழுமம்) என்ற ஒரு அமைப்பு, 1919 – ம் ஆண்டு தோறுவிக்கப்பட்டது. இவர்கள் தங்கள் பங்குக்கு ஆங்கிலேய எதிர்ப்பை வெளிப்படுத்த “கிலாஃபத் இயக்கம்” என்ற ஒன்றை நடத்த இந்த இயக்கமும் இஸ்லாமிய மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. பிற்காலத்தில் இவர்கள், கொள்கை ரீதியில் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து கொண்டனர். இவர்களில் பலர் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்த வேளையில், இவர்களுக்குள்ளேயே ஒரு தனி பிரிவினர் பிரிவினைக்கு ஆதரவாகவும் கிளர்ந்தனர். இந்த பிரிவினை ஆதரவாளர்கள் எல்லாம் சேர்ந்து பின்னாளில் ஜமாய்த் உலேமா – ஏ – இஸ்லாம் (இஸ்லாமிய அறிவாளிகள் குழுமம்) என்ற தனிக் குழுவாய் பிரிந்து போய் விட்டனர்.

இந்திய அறிவாளிகள் குழுமம் அன்றிலிருந்து இன்றுவரை, தங்களை இந்திய இறையாண்மையை முழுதும் மதிப்பவர்களாகவும், மதச் சார்பின்மைக்கு முழுதும் ஆதரவு தருபவர்களாகவும் தான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் அவர்களும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். மற்றும் பிராந்திய ரீதியில் அங்கங்கே இருக்கும் மாநில கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல்களில் பங்கேற்று, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து அரசியல் செய்து என இந்திய அரசியலின் ஒரு அங்கமாகவே திகழ்கிறார்கள்.

இப்படி சாதுவாக குல்லாய் அணிந்து கொண்டும், தாடியை நீவிக் கொண்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டும், ஐந்து முறை தொழுது கொண்டும் இருந்த இந்த அறிவாளிகள், சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் த்யோபந்த் என்ற இடத்தில் நடந்த அறிவாளிகள் மாநாட்டில் நிறைவேற்றிய ஒரு தீர்மானம் தான் இந்திய அரசியலில் ஒரு புதிய சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கிறது. தியோபந்தில நடந்த மாநாட்டில் நமது நாட்டுக்கோட்டை வீட்டுக்காரரான மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்கள் அறிவாளிகளின் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொள்ள, அந்த நேரம் பார்த்து அறிவாளிகளின் அறிவு கோக்கு மாக்காக வேலை செய்து, இஸ்லாமியர்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என ஃபத்வா வெளியிட்டு விட்டார்கள். இதென்னடா வம்பு, எக்குத் தப்பாக வந்து மட்டிக் கொண்டோமோ என நினைத்து, சிதம்பரமும் மாநாட்டில் பேசும் பொழுது, மிகுந்த எச்சரிக்கையுடன், இந்த ஃபத்வா மேட்டரை தொடாமலே பேசி விட்டு ஆளை விடுங்கடா சாமி என ஓடி வந்து விட்டார். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

இப்பொழுது இருக்கிற அரசியல் நிலைமையில், இறங்கு முகத்தில் இருக்கும் பாஜக திரும்பிய பக்கமெல்லாம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தனிக் கொடி பிடிக்க தயாராகி வருகிறார். அத்வானியின் தலைமை என்பது கட்சிக்கு எதிர்பார்த்த கவர்ச்சியை மக்களிடம் தர முடியவில்லை. ஜஸ்வந்து சிங் தனியாக ஜின்னா புராணம் பாடி விட்டு பிரிந்து விட்டார். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் வேளையில், நடந்து முடிந்த மாநிலத்தேர்தல்கள் அனைத்திலும் மண்ணைக் கவ்வ வேண்டியதாகி விட்டது. தென்னாட்டில் கால் ஊன்றக் கிடைத்த ஒரே ஒரு இடமான கர்நாடகத்தில், ரெட்டி சகோதரர்கள் தரும் குடைச்சல் வேறு திருகு வலியாய் மாறிக் கொண்டிருக்கிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என திரிந்தவர்களுக்கு, இந்த விஷயம் அகப் படவே வானுக்கும் மண்ணுக்கும் எகிறத் தொடங்கி விட்டார்கள்.

உடனே சிதம்பரம் பதவி விலக வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர், பிரவீண்பாய் தொகாடியா அறிக்கை விடுகிறார். சிதம்பரம் மௌனமாய் இருந்தது ஏன் என கேள்விகள், உருவ பொம்மை எரிப்புகள் என அரசியல் மேடை களை கட்டியுள்ளது. ஆனால் ஃபத்வா கொடுத்த அறிவாளிகள் சங்கம் என்ன காரணத்தால் இந்த தடையை விதித்தார்கள் என்றால், இதில் ஒரு பெண் தெய்வத்திற்கான துதிப்பாடல் வரிகள் வருகின்றன, அந்த வரிகளை உச்சரிக்கும் எந்த ஒரு இஸ்லாமியனும் அல்லாவை தூஷிக்கிறான் என திருவாய் மலர்ந்தருளி விட்டார்கள். இதற்கு இந்த அறிவாளிகள் கூட்டத்திலேயே ஒரு சிறு எதிர்ப்பு கிளம்பினாலும், அது திருவிழாக் கூட்டத்தில் ஒலித்த ஒரு குருட்டுப் பாடகனின் குரலாய் அமுங்கிப் போனது.

இந்த அறிவாளிகளுக்கு சில கேள்விகள்:

1919 ம் ஆண்டிலிருந்து நீங்களும் நெஞ்சை நிமிர்த்தி இந்தப் பாடலை பாடினீர்களே, அப்பொழுதெல்லாம் ஒளிந்து கொண்டிருந்த பெண்தெய்வம், திடீரென வெளிவந்தது ஏன்?

இறையாண்மைக்கும் ஆன்மீகத்துக்குமுள்ள வித்தியாசம் அறிவாளிகளான உங்களுக்கு கடுகளவாவது புரியாமல் போனது ஏன்?

ஃபத்வா கொடுப்பது என்பது ஆன்மீக காரணங்களுக்காக மாத்திரம் தானா அல்லது அரசியல் காரணங்களுக்காகவும் கூடவா?

வகுப்புவாத அரசியலின் அருவருப்பான விளைவுகளை சற்றே மறந்து முன்னேற்றம் என்ற பாதையில் எப்படி அடியெடுத்து வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் சாமான்ய இந்தியனை இத்தைகைய ஃபத்வாக்கள் எப்படி பாதிக்கும் என அணுவளவாவது யோசித்தீர்களா?

ஆடுகள் முட்டி சண்டை போட்டவுடன், எந்த ஆடு முதலில் மயங்கி விழும் அதில் எத்தனை கறி தேரும் என நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் வெட்கங்கெட்ட இந்திய ஊடக நரிகள், வழக்கம் போல சிண்டு முடியும் வேலையை துவங்கி விட்டன. இது எங்கு போய் முடியுமோ அந்த பாரத மாதாவுக்கே வெளிச்சம்.

வந்தே மாதரம் – வருதய்யா ஆத்திரம்.

Monday, October 26, 2009

நமக்கெதுக்குங்க இந்த வம்பு??????

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று நடுவர்கள், ஒரு தொகுப்பாளினி என்ஆட்டம் நன்றாகத்தான் களை கட்டுகிறது. ஆனால், நிகழ்ச்சியில் பேசப் படும் மொழியை கேட்டால் அருவருப்பாக இருக்கிறது. தமிழ் பாடல்கள் பாடப் படுகின்றன. சித்ரா என்னும் நடுவர், முடிந்தவரை தமிழில் பேசுகிறார். அவர் வேறு மொழிக்காரர் என்பதால் அதை பொறுத்துக் கொள்ளலாம். மனோ என்பவர் தமிழில் பேசுகிறார், ஆனால் கொஞ்சமாவது ஆங்கில கலப்படம் இல்லாமல் பேச திணறுகிறார். மூன்றாவதாக ஒரு நடுவர், அவர் பேசுவது என்ன மொழியென்றெ தெரியவில்லை, ஒரு பாடல் என்றால் அதில் சரணம், அனுபல்லவி, பல்லவி என்பவை இருக்கும். ஆனால் இவர் ச்ச்சரணம் என்று கஷ்டப்பட்டு உச்சரிக்கிறார். அதிகமாக புரியாத ஒரு மொழியில் பேசுகிறார். “ நீங்க நன்னா பாடினேள், அந்த top ல போறச்சே, உங்க voice வந்து flatter ஆகாம, steady ஆ இருக்கறது, அந்த ச்ச்ச்சரணத்தோட third word ஐ pronounce பண்ணும் போது ஒரு குட்டி jerk வர்றது. You will have to take note of these குட்டி குட்டி things.” என்று ஒரு புரியாத மொழியில் பேசுகிறார். சீய் தூ என்று துப்ப வேண்டும் போல் உள்ளது.

ஒரு பெண்குழந்தை போட்டியில் தோற்று விட்டதாக நடுவர்கள் தீர்ப்பு சொன்னதும், குழந்தைக்கே உரிய ஏமாற்றங்களுடன் அந்தக் குழந்தை கண்ணீர் வடிக்க, தொகுப்பாளினி அந்தக் குழந்தைக்கு ஆறுதல் சொல்கிறாராம். “அய்யய்யோ இதுக்கெல்லாமா அழுவாங்க, பாருங்க உங்க beautiful cheeks ல tears எல்லாம் roll ஆகி உங்க make up எல்லாம் வந்து spoil ஆகுது பாருங்க” மறுபடியும் காறி தூ தூ தூ

எது எப்படியோ தொலைக்காட்சி காரங்களுக்கு பணம் வந்தா சரிதானே, நமக்கெதுக்குங்க வம்பு?????

***********************************************************************************
இன்று மறுபடியும் இந்திய ஊடகத்தின் மற்றொரு அதிகப் பிரசங்கித்தனமான லொள்ளு:

அமெரிக்க ராணுவத்துடன் ஒரு கூட்டுப் பயிற்சியில் இந்திய ராணுவத்தினர் ஈடு பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள ஜான்சி நகரின் வெளிப்புறங்களில் ஒரு காடும் மலையும் சார்ந்த பகுதியை தேடிப் பிடித்து பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சியை நேரடியாக தொலைக் காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு இந்திய தலைவரையோ, அல்லது விருந்தினராக வந்துள்ள வெளிநாட்டு அரசாங்க முக்கிய மனிதரையோ, சீருந்தில் போகும் பொழுது, திடீரென தீவிர வாதிகள் தாக்கி விட்டால் அவர்களை எப்படி முறியடிப்பது என்பது இன்றைய நாளின் பயிற்சி. தொலைக்காட்சியின் நேர்முக வர்ணனை, இதோ முக்கிய விருந்தினர் வந்து கொண்டிருக்கிறார். அவரது சீருந்தை நோக்கி தீவிரவாதிகள் போகிறார்கள், தாக்குகிறார்கள், திடீரென ஒரு ஹெலிகாப்டர் வருகிறது, அதிலிருந்து அதிரடிப் படையினர் குதிக்கிறார்கள், அவர்கள் தீவிர வாதிகளை பதிலுக்கு தாக்க எப்படி வியூகம் அமைக்கிறார்கள் என நீங்கள் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதோ துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம், தீவிர வாதிகளை நோக்கி அலை அலையாக அதிரடிப் படையினர் முன்னேறுகின்றனர். கடைசியில் விருந்தினர் மீட்கப் பட்டார்.

அடேய் வெண்ணைகளா, மும்பை உல்லாச ஹோட்டலில் நீங்கள் நடத்திய அருவருப்பான நாடகத்தினால் எத்தனை வீரர்களை நாம் இழந்தோம் தெரியுமா, அதைப் பற்றிய குற்ற உணர்ச்சி ஒரு அணுவளவாவது இருக்கிறதா உங்களுக்கு? இப்பொழுது மறுபடியும் ஒரு ராணுவ நடவடிக்கையை படம் பிடித்து உங்கள் கஜானாவை நிரப்ப கிளம்பியிருக்கிறீர்களே, இந்தக் காட்சியை அந்த தீவிர வாதிகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லையா உங்களுக்கு??? ச்சீய், தூ தூ, தூ, எப்படா திருந்துவீங்க நீங்கெல்லாம். ??????

அதிகமா பேசுனா ஆட்டோ வந்துருமோ, நமக்கெதுக்குங்க இந்த வம்பு????

***********************************************************************************
சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று மாநில சட்ட சபை தேர்தல்களிலும் வித்தியாசமான செய்தியை மக்கள் அரசியல்வியாதிகளுக்கு சொல்லியிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று மதர்ப்பில் திரிகிறார்ப் போல் தெரிகிறது. ராகுல் காந்தியின் இளமைக் கவர்ச்சி கொஞ்சம் கை கொடுக்கிறதோ, அல்லது உண்மையாலுமே மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்ப ஆரம்பித்து விட்டார்களோ தெரியவில்லை. ஆமாம், காங்கிரஸ் ஜெயித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் சந்தடி சாக்கில், மகாராஷ்டிர மக்கள் ராஜ் தாக்கரே என்ற ஒரு பாம்புக்கும் பால் வார்த்திருக்கிறார்கள். எப்படி திராவிடம் பேசியே தங்கள் குடும்பத்தை வளர்க்க தென்னாட்டில் ஒரு கும்பல் உண்டோ, அப்படியே மண்ணின் மைந்தர்கள் என்ற ஒரு பிரிவினை வாதம் பேசி அரசியல் செய்ய ஒரு நச்சுப் பாம்பு கிளம்பியிருக்கிறது. இன உணர்வுகளை தூண்டி விட்டு தீப்பொறி பறக்க பேசி 15 இடங்களில் இந்தப் பாம்பு படமெடுத்திருக்கிறது. என்ன ஆகப் போகுதோ???????

அரசியல்னா அப்பிடி இப்படி இருக்கத்தானுங்க செய்யும். பாத்துட்டு ஒரு ரெண்டு நிமிஷம் புலம்பிட்டு போக வேண்டியது தான். நமக்கெதுக்குங்க இந்த வம்பு??????

************************************************************************************

Monday, July 20, 2009

உண்மை சொல், ஒரு கோடி வெல்.

சமீபத்தில் இந்திய தொலைக்காட்சிகளில் ஒரு தொடர் "டெரர்" ஆக ஆரம்பித்துள்ளது. ஆங்கில தொலைக்காட்சிகளில் " Moment of Truth" என்ற தொடரின் கொள்கைகள் அனைத்தையும் கொண்ட ஒரு தொடர் "ஸ்டார் ப்ளஸ்" சேனலில் ஹிந்தியில் "சச் கா சாம்னா" என்ற பெயரில் ஆரம்பித்துள்ளது.

திடுக்கிடும் கேள்விகள், மனிதர்களின் படுக்கையறை நிகழ்வுகளை சுற்றியே அமைக்கப்பட்டிருக்கும் வினா வடிவங்கள், அடுத்தவர் அந்தரங்கத்தை சற்றும் கூசாது வெளிக்கொணரும் வக்கிரங்கள், முறையற்ற உறவுகளை நியாயப் படுத்தும் வண்ணமாக சர்வ அலட்சியமாக "ஆம், அப்படித்தான், இப்ப என்ன பண்ணுவே" என்பது போன்ற பதில்கள், நான்கு சுவர்களுக்குள் உறவுகள் ஒருவர் மீது ஒருவர் கொட்ட முடியாத வெறுப்பு, கோபம் ஆகியவற்றை நாற்பது கோடி பேர் முன்னால் உன்னை நாக்க புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேக்கறேன் பார் என்ற பழி வாங்கல் என ஆட்டம் களை கட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நீங்கள் விண்ணப்பித்தீர்களென்றால், முதல், இரண்டு, மூன்று என்று மூன்று கட்டங்களாக ரவுண்டு கட்டி உங்களிடத்தில் நேர்முக தேர்வு நடத்தப் படுகிறது. உங்களது பின்புலம், குடும்பம், குடும்ப உறுப்பினர்களுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு முறையின் உண்மைத்தன்மை, ஸ்திரத்தன்மை ஆகியவை புரிந்து கொள்ளப்பட்டபின், 50 கேள்விகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் " Polygraph Test" என்ற சோதனை முறையில் பதில்கள் பெறப் படுகின்றன. இந்த முறையில் நீங்கள் எந்த கேள்விக்கு என்ன பதில் சொன்னீர்கள் என்று உங்களுக்கு நினைவில் இருப்பது மிகவும் கடினம். எல்லா கேள்விகளுக்கும் விடை ஆம் அல்லது இல்லை என்பது தான். உதாரணத்திற்கு " உங்கள் மகளது திருமணத்திற்கு பின்பும், நீங்கள் அவளது தனிப்பட்ட வாழ்வின் விஷயங்களை தீர்மானிப்பது சரி என நினைக்கிறீர்களா?" என்பது போன்ற கேள்விகள் கேட்பதிலிருந்து கேமராவின் முன் ஆட்டம் ஆரம்பிக்கிறது. இதில் 24 கேள்விகளுக்கு மனசாட்சியுடன் சரியான பதில் சொல்லி விட்டால் நீங்கள் ஒரு கோடி ரூபாய் ஜெயிக்கலாம்.

முதலில் வெகு எளிமையான கேள்விகள், மற்றவர்களை சிரிக்க வைக்கும் கேள்விகள் கேட்கப் படுகிறது. ஒரு பெண்ணைப் பார்த்து "நீங்கள் ஒரு வாரம் குளிக்காமல் இருந்திருக்கிறீர்களா??" என்ற கேள்விக்கு அரங்கமே அதிர சிரிப்பொலி கேட்கிறது. இந்த தந்திரம் பதில் சொல்பவரை தான் ஒரு தேர்வில் அமர்ந்திருக்கிறோம் என்ற பதட்டத்தை மாற்றி சகஜ நிலைக்கு கொண்டு வர உதவும் ஒரு உத்திதான். அந்தப் பெண்ணும் இதற்கு ஆம் என பதில் அளிக்க, முன்னே "Polygraphic Test" இதே கேள்வி கேட்கப்பட்டு அதற்கு இந்த அம்மணி என்ன பதில் சொன்னார்கள் என்பது சரி பார்க்கப்பட்டு பணம் பரிசாக அளிக்கப்படுகிறது. இப்படியாக விளையாட்டுத்தனத்துடன் ஆரம்பிக்கும் இந்த கேள்விகள் போகப் போக முழுவதும் அந்தரங்கத்தைப் பற்றியதாக மாறுகிறது. கடந்த வாரத்தில் காண்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், ஒரு 72 வயது மனிதர், அவருக்கு மூன்று மனைவிகள் இருந்திருக்கிறார்கள், நான்காவதாக வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். அவரது மகளுக்கு 40 வயதிருக்கலாம். அவரது, தம்பி, ஒரு மனைவி, 40 வயது மகள் மற்றும் இப்பொழுது அவருடன் வாழ்ந்து வரும் பெண் ஆகிய இத்தனை பேர் முன்னிலையில் அவரிடத்தில் கேட்கப்படும் கேள்விகள் :

நீங்கள் ஹோட்டல்களில் தங்கிய பொழுது அங்கிருந்து பெட்ஷீட்டுகளை திருடிக் கொண்டு வந்திருக்க்கிறீர்களா?
உங்கள் மகளின் வயதை விட குறைந்த வயதுடைய பெண்ணுடன் உடல் உறவு கொண்டிருக்கிறீர்களா?
உங்கள் உறவுக்கார பெண்களுடன் மனைவிக்கு தெரியாமல் உடலுறவு கொண்டீர்களா?
இதுவரை விபசாரிகளுடன் உடலுறவு கொண்டிருக்கிறீர்களா?
உங்களுக்கு ரகசியமாகப் பிறந்த குழந்தைகள் இருக்கிறார்களா?
உங்கள் மனைவி (அங்கு அமர்ந்திருப்பவர்) வெறும் பணத்துக்காகத்தான் உங்களுடன் உறவு வைத்திருந்தார்களா?


இந்தக் கேள்விகளை மற்றுமொருமுறை வாசித்துப் பாருங்கள். வயிற்றைக் கலக்குகிறதா? ஆச்சரியப் படாதீர்கள் அன்பர்களே, இந்த வக்கிரங்களை ஒருவேளை நேற்று வரை நீங்கள் வீதிக்கு வெளியில், தெரு முனையில், டீக்கடைகளில், அலுவலகத்தில், அல்லது புரளி பேசப்படும் இடங்களில் கேட்டிருக்கலாம் அல்லது பார்த்துமிருக்கலாம். ஆனால் இப்பொழுது இந்த வக்கிரங்கள், இதோ உங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்திருக்கிறீர்களே ஒரு சின்னத்திரை, அதன் மூலம் உங்கள் அருகிலேயே வந்து விட்டது. ஒரு பெண்ணிடம் கேட்கப் பட்ட கேள்வி " கணவனைத் தவிர இன்னொருவருடன் தொடர்ந்து உடல் உறவு கொள்வதும், அது கணவருக்குத் தெரியாமல் இருக்கும் வரை சரி என்றும் நினைக்கிறீர்களா??" என்ற கேள்விக்கு அந்தப் பெண் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக பதில் சொல்ல, உண்மை அறியும் சோதனையில் அதற்கு ஆமாம் என்று பதில் சொன்னது வெளியாக, அந்தக் பெண்ணின் கணவர் தன் தலையை பிடித்துக் கொண்டு கதறுகிறார். அந்தப் பெண்ணின் அம்மா, கண்ணீரை அடக்க மாட்டாமல் விம்முவதும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிகள்.

இதன் தொகுப்பாளரான ராஜீவ் கண்டேல்வால் என்பவரை அனத்து தொலைக்காட்சிகளும் நமது சமூக காவலர்கள் என்ற போர்வையில் இருக்கும் பலரோடுகூட சேர்ந்து பேட்டி மேல் பேட்டியாக எடுத்து ஒளி பரப்புகிறார்கள். எல்லோராலும் வைக்கப்படுகிற வாதங்களுக்கு ராஜீவின் ஒரே பதில், உண்மை பேசுவது தவறா??

ஆமாம் நானும் கேட்கிறேன், உண்மை பேசுவது தவறா? அது அடுத்தவர் படுக்கையறை விஷயங்களாகட்டும், ஒரு பெண்ணின் அந்தரங்கமாகட்டும், ஒரு விளையாட்டு வீரனின் கதையாகட்டும், (வினோத் காம்பிளி சர்ச்சையில் சிக்கியது இந்த பாடாவதி உண்மை பேசியதால் தான்), கணவன் மனைவியின் உறவாகட்டும், தாய், மகள் உறவாகட்டும், என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், உங்கள் வாயிலிருந்து புறப்படும் உண்மைகள் ஒரு பரபரப்பை உண்டு பண்ண வேண்டும், குறிப்பாக ஆண் பெண் உடல் உறவை பற்றிய உண்மைகள், நீங்கள் யார் யாருடன் உடல் உறவு கொண்டீர்கள என்ற உண்மைகள், உங்கள் மேலதிகாரி தன் இச்சைக்கு இணங்கும்படி உங்களை வற்புறுத்தினாரா என்பது போன்ற உண்மைகள், உங்கள் நண்பர்கள் உங்களுக்கு துரோகம் செய்தார்களா என்பது போன்ற உண்மைகள்( உங்கள் நன்பரும் நீங்களும் ஒரு பிரபல புள்ளிகளாய் இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த விவரங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்), இது போன்ற உண்மைகளை தாராளமாக பேசுங்கள். அப்பொழுது தான் நாங்களும் இதை விளம்பரங்களுக்கு மத்தியில் ஒரு பரபரப்பு காட்சியாக காண்பித்து நாலு காசு பார்க்கமுடியும். இந்த உண்மை பேசுவதினால் யார் குடும்பமோ எக்கேடோ கெட்டு நாசமாய் போனால் எனக்கென்ன கேடு, என் சேனலுக்கு பணம் வருகிறதல்லவா, அது போதும்.

அடேய், ஊடக வெண்ணைகளா, அமெரிக்காவில் மனிதனுடைய வாழ்வில் மிகச்சில வேடங்களே உள்ளது. ஒன்று அவனுடைய குடும்பம் (அப்படி ஒன்று தப்பித் தவறி இருந்தால்) அடுத்தது அவனது வேலை. அங்கு சமூக வாழ்க்கை என்பது வெறும் சொல்லிலும் பேச்சிலும் தான். நம்மைப்போல் அண்டை வீட்டுக்காரர்களோ, ஒண்டுக்குடித்தனங்களோ மிகவும் அரிது. அவர்கள் அவர்களது அந்தரங்கங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம். யாரும் கவலைப் பட மாட்டார்கள். ஆனால், இங்குள்ள நாம் ஒரு சமூகமாக வாழ்ந்து வருகிறோம். சமூகத்தில் இத்தகைய நச்சுக்களை சுதந்திரமாக உலா விடுவீர்களெனில், உண்மை பேசி ஒரு கோடி ரூபாய் பரிசு பெறலாம், ஆனால், நீயும் நானும் குடும்பம் என்ற கட்டுக் கோப்புக்குள் வாழுவோமா என்பது சந்தேகமே.

வாய்மையே வெல்லும், ஆனால் இங்கு அதன் விலை ஒரு கோடி ரூபாய், என்ன கொடுமை சார் இது??????

Tuesday, July 14, 2009

விழுந்தது டெல்லியில் பாலம் - ஊடகங்களின் நாடகங்கள்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை, வழக்கம் போலவே டெல்லி வாசிகளுக்கும் அது ஒரு விடுமுறை நாளாகத்தான் விடிந்தது. ஆனால் பெங்களூரில் இருந்த, டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமான பணிகளுக்கான உயர் அதிகாரி ஸ்ரீதரனுக்கு அது தூக்கத்தை கலைத்து மனதை உருக்கிய காலையாக இருந்தது.

டெல்லி நகரில் கட்டப்பட்டு வரும் ஒரு ரயில் பாலத்தில் இரும்பு பாலம் ஒன்றை தூக்கி இணைக்கும் பொழுது அது தவறி விழுந்ததில் 5 பேர் இறந்தார்கள், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள். கட்டுமானத்துறையின் வரலாற்றில் இது ஒரு கருப்புப் புள்ளி.

அடியேனும் கட்டுமானத்துறையிலேயே இருப்பதால் எனக்குள்ளும் ஒரு தோல்வி உணர்வு தொற்றிக்கொண்டது. நடந்தது சந்தேகமில்லாமல் ஒரு விபத்து. தவிர்க்கப் பட்டிருக்க வேண்டிய ஒன்று. ஒப்பந்தக் காரரும் சரி, டெல்லி மெட்ரோ அதிகாரிகளும் சரி, பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் அதிகம் செலுத்தியிருக்க வேண்டும். பொருள் சேதம் ஈடுகட்டப் படக் கூடிய ஒன்று என்றாலும், உயிர் சேதங்கள் வேதனையளிக்கிறது.

இனி, நமது மகா கனம் பொருந்திய ஊடகங்கள் இதில் நடத்திய நாடகங்களை பார்ப்போம்.

சரியாக ஞயிறு காலை 10 : 00 மணி,

டெல்லி மெட்ரோவின் அதிகாரி பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். மிகவும் ஒழுங்கான முறையில் தெள்ளத்தெளிவான புள்ளிவிவரங்களுடன் அவர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார். பத்திரிக்கையாளர்கள் அவரை வறுத்தெடுக்கிறார்கள். அவரது அறிக்கையின் விவரங்கள் :

தூக்கப்பட்ட இரும்பு பாலம் எவ்வளவு எடை உடையது?
அதை தூக்குமுன்பு எத்தகைய பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது?
எத்தனை பேர் இறந்தார்கள்?
காயமடைந்தவர்கள் எந்தெந்த மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்?
மேலும் விவரங்களுக்கான ஹெல்ப் லைன் எண் எது?
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

மிக பிரமாதமான அர்த்தமுள்ள பத்திரிக்கையாளர் சந்திப்பு. ஆனால், நமது பத்திரிக்கையாளர்கள் அங்கு நடந்து கொண்ட விதம் ச்சீய், அருவருப்பாக இருக்கிறது. ஊடகத்தாரின் கேள்விகள்:

கேள்வி : இது ஒப்பந்தக்காரரின் கவனக் குறைவா?

பதில் : விசாரித்து வருகிறோம்.

கேள்வி : இதற்கு பொறுப்பு யார்?

பதில் : விசாரணையின் முடிவில் தான் தெரியும்.

கேள்வி : இத்ற்கு முக்கிய காரணமென்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

பதில் : விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது, அவர்களது விசாரணை ரிப்போர்ட் வந்த பின் தான் சொல்ல முடியும்.

கேள்வி : தரக்குறைவான பொருள்களினால் இது ஏற்பட்டிருக்குமா?

பதில் : விசாரணையில் பொருள்களின் தரமும் பரிசோதனை செய்யப்படும்.

கேள்வி : இது வடிவமைக்கப் பட்டதில் (Design) குறைபாடுள்ளதா?

பதில் : விசாரணைக்கு பிறகு தான் தெரியும்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த இடத்திலிருந்து சில ஆயிரம் மைல்களுக்கப்பால் அமர்ந்திருந்த எனக்கே ரத்தம் கொதித்துக் கொண்டிருந்ததென்றால், அங்கு அமர்ந்து பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்த அந்த அதிகாரிக்கு எப்படி இருந்திருக்கும்.

அடேய் ,வெண்ணைகளா, உங்களுக்கு என்ன வேண்டும் அதையாவது சொல்லித் தொலைங்களேன். ஆமாம், இது முழுமையும் ஊழலினால் நடந்தது, இந்த மந்திரி இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார், பல்லாயிரம் கோடி பணம் ஸ்வாஹா ஆயிருக்கிறது என்பது போன்ற ஒரு பொய்யான அறிக்கை வேண்டுமா? அல்லது ஒரு விபத்து நடந்த மூன்று மணி நேரத்தில் அந்த விபத்து ப்ற்றிய அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு, திருவாளர் ஊடகத்துக்கு வெளிப்படுத்தப் பட வேண்டுமா, அதை எடுத்து தங்களின் சேனலில் போட்டு, முழுவிவரங்களையும் தருகிற ஒரே சேனல் நாங்கள் தான் என்று மார்தட்டிக் கொள்ள பார்க்கிறீர்களா? இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இறந்துபோன 5 பேருக்காகவும் அல்லது காயமடைந்த அனைவருக்காகவும் பத்திரிக்கையாளர்கள் தரப்பில் இருந்து ஊசிமுனையளவும் அனுதாபம் தெரிவிக்கப்படவில்லை. மேலும் யாராவது ஒருவர் மேல் பழியைப் போட்டு, விஷயத்தின் வீரியத்தை திசை திருப்ப இவர்கள் எடுத்துக் கொள்ளும் பிரம்மப் பிரயத்தனத்தின் ஒரு சதவீதத்தைக் கூட, இவர்கள் இறந்து போனவர்களின் விஷயத்தில் அக்கறை காட்டுவதில் எடுத்துக் கொள்ளவில்லை.

அடுத்த சில மணி நேரங்களில், ஊடகங்கள் எல்லாவகையான அருவருக்கத்தக்க யூகங்களை மக்கள்முன் வைக்க சிறிதும் தயங்கவில்லை. 2010 - ல் நடைபெறப் போகும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முழுதும் தடை பட்டுப் போகும் அபாயம் இருக்கிறது, இதனால் அரசுக்கு ப்ல்லாயிரக்கணக்கான கோடிகள் இழப்பு, டெல்லி மக்களின் அனுதின வாழ்க்கையோடு அரசாங்கம் விளையாடுகிறது என்பது போன்ற யூகங்கள் கொஞ்சமும் வெட்கம், மானம் இல்லாமல் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இந்திய ஊடகங்களுக்கு கடிவாளமிட வரும் அவதார புருஷன், சீக்கிரத்தில் அவதரிக்க பிரார்த்திக்கிறேன்.

Tuesday, May 5, 2009

பாலபாரதி அண்ணன் கோவிச்சுக்க கூடாது!!!!!!

நேற்று இரவு 9 மணியளவில் NDTV 24 X 7 - ல் தேர்தல் நிலவரத்தைக் குறித்த பிரணாய் ராயின் பேட்டியை காணும் பாக்கியம் (அய்யோ, அய்யோ) கிடைத்தது.

என்னவோ புரியவில்லை, ஊடகத்தில் பணிபுரிவோர், பத்திரிகையாளர் இன்னும் இந்த பேட்டி எடுக்குற ஆசாமிங்க எல்லாம் நாங்க யாரை வேண்ணா அவமதிப்போம், தாய் நாட்ட எவ்வளவு தூரம் அவமதிக்க முடியுமோ, அவ்வளவு தூரம் கேவலப்படுத்துவோம், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்து, எவ்வளவு தூரம் அவர்களை கூனிக்குறுகி நிற்க வைக்க முடியுமோ அவ்வளவும் செய்வோம், எவனும் எங்களை ஒண்ணும் கேக்க கூடாது, மீறி எதாவது கேட்டியானா, மவனே நாங்கெல்லாம் பத்திரிகைக்காரங்க, வகுந்துடுவேன், தில் இருந்தா பேசுடா பார்க்கலாம் என சவால் விடும் அரை பிளேடு பக்கிரிகளாக ஏன் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நேற்று, பிரணாய் ராய் சொன்ன தகவல்கள் :

பொது ஜனங்களே இந்தியாவின் நிலையைப் பாருங்கள்.

  1. ஏழ்மையில் இந்தியா இலங்கை, பாகிஸ்தான் ம்ற்றும் பங்களாதேஷை விட தரம் தாழ்ந்து போயுள்ளது.
  2. மனித வள மேம்பாட்டில் ஆப்பிரிக்க நாடான காங்கோவை விட இந்தியா பின் தங்கியுள்ளது.
  3. ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவன நாடுகளில் பசியால் வாடி மடியும் மக்களை விட அதிகமானோர் இந்தியாவில் பசியால் சாகிறார்கள்.
  4. MalNutrition - சத்தான உணவில்லாமல் இந்தியாவில் பிறக்கும் 50 சதவீத குழந்தைகள் இறந்து விடுகின்றன.
  5. 77 % இந்தியர்களின் தினசரி வருமானம் 20 ரூபாய்க்கு கீழ் தான்.
  6. வறுமை கோட்டுக்கு கீழே 300 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.
  7. 230 மில்லியன் மக்களுக்கு சரியான உணவு இல்லை.

இந்த செய்திகள் ஒரு 30 வினாடிக்கு ஒருமுறை இந்த தலைப்புகள் அனத்தும் திரையில் பளிச்சென்று வந்து போகும், பின்னர் இந்த பிரகஸ்பதி யாராவது இரண்டு அல்லது மூன்று அரசியல்வியாதிகளிடம் கேள்வி கேட்பார். அவர்களும் எங்க கட்சி ஆட்சியில் இருந்த பொழுது, மாதம் மும்மாரி பொழிந்தது, இந்த கேப்மாறி ஆட்சிக்கு வந்ததும் தான் எல்லம் நின்னு போச்சுன்னு சத்தியம் பண்றாங்க. இதை ஒரு நிகழ்ச்சின்னு ஒளி பரப்பறாங்க,

பிரணாய் ராய்க்கு மாத்திரமல்ல, ஒட்டு மொத்த ஊடகங்களுக்குமே எனது சில கேள்விகள்:

இந்தியாவின் எந்த ஒரு சிறப்புமே உங்கள் கண்களில் தெரிவதில்லையா?

ஒரே விண்கலத்தில் பத்து செயற்கைகோள்களை வைத்து வானவெளியில் அனாயசமாக உலவ விட்டார்களே, உலகம் முழுவதும் மூக்கின் மேல் விரலை வைத்து, பிறகு எடுக்க மறந்து வியந்து போனதே, இதை எத்தனை ஊடகவியலாளர்கள் பாராட்டினீர்கள், கள்ளிக்குப்பத்தில் கள்ளக்காதல் எதிரொலியால் வெட்டிக்கொல்லப்பட்ட வள்ளியப்பனைப் பற்றிய செய்திக்கு தரப்படும் முக்கியத்துவத்தை கூட இந்த சாதனைக்கு தந்தீர்களா என்பது சந்தேகமே!!!

அரசியல்வாதியாகட்டும் அல்லது சினிமா பிரபலமாகட்டும் அல்லது விளையாடு வீரராகட்டும், இவர்களது தனிப் பட்ட வாழ்க்கை என்பது உங்களுக்கு கிள்ளுக்கீரையா? ஒவ்வொரு வருடமும் செய்திகளை உடனுக்குடன், சுடச்சுட, பரபரப்பாக தருவதற்கு விருதுகள் வாங்கிக் குவிக்கும் "ஆஜ் தக்" என்ற ஹிந்தி தொலைக்காட்சியில், இந்தியா டுடே நிறுவனத்தின் தலைமை எடிட்டராக பணி புரியும் பிரபு சாவ்லா என்பவர், ஹிந்தி திரைப்படதுறையின் பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கரை பேட்டி எடுக்கிறார்.

கேள்வி : லதாஜி, நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை, (ஒரு 60 வயது பெண்ணைப் பார்த்து இந்தக் கேள்வி அவசியமா)

பதில் : (மௌனம், ஒரு சிறிய புன்னகை)

கேள்வி : இல்லை, உங்களை திருமணம் செய்ய விடாமல் தடுத்தது எது?

பதில் : எதுவுமில்லை

கேள்வி : நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லையா?

பதில் : (புன்னகை).

கேள்வி : உங்களுக்கு திருமணத்தின் மீது நாட்டமில்லாமல் போனதா??????, அல்லது திருமணத்திற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனதா??????,

பொளேர் என்று அவனை அறைந்து விட்டு, காமிராவின் முன்னேயே அவனை அம்மணமாக்கிவிட்டிருக்க வேண்டும். என்ன தைரியம் இருந்தால் ஒரு பெண்ணைப் பார்த்து அதுவும் பலரால் அறியப்படும் ஒரு பெண்ணைப் பார்த்து இந்தக் கயவர்களால் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை கேள்வி கேட்க முடியும்??

26/11 ல் இந்த மீடியாக்காரர்கள் ஆடிய கேவலமான ஆட்டத்தை பார்த்து தெருநாய் கூட காறித்துப்பியது. ஆனால் அதற்காக ஒரு முறையாவது இவர்கள் வருத்தப்ப்ட்டதாகவோ, அல்லது மன்னிப்பு கோரியதாகவோ தெரியவில்லை.

முஷாரஃப்புடன் நடந்த ஆக்ரா உச்சி மாநாட்டின் போக்கை அரை வேக்காட்டுத்தன அறிக்கைகளால் முற்றிலும் திசைதிருப்பி விட்டது, 26/11 ல் இறந்த மேஜர் சந்தீப்பின் வீட்டாருடைய துக்கம் நிறைந்த தருணங்களைக்கூட கடைச்சரக்காக்கி விற்று காசு பார்த்தது என்று இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த ஊடகங்களின் கோரப்பிடியில் இந்திய மக்கள் சிக்கித் தவிக்க வேண்டுமோ தெரியவில்லை.

பிரணாய் ராயின் புள்ளி விவரங்களின் படி பார்த்தால்:

இன்னும் சில வருடங்களில் நாம் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி செல்ல வேண்டி வரும். இந்த வறியவர்களால் உருவாகும் அரசால் தான், ஆப்கானிஸ்தானின் புனரமைப்புக்கு தனது பங்களிப்பை செய்ய முடிகிறது. ஐ.நா வின் பாதுகாப்பு படையாக சென்று பல ஆப்பிரிக்க நாடுகளில் அமைதியை நிலை நாட்ட முடிகிறது.

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோவில் ஒரு டாலர் நோட்டுக்காக கழுத்து சீவப்பட்டவர்கள் ஏராளம். இதை விட கேவலமான ஒரு சமுதாயத்தில் தான் பிரணாய் ராய் வாழ்ந்து கொண்டிருக்கிறாரா? அல்லது இத்தகைய சமுதாயத்தில் இருந்து வந்த இந்த மனித வளம்தான் உலகத்தின் மென்பொருள் துறையையே கபளீகரம் செய்து விட்டதா???

சத்தான உணவில்லாததால் 50 சதவீத குழந்தைகள் இறக்கின்றனவென்றால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஜனத்தொகை பாதிக்கும் மேலாக குறைந்துவிடுமா???

77 சத வீத இந்தியர்கள் 20 ரூபாய்க்கு கீழான தினசரி வருமானத்தில் வாழ்கிறார்களென்றால் 56 சதவீத மக்கள் செல்போன் வைத்திருக்கிறார்களே, 20 ரூபாய்க்கு கீழே சம்பாதிப்பவன் எப்படி செல்போன் வைத்திருக்க்கிறான்??

வறுமை கோட்டுக்கு கீழும், சரியான உணவில்லாமலும் இத்தனை கோடிப்பேர் வாழ்கிறார்களே, அவர்களுக்கு ஒரு சராசரி இந்தியனாக நீ ஒரு துரும்பையாவது நகர்த்தி இருப்பாயா? தங்க நாற்கர சாலைகளாகட்டும், வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களாகட்டும், புதிதாய் முளைக்கும் நகரங்களாகட்டும், வறுமை கோட்டுக்கு கீழேயும், சோத்துக்கு வழியில்லாதவனும் எப்படி இவைகளை நிர்மாணிக்கிறான்????

இந்தியாவுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் காவல் பலப்படுத்தப் படுகிறது. ஆனால், உள்நாட்டு அதிதீவிரவாதிகளான கடிவாளமில்லாமல் திரியும் இந்த மீடியா காரர்களிடமிருந்து யார் காப்பாற்றுவது??

இறைவா, எங்களை நண்பர்களிடமிருந்து காப்பாற்று, எதிரிகளை நாங்கள் வெல்ல முடியும்.

டிஸ்கி : பால பாரதி அண்ணன் தலைப்பை மறுபடியும் படிக்கவும்.