Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, June 29, 2010

ஆமாம், இரவு வரட்டும்.

எத்தனைதான் உதறினாலும்
என் காலை விட்டு போவதில்லை அது
உயரமாயும் ஒல்லியாவும் என்னை
தொட்டுக் கொண்டே தொடர்கிறது.

தொல்லை தருவதில்லை ஆனால்
தொலைந்தும் போவதில்லை
என் உடலில் உடையில் வர்ணங்கள்
இருப்பினும் அது மட்டும் ஒரே வண்ணத்தில்.

எப்படியாவது என்னை எனக்குக் காட்டும்
அதை ஒழித்து விட வேண்டும்.
ஒளியில் என்னோடு தினமும் வரும் அது
இரவில் ஒளிந்து விடுமாம்.

ஆமாம், இரவு வரட்டும்.

Wednesday, March 24, 2010

வா, என் கண்மணி மறுபடி போவோம்.




பேருந்தில் பயணம்,
ஒரே இருக்கை,
என் தோளில் நீ,
உன் மடியில் நான்
நெருக்கம் இனித்தது.

பேருந்து பயணம்,
நேர விரயம்,
தனிமையின் காவு,
பயணம் கசந்தது.

பைக்கில் பயணம்,
முதுகில் முட்டல்கள்,
காதருகே சுவாசங்கள்,
செல்ல சீண்டல்கள்,
வாழ்க்கை இனித்தது.

இனித்தது இயங்கியது,
இன்னொரு உயிராய்,
இருவரின் இடையில்,
அதே பைக்கில்
அங்குலத்தில் இடைவெளி.

பைக்கும் மாறியது.
காருக்குள் மூவர்.
அதே சாலை, அதே பூமரம்
அதே காலை, அதே சூரியன்
ஆனால் அங்குலம் அடிகளாகிவிட்டதடி.
நீ அருகிலிருந்தும் துருவ தூரத்தில்.

இந்த வசதிகள் நமக்குள்
வரப்புகள் வரைந்தது,
சொகுசுகள் எல்லாம்
சுகங்களின் விலையில்.
வீணைகள் வாங்க
விரலையா விற்பது?

வா, என் கண்மணி
மறுபடி போவோம்,
பைக்கில் பயணம்,
முதுகில் முட்டல்கள்,
காதருகே சுவாசங்கள்,
செல்ல சீண்டல்கள்,
இனிக்கும் வாழ்க்கை
இன்னொரு முறை வாழ்வோம்.

Wednesday, January 20, 2010

மழை - கேபிள், தண்டோரா பார்வையில்

மழையைப் பற்றி பேசாத மனிதர்கள் இருப்பது அபூர்வம். எல்லா மொழிகளிலும் மழையை வர்ணித்து ஒரு கவிதையாவது கண்டிப்பாய் இருக்கும். இங்கு தமிழில் சில கவிஞர்கள் மழையை வர்ணித்தால் எப்படி இருக்கும் என ஒரு பார்வை:

சிலப்பதிகாரத்தில் மழை

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற் கவனளி போல்
மேனின்று தான் சுரத்தலான்

(மழை பொழிகையில் எல்லாருக்கும் பெய்யும். இரண்டு பேர் மழையில் இருந்தால் இருவருக்கும் ஒரே மழைதான். அதுபோல அரசனுடைய கொடையும், நீதி நியாயங்களும் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது மறைபொருள்.)

வைரமுத்துவின் வார்த்தை விளையாட்டில் மழை :

யாரங்கே?
வாருங்கள்

விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்

திரவ முத்துக்கள்
தெறிப்பது பாருங்கள்

யாசித்த பூமிக்கு
அந்த வானம்
வைரக் காசுகள்
வீசுவது பாருங்கள்

மழை மழை
மழைமழை
மழை மழை

மண்ணின் அதிசயம் மழை


சேவியர் அண்ணாவின் செதுக்கிய வார்த்தைகளில் :

மழை

மழைத் துளியல்ல,

சோர்வின் வடுக்களை

அழுத்தித் துடைக்க

மேகப் பருத்தி நெய்து

இறக்கும்

மழைத் துணி

எங்கள் நிரந்தர யூத் கவிஞர் அனுஜன்யாவின் பார்வையில்:

நீ புறப்பட்டு விட்டது தெரிந்த
மனது சொல்லியது
அடுத்த சாலையில்
நீ வந்துகொண்டிருப்பதை ;
பரபரக்கும் அந்தக் கணங்கள்
மிகத் துல்லியமான தருணங்கள்.
புரியவில்லையா? இதைக் கேள்!
மழைக்கு முன் சோதனை முயற்சியாய்
இலேசான தூறல் விழும் -
மண்வாசனையைப் பூசிக் கொண்டு;
அதற்கு முந்தைய தருணத்தை
யோசித்திருக்கிறாயா கண்ணே !

இருளத் துவங்கும் முன் வானம்
கடைசியாய் ஒரு முறை பிரகாசிக்கும்
எங்கிருந்தோ தென்றலும் சேர்ந்து
ஓரிரு மின்னல்களுடனான இடியும் கலந்து
ஒரு அரிய இசைக் கச்சேரியின்
அனைத்து ஆயத்தங்களும்
அதில் புலப்படும்.
சொற்ப காலமே எனினும்
அரிய, துல்லிய தருணங்கள்.
தூரலில் நீ வேகமாய் வந்ததும்
பிறகு நாம் மழையை கொண்டாடியதும்
காதலின் உன்னதம் எனினும்
முன் சொல்லிய துல்லிய தருணங்களுக்கு
எதுவுமே ஈடாகாது -
பெருமழை மற்றும்
உன்னையும் சேர்த்து


இனி இதே மழையைப் பற்றி எங்கள் என்டர் மன்னன் கேபிள் அண்ணன் எழுதினால்:

வானத்தின் முலைகள்
வெள்ளை மேகங்கள்
விம்மிப் புடைத்தன
நிறம் மாறி கருத்தன

கசமுசா செய்ய
காற்று வந்தது.
கரங்களினாலே
கசக்கிப் பிழிந்தது.
பொழிந்தது மேகம்
தணிந்தது தாகம்
நிறம் மாறி நிலத்தில்
ஓடுது வெள்ளம்.

இதே மழையைப் பற்றி எங்கள் பின் நவீனத்துவ விமர்சகர் தண்டோரா எழுதினால்:

பூமியை வானம் புணர்ந்ததின் உச்சம்
உச்சத்தின் எச்சத்தில்
நிறமில்லா மச்சம்………
மழைத்துளி.

Tuesday, December 8, 2009

எங்க அய்யாமாருக பெருமைப் பட்டாக!!!!!

நிலாவுல நீர் இருக்குதாம். இந்தியந்தான் கண்டு பிடிச்சானாம்

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக

அய்யா, ராசா, எங்கூருக்கு

எப்பய்யா தண்ணி கண்டு பிடிப்பீக.?



பங்குச்சந்தைல பதினேழாயிரம் புள்ளியாம்,

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக.

அய்யா, ராசா, பருப்பு தின்னு பல மாசம்

ஆச்சய்யா, பங்குச் சந்தைல பருப்பு விப்பீகளா?



எல்லாரும் எல்லாம் படிக்க சமச்சீர் கல்வி வருதாம்

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக,

அய்யா ராசா, சமச்சீரோ, சமையாத சீரோ

படிக்க மொதல்ல பள்ளிக் கூடம் குடுங்கைய்யா?



கிரிக்கெட் போட்டியில மொத இடமாம்

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக

அய்யா ராசா, விளையாட்டெல்லாம் சரிதான்யா

எங்க வாழ்கைக்கு ஒரு வழி சொல்லுங்கைய்யா

Tuesday, October 20, 2009

மூச்சு முட்ட முப்பது நாட்கள்

பன்னாட்டு நிறுவனமாம்,
பல மொழிகள் பேசுவார்களாம்,
பளபளக்கும் மேசைகளும்,
உடல் சிறுத்த கணிணிகளும்,
கண்ணாடி அறைகளுக்குள்
கைதிகளாய் மனிதர்களும்.

வாடகைக்கு உடல்கள் இங்கு
வரிசையாய் நிற்பதுண்டு.
மூளையை முடக்கி வைத்த
முண்டங்கள் முக்கியங்கள்.
சொல்வதை செய்து விடு
சொல்ல நினைத்ததை மறந்து விடு.

சுயம்புகள் தூரப் போங்கள்,
சிந்திப்பவர் ஒழுக்கம் கெட்டவர்,
ஆமாம் சாமி தாரக மந்திரம்,
சாப்பிட மட்டும் வாயைத்திற,
குலுக்க மட்டுமே கையை உயர்த்து,
அவசியப்பட்டால் அசைந்து கொள்.

கைநாட்டு போட வேண்டாம்,
கழுத்திலொரு பட்டை தருவோம்.
புவியின் சுழற்சி முப்பது முடிந்தபின்
முடிந்து தருவோம் முடிப்பு ஒன்று,
மூச்சு விடாமல் வாங்கிக் கொள்.

Thursday, June 4, 2009

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு

தோன்றித்தொலைவது ஒளியின் அழகு.

தோன்றாமல் நிலைப்பது இருளின் அழகு.



அளவுள் அடங்குவது ஒளியின் வலிமை.

அளக்க முடியாதது இருளின் பெருமை.


ஒளியின் உருவத்துக்கு ஒரு நூறு வர்ணம்.

அழிவிலா இருளுக்கு ஒரே ஒரு வர்ணம்.


பொய்யாய் மின்னுவது ஒளியின் குணம்.

உண்மையை உணர்த்துவது இருளின் மணம்.


பொய்யாய் உறவுகள் சிரித்திடும் ஒளியில்.

இல்லறம் கலந்து இனிப்பது இருளில்.


ஒளியினைப் போற்றிடும் ஆறறிவு மானிடா

இருளுக்கு இத்தனை சிறப்புண்டு கேளடா

Wednesday, April 8, 2009

இத்த இன்னாண்ணு சொல்றது

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது

உன் விழிச்சாட்டை அடிகள்

என் மீது வீசப்படாவிட்டால் - என்

மனக் குதிரை மண்டியிட்டுக் கொள்கிறது.



என் வீட்டுக் கண்ணாடியில் என்ன

வகை மாயம் செய்தாய்,

என்னைத் தேடினால், சந்தோஷமாய்

வேறு எவனோ ஒருவன்.



பூக்களின் முகத்தை அனைவரும்

காணுவர். ஆனால் இன்றுதான்

கண்டேன், ஒரு பூவின் பின்னால்

ஒரு முழம் மல்லிகைப் பூ.



கவிஞர்களாலா கவிதை உருவானது

இல்லை, இல்லை, - இதோ

ஒரு கவிதை ஒரு கவிஞனை

உருவாக்குகிறது.

Thursday, January 8, 2009

வழிவிடு மானிடா !!!!!!

மனைவி குழம்பு வைத்தாள்
பருப்பு மட்டும் பார்த்து சிரித்தது
என்னவென்றேன்
லாரி ஓடவில்லை - காய் கறி வரவில்லை.

வழியில் கடையில் பார்த்தேன்
ஆத்திரக் குரலுடன் அதிகமாய் தாய்மார்கள்
என்னவென்றேன்
லாரி ஓடவில்லை - எரிவாயு வரவில்லை.

எரிபொருள் நிரப்பச் சென்றேன்.
எரிபொருள் நிலையத்தில் காற்று மட்டுமே காத்திருந்தது.
என்னவென்றேன்
லாரி ஓடவில்லை - எரிபொருள் வரவில்லை.

ஆனால் சாலையில் பார்த்தேன்
அரசுப்பணியில் - அவசரம் என்ற முகவரி தாங்கிய முகங்களுடன்
அசுர வேகத்தில் லாரிகள் ஓடியது.
லாரி தான் ஓடுகிறதே - என்னவென்றேன்,

பதில் வந்தது,

வழிவிடு மானிடா, அவை டாஸ்மாக் கடையின் சரக்கு லாரிகள்.
அரசுப்பணியல்லவா அவை அவசரமாக செல்ல வேண்டும்.
எத்தனை கடைகளில் இருப்பு தீர்ந்ததோ,

வழிவிடு மானிடா - அரசுப்பணியில் - அவசரம்.