Monday, October 18, 2010

ஜுகல்பந்தி 19 - 10 - 2010 , நாட்டு/வீட்டு நடப்புகள்


நாட்டு நடப்புகள் :


வெற்றிகரமாக காமன்வெல்த் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கும்படியாக ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நூற்றியொரு பதக்கங்கள், 4 X 100 மீட்டர் தூர ஓட்டத்திலும் தட்டு எறிதலிலும் நம் இந்திய வீராங்கனைகள் நிகழ்த்திய சாதனைகள் எந்த இந்தியனது நெஞ்சையும் நிமிரச் செய்யும். குத்துச் சண்டையும், மல்யுத்தமும் இந்தியர்களுக்கெனவே எழுதப் பட்டதோ என்னவோ என நினைக்க வைக்கும் படியாய் பதக்கங்களை வாரிக் குவித்து விட்டனர். இந்தியாவின் தங்க பதக்கங்களில் கடைசி பதக்கத்தை போராடிப் பெற்ற சானியா நெய்ல்வாலின்ஒவ்வொரு அடியையும் ரசித்த ரசிகர்களின் கர கோஷத்தால் அரங்கமே அதிர்ந்தது. கடைசியில் இறுதி விழா நிகழ்ச்சிகளில் கண்ணைப் பறிக்கும் லேசர் விளக்குகளின் ஜாலம், இந்திய பாரம்பரிய வீர விளையாட்டுகளின் வீர சாகசங்கள், ராணுவ வீர்ர்களின் கட்டுக்கோப்பான இசை நிகழ்ச்சி என இறுதி விழா களைகட்டினாலும், குழப்பங்களின் நாயகனான சுரேஷ் கல்மாடி இறுதி உரையில் உளறித்தள்ளி ஒரு வழியாய் முடித்தார்.


ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகாரிகளின் திறமையின்மை, ஒப்பந்தக்காரர்களின் கையாலாகத்தனம், தெளிவான திட்டமிடாமை, கடைசி நிமிடம் வரை ஒருவரையொருவர் குற்றம் சொல்லி விரல் நீட்டி விளையாடியது, போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்புவரை அடாமல் பெய்த மழையால் விழைந்த இயற்கையின் சதி, பொறுப்பானவர்களின் சோம்பேறித்தனம், எங்கு குற்றம் கண்டு பிடிக்கலாம் என கண்ணில், மூக்கில், வாயில் இன்னும் எல்லா இடத்திலும் விளக்கெண்ணய் ஊற்றிக்கொண்டு ஆராய்ந்து, பேனை பெருமாளாக்கி, அதை உலகம் முழுவதும் தம்பட்டம் அடித்து, தனது நிறவெறிக்கு தீனி போட்டு தனக்குத்தானே திருப்தியாகிக் கொண்ட மேற்கத்திய நிறவெறி ஊடகங்களின் பொய் பிரச்சாரம், அதற்கு துதி பாடிய வெட்கங்கெட்ட, மான ரோஷமில்லாத, உப்புப் போட்டு சோறு திங்காத இந்திய ஊடகங்களின் உள்நாட்டு சதி என எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்தியா சாதித்துக் காட்டியிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமாய் இருந்த அந்த 21,000 தன்னார்வ சேவையாளர்களுக்கும், மற்றும் தனது கடைமையில் சற்றும் தளராது சர்வ தேச அரங்கில் இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்க வைத்த ஒவ்வொரு ஊழியனுக்கும் எங்களது நன்றிகலந்த வணக்கங்கள்.
ஆனால், அதே வேளையில் நாங்கள் இன்னும் பரிணாம வளர்ச்சியில் ஒரு படி பின் தங்கித்தான் இருக்கிறோம், நாங்கள் மனிதர்களாய் வளர்வதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகும் என நிரூபித்து விட்ட ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களின் அருவருப்பான நிறவெறியாட்டத்துக்காக அவர்களை செருப்பிலடித்து சிறையிலடைத்திருக்க வேண்டும். ஆனால் இந்திய போலீஸோ வழக்கம் போல வெள்ளைத்தோலின் முன் மண்டியிட்டிருக்கிறது. இதற்கு எங்கள் வன்மையான கண்டனங்கள்.


உலக நடப்பு :


சிலி நாட்டில் நடந்த சுரங்க விபத்தும், பின் சிறைப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களும், அவர்களை அதிசயமாய் மீட்ட கதையையும் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதில் நிறைய சுவராஸ்யமான சம்பவங்களும் நிகழ்ந்திருக்கிறது. எல்லாம் ”கில்மா” மேட்டர்தான்.
யோன்னி பாரியோஸ் என்ற இந்த சுரங்கத் தொழிலாளிக்கு 28 வருடங்களுக்கு முன் மார்த்தா சாலினாஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. சகதர்மிணியுடன் ஒழுக்கமாகத்தான் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். என்னவாயிற்றோ ஏதோ தெரியவில்லை, திடீரென ஒருநாள் இருவருக்கும் பிணக்கு ஏற்பட 2009 ம் ஆண்டில் மனைவிக்கு தெரிவிக்காமலே, அவரை விவாகரத்து செய்யாமலே படத்தில் அவர் அணைத்திருக்கும் பெண்ணுடன் (சூசன்னா) தனியே வசித்து வந்திருக்கிறார்.


இவர் சுரங்கத்தினடியில் மாட்டிக் கொண்டதும் சக நண்பர்களுக்கு ஒரு மருத்துவரைப் போல இருந்து உதவிகள் செய்தும், அவ்வப்பொழுது எல்லோரையும் சிரிக்க வைத்தும் மனோதிடம் கெடாமல் பார்த்துக் கொண்ட இந்த நல்ல மனிதருக்கு இப்படி ஒரு மறுபக்கம் இருக்கிறதென எல்லாரும் அறிந்து கொண்டது இந்த சுரங்க அடைப்பு விவகாரத்துக்கு அப்புறம்தான்.
இவர்கள் உள்ளே இருக்கும்போதே, நீங்கள் வெளியே வந்த்தும் யாரைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்க்கப்பட்ட கேள்விக்கு, நான் என் பெரிய வீட்டையும் சின்ன வீட்டையும் பார்க்க விரும்புகிறேன் என்று இவர் சொல்லிவிட, இரண்டு அம்மணிகளும் சுரங்கத்துக்கு வெளியே நேருக்கு நேர் சந்தித்ததில் குடுமி பிடி சண்டையாகிவிட, கஷ்டப்பட்டு விலக்கி வைத்திருக்கிறார்கள். இதை அறிந்து கொண்டதும் இவரது மனைவி இவர் வெளியே வருவதை நான் தொலைக்காட்சியில் கூட பார்க்க விரும்பவில்லை என வீம்பு பிடித்து கோபம் கொண்டு போய் விட்டார். ஆனால் இவரது இப்போதைய நாயகி மாத்திரம் கால்கடுக்க நின்று கண்ணீர் மல்க வரவேற்றிருக்கிறார்.


இப்படி உள்ளிருந்த இன்னும் நிறைய பேரின் ரகசிய சொந்தங்கள் சுரங்கத்துக்கு வெளியே அவர்கள் பெயர்கள் ஏந்திய பலகைகளுடன் குவிந்து விட, ஏகத்துக்கும் குடுமி பிடி சண்டைகள் நிகழும் அபாயம் இருப்பது கண்டு அரசாங்கம் இதை எப்படி சமாளிப்பது என திணறிப் போய் விட்டதாம்.


ங்கொய்யால பக்கம் : (கொஞ்சம் மீள்ஸ்)


அப்பா, அம்மாக்கு புது துணி


தங்கச்சிக்கு புது செல்போன்


தம்பிக்கு டிஜிட்டல் கேமரா


பொண்டாட்டிக்கு புது சங்கிலி


புள்ளைங்களுக்கு பட்டாசு


பக்கத்து வீட்டுக்கு பலகாரம்


ங்கொய்யால


விட்றா, விட்றா, அடுத்த தீவாளிக்கு


புதுச்செருப்பு வாங்கிக்கலாம்.

Monday, October 11, 2010

என்னத்தச் சொல்ல....

ஒரு உயிர் இனத்தை சினிமா என்ற ஒரு சமுதாய நோய் இந்த அளவுக்கா வசியப்படுத்தும்??? அப்பப்பா, எத்தனை விமர்சனம், எத்தனை அமர்க்களம். இந்திய நாட்டின் அனைத்து ஜீவராசிகளையும் தன் பக்கம் ஈர்க்கிற ஒரு சாராரின் வியாபார உத்திக்கு, ஒவ்வொரு இந்தியனும் தனது கணிசமான நேரத்தை எதாவது ஒரு வழியில் செலவிடுகிறான். சமீபத்தில் கொங்கு மண்டலம் வரை தரை வழியாக பயணம் செய்தேன். இதற்கு முன்பாக இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் ஊர் பெயர் தாங்கிய பலகை காணப் படுகிறதோ இல்லையோ, கொக்கோ கோலாவின் விளம்பர பெயர் தாங்கிய பலகைகள் கண்டிப்பாக காணப்படும். ஆனால், இப்பொழுது தங்கள் தங்கத் தலைவனின் புதுப்படம் வெற்றியடைய ஒவ்வொரு கிராமத்தானும் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பர பேனர் கட்டியிருக்கிறான்.

விளம்பர பேனர் கட்டுவதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. அதில் இவனது தங்கத்தலைவன் நின்று, நடந்து, படுத்துக் கொண்டிருக்கும் இடத்திலெல்லாம் அவன் காலடியில் கை கூப்பி சிரித்த வண்ணம் இவன் தன் படத்தை போட்டிருக்கிறான். அட முட்டாள் தமிழர்களா, நீங்கள் இவ்வளவு கொண்டாடும் தங்கத்தலைவன் ஒரு முறையாவது உங்கள் அன்புக்கு ஊசிமுனையளவாவது மதிப்பு கொடுத்திருக்கிறானா??? ஹிந்தி திரையுலகிலும் இந்தப் படம் வசூலை அள்ள வேண்டுமென்பதற்காக, மெனக்கெட்டு மும்பை சென்று, அங்கு பால் தாக்கரேயை சந்தித்து குலாவிக் கொண்டிருக்கும் அவனுக்கு நீங்கள் பாலாபிஷேகம் செய்கிறீர்களே, எப்படா இந்த துதி பாடற வியாதில இருந்து வெளிய வருவீங்க.....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காமன்வெல்த் போட்டிகளின் குளறுபடிகள் ஒருபுறமிருந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என் நிரூபிக்கும் வண்ணமாக ஒரு துவக்க விழா நடத்திக் காட்டி விட்டு, போட்டிகள் சுமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஒரு சில நிறவெறியர்களின் தாகுதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முன்பதாக முற்றிலும் நிறவெறி கொண்ட மேற்கத்திய ஊடகங்களான பி.பி.சி, மற்றும் இன்ன பிற ஊடகங்கள், எங்கோ மூலையில் தொங்கும் ஒரு மின்சார ஒயரையும், இன்னமும் கட்டி முடிக்கப்படாத பாதசரி நடை மேடைகளையும், தொடர்ந்து ஒளிபரப்பி இந்தியர்களின் மேலுள்ள நிறவெறியை அப்பட்டமாக பறை சாற்றின. அடுத்த்தாக குத்துச் சண்டை வீரர்களை போட்டிக்கு முன்பாக எடை பார்க்கப் போனால், அந்த எடை இயந்திரங்கள் தரம் தாழ்ந்தவை என ஒரு முறை கூவித் தீர்த்தார்கள். எந்த மின்னணு இயந்திரத்திலும் கோளாறுகள் நடப்பதி இயல்பு தானே ஒழிய, அது இந்தியாவில் நடந்தால் அதை மட்டுமே வைத்து கூவிக் கூவி ஒப்பாரி வைப்பதை நிறவெறி என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்.

தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள போனாராம், அவர் நீந்தப் போகும் பொழுது இந்திய ரசிகர்கள் கூச்சலிட்டதால் அவரால் சரியாக நீந்த முடியவில்லையாம். அதனால் இந்தியர்கள் குரங்கு போல் கூச்சலிடுகிறார்கள் என திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் கால்பந்தானாலும் சரி, கிரிக்கெட்டானாலும் சரி, அங்கு அவர்கள் ஊதும் ஒலிப்பான்களால் காது கிழியும். ஆனால் அவருக்கு இங்கு இந்தியனின் சத்தம் குரங்கு சத்தமாய் கேட்கிறதாம், அதை நமது ஊடகங்கள் தவறாமல் ஒளிபரப்புகிறது. டேய், போய் முதல்ல உங்க முதுகுல இருக்கற அழுக்கை கழுவுங்கடா, அப்புறமா அடுத்தவனை பார்ப்பீங்களாம்.
ஆனால், இதில் வேதனை என்னவென்றால், இவர்களோடு சேர்ந்து கொண்டு நமது இந்திய ஊடகங்களும் இப்படி ஒப்பாரி வைப்பதுதான் வேதனையின் உச்சகட்டம்.... ம்.. என்னத்தைச் சொல்ல......

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கொஞ்ச நாட்களாகவே எங்கள் வீட்டில் ஆவின் பால் அட்டை வாங்க வேண்டும் என்ற குரல் எல்லா மூலைகளிலிருந்தும் ஒலிக்க ஆரம்பிக்க, கடைசியாக சென்ற வாரத்தில் ஒருநாள், அந்த அலுவலகம் நோக்கி அடியெடுத்து வைத்தேன். வழக்கம் போல வெளிச்சம் இல்லா இருட்டறையில், கைவைத்து தேய்ந்து போன மர மேஜைகளின் பின்னால், கட்டுக்கட்டான காகித மலைகளுக்கு நடுவில் அமர்ந்திருந்த ஒரு புண்ணியவான் என்னை ஏறெடுத்துப் பார்த்து விட்டு நான் வணக்கம் சொன்னவுடன் என்னை ஒரு வேற்று கிரக வாசி போல நினைத்தாரோ என்னவோ, ஒரு கேவலமான பார்வை பார்த்து விட்டு மறுபடியும் அந்த காகிதக் குவியலில் முகம் புதைத்துக் கொண்டார்.
“சார்”
“என்ன???”
“புது பால் கார்டு வாங்க என்ன செய்யணும்”
“புது கார்டு இப்பல்லாம் குடுக்கறதில்லை, ஒரு 5 மாசம் கழிச்சு வாங்கோ”
“சார், இப்பத்தான் கால் செண்டர்ல பேசினேன், அவுங்க உங்க கிட்ட விண்ணப்பம் குடுக்க சொன்னாங்க”
”அப்ப கால் செண்டர்லயே போய் விண்ணப்பம் குடுத்துருங்க, யார் சொன்னாங்களோ, அவுங்க கிட்ட போய் விண்ணப்பிக்கறதுதான முறை?”
“இல்ல சார், அவுங்க உங்க கிட்ட விண்ணப்பம் குடுக்க சொன்னாங்க”
“இங்க விண்ணப்பம் வாங்கறதில்லை, ஒரு 5 மாசம் கழிச்சு வாங்க”
“அப்ப விண்ணப்பம் வாங்குவீங்களா???”
“என்ன நீங்க கேள்வி மேல கேள்வி கேக்கறீங்க, ஒரு தரம் சொன்னா அதுக்கு மேல பேசக் கூடாது”
எனக்கு ஒண்ணு மாத்திரம் புரியல, இவுனுங்களுக்கெல்லாம் அரசாங்க சம்பளம் எதுக்கு குடுக்கறாங்களோ, ஒரு வாடிக்கையாளரிடம் எப்படி பேசணும்னு கூட தெரியாதா....., ம்.. என்னத்தைச் சொல்ல....

Wednesday, September 15, 2010

பெண்ணியம் பேசுவோம் வாருங்கள் – 2.


நேற்று நண்பரொருவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஒரு பெண்ணின் திருமண கால மனநிலையை உருக்கமாக பிரதிபலிக்கும் வர்ணனைகள் நிறைந்த வரிகளுடன் ஆரம்பிக்கும் இந்த எழுத்துக் கோர்வை, பின் பாதியில் புதிதாக திருமண உறவில் ஈடுபடும் ஆணின் மனநிலையையும் தொட்டும் தொடாமலும் சென்று முடிகிறது.

இப்படியாக அந்த செய்தி ஆரம்பிக்கிறது, அந்தப் பெண்ணின் மனதில் ஒரு ஓயாத கூக்குரல் இருக்கிறது. அவள் தன் வேதனைகளை கத்தித் தீர்க்க வேண்டுமென்று தருணம் தேடுகிறாள். அம்மா, எனக்கு திருமணம் வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால், வெறும் ஒரு சில நிமிடங்களே பார்த்த முன்பின் தெரியாத ஒரு ஆணுடன் நான் எப்படி வாழ்நாள் முழுக்க வாழ்வேன்? என் உணர்வுகளை, ஆதங்கங்களை புரிந்து கொள்ள முடியாத ஒருவனாய் அவன் இருந்து விட்டால், என் வாழ்க்கை ஒரு நரகமாக மாறி விடாதா? நான் பெண்ணாய் பிறந்தது என் குற்றமா? ஏன், என்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் இந்த உறவு முறைக்குள் திணிக்கிறீர்கள்? நல்ல குடும்பம், நல்ல ஜாதகம், நல்ல சம்பளம், நல்ல உயரம், நல்ல ஜாதி, நல்ல பழக்க வழக்கம் என்ற உங்களின் ஒரே ஒரு முக கோணத்தில் உருவகமெடுத்திருக்கும் தேடல் வாக்கியங்களான எல்லா “நல்ல” வைகளுக்குள்ளும் கச்சிதமாக பொருந்தும் இந்த ஆணுக்குள், என் மனதையும், என் தனித்துவத்தையும், என் பழக்க வழக்கங்களையும், என் விருப்பு வெறுப்புகளையும், குறிப்பாக என்னை மதிக்கிற அந்த “நல்ல” தன்மை எங்கே ஒழிந்திருக்கிறதென்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?

இப்படி மனதில் தோன்றும் ஆயிரம் கேள்விகளைக் கேட்டு ஓங்கிக் கத்த வேண்டும் போலுள்ள அந்தப் பெண்ணை அப்படியே கோழி அமுக்குவது போல் அமுக்கி, மணப்பெண் அலங்காரம் செய்வித்து, புது உடை உடுத்தி, நகை அணிவித்து, மணவறையில் அமரவைத்து, எல்லா சடங்குகளுக்கும் மறுப்புப் பேசாமல் தலையாட்டும் பொம்மையாய் நடிக்க வைத்து, நாளை முதல் இவன்தான் உன் உலகம், இவனுக்கு என்ன பிடிக்கிறதோ, அது உனக்கு பிடிக்காவிட்டாலும் பிடித்த மாதிரி வாழ பழகிக் கொள் என சொல்லாமல் சொல்வது பெண்ணினத்தின் மீது சமூக கட்டமைப்பால் ஏவி விடும் மிகப் பெரிய வன்முறை இல்லாமல் வேறென்ன என கேள்வி எழுப்புகிறது அந்த எழுத்து.

இந்த மின்னஞ்சல் என்று மட்டுமல்ல, எந்த ஒரு திருமண உறவின் விவரிப்புகளிலும் அந்தப் பெண்ணின் சம்மதம் இல்லாமலே பெண்ணை பெற்றோரிடமிருந்து பிரித்து, ஒரு புதிய சூழலில், புதியவர்களின் வாழ்விடத்தில், புதிய மனிதர்களின் அருகாமையில், புதிய பழக்க வழக்கங்களுக்கு மத்தியில், புதிய குடும்ப ஒழுங்குகளில் என அநேக ”புதிய”வைகளின் பட்டியல் பிரம்மாண்டமான வர்ணனை வார்த்தைகளால் விவரிக்கப்படுகிறது.

எனக்கு ஒரு சில சந்தேகங்கள் :

1. இன்றைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்பம் என்ற ஒன்றே அரிதாகி வரும் கால கட்டத்தில், இன்னுமா பெண்ணுக்கு இந்த பட்டியலிடப்பட்ட “புதிய” சூழலில் வாழ வேண்டிய அவசியம் ஏற்படுகிறது????

2. திருமணமானவுடன் முன்பின் சற்றும் அறிமுகமில்லாத ஆணுடன் ஒரு பெண் வாழும் படி நிர்பந்திக்கப் படுகிறாள் என்பதை இம்மியளவேனும் ஒரு அர்த்தமுள்ள கூற்றாக எடுத்துக் கொண்டோமென்றாலும், இதில் மண வாழ்வு என்பது வெறும் பெண் சம்பந்தப் பட்ட விஷயம் மாத்திரம் தானா, அந்த ஆணுக்கு ஒரு பெண்ணுடன் இணைந்து வாழ்வது என்பது ஒரு புதிய சூழலில்லையா????

3. பெற்றோரிடமிருந்து ஒரு பெண் பிரிந்து வருவது என்பதில் உள்ள பிரிவின் தாக்கம் பெண்மனதில் எவ்வளவு உள்ளதோ, அவ்வளவே ஆண் மனதையும் அதன் தாக்கம் ஆக்கிரமிக்கும் என்பதை ஏன் யாருமே உணர்வதில்லை????

4. அப்படியே ஒரு பெண் கூட்டுக் குடும்பத்தில் வாழும் நிலை ஏற்பட்டாலும், அங்கு எனது மன உணர்வுகள், என் பழக்க வழக்கங்கள், என் நியாயங்கள், என் சுதந்திரம் என ஒரு தனி ஆதிக்கப் போக்கை விட்டு, குடும்ப நலம், குடும்ப பழக்க வழக்கம், குடும்ப நியாயம் என்ற பரந்த நோக்குடன் இசைந்து வாழ்வது என்பது பெண்ணின் தன்மானத்துக்கு கேவலமான ஒன்றா????

5. பெண்ணை ஒரு முன்பின் அறிமுகமில்லாத ஆணுடன் இணைந்து வாழ வைப்பது என்பது பெண்ணின் சுய மரியாதையை குலைக்கும் ஒரு சமூக வன்முறை எனில், ஆண் அந்த வன்முறைக்கு இலக்காவதில்லையா????

தாம்பத்யத்தில் அன்பு, புரிந்துணர்வு, தனது துணையின் எண்ணங்கள் பால் மரியாதை இன்னும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத எத்தனையோ உணர்வு சார்ந்த சமாச்சாரங்கள் எல்லாம் இருபாலரிடத்தும் சரி விகித்த்தில் காணப்பட்டால் தான் அது தாம்பத்யம். இல்லையேல் பெண்ணின் உணர்வுகள், பெண்ணின் நியாயங்கள் (மட்டும்) மதிக்கப் பட வேண்டும் என போர்க்கொடி பிடிப்பது, மேடைக்கு அழகாய் இருக்கலாம், நான்கு சுவர்களுக்குள் அது அழுக்காய்த்தான் இருக்கும்.

Monday, August 2, 2010

சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு......

ஞாயிற்றுக் கிழமை, விடுமுறை நாள்.

கொஞ்சம் தாமதமாகவே எழுந்து, குளித்து, டிபன் சாப்பிட்டு, இன்னும் மடிப்புக் கலையாத ஹிண்டு பேப்பரை கையிலெடுத்து விட்டு, சோபாவில் சாய்ந்து அமர்ந்து, டீ கப்பை டீபாயில் வைத்து விட்டு பேப்பரை பிரித்தார். வீட்டுக்கு வெளியே காலையிலேயே பையன்கள் கிரிக்கெட் விளையாடும் சத்தம் கேட்டது. பேப்பரை விரித்து கண்களை ஓட விட்டவருக்கு, அந்த சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்டது.

கீச், கீச் சென இரண்டு குருவிகள், பால்கனியின் கிரில் கம்பிகளில் அமர்வதும், விசுக்கென திரும்புவதும், ஒன்றையொன்று பார்த்துக் கொண்டு கத்துவதும், பறந்து வந்து பால்கனியில் இருந்த ஷூ ஸ்டேண்டின் கீழே அமர்ந்து, கழுத்தை சாய்த்து, ஆராய்ச்சி செய்வதும், மறுபடியும் கிரில், கீச் கீச், உடனே அடுத்த குருவி, அதே ஆராய்ச்சி, கிரில், கீச், கீச். இப்பொழுது இரண்டு குருவிகளின் பார்வையும் மேலே இருந்த வெண்டிலேட்டர் திறப்பில் பட, விர்ரென பறந்த ஒரு குருவி, அங்கும் ஆராய்ச்சி செய்து மறுபடியும் கிரில், கீச் கீச். இப்பொழுது அடுத்த குருவி, அதே ஆராய்ச்சி, கிரில் கீச் கீச்.

இரண்டையும் உன்னிப்பாக கவனித்தார் சிவராமன். ஆணும் பெண்ணுமாக வீடு கட்ட இடம் பார்க்க வந்திருக்கிறார்கள். அவைகளின் ஆராய்ச்சியையே கொஞ்சநேரம் பார்த்து விட்டு, கடவுளோட படைப்பு தான் எவ்வளவு அற்புதம் என மனசில் நினைத்தவராய் பேப்பரில் மூழ்கிப் போனார்.

அடுத்த நாள் காலை ஆபீசுக்கு போகையில் ஷூவை எடுக்க ஷூ ஸ்டேண்டுக்கு போனவர், அதை கவனித்தார். காய்ந்த புற்கள் சில ஷூ ஸ்டேண்டுக்கு அடியில். சரி கூடு கட்ட ஆரம்பித்து விட்டதோ என யோசித்து மேலே வெண்டிலேட்டர் பக்கம் பார்த்தால், ஒரு கற்றைப் புற்கள் இன்னும் வடிவம் பெறாமல் குவித்து வைக்கப் பட்டிருந்தது. சரி, வீடு கட்ட ஆரம்பிச்சுருச்சுன்னு நினைச்சுகிட்டே அன்றைய நாளை தொடங்கப் போனார்.

“ஏங்க, பெரியவள அவ ஆபீஸ்ல விட்டுட்டு போயிருங்களேன்”

“ஏன், மலரு இன்னைக்கு லேட்டா, என்னாச்சு?”

“தலைக்கு தண்ணி குளிச்சு, அவ காய வைக்கறதுக்கே ரெண்டு மணி நேரம் பண்ணுவா”

”சரி, சரி. லேட்டாக்காம வரச்சொல்லு” என்றபடியே காரின் கதவைத்திறந்து தன் பையை பின்சீட்டில் வைத்தார்.அவசர அவசரமாக செருப்பை போட்டுக் கொண்டு கைப் பையை தோளில் மாட்டிய பெரியமகள் மலர்விழி, ஒரு சாஃப்ட் வேர் கம்பெனியில் வேலை செய்கிறாள். ஈரக் கூந்தலை விரித்துப் போட்டபடியே ஓடி வந்த மகளை நோக்கி, “ஏய், மலரு, இந்தா உன் செல் போனு” என நீட்டியபடியே அம்மாவும் ஓடி வந்தாள். ஒரு நொடி நின்று செல்போனை வாங்கிக் கொண்டு கார்க்கதவைத் திறந்து, முன்சீட்டில் அமர்ந்தாள். ”போலாம்மாம்மா”, ”ம் போலாம்ப்பா” என்றவாறே, கண்ணாடி வழியாக அம்மாவுக்கு டாட்டா காட்டினாள்.

அன்று சாயந்திரம் ஆபீஸிலிருந்து வந்தவர் ஷூவை வைக்கப் போகும் போதும் பார்த்தார், இன்னும் அந்த வெண்டிலேட்டர் பக்கத்தில் புற்கள் கூடி இருந்தது. பாவம் சுவற்றில் ஒரு பிடிப்பு கிடைக்கவில்லையோ என்னவோ என எட்டிப் பார்த்தவருக்கு ஆச்சரியம். ஆணும் பெண்ணும் உடலைக் குறுக்கிக் கொண்டு அந்த வெண்டிலேட்டர் திட்டில் அமர்ந்திருந்தன. ஒரு புன்னகையுடன் உள்ளே போனவர், சின்ன மகளிடம், ”கவிதா உன் ஷூ பெட்டி ஒரு அட்டைப் பெட்டி இருந்ததே அது எங்கம்மா”
”மேல கெடக்குப்பா”

”அத எடுத்துட்டு ஒரு கத்தியும் எடுத்துட்டு வா”

பிளஸ் டூ படிக்கும் சின்ன மகள் தந்த அட்டைப் பெட்டியை வெட்டி ஒரு துவாரம் பண்ணி, ஒரு கூடு போல செய்து அதற்கு உள்ளே ஒரு சிறிய துண்டுத்துணியை மடித்து மெத்தை போல வைத்து பால்கனியில் ஷூ ஸ்டேண்டை நகர்த்தி ஒரு ஓரமாக வைத்து விட்டு, இந்த பெட்டியில் சிறிது அரிசியை போட்டு, ஒரு மூலையில் வைத்தார். இரண்டே நாட்களில் அதற்குள் வட்ட வடிவில் அளந்தெடுத்தாற்போல் புற்களால் செய்த ஒரு கூடு கட்டி கணவனும் மனைவியும் குடி வந்தார்கள்.

தினமும் கீச், கீச்சென்ற சத்தமும், கிரில் கம்பியில் உட்கார்ந்து அலகோடு அலகு உரசி ஒரே சந்தோஷக் குலாவலுமாக இருந்த அந்த தம்பதிகளை குடும்பமே நேசிக்க ஆரம்பித்தது, சின்னவள் கவிதாவுக்கு, தினமும் அந்த கூட்டுக்கு பக்கத்தில் ஒரு டப்பாவில் தண்ணீர் வைப்பதும், அரிசி வைப்பதுமே ஒரு சந்தோஷமான பொழுது போக்காகிவிட்டது. சில நாட்களில் கவிதாதான் அதை முதலில் பார்த்தாள்.

“அம்மா, கூட்டுக்குள்ள ரெண்டு முட்டை இருக்குதும்மா”

“ஏய், அந்த முட்டையை தொடாதே, பாவம் அந்த குருவிங்க”

தொடர்ந்து ஒரு குருவி அடைகாக்க ஒரு குருவி இரை கொண்டு வருவதுமாக, மாறி மாறி நிறைய வாழ்வியல் தத்துவங்களை அந்த இரண்டு பறவைகளும் இந்த குடும்பத்துக்கு போதித்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் காலையில், “அம்மா, இங்க வந்து பாரேன், ரெண்டு சின்ன குஞ்சுகம்மா”

அம்மா குருவியின் வயிற்றுக்குக் கீழிருந்து இன்னமும் இறகு முளைக்காத மொட்டைத்தலையுடன் அலகுகளை விரித்த வண்ணம், ச்ச, ச்ச என்ற விநோத ஒலி யெழுப்பிக் கொண்டு அந்த இரண்டு புதிய உயிர்களும் தலையை நீட்டிக் கொண்டு நின்றது. கவிதா, பக்கத்தில் போனதும், தாய்க்குருவி குய்யோ முறையோன்னு சத்தம் போட ஆரம்பித்தது, தனது இறகுகளை விரித்து, இரண்டு குஞ்சுகளையும் இறுக்கமாக அணைத்துக் கொண்டது.

“ஏய், கவிதா, அது பக்கத்துல போகாதடி, அதுதான் பயப் படுதில்ல, போய் கொஞ்சம் அரிசி கொண்டுவந்து போடு”

அரிசியை தூரத்தில் இருந்தே போட்டதும் பக்கத்தில் விழுந்த ஒரு தானியத்தை எடுத்து, தனது சிறிய அலகால் கொத்தி, அதை பொடியாக்கி, ஒரு சிறிய துணுக்கை எடுத்து தாய்க்குருவி குஞ்சுகளுக்கு ஊட்டியது. பார்க்க பார்க்க பரவசமாயிருந்தது.

தினமும், குஞ்சுகளின் வளர்ச்சியை அளவெடுப்பது கவிதாவுக்கு தொழிலாகி விட்டது. சில நாட்களில் குஞ்சுகளும் தாய்க்குருவியைப் போல் கத்துவதும், அம்மாவின் அணைப்பிலிருந்து வெளிவந்து கூட்டுக்குள் விளையாடுவதும் பார்க்க பார்க்க கொள்ளை அழகாய் இருந்தது.

சில நாட்களில், குஞ்சுகள் இரண்டையும் தனியே விட்டு விட்டு, தாய்க் குருவியும் இரைதேட வெளியே போய் விட்டது. குஞ்சுகளுக்கும் இறகுகள் வளர்ந்து அழகாய் சிறகடிக்க ஆரம்பித்தது. இரவில் நான்கு உயிர்களும் ஒன்றாய் அந்த சிறிய புல் வட்டத்தில் உடலைக் குறுக்கி படுத்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும்.

மலர் விழி ஆபீஸில் எதோ பார்ட்டியாம், லேட்டா வருவேன்னு போன் செய்தாள். நேரம் ஆக ஆக சகுந்தலாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை, “ஏங்க, எதுக்கும் ஒருதரம் போய் பார்த்துட்டு வந்துருங்களேன்”
”ஏம்மா, அவ என்ன சின்ன குழந்தையா, பார்ட்டி முடிஞ்சதும் அவளா வருவா” என்று சொல்வதற்கும், மலர்விழி காம்பவுண்டு கேட்டை திறந்து வருவதற்கும் சரியாய் இருந்தது. ஒரு அவசரத்தோடேயே கேட்டை பூட்டியவள், அவசரமாக செருப்பை கழட்டி விட்டு, அவசரமாகவே ரூமுக்குள் ஓடினாள். சிறிது நேரத்தில் கவிதா வந்து “அக்கா, பார்ட்டிலயே சாப்ட்டுட்டாங்களாம், சாப்பாடு வேண்டாமாம், தலைவலியா இருக்குன்னு படுத்துட்டாங்க” என்றாள்.

கொஞ்ச நாள் கழித்து, வேறு ஒரு ஞாயிற்றுக் கிழமையில், காலையில் 6 மணிக்கே வீட்டில் விசும்பல் சத்தம். சோபாவில் அமர்ந்திருந்த சகுந்தலா சேலையை சுருட்டி வாயில் வைத்தபடி விம்மிக் கொண்டிருந்தாள்.
கவிதாவின் கையில் ஒரு வெள்ளை காகிதம்.
“அப்பா,

இதை உங்களிடம் சொல்லி, அனுமதி பெற மனது துடித்தது உண்மைதான். நீங்களும் என் விருப்பத்திற்கு குறுக்கே நிறக் மாட்டீர்கள் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால், நவீனின் வீட்டில் எனக்கு வாய்த்தாற்போல் புரிந்து கொள்ளும் பெற்றோர் இல்லை. ஆகவே தான் இந்த முடிவுக்கு வந்தோம்.

நவீன் நல்லவர். இருவரும் இணைய முடிவெடுத்து விட்டோம். அதற்காக உங்களை உதறிச் செல்கிறோம் என நினைக்காதீர்கள். சீக்கிரத்தில் உங்களோடு இணைய வருவோம். இணைவோம்.

கண்டிப்பாக ஆசீர்வதிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

மலர்விழி.”

மெதுவே எழுந்து பால்கனிப் பக்கம் போய், வானத்தை வெறித்துக் கொண்டிருந்தார். அப்பா, கோபப் படுவாரோ, கத்து கத்தென கத்தித் தீர்ப்பாரோ என எதிர்பார்த்திருந்த கவிதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. பாதகி, இப்படிப் பண்ணீட்டாளே, இனி இருக்கிற இன்னொன்றை எப்படி கரை சேர்ப்பது என நினைத்த சகுந்தலாவின் விம்மல் பெரும் அழுகையாக வெடித்தது. எதுவுமே பேசாமல் நிற்கும் கணவனை பார்க்க ஆத்திரமாய் வந்தது.

“அப்பிடியே நிக்கறீங்களே, எதாவது பண்ணுங்களேன்”

குருவிக் கூட்டை பார்த்தார் சிவராமன், ஆண்குருவியும், பெண்குருவியும் மாத்திரம் அரிசியை கொத்திக் கொண்டு இருந்தது. குஞ்சுகளை காணவில்லை.

புரிந்தது போல சோபாவில் வந்தமர்ந்தவர் சொன்னார்,

“சகுந்தலா, குஞ்சுகளுக்கு சிறகு முளைச்சிருச்சு, அதான் வானம் பார்க்க போயிருக்கு, திரும்பவும் வரும், அதுக வீடு தேடி வரும்”

Thursday, July 29, 2010

தங்க மணிக்கு மறுபடியும் பத்து கேள்விகள்

எப்ப உங்க ஊருக்கு வந்தாலும், தூங்கிகிட்டிருக்கற மனுஷனை எழுப்பி உக்காரவெச்சு, அப்புறம் மாப்ள வட நாட்ல இருக்கீகளோ, அங்கெல்லாம் வறவறன்னு சப்பாத்திதான் சாப்புடுவாக என்ன? அவுகெல்லாம் ஹிந்திதான் பேசுவாக என்னன்னு அறிவு பூர்வமான கேள்வி கேட்டு மனுஷனுக்கு காதுல கழுத்துலயெல்லாம் ரத்தம் வந்தாலும் விடாம குறைந்தது நாலு மணி நேரம் அறுக்கறதுக்குன்னே ஒரு நாலு பெருசுகளை காசு (காபி) குடுத்து செட்டப் பண்ணி வெச்சிருக்கீங்களே, இது ஏன்???

கரெக்டா நான் உங்க வீட்டுக்கு வந்தவுடனே, உங்க அக்கா பையனுக்கு ட்ரிகிணாமெட்ரில, அல்ஜீப்ராவுல எல்லாம் உலகத்துலயே யாருக்கும் வராத சந்தேகம் வருதே, அது ஏன்?? அப்பிடி வரலைன்னா கூட சித்தப்பா கிட்ட கேட்டு எல்லாத்தையும் படிச்சுக்கோன்னு அவனை உசுப்பி விடறீங்களே, நான் கணக்குல புலின்னு என்னைக்காச்சும் சொன்னனா? ஏன் இந்த வன்முறை???

நீங்க பிரியாணி செஞ்சா சூப்பரா இருக்குதும்மான்னு மனசார பாராட்டிட்டு நாங்க சாப்படறமே, அதே மாதிரி நாங்க சிக்கன் செஞ்சா அருமையா இருக்குன்னு மனசு சொன்னாலும் அதை வெளிக்காட்டிக்காம, சட்டில ஒட்டிகிட்டு இருக்கற கடைசி துளியையும் வழிச்சு சாப்பிட்டுட்டு, மல்லித்தூள் ஜாஸ்தி, மஞ்சள் தூள் கம்மின்னு ஒரு இருபது குறை சொல்றீங்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா???

ஸ்கூல்ல பேரண்ட்ஸ் டே க்கு போகும் போது வீட்டிலிருந்து ஒண்ணா கார்ல வர்ற நீங்க, பாப்பாவோட மிஸ் கிட்ட போகும் போது மாத்திரம் நீ கார்லயே இருன்னு என்னை விட்டுட்டு தனியா போறீங்களே, எம்பொண்ணு எப்பிடி படிக்கறான்னு நான் மிஸ்ஸூகிட்ட டீடெய்லா கேட்டு தெரிஞ்சுக்க வேண்டாமா???

உங்க ஆபீஸ் பார்ட்டிக்கு எங்களை கூட்டிட்டு போகும் போது, ஷேவ் பண்ணு, முடி வெட்டு, வெள்ளை சட்டைய போடு, ஏன் இப்பிடி சர்க்கஸ் கோமாளியாட்டம் சட்டைய பேண்ட்ல துணிச்சு வெச்சிருக்க, ஒழுக்கமா இன் பண்ணுன்னு ஆயிரம் கண்டிஷன் போடறீங்களே, அதே எங்க ஆபீஸ் பார்டிக்கு போகும் போது மட்டும் இந்திய தேசியக் கொடியாட்டம் சம்பந்த மில்லாத கலர்லயெல்லாம் சுடிதார், துப்பட்டானெல்லாம் போட்டு ஏன் எங்க மானத்த வாங்கறீங்க????

உங்க பார்ட்டில என்னமோ நீங்க இல்லைன்னா இந்த உலகமே சுத்தறத நிறுத்திரும்கற மாதிரி, கடைசி கிளாஸை கழுவி வைக்கற வரைக்கும் இருந்து, (உங்களுக்கும் அதுக்கும் சம்பந்த மில்லா விட்டாலும் கூட, என்னை வெறுப்பேத்தறதுக்காகவே), பார்ட்டி ஆர்கனைஸர் கிட்ட போய் எல்லாம் ஓ கே தான, நான் போகட்டுமான்னு கேட்டு, அவசியமே இல்லாம சீன் போடற நீங்க, என் ஆபீஸ் பார்ட்டில நான் ஆர்கனைஸரா இருந்தாலும், பார்ட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே தலைவலிக்குது சீக்கிரம் போலாம்னு வெறுப்பேத்தறீங்களே அது ஏன்???

உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனா, இவுரு இந்த ஆர்ட் வொர்கெல்லாம் நல்லா பண்ணுவாருங்கன்னு சொல்லி கோத்துவுட்டுட்டு, அந்த மணவறை ஜோடிக்கற ஆளுக்கு (அவுரு எதோ தோட்டா தரணி ரேஞ்சுக்கு அலப்பறை உடறாரு) எடுபிடியா என்னை ராத்திரி முழுக்க நிக்க வெச்சீங்களே, ஏன் இந்தக் கொலை வெறி?

நீங்க உடைச்சா மண்பானை, நாங்க உடைச்சா அது தங்கப் பானையா? போனமாசம் நீங்க உடைச்சது 7000 ரூபாய் மீன் தொட்டி, போன வாரம் நான் உடைச்சது, 25 ரூபாய் கண்ணாடி கிளாஸ். ஆனா கிளாஸ் உடைச்சதுக்கு மட்டும் வீடே உடைஞ்ச மாதிரி எஃபக்ட் குடுத்தீங்களே ஏன், இல்லை ஏன்னு கேக்கறேன்???

நாங்க கடல்லயே போய் மீன் புடிச்சுட்டு வந்தாலும், உங்களுக்கு மாத்திரம் அது ஏன் பழைய மீனாவே தெரியுது? நான் செடில பறிச்சுட்டு வந்த வெண்டைக்காய் கூட முத்துனதாவே தெரியற சோகக் கதையை எங்க போய் சொல்ல???

நாங்க ஆபீஸ்ல இருந்து போன் பண்ணா அரை மணி நேரம் கழிச்சு எடுக்கற நீங்க, உங்க ஃபிரண்ட் பேசுனா மட்டும் உடனே எடுக்கறீங்களே அது ஏன்?


Friday, July 9, 2010

பெண்ணியம் பேசுவோம் வாருங்கள்.



சகோதரி யமுனா ராகவன் எழுதிய இந்தப் பதிவை வாசித்துப் பார்த்தேன். ஒரு பெண்ணின் பிரச்சனைகளை மிக மிக துல்லியமாகவும் எதார்த்தம் நிறைந்த வார்த்தைகளாலும் எழுத்தில் வடித்து விட்டார்.

நேற்றைய நாளை தொலைத்து விட்டு, வரும் நாளைய நாளின் துன்பங்களை எதிர் நோக்கி நொந்து பயந்து, இதோ இப்பொழுது கடக்கும் இந்த விநாடியிலும் தான் சந்திக்கும் ஒவ்வொரு ஆணாலும் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்ணின் இழிநிலையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் அற்புத காவியமிது. தன் வீட்டினுள் எந்தவொரு நொடிப் பொழுதிலும் அன்பு என்பதையே இம்மியளவும் அனுபவிக்காமல், சூரியன் உதித்து, சூரியன் மறையும் வரை, ஏன் சூரியன் மறைந்த பின்பும் கதறக் கதற சித்திரவதைப் படுத்தப் படுவதே வாழ்கை நியதியாகிவிட்ட நடுத்தர வர்க்க பெண் தெய்வங்களின் ஒட்டு மொத்த மனக் குமுறலையும் ஒரே மூச்சில் குமுறியிருக்கிறார்.

வாழ்த்துக்கள் சகோதரி.

ஒரு மானுட உயிருக்கான வாழ்க்கை எனும் பந்தயத்தில் முதலிடம் பெறுவது மட்டுமல்ல, முழு ஓட்டத்தையும் ஓடி முடிப்பதே ஒரு மாபெரும் சாதனைதான். இதில் பாலின பேதமின்றி எந்த ஒரு உயிரினத்திற்கும் தன்னம்பிக்கை என்ற ஒரு சக்தி இருந்தால் மாத்திரமே அது சாத்தியம். தடைகளை எளிதாய் தாண்டி முதலிடம் எனும் சிறப்பு பெற தைரியம்/துணிவு உள்ளிட்ட பல சிறப்புகளினால் நெஞ்சு நிறைந்த உயிரினம் மட்டுமே உயர்வை அடைய முடியும்.

ஆனால், எனக்கு முன்னே பாழ்நிலம் இருந்தது, என் பாதையெங்கும் முட்கள் முளைத்திருக்கிறது, என் ஓட்டப் பாதையில் சிகரங்களை செதுக்கி வைத்து விட்டார்கள் என பாசாங்குத் தனமான சாக்குப் போக்கு சொல்வோமெனில் நாமும் பத்தோடு பதினொன்றாய் தடம் மாறி ஓடிக்கொண்டிருக்கலாம்.

உங்கள் எண்ணங்களின் வெளிப்பாடுகளிலிருந்து நீங்கள் முன்வைக்கும் குற்றச் சாட்டுகள் :

உலகில் பிறந்த ஒவ்வொரு ஆண்மகனும் பெண்ணினத்தை மனதளவில் சிறுமைப் படுத்த கிடைக்கும் எந்தவொரு தருணத்தையும் தவறவிடாது உபயோகிக்கிறான்.
மூலைக் கடையில் சிகரெட் பிடித்து , பெண்ணைக் கண்டதும் முகத்தில் ஊதுகிறான்.
காலையில் எழுந்தவுடன் தன் மனைவியை தேடிப் பிடித்து அவளை வசவுகளால் கதறக் கதற குதறிவிட்டு, அவள் படும் வேதனைகளை பார்த்து உள்ளூர மகிழ்கிறான்.
பெண்கள் பயணிக்கும் ஒவ்வொரு பஸ்ஸிலும் இப்படி காலையில் சாட்டையால் அடிக்கப்பட்ட பெண்ணை தேடி வந்து அவர்களின் உடலில் தன் ஆணுறுப்பை உரசி மகிழவென்றே பயணிக்கிறான். அல்லது அப்படி உரசும் பொழுது அந்த பெண் படும் வேதனைகளை கண்டு மனம் மகிழ்கிறான்.
உங்கள் மொழியில் சொல்வதென்றால், பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன் “மாம்ஸ் இன்னைக்கு பஸ்ஸூல ஒரு Aunty செமயா Company குடுத்தாடா” என சொல்லி சந்தோஷமடைகிறான்.
நீங்கள் வெண்டைக்காயோ தக்காளியோ வாங்குவதில் முனைப்பாய் இருக்க, உங்களின் இடுப்பையோ, பிட்டத்தையோ அல்லது சேலைத் தலைப்பு விலகியிருக்கும் மார்பையோ பார்ப்பதில் இன்பம் கொள்கிறான்.
அலுவலகத்தில் நீங்கள் உங்கள் சுய திறமையினால் செய்யும் எந்தவொரு வேலையின் வெற்றியையும், நீங்கள் உடல்காட்டி ஜெயித்தீர்கள் என சொல்லியே உங்களை காயப் படுத்துகிறான்.
நீங்கள் சந்தித்த 90 % ஆண்கள் உங்கள் மார்பை பார்த்தே பேசியிருக்கிறார்கள். மீதி பத்து சதவீதம் பேர் பார்க்கவில்லை என நீங்கள் சொல்லவில்லை, ஆனால், அவர்கள் பார்த்ததை நீங்கள் பார்க்கவில்லை என சொல்கிறீர்கள், அப்படியானால் நீங்கள் சந்தித்த அல்லது உங்களை பார்த்த ஒரு ஆண்மகன் கூட யோக்கியன் இல்லை, எல்லாரும் உங்கள் ஆடையை அவிழ்த்து அம்மணமாக்கி, உங்கள் நிர்வாணத்தை அணு அணுவாய் ரசிக்கும் காமுக வக்கிரர்களாகவே இருக்கிறார்கள்.

புள்ளி விவரங்கள் தருகிறீர்கள், எத்தனை பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்று. வாருங்கள், இன்னொரு புள்ளி விவரம் பார்ப்போம், இன்றைய தேதியில் தொடுக்கப்படும் பாதுகாப்பு கோரும் வழக்குகளில் 62 % வழக்குகள் ஆண்களால் தொடுக்கப்படுகிறது. (வாசியுங்கள்). இந்த வழக்குகள் எதற்காக தொடுக்கப்படுகிறது என்றால் தன் மனைவியிடமிருந்து தனக்கு பாதுகாப்பு கோரி தொடுக்கப்படுகிறது. பெண்களால் தொடுக்கப்படும் 97% வரதட்சணை வழக்குகள் பொய்யானவை என தினமும் ஒவ்வொரு நீதிமன்றத்தாலும் கண்டிக்கப்படுகிறது. இப்பொழுது சொல்லுங்கள், அல்லது உங்கள் மொழியிலே சொன்னால் எப்பொழுதும் உங்களை காமத் தினவெடுத்துப் பார்க்கும் உங்களைச் சுற்றியுள்ள ஆண்களில் 62 பேர் பெண்களைப் பற்றிய பயத்திலேயே வாழ்கிறார்கள். 97 பேர் பொய் வழக்குகளினால் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு, செய்யாத குற்றத்திற்காய் போலீசாலும் சமுதாயத்தாலும் அவமானப் படுத்தப் பட்டு, சிறுகி குறுகி, நடைபிணங்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது நான் சொல்லட்டுமா, நான் சந்திக்கும் பெண்கள் அனைவருமே, பெண் எனும் போர்வையில் ஒழிந்துகொண்டு என்னை எப்படி எல்லாம் சித்திரவதைப் படுத்தலாம் என 24 மணி நேரம் கணக்குப் போடும் மனநிலை பிறழ்ந்த சைக்கோத் தனமானவர்கள் என்று.

அல்ல, அப்படியல்ல தோழி.

Physical Abuse and Verbal Abuse என தினமும் ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக் குடும்பத்திற்குள் கொடுமைப் படுத்தப் படுகிறாள் என குமுறி யிருக்கிறீர்கள். எனது பார்வையில் இந்த சுதந்திரத்திற்கு மாத்திரம் குடும்பம் எனும் அமைப்பில் ஒரு எல்லையே இருக்க முடியாது. (May be it sounds absurd, but practically this is the truth ). வாதத்திற்காக பல எதிர்மறை கருத்துகளை சொல்லி இதுதான் எல்லை என நீங்கள் வண்ணமும் தீட்டி விடலாம், ஆனால் எல்லைகள் வரைந்தபின் குடும்பம் என்ற ஒன்றை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

மனைவி மஞ்சள் கலர் புடவை கட்டியிருக்கும்பொழுது, கணவன் “அந்த ரோஸ் கலர் புடவைல தாம்மா நீ அம்சமா இருக்க” என சொன்னால், இதை உங்கள் கோணத்திலிருந்து பார்த்தால், ஆண் தன் விருப்பத்தை பெண்மீது திணிக்கிறான், அவளது உடை விஷயத்தில் கூட தனது ஆதிக்கத்தை நிலைப்படுத்துகிறான். ஆனால் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது வெளித் தெரியாமலிருக்க மென்மையான வார்த்தைகளில் அன்பொழுக பேசி, ஒன்றும் அறியா அப்பாவி பெண் மனதை தன் வசப் படுத்துகிறான். உண்மைதானே சகோதரி, இதுதானே உங்கள் வாதம். இங்கு தானே எல்லை தேவைப் படுகிறது என்று உரக்கச் சொல்கிறீர்கள்?

இப்படியும் யோசித்துப் பாருங்கள், தன் உயிரில் பாதியான தன் மனைவியிடம் தன் விருப்பத்தை வெளிப்படுத்துவதும் கூட ஆதிக்க வெளிப்பாடா? விருப்பம் எனபது உடல், உள்ளம், உணர்வு இன்னும் எதையெல்லாம் சொல்ல முடியுமோ, அத்தனைமீதும் ஆண் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினால், அதுவும் Abuse தானா?

ஒவ்வொரு கணவனும் தன் துணையின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தினமும் அவளை வன்புணர்கிறான். அந்த கலவி வேளையிலும் கூட பெண்ணின் ஒழுக்கத்தை கேலி செய்தே புணர்கிறான் என்கிறீர்களே, இது ஒரு அதீத கற்பனையாக தெரியவில்லையா தோழி? அல்லது எதாவது குற்றம் சொல்ல வேண்டுமே என்பதற்காக புனைந்து தெளிக்கிறீர்களா? தன் உடல் தேவையை தீர்த்துக் கொள்ள கணவன் யாரிடம் செல்வான்? அல்லது பெண்களுக்கு உடல் தேவையே என்றும் இருந்ததில்லையா?

மற்றபடி நீங்கள் சொல்லும் Financial Abuse மற்றும் Alpha Male ஐப் பற்றி என்னால் யோசிக்கவும் முடியவில்லை. ஏனெனில் உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடு என் கற்பனை எல்லைக்கு அப்பால் இருக்கிறது. இந்த தலைப்பில் நீங்கள் சொன்ன கருத்துக்கள் எல்லாம் என்னவோ ஒவ்வொரு ஆணும் தனது மனைவியின் உடலை விற்று சம்பாதிக்கும் மாமா பயல்கள் என்கிறீர்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆமாம், வேசி உடலை விற்க கட்டாயப் படுத்தப் படுகிறாள், நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பெண்ணும் தன் திறமைகளை விற்க கணவனால் கட்டாயப் படுத்தப் படுகிறாள். பெரிதான வித்தியாசம் ஒன்றும் இல்லை. நான் ஏன் நான் மட்டும், கண்டிப்பாக நீங்களும் கூடத்தான் இத்தகைய ஒரு சமூகத்தில் வாழ்வதில்லையாதலால் என்னால் இதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

வருகிற கோபத்தில், யாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆத்திரத்தில், கண்ணை மூடிக் கொண்டு அம்பெய்கிறீர்கள் தோழி, உங்கள் மார்பை மட்டுமே பார்த்துப் பேசிய 100 சதவீத ஆண்களில் உங்கள் ரத்த உறவுகள் யாரும் இல்லையா? அல்லது அவர்களையும் சேர்த்துத்தான் சாட்டையால் அடிக்கிறீர்களா? உங்கள் நந்த வனத்தில் புகுந்த ஒரு சில ஓநாய்களுக்காக, ஒட்டு மொத்த விலங்குகளையும் பட்டயக் கருக்கில் வெட்டிக் கொல்லத் துணியாதீர்கள். அப்படிச் செய்தால் உங்கள் நந்தவனம் புள்ளிமான்களின் பிணக்காடாகி விடும்.

பஸ்ஸில் உங்களை உரசி நிறகும் மிருகப் பயலை ஏன் சகித்துக் கொள்கிறீர்கள்? அவன் தாடையைப் பெயர்த்து விடுங்கள். அலுவலகத்தில் புறம் பேசும் கையாலாகாத ஆண்சிங்கங்களுக்கு தக்க பதிலடி கொடுங்கள்.

பெண்மை என்பது வெறும் மென்மை மாத்திரமல்ல, அவசியப்பட்டால் அடித்து நொறுக்கும் வன்மையும் கூடத்தான் என புரிய வையுங்கள்.
பெண் என்பவள் சிரித்து நிற்பது மட்டுமல்ல, சிலிர்த்து சீறவும் வேண்டும் தோழி.

இதை விடுத்து கண்ணில் பட்ட ஆண்களுக்கெல்லாம் மிருக வேஷம் கட்டாதீர்கள். அப்படியானால் மிருகங்களுக்கு மத்தியில் வாழ்வது கிடக்கட்டும், மூச்சு விடுவதே சிரமமாகி விடும்.

பகிர்தலும், புரிதலும் கொண்டு உங்களை போலவே என்னையும் நடத்த வேண்டும் என்பதே நான் இறுதியில் முன்வைக்கும் ஒன்று என்று சொல்லுகிறீர்கள்

இங்கு நீங்கள் உன்னை முழுதும் பகிர்ந்து கொள், என்னை முழுதும் புரிந்து கொள் என சொல்லியிருந்தால் மிகவும் சந்தோஷப் பட்டிருப்பேன். ஆனால், இங்கு பகிர்தலுக்கும் புரிதலுக்கும் விகித அளவுகளை முன்வைக்கிறீர்களே, இது எவ்வகையில் சாத்தியம்?

எனக்கான சுதந்திரத்தை நீங்கள் கொடுக்கவேண்டாம். என்னிடம் இருந்து பிடுங்காது இருந்தால் போதும் என்கிறீர்கள்.

இந்தப் புரிதலில்தான் வாழ்வின் மொத்த சூட்சுமமும் அடங்கியிருக்கிறது. எனது சுதந்திரம் என எல்லை வகுக்காதீர்கள். நமது சுதந்திரம் என உரத்துச் சொல்லுங்கள். எங்கு எனது மறைந்து நமது வருகிறதோ அந்த உலகமே ஒரு உல்லாச புரியாயிருக்கும். வாழ்த்துக்கள். வளமையோடு, வல்லமையோடு வாழுங்கள்.

Thursday, July 1, 2010

மல்லிகைப் பூவும், குல்ஃபி ஐஸும்

போன ஞயிற்றுக் கிழமை மதியம், லீவு நாளாச்சேன்னு கொஞ்சம் மெதுவா எந்திரிச்சு, மெதுவா சாப்பிட்டு, மத்தியானம் ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு இருந்தப்ப, திடீர்னு போன். நல்ல தூக்கத்துல யாராவது இப்படி போன் போட்டா நமக்கு ஒரு ஃபீலிங்க்ஸ் வரும் பாருங்க, அதே ஃபீலிங்ஸோட போனை எடுத்தேன்.

“ஹலோ, சார், மண்டையப் பிச்சுகிட்டிருக்கேன் சார்”

“ஏன், என்னாச்சு”

“சார், பொம்பளைங்க மல்லிகைப் பூ ஏன் சார் வைக்கறாங்க”

(ஆஹா, இந்தப் பாண்டிய மன்னனுக்கு இப்படி ஒரு சந்தேகமா, இனி நான் எந்த மடத்துக்கு போய், யாருகிட்ட பாட்டு எழுதி வாங்கிட்டு வர்றது??)

“ஏம்பா அது நல்ல வாசமாயிருக்கும், மேலும் கரிய அடர்ந்த நீள கூந்தல் இருக்கறவங்க வெள்ளையான இந்த மல்லிகைப் பூவை அடர்த்தியா கட்டி, கூந்தல்ல வெச்சுகிட்டாங்கன்னா, அது அவங்க கூந்தலுக்கே ஒரு தனி அழகு கூட்டும். அதுக்காகத்தான் வெச்சுக்கறாங்க”

“சார், அது இல்ல சார், வேற என்னவோ காரணம் இருக்குது சார்”

“ஏம்பா, உனக்கு இந்த விபரீத ஆராய்ச்சியெல்லாம்???”

“இல்ல சார், நான் தினமும் சென்னைல பார்க்கறேன், பூக்கார அம்மாவெல்லாம் கூடை கூடையா வெச்சு விக்கறாங்க, அது கொஞ்ச நேரத்துலயே தீர்ந்து போகுதே சார், அப்பிடி தினமும் வாங்கி தலைல வெச்சுட்டா, அதனால என்னதான் உபயோகம்??”

(டேய், இதெல்லாம் கொஞ்சம் ஓவரு)

“சரிப்பா, விடு, பூஜைக்கு வாங்கிட்டு போவாங்களா இருக்கும்”

“சார், அங்க பூ வாங்க வர்றவங்களையெல்லாம் பார்த்தா பூஜைக்கு வாங்கிட்டு போறவங்க மாதிரியா இருக்காங்க??”

“சரி, அப்ப நீயும் ஒரு முழம் வாங்கி வெச்சுட்டு, என்ன மாதிரி இருக்குன்னு சொல்லு”

“ சார் நானென்ன பொட்டப் புள்ளயா, என்ன மாதிரி தனிக் கட்டைங்கெல்லாம் பூ வாங்குனா வேற மாதிரி நெனச்சுக்குவாங்க சார், ஆமா நீங்க இந்த மாதிரி பூவெல்லாம் வாங்கிட்டு போனதில்லையா ??”

(டேய், நீ எங்க வ்ர்றேன்னு தெரியுது, சரி டாபிக்கை மாத்துவோம்)

“அப்புறம், எப்பிடிப்பா இருக்க, வேலையெல்லாம் எப்பிடி பரவால்லையா??”

“சார் அப்புறம், இன்னொண்ணு, ரொம்ப நாளா உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்னுட்டு இருந்தேன்”

(டேய், நீ இன்னும் அடங்கலையா)

“இந்த குல்ஃபி ஐஸ் விக்கறவங்க நாள் முழுதும் எங்க இருக்காங்கன்னே தெரியல, ஆனா, ராத்திரி பத்துமணிக்கு மேல கிணிகிணி ன்னு மணி அடிச்சுட்டு விக்கறாங்களே அது ஏன் சார்??”

(டேய், உனக்கு ஏண்டா புத்தி இப்பிடியெல்லாம் வேலை செய்யுது)

“அது ராத்திரி சாப்பாட்டுக்கு அப்புறம் குல்ஃபி ஐஸ் சாப்பிட்டா நல்லா ஜீரணம் ஆகும் அப்பிடீங்கற ஒரு ஐதீகம் எதாவது இருக்கும், ஆமா, சென்னைல ஆராய்ச்சி பண்றதுக்கு எத்தனையோ விஷயம் இருக்கும் போது, நீ ஏண்டா இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ற??”

“அதில்ல சார், இந்த குல்ஃபி ஐஸுக்கு வேற எதோ பவர் இருக்குதாம்மே??”

(டேய், நான் உனக்கு என்ன துரோகம்டா பண்ணுனேன், தூங்கிட்டிருந்தவனை எழுப்பி ஏண்டா இப்பிடி ஆராய்ச்சி கட்டுரையெல்லாம் படிச்சு காமிக்கறீங்க)

“என்ன பவருப்பா?’

“பாருங்களே, எவனாவது என்னை மாதிரி தனியா திரியறவனுங்க அதை சாப்படறாங்களா, எல்லாம் ராத்திரி சாப்பாடு முடிஞ்சதுக்கப்புறம் காலார ஒரு ரவுண்டு நடந்துட்டு வருவோம்னு நடக்கற ஜோடிங்கதான் சாப்புடுது, அதையும் ராத்திரில ஏன் சாப்படறாங்க??”

(டேய், நல்லதா எதாவது சொல்லீரப் போறேன், இப்பவே தெரிச்சு ஓடிப் போயிரு)

“இல்ல சார், இன்னும் பாத்தீங்கன்னா குல்ஃபி ஐஸ் விக்கறதும் கூட இந்த பஸ்ஸ்டேண்டுல, மார்க்கெட்டுலெல்லாம் விக்க மாட்டேங்கறான், இந்த குடும்பங்க இருக்கற ஏரியாவா பாத்து விக்கறான், இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு என்ன தோணுதுன்னா…….”

“டேய், ங்கொய்யால போனை வெய்டா”

அடச்சே, நிம்மதியா தூங்கிட்டிருந்த மனுஷனை எப்பிடியெல்லாம் வறுத்தெடுக்கறானுகப்பா…..

அப்ப என்னவோ அவனை திட்டீட்டு போனை வெச்சுட்டாலும், ஒரு மூணு நாளா எனக்கும் இந்த சந்தேகம் வந்திடுச்சு, நெஜமாவே மல்லிகைப் பூவுக்கும் குல்ஃபி ஐஸுக்கும் எதாவது பவர் இருக்குதா???

ஹலோ, ஹலோ, அப்பிடி எல்லாம் பார்க்க கூடாது…, நோ, நோ பேட் வேர்ட்ஸ் பிளீஸ்………..

Wednesday, June 30, 2010

ஜுகல்பந்தி – 30 ஜூன் 2010 – சத்தாயிஸி


சத்தாயிஸி

ஜோசியர்கள் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து அந்த குழந்தையின் எதிர்காலத்தை கணித்து சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஆனால், அந்த குழந்தை இந்த நேரத்தில் பிறந்ததால் குழந்தையின் அப்பனுக்கு கிரகம் பிடித்து ஆட்டுவதாக புரளி கிளப்பி அதற்கு பரிகாரம் செய்து, துட்டு வசூலிக்கும் ஒரு வினோத பழக்கம் இருக்கிறது.

இதற்கு சத்தாயிஸியில் பிறந்த குழந்தை என்று சொல்லுகிறார்கள். (சத்தாயிஸ் = இருபத்தி ஏழு). இந்த குழந்தையை அதன் தகப்பன் 27 நாட்களுக்கு பார்க்கக் கூடாதாம். பார்த்தால் தகப்பனுக்கு ஏழரை ஆரம்பிச்சுருமாம். இந்த 27 நாளும் அவன் விரதம் இருக்கணும், கட்டிங், சேவிங்கெல்லாம் பண்ணக் கூடாது. டாஸ்மாக், மிலிட்டரி ஹோட்டல் சமாச்சாரமெல்லாம் தொடவே கூடாது. அவன் மனைவி பக்கத்துலயே போகக் கூடாது, (அங்கதான் குழந்தை படுத்திருக்குமே). அப்படீன்னா அவன் மனைவியையும் பார்க்கக் கூடாது. ஒரு சோகத்தோடயே தாடி வளர்த்துகிட்டு அவன் திரியணும்.

அந்த 27வது நாள்தான் அவன் மனைவி முகத்தை பார்க்க முடியும். அப்புறமா ஒரு பூஜைல ரெண்டு பேர்த்தையும் உக்கார வெச்சு, அவங்களுக்கு முன்னால ஒரு கண்ணாடிய வெச்சுருவாங்க. அந்த கண்ணாடிக்கு முன்னால ஒரு பெரிய அகலமான தட்டுல கடுகு எண்ணையை ஊத்தி வெச்சிருப்பாங்க. ஜோஸியர் சொல்ற நேரத்துக்கு கரெக்டா குழந்தையை கொண்டு வந்து இவங்களுக்கு பின்னால நின்னு முகத்தை மாத்திரம் திருப்பி கண்ணாடில காமிப்பாங்க, அந்த கண்ணாடில படும் பிம்பம் முன்னால இருக்கற கடுகு எண்ணைல தெரியும். குழந்தைக்கு அப்பனானவன், முதல்ல அந்த கடுகு எண்ணைல தான் குழந்தையோட முகத்தை பார்க்கணும் அப்புறம் தான், நேருக்கு நேர் பார்க்கணும்.

இப்பிடி இந்த 27 வது நாள் அவனால வீட்டுல இருக்க முடியாம எதாவது வேலையா வெளிய போயிட்டான்னா, தொலைஞ்சான். அடுத்ததா 54 வது நாள்தான், அதுவும் முடியலைன்னா 108 வது நாள். இத்தனை நாளும் முடிவெட்டாம ஷேவிங் பண்ணாம இருக்கற ஒருத்தனை ஒரு பச்சைக் குழந்தை பாத்துச்சுன்னா எப்பிடிங்க இருக்கும்………

இந்த நம்பிக்கையும் சடங்கும் இன்னும் மத்தியப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களிலும், சத்தீஸ் கட், ஜார்கண்ட், பீகார் மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களிலும் நிறைய வீடுகளில் கடைப் பிடிக்கப் படுகிறது. அதனால் அடுத்த முறை இந்த பிராந்தியாங்களில் யாராவது தாடி மீசையுடன் மந்திரிச்சு விட்ட மாதிரி சோகமா திரிஞ்சா, அவரு ஒருவேளை இந்த சத்தாயிஸி குழந்தைக்கு அப்பனா கூட இருக்கலாம். என்ன கொடுமை சார் இது?????

நாட்டு நடப்புகள் : மறுபடியும் மாவோக்கள்

நேற்றும் ஒரு முறை ரத்தத்தில் ஹோலி விளையாடி இருக்கிறார்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.இதில் அதிகம் பங்கேற்றது பெண் மாவோ வாதிகள்தான்.மாவோவாதிகளுக்கெதிராக அரசாங்கம் அமைத்திருக்கும் படையின் தலைவரான ராம் நிவாஸ் கூறுகையில் அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களைப் பார்த்தால் பிரமிக்க வைக்கிறது என்று கூறுகிறார்.

பன்னாட்டு பண முதலைகளுக்கு, கனிம வளங்களை தாரைவார்த்து கொடுத்து, மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து, அவர்களின் உணவுக்கும் உணர்வுக்கும் கேடு விளைவிக்க மத்திய அரசு வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கியிருக்கிறது என்ற வாதம் ஒரு நிதர்சனமான உண்மை என்ற போதிலும், அதை எதிர்க்கிறோம் என ரயில் பாதைகளில் குண்டு வைத்து பொது மக்களை கொல்வதும், காக்கையை சுடுவது போல் பாதுகாப்பு படையினரை சுடுவதும் மேலும் வன்மம் வளர்க்கும் ஒரு செய்கையே தவிர, தீர்வுக்கு அடி கோலாது என்பது ஏனோ மாவோ வாதிகளுக்கு தெரிவதில்லை.

ஒரு கேள்வி : பாதுகாப்பு படையினர் கொல்லப்படும் போதெல்லாம் கேமராவை தூக்கிக் கொண்டு போய் அவர்களின் சடலங்களையும், அவர்கள் குடும்பத்தினரின் கண்ணீரையும் படம் பிடித்து சில்லரை சேர்க்கும் கேவலப் பிறவிகளான ஊடக ஓநாய்கள், இருபுறமும் சமரசம் செய்து வைக்கும் நாட்டாமை பணியை ஏன் செய்யக் கூடாது.??? அடச் சே, விடுங்கய்யா.. பணத்துக்காக தரம் தாழ்ந்து கிடக்கும் ஊடக கும்பலுக்கு என்ன யோக்கிதை இருக்கிறதென்று நாட்டாமை பண்ண அழைப்பது.????

ங்கொய்யால பக்கங்கள்

கட்சி மாநாடு நடக்கறதில்லை
காசு பண்ண வழியில்லை

வெள்ள நிவாரணம் வாங்கலாம்னா
மழை வர்றதுக்கு வழியில்லை

முதியோர் பென்ஷன் வாங்கலாம்னா
வயசு கொஞ்சம் பத்தாதுதான்

ங்கொய்யால,

ஒரு தேர்தல் வந்தா காசு வந்துரும்,
அரசியல்ல எவனும் சாக மாட்டேங்கறானே

Tuesday, June 29, 2010

ஆமாம், இரவு வரட்டும்.

எத்தனைதான் உதறினாலும்
என் காலை விட்டு போவதில்லை அது
உயரமாயும் ஒல்லியாவும் என்னை
தொட்டுக் கொண்டே தொடர்கிறது.

தொல்லை தருவதில்லை ஆனால்
தொலைந்தும் போவதில்லை
என் உடலில் உடையில் வர்ணங்கள்
இருப்பினும் அது மட்டும் ஒரே வண்ணத்தில்.

எப்படியாவது என்னை எனக்குக் காட்டும்
அதை ஒழித்து விட வேண்டும்.
ஒளியில் என்னோடு தினமும் வரும் அது
இரவில் ஒளிந்து விடுமாம்.

ஆமாம், இரவு வரட்டும்.

Wednesday, June 23, 2010

ஜுகல் பந்தி 23 – ஜூன்- 2010, மருமகன்களுக்கு மரியாதை


ஜமாய் சஷ்டி :

மாமியார் மருமகள் உறவுக் கதைகள், சண்டைக்கதைகள், சிரிப்புகள் என எல்லாத்தையும் கேட்டிருப்போம். ஆனால் மருமகனை கும்பிட்டு, அவருக்கு விருந்து வைக்கறதுக்குன்னே ஒரு விழா கொண்டாடறதை கேள்விப் பட்டிருக்கீங்களா, ஆமான்னாலும் சரி, இல்லைன்னாலும் சரி, இதைப் படியுங்கள்.

ஒரு பேராசை பிடித்த பெண் இருந்தாளாம். (ஹலோ, இந்த பெண்ணிய வாதிகள் உடனே தாரை தப்பட்டையெல்லாம் எடுத்துட்டு கிளம்பக் கூடாது,கதைல அப்படித்தான் சொல்றாங்க), வீட்டுக்கு கடைசி மருமகளா இருந்த அவள் தன் வீட்டிலுள்ளதையெல்லாம் எடுத்து சாப்பிட்டு விட்டு, தின்பண்டம் காணாமல் போய் விட்டதே என வீட்டார் கேட்டால், பூனை திருடி விட்டது என பொய் சொல்லுவாளாம். அவுங்க வீட்டுக்கு வழக்கமா வந்துட்டு போற பூனைக்கு இது ரொம்ப ரொம்ப அவமானமா போய் விடவே, அது சஷ்டி தேவி கிட்ட போய் கண்ணை கசக்கீட்டு நின்னுச்சாம். சஷ்டி தேவியும் சரி சரி மேட்டர எங்கிட்ட விடு நான் இத ஒரு புது விதமா டீல் பண்றேன்னு சொன்னாங்களாம்.

இந்த மருமகளுக்கு ஏழு பசங்களும் ஒரு பொட்டப் புள்ளயும் பொறந்தாங்களாம். (ஏயப்பா, எத்தனை, ஒண்ணா ரெண்டா). ஒருநாள் அத்தனை குழந்தைகளும் காணாமப் போயிட்டாங்களாம். தன் குழந்தைகளைத் தேடி அலைந்து களைத்துப் போய் கண்ணீரோடு இவள் காட்டுக்குள் திரிந்து கொண்டிருக்கும் பொழுது, சஷ்டி தேவி வந்து “என்னம்மா சங்கதி, ஏன் அழுகறே”ன்னு கேக்க, ஓ ன்னு ஒப்பாரி வெச்சுட்டு “என் குழந்தைகள காணோம்”னு இவ சொன்னாளாம். அப்ப தேவியம்மா என்னா பண்ணாங்கன்னா, “அப்பிடி வா வழிக்கு, நீ திருட்டு வேலை பண்ணீட்டு ஒண்ணுமே தெரியாத பூனைக்கு திருட்டு பட்டம் கட்டுனயே, அப்ப அந்த பூனைக்கு எப்படி வலிச்சிருக்கும்”னு கேக்க, “அய்யோ, தாயே நான் பண்ணதெல்லாம் தப்பு, எம் புள்ளங்கள கண்டு பிடிச்சுக் குடு” ன்னு இவ கதறுனாளாம். அப்பத்தான் சஷ்டி தேவி , “இந்தா உம் புள்ளங்களையெல்லாம் எடுத்துட்டு போ, இவுங்களுக்கு நல்லா சோறு ஆக்கிப் போடு” ன்னு சொன்னாங்களாம். அந்த நாள்தான் இந்த ஜூன் மாசம் 17ம் தேதி ஜமாய் சஷ்டி.

இது வெறும் பெங்காலிங்க மாத்திரம் கொண்டாடும் ஒரு பண்டிகை. (நம்மூருல மருமகன்களை யாரு மதிக்கறா, அத விடுங்க). இந்த நாள்ல மருமகன் மாமனார் வீட்டுக்கு வந்தவுடன், வீட்டு நுழை வாயிலில் இருந்து சடங்குகள் ஆரம்பமாகும். ஆறு பழங்கள் நிறைந்த தட்டுடன் மருமகனுக்கு ஆரத்தி எடுக்கும் மாமியார், ஆரத்தி முடிந்ததும் தட்டில் இருக்கும் தானியம் மற்றும் புல் வகைகளை மருமகனின் தலைக்கு மேலே தூவி அவரை ஆசீர்வதிக்கிறார். பிறகு அவரது கையில் புத்தம் புதிதாய் மஞ்சள் பூசப்பட்ட ஒரு கயிறைக் கட்டி, நீ எங்க வீட்டு மருமகனாக்கும் என சொல்லாமல் சொல்லி அவருக்கு இனிப்பு ஊட்டி விடுவார். இது முடிந்ததும் வீட்டுக்கு உள்ளே அழைத்து வரப்படும் மருமகனுக்கு 15 வகையான பதார்த்தங்கள் கொண்ட ஒரு விருந்து அளிக்கப்படும். பெரும்பாலானவை மீன் கலந்த பண்டங்களாயிருப்பினும், வழக்கமான குழம்பு, அவியல் பொறியலோடு, மீன் பலவகையிலும் சமைக்கப் பட்டிருக்கும். இதையெல்லாம் ஒரு பிடி பிடித்தபின் மருமகனுக்கு இனிப்பு கொடுப்பது மாமியாரின் கடமை. இந்த இனிப்பு வைபவத்தில் ரசகுல்லா கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இப்படியாக ஜமாய் சஷ்டி நிறைவு பெறுகிறது.

(அடச்சே, மொதல்லயே தெரியாமப் போச்சே, தெரிஞ்சிருந்தா பெங்கால்ல போய் பொண்ணு எடுத்திருப்பனே, என்ன பண்றது, உங் குடுமி இங்க நம்மூரு தங்கமணி கைலதாண்டின்னு எம்பெருமான் என்னைக்கோ எழுதி வெச்சிட்டாரு, அதை யாரால மாத்த முடியும்)

நாட்டு நடப்புகள் : எங்க ஊர் பஞ்சாயத்து

ஒரு வெளியூர் விவசாயி ஒரு நாள் எங்கூருக்கு வந்தாரு. எங்கூர்ல எங்க பாத்தாலும் பச்சைப் பசேல்னு வயலு வெளஞ்சு கிடக்குது, குடியானவனெல்லாம் சந்தோஷமா விவசாயம் பண்ணி, அறுவடை பண்ணிகிட்டிருக்கான். வெளியூர் விவசாயி பாத்தான், ஆகா, தங்கச் சொரங்கமடா இது, அள்ள அள்ள தீராதுன்னு கணக்குப் போட்டுட்டு நாட்டாமை கிட்ட போனான். “ஐயா, எனக்கு வடக்கால ஒரு கையகல இடம் குடுங்கைய்யா, நானும் கொஞ்சம் விவசாயம் பண்ணிக்கறேன்”னு சொன்னான். நாட்டாமைக்கு அவன் யாரு, அவன் என்ன பண்ணப் போறான்னு தெரியுமோ தெரியலயோ, சரிப்பா, நீயும் பொழச்சுப் போன்னு சொல்லீட்டாரு. அவனும் விவசாயத்தை ஆரம்பிச்சான்.

அவன் நிலத்துல கண்ட மருந்தையும் போட்டான், கண்ட விதையையும் போட்டான், என்னென்னமோ மிசுனுகள வெச்சு வித்தை காமிச்சான். பக்கத்து நிலத்துக் காரன் அய்யோ, பாழாகுதேன்னு கத்துனான், அப்ப நாட்டாமை சொன்னாரு அட வுடுப்பா, எங்கிருந்தோ பஞ்சம் பொழைக்க வந்தவன் அவன், பொழச்சுப் போகட்டும் விடுன்னாரு.

ஒரு நாள் ராத்திரி, நாட்டாமை வீட்டுல திடீர்னு கதவு தட்டற சத்தம், என்னடான்னா, நம்ம வெளியூர் விவசாயி, அய்யா, தப்பு நடந்து போச்சுங்கைய்யா, நான் வெச்சிருந்த மிசின்ல ஒண்ணு வெடிச்சுப் போச்சுங்கைய்யான்னு அழுதான். சரி பரவால்ல விடுப்பா, நான் பாத்துக்கறேன்னாரு நாட்டாமை.

அய்யா, அந்த மிசுன்ல இருந்து எல்லா பவுடரும் கொட்டி நிலம் கொஞ்சம் சேதாரமாயிருச்சுங்கைய்யா,
அப்படியா, சரி போனா போகுது வுடு, எல்லாம் நம்மாளுகள விட்டு சரி பண்ணிப் போடலாம்.

அய்யா, இன்னொண்ணும் நடந்து போச்சுங்கைய்யா, மெசுனு வெடிச்சதுல ஊர்காரங்க கொஞ்சம் பேரு செத்துப் போய்டாங்கைய்யா, அவுங்கெல்லாம் என்ன அடிக்க வாராங்கைய்யா

அப்பிடியா சேதி, சரி சரி அதா நிக்குது பாரு வண்டி, அதுல ரெண்டு மாட்டைப் பூட்டிட்டு விடியறதுக்குள்ள இந்த ஊரை விட்டுப் போயிரு, ஊர்க்காரங்கள நான் பாத்துக்கறேன்னு சொல்லி நாட்டாமை வண்டி, மாடு இன்னும் வழிச்செலவுக்கு பணமெல்லாம் குடுத்தாரோ என்னமோ தெரியல. அவன் மாயமா மறைஞ்சிட்டான்.

ஊர்க்காரங்க ஒண்ணு சேந்து நாட்டாமைகிட்ட போய் கத்துனாங்க, செத்தவங்க இன்னமும் செத்தாங்க, கத்துனவங்க இன்னும் கத்துனாங்க, அய்யா, நெலமெல்லாம் பாழாப் போச்சேய்யா, புள்ள குட்டியெல்லாம் செத்துப் போச்சேய்யா, இப்ப என்னய்யா பண்ணுவோம்னு கதறுனாங்க.
இப்படி வருசக்கணக்கா கத்தி கத்தி ஒரு புண்ணாகும் ஆகலன்னதும்
நாட்டாமை பஞ்சாயத்தக் கூட்டு, இப்ப எங்களுக்கு வழி சொல்லுன்னு விடலைப் பசங்கெல்லாம் ஒரு தினுசா பேசுனாங்க. நாட்டாமை தீர்ப்புச் சொல்லுன்னு காது படவே கத்த ஆரம்பிச்சிட்டாங்க.

நாட்டாமையும் பாத்தாரு, இவுனுகளோட பெரிய ரோதனையாப் போச்சே, தீர்ப்பு சொல்லலைன்னா ஒரு வேளை நம்ம நாட்டாமை பதவிக்கே ஆப்பு வெச்சுருவானுகளோன்னு நெனச்சுகிட்டு, எல்லாம் ஆலமரத்தடிக்கு வாங்கடான்னாரு…

எல்லாப் பயலுகளும் வாந்தாங்க, நாட்டாமை ஒரு பெரிய தீர்ப்பா சொல்லப் போறாருடான்னு பாத்துகிட்டே இருந்தாங்க, கடைசியா நாட்டாமை சொன்னாரு,

சரிடா, சாகாதவனெல்லாம் செத்தவனுங்களுக்கு பணம் குடுங்கடானு தீர்ப்பு சொல்லீட்டாரு. எல்லாரும் ஆடிப் போயிட்டாங்க, நாட்டாமை நிலத்தைக் கெடுத்து, மெசின வெடிச்சு, உயிரக் குடிச்சது வெளியூர்க்காரன், நாங்க எதுக்கு பணம் குடுக்கணும்னு கேட்டாங்க.

நாட்டாமை சொன்னாரு “ டேய், நான் ஒரு தரம் தீர்ப்பு சொன்னா சொன்னதுதான், சொன்னபடி செய்யுங்க”

நாங்களும் செய்யறோம். எங்க வயித்தக் கட்டி வாயக் கட்டி நாங்க சம்பாரிச்சதையெல்லாம் எங்க ஊர்சனங்களுக்கு குடுத்தற்றோம்.

அதுனால எந்த நாதாரிப் பயலுக்கு அவங்கூர்ல எதை செய்யக் கூடாதுன்னு சட்டம் சொல்லுதோ, ஆனா அதை செஞ்சு பார்க்க ஆசையிருந்தா, அவிங்கெல்லாம் எங்கூருக்கு வாங்க, எங்க நாட்டாமை உங்களுக்கு இடம் குடுப்பாரு. நீங்க உங்க இஷ்டத்துக்கு என்ன வேண்ணா செய்யலாம், எதை வேண்ணா அழிக்கலாம், எதை வேண்ணா உருக்கலாம், கெடுக்கலாம். எத்தனை பேரை வேண்ணாலும் கொல்லலாம், யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. எதாவது தப்புத்தாண்டா ஆச்சுன்னா வண்டியும் மாடும் குடுத்து நாட்டாமை தப்பிக்க வைப்பாரு. அதையும் மீறி எதாவதுண்ணா, எங்க கிட்டயே பணம் வாங்கி, அங்க செத்தவனுக்கெல்லாம் குடுத்துருவாரு.

எப்பூடி எங்க பஞ்சாயத்து???????

நான் வெறும் கதைதான் சொன்னேன், இதையும் போபால் மேட்டரையும் ஒண்ணா நினைச்சுகிட்டீங்கண்ணா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

வீட்டு நடப்புகள் : பல்பு குடுத்தம்ல….

ஒரு ஃபர்னிச்சர் கடையில்.

சார், ஒரு டீபாய் வேணும்.

வாங்க சார், இது கிளாஸ் டாப், இது சன் மைக்கா டாப், இது அதுல டாப்பு, அது இதுல டாப்புன்னு அவுரும் சொல்லிகிட்டே போறாரு. மேலிடம் அமைதிகாக்குது, அப்பவே நமக்குள்ள பட்சி சொல்லுது “டேய், அடக்கி வாசி, அங்க என்னமோ மாஸ்டர் பிளான் உருவாகிட்டிருக்குதுடா, அமைதியா இரு” நம்மளும் அமைதி காக்க, எதிர் முனைல ஒரு சின்ன குழப்பம்.

சில நிமிட அமைதிக்குப் பின் “ சரி எதை எடுக்கலாம்னு சொல்லுங்க”

“நீ பாத்து செலக்ட் பண்ணும்மா”ன்னு நம்ம சொன்னவுடன், என்ன எனக்கு தெரியாதுன்னு நெனச்சிட்டியா இப்ப பாருன்னு ஒரு அலட்சியப் பார்வை என் மீது வீசப்பட்டது, சாரி சாரி பார்க்கப் பட்டது.

மேலிடம் களத்துல இறங்கி சார், இந்த மாடல் காமிங்க, அந்த மாடல் காமிங்கன்னு சொல்லச் சொல்ல சேல்ஸ் மேனுக்கு நாக்குத் தள்ளீருச்சு, ஆஹா, புடவைக் கடைக்கு போறவங்க தெரியாம இங்க வந்துட்டாங்களோன்னு பரிதாபமா பாக்க, நான் இங்க நடக்கறதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னு ஒரு ஓரத்துல நிக்க, கடைசியா இந்த ரெண்டுல எதை எடுக்கலாம்னு சொல்லுங்கன்னு ஒரு குரல் கேட்டுச்சு, ஓ நம்மளத்தான் கூப்புடறாங்களோன்னு நான் போய், “உனக்கு எது பிடிக்குதோ அதை எடுத்துக்கோ” ன்னு சொல்ல, குரல் ஒரு கட்டை மேல போய் “அதெல்லாம் சரி, எது வேணுன்னு சொல்லுங்க” ன்னவுடன் பார்த்தால், ஒரு கிளாஸ் டாப்பு, ஒரு சன்மைக்கா டாப்புன்னு ரெண்டும் முன்னால இருந்துச்சு. ரெண்டும் என்ன ரேட்டாகுது சார்னு விலையை கேட்டுட்டு, அப்புறம் ஒரு சின்ன தில்லாலங்கடி கணக்கு போட்டுட்டு, சன் மைக்கா டாப் சரியாயிருக்கும்னு சொல்ல சரி அதைவே பேக் பண்ணி வீட்டுக்கு அனுப்புங்கன்னு சொல்லீட்டாங்க. அப்பவே எனக்கு இது சரியா படல, இவ்வளவு சீக்கிரமா மேட்டர் செட்டிலாகுதுன்னா என்னமோ இருக்குதுடான்னு நெனச்சுகிட்டு சரி, நம்ம பிளான் வொர்க் அவுட் ஆகும் போலன்னு நெனச்சுகிட்டே காசு குடுத்துட்டு வந்துட்டேன்.

அடுத்த நாள் மத்தியானம் பொண்ணுகிட்டேருந்து போன், “அப்பா டீபாய் வந்திருச்சுப்பா, அந்த கடைக்கார அங்கிள் அதை அசெம்பிள் பண்றாங்க”

“என்ன டீபாய்மா அது?”

“அதாம்பா, அந்த கண்ணாடி போட்டு பளபளான்னு இருக்குமே அதுதான்”

ஆஹா, நெனச்சது நடந்திருச்சுன்னு நெனச்சுகிட்டு வீட்டுக்கு வந்து, வீட்ல டீபாய் வந்ததையே கவனிக்காத மாதிரி பவ்யமா உக்காந்திருந்தா,

“டீபாய் வந்திருச்சே பாக்கலியா”

“பாத்தேன், அருமையா இருக்கு, நான் என்ன வேணும்னு நெனச்சனோ அதே மாதிரி அமைஞ்சிருக்கு”

“இல்லையே நீங்க சன்மைக்கா டாப் தான சொன்னீங்க”

“ஆமா, எனக்கு கிளாஸ் டாப்தான் புடிச்சிருந்திச்சு, ஆனா கடைல இது புடிச்சிருக்குன்னு சொன்னா அது வராதுன்னு தெரியும், அதனால தான் பிடிக்காததை பிடிச்சதுன்னு சொன்னேன். இப்ப பிடிச்சது வந்திருச்சுல்ல.”

எதிர் முனையில் பல முக குறியீடுகள், பெரு மூச்சுகள், மனதுக்குள் பல ஜூலு மொழி வார்த்தைகள், இன்னும் பெயர் தெரியாத சங்கேதங்கள், கண் காது போன்ற உறுப்புகளிலிருந்து புகை வெளியாவது போல ஒரு தோற்றம்.

ஏ ஹைய்யா, ஏ ஹைய்யா, ஏ கும்தலக்கடி கும்மா, ஏ ஐத்தலக்கடி அம்மா

எப்பூடி, நாங்களும் பல்பு குடுப்பம்ல.

ங்கொய்யால பக்கங்கள்

கருப்பு கலர்ல சட்டை போட்டா
ஓ அந்த தாடிக்காரரு குரூப்பாங்கறாய்ங்க

சிவப்பு கலர்ல சட்டை போட்டா,
என்ன தம்பி வினவறீங்களாங்கறாய்ங்க

பச்சை கலர்ல போட்டா
அட, அம்மாவுக்கு புடிச்ச கலர்ங்கறாய்ங்க

மஞ்சள் கலர்ல போட்டா
ஓகோ, ஐயாவோட துண்டு கலருங்கறாய்ங்க

கெடக்குது கெரகம்னு வெள்ளை கலர்ல போட்டா
ஓ, அந்த சென்ட்ரல் பார்ட்டியாங்கறாய்ங்க

இப்பிடி எல்லா கலருக்கும் எதாவது சொன்னா
ங்கொய்யால
எந்த கலர்லதான் சட்டை போடறது